சனி, மே 17, 2025

அமேசானில் என் நூல்

 




சிலப்பதிகாரச் சிலம்பொலி

 காவிரிக் கடலில் கலக்கும் புகாரில்


தொடங்கிய காப்பியம் சிலப்பதி காரம்

கலைஞர் மனதில்  எழுத்தில்  திரையில்

விளைந்த  காப்பியம் சிலப்பதி காரம்

கடலில் தொலைந்து போன நகரை

மீண்டும் கொண்டு வந்த  அறிஞர்

எழுநிலை மாடம் எழுந்து நின்றது

எழுதிய காப்பியம்  கல்லில் சமைந்தது

சிலம்பே தமிழன் தனித்த சொத்து

இளங்கோ கைவிட்ட இடங்கள் கலைஞர்

கைபட்டு   பண்பாடு வளர்த்தது  உண்மை

கிரேக்க கிழவன்  ஆயிரத் தெட்டு

பொற்காசு  தந்திட  தயாராக இருக்க

தமிழன் கோவலன் தமிழ் மானம்

காக்க  மாதவி  மாலை பெற்றான்

கண்ணகி  அவளும் நாடகம் பார்த்தாள்

கணவன் செயலைச் சரியே என்றாள்

மாதவி வீட்டில் கோவலன் செல்வம்

அவளே அறியாமல் வீட்டார் பெற்றார்

திருப்பித் தந்தாள் அவளே தமிழச்சி

ஒற்றைச் சிலம்பு போதும் என்றான்

 மற்றது என்தவறு சுட்டி ஒலிக்கும்

இதுவே கோவலன் தூய நெஞ்சம்

ஒற்றைச் சிலம்பும் ஒலித்தது

திராவிடச் செல்வம் பிரதி பலித்தது

திருப்பூவனம் காசிகாந்த சுவாமிகள் வரலாறு

 

திருப்பூவனம் காசிகாநந்த சுவாமிகள் வரலாறு


 

கோவிலூர்  மடலாயத்தின் வேதாந்த மரபு தமிழகத்தின் ஊர் தோறும் பரவி வந்துள்ளது. சிதம்பரம்,  திருவண்ணாமலை  இந்தத் தெய்வீக நகரங்களில் வேதாந்த மரபு செழித்ததுபோலவே திருப்பூவனத்திலும் செழித்தது. தேவகோட்டையைச் சார்ந்த காசி என்றழைக்கப்பெற்ற காளியப்பன்  என்ற இயற்பெயர்  கொண்ட காசிகாநந்த சுவாமிகள்  திருப்பூவனத்தில் மடம் அமைத்து வேதாந்த நூல்கள் பலவற்றை இயற்றியும் மொழி பெயர்த்தும் ஆற்றிய பணிகள் என்றும் நினைவு கூரத்தக்கவை.

தேவகோட்டையில் மாத்தூர் திருக்கோயிலைச் சார்ந்த மணலூர் பிரிவில பெரியணன் என்ற பெரியார் வாழ்ந்து வந்தார். அவரின் குமாரர் இராமசாமி ஆவார். இவர் பொருள் சிறப்பும், பக்திச் சிறப்பும் ஒருங்கே அமையப் பெற்றவர். இவரின் மனைவி உமையம்பிகை அம்மையாரும் இவரின் கருத்துக்கு ஏற்ப இசைந்து இல்லறம் நடத்தியவர். இவர்களுக்கு அனைத்துச் செல்வங்களும் இருந்தும் மகப்பேறு வாய்க்கப் பெறவில்லை. இது பெரும் குறையாக அவர்களுக்கு அமைந்தது.

ஒருநாள் இவர்களின் இல்லம் நாடி வந்த சிவனடியார் ஒருவர் இவர்களின் இல்லற நல்லறத்தைக் கண்டு இவர்களைப் பாராட்டினார்.  தங்கள் இல்லத்திற்கு வந்து தங்கிய சிவனடியாரைக் கடவுளாகவேப் போற்றி இவர்கள் வணங்கினார். அவர் இவர்களுக்கு உமையம்பிகை அருளால் மகப்பேறு உண்டாகும் என்று நல்வாக்கு அருளினார்.

சில நாள்களில் உமையம்பிகையாருக்குத் திருவயிறு வாய்க்கப் பெற்றது. நான்கு குழந்தைகள் இவர்களின் குலம் விளங்கப் பிறந்தனர்.  அவர்களுக்குப் பெரியணன், பழனியப்பன், காளியப்பன், விசாலாட்சி என்று பெயரிட்டு வளர்த்தனர். இவர்களுள் காளியப்பன் காசி என்றும் அழைக்கப்பெற்றார். இவரே ஞானம் தேடி கோவிலூர் அடைந்து வீரசேகர ஞான தேசிகரைப் பணிந்து காசிகாந்த சுவாமிகளாகப் பின்னாளில் அறியப் பெற்றார்.

காளியப்பன் என்ற பெயர் முன்னர் சிவனடியார் சொல்லிய வண்ணம், தேவி உபாசனையால் பிறந்தவராகக் கருதப் பெற்று காளியின் திருப்பெயரைப் பெற்றார். இவர் மற்ற குழந்தைகளைவிட ஞானத் தேடல் உள்ளவராக விளங்கினார்.

      திண்ணைப் பள்ளியில் கற்பிக்கும் பாடங்களை விரைவில் கற்றுத் தேர்ந்தார். உலக நீதிகளில் அதிக ஈர்ப்பு செலுத்தினார். குளக்கரைகளில் தம் காலத்தைக் கழித்து வந்தார்.  குளித்தின் கரை அடுக்குகளில் உள்ள வெண்மை நிறக் கற்கள் எல்லாம் இவருக்குச் சிவலிங்கமாகத் தோன்றின. அவற்றை வழிபடுவது இவரின் வழக்கமாக இருந்தது.

      இந்நிலையில் காளியப்பரைப் பர்மாவிற்குத் தொழில் நிமித்தமாகச் சென்று வர குடும்பத்தார் பணித்தனர். தன் பத்து வயதில் பர்மாவிற்கு வணிகம் செய்ய இவர் சென்றார். அங்கு பர்மிய மொழி, இந்துஸ்தானி (இந்தி) ஆகிய மொழிகளை விரைவில் இவர் கற்றுக்கொண்டார். இம்மொழிகளில் பேசவும் எழுதவும் வல்லவராக இவர் விளங்கினார்.

      பர்மாவில் இருந்த காலத்தில் இவருக்கு ஞானத் தேடல் அதிகமானது. அதனால் தாய்நாட்டிற்குத் திரும்பி, தனக்கு ஞானம் நல்கும் குருபிரானைத் தேடினார். பற்பல இடங்ளில் தேடித் தெளிந்து கோவிலூர் வந்து சேர்ந்தார். கோவிலூர் வேதாந்த மடத்தில் குருபிரான சீர் வளர் சீர் வீரசேகர ஞான தேசிக சுவாமிகள் அருளாட்சி செய்து வந்தார். அவரைக் காளியப்பன் வணங்கித் தொழுதார். இவரின் திருமுகப்பொலிவு கண்ட ஞான தேசிகர் இவரை ஆதரிக்கவேண்டும் என்ற எண்ணம் கொண்டார். ஆதரித்துத் தனது தொண்டர் குழாத்துள் ஒருவராக்கி வேதாந்தப் பாடம் சொல்லி வந்தார்.

      மூன்று மாதங்கள் இவ்வாறு அருள்பாடம் நடைபெற்றது. அதற்குள் ஞானக் கடலில் பல்வகை முத்துக்களை அள்ளி அவர் கோர்த்துக் கொண்டார். இந்நேரத்தில் தேனிப்பட்டியைச் சார்ந்த அண்ணாமலை சுவாமிகள் காசிப் பயணம் மேற்கொண்டார். அவருக்கு இந்தி தெரிந்த ஒருவர் வழித்துணைக்குத் தேவைப்பட்டார். அதற்குத் தக்கவராகக் காளியப்பர் கொள்ளப்பெற்று அண்ணாமலை சுவாமிகளுடன் காசிப் பயணம் மேற்கொண்டார். இடையிடையே பல திருக்கோயில்களையும் தரிசித்து தெய்வ அனுபவம் பெற்றார்.

      தேனிப்பட்டி சுவாமிகள் காசியில் சில மாதங்கள் தங்க நோக்கம் கொண்ட நிலையில் காளியப்பர் கோவிலூர் நினைவில் இருந்த காரணத்தால் ஊர் திரும்பினார். சில காலம் சிதம்பரம் பொன்னம்பல சுவாமிகள் மடத்தில் தங்கியிருந்து நாளும் நடராசப் பெருமானைத் தொழுதார். அதன்பின் கோவிலூர் வந்து வேதாந்தப் படிப்பினைத் தொடர்ந்தார். வேதாந்த நூல்கள் அனைத்தையும் கற்றார்.

      மேலும் மதுரைத் தமிழ்ச் சங்கத்திற்குச் சென்று அங்கு தமிழ் இலக்கண இலக்கியங்களைக் கற்றுத் தேர்ந்தார். வேதாந்தப் படிப்பும் தொடர்ந்தது. தக்க நேரத்தில் வீரசேகர ஞான தேசிகர் இவருக்கு சந்நியாசம் அளித்து காசிகாநந்தர் என்ற அருட்பெயரை வழங்கினார்.

      காசிகாந்த சுவாமிகள்  வேதாந்தம் அறிய மீளவும் காசிப் பயணம் மேற்கொள்ளச் சித்தமானார். பலரின் உதவியுடன் காசிக்குச் சென்று அங்கு வடமொழி நூல்கடல்களைக் கற்று உணர அவரின் உள்ளம் அவா கொண்டது.

      காசியில்  வியாகரணம், தர்க்கம், யோகம், சாங்கியம், பூர்வ மீமாம்சை, உத்தர மீமாம்சை  போன்ற பிரிவுகள் சார்ந்த நூல்கள் பலவற்றை வடமொழியிலேயே  காசிகாநந்தர் கற்றுத் தேர்ந்தார்.

      பல நூல்களை இந்தி, மற்றும் சமஸ்கிருதம் ஆகியவற்றில் இருந்து மொழிபெயர்த்து அளித்தார்.  பல வேதாந்த நூல்களுக்கு நல்லுரை நல்கினார். பல நூல்களைப் பதிப்பித்தார். பல நூல்களை ஆக்கினார். இவரே வேதாந்த உலகில் அதிக அளவில் நூல் தொகுதிகளை வெளியிட்டவர் என்ற பெருமைக்கு உரியவர் ஆனார்.

      இவர் 1930 ஆம் ஆண்டில் திருப்பூவனத்திற்கு வருகை புரிந்து அங்கேயே மடம் அமைத்து தவ வாழ்வு மேற்கொண்டு நிறைவாழ்வு பெற்றார்.

ஈசானிய ஞான தேசிகர்

 






திருவண்ணாமலை  ஈசானிய ஞான தேசிக சுவாமிகள் வரலாறு

முனைவர் மு.பழனியப்பன்

தமிழ்த் துறைத் தலைவர்

அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி

திருவாடனை

 திருவண்ணாமலையில் ஈசானிய மடத்தில் வீற்றிருந்து ஞானபெருங்கருணையைச் செய்துவரும்  சீர் வளர் சீர் ஈசானிய ஞான தேசிகரின்  அருமை பெருமைகள் அளவில் அடங்காதனவாகும்.  இவர் ஞான நிட்டையில் இருக்கும் காலத்தில்  அண்ணாமலையாரும் உண்ணாமுலையம்மனும்  புலிகளின் வடிவில் எழுந்தருளி இவருக்குக் காவலாக இருந்த  பெருமை யாருக்கும் வாய்க்காத பெருமையாகும்.

வேலூரில் வாழ்ந்து வந்தவர் திருநீலகண்டர். இவரின் மனைவி உமைய பார்வதி. இருவரின் இல்லறத்தில் மகப்பேறு இன்மை என்ற ஒரு குறையைத் தவிர வேறு குறை இல்லை. மகப்பேறு வேண்டி இவர்கள்  திருவண்ணாமலையில் உள்ள முருகப் பெருமானை வேண்டி வணங்கி வந்தனர்.  இவர்களின் குறையைப் போக்க முருகப்பெருமான் கருணைக் கடைக்காட்டி மகப்பேறு உருவாகும் நிலையைக் கொண்டுவந்தார். மிக மகிழ்ந்த இருவரும்  பிறக்கும் குழந்தைக்குக் கந்தப்பன் என்று பெயர் சூட்டி மகிழ மனம் வைத்தனர்.

இவர்களுக்கு ஆண்மகவு பிறந்தது. அக்குழந்தைக்குக் கந்தப்பன் என்ற பெயர் சூட்டி மகிழ்ந்தனர்.  இளம் வயது முதலே அமைதியும், அன்பும், ஞானமும் உடைய குழந்தையாக அக்குழந்தை வளர்ந்து.  பள்ளிப் பருவத்தில் பல  அருட்செயல்களை அக்குழந்தை செய்தத, இது பலருக்கும் ஆச்சரியத்தை அளித்தது.

குருநிலை

பள்ளியில் சொல்லித் தரப்படும் பாடங்களை உடனுக்கு உடன் மனனம் செய்து ஒப்புவிக்கும் ஆற்றல் இக்குழந்தைக்கு மிகச் சிறப்பாக அமைந்திருந்து. பாடங்களை ஆசிரியரிடம் சொல்லி முடித்தபின் அமைதியில் கலந்து விடும் அற்புதத்தையும் அக்குழந்தை செய்து வந்தது. இச்சிறுவயதில் ஞானத் தொடர்பு அக்குழந்தைக்கு ஏற்பட்டுச் சில நாள்கள் தன்னை மறந்து, உலகை மறந்து நிற்கும் நிலை இருந்தது.இது  அக்குழைந்தையின் ஞானம் தேடிய வாழ்வின் தொடக்கமாக அமைந்தது. இவரின் குடும்பத்தார் இவரை குருத்தன்மை பெற்ற குழந்தை என்பதை உணர்ந்து அவரைக் குருவாகவேக் கொண்டாடினர். இவரும் நாளும் சிவபூஜை செய்து  தியானத்தில் ஆழ்ந்து வாழ்ந்து வந்தார்.

தல யாத்திரை

இவரின் குடும்பத்தார் இவருக்குத் திருமணம் செய்விக்க முயற்சித்த நேரத்தில் தான் சிவபெருமானுக்கு பரம அடியவனாகி, அப்பெருமான்  கோயில் கொண்டுள்ள இடங்களைத் தரிசித்து வருகிறேன் என்று தலயாத்திரை செய்ய ஆரம்பித்தார்.  ஊர்தோறும் சென்று சிவபிரானின் பேரருள் பெற  பயணித்தார்.  சிதம்பரம் நகரடைந்து  நடராச மூர்த்தியை வணங்கித் திருவிளக்குக் கட்டளை ஒன்றை அவர் ஏற்படுத்தினார்.

மௌன குருவை அடைதல்

          சிதம்பரத்தில் இருந்த மௌனகுருவிடம் இவருக்கு ஈர்ப்பு ஏற்பட்டது. நாளும் நடராசரோடு அவரையும் தரிசித்து வந்தார். காலை, மாலை வேளைகளில் அவரின் அருட் கருணைக்கு ஏங்கினார். அவரிடம் உபதேசம் பெற விரும்பினார். குளிர் மழை நாளில் கௌபீனம் மட்டுமே அணிந்து அவர் முன்னர் ஞானம் வேண்டி நின்றார். இவரின் ஞானவேட்கையை அறிந்த மௌனகுரு இவருக்கு போர்த்திக்கொள்ள கம்பளம் கொடுத்து ஞான உபதேசமும் செய்துவித்தார். மௌன குருவின் மீது பஞ்ச ரத்தினப் பாடல்கள் பாடினார். மௌனகுருவிடம் ஞானிகளுக்கு அடையாளங்களான ஞானத் தண்டம், ஞானப் பட்டி சடாமகுடம் தரித்து மௌன சுவாமிகளின்  அருட்பார்வையில் ஞானித் திருக்கோலம் ஏற்றார்.

தொடர் பயணம்

          இதன் பின் கந்தப்ப சுவாமிகள்  திருவாரூர் சென்று தியாகேசரை வணங்கி, மடப்புரம் வந்து தட்சிணாமூர்த்தி சுவாமிகளைக் கண்டு  ஞானம் பெருக்கினார்.  சிக்கல் அருகில் இருந்து பொருள்வைத்த சேரியில் வீற்றிருந்த  சீர் வளர் சீர் உகந்த லிங்க சுவாமிகளையும் தரிசித்து சிலகாலம் அவருடன் இருந்து அருள் பெருக்கினார். தொடர்ந்து பயணித்த இவரின் பயணம் வேட்டவலம் என்ற ஊருக்கு அருகில் உள்ள பாக்கம் என்ற ஊரில் உள்ள மலையடுக்கில் பலகாலம் ஞான சமாதி நிலையில் நிட்டையில் இருந்தார்.

மண்ணில்  பொன்

          பாக்கத்து மலையில் பல நாளும் பால் தந்து தன்னைக் காத்த  முத்துசாமி உடையாருக்குச் செல்வம் பெருக்கக் காரணமாகச் சித்து இயற்றினார். அவர் வீட்டில் கிடைத்த புதையல் அவருக்குப் பெருஞ்செல்வம் தந்தது. இதனை இவரது பெருமையாகக் கருதி மக்கள் இவரிடம் செல்வம் கேட்டு முறையிட்டனர். இவர்களின் அன்புத் தொல்லைகளால் அவ்விடம் விட்டு அகல கந்தப்பர் முன் வந்தார். திருவண்ணாமலைக்கு வருகை தந்து, அருள்மிகு அண்ணாமலை, உண்ணாமுலை அம்மனைத் தரிசித்து  அங்கேயே இருப்பது என முடிவெடுத்தார். திருவண்ணாமலையின் கோரக்க நாதர் குளக்குரை இவரின் இருப்பிடமானது.

பிள்ளைக் கனி

          இக்காலத்தில் இவரிடம் தொண்டு புரிய அருணாசலம் செட்டியார் என்பவர் வந்தார். அவருக்குக் குழந்தைப் பேறு இல்லாத  குறை போக்கத் தமக்கு சித்தர்கள் அருளால் கிடைத்த ஞானக் கனி ஒன்றைக் கொடுத்து அருளினார். சித்தர்களின் கூட்டுறவால்  மனித வாசனையற்ற  அருட்குகைகளில் இவர் சில காலம் தங்கும் பேறு கிடைத்தது. இவருக்கு மேலும் சித்து விளையாட்டுத் திறன்கள் கிடைத்தன. அருணாசலம் செட்டியார் குழந்தைப் பேறு பெற்றார். அவருக்குக் கந்தப்பர் வழங்கிய திருநீற்றுப் பை இன்னமும் அருணாசல செட்டியார் குடும்பத்தாரால்  வைத்து வணங்கப்பெற்று வருகிறது.

பாக்கத்து முத்துச்சாமி பக்கத்தில் வருதல்

          பாக்கம் என்ற ஊரில் இருந்து அண்ணாமலைக்குக் கந்தப்பர் வந்த செய்தியை கடவுள் தந்த குறிப்பின் வழி அறிந்த முத்துச்சாமி உடையார் அண்ணாமலைக்குக் கந்தப்பரைத் தரிசிக்க ஈசானியமூலைக்கு வந்தார்.  கந்தப்பரையும் அண்ணாமலையார் ஈசானியத்திற்கு எழுந்தருளக் குறிப்பளித்தார். கந்தப்பர் அவ்வாறே ஈசானியத்தில் இருப்பதானார்.

வரிப்புலி காவல்

          ஈசானியத்தில் இருந்த கந்தப்பருக்குக் காவலாக அவ்வப்போது அவரின் அருகில் வரிப்புலிகள்  வந்து அமர்ந்து அவருக்கு அரணாக  விளங்கும். அவற்றை தன் நிட்டை கலைந்த காலத்தில் அன்பொழுக தடவிக் கொடுத்து மகிழ்வார் கந்தப்பர். தொண்டர்கள் வருங்காலத்தில் வரிப்புலிகளை அவைகளின் இருப்பிடத்திற்குத் திரும்ப அன்புக் கட்டளையிட அவைகளும் அடிபணியும். (திருவண்ணாமலை ஈசானிய மடத்தில் உள்ள பாதாளக் குகையில் இக்காலத்திலும் கந்தப்பர் இருந்த அந்தக் குகைத்தளத்தைப் பார்வையிட இயலும்.)

இன்னும் விளையாடல்

          புதுப்பாளையத்தைச் சார்ந்த ஒருவர் சூலை நோயால் அவதிப்பட்டுக் கொண்டு இருந்தார். அவர் திருவண்ணாமலையைக் கிரிவலம் செய்து வரும்பொழுது கந்தப்பரைக் கண்டு வேண்டினார். அவரைத் தன் திருக்கண் நோக்கிப் பார்க்க அவரின் நோய் தீர்ந்தது. அதுமுதல் அவர் இவருக்கு அடிமையாகி  அவரும் ஈசானிய சுவாமி என்று அவர் ஊராரால் அறிவிக்கப்பெற்று அவருக்கு மடம் முதலியன எழுப்பப்பட்டன.

          மற்றொருநாள் கந்தப்பர் தவம் இருக்கும் இடத்திற்கு ஆவேசமாய் வந்த கரடி ஒன்று அருகிருந்த பிள்ளையார் சிலை தாக்க அக்கரடி வீடுபேறு அடைந்தது. கரடி மோட்சம் பெற்ற நிலை இதுவாகும். அவ்வாறு வந்த பிள்ளையார் சிலைக்குக் கரடி விநாயகர் என்ற நாமம் ஏற்பட்டு அவர் வழிபடப்பட்டுவருகிறார்.

ஈசானிய ஞான தேசிகர் ஆதல்

          பாக்கத்து முத்துச்சாமி  திருண்ணாமலையில் ஈசானியத் திசையில் இருந்த  தமக்குச் சொந்தமான நந்தவன இடத்தைக் கந்தப்பர் இருக்கைக்கு வழங்கினார். இதுமுதல் ஈசானிய ஞான தேசிகர் என்றே அனைவராலும் கந்தப்பரால் அழைக்கப்பட்டார்.

 பொருள் வேண்டா தவவேள்வி

          திருவண்ணாமலையில் வாழ்ந்த அருணாசல சுவாமி என்பவர் தம் புதுச்சேரி சொத்துகளைப் பொன்னாக்கிக் கொண்டு வந்து ஈசானிய தேசிகரிடம் வைப்பதென முடிவெடுத்தார். ஈசானிய தேசிகரோ  பணமும் வராது, நீயும் வரமாட்டாய்  அதனால் போகாதே என்றார்.  மீறியும் அவர் சென்று மாடுகளால் குத்துண்டு மறித்துப் போனார். அவரின் பொன்னும் பணமும் புதுச்சேரிக்குள்ளேயே முடங்கியது.

ஐடன் துரையும் அன்பும் , ஆறு கடந்த குதிரையும்.

          திருவண்ணாமலையில் ஐரோப்பியர் ஐடன் என்பவர் மாவட்ட ஆட்சியராக இருந்தார். அவர் ஈசானிய ஞான தேசிகரைக் காண வந்தார். அப்போது அண்ணாமலை வரிப்புலியாரை விலகச் செய்து ஐரோப்பியருக்குக் காட்சி நல்கினார் ஈசானியர். அவரைப் பிணித்திருந்த காசநோயை நீங்கும்படி அமிழ்து அளித்தார். துரை பல சன்மானங்கள் நிலங்கள் தருவதாய்ச் சொன்னபோதும் அவற்றை மறுத்து அருள் செய்தார் ஈசுானிய ஞான தேசிகர். அதுமுதல் அந்த ஐரோப்பியல் எச்செயல் செய்தாலும்  ‘‘தாத்தாவே நீ இக்காரியத்திற்கு முன் இருந் து செய் ’’ என்று ஈசானியரை வணங்கிச் செய்யத் தொடங்குவார். செயல்கள் வெற்றி பெறும்.

          திருவண்ணாமலைத் தேர் வடம் பிடிக்க இத்துரை வரும்போது ஈசானியரை மனதால் வேண்டி வாக்கால் வேண்டி அதன் பின்னே காரியம் தொடங்குவார்.  ஓராண்டு துரை வர இயலாத நிலையில்  ஆற்று வெள்ளம் பெருகியது. எல்லோரும் நிற்கையில் துரை மட்டும் தாத்தாவின் பெயரைக் குதிரையின் காதில் சொல்லிட அது வேகம் கொண்டு ஆற்றில் பாய்ந்து தேர் வடம் பிடிக்க வந்து சேர்ந்தது. அதே நேரம் நிட்டையில் இருந்த ஈசானிய தேசிகரின் கரங்கள் நீண்டு இடப்பக்கம் தாழ்ந்தது. இதற்கான காரணத்தை அருகில் இருப்பவர் அறிய விரும்ப ஈசானிய தேசிகர் ‘‘ எவன் ஆற்றில் விழுந்தாலும் அதற்கு நாம் உத்திரவாதியாக வேண்டுமோ?’ என்று பதில் உரைத்தார். ஐடன் துரையின் குதிரைக்குச் சித்து அளித்தவர் ஈசானியர்.

சீர்வளர் சீர் முத்திராமலிங்க ஞான தேசிகர் சந்திப்பு

          அருணாசலம் வந்த சீர் வளர் சீர் முத்திராமலிங்க ஞான தேசிகர் ஈசானிய ஞான தேசிகரைச் சந்தித்து அவருடன் சிலகாலம் தங்கினார். இருவரும் ஞானம் பெருக்கினர். அப்போது அருகில் இருந்த முத்துச்சாமி  கோவிலூர் சாமிகளின் கைவிரலில் இருந்த மோதிர அழகினை மோகிக்க அதுவறிந்த  கோவிலூர் முத்திராமலிங்கர் அதனை அவருக்கு அளித்து மகிழ்ந்தார். மோதிரம் பெற்ற தொண்டர்  திருக்கதை இங்கும் தொடர்கிறது.

மண்டகுளத்தூரும் வேதப் பெருக்கும்

          மண்டக் குளத்தூரைச் சார்ந்த சபாபதி என்பார் காஞ்சிபுரத்தில் கண்ட கனவின்வழி  திருவண்ணாமலை ஈசானிய தேசிகரைத் தன் ஞானகுருவாகக் கொள்ள வருகை புரிந்தார். அவர் வடமொழி வல்லமை பெற்றவர். அவருக்கு நிட்டை கை கூடி வராது காலம் தாழ்த்தியது. இதற்கான காரணத்தை ஈசானிய ஞான தேசிகரிடம் கேட்க அவர்  வடமொழி வேதங்களை மற்றவர்களுக்கு விளங்கச் சொல்லவும். அவை உன் புத்தியில் அடைந்து கிடக்கிறது என்றார் ஈசானியர். அவரும் தன்னூர் சென்று அங்கிருந்த வேதியச் சிறுவர்க்கு வேதஞானம் புகட்டி நிட்டை கைவரப்பெற்றார்.

          இதன்பின் அவர் கிணற்றில் விழுந்த நண்பரின் உயிரைக் காத்து, நீரில் விளக்கெரித்து  போன்ற பல சித்துகள் செய்தார். தவ நிறைவு எய்திய அவருக்கு அங்கு மடமும் நாள்பூசையும் நடந்து வருகிறது.

உகந்த லிங்கரின் நிறைவும் ஈசானியரின் நினைவும்

          சீர் வளர் சீர் உகந்த ஞான லிங்க தேசிகர் தன் நிறைவின் நிலை அறிந்து அதற்காகக் காத்திருந்தார். சரியான நேரத்தில் ஈசானியர் அவர் இருக்கை சென்று அவரின் மனம் நிறைந்தார். இறை கலந்தார். அவரின்  திருமேனியை அடக்கம் செய்யச் சென்ற நிலையில் ஊரார் தடை செய்ய அவர்களை தன் ஆணையால் விலக்கி  நலமுடன்  அடக்கம் செய்தார்.

தனது பரிபூரணம் உணரல்

ஈசானிய ஞான தேசிகர் சொல்வாக்கு மிக்கவர். சொல் பலிதம் கொண்டவர், சிவ காடட்சம் மிக்கவர். அவர் சிறந்த ஆன்மீகக் கவிஞர். திருவண்ணாமலையார் அவருக்கு கோரக்க நாதர் குளக்கரையில் தரிசனம் கொடுத்த காலத்தில் அவ்வனுபவத்தை அண்ணாமலையார் தோத்திரப் பாமாலையாகப் பாடி அருளினார். மேலும் வெண்பா, அந்தாதி கண்ணி வடிவங்களிலும் பெருமான் பெருமையை அவர் பாடியுள்ளார்.

தொண்டர்கள் புடை சூழ எந்நாளும் வீற்றிருந்து ஞான கடாட்சத்தை அவர் அருளி வந்தார்.ஈசானிய ஞான தேசிகர் தமது ஞான திருஷ்டியால் தன் நிறைவுக் காலம் நெருங்குவதை உணர்ந்தார். ஓலையில் 1829 ஆம் ஆண்டு. மார்கழி மாதம் 26 ஆம் நாள் குருவாரம் , மிருகசீரிட நட்சத்திரத்தில்  தன் நிறைவு என்பதை அவர் எழுதி வைத்தார்.  ஆயிரங்கால் மண்டபத்தில் அறைக்கட்டுக்கு ஸ்ரீநடராச பெருமான் போகின்றார். நாமும் அங்குப் போக வேண்டுமென்று அவர் திருவாக்கு அருளினார்.

           அவரின் வாக்குப்படியே அவரின் முக்தி நிலை அமைந்தது. அவரின் ஜீவ சமாதியை அவர் வில்வக் கண்ணாடியில் அண்ணாமலையாரைக் கண்ட இடத்தில் அமைத்தனர். வேட்டவலம் ஜமீன்தார் குடும்பத்தார் ஜீவ சமாதியின் மீது திருக்கோயில் எழுப்பினர். சிவலிங்கப் பிரதிட்டை செய்தனர்.

          தற்போது மாதம் தோறும் மிருக சீரிட நட்சத்திரத்தில் மாத குருபூசையும் மார்கழியில் வருட குருபூசையும் சிறப்புடன் நடைபெறுகிறது. மாத குருபூசைகளில் இந்தியாவின் பல மாநில அன்பர்கள் கலந்து கொண்டு அன்னதானம் செய்கின்றனர். வாருங்கள்  ஈசானியம் செல்வோம்.


            

 

சிதம்பரம் பொன்னம்பல சுவாமிகள்

 




சிதம்பரம் பொன்னம்பல சுவாமிகளின் கதை

முனைவர் மு.பழனியப்பன்

தமிழ்த்துறைத் தலைவர்

அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி,திருவாடானை

 

          தேவகோட்டைக்கு அருகில் உள்ள அனுமந்தக்குடி  ஒரு பெரும் வேதாந்த  ஞானியை உலகுக்கு அளித்துள்ளது. அவரே சிதம்பரம்  பொன்னம்பல ஞான தேசிகர் ஆவார். இவரின் தந்தையார் ஆங்கிலேய இராணுவத்தில் பணியாற்றி வந்துள்ளார். இவர் பிறந்த காலத்தில் இவர்கள் வாழ்ந்த இடம் வடநாட்டில் உள்ள  விஜயநகரம் ஆகும்.  இவரின் இளம் வயதிலேயே தந்தையார் இறந்துபோக, இவர் அன்னையார் அங்கம்மாள்  இவரை  நன்கு வளர்த்து வந்தார்.  

          இளமையிலேயே இறையுணர்வு பெற்றவராக பொன்னம்பலர் விளங்கினார். பள்ளிப்பருவத்தில் பள்ளி செல்லும் வழியல் உள்ள பிள்ளையாரை வணங்கிச் செல்வதும். அவருக்கு அபிடேக ஆராதனை செய்வதும் இவரின் வழக்கம். இவருக்கு இவரின் தாயார் தலையும், உடலும் செம்மைப் பட எண்ணெய் வழங்குவது வழக்கம். இந்த எண்ணெயைப் பிள்ளையாருக்கு எண்ணெய்க் காப்பு செய்து இவர்  வணங்குவார். இதனால் இவரின் உடலும் தலையும் பசையற்றுக் காணப்பட்டன. இதன் காரணம் அறிய ஒரு நாள் இவருடன் தொடர்ந்து வந்த தாயார் இவர் செய்யும் பிள்ளையார் பூசையைக் கண்டார்.  இறைதொண்டை விட தன் மகனின் உடல் நலம்  கெடுவதை அவரால் பொறுத்துக் கொள்ள இயலவில்லை.  மகனைப் பொய்க் கோபம் கொண்டுக் கண்டித்தார்.  ஓரே மகனின் நல்வாழ்வினைக் கருத்தில் கொண்டு தாயார் செய்த செயல் இதுவாகும்.

          பதினாறு ஆண்டுகள் ஆன நிலையில் ஞானம் தேடிப் பொன்னம்பலர், பொன்னம்பலமான சிதம்பரத்துக்குத் தனியே வந்து சேர்ந்தார்.  சிதம்பரம் திருக்கோயிலில் அனைத்து இறைபணிகளையும் அவர் செய்தார். கோயில் தூய்மை செய்தல், மலர் பறித்துக் கொண்டு வந்து தருதல், தீபாராதனைக்கு உரிய பொருள்களைக் கழுவிச் சுத்தம் செய்தல் போன்ற பல பணிகளை அவர் தொண்டாகச் செய்தார்.  இவரின் தொண்டால்  இறைவன் மகிழ்ந்தான். சிதம்பரத்தில் சந்நியாசியாக விளங்கிய பெத்தாச்சி அடிகளாரின்  அருந்துணை இவருக்குக்  கிடைத்தது. இவர் இவருக்கு ஞான மார்க்கத்தை உபதேசித்தார்.

          இவர் தன்னை உய்யும் நெறிக்கு உய்விக்கும் குருபிரானை நாளும் தேடி வந்தார்.  சிதம்பரம் சன்னதியில் ஓர் நாள்  கழனிவாசல் என்னும் கோவிலூர் வேதாந்த மடத்தின் சீர் வளர் சீர் கருணாநிதி என்னும் சிதம்பர ஞான தேசிகர்  சிதம்பரநாதனைத் தரிசிக்க வருகை புரிந்தார்.  அவரே தன்னைக் கரையேற்றும் ஞான  குரு என்பதை உணர்ந்தார்  பொன்னம்பலர். பெத்தாச்சி அடிகள் வழி காட்ட கோவிலூர் ஆதீனத்தின் முன் பணிந்து வீழ்ந்தார். தன்னை உய்யக் கொண்டு அருள வேண்டுகோள் வைத்தார்.  கோவிலூர் ஞான தேசிகரும் இவரை மாணாக்கராக ஏற்றுக் கோவிலூரில் மாணாக்கர் கூட்டத்துடன் இருக்க வழி செய்தார்.  கோவிலூரில் அனைத்து வேதாந்தப் பாடங்களையும் கேட்டு  இவர் ஞானப் படிகளில் ஏறினார்.

          பொன்னம்பலர் கற்றது மட்டும் இல்லாமல் தன் கூர்மையான அறிவால் மற்றவர்க்கு விளங்க வைக்கும் ஆற்றலும் பெற்றார்.  இதன் காரணமாக வேதாந்தப் பாடங்களை மறுமுறை பயிற்றுவிக்கும் ஆசானாக இவர் கோவிலூர் மடத்தில் விளங்கினார். அனைவரும் இவரைப் பொன்னம்பல ஐயா என்று விரும்பி அழைத்து மகிழ்ந்தனர்.

          வடமொழி நூல்களைக் கற்க விரும்பிய பொன்னம்பலர் அதற்காக வட நாட்டு யாத்திரை மேற்கொள்ள குருபிரானிடம் வேண்டி நின்றார். குருவின் ஆசியால் இவர் காசி முதலான வடநாட்டுத் தலங்களுக்கு யாத்திரை மேற்கொண்டார். அங்கே இருந்து கிருஷ்ண சுவாமிகளிடம் பல நூல்களைப் பாடம் கேட்டார். அருங்கலை வினோதர் இந்தி மொழியில் எழுதிய  விசாரசாகரம் என்னும் நூலை முழுவதும் தானே கற்றார். இவ்வாறு காசியில் வசிக்கும்போது ஒரு நாள் அன்னப் பூரணியை வணங்கச் சென்றபோது கூட்டமிகுதியால் இவரால் அருகில் சென்று வணங்க இயலவில்லை. தன் கையில் கொண்டுவந்த சந்தனத்தை எவ்வாறு அம்பிகைக்குச் சாத்துவது என்று எண்ணியிருந்த வேளையில்  அதனைச் சற்று உயர்த்தி அம்பிகைக்கு முன்பு வீச அது அம்பிகையின் நெற்றியில் மங்கலாமாக சென்று சேர்ந்தது. இறைவியின் கருணைக்கு இவர் பாத்திரமானதற்கு இதுவும் ஒரு சான்று.

இதன்பின் காசியில் பல நூல்களைக் கற்றார். விருத்திப்பிரபாகம் என்னும் ஒருலட்சம் பாடல்களைக் கொண்ட தொகுதி இவர் கைக்குக் கிடைத்தது. அதனைத் தெளிவுறப் படிக்கத் தன் சேமிப்பில் வைத்தார். காசிப் பயணம் வெற்றி பெற்ற நிலையில் கோவிலூர் திரும்பலானார்.

          காசிச் செலவிற்கு குருவளித்த பணம் அதிகமாகக் கையில் இருந்த நிலையில் அதனைக் கோவிலூருக்கே செலுத்த வேண்டி  தயிர்சாதக் கட்டளையை நிறுவினார். மேலும் திருநெல்லை அம்மன் குதிரை உற்சவத்திற்குத் தேவையான உடைகளையும் வடநாட்டில் இருந்து வாங்கிவந்துச் சேர்த்தார். சென்னை வந்து சேர்ந்து சில நாள்கள் அங்கிருந்து பொன்னம்பலர் அந்நாளில் வித்யாரண்ய முனீந்திரர் எழுதிய பஞ்சதசி என்னும் நூலை தமிழில் ஆக்கி அச்சில் ஏற்றி வெளியி்ட்டார்.

          கோவிலூர் வந்து தன் குருவின் பாதங்ளில் கங்கை நீரையும், சிவ திருநீற்றையும் துளவத்தையும் வைத்து வணங்கி ஆசி பெற்றார். இந்நிலையில் குருபிரானுடன்  அவருடன் பயணிக்கும் அருமைப் பேற்றைப் பெற்றார். இவர்கள் திருவாவடுதுறை மடத்திற்குச் சென்றபோது வேதாந்த மாணவர்தம் சிறப்பறிய விளக்கம் அளிக்க வேண்டப் பெற்றது. அப்போதுபொன்னம்பலர் அப்பணியைத் திறம்பட செய்துப் பாராட்டப்பெற்றார். பிரம்ம கீதையில் இருந்து சில பகுதிகளை விளக்கம் செய்து, தமிழ், வடமொழி இரண்டிலும் மேற்கோள் உரைத்து சிறப்புற விளக்கம் அளித்தார் பொன்னம்பலர். கோவிலூர் வந்தபின் பிரம்ம கீதைக்கு நல்ல உரை எழுதப் பணிக்கப்பெற்ற பொன்னம்பலர் அதனையும் சிறப்புடன் செய்தார்.

          இந்நாளில் குருபிரானின் முக்திப் பேறு  நிகழ்ந்தது. பொன்னம்பலர் ஆண்டவர் சன்னதிக்கு முன்பாக குருபிரானின் நிறைவு இருக்கையை அமைத்து அவருக்குச் சன்னதி எழுப்பினார். கோவிலூர் மடத்திற்கு அடுத்த பட்டம் யாரென்ற நிலை எழுந்தது. அம்மடத்தின் நியமபப்படி நகரத்தார் குருபீடமாதலால் தன்னுடன் உடன் உறைந்து வரும் இராமசாமியாரை,  நான்காம் பட்டமாக ஞான தேசிகராக ஆக்கி இவர் மகிழ்ந்தார்.

          இதன்பின் பொருள்வைத்த சேரிக்குச் சென்று அங்குச் சில நாள்கள் தங்கினார். அங்குத் தன் குருவான சீர் வளர் சீர் கருணாநிதி சுவாமிகளின் பாதுகைகளை வைத்து நாளும் பூசித்து வந்தார். இச்செயல் பரதன் இராமன் பாதுகைகளை வைத்து வணங்கிய காட்சியை அனைவருக்கும் நினைவு படுத்தியது.

          தொடர்ந்து, திருவாரூர் தட்சிணாமூர்த்தி மடம், திருமழபாடி மடம், புனல்வாசல் மடம் போன்றவற்றில் இருந்துத் தன் வேதாந்தப் பணிகளைச் செய்துவந்தார். புனல்வாசலில் இருந்த காலத்தில் மடமொன்று அமைக்க முயற்சி செய்தார். அதற்கான செங்கல் சூளை அமைக்கப்பட்டது. ஆனால் அந்தச் சூளை நிறைவேறும் தருவாயில் பொன்னம்பலருக்குச் சூலை நோய் வந்து சேர்ந்தது. இந்நோய் தீராது வருத்தம் செய்தது. இந்நேரத்தில் சிதம்பரம் சென்றால் நோய் தீரும் என்று  எண்ணிய பொன்னம்பலர் மீண்டும் சிதம்பரம் வந்தார். அங்கு ஒரு தீட்சிதரின் வடிவில் பெருமான் நடராசரின் குஞ்சித பாதத்தில் சூட்டப்பெற்ற மாலையையும், அம்பலவாணரின் திருநீறும் தந்தார். வாங்கி அணிந்து பசுபதி கோயில் மடம் வர நோய் முற்றிலும் நீங்கியது. சூலை தந்து அப்பரைப் பெருமான் ஆட்கொண்டான். அதே நிலை இவருக்கும் எய்தியது.  நீறளித்துச் சம்பந்தர் சூலை நோய் தீர்த்தார். அதே போல இவருக்கும் நீறு பெற நோய்  தீர்ந்தது.

          சிதம்பரத்தில் பொன்னம்பலருக்குத் தனிமடம் அமைக்க காரைக்குடி முரு. ராம. ஆவிச்சிச் செட்டியாரின் குடும்பத்தார் உதவினர். தான் இறக்கும் தருவாயில் ஆவிச்சி செட்டியார் பொன்னம்பலருக்கு உதவிட வழி காட்டினார். அதன்படி அவரின் குடும்பத்தார் மடம் அமைத்துத் தர அதில் கருணாநிதி சுவாமிகளின் பாதுகைகளை நிறுவி நாளும் பணி செய்து வந்தார் பொன்னம்பலர். பொன்னம்பலத்தில் பொன்னம்பலப் பேர் கொண்ட சிதம்பர குருவிற்கு பொன்னம்பலனார் கோயில் நிறுவினார். இம்மடத்திற்கும் கோவிலூர்  சிதம்பர சுவாமிகள் மடம் என்றே தன் குருவின் பெயரை வைத்தார் பொன்னம்பலர். இம்மடத்தின் திறப்பு விழாவிற்கு இராமசாமி ஞான தேசிகர் வருகை தந்து ஆசியருளினார்.

          மடத்துப் பணிகள் செம்மையுற நடந்து வர இவர் ஞானப் பணிகளில் ஈடுபட்டார். எப்போது ஓலை வாசித்தும் ஓலை எழுதியும் இவர் வேதாந்தப் பணி செய்து வந்தார். பரமாரத்த தரிசனத்திற்குத் தக்க உரை கண்டார். தாண்டவராயர் எழுதிய கைவல்ய நவநீதம்  நூலுக்குப் பலரும் பலவகையில் உரை செய்திருக்க இவர் அவற்றைப் பொய் உரைகளாக்கி மெய் உரை ஒன்றை எழுதினார். அதுவே என்றும் நிற்கும் மெய்  உரையாயிற்று. வேங்கடநாதர் இயற்றிய பிரபோத சந்திரோதயம் என்பதையும் அச்சிட்டார்.  மேலும் இவர் சிவப்பிரகாசரின் வேதாந்தச் சூடாமணிக்கு மறைபொருள் விளக்கம் என்று உரை கண்டார்.

          சிதம்பரத்தில் பல வேத பாடசாலைகள், பசுமடங்கள், வித்யாசாலைகள் ஏற்பட வழி செய்தார். மேலும் பொன்னம்பலத்திற்குப் பொன்னோடு வேய்ந்துப் புதிதாக அளித்தார். திருப்புலீச்சுரத்தில் இருந்த கோயில், குளம் ஆகியவற்றைச் சீர் செய்து புதிதாக்கினார். மேலும் சுப்பிரமணியன் செட்டியாருக்கு ஏற்பட்ட கண் நோயை நீக்கினார். அவர் செல்வம் பலவும் அள்ளித் தந்து பொன்னம்பலர் மாணவர் ஆனார். இவரின் செல்வத் துணை கொண்டு  தத்துவராய சுவாமிகளின் நிறைநிலை இருந்த இறும்பூதூர் (எறும்பூர்) தலத்தினைச் சீர்மை செய்தார்.

          கோவிலூரில் சீர் வளர் சீர் இராமசாமி ஞானதேசிகர் முக்திப் பேறு அடைந்த நிலையில் வீரசேகரரை அடுத்த பட்டமாக்கிட இவரின் சொல்லும் துணை நின்றது. இவ்வாறு மூன்று கோவிலூர் ஆதினங்களின் அருமைக்கும் பெருமைக்கும் காரணமாக இவரின் துணை அமைந்தது. வீரப்ப சுவாமிகள் தன் பால் பயின்றவர் என்றாலும் அவரிடத்தில் ஊழியன் பொன்னம்பலவன் என்ற நிலையிலேயே தனது அன்பைக் காட்டி வந்தார் பொன்னம்பலர்.

          கோவிலூருக்கு உரித்தான களத்தூர் கிராமத்தில் மழை இன்றி வறட்சி ஏற்பட்ட நிலையில் பொன்னம்பலர், வீரசேகர ஞான தேசிகர் ஆகியோர் சென்று அங்கு மழை வர வேண்ட  மழை வந்து சேர்ந்த அதிசயமும் நடைபெற்றது.

          அதுபோல் மடத்திற்கு அண்டி வந்தோரை இவர் சிவ பரம்பொருளாகவே கண்டார். பல நாள்களில் இரவில் வரும் அடியார்களை நோயுற்றாரைத் தன் நினைவால் உணர்ந்து அவர்களுக்கு உதவி செய்யச் சொல்லி அவர்கள் உண்டு உறங்கிய பின்பே தான் உறங்குவார் பொன்னம்பலர். பொருள் வைத்த சேரி மடம் கோவிலூரில் இருந்து பிரிவுபடும் நிலை வந்த காலத்து அதனைக் கோவிலூருக்கே உரிமையாக்கியவர் பொன்னம்பலர். மேலும் தனக்குப் பின்னால் சிதம்பர மட உரிமையை கோவிலூர் மடத்திற்கே ஆக்கி பத்திரம் பதிந்தார்.

          எழுபத்து மூன்றாண்டுகளாக ஞான வழி நடந்து வந்த பொன்னம்பலருக்கு முக்திப் பேறு அடையும் நாளும் வந்தது.  கலியாண்டு 5006 , குரோதி ஆண்டு ஐப்பசி திங்கள் தீபாவளித் திருநாளன்று  பொன்னம்பல சுவாமிகள்  நிறைநிலை பெற்றார். அவரின் திருமேனி சிதம்பரம் மடத்தில் தென்பாகத்தில் வைக்கப் பெற்றுத் திருக்கோயில் கொண்டுள்ளது.

         

 

 

பஞ்சவடியும் சுற்றுச் சூழல் பாதுகாப்பும்

   இயற்கையும் மனிதனும் இரண்டறக் கலந்து வாழ்ந்த வாழ்க்கைக் காலம் சிறந்த வாழ்க்கைக் காலம் ஆகும். இயற்கையோடு இணைந்து, தானும் இயற்கையை வளர்த்து ஒரு காலத்தில் மனிதன் வாழ்ந்து வந்தான். இக்காலத்தில் இயற்கையை எதிர்த்து இயற்கையைச் சுரண்டி அதன் வளத்தைக் கெடுத்து விடும் சூழல்களே உள்ளன. பழைய இலக்கியங்களில் சுற்றுச் சூழல் பாதுகாப்பு என்ற விழிப்புணர்வு இல்லாத நிலையிலும் சுற்றுச் சூழலைப் பாடுவது என்பது ஒரு மரபாக இருந்துள்ளது. காடு, மலை வருணனை, இரு சுடர் தோற்றம் என்ற படைப்பு உத்திகள் காப்பியத்திற்கான உத்திகளாகக் கொள்ளப்பெற்றிருந்தன. இதன் காரணமாக இயற்கையை அதன் இனிமையைப் புலவர்கள் பாடினர்.

            கம்பராமாயணத்தில் இயற்கையைப் பாடும் வாய்ப்பு கம்பருக்குப் பல இடங்களில் கிடைக்கின்றது. இராமன் காடேகும் நிலையிலும், சீதையைப் பிரிந்து தேடும் நிலையிலும், இராவணனுடன் போர் புரியச் சென்ற நிலையிலும் பல இடங்களில் இயற்கையைப் போற்றியே கம்பர் தம் கம்பராமாயணக் காப்பியத்தை நடத்திச் சென்றுள்ளார்.

பஞ்சவடி

            இராமனும் சீதையும் பதினான்கு ஆண்டுகள் தாங்கரும் தவம் மேற்கொண்டு, புண்ணிய துறைகள் ஆடி வந்திடக் கூறிய அன்னை கைகேயின் வாக்கை ஏற்றுக் காடேகுகின்றனர். அவர்களுடன் இளையவனான இலக்குவனும் வருகிறான். இவர்கள் காட்டின் எல்லையில் முனிவர்களைக் கண்டு, குகனின் தோழமையைப் பெற்று வரும் நிலையில் பஞ்சவடியில் தங்குகின்றனர். அது தங்குவதற்கான சிறந்த இடம் என்று இராமனுக்குச் சுட்டப்பெறுகிறது.

            தண்டகாரணியத்தில் பத்து ஆண்டுகள் கழித்த இராமன், சீதை, இலக்குவன் அகத்தியரைச் சந்தித்து அவரின்வழி பஞ்சவடி என்னும் குன்றினைப் பற்றி  அறிகின்றனர். அதுவே தங்க இனிய இடம் என்ற நிலையில் அதனைப் பற்றிய செய்திகளை அகத்தியர் இயற்கை நலம் கொஞ்ச வழங்குகிறார்.

‘ஓங்கும் மரன் ஓங்கிஇ மலை ஓங்கிஇ மணல் ஓங்கிஇ

பூங் குலை குலாவு குளிர் சோலை புடை விம்மிஇ

தூங்கு திரை ஆறு தவழ் சூழலது ஓர் குன்றின்

பாங்கர் உளதால்இ உறையுள் பஞ்சவடி – மஞ்ச!

என்ற நிலையில் பஞ்சவடி இராமனுக்கும் அவன் உடன் வந்தோருக்கும் அறிமுகம் செய்யப்படுகிறது. மரங்கள் ஓங்கி நிற்கும் இடமாகவும், உயர்ந்த மலையை உடைய இடமாகவும், விளையாடுவதற்கு ஏற்ற நல்ல மணற்பாங்கான இடமாகவும், பூக்கள் பூக்கின்ற குளிர் சோலைகளை உடைய இடமாகவும், குன்றின் மேல் உள்ள இடம் பஞ்சவடி என்று அறிமுகம் இவ்விடம் அறிமுகம் செய்யப்படுகிறது.

            மேலும் அவ்விடத்தில் இயற்கை பல காய்களையும் கனிகளையும் தந்து நிற்பதால் தவ உறைவிடத்திற்குச் சிறப்பான இடம் என்று அகத்தியர் குறிப்பிடுகிறார்.

            வாழை இளம் கனிகள் தொங்கும் வாழைமரங்களும், செந்நெல் விளையும் வயல்களும், பூக்களில் தேன் வழியும் நிலைப்பாடும், தெய்வத்தன்மை உள்ள பொன்னி நதி போன்று கோதாவரி நதியும் உடைய இடம் பஞ்சவடியாகும். இவைமட்டுமில்லாமல் சீதையுடன் விளையாட அன்னங்கள் பயிலும் இடமாகவும் அது விளங்குகின்றது என்று கம்பர் பாடுகின்றார்.

‘கன்னி இள வாழை கனி ஈவ; கதிர் வாலின்

செந்நெல் உள; தேன் ஒழுகு போதும் உள; தெய்வப்

பொன்னி எனல் ஆய புனல் ஆறும் உள; போதாஇ

அன்னம் உளஇ பொன் இவளடு அன்பின் விளையாட.

இத்தகைய இடத்தில் நீங்கள் மகிழ்வுடன் தங்கலாம் என்று அகத்தியர் இராம குழுவினருக்கு அடையாளம் காட்டுகின்றார். இவ்விருபாடல்கள் வழியாக தங்குவதற்கு இனிமையான இடம் பஞ்சவடி என்பதும் அங்கு உணவிற்குத் தட்டுப்பாடு வராத நிலையில் தேனும். செந்நெல்லும், நீரும், வாடைக்கனிகளும் நிறைந்திருக்கும் என்பதும் கம்பரால் காட்டப்படும் வளங்கள் ஆகும்.

            இவ்வாறு அகத்தியர் சொல்லால் வளம் பெற்ற இடமாக பஞ்சவடி விளங்குகின்றது. இவ்விடம் பற்றி இராமன் குறிப்பிடும்போது அவனின் சொற்களில் சூழல் என்ற சொல் இடம் பெறுவது இக்காலத்தின் சுற்றுச் சூழல் நிலைப்பாட்டிற்குப் பெரிதும் பொருந்துவதாக உள்ளது.

இறைவ! எண்ணிஇ அகத்தியன் ஈந்துளது

அறையும் நல் மணி ஆற்றின் அகன் கரைத்

துறையுள் உண்டு ஒரு சூழல்; அச் சூழல் புக்கு

உறைதும்’ என்றனன் -உள்ளத்து உறைகுவான்.

                                               (சடாயு காண் படலம், பாடல்எண் 39)

என்ற நிலையில் இராமன் தான் தங்க உள்ள சூழல் ஆற்றின் கரையில் அமைந்துள்ளது என்று குறிப்பிடுகிறான். சூழலியல் நிலையில் இப்பாடல் சிறப்பிற்குரிய பாடலாகும்.

கோதாவரி ஆறு

            பஞ்சவடி கோதாவரி ஆற்றின் கரையில் அமைந்துள்ளது. கோதாவரி ஆற்றின் வளமையைக் கம்பர் பலபடப் பேசுகின்றார்.

            சான்றோர்கள் படைத்த கவிதைகள் சொல்நலம், பொருள்நலம், இசைநலம் கொண்டு உயிர்களுக்கு நன்மை செய்கின்றதோ அதுபோன்று கோதாவரி ஆறு நன்மை செய்கிறது என்று கம்பர் கோதாவரியின் நீரோட்டச் சிறப்பினைக் கவிதையோட்டச் சிறப்பினுடன் ஒப்பு வைத்துப் பாடுகின்றார். அவர் ஒப்பு வைத்த நிலையைப் பின்வருமாறு பொருத்திக்காட்ட இயலும்.

கவிதை

            புவியில் தோன்றும் கவிகள் அணி பெற்றுத் திகழ்கின்றன. ஆன்ற பொருள் தரக்கூடியது அகத்துறைகளைப் பாடக் கூடியது. ஐந்திணை நெறிகளைப் பாடவல்லது. அழகுற விளங்குவது. இனிய ஒழுக்கத்தைப் பாடுவது.

கோதாவரி

            கோதவாரி ஆறு புவிக்கு ஒரு அணிகலம் போன்றது. அது பல பொருள்களைத் தன்னுள் கொண்டுள்ளது. பல படித்துறைகள் கொண்டது. குறிஞ்சி முதலான ஐந்து நிலங்களைத் தழுவி ஓடுவது. இனிய நீரோட்டம் உடையது.

            இவ்வாறு இரட்டுற மொழியும் நிலையில் கவிதையையும் பாராட்டி, நீரையும் பாராட்டும் சிறப்பில் கம்பர் கவிதை யாத்துள்ளார். அக்கவிதை பின்வருமாறு.

புவியினுக்கு அணி ஆய் ஆன்ற பொருள் தந்துஇ புலத்திற்று ஆகி

அவி அகத் துறைகள் தாங்கி ஐந்திணை நெறி அளாவி

சவி உறத் தெளிந்து தண்ணென் ஒழுக்கமும் தழுவி சான்றோர்

கவி என கிடந்த கோதாவரியினை வீரர் கண்டார்.  (சூர்ப்பனகைப் படலம், பாடல்எண். 1)

            கோதவரி ஆறு, ஒரு பெண்ணாக நின்று தன் அலைக்கரங்களால் மலர்களை வீசி இராம, சீதை, இலக்கவரை வரவேற்கிறதாம். கோதாவரியில் தாமரை மலர்களும் குவளை மலர்களும் பூத்துக்குலுங்குகின்றன. இன்னும் பல நீர்ப்பூக்கள் மலர்ந்துள்ளன. தாமரை ஆகிய முகத்தில் கருங்குவளை போன்ற கண்களைக் கொண்டு நீர்கொடி போன்று கோதாவரி ஆறு விளங்குகின்றது. அது தன் அலைக்கரங்களால் இராம குழுவினரை வருக வருக என்று சொல்லி மலர் தூவி வரவேற்கும் நிலையில் உள்ளதாகக் கம்பர் உருவகம் செய்கிறார்.

வண்டு உறை கமலச் செவ்வி வாள் முகம் பொலிய வாசம்

உண்டு உறை குவளை ஒண் கண் ஒருங்குற நோக்கி ஊழின்

தெண் திரைக் கரத்தின் வாரிஇ திரு மலர் தூவி செல்வர்க்

கண்டு அடி பணிவது என்னஇ பொலிந்தது கடவுள் யாறு.  (சூர்ப்பனகைப் படலம் 2)

அதே நேரத்தில் கோதாவரி ஆறு தன் துன்பத்தையும் வெளிப்படுத்துகிறதாம். குவளை மலர்களில் நீர்த்துளிகள் காணப்படுகின்றன. அவை கோதாவரியின் கண்ணீர்த்துளிகளாக விளங்குகின்றனவாம். இராம குழுவினரின் நாடுவிட்டு காடு வந்த நிலையை எண்ணி, ஏங்கி ஏங்கி அழுவதாகவும் கோதவரியின் ஓட்டம் இருந்தது என்கிறார் கம்பர்.

எழுவுறு காதலரின் இரைத்து இரைத்து ஏங்கி ஏங்கி

பழுவ நாள் குவளைச் செவ்விக் கண் பனி பரந்து சோர

வழு இலா வாய்மை மைந்தர் வனத்து உறை வருத்தம் நோக்கி

அழுவதும் ஒத்ததால் அவ் அலங்கு நீர் ஆறு மன்னோ.  (சூர்ப்பனகைப் படலம், 3)

இவ்வாறு பாடல்கள் தோறும் இயற்கை நலம் கொழிக்கும் வகையில் பஞ்சவடியின் இருப்பினைக் காட்டுகிறார் கம்பர்.

            இதன்பின் இராமனும், சீதையும் பஞ்சவடியின் இயற்கை அழகைக் கண்டு மகிழ்கின்றனர். அவர்களின் கண்கள் வழி கண்ட இயற்கை நலத்தைக் கம்பர் நான்கு பாடல்களில் காட்டியுள்ளார்.

            கோதாவரி ஆற்றில் சக்கரவாளப் பறவைகள், தாமரை மலர்கள் போன்றன நிறைந்திருந்தன. தாமரை மலர்களில் சக்கரவாளப் பறவைகள் படுத்துக்கிடந்தன. இந்தக் காட்சியைக் கண்டு சீதையை நோக்கினான் இராமன். அவளின் மார்பழகினைக் கண்டு அவன் மகிழ்ந்தான். சீதையோ அவனின் நீலமணி போன்ற குன்று போன்ற தோள்களைக் கண்டாள்.

நாளம் கொள் நளினப் பள்ளி நயனங்கள் அமைய நேமி

வாளங்கள் உறைவ கண்டு மங்கைதன் கொங்கை நோக்கும்

நீளம் கொள் சிலையோன்; மற்றை நேரிழை நெடிய நம்பி

தோளின்கண் நயனம் வைத்தாள் சுடர் மணித் தடங்கள் கண்டாள்.

(சூர்ப்பனகைப் படலம் 4)

என்று கம்பரின் கவிதை இராமனின் சீதையின் பார்வைகளைப் பதிவுசெய்கின்றது.

ஓதிமம் ஒதுங்க கண்ட உத்தமன் உழையள் ஆகும்

சீதைதன் நடையை நோக்கி சிறியது ஓர் முறுவல் செய்தான்;

மாதுஅவள்தானும் ஆண்டு வந்து நீர் உண்டு மீளும்

போதகம் நடப்ப நோக்கிஇ புதியது ஓர் முறுவல் பூத்தாள். (சூர்ப்பனகைப் படலம. 5)

 கோதாவரி ஆற்றில் அன்னங்கள் மெல்ல நீந்தியும் நடந்தும் விளையாடின. அவற்றின் நடையையும் சீதையின் நடையையும் ஒன்று வைத்துப் பார்த்து இராமன் மகிழ்ந்தான். இதன் விளைவாய் அவனின் வாயினின்று புதிய சிரிப்பு தோன்றியது.

            அவளும் கோதாவரி ஆற்றில் நீர் உண்டு மீண்டு செல்லும் யானையின் நோக்கி அதனை இராமனின் நடையுடன் ஒப்பு வைத்து புதிய முறுவல் பூத்தாள்.

            மேலும் இராமன் கோதாவரி ஆற்றில் கொடிகள் மடங்கி ஆடிச் செல்வதைக்கண்டான். அவற்றின் காட்சி சீதையின் இடையின் தோற்றத்தைப் பார்க்கச் செய்தது. சீதை நீரில் மலர்ந்த தாமரையைக் கண்டாள். அக்காடசியில் இராமனின் தாமரை வடிவினைக் கண்டாள்.

வில் இயல் தடக் கை வீரன் வீங்கு நீர் ஆற்றின் பாங்கர்

வல்லிகள் நுடங்கக் கண்டான் மங்கைதன் மருங்குல் நோக்க

எல்லிஅம் குவளைக் கானத்து இடை இடை மலர்ந்து நின்ற

அல்லிஅம் கமலம் கண்டாள் அண்ணல்தன் வடிவம் கண்டாள். (சூர்ப்பனகைப் படலம்.6)

என்ற நிலையில் இராமனும் சீதையும் இயற்கையுடன் பிறரது அழகைக் கண்டு மகிழ்ந்தனர். இதனால் இயற்கையும் சிறந்தது. அவர்களின் நினைவெழுச்சியும் சிறந்தது.

            இதன்பிறகு இலக்குவன் இயற்கைப் பொருள்களைக் கொண்டு கட்டிய பர்ணசாலைக்குச்சென்றனர். அவன் அமைத்த பூஞ்சாலையில் மகிழ்ச்சியுடன் இருக்க விழைந்தனர் என்ற நிலையில்  கம்பர் பஞ்சவடியின் நலத்தை எடுத்துரைக்கிறார்.

அனையது ஓர் தன்மை ஆன அருவி நீர் ஆற்றின் பாங்கர்

பனி தரு தெய்வப் ‘பஞ்சவடி’ எனும் பருவச் சோலைத்

தனி இடம் அதனை நண்ணி தம்பியால் சமைக்கப்பட்ட

இனிய பூஞ் சாலை எய்தி இருந்தனன் இராமன். இப்பால் (சூர்ப்பனகைப் படலம் 7)

            இப்பாடலில் இனிய பூஞ்சோலையை இலக்குவன் புனைந்த நிலையைக் கம்பர் பாடுகின்றார். இயற்கை அன்னை தந்த இயற்கைச் செல்வங்களை வைத்து இராம சீதையர் தங்கும் இடம் மிகக்குளிர்ச்சியுடன் கட்டப்பெற்றுள்ளது.

            மனிதன் இருக்கும் இடம் இயற்கை சார்ந்து இருக்கும் நிலையில் அது இனிமை பயப்பதாகவும்,அமைதி தருவதாகவும் உள்ளது என்பதற்குப் பஞ்சவடி ஒரு எடுத்துக்காட்டு. ஒரு குறியீடு.

சீர் வளர் சீர் மெய்யப்ப ஞான தேசிக சுவாமிகள்

 சீர் வளர் சீர் மெய்யப்ப ஞான தேசிக சுவாமிகள்

முனைவர் மு.பழனியப்பன்

தமிழ்த்துறைத் தலைவர்

அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி

திருவாடானை

 

காரைக்குடியில் கல்விக்குடி

            காரைக்குடியில் பிறந்து,  டெல்லி வரை சென்று  பணியாற்றியவர்  திரு. மெய்யப்பன் அவர்கள். காரைக்குடியில்  மெ. மெ குடும்பத்தில்  மெய்யப்பன், அழகம்மை ஆகியோருக்கு மகனாக மெய்யப்பன் பிறந்தார்.  இளவயதிலேயே தநதை  இறைநீழல் அடைய தாயின் அரவணைப்பில் வளர்ந்தார். காரைக்குடியில் உள்ள  ஸ்ரீ மீனாட்சி சுந்தரேசுவரர்  பள்ளியில் தன் பள்ளிப்படிப்பினைப் படித்தார். அக்காலத்தில்  நடைபெற்ற கம்பன் விழாக்களில் இவர் கலந்து கொண்டு கம்பன் அடிப்பொடி திரு சா. கணேசனாருடன் தொடர்பு ஏற்பட்டு இலக்கிய ஆர்வம்  கொண்டார்.    காரைக்குடி அழக்கப்பா கல்லூரியில்  நிலவியல் துறையில்   இளநிலைப் பட்டத்தையும்,  சென்னை மாநிலக் கல்லூரியில்  முதுநிலை நிலவியல் பட்டத்தையும் முடித்துப் பேராசிரியராகத் தூத்துக்குடியில்  பேராசிரியராகப் பணியாற்றினார். திருக்குறள் கழகத்திலும் இவரின்  இலக்கியப் பணி தொடர்ந்தது,

இந்தியத் தலைநகரில் கோவிலூரின் ஆன்மீகப் பணி

            அதன்பின் ஓசூரில் உள்ள ஆசியன் பேரிங்க்ஸ் குழுமத்தில் இவரின் பணி பல்லாண்டுகளாகத் தொடர்ந்தது.  இதன் பிறகு டெல்லியில் உள்ள எக்கம் குழுமத்திலும் இவரின் பணி தொடர்ந்தது.  டெல்லியில் பணிபுரிந்த காலத்தில்  கோவிலூர் ஆதீனகர்த்தர் சீர் வளர் சீர் நாச்சியப்ப சுவாமிகளின் அறிமுகமும், அவருடன் இணைந்து ஆன்மீகப் பணியாற்றும் வாய்ப்பும் திரு. மெய்யப்பன் அவர்களுக்குக் கிடைத்தது. டெல்லி, ரிஷிகேஷ் ஆகிய இடங்களில் கோவிலூர் மடத்தின் கிளைகளை  விரிக்க நாச்சியப்ப சுவாமிகள் எண்ணம் கொண்டார். இவ்விடங்களில் பல பணிகளைத் தன் மேற்பார்வையில் திரு. மெய்யப்பன் அவர்கள்  செய்து வந்தார். குறிப்பாக ரிஷிகேஷ் மடம் சிறப்புடன்  உருவாகவும் நடைபெறவும் திரு மெய்யப்பன்  பெரிதும் உதவினார்.

             நாச்சியப்ப சுவாமிகளைத் தன் ஆன்மீக வழிகாட்டியாகக் கொண்ட மெய்யப்பர்,  அவருடன் நெருங்கிய  தொடர்புடையவராக விளங்கி, அவரின் தனி உதவியாளராகவும்  தன் பணியைத் தொடர்ந்தார். கோவிலூர் தொடர்பு  ஏற்பட்ட யாவரும் அம்மடத்தின் ஆன்மீகப் பணியில் தன்னை முழுவதும் ஈடுபடுத்திக் கொள்வர்.  அவ்வகையில் கோவிலூர் மடத்தின் ஆன்மீகப் பணிகளில் தன்னை முழுவதும் ஐக்கியப் படுத்திக் கொண்டு  தன் வாழ்வில் மெய்யைத் தேடினார் மெய்யப்பர்.

            பழனி பாதயாத்திரை  அருள் அனுபவம் உடைய மெய்யப்பர்  அருள்பாடல்கள் புனைவதிலும் வல்லவர். ஆடுக ஊஞ்சல்  என்ற அவரின் பாடல்  இன்றும் பல பக்தர்கள் நாவில் செம்மடைப்பட்டி ஊஞ்சலின் போது பாடப்படுவதைக் கேட்கலாம்.  அவரின் இலக்கிய ஆர்வம் அவரைக் கவிஞராகவம், பின்னாளில் கட்டுரையாளராகவும்  விளங்கவைத்தது. வேதாந்த கட்டுரைகளையும், கம்பராமாயணக் கட்டுரைகளையும் எழுதி வ்ந்தார். திருநெல்லை என்ற இதழைத் தொடங்கியவரும் இவரே.  இலக்கியப் பூங்கா என்ற இலக்கிய நிகழ்ச்சியைக் கோவிலூர் மடத்தில் மாதம் தோறும் நடத்தினார்.

கோவிலூர் தொடுப்பும், தொடர்வும்

            நாச்சியப்ப சுவாமிகள் பரிபூரணம் அடைந்தபின் அவரின் ஆணைப்படி மெய்யப்பன்  சீர் வளர் சீர் மெய்யப்ப  ஞான தேசிக சுவாமிகளாக அருள்பீடம் ஏறினார். மெய்யப்ப ஞான சுவாமிகள்  2011 ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில்   ஞான தேசிகராக கோவிலூர் மடத்தில் அமர்ந்தார்.

            சீர் வளர் சீர் நாச்சியப்ப சுவாமிகள் தொடங்கிய பணிகளை  எண்ணிய பணிகளைத் தொடர்ந்து  இவர் நடத்தினார்.  தொடங்கப்பறெ்ற கல்விக் கூடங்களைச் சிறப்பாக நடத்தவும்,  புதிதாக பல கல்விக் கூடங்களை ஏற்படுத்தவும் அவர் முனைந்தார். நீதிநூல்கள், காப்பியங்கள் பலவற்றை  உரையுடன் வெளியி்ட்டார். வேதாந்த பாடங்களை நடத்தினார். அவற்றை படப்பதிவுகளாக ஆக்கினார். பழனி பாத யாத்திரை, செட்டிநாட்டுத் தாலாட்டு, பட்டினத்தார், நகரக் கோயில்கள் பற்றிய ஆவணப்படங்களைத் தயாரித்தார்.

            கோவிலூர் மடத்தின் இருநூறாம் ஆண்டுவிழாவைச் சிறப்புடன் கொண்டாடினார்.  மடத்தின் சார்பில் குருபூசைகளை நன்முறையில் நடக்கச் செய்தார்.  கோவிலூர் நாச்சியப்ப சுவாமிகள் கலைக் கல்லூரிக்குச் செல்ல வசதியாக பாலம் ஒன்றை பெருமுயற்சியில் கட்டினார்.  ஆண்டவர், நாச்சியப்ப சுவாமிகளுக்குச் சிலைகளை அமைத்தார். இவ்வாறு பல பணிகள் செய்து வரும் நிலையில் அவரின் உடல் நலம் நலிவடைய ஆரம்பித்தது.

            2023 ஆம்  ஆண்டு  ஜனவரி மாதம்  17 ஆம் நாள் சீர் வளர் சீர் மெய்யப்ப ஞான தேசிக சுவாமிகள் பரிபூரணம் பெற்றார். இதற்கு முன்னதாக அடுத்த பட்டமாக  கோவிலூர் மடத்திற்கு  விளங்க,  திரு. நா. நாராயணன் அவர்களின் பெயர்  உயிலில்  சீர் வளர் சீர் மெய்யப்ப ஞான தேசிக சுவாமிகள்  எழுதி வைத்துள்ளார். அதன்படி  தற்பொழுது கோவிலூர் ஆதீனத்தின் பதினான்காம் பட்டமாகத் துறவேற்று சீர் வளர் சீர் நாராயண ஞான தேசிக சுவாமிகள்  அருளாட்சி புரிந்து வருகிறார். சற்குருவின் அருளாலும், குருமார்களின் அருளாலும்  கோவிலூர்  மடாலயப் பணிகள் மேலும் மேலும் உயர்ந்து சிறக்கும்.

 

செவ்வாய், பிப்ரவரி 11, 2025

காரைக்கால் அம்மையார் பாடல்கள் விளக்கவுரை

 

முனைவர் மு.பழனியப்பன்

காரைக்கால் அம்மையாரின் திருவிரட்டை மணிமாலை

விளக்கவுரை

பாடல் 1 முதல் 6 வரை

கிளர்ந்துந்து  எனத் தொடங்கும் பாடல் முதல் சங்கரனை  எனத் தொடங்கும் பாடல்

https://www.youtube.com/watch?v=eAllVWm1v0Y

பாடல் 7 முதல் 13 வரை

உரைக்கப்படுவது ஒன்று  எனத் தொடங்கும் பாடல் முதல் நினையாது ஒழிது   எனத் தொடங்கும்  பாடல் வரை

https://www.youtube.com/watch?v=Riz1d-289sQ

இந்த காணொளி சரிவர ஒலிபரப்பாகவில்லை.  சற்று தேய்ந்து தேய்ந்து உள்ளது. இதனை மீளவும் ஒரு முறை சொல்ல வாய்ப்பளித்தார் நல்லது

பாடல் 14 முதல் 20 வரை

அடித்தலம்  எனத் தொடங்கும் பாடல் முதல் உத்தமராய் வாழ்வார்  எனத் தொடங்கும் பாடல் வரை

https://www.youtube.com/watch?v=pBTD6Ml3reQ&t=1723s

-------------------------------------------------------------------------------------------------

 

காரைக்கால் அம்மையார்  மூத்த திருப்பதிகம்

பாடல் 1- முதல் 6 வரை

கொங்கை திரங்கி  என்று தொடங்கும் முதல் பட்டடி என்று தொடங்கும் பாடல் வரை

https://www.youtube.com/watch?v=BFJXJD_xY7s&t=1560s

பாடல் 7 முதல் 11 வரை

சுழலும் எனத் தொடங்கும் பாடல் முதல் ஒப்பினை இல்லவன் எனத் தொடங்கும் பாடல் வரை   (28-12-2024)

https://www.youtube.com/watch?v=ntxPI33EZuQ&t=995s

-----------------------------------------------------------------------------------------

புதன், பிப்ரவரி 05, 2025

இலங்கை நாட்டின் வட்டுக்கோட்டை மண்ணின் உன்னதத் தமிழர் உலகத் தமிழ்ச் சாதனையாளர் திரு. ம.ந. கணேஸ்வரன் (எழில்)


உலகம் முழுவதும் தமிழர்கள் மதிப்புடனும் பெருமையுடனும் வாழ்ந்து வருகிறார்கள்.  எல்லைகள் கடந்து நாடுகள் கடந்து, கண்டங்கள் கடந்து தமிழையும் வளர்த்து, தமிழ் மரபையும் காத்துத் தமிழர்கள்  வளர்ந்து வருகிறார்கள்.   என்றைக்கும் எக்காலத்திற்கும் தமிழர்களின் தமிழ்ச்சேவை நிலைத்து நிற்கும் அளவில் தமிழர்களின் தமிழ் வாழ்வு  உலக அளவில் அமைந்து வருகிறது.

            பிரான்ஸ் தேசத்தில் பல தமிழர்கள் தமிழ்  செழிக்க வாழ்ந்து வருகிறார்கள்.  அங்குப் புதுச்சேரித் தமிழும், இலங்கைத் தமிழும், இந்தியத் தமிழும்  இணைந்து  நற்றமிழ் வளர்ந்து வருகிறது.  கம்பன் கழகம், தமிழ்ச் சங்கம் போன்ற பல அமைப்புகள் சொல் அழகு பொருள் அழகு மிகு தமிழை வளர்த்து வருகின்றன. பல தனி மனிதர்களின் முயற்சியாலும் பிரான்ஸ் தமிழ் செழுமையோடு திகழ்ந்து வருகிறது.

            இந்தியத் தமிழ், இலங்கைத் தமிழ், பிரான்ஸ் தமிழ் ஆகிய மூன்றுக்கும் ஆக்கமும் ஊக்கமும்  தந்து வளர்த்து வரும் பல அன்பர்களில் குறிக்கத்தக்கவர்  தமிழ்த்திரு ம.ந. கணேஸ்வரன்   ஆவார்.

                                                 

இலங்கையைத் தாய்நாடாகவும் யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டை     கிராமத்தை பிறப்பிடமாகவும் கொண்ட திரு ம.ந. கணேஸ்வரன்  நல்லதமிழ் வளர்க்கும்  தமிழ்க்குடும்பத்தில்  பிறந்தவர். அவரின் தந்தையார் மயில்வாகனம் நவரத்தினம் அவர்கள்



 ஆசிரியராக விளங்கியவர். மேலும் சைவ வாலிபர் கழகம் என்பதை இலங்கையில்
  நிறுவி சைவத்தையும் தமிழையும் வளர்த்தவர். மேலும் மாணிக்கவாசகர் வாசக சாலை என்ற கல்விச் சாலையையும் அமைத்துக் கல்வி வளரவும் துணை நின்றவர்.  இக்கல்விச் சாலை வழியாக இரவு நேரங்களில் இலவசமாக மாணாக்கர்களின் கல்வி மேம்பட வழி செய்தவர். அவர் மக்களின் பசி போக்கவும் தன்னுடைய நண்பர்களோடு பண்டகசாலை நிறுவியவர். பல ஆன்மீகப் பணிகளிலும் தன்னை ஈடுபடுத்திக்கொண்டு அங்குள்ள அம்மன்  ஆலயத்திற்கு பேருதவியாக அம்மனையும் வழங்கிய ஆன்மீகச் செல்வர். இலங்கையில் உள்ள வட்டுக்கோட்டைப் பகுதியை வளம் மிக்க பகுதியாக விளங்க வைத்ததில்  இவரின் தொண்டுகள்  சிறப்பானவை.  அவை என்றும் நினைக்கத் தக்கவை.

           இவரது மகனாக விளங்கும் திரு .. கணேஸ்வரன் தன் தந்தையின்  நெறியிலேயே நாளும்  பணிகள் செய்து வருபவர் . இவரின் தாய்  தந்தையார் இவரின் இளம் வயதில் இயற்கையோடு கலந்த நிலையிலும் எவரின் துணையுமின்றி, மனம் தளராது தன்னம்பிக்கையுடன் தன் வாழ்வினை இவர் எதிர்கொண்டு முன்னேறினார்.

  தன் பள்ளி மற்றும் கல்லூரிக் கல்வியைப் பயின்றது மட்டுமல்லாது, தனக்குக் கிடைக்கும் நேரங்களில்  மாணவர்களின் கல்விப் பணி சிறக்கவும் உதவி வந்தார்.  மாணவர்க்கான  தனிப்பட்ட கல்வியகத்தை அவர் தன் ஆசிரியர்கள் மற்றும் நண்பர்களுடன் இணைந்து நடாத்தினார்.

 சிவராமலிங்கம் சிவானந்தன் (கணிதப் பட்டதாரி), சேகரன் ஆசிரியர்(ஜெர்மனி ) காராளசிங்கம்  தனபாலன் (கனடா) ஆகிய   நண்பர்களோடு அவர் கல்வியகத்தை அமைத்து சேவையாற்றினார்.  இவரும் தனியராக  மாணாக்கர்களுக்குக்  கணிதம் பௌதீகம் போன்ற கல்வியைப்  போதித்து மாணவர் அறிவுத் திறனை வளர்த்தார்.  இதனோடு,   தந்தை ஆற்றி வந்த பணிகளையும் சிறப்புடன் செய்து வரத் தொடங்கினார்.



 வட்டுக்கோட்டையில்  வாழ்ந்த   சைவசமயத் தொண்டர் திரு பரமானந்த சிவம் அவர்களை இவர்  தனது வழிகாட்டியாகக் கொண்டுச் செயலாற்றி வந்தார்.  அவர்கள்  மேல் கொண்ட பாசம் மற்றும் அன்பால்  அவரின் தமிழ்த் தொண்டுகளை மனதிற்கொண்டு அவர் மறைவின்போது முதலில் குறிப்பிட்ட 6 நண்பர்கள் உதவியோடு அவர்களோடு பரமானந்தசிவம் வாசிகசாலையைத் தொடங்கி கல்விப் பணிச் சிறக்கச் செய்தார். இச்சாலை வழியாக இவர் சைவத்தையும், தமிழையும் வளர்த்து வந்தார்.



மேலும் வட்டுக்கோட்டையில் நடைபெறும் விழாக்களின்போது மக்களின் அசதி போக்கத் தேநீர் தரல்,  தண்ணீர்ப்பந்தல்  அமைத்து தாகம் தீர்த்தல், சமுதாய முன்னேற்றத்திற்கான உடல் உழைப்பினை நல்குதல்,  இலவச சைவ சமய வகுப்புகள் நடத்துதல்,  விளையாட்டுப்போட்டிகள் வைத்தல் போன்ற பணிகளை இவர் தொடர்ந்து செய்து வந்தார்.  

       இப்படியான சூழலில் தன் கல்வித் தரத்தையும் உயர்த்திக் கொண்டார்இலங்கைச் சூழ்நிலையில் புலம் பெயர வேண்டிய கட்டாயம் ஏற்பட்ட  நிலையில். ஏறக்குறைய 41ஆண்டுகள் பிரான்ஸ் தேசத்தில் இவர்  வாழ்த்து வருவதானார் . இவர் உதவிக் கணக்காளராகப்  பணி செய்து தன்னையும் தன் குடும்பத்தாரையும் தன் சொந்தங்களையும்  குறைவின்றிக் கவனித்து வருவதானார்.  தற்போது பணியிலிருந்து ஓய்வு பெற்றிருந்தாம் இவரின் சமுதாய ஆக்கப்பணிகள் தொடர்ந்து கொண்டு இருக்கின்றன.  உலகளாவிய சமூக அமைப்புகளோடும், தமிழ் சிறக்க இந்தியா இலங்கை என பல நாடுகளில் உள்ள அமைப்புகள் மற்றும்  பல தமிழ் அறிஞர்களோடும் இணைந்து இவர் சைவப்பணிகளையும் தமிழ்ப் பணிகளையும் செய்து வருகிறார்.

                                                    


        தாய் மண்ணான இலங்கையில் அமைந்திருக்கும் வட்டுக்கோட்டை குறித்த எண்ணங்கள் இவரிடம் எப்போதும் நிறைந்திருக்கிறது. வட்டுக் கோட்டை அருள்மிகு இலுப்பையடி ஸ்ரீ முத்துமாரியம்மன் திருக்கோயிலை மேன்மைப்படுத்த அறங்காவலர்கள் மக்கள் உதவியுடனும் சங்கம் அமைத்து சிறப்புடன்  புதுமைப் படுத்தி கோபுரம் கட்டி திருக்குடமுழுக்கு விழா காணவும் ஆவன செய்தார்.

 


இதற்காக உலக நாடுகளில் இருந்து பல சைவ அன்பர்கள், வேத விற்பன்னர்கள் போன்றோரை வருகை தரச் செய்து இவ்விழாவைச் சிறப்புடன் நடத்தினார். இச்சமயத்தில் குடமுழுக்கு விழா மலர் ஒன்றையும் வெளியிட்டார். இதில் இந்தியா, இலங்கை, பிரான்ஸ் பல தமிழறிஞர்களின்  ஆக்கங்களைத் தந்து,  உலக அளவில் ஆன்மீகத் தமிழ் வளர உதவினார். இக்கோயிலின் ஆயுட்கால தலைவராகவும் இவர் விளங்கி வருகிறார்.  நாளும் அக்கோயில் பணிகள் சிறக்க உதவி வருகிறார்.

 

            இவர் தமிழ் சிறக்க  "ஊரும் உலகும்"


என்ற புலனக் குழுவை உருவாக்கிச் சிறப்புடன் தமிழ்ச் சேவை செய்து வருகிறார். இவர் நல்ல பாடகர். தானே இசை அமைத்துப் பாடல்கள் பாட வல்லவர்இவர் நல்ல கவிஞர், புலவர்இவர் நல்ல பொழிவாளர்இவர் மனிதநேயம் மிக்க பண்பாளர் .இவர் வள்ளலார் , சுவாமி விவேகானந்தர் , பாரதியார் , பாரதிதாசன் போன்றோர்களின் மீது பற்று கொண்டு அவர்களின் வழியில் தன் வாழ்வினை நடத்தி வருகிறார்.


            இவரை உலகு முழுவதும் உள்ள பல அமைப்புகள் பாராட்டியுள்ளன. "முத்தமிழ் வித்தகர்," "சமூக ஆர்வலர்",  "திருப்பணி செம்மல்" போன்ற பல பட்டங்களைத் தந்து பல அமைப்புகள் இவரைப் பாராட்டியுள்ளன.  குறிப்பாக மதுரை திருஞானசம்பந்தர் ஆதீனம்  இவருக்கு "சிந்தனையாளர்", "முத்தமிழ் காவலர்", "சைவ சமயக் காவலர்" என்ற பட்டங்களை வழங்கிப் பாராட்டியுள்ளது. காரைக்குடி கம்பன் கழகம் இவரின் பணிகளைப் பாராட்டி  "இலக்கியத் தமிழ் வித்தகர்" என்ற பட்டத்தையும் வழங்கியுள்ளது.


            இவர் ஜெர்மனி, சிங்கப்பூர் போன்ற உலக நாடுகளிலும் தன் தமிழ்ப் பணியை நீட்டித்துச் செய்து வருகிறார்.

            இவரின் பணிகளைப் பாராட்டி மலேசிய மண்  இவருக்கு மணிமகுடம் சூட்டியுள்ளதுதமிழ்ப் பற்றாளர், தமிழ்ச் சேவையாளர், தமிழ்த் தொண்டர் 



திரு .. கணேஸ்வரனுக்கு உலகத் தமிழ்ச் சாதனையார்  என்ற உயரிய விருதினை  வழங்கிச் சிறப்பித்துள்ளது.

            சமீபத்தில்  மலேசிய நாட்டில்  உலகத் தமிழ் சங்கமம், சென்னை தமிழ் சங்கம் ,மலேசிய  தமிழ்ச் சங்கம் ஆகியன ஒன்றாய் இணைந்து  நடத்திய முப்பெரும் மற்றும் ஐம்பெரும் விழாக்களிலும், மகாகவி பாரதியார் விழாவிலும் திரு .. கணேஸ்வரன் அவர்களுக்கு "உலகத் தமிழ் சாதனையாளர்"   என்ற மதிப்பு மிகு விருதினை வழங்கின.

தமிழ்நாடு முன்னாள்  உயர் நீதிமன்ற நீதிபதி டாக்டர் எஸ் விமலா இந்தியா -இலங்கைக்கான முன்னாள் தூதுவர் திரு நடராஜன் , உலகத் தமிழ் சங்கமத்தின் நிர்வாகிகள்,  சென்னை தமிழ் சங்கத்தின் தலைவர் பிரபல தொழிலதிபரான டாக்டர் இளங்கோவன் ,  தஞ்சை தமிழ் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் டாக்டர் எஸ் பாஸ்கரன், மலேசியத் தமிழ்ச் சங்கத் தலைவர் ஆசிரியர் எஸ் மாணிக்கம் தொழிலதிபர் ரமேஷ் போன்றோர் இவ்விருதினை திரு. ..கணேஸ்வரனுக்கு வழங்கிச் சிறப்பித்தனர்.

10-12-2024 முதல் 14-12-2024 வரை நடைபெற்ற  இப்பெரும் மாநாட்டில் பல தமிழறிஞர்கள், பலரும் கலந்து கொண்டு இவரின் சேவையைப் பாராட்டினர்.  தமிழக முன்னாள்  முதல்மை தலைமை நீதிபதி எஸ் ஜோதிமணி ,  தமிழ்  உலக ஆராச்சி &  வளர்ச்சி கழகத்தினர், மலேசிய உயர் நீதிமன்ற முதன்மை நீதிபதி  மேன்மை மிகு டான்  ஸ்ரீ டத்தோ நளினி பத்மநாதன்,  மலேசியாவின் பல்வேறு பகுதிகள் சார்ந்த  முன்னாள், இந்நாள் பாராளுமன்ற உறுப்பினர்கள்,  மந்திரிகள் மற்றும் பல நாடுகளில் இருந்து வந்த  அறிஞர்கள், மற்றும்  பாரதி அன்பர்கள், சான்றோர்கள் உட்பட அவர்கள் எல்லோருடைய முன்னிலையிலும் உலக அளவில் உயரிய விருதான 



"உலகத் தமிழ்ச் சாதனையார் விருது 2024 "

 பெற்றுள்ள தமிழன்பர் தமிழ் திரு .. கணேஸ்வரன் அவர்கள் இன்னும் பல பரிசுகள் பெற்று உயர வாழ்த்துகள்தொடர்ந்து அவரின் தமிழ்ச் சேவையால் தமிழ் உலகம் செழிக்கட்டும்