உலகம் முழுவதும் தமிழர்கள் மதிப்புடனும் பெருமையுடனும் வாழ்ந்து
வருகிறார்கள். எல்லைகள் கடந்து நாடுகள் கடந்து,
கண்டங்கள் கடந்து தமிழையும் வளர்த்து, தமிழ் மரபையும் காத்துத் தமிழர்கள் வளர்ந்து வருகிறார்கள். என்றைக்கும் எக்காலத்திற்கும் தமிழர்களின் தமிழ்ச்சேவை
நிலைத்து நிற்கும் அளவில் தமிழர்களின் தமிழ் வாழ்வு உலக அளவில் அமைந்து வருகிறது.
பிரான்ஸ் தேசத்தில் பல தமிழர்கள் தமிழ் செழிக்க வாழ்ந்து வருகிறார்கள். அங்குப் புதுச்சேரித் தமிழும், இலங்கைத் தமிழும்,
இந்தியத் தமிழும் இணைந்து நற்றமிழ் வளர்ந்து வருகிறது. கம்பன் கழகம், தமிழ்ச் சங்கம் போன்ற பல அமைப்புகள்
சொல் அழகு பொருள் அழகு மிகு தமிழை வளர்த்து வருகின்றன. பல தனி மனிதர்களின் முயற்சியாலும்
பிரான்ஸ் தமிழ் செழுமையோடு திகழ்ந்து வருகிறது.
இந்தியத் தமிழ், இலங்கைத் தமிழ், பிரான்ஸ்
தமிழ் ஆகிய மூன்றுக்கும் ஆக்கமும் ஊக்கமும்
தந்து வளர்த்து வரும் பல அன்பர்களில் குறிக்கத்தக்கவர் தமிழ்த்திரு ம.ந. கணேஸ்வரன் ஆவார்.
இலங்கையைத் தாய்நாடாகவும் யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டை கிராமத்தை பிறப்பிடமாகவும் கொண்ட திரு ம.ந. கணேஸ்வரன் நல்லதமிழ் வளர்க்கும் தமிழ்க்குடும்பத்தில் பிறந்தவர். அவரின் தந்தையார் மயில்வாகனம் நவரத்தினம் அவர்கள்
ஆசிரியராக விளங்கியவர். மேலும் சைவ வாலிபர் கழகம் என்பதை இலங்கையில் நிறுவி சைவத்தையும் தமிழையும் வளர்த்தவர். மேலும் மாணிக்கவாசகர் வாசக சாலை என்ற கல்விச் சாலையையும் அமைத்துக் கல்வி வளரவும் துணை நின்றவர். இக்கல்விச் சாலை வழியாக இரவு நேரங்களில் இலவசமாக மாணாக்கர்களின் கல்வி மேம்பட வழி செய்தவர். அவர் மக்களின் பசி போக்கவும் தன்னுடைய நண்பர்களோடு பண்டகசாலை நிறுவியவர். பல ஆன்மீகப் பணிகளிலும் தன்னை ஈடுபடுத்திக்கொண்டு அங்குள்ள அம்மன் ஆலயத்திற்கு பேருதவியாக அம்மனையும் வழங்கிய ஆன்மீகச் செல்வர். இலங்கையில் உள்ள வட்டுக்கோட்டைப் பகுதியை வளம் மிக்க பகுதியாக விளங்க வைத்ததில் இவரின் தொண்டுகள் சிறப்பானவை. அவை என்றும் நினைக்கத் தக்கவை.
இவரது மகனாக விளங்கும் திரு ம.ந. கணேஸ்வரன் தன் தந்தையின் நெறியிலேயே நாளும் பணிகள் செய்து வருபவர் . இவரின் தாய் தந்தையார் இவரின் இளம் வயதில் இயற்கையோடு கலந்த நிலையிலும் எவரின்
துணையுமின்றி, மனம் தளராது தன்னம்பிக்கையுடன் தன் வாழ்வினை இவர் எதிர்கொண்டு
முன்னேறினார்.
தன் பள்ளி
மற்றும் கல்லூரிக் கல்வியைப் பயின்றது மட்டுமல்லாது, தனக்குக்
கிடைக்கும் நேரங்களில் மாணவர்களின் கல்விப்
பணி சிறக்கவும் உதவி வந்தார். மாணவர்க்கான
தனிப்பட்ட கல்வியகத்தை
அவர் தன் ஆசிரியர்கள் மற்றும் நண்பர்களுடன் இணைந்து நடாத்தினார்.
சிவராமலிங்கம் சிவானந்தன்
(கணிதப் பட்டதாரி), சேகரன் ஆசிரியர்(ஜெர்மனி ) காராளசிங்கம் தனபாலன் (கனடா) ஆகிய நண்பர்களோடு
அவர் கல்வியகத்தை அமைத்து சேவையாற்றினார். இவரும் தனியராக மாணாக்கர்களுக்குக் கணிதம் பௌதீகம் போன்ற கல்வியைப் போதித்து மாணவர் அறிவுத் திறனை
வளர்த்தார். இதனோடு, தந்தை ஆற்றி வந்த பணிகளையும் சிறப்புடன் செய்து வரத் தொடங்கினார்.
வட்டுக்கோட்டையில் வாழ்ந்த
சைவசமயத் தொண்டர் திரு பரமானந்த சிவம் அவர்களை இவர் தனது வழிகாட்டியாகக் கொண்டுச் செயலாற்றி
வந்தார். அவர்கள் மேல் கொண்ட பாசம் மற்றும் அன்பால் அவரின் தமிழ்த் தொண்டுகளை மனதிற்கொண்டு அவர் மறைவின்போது
முதலில் குறிப்பிட்ட 6 நண்பர்கள் உதவியோடு அவர்களோடு பரமானந்தசிவம் வாசிகசாலையைத்
தொடங்கி கல்விப் பணிச் சிறக்கச் செய்தார். இச்சாலை வழியாக இவர் சைவத்தையும், தமிழையும்
வளர்த்து வந்தார்.
மேலும் வட்டுக்கோட்டையில் நடைபெறும் விழாக்களின்போது மக்களின்
அசதி போக்கத் தேநீர் தரல், தண்ணீர்ப்பந்தல்
அமைத்து தாகம் தீர்த்தல், சமுதாய
முன்னேற்றத்திற்கான உடல் உழைப்பினை நல்குதல், இலவச சைவ சமய வகுப்புகள் நடத்துதல், விளையாட்டுப்போட்டிகள் வைத்தல் போன்ற பணிகளை
இவர் தொடர்ந்து செய்து வந்தார்.
இப்படியான சூழலில் தன் கல்வித் தரத்தையும் உயர்த்திக் கொண்டார்.
இலங்கைச் சூழ்நிலையில் புலம் பெயர வேண்டிய கட்டாயம் ஏற்பட்ட
நிலையில். ஏறக்குறைய 41ஆண்டுகள் பிரான்ஸ் தேசத்தில் இவர்
வாழ்த்து வருவதானார் . இவர்
உதவிக் கணக்காளராகப் பணி செய்து தன்னையும்
தன் குடும்பத்தாரையும் தன் சொந்தங்களையும்
குறைவின்றிக் கவனித்து வருவதானார். தற்போது பணியிலிருந்து ஓய்வு பெற்றிருந்தாம்
இவரின் சமுதாய ஆக்கப்பணிகள் தொடர்ந்து கொண்டு இருக்கின்றன. உலகளாவிய சமூக அமைப்புகளோடும், தமிழ் சிறக்க இந்தியா
இலங்கை என பல நாடுகளில் உள்ள அமைப்புகள் மற்றும் பல தமிழ் அறிஞர்களோடும் இணைந்து இவர்
சைவப்பணிகளையும் தமிழ்ப் பணிகளையும் செய்து வருகிறார்.
தாய் மண்ணான இலங்கையில் அமைந்திருக்கும் வட்டுக்கோட்டை குறித்த எண்ணங்கள் இவரிடம் எப்போதும் நிறைந்திருக்கிறது. வட்டுக் கோட்டை அருள்மிகு இலுப்பையடி ஸ்ரீ முத்துமாரியம்மன் திருக்கோயிலை மேன்மைப்படுத்த அறங்காவலர்கள் மக்கள் உதவியுடனும் சங்கம் அமைத்து சிறப்புடன் புதுமைப் படுத்தி கோபுரம் கட்டி திருக்குடமுழுக்கு விழா காணவும் ஆவன செய்தார்.
இதற்காக உலக நாடுகளில் இருந்து பல சைவ அன்பர்கள், வேத விற்பன்னர்கள்
போன்றோரை வருகை தரச் செய்து இவ்விழாவைச் சிறப்புடன் நடத்தினார். இச்சமயத்தில் குடமுழுக்கு
விழா மலர் ஒன்றையும் வெளியிட்டார். இதில் இந்தியா, இலங்கை, பிரான்ஸ் பல தமிழறிஞர்களின் ஆக்கங்களைத் தந்து, உலக அளவில் ஆன்மீகத் தமிழ் வளர உதவினார். இக்கோயிலின்
ஆயுட்கால தலைவராகவும் இவர் விளங்கி வருகிறார்.
நாளும் அக்கோயில் பணிகள் சிறக்க உதவி வருகிறார்.
இவர் தமிழ் சிறக்க "ஊரும் உலகும்"
என்ற புலனக் குழுவை உருவாக்கிச் சிறப்புடன் தமிழ்ச் சேவை செய்து வருகிறார். இவர் நல்ல பாடகர். தானே இசை அமைத்துப் பாடல்கள் பாட வல்லவர். இவர் நல்ல கவிஞர், புலவர். இவர் நல்ல பொழிவாளர். இவர் மனிதநேயம் மிக்க பண்பாளர் .இவர் வள்ளலார் , சுவாமி விவேகானந்தர் , பாரதியார் , பாரதிதாசன் போன்றோர்களின் மீது பற்று கொண்டு அவர்களின் வழியில் தன் வாழ்வினை நடத்தி வருகிறார்.
இவரை உலகு முழுவதும் உள்ள பல அமைப்புகள் பாராட்டியுள்ளன. "முத்தமிழ் வித்தகர்," "சமூக ஆர்வலர்", "திருப்பணி செம்மல்" போன்ற பல பட்டங்களைத் தந்து பல அமைப்புகள் இவரைப் பாராட்டியுள்ளன. குறிப்பாக மதுரை திருஞானசம்பந்தர் ஆதீனம் இவருக்கு "சிந்தனையாளர்", "முத்தமிழ் காவலர்", "சைவ சமயக் காவலர்" என்ற பட்டங்களை வழங்கிப் பாராட்டியுள்ளது. காரைக்குடி கம்பன் கழகம் இவரின் பணிகளைப் பாராட்டி "இலக்கியத் தமிழ் வித்தகர்" என்ற பட்டத்தையும் வழங்கியுள்ளது.
இவர் ஜெர்மனி, சிங்கப்பூர் போன்ற உலக நாடுகளிலும்
தன் தமிழ்ப் பணியை நீட்டித்துச் செய்து வருகிறார்.
இவரின் பணிகளைப் பாராட்டி மலேசிய மண் இவருக்கு மணிமகுடம் சூட்டியுள்ளது. தமிழ்ப் பற்றாளர், தமிழ்ச் சேவையாளர், தமிழ்த் தொண்டர்
திரு ம.ந. கணேஸ்வரனுக்கு உலகத் தமிழ்ச் சாதனையார்
என்ற உயரிய விருதினை வழங்கிச் சிறப்பித்துள்ளது.
சமீபத்தில் மலேசிய நாட்டில் உலகத் தமிழ்
சங்கமம், சென்னை தமிழ்
சங்கம் ,மலேசிய தமிழ்ச் சங்கம்
ஆகியன ஒன்றாய் இணைந்து நடத்திய முப்பெரும் மற்றும் ஐம்பெரும் விழாக்களிலும், மகாகவி பாரதியார் விழாவிலும் திரு ம.ந. கணேஸ்வரன்
அவர்களுக்கு "உலகத் தமிழ்
சாதனையாளர்" என்ற மதிப்பு மிகு விருதினை
வழங்கின.
தமிழ்நாடு முன்னாள் உயர் நீதிமன்ற
நீதிபதி டாக்டர் எஸ்
விமலா இந்தியா -இலங்கைக்கான முன்னாள் தூதுவர் திரு
நடராஜன் , உலகத் தமிழ் சங்கமத்தின் நிர்வாகிகள், சென்னை தமிழ் சங்கத்தின் தலைவர் பிரபல தொழிலதிபரான டாக்டர் இளங்கோவன் , தஞ்சை தமிழ் பல்கலைக்கழகத்தின் முன்னாள்
துணைவேந்தர் டாக்டர் எஸ்
பாஸ்கரன், மலேசியத் தமிழ்ச்
சங்கத் தலைவர் ஆசிரியர்
எஸ் மாணிக்கம் தொழிலதிபர் ரமேஷ் போன்றோர் இவ்விருதினை திரு. ம.ந.கணேஸ்வரனுக்கு வழங்கிச் சிறப்பித்தனர்.
10-12-2024
முதல் 14-12-2024 வரை நடைபெற்ற
இப்பெரும் மாநாட்டில் பல
தமிழறிஞர்கள், பலரும் கலந்து கொண்டு இவரின்
சேவையைப் பாராட்டினர். தமிழக முன்னாள் முதல்மை தலைமை நீதிபதி எஸ் ஜோதிமணி
, தமிழ்
உலக ஆராச்சி & வளர்ச்சி கழகத்தினர்,
மலேசிய உயர் நீதிமன்ற முதன்மை நீதிபதி மேன்மை மிகு டான் ஸ்ரீ டத்தோ நளினி பத்மநாதன்,
மலேசியாவின் பல்வேறு
பகுதிகள் சார்ந்த முன்னாள், இந்நாள் பாராளுமன்ற உறுப்பினர்கள், மந்திரிகள் மற்றும் பல நாடுகளில் இருந்து வந்த அறிஞர்கள், மற்றும் பாரதி அன்பர்கள், சான்றோர்கள் உட்பட அவர்கள் எல்லோருடைய முன்னிலையிலும் உலக அளவில் உயரிய
விருதான
"உலகத் தமிழ்ச் சாதனையார் விருது 2024 "
பெற்றுள்ள தமிழன்பர் தமிழ் திரு ம.ந. கணேஸ்வரன் அவர்கள்
இன்னும் பல பரிசுகள்
பெற்று உயர வாழ்த்துகள். தொடர்ந்து அவரின் தமிழ்ச்
சேவையால் தமிழ் உலகம்
செழிக்கட்டும்.