ஞாயிறு, நவம்பர் 27, 2022

திருவரங்க பஞ்ச ரத்ன கீர்த்தனங்களில் தியாகராஜரின் பக்தித் திறம்: பகுதி-2 முனைவர் மு.பழனியப்பன் Jun 18, 2022

siragu thiyaagaraaja suvaamigal1

ஐந்தாம் கீர்த்தனை-கருணா சூடாவாய என்ற தொடக்கமுடையது.

பல்லவி
கருண ஜுடமய்ய மாயய்ய காவேடி ரங்கய்ய
அனுபல்லவி
பரம புருஷ! விநு மாபாலி பெந்நிதாநமா
வரத நலுகுரிலோ வரமோஸகி கரமிடி
சரணம்
சரடேஸி கநுலசே ஜெலங்கு பய நாச்சாருலதோநு மரி
ஸத்பக்துலதோ ஆள்வாருலதோ நீவு வர நைவேத்யமுல
நாரகிஞ்சு வேளல ஹரி த்யாகராஜநிகரமிடி

என்ற பாடல் திருவரங்கநாதனைத் தன் கையைப் பிடித்துக் கொண்டு அழைத்துச் செல்ல வேண்டுகிறார் தியாகராஜர்.
ஓ பரம புருஷா! ஓ காவேரி கரையில் வசிக்கும் ரங்கநாதரே! எங்களுக்கான விருப்பமான வரங்களை அள்ளித் தருபவரே! வரதரே! என்னைப் பாருங்கள். நான் சொல்வதைக் கேளுங்கள்.

என்னைக் கைப்பிடித்து எனக்குத் துணையாக வாருங்கள். எனக்கு நான் விரும்பும் வரங்களைத் தருவீராக! உங்களது கருணையையும் எனக்கு அருள்வீராக!

நீங்கள் ஸ்ரீ தேவி மற்றும் பூதேவியின் அருகில் இருக்கும் நேரம் அன்பான நேரமாகும். அப்போது தங்களுக்கு நைவேந்தியம் நடைபெறும். அதுவும் நல்ல நேரம். அந்த நேரத்தில் பக்தகோடிகளும், ஆழ்வார்களும் உம்மைத் தரிசித்து மகிழ்வார்கள். அந்நேரத்தில் என்னையும் என் கரங்களைப் பற்றிக் கொண்டு அழைத்துச் செல்வீராக. அழைத்துச் சென்று என்மீது கருணை காட்டுவீர்களாக! என்று தியாகராஜர் குறிப்பிடுகிறார்.

இவ்வைந்து பாடல்களும் சித்திரை திருவிழாவில் காவிரி நதிக்கரையில் திருவரங்க நாதரின் தங்கக் குதிரை வாகனக் காட்சியைக் கண்ட நிலையில் தியாகராஜர் பாடியனவாகும். அதற்கான அகக்குறிப்புகள் இக்கீர்த்தனைகளில் காணக் கிடைக்கின்றன.

ஸ்ரீஇராமனை அன்றி வேறு யாரையும் பாடாத இயல்பினரான தியாகபிரம்மம் இக்கீர்த்தனைகளிலும் அக்கருத்துக்கு முக்கியத்துவம் தருகிறார். ஸ்ரீஇராமபிரன் வணங்கிய தெய்வம் அரங்கநாதன் என்பதால் இத்தெய்வத்தைப் பாடுவது அவரின் கருத்துக்கு ஏற்புடையதாக விளங்கியது.

ராஜுவெடலஜு என்ற தொடக்கமுடைய கீர்த்தனையில் காவேரி தீரம், ரங்கபுரி, சித்ரவீதி போன்ற குறிப்புகள் திருவரங்கத்தில் இக்கீர்த்தனம் பாடப்பட்டதை உறுதிசெய்கின்றன. சூதாமுராரே என்ற தொடக்கமுடைய கீர்த்தனையில் ரங்கபதி, ரங்க போன்ற குறிப்புகள் இடம்பெற்று இக்கீர்த்தனையும் திருவரங்க நாதனைக் காண வந்த தியாகராஜ அனுபவத்தைக் காட்டுவதாக உள்ளது. கநகாங்க என்ற தொடக்கமுடைய கீர்த்தனையில் காவேடிரங்க, வைபோக ரங்க, போன்றனவும் ரங்கபதியின் அடையாளங்களே ஆகும். ஓ ரங்கசாயி என்ற கீர்த்தனையின் தொடக்கமே ரங்கநாதரைக் குறித்ததாகும். மேலும் பூலோக வைகுந்தம் என்று திருவரங்கம் சிறப்பிக்கப்படுகிறது. கருணா ஜடமய்யா என்ற தொடக்கமுடைய பாடலில் காவேடி ரங்கய்ய என்று ரங்கநாதர் குறிக்கப்படுகிறார். இதன் காரணமாக தியாகராஜர் வணங்கிய தெய்வமாக அரங்கநாதர் விளங்குகிறார். அரங்கநாதர் ஸ்ரீஇராமன் காலத்திலும், தியாகராஜர் காலத்திலும் பெருமையுடனும் திருவிழாக்களுடனும், ராஜ கம்பீரத்துடன் இருந்தார் என்பதைத் தியாகராஜர் கீர்த்தனைகள் எடுத்துரைக்கின்றன.

ஸ்ரீ ரங்கநாதரை பரம புருஷராக, சர்வ ஆதாரராக தியாகராஜர் காண்கிறார். மேலும் தன் குறைகளை அவரிடம் சொல்ல நேரம் பார்த்துக் காத்து நிற்கிறார். ஸ்ரீரங்கநாதர் ஸ்ரீதேவி, பூதேவியுடன் இணைந்து இருக்கும் மகிழ்ச்சியான நேரமே நல்ல நேரமாக தமது குறைகளைத் தீர்க்கும் நேரமாக இருக்கும் என்று கருதி அந்நேரத்திற்காகக் கா்த்துநிற்கிறார் தியாகராஜர். ஸ்ரீரங்கநாதர் தங்கக் குதிரையில் ஏறி தன் குறைகளைப் போக்க வருகிறார் என்ற எண்ணத்தில் உறுதி கொண்டவராக தியாகராஜர் விளங்குகிறார். தமிழில் பாடிய ஆழ்வார்களும் திருவரங்கநாதனைத் துதிப்பதைச் சுட்டிக் காட்டி நிற்கிறார் தியாகராஜர்.

இவ்வாறாக இராம பக்தியினின்று சற்று மாறுபட்டு அமைகிறது ஸ்ரீரங்க பஞ்ச கீர்த்தனம். இருப்பினும் தியாகராஜர் கொள்கைக்கு மாறுபடாமல் இந்தக் கீர்த்தனங்கள் பாடப்பெற்றுள்ளன. ஸ்ரீஇராமனையே ஒவ்வொரு நொடியும் நினைத்துக் கொண்டு அவனையே பற்றுக்கோடாகக் கொண்டு வாழ்ந்த இசை அறிஞர் தியாகராஜர். அவரின் கீர்த்தனங்கள் இந்திய இசையாக மிளிர்வன. அதனைப் போற்றுவதும் காப்பதும் பாடுவதும் ரசிப்பதும் துதிப்பதும் ஒவ்வோரு இந்தியரின் கடமையாகும்.

திருவரங்க பஞ்ச ரத்ன கீர்த்தனங்களில் தியாகராஜரின் பக்தித் திறம் முனைவர் மு.பழனியப்பன் Jun 11, 2022

 



siragu thiyaagaraaja suvaamigal1
தியாகபிரம்மம் என்று அழைக்கப்பட்டவர் தியாகராஜ சுவாமிகள். இவர் இன்றைக்கு இருநூற்று ஐம்பது ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்தவர். தெலுங்கிலும், வடமொழியிலும் பல இசைப் பாடல்களை எழுதியவர். இராமபிரானின் மீது அளவற்ற பக்தி கொண்டவர். இராமபிரானை விக்ரக வடிவிலும், அவர் இருக்கும் கோயி்ல்களுக்குச் சென்று வணங்கும் நிலையிலும் இராம பக்தராக எப்போதும் இருந்தவர் தியாகராஜர்.

இவர் பாடிய பஞ்ச ரத்ன கீர்த்தனைகள் பக்தி நிலையிலும், இசை நிலையிலும் உயர்ந்த தரத்தன ஆகும். இவற்றில் பக்தி உணர்ச்சி பெரும் அளவில் காணப்படும். இவர் திருவையாறு, ஸ்ரீரங்கம், லால்குடி போன்ற இடங்களில் உள்ள இறைவனை வணங்கி அந்த அந்த இறைன் மீது ஐந்து கீர்த்தனைகள் கொண்ட தொகுப்பாக பஞ்ச ரத்ன கீர்த்தனைகள் என்பதைப் பாடினார். இந்த பஞ்ச ரத்ன கீர்த்தனைகள் தியாகராஜரின் தனித்த முத்திரைகளைக் கொண்டு அமைந்தன. அவை இராமனுக்குப் பெருமையைக் காட்டின. மேலும் இவரின் இசையறிவையும் உலகிற்குக் காட்டின.

இவர் இராமனை அன்றி வேறு தெய்வங்களைப் பாடாதவர். திருமாலின் வேறு அவதாரங்களைக் கூட இவர் பாடவில்லை என்பது குறிக்கத்தக்கது. இவர் திருவரங்க இறைவனைப் பணிகின்றார். இதற்குக் காரணம் இராமன் திருவரங்க இறைவனை வணங்கினார் என்பது கருதி இவர் திருவரங்க இறைவனைப் பாடினார்.

இவர் ஒருமுறை சித்திரை மாத்தில் நடைபெறும் திருவிழாவைக் காண ஸ்ரீரங்கத்திற்குச் சென்றார். அப்போது, திருவரங்க நாதர் தங்கக் குதிரை வாகனத்தில் பவனி வந்தார். அவ்வாறு பவனி வந்த திருவரங்க இறைவரை இவரால் முழுவதும் தரிசிக்க இயலவில்லை. இவர் கூட்ட நெரிசலில் சிக்கிக் கொண்டதால் இவரால் இறைவனை முழுவதும் தரிசிக்க முடியவில்லை. இவர் வருத்தத்துடன் நின்றிருந்தார்.

தங்கக் குதிரையில் வந்த திருவரங்க இறைவன் சற்று தூரம் சென்றதும் நகர முடியாமல் நின்றது. தங்கக் குதிரை வாகனத்தை நகர்த்த பல முயற்சிகள் எடுத்தனர். இருப்பினும் நகரவில்லை. தங்கக் குதிரையைத் தூக்கி வந்தவர்கள் தங்களால் தூக்கமுடியவில்லை என்று சொல்லிவிட்டனர். இதன் பிறகு அங்கிருந்த ஒருவர் தியாகராஜர் இறைவனை முழுவதும் காண இயலவில்லை என்ற வருத்தத்தில் இருக்கிறார். அவரைக் கூட்டி வந்து இந்த இடத்தில் வணங்க வைத்தால் ஓரளவு இந்தத் தங்கக் குதிரை நகரும் என்றார்.

தியாகராஜரை அழைத்து வந்தனர். அவர் மனம் உருக திருவரங்க பஞ்ச ரத்ன கீர்த்தனையைப் பாடினார். இறைவன் முதலாக அனைவரும் அந்தக் கீர்த்தனையைக் கேட்டனர். தம்மை மறந்தனர். புதிய வேகத்துடன் தங்கக் குதிரையில் ஸ்ரீரங்க இறைவன் கிளம்பினார். கோயிலை அடைந்தார். இவ்வாறு தியாகராஜரின் பாடல்கள் சக்தி நிரம்பினவாக விளங்குகின்றன.

இந்த ஸ்ரீரங்கக் பஞ்ச ரத்ன கீர்த்தனைகளின் பக்தி நிலைப்பாட்டை இக்கட்டுரை எடுத்துரைக்கின்றது. இந்த பஞ்ச ரத்ன கீர்த்தனை தெலுங்கு மொழியில் அமைந்துள்ளது. இதனை தமிழ் எழுத்து வடிவில் அமைத்துக் கொண்டு, அதன் பொருளைத் தமிழில் தந்து அதன்வழி அந்தப் பாடல்களில் உள்ள பக்தி அனுபவத்தை வெளியிடும் போக்கில் இக்கட்டுரை அமைக்கப்படுகிறது.

ஸ்ரீரங்க பஞ்சரத்ன கீர்த்தனைகள்

இந்த ஐந்து கீ்ர்த்தனைகள் பின்வரும் தொடக்கத்தைப் பெற்றுள்ளன.
1. ராஜு வெடலஜு – தோடி ராகம்
2. விநராத நா மாகநவி – தேவ காந்தாரி ராகம்
3. சூதாமுராரே –ஆரபி ராகம்
4. ஓ ரங்கசாயி – காம்போதி ராகம்
5. கருண ஜுடமய்ய – சாரங்க ராகம்
என்ற தொடக்கங்களை உடைய கீர்த்தனைகள் தியாகராஜரால் திருவரங்க பஞ்சரத்ன கீர்த்தனைகளாகப் பாடப்பெற்றுள்ளன. இப்பாடல்கள் ஐந்தும் முறைமாறி அமைந்துள்ளன. சில பிரதிகளில் சூதா முராரே என்ற தொடக்கமுடைய பாடல் முன்னதாக வருகின்றது. சில பிரதிகளில் ராஜு வெடலஜு என்ற தொடக்கமுடைய பாடல் முன்னதாக வருகின்றது. இதுபோன்று முன் பின்னாக பல பிரதிகளில் இந்த ஐந்து பாடல்களும் அமைந்துள்ளன. மேற்காட்டிய முறைப்படி இங்கு எடுத்துக்கொள்ளப்படுகின்றது.

முதல் கீர்த்தனை – ராஜு வெடலஜு என்ற தொடக்கமுடையது.
பல்லவி
ராஜுவெடலஜு தாமுராரே கஸ்தூரி ரங்க
அனுபல்லவி
தேஜி நெக்கி ஸமஸ் தராஜுலூடி கமுஸேய
தேஜரில்லு நவரத்னபு திவ்ய பூஷண முலடிரங்க
சரணம்
காவேரி தீரனனு பாவனமகு ரங்கபுரி
ஸ்ரீவெலயு சித்ர வீதி லோவேட்ககராக
ஸேவனுகநி ஸுருலுவிருலசேப்ரே மனு பூஜிஞ்சக
பாவிஞ்சித்யாக ராஜுபாடகவை போகரங்க

என்பது தெலுங்கில் அமைந்த தமிழ் எழுத்துகளால் வடிவமைக்கப்பட்ட தியாகராஜ கீர்த்தனை ஆகும்.
இப்பாடலின் பொருள்- காவிரியும் கொள்ளிடமும் இணையும் இடத்தில் கோயில் கொண்டுள்ளவன் திருவரங்கன். அவன் இலங்கையை நோக்கி அனந்த சயனம் கொண்டுள்ளான். அத்தகையவன் ஸ்ரீரங்க வீதியில் தங்க குதிரை வாகனத்தில் வந்து அருள் செய்கிறான். அவனைத் தேவர்கள் வணங்குகிறார்கள்.

திருவரங்க இறைவர் கையில் செங்கோல் வைத்திருக்கிறார். நெற்றியில் கஸ்தூரி திலகம் வைத்து இருக்கிறார். தன் உடல் முழுவதும் நீல பட்டாடை சாற்றி வருகிறார். அவர் தங்கக் குதிரையில் வருகிறார். அவன் ராஜாவாக உலா வருகிறார். அவரைக் கண்குளிரக் கண்டுகளிப்போம் என்று பாடுகிறார் தியாகராஜர்.

இரண்டாம் கீர்த்தனை – விநராத நா மாநவி என்ற தொடக்கமுடையது
பல்லவி
விநராத நா மாநவி
அனுபல்லவி
கநகாங்க காவேடிரங்க ஸ்ரீ காந்த
காந்தலெல்ல காமிஞ்சி பிலிசிதே
சரணம்
தேஜி நெக்கி பாக தெருவுந ராக
ராஜஸதுலு சூசி ரம்மநி பிலிசிதே

பாகதேய வைபோக ரங்க
ஸ்ரீ தியாகராஜநுத தருணுலு பிலிசிதே
என்ற இப்பாடலின் பொருள் திருவரங்கநாதன் உலா வரும் நிலை பற்றி அமைகிறது. தங்க நிறமுடைய ரங்கநாதா, காவேரி ஆற்றின் கரையில் இருப்பவரே! தேவி மகாலட்சுமியின் துணைவரே! என்னுடைய வேண்டுகோளை எப்பொழுது ஏற்கப் போகிறீர்கள்.

பெண்கள் அனைவரும் உம்மை வரவேற்க நடனமாடுகிறார்கள், அரச குடும்பத்தினரும் உன் வருகையைக் கொண்டாடுகிறார்கள். திருவரங்க நாதனாகிய தாங்கள் தங்கக் குதிரையில் வருவரை அவர்கள் மகிழ்ச்சியுடன் வரவேற்கிறார்கள்.

ரங்கநாதரே தங்களின் இராஜ ஊர்வலத்தில் எனக்கு, அவர்களுக்கு ஏன் பதில் சொல்ல மாட்டேன் என்கிறீர்கள் என்று மனதில் ஒரு வேண்டுகோளை வைத்துக்கொண்டு தியாகராஜர் இந்தக் கீர்த்தனையைப் பாடியுள்ளார்.

மூன்றாம் கீர்த்தனை- சூதாமுராரே என்ற தொடக்கமுடையது.
பல்லவி
சூதாமு ராரே ஸுத துலார ரங்கபதிநி
அனுபல்லவி
ஸுதாபதி பூஜ்யுடட ல்ருங்கார லேகருடட
சரணம்
ஸரிகஞ்சு லாலுவட சௌகட்ல போகுலட
பருவம்பு ப்ராயமட பரமாத்முடட ரங்க

முக நிர்ஜித சந்த் ருடட முத்து மாடலாடு
ஸுக மொஸங்கி ப்ரோகநட ஸுந்தராங்குடட ரங்கநி

ஆகம ஸஞ்சாருடட அகில ஜகத்பாலுடட
த்யாக ராஜஸந்நுதுடட தருயலார ரங்கபதிநி
என்னும் இந்தக் கீர்த்தனை சற்று நீளமானது.
ஓ பெண்களே! ஸ்ரீரங்கபதியைப் பார்க்க உடன் வாருங்கள்!
ஆதி கவி வால்மீகி ஸ்ரீ ரங்கநாதரை ஸ்ரீ ராமச்சந்திரர் வழிபட்டார் என்று கூறுகிறார். இதன் காரணமாகவே அவரை வணங்குவோம். இந்தக் கீர்த்தனையில் ரங்கபதியை சீதாபதி வணங்கினார் என்று தியாகராஜர் குறிப்பிடும் கவியழகு சிறப்பாக உள்ளது.

சரிகை பட்டாடையையும், அழகான மாலைகளையும் ரங்கநாதர் தன் மேனி மீது அணிந்து கொண்டுள்ளனார். அவரின் காதுகளில் அழகான காதணிகள் அணியப் பெற்றுள்ளன. அவர் சாமுத்திரிகா லட்சணங்கள் பொருந்தியவராக இருக்கிறார். பருவ வயதுடைய இளங்குமரனாக அவர் இருக்கிறார். திருவரங்கநாதர் பரம புருஷர். அவர் வேதங்களாலும் உபநிடதங்களாலும் சர்வ ஆதாரன் என்றும் போற்றப்பெறுகிறார்.

அவரின் முகம் முழுநிலவு போன்று அழகாக உள்ளது. அவரின் பேச்சும் இனிமையானது. அவர் பேரின்பத்தை நமக்கு அளிப்பவர். அவர் பக்தர்களுடன் அன்பான உறவைக் கொண்டுள்ளார். அவர் ஆகமங்களிலும் வேதங்களில் ஊடுருவி நிற்கிறார்.

கூடியிருக்கும் பெண்களே அவரின் அழகை ரசிக்க வாருங்கள் என்று இந்தப் பாடலின் பொருள் அமைகிறது,

நான்காம் கீர்த்தனை- ஓ சாயி என்ற தொடக்கமுடையது
பல்லவி
ஓ ரங்க ஸாயி பிலிசிதே
ஓயனுசு ரா ராதா
அனுபல்லவி
ஸாரங்க தருடு ஜூசி
கைலாஸாதிபுடு கா லேதா (ஓ)
சரணம்
பூ-லோக வைகுண்டமிதியனி
நீ லோன நீவேயுப்பொங்கி

ஸ்ரீ லோலுடையுண்டே மா
சிந்த தீரேதென்னடோ

மேலோர்வ லேனி ஜனுலலோ நே
மிகுல நொகிலி திவ்ய ரூபமுனு

முத்யால ஸருலயுரமுனு கான
வச்சிதி த்யாகராஜ ஹ்ருத்பூஷண
என்னும் இப்பாடலும் நீண்ட அடிகள் கொண்டதாக உள்ளது.

ஓ திருவரங்கத்தில் பள்ளிகொண்டோனே! தியாகராசனின் இதய அணிகலனே! அழைத்தால், ‘ஓ’யென வரலாகாதா?
சாரங்கம் ஏந்துவோன் (உன்னைக்) கண்டு வணங்கினான் அன்றோ! கைலாய பதியாகினானன்றோ! பூலோக வைகுண்டமாகிய திருவரங்கத்தில் இலட்சுமியுடன் இருந்துவிட்டால் எமது கவலைகளை யார் தீர்க்க வல்லார்?

மற்றவர்களின் உயர்வை ஏற்றுக் கொள்ளாத மனிதர்களிடை, நான் மிக்கு துயருற்று அலைகிறேன்.. உனது) திவ்விய உருவத்தினை, முத்துச் சரங்கள் விளங்கும் திருமார்பினைக் காண வந்தேன் என்று தியாகராஜர் இதில் தன் வேண்டுகோளை வைக்கிறார்.

மன்னரைச் சேர்ந்தொழுகல் – பகுதி-3 முனைவர் மு.பழனியப்பன் Jul 16, 2022

 

siragu mannar

அறிவுரை 5 வேண்டுவ வேட்பச் சொல்லல் வேண்டும்.

தக்க காலம் பார்த்து, ஆட்சியாளரின் குறிப்பு அறிந்து வெறுப்பு தராத செய்திகளையும், ஆட்சியாளர் விரும்பும் செய்திகளையும் அவர் விரும்பிக் கேட்கும் வண்ணம் ஆட்சியாளர்களைச் சார்ந்து வாழ்வோர் சொல்ல வேண்டும். ஆட்சியாளர்களுக்கு விருப்பம் இல்லாதவற்றையும், அவர் விரும்பிக் கேட்கும் வண்ணம் சொல்லும் வல்லமை சார்ந்து ஒழுகுபவர்களுக்கு வேண்டும். இதனை,

குறிப்புஅறிந்து காலம் கருதி வெறுப்புஇல
வேண்டுப வேட்பச் சொலல். (696)

என்ற குறள் வெளிப்படுத்துகின்றது.

அறிவுரை -6 பயன் தராதவற்றை வேந்தன் விரும்பினாலும் சொல்லல் கூடாது

வேட்பன சொல்லி வினையில எஞ்ஞான்றும்
கேட்பினும் சொல்லா விடல்.(697)

என்ற குறள் ஆட்சியாளரிடம் அவரைச் சார்ந்தோர் எதனைச் சொல்லவேண்டும் எதனைச் சொல்லக் கூடாது என்பதைக் காட்டுவதாக உள்ளது. ஆட்சியாளர்களிடம் அவர்கள் விரும்புவனவற்றை மட்டுமே சொல்லவேண்டும். பயனில்லாதவற்றை அவர்களே கேட்டாலும் சொல்லுதல் கூடாது என்று வள்ளுவர் குறிப்பிடுகிறார். பயனிலாதவற்றைச் சொல்லி ஆட்சியாளர்களைத் திசை திரும்ப வைத்துவிட்டால் ஆட்சி பாழாகிவிடும்.

பாண்டியன் நெடுஞ்செழியனிடம் தவறான நேரத்தில் தவறான தகவலைப் பொற்கொல்லன் சொன்ன காரணத்தால் கோவலனின் உயிர் பறிக்கப்படுகிறது. கண்ணகி தன் கணவனை இழக்கிறாள். மதுரை தீ கொள்கிறது. பாண்டியன் உயிர் துறக்கிறான். எனவே ஆட்சியாளரைச் சார்ந்து ஒழுகுபவர்கள் பயன் தராதவற்றை, ஆட்சியாளர்களுக்கு இழுக்கு தருவனவற்றை ஆட்சியாளர்களிடம் சொல்லுதல் கூடாது என்பது மிக முக்கியமாகக் கடைபிடிக்கவேண்டிய கருத்தாகும்.

முன்குறளில் அரசன் விரும்புவனவற்றை மன்னரைச் சேர்ந்தொழுகுவோர் சொல்ல வேண்டும் என்று குறிப்பிட்டார் வள்ளுவர். இதன் காரணமாக அரசன் வேண்டுவன பயனில்லாதனவாக, அறமற்றனவாக இருந்தால் அவற்றை அவன் விரும்பிக் கேட்பான் என்று சொல்லுதல் கூடாது என்பதை இக்குறளில் தெளிவுபடுத்துகிறார் வள்ளுவர்.

அறிவுரை -7 மன்னரைச் சேர்ந்தொழுகுவோர் மன்னரை விட வயதிலும் அறிவிலும், அனுபவத்திலும் சிறந்தவர் என்ற நிலையை வெளிப்படுத்துதல் கூடாது

ஆட்சியாளர்களுடன் சுற்றமாக உள்ளோர் வயதில் ஆட்சியாளரை விட இளையவராக இருந்தாலும், முதுமையானவராக இருந்தாலும் அதனை அதாவது அந்த இளமையின் தன்மையை, முதுமையின் தன்மையை வெளிப்படுத்தாமல் இருக்கவேண்டும். ஆட்சியாளருக்குத் தன்னைவிட தன்னைச் சார்ந்து ஒழுகுபவர்கள் இளமையைப் பெற்றிருக்கிறார்கள், முதுமையால் அறிவைப் பெற்றிருக்கிறார்கள் என்ற எண்ணம் தோன்றிவிடா வண்ணம் ஒழுக வேண்டும். எவ்விதத்திலும் ஆட்சியாளர்களுக்கு இழுக்கு வந்துவிடாவண்ணம் ஆட்சியாளரைச் சார்ந்தோர்கள் நடந்து கொள்ள வேண்டும்.

மேலும் ஆட்சியாளர்கள் தனக்கு உறவினராக அமைந்த நிலையில் அவரை இன்ன முறையினர் என்று கருதி தாழ்வாகவே உயர்வாகவே எண்ணிப் பேசவும் கூடாது.

தமிழ்ப்புலவர் ஒட்டக் கூத்தர் மூன்று சோழ மன்னர்களின் காலத்திலும் அதாவது மூன்று தலைமுறையினர் காலத்திலும் வாழ்ந்தவர். அவர் விக்கிரம சோழன், இரண்டாம் குலோத்துங்கள், இரண்டாம் இராசராசன் ஆகிய மூன்று அரசர்கள் காலத்திலும் வாழ்ந்தவர். விக்கிரம சோழன் காலத்தில் குலோத்துங்கனும், குலோத்துங்க சோழன் காலத்தில் இராசராசனும் இளையோர்களாக இருந்திருப்பர். இருப்பினும் ஒட்டக் கூத்தர் தம்மை விட அரசர்கள் இளையவர்கள் என்றாலும் அவர்களை இளையவர்களாகக் கருதாமல் அவர்களைப் பாட்டுடைத் தலைவர்களாக ஆக்கி அவர்கள் மீது உலாக்கள் பாடி மூவர் உலா பாடிப் பெருமை பெற்றார். இதன் காரணமாக ஆட்சியாளர்கள் இளமையானவர்கள் என்றாலும் அவர்களின் பெருமைக்கு ஊறு வராமல் அவரைச் சார்ந்தோர் காத்த நிலைப்பாடு தெரியவருகிறது.

இளையர் இனமுறையர் என்றுஇகழார் நின்ற
ஒளியோடு ஒழுகப் படும். (698)

என்பது மன்னரைச் சார்ந்து ஒழுகுபவர்களுக்குப் பெரிதும் தேவைப்படும் கருத்தாகும்.

கரிகால் வளவன் இளையவன். அவனுக்குத் துணையாக இருந்த இரும்பிடர்த்தலையர் வயதால் முதிர்ந்தவர். அம்முதியவர் இளையவரான கரிகால் பெருவளத்தானின் வளர்ச்சியிலும், நாட்டின் முன்னேற்றத்திலும் கவனம் செலுத்தி வளம் பெற வைத்தார். இளையவர் என்று இகழாமல் கரிகால் வளவனை இரும்பிடர்த்தலையர் போற்றிக் காத்தலாகிய ஒழுக்கத்தை நன்கு செய்து நற்பெயர் பெற்றார்.

அறிவுரை 8 கொளப் பெற்றோம் என்று எண்ணி கொள்ளாதன செய்தல் கூடாது.

ஆட்சியளார் தன்னுடைய சுற்றத்தார் என்பதால் எதையும் செய்யலாம் என்ற கர்வ நிலைப்பாடு ஆட்சியாளரைச் சார்ந்தவர்களுக்கு வந்துவிடக் கூடாது. அவ்வாறு வந்து விட்டால் அந்நினைப்பு ஆட்சிக்கும், ஆட்சியாளருக்கும் கேடுகளை விளைவிக்கும். ஆட்சியாளர்கள் விரும்பாதனவற்றை என்றைக்கும் ஆட்சியாளர்களைச் சார்ந்தோர் செய்யாது காத்துக்கொள்ள வேண்டும். இவ்வறிவுரையை

கொளப்பட்டேம் என்றெண்ணிக் கொள்ளாத செய்யார்
துளக்குற்ற காட்சி யவர்.(699)

என்ற குறள் காட்டுகின்றது. இற்றைக் காலத்தில் பெண்கள் தலைமைப் பதவிக்கு வந்தாலும் அவரைச் சார்ந்த ஆண்களே ஆட்சிப் பொறுப்பை ஏற்று நடத்தும் போக்கினைக் காணமுடிகிறது. இதன் காரணமாக பல்வேறு சிக்கல்கள் எழுவதையும் அறியமுடிகிறது. எனவே ஆட்சியானது ஆட்சியாளர்களேயே ஆளப்படவேண்டும். அவர்களுக்குப் பதிலிகளாக யாரும் மாறிவிடக் கூடாது.

அறிவுரை -9

மேற்சொன்ன அறிவுரையை வள்ளுவர் மீண்டும் வலியுறுத்தி இவ்வதிகாரத்தின் நிறைவுக் குறளைப் படைக்கிறார்.

பழையம் எனக்கருதிப் பண்புஅல்ல செய்யும்
கெழுதகைமை கேடு தரும். (700)

ஆட்சி அதிகாரத்தில் இருப்பவர்கள் எமக்கு பழமையான நட்புடையவர்கள் என்று எண்ணத்தில, பண்பு அல்லாதனவற்றை ஆட்சியாளரைச் சார்ந்தோர் செய்தல் கூடாது. இது பெரிய கேட்டினைத் தரும் என்கிறார் வள்ளுவர்.

கம்பரின் மகன் அம்பிகாவதி. மிகச் சிறந்த கவிஞன். அவன் மன்னன் மகள் அமராவதியைக் காதலித்தான். இதனை அறிந்த மன்னன் கோபமுற்று இதனைத் தடுக்க எண்ணினான். கம்பரையும், அம்பிகாபதியையும் அழைந்து ஒருநாள் அரண்மனையில் விருந்து வைத்தான். அவ்விருந்தில் அமராவதி உணவினைப் பரிமாரினாள். அப்போது காதல் மேம்பட அமராவதி குறித்து அம்பிகாவதி பாடல் பாடுகிறான். அதனை அறிந்த கம்பர் அவன் பாடிய பாடலின் பின் இரண்டு அடிகளை வேறு வகையில் பாடி அரசனின் கோபத்தை, சந்தேகத்தைத் தீர்த்தார்.

அதன் பின்னும் பழைமையை நினைக்காமல் அம்பிகாவதி அமராவதி காதல் தொடர அம்பிகாவதி உயிர்ச் சேதம் செய்யப்பட்டான். பழமை கருதி பண்பு அலாதன செய்ததால் அம்பிகாவதி உயிர் போயிற்று. இதன் காரணமாக பழமையை எண்ணி பண்புடன் வாழ வேண்டும். அரசனின் சுற்றத்தார் பழமையைக் கருதாமல் பண்புகள் அல்லாதன செய்வதால் துன்பப்பட நேரிடும் என்பதற்குக் கம்பரின் மகன் வாழ்க்கை சான்றாகிறது.

திருவள்ளுவர் காலத்திற்குச் சற்றொப்ப தோன்றிய பழமொழி நானூறு நூலிலும் மன்னரைச் சார்ந்து ஓழுகுபவர்களுக்கான அறிவுரைகள் சொல்லப்பெற்றுள்ளன.

கொடித் திண் தேர் மன்னரால் கூட்டுண்டு வாழ்வார்,
எடுத்து மேற்கொண்டவர் ஏய வினையை
மடித்து ஒழிதல், என் உண்டாம்? (பழமொழி நானூறு 266)

என்ற பாடலில் மன்னரைச் சார்ந்து ஒழுகுபவர்கள் சோம்பலின்றி சொன்ன பணிகளைச்செய்து முடிக்கவேண்டும் என்று குறிப்பிடுகிறது. மன்னரோடு கூட்டு பெற்று வாழ்வோர் ஏவிய வினைகளை மடி கருதி அதாவது சோம்பல் கருதிச் செய்யாமல் விட்டுவிட்டால் என்னாவது என்று இந்தப் பாடல் அறிவுறுத்துகின்றது. மன்னரால் கூட்டுண்டு வாழ்வோர் என்பதை விட வள்ளுவர் தந்த மன்னரைச் சார்ந்து ஒழுகுபவர் என்ற பெயர் பொருத்தமுடையதாக விளங்குகிறது.

மனிதகுலம் மேம்பட தக்க ஒரு தலைவன், அவன் கீழ் பணியாற்றும் சோம்பலில்லா பணியாளர்கள், தலைவனுக்கு வழி சொல்லத் தக்க ஆலோசகர்கள், அவர்கள் வழங்கும் தக்க ஆலோசனைகள் பெரிதும் தேவை என்பதை மன்னரைச் சேர்ந்தொழுகல் என்ற அதிகாரம் தந்து நிற்கின்றது. இதன்படி நடக்கும் நிலையில் நல்ல நிர்வாகத்தை மனித குலம் பெறும் என்பதில் ஐயமில்லை.

மன்னரைச் சார்ந்து ஒழுகுபவர்களுக்கான பற்பல அறிவுரைகளை வழங்கும் பகுதியாக மன்னரைச் சேர்ந்தொழுகல் என்ற குறள் பகுப்பு விளங்குகின்றது. மன்னராட்சியானாலும் மக்களாட்சியானாலும் அவர்களைச் சார்ந்து வாழ்வோர் மிக எச்சரிக்கையாக நடந்து கொள்ளவேண்டும் என்று அறிவுறுத்துகிறார் வள்ளுவர். இவ்வெச்சரிக்கையோடு செயல்படாவிட்டால் ஆட்சி கெடும். ஆட்சியாளரும் கெடுவர். ஆட்சியாளரைச் சார்ந்தோரும் கெடுவர். ஆட்சி அமைப்பே சீர் குலைந்து விடும். எனவே தகுந்த எச்சரிக்கை உணர்வுடன் ஆட்சி அதிகாரத்தில் இருப்போருடன் அவர்களைச் சார்ந்து வாழ்வோர் வாழ வேண்டி உள்ளது. இதன்படி நடக்க நல்லாட்சி நாளும் நடக்கும் என்று வள்ளுவர் வழி காட்டுகிறார்.

அரசரை விட்டு நீங்காமலும், மிக நெருங்காமலும் அன்பும் அச்சமும் கொண்டு அவரோடு அமைந்தொழுக வேண்டும். அவர்க்குரிய சிறந்த போகங்களைத் தாம் நுகர்ந்து கொள்ள விரும்பக் கூடாது. தம்மை மன்னன் விரும்பிப் பாதுகாக்கும் வண்ணம் பிழைகள் ஏதும் தம்மை அணுகாமல் மன்னரைச் சேர்ந்தொழுகுபவர்கள் வாழ வேண்டும். அவர் அருகில் இருக்கும் நிலையில் நகை, வீண் உரையாடல் போன்றனவற்றைச் செய்யக் கூடாது. அவருடன் உரையாடுபவர் என்ன உரையாடினார்கள் என்று வற்புறுத்தி மன்னரிடம் கேட்கக் கூடாது. மன்னரே சொல்லும்வரை பொறுமை காக்க வேண்டும். தாம் கருதியதை அவர் குறிப்பறிந்து அவர் விரும்பும் வண்ணம் சொல்ல வேண்டும். பயனில்லாதவற்றை, அறமற்றவற்றை மன்னரிடம் சொல்லுதல் கூடாது. பருவத்தால் சிறியவராக மன்னர் இருந்தாலும் அவரைப் பெரியவராகக் கருதி மன்னரைச் சேர்ந்தொழுகுபவர்கள் வாழ வேண்டும். பழையம் என்று கருதி பண்பற்றவற்றைச் செய்தல் கூடாது. கேடு வராது காப்பதே மன்னரைச் சேர்ந்தொழுகுவார் கடமை என்று இவ்வதிகாரத்தில் உரைக்கிறார் வள்ளுவர்.

மன்னரைச் சேர்ந்தொழுகல் – பகுதி-2 முனைவர் மு.பழனியப்பன்

 



Mar 12, 2022

siragu mannar

அறிவுரை -1 மன்னவர் விரும்புவன விரும்பாமை

ஆட்சி அதிகாரத்தில் இருப்பவர்கள் விரும்புவனவற்றைச் செய்வார்கள். அதனை அவர்களுடன் இணைந்து பணியாற்றுபவர்கள் அப்படியே சரி என்று ஏற்று கொள்ளாமல் தள்ளி நின்று ஆராய்ந்து பார்க்க வேண்டும். ஆட்சியாளர்கள் விரும்புவதைத் தான் விரும்பாமல் இருப்பவர்களால் நிறைய ஆக்கங்கள் கிடைக்கும் என்கிறார் வள்ளுவர்.

மன்னர் விழைப விழையாமை மன்னரால்
மன்னிய ஆக்கம் தரும்.(692)

என்ற குறளின் வழி இதனை உணரலாம். இராவணன் மாற்றான் மனையாளை விரும்பினான் என்ற நிலையில் அவனுக்கு அவ்வெண்ணத்தை அவனைச் சார்ந்த சுற்றமாகிய சூர்ப்பனகை உருவாக்ககிறாள். அவன் விரும்பியதைத் தடுத்து பலர் சொன்னாலும் இராவணன் கேட்கும் அளவிற்கு யாரும் சொல்லவில்லை. இராவணனின் மந்திரச் சுற்றம் அவனுக்கு அவன் விருப்பத்திற்கு இயைபாகவே இருந்துள்ளது. இதனால் இராவணன் அழிய நேர்ந்தது. எனவே ஆட்சியாளர்களைச் சுற்றி இருப்போர் ஆட்சியாளர் விரும்பும் கருத்தினைத் தானும் விரும்பிவிடாமல் ஆராய்ந்து தள்ளி நிற்பது சிறந்த பண்பாகின்றது. இதனை ஆட்சியாளர்களைச் சார்ந்து வாழ்வோர் பின்பற்ற வேண்டும் என்கிறார் வள்ளுவர்.

இக்குறளுக்கு மற்றுமொரு பொருளும் உண்டு. மன்னன் கொடி, சிம்மாசனம், பட்டாடை, தேர், குதிரை, யானை, அறுசுவை உணவு போன்ற வசதிகளுடன் வாழ்வான். அவனின் வாழ்வைப் போல் அவனுடன் இணைந்து வாழக் கூடியவர்கள் அவ்வளவு வசதிகளைத் தான் ஏற்படுத்திக் கொண்டு வாழ எண்ணக் கூடாது என்பதும் இக்குறள் தரும் மற்றொரு பொருளாகும்.

வத்தவ நாட்டினுடைய அரசன் உதயணன். அவன் அரச செல்வத்துடன் வாழ்ந்து வந்தான். அவனுக்கு உற்ற ஆலோசனைகள் சொல்ல இசைச்சன் என்பவன் அமைச்சனாக நல் நண்பனாக விளங்கினான். அரசன் நாடாள இவன் அடக்கமாக எந்த வசதியும் இல்லாமல் வாழ்ந்து வந்தான். இவனின் நற்பண்பு கருதி தனக்குத் திருமணம் ஆகவேண்டுமானால் முதலில் தன் நண்பன் இசைச்சனுக்குத் திருமணமாகவேண்டும் என்று உதயணன் கூறி அவ்வாறே நடக்கச் செய்து தன் நன்றியைத் தெரிவித்தான். மன்னர் விழைபவனவற்றைத் தான் விழையாமல் வாழ்ந்த இசைச்சன் பின்னாளில் உதயண மன்னனால் மன்னிய ஆக்கங்கள் பலவற்றைப் பெற்றான். இவ்வாறு மன்னர்தம் வசதியை அவரின் உடன் உறைவோர் வேண்டாமல் நிற்கும் நிலையே சிறந்ததாகும் என்கிறார் வள்ளுவர்.

அறிவுரை -2 அரியவை போற்றல்

போற்றின் அரியவை போற்றல் கடுத்தபின்
தேற்றுதல் யார்க்கும் அரிது. (693)

என்ற குறள் அடுத்த அறிவுரையைத் தரும் குறளாகும். ஆட்சியாளரைச் சார்ந்து ஒழுகுபவர்கள் தன்னிடம் சிறு தவறுகள் கூட நடக்காவண்ணம் காத்துக்கொள்ள வேண்டும். மேலும் தன் நடத்தைகளில் ஐயப்பாடு ஏற்படாத வண்ணம் தூய்மையாக நடக்கவேண்டும். தலைமையைச் சார்ந்த ஒழுகுபவர்களின் நடத்தைகளில் சிறு சந்தேகம் தோன்றினால்கூட அதனைத் தீர்ப்பது கடினமாகிவிடும்.

எனவேதான் ஆட்சியாளரைச் சார்ந்தவர்கள் சிறு தவறுகள் கூட தன் பக்கத்தில் நடக்காவண்ணம் காத்துக்கொள்ள வேண்டியிருக்கிறது. அதுவே ஆட்சியாளர்களைச் சார்ந்து வாழ்பவர்களின் மீதான முழுமையான நம்பிக்கையை ஏற்படுத்தும்.

அரியவை போற்றல் என்பது அரிய பிழைகள் தம்மை அடையா வண்ணடம் வாழ்தலாகும். அரியவை போற்றல் என்பது

1. மன்னர்க்குரிய மகளிரொடு வாழ எண்ணுதல்
2. மறைவாக அரும் பொருள்களைக் கவர்தல்
3. போர்க்களத்தில் கைவிட்டுவிட்டு ஓடுதல்

போன்றனவாகும் என்கிறார் திருக்குறள் குமரேச வெண்பா இயற்றிய ஜெக வீரபாண்டியனார். மேற்கண்ட மூன்று குற்றங்களும் தம்மை அடையாமல் மன்னரைச் சேர்ந்தொழுகுவார் வாழவேண்டும் என்று குறிப்பிடுகிறார் வள்ளுவர்.

அறிவுரை -3 செவிச் சொல், நகைப்பு இல்லாதிருத்தல்

ஆட்சியாளர்களிடத்தில் முக்கியமான செய்திகளைச் சொல்லும் நிலையில், மென்மையாகவும் நகைப்பின்றியும் செய்திகளைச் சொல்லுதல் வேண்டும். சிறு நகைப்பு தொனி கூட தகவலில் நம்பிக்கையின்மையை உண்டாக்கிவிடும். தன்னிலும் மேலானவர்களிடத்தில் காதோடு காதாக செய்தியை அறிவித்தால் அம்முறைமையும் சரியானதாக இருக்காது. அது மற்றவர்கள் தம் பார்வையில் ஆட்சியாளர் தானாக எதையும் செய்யத் தகுதி அற்றவர், மற்றவர்கள் சொல்லித்தான் அவர் நடக்கிறார், அல்லது ஏதோ ரகசியம் இருக்கிறது போன்ற கருத்துகளுக்கு இடமளித்துவிடும்.

செவிச்சொல்லும் சேர்ந்த நகையும் அவித்துஒழுகல்

ஆன்ற பெரியா ரகத்து.(694)

என்ற குறளில் ஆட்சியாளர்களிடத்தில் அவரைச் சார்ந்தவர்கள் செய்திகைளைச் சொல்லும்போது மென்மையாகவும், வெளிப்படையாகவும், சிறு நகைப்பிற்குக் கூட இடம் தராமல் சொல்லவேண்டும் என்று குறிப்பிடுகிறார்.

இதுமட்டும் அல்ல. அரசன் போன்ற பெரியோர் இருக்கும் அவையில் நடக்க வேண்டிய நடைமுறை பற்றி ஆசாரக் கோவை பின்வருமாறு அறிவிக்கின்றது.

‘‘உடுக்கை மிகவார் செவி சொறண்டார் கைமேல்
எடுத்து உரையார் பெண்டீர் மேனோக்கார் செவிச் சொல்லும்
கொள்ளார், பெரியாரகத்து”

என்று ஆசார கோவை குறிப்பிடுகிறது. அணிந்துள்ள ஆடையை இகவாது இருக்க வேண்டும். காதுகளைச் சொறியாமல் இருக்க வேண்டும். கைகளை அசைத்துப் பேசுதல் கூடாது. பெண்களை மோகம் கொள்ளப் பார்க்கக் கூடாது. செவியில் இரகசியமாகப் பேசக் கூடாது என்று ஆசாரக் கோவை அரசவையில் செய்யக் கூடாதன பற்றி அறிவிக்கின்றது.
மேலும்

‘‘நகையொடு கொட்டாவி, காறிப்பு தும்மல்
இவையும் பெரியார் முன் செய்யாரே”

என்று ஆசாரக் கோவை குறிப்பிடுகின்றது. பெரியோர்க்கு முன்பு சேர்ந்து நகைத்தல், கொட்டாவி விடுதல் காறித்துப்புதல், தும்முதல் போன்றனவற்றைச் செய்யாமல் காக்க வேண்டும் என்று ஆசாரக் கோவை குறிக்கிறது.

ஒரு மனிதனின் உடல் சார்ந்த இயக்கங்கள் கூட தன்னைவிட மேம்பட்டோர் இடத்தில் எரிச்சலை உண்டு பண்ணலாம் என்பதற்கு மேற்கண்ட செயல்கள் அனைத்தும் உதராணங்கள். இவற்றை எக்காலத்தும் தம்மைவிடப் பெரியாரிடத்தில் செய்யாமல் காப்பதே நலம் பயக்கும்.

அறிவுரை -4 செய்தி அறியும் ஆர்வம் இல்லாதிருத்தல்

ஆட்சியாளர்கள் ஆட்சி புரியும் நிலையில் அவர்களைப் பலரும் வந்து சந்திப்பார்கள். சந்தித்த ஒவ்வொருவர் பற்றியும் அவர் பேசிய ஒவ்வொரு செய்திகள் பற்றியும் வினவுதலும் தவிர்க்கப்பட வேண்டியதாகும். ஆட்சியாளர்களிடம் யார் என்ன பேசினார்கள், அவர்களிடம் ஆட்சியாளர் பேசியது யாது என்பனவற்றைத் தோண்டித் துருவிக் கேட்டல் கூடாது. ஆட்சியாளர்களே அந்தச் செய்திகளைச் சொல்லும் வரை காத்திருத்தல் வேண்டும். நிச்சயம் அவர் சொல்லித்தான் ஆகவேண்டும். அதுவரை பொறுமையுடன் காத்திருக்கக் கற்றுக்கொள்ளவேண்டும்.

தற்காலத்தில் கணவன் மனைவியிடத்தில் கூட இந்நடைமுறை பெரிதும் தேவைப்படுவதாக உள்ளது. குடும்பத்தின் தலைவன் செயல்பாடுகள் அனைத்தையும் அறிந்து கொள்ளும் மனைவிக்கு இருந்தாலும், உரிமை இருந்தாலும் கணவன் சொல்லும் வரை காத்திருப்பது கணவன் மனைவிக்குள் இன்னும் இணக்கமான சூழலை உருவாக்கும்.

எப்பொருளும் ஓரார் தொடரார்மற்று அப்பொருளை
விட்டக்கால் கேட்க மறை.(695)

என்ற குறள் மேற்சொன்ன அறிவுரையைக் கொண்டதாகும்.


இமயவரம்பன் பரம்பரையும், சேரநாடும் – பகுதி-3 முனைவர் மு.பழனியப்பன்

 



Oct 29, 2022

siragu imayavaramban.jpg.

சேரநாடு

சேரநாடு இமயவரம்பன் காலத்தில் இமயம் வரை தன் ஆட்சியைக் கொண்டிருந்தது. இமயவரம்பன் காலத்தில் சேரநாடு என்பது ‘‘தென் கன்னடம் மாவட்டத்தில் உள்ள குதிரைமலையும், ஏழில் மலையும், குடகு நாட்டிலுள்ள நறவுக்கல் பெட்டா மலையும், நீலகிரியிலுள்ள உம்பற்காடும், மலையான மாவட்டத்திலுள்ள வயநாட்டுப் பாயல் மலையும், குறும்பர் நாடு தாலுகாவிலுள்ள தொண்டியும், கொச்சி நாட்டிலுள்ள கருவூர்ப்பட்னமும், திருவஞ்சைக்களமும், கொடுங்கோளுரும், பேரியாறும் பிறவும் சேரர்க்குரியனவாகக் கூறப்படுகின்றன” என்று சேரநாட்டின் பரப்பினை ஔவை துரைசாமிப்பிள்ளை காட்டுகிறார்.

“சேர நாட்டில் அடங்கியுள்ள பகுதிகள் குட்டநாடு, குடநாடு, பூழிநாடு, குன்ற நாடு, மலைநாடு, கொங்கு நாடு, பொறைநாடு, முதலியன ஆகும். இதில் அயிரைமலை, நேரிமலை, செருப்புமலை, அகப்பாக்கோட்டை, உம்பற்காடு, நறவுத் துறைமுகம், முசிறித் துறைமுகம், தொண்டித் துறைமுகம் ஆகிய இடங்களும் அடங்கும்” என்று சேரநாட்டின் பகுதிகளைக் காட்டுகிறார் மயிலை சீனி.வேங்கடசாமி.

சேரநாட்டின் பல ஊர்களைப் பதிற்றுபத்து குறிக்கிறது. உம்பற்காடு என்பது பல இடங்களில் குறிப்பிடப்பெறுகிறது. தற்போது ஆனைமலைக்காடுகள் என்று வழங்கப்படும் இப்பகுதியை இமயவரம்பன் குமட்டூர் கண்ணனாருக்கு வழங்கினான். இதன்பின் இப்பகுதி சற்று கலகத்தை ஏற்படுத்த பல்யானை செல் கெழுகுட்டுவன் இதனை அடக்கினான். இதனின்று கிடைக்கும் வரப்பணத்தில் பாதியைச் செங்குட்டுவன் பரணருக்கு வழங்கினான் என்பன போன்ற செய்திகள் உம்பர்காட்டை முன்வைத்துப் பதிற்றுப்பத்தில் எடுத்துரைக்கப்பெற்றுள்ளன.

குட நாடு என்பதும் சேரர்க்கான பகுதியாக விளங்கியிருக்கிறது. இந்நாட்டின் ஓர் ஊரினை ஆடுகோட்பாட்டுச் சேரலாதன் பார்ப்பனருக்கு வழங்கினான்.

தண்டாராணியம் என்பது தக்கான பீடபூமிப் பகுதியாகும். இங்கு இருந்து ஆடுகளைக் கவர்ந்த நிலையில் கவர்ந்தவர்களை ஆடுகோட்பாட்டுச் சேரலாதன் அழிக்கிறான். இப்பகுதியும் சேரநாட்டின் ஒரு பகுதியாக அக்காலத்தில் விளங்கியது.

தொண்டி என்னும் நகரம் சேரர்களின் கடற்கரை நகரமாக விளங்கியதாகும். இவ்வூர் பற்றிய குறிப்புகள் சங்க இலக்கியங்களில் காணப்பெறுகிறது.

கொங்கர் நாட்டினைப் பல்யானை செல்கெழுகுட்டுவன் கைப்பற்றிய திறத்தை ‘ஆகெழு கொங்கர் நாடு அகப்படுத்த வேல் கெழு தானை வெருவெரு தோன்றல்’ என்று குறிக்கிறது பதிற்றுப்பத்தின் பாடல்
இவை போன்று கொடுகூர், கொல்லிக் கூற்றம், நறவு, பந்தர், புகாஅர், மையூர், வஞ்சி மூதூர், வியலூர் போன்ற பல சேரர் ஊர்கள் பதிற்றுப்பத்தில் காட்டப்பெறுகின்றன.

இவற்றின் வழியாக அக்காலத்தின் சேரநாட்டுப்பகுதிகளை அறிந்து கொள்ள முடிகின்றது. அவை தற்காலத்தில் வழங்கி வரும் நிலையையும் உணர்ந்து கொள்ள முடிகின்றது.

சேரர் ஆட்சி

இப்பரப்பினை உடைய சேரநாட்டு அரசமுறை என்பதும் சிறப்பிற்குரியதாக இருந்துள்ளது.

”சினனே, காமம், கழி கண்ணோட்டம்,
அச்சம், பொய்ச் சொல், அன்பு மிக உடைமை,
தெறல் கடுமையொடு, பிறவும், இவ் உலகத்து
அறம் தெரி திகிரிக்கு வழியடை ஆகும்:
தீது சேண் இகந்து, நன்று மிகப் புரிந்து,
கடலும் கானமும் பல பயம் உதவ;
பிறர் பிறர் நலியாது, வேற்றுப் பொருள் வெஃகாது,
மை இல் அறிவினர் செவ்விதின் நடந்து, தம்
அமர்துணைப் பிரியாது, பாத்து உண்டு, மாக்கள்
மூத்த யாக்கையொடு பிணி இன்று கழிய;
ஊழி உய்த்த உரவோர் ”

என்ற நிலையில் சேரர் தம் அரசியல் இருந்துள்ளது. அளவு கடந்த சினம், காமம், மிகுந்த கண்ணோட்டம், அச்சம்,பொய்யுரை, அன்புமிக உடைமை, கடுந்தண்டம் ஆகியவையும், இவை போன்றன பிறவம் இவ்வுலகத்தே அறநெறியில் செயறபடும் அரசாணைச் சக்கரத்தைத் தடுக்கும் தீங்குகள் ஆகும். அத் தீங்குகள் நீங்க நற்செயல்கள் புரிந்து, கடலம் காடும் பயன்கள் பலவற்றை நல்க, மக்கள் பிறரை வருத்தாமலும் பிறர் பொருட்களை விரும்பாமலும், குற்றமற்ற அறிவினராய் நன்றாக நடந்து தம் துணைவியரைப் பிரியாமல் பலர்க்கும் பகுத்துக் கொடுத்துத் தாமும் உண்டு நோயில்லாமல் முதுமையடைந்த உடலோடு நெடுங்காலம் ஆட்சி புரிந்த வலியவர்கள் சேரர்கள் என்பதை இப்பாடலடிகள் காட்டுகின்றன.

முடிவுகள்

சேரர் வரலாற்றினை அறிந்து கொள்ளப் பெரிதும் துணைபுரிவது பதிற்றுப்பத்து ஆகும். பதிற்றுப்பத்து கடைச்சங்க கால நூலாகும். அச்சங்க காலத்தில் சேரநாட்டை அரசு புரிந்த பத்து சேர மன்னர்களை அவர்களின் கொடை, வீரச் சிறப்பினை பதிற்றுப்பத்து எடுத்துரைக்கின்றது. இப்பதிற்றுப்பத்தின் பதிகங்கள் மிக முக்கியமான செய்திகளை வழங்குகின்றன.
இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன் பரம்பரையினர் அறுவராக அமைகின்றனர். உதியன் சேரலாதன், இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன், பல்யானை செல்கெழு குட்டுவன், களங்காய்க்கண்ணி நார்முடிச் சேரல், கடல்பிறக்கோட்டிய செங்குட்டுவன், ஆடுகோட்பாட்டுச் சேரலாதன் என்ற அறுவரும் சேரநாட்டைத் தொடர்ந்து ஆட்சி புரிந்துள்ளனர். இவர்களைத் தொடர்ந்து கடல்பிறக்கோட்டிய செங்குட்டுவனின் மகனான கோக்கோதை மார்பன் என்பவன் ஆட்சி புரிந்துள்ளான்.

இதில் உதியன் சேரலாதன் மகன் இமயவரம்பன் ஆவான். இவன் போரில் இறக்க இவனின் தம்பி பல்யானை செல் கெழுகுட்டுவன் ஆட்சிப் பொறுப்பில் அமர்ந்தான். இவன் துறவு மேற்கொண்டு காடு சென்ற நிலையில் இமயவரம்பனின் மூத்தமகன் அதாவது இமயவரம்பனுக்கும் பதுமன் தேவிக்கும் பிறந்த களங்காய்க்கண்ணி நார்முடிச் சேரல் ஆட்சிப் பொறுப்பேற்கிறான். இவனுக்குப் பின்பு இமயவரம்பனுக்கும் சோழன் மணக்கிள்ளி மகள் நற்சோணைக்கும் பிறந்த மகன் கடல்பிறக்கோட்டிய செங்குட்டுவன் அரசேற்கிறான். இவனுக்குப் பின்பு இமயவரம்பனுக்கும் பதுமன் தேவிக்கும் பிறந்த இளைய மகன் ஆடுகோட்பாட்டுச் சேரலாதன் ஆட்சி ஏற்கிறான். இவனுக்குப் பின்பு கடல் பிறக்கோட்டிய செங்குட்டுவனின் மகன் கோக்கோதை மார்பன் அரசேற்கிறான். இவ்வாறு இமயவரம்பனின் பரம்பரை சேரநாட்டை ஆண்டுவந்துள்ளது.

இவர்களின் காலத்தை ஓரளவிற்கு வரலாற்று ஆசிரியர்கள் காட்டியுள்ளனர்.

1. உதியஞ் சேரலாதன் – கி.பி.45 முதல் -70 வரை
2.இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன் – கி.பி71முதல் -129 வரை
3. பல்யானை செல்கெழு குட்டுவன் – கி.பி80 முதல் 105 வரை
4. களங்காய்க்கண்ணி நார்முடிச்சேரல் – கி.பி106 முதல் -130 வரை
5. சேரன் செங்குட்டுவன் – கி.பி 131 முதல் -186 வரை
6. ஆடுகோட்பாட்டு சேரலாதன் – கி.பி187 முதல் – 225 வரை
7. குட்டுவன் கோதை – ஆடு கோட்பாட்டுச் சேரலாதனின் காலத்தை ஒட்டியும்
அதன் பிறகும்

என்று வரலாற்று ஆசிரியர்கள் கால வரையறை செய்கின்றனர்.

சேரர்கள் இமயவம் வரை சென்று வில் பொறியை அங்குப் பொறித்தவர்கள் ஆவர். இமயவரம்பன் நெடுஞ்சேரலாதனும், கடல் பிறக்கோட்டிய செங்குட்டுவனும் இமயம் வரை சென்று வந்தவர்கள் என்று அறியவருகிறது.

இவர்கள் காலத்தில் பல தலைநகரங்கள் சேரநாட்டில் இருந்துள்ளது. ஆங்காங்கே சேரனின் தொடர்புடையோர் அதனை ஆண்டுவந்துள்ளனர். ஆட்சி என்பது நேரிய முறையில் நடந்துள்ளது.

கொடைத்திறமும், வீரமும் சான்ற குடியினராக சேரர் குடி விளங்கியுள்ளது. இவர்கள் புலவர்களுக்கு வரையாது வழங்கியமையைப் பதிற்றுப்பத்தின் பதிகங்கள்வழி அறியமுடிகின்றது.

சான்றாதாரங்கள்

[1]பதிற்றுப்பத்துஇரண்டாம்பத்துபதிகம்அடிகள் 1-3

[2]மேலது

[3]கழாஅத்தலையார், புறநானுறுபாடல் 62 அடிகள் 6-7

[4]மேலது, புறநானூறுபாடல் 368 அடிகள் 15-19

[5]மாமூலனார், அகநானூறு, பாடல் 127 அடிகள் 3-12

[6]குமட்டூர்கண்ணனார், பதிற்றுப்பத்து, இரண்டாம்பத்துபாடல் 13,அடிகள் 10-13

[7]மாமூலனார், அகநானூறு, பாடல்எண் 347, அடிகள் 3-5

[8]பதிற்றுப்பத்துமூன்றாம்பத்து, பதிகம்அடி -1

[9]பாலைக்கௌதமனார், மூன்றாம்பத்து, பாடல் 21, அடி31-38

[10]இளங்கோவடிகள், சிலப்பதிகாரம், நடுகல்காதை, அடி 135-146

[11]பதிற்றுப்பத்துநான்காம்பத்து, பதிகம்அடிகள் 1-4

[12]காப்பியாற்றுக்காப்பியனார், பதிற்றுப்பத்து, நான்காம்பத்து,பாடல் 39 அடி 13-17

[13]கல்லாடனார், அகநானூறு, பாடல்எண் 199, அடிகள் 19-24

[14]பதிற்றுப்பத்துஐந்தாம்பத்து, பதிகம், அடிகள் 1-3

[15]மயிலைசீனிவேங்கடசாமி, ஆய்வுக்களஞ்சியம் 1 , பக். 414

[16]கோனாட்டுஎறிச்சலூர்மாடலன்மதுரைக்குமரனார், புறநானூறுபாடல் 54

[17]பொய்கையார், புறநானூறு, பாடல்எண் 49 அடிகள் 1-5

[18]நக்கீரர், அகநானூறு, பாடல்எண் 346 அடி 23-29

[19]இளங்கோவடிகள், சிலப்பதிகாரம்,நடுகல்காதை, அடிகள் 115-120

[20]பரணர், அகநானூறு, பாடல்எண் 212 அடிகள் 16-20

[21]பதிற்றுப்பத்துஆறாம்பத்துபதிகம், அடிகள் 1-2

[22]காக்கைப்பாடினியார்நச்செள்ளையார், பதிற்றுப்பத்து, ஆறாம்பத்து, பாடல் 52 அடிகள் 14- 24

[23]ஔவைதுரைசாமிபிள்ளை, சேரமன்னர்வரலாறு,ப. 21

[24]மயிலைசீனிவேங்கடசாமி, பண்டைத்தமிழகவரலாறு, சேரர், சோழர், பாண்டியர், ப. 19

[25]பாலைக்கௌதமனார், பதிற்றுப்பத்துஇரண்டாம்பத்து, பாடல்எண் 22 அடிகள் 15-16

[26]பாலைக்கௌதமனார், பதிற்றுப்பத்து, இரண்டாம்பத்து, பாடல்எண் 22அடிகள்1-11

இமயவரம்பன் பரம்பரையும், சேரநாடும் – பகுதி-2 முனைவர் மு.பழனியப்பன்

 



Oct 22, 2022

siragu imayavaramban.jpg.

இமயவரம்பனின் தம்பி பல்யானை செல்கெழுகுட்டுவன்

இமயவரம்பனுக்குப் பின் அவனின் தம்பி பல்யானை செல்கெழுகுட்டுவன் அரசுரிமை பெறுகிறான். அவனைப் பதிகம் ‘இமயவரம்பன் தம்பி அமைவர‘ என்று குறிப்பிடுகின்றது. இவனின் ஆட்சிக் காலம் இருபத்தைந்து ஆண்டுகள் ஆகும். இவனுக்குப் பின்பு இமயவரம்பனின் மகன்கள் ஆட்சிக்கு வருகின்றனர். இவனின் மக்கள் பற்றிய குறிப்புகள் எதுவும் கிடைக்கவில்லை. இவனின் ஆட்சிக்காலம் கி.பி. எண்பதாம் ஆண்டு முதல் கி.பி. நூற்று ஐந்தாம் ஆண்டுவரை என்று கணக்கிடப்பெற்றுள்ளது.

பல்யானை கெழுகுட்டுவன் துறவில் நாட்டம் கொண்டு தன் வாழ்நாளின் நிறைவில் துறவறம் மேற்கொண்டான். இவன் நெடும்பாரதாயனார் என்பவரைக் குருவாக ஏற்றுக் கொண்டவன். அவர் துறவு மேற்கொண்டு காடு செல்ல இம்மன்னனும் அவருடன் துறவு ஏற்றுச் சென்றான்.

இதன் காரணமாக இமயவரம்பனின் மூத்தமகன் களங்காய்க் கன்னி நாற்முடிச்சேரல் அரசினை ஏற்று நடத்தவேண்டியவனானான். பல்யானை செல்கெழுகுட்டுவன், பல யானைகளை உடைய படையைப் பெற்றிருந்தான். இவன் கீழ்க்கடல் முதல் மேற்கடல் வரை யானைகளை நிறுத்தி அவைகளின் வழியாக நீரைக் கொணர்ந்து மங்கல நீராட்டை தான் வணங்கும் இறைவனுக்கு நிகழ்த்தியவன் ஆவான்.

இவனின் மனைவி பற்றியும் பதிற்றுப்பத்து குறிப்பிடுகிறது.

‘மண்ணாவாயின் மணம் கமழ் கொண்டு
கார்மலர் கமழும் தாழ் இருங்கூந்தல்
ஓரீஇயின போல இரவு மலர் நின்று
திருமுகத்து அலமரும் பெருமதர் மழைக்கண்
அலங்கிய காந்தள் இலங்கு நீர் அழுவத்து
வேய் உறழ் பணைத் தோள் இவளோடு
ஆயிரம் வெள்ளம் வாழிய பலவே”

என்று பல்யானை செல்குழுகுட்டுவனின் தேவியைப் பற்றிக் குறிப்பிடப்படுகிறது. சேரமாதேவியின் கூந்தலில் பூச்சுகள் பூசாதபோதும், இயற்கை மணம் உடையதாக விளங்கி நிற்கும். அவள் முல்லை மலர் சூடியுள்ளாள். அவளின் கண்கள் குளத்தின் மலர்கள்போல குளுமை பெற்றுச் சுழலும். அவளின் தோள்கள் மூங்கில் ஒத்ததாக அமையும். இவளோட பல்லாயிரம் ஆண்டுகள் வாழ்க என்று பாலைக் கௌதமனார் வாழ்த்துகிறார்.

இம்மன்னன் இல்லறம் துறந்து துறவறம் சென்றான் என்பது குறிக்கத்தக்கதாகும்.

இதுவரை சொல்லப்பெற்ற இமயவரம்பன் நெடுஞ்சேரலான், பல்யானை செல்கெழு குட்டுவன் ஆகிய மன்னர்களைப் பற்றிச் சிலப்பதிகாரத்திலும் குறிக்கப்படுகிறது.

‘‘கடல் கடம்பு எறிந்த காவலன் ஆயினும்,
விடர் சிலை பொறித்த விறலோன் ஆயினும்
நான்மறையாளன் செய்யுள் கொண்டு,
மேல் நிலை உலகம் விடுத்தோன் ஆயினும்,
“போற்றி மன் உயிர் முறையின் கொள்க” என,
கூற்று வரை நிறுத்த கொற்றவன் ஆயினும்,
வன் சொல் யவனர் வள நாடு ஆண்டு,
பொன் படு நெடு வரை புகுந்தோன் ஆயினும்,
மிகப் பெரும் தானையோடு இருஞ் செரு ஓட்டி,
அகப்பா எறிந்த அருந்திறல் ஆயினும்,
உரு கெழு மரபின் அயிரை மண்ணி,
இரு கடல் நீரும் ஆடினோன் ஆயினும்”
என்ற குறிப்புகள் நடுகல் காதையில் சேரன் செங்குட்டுவனின் (கடல் பிறக்கோட்டிய செங்குட்டுவன்) முன்னோர்கள் பற்றிக் குறிப்பிடும்போது உரைக்கப்பெறுகின்றன.

கடம்ப மரத்தைக் காவல் மரமாகக் கொண்ட கடல் சார்ந்த பகைவர்களை வென்றவன் இமயவரம்பன் ஆவான். மேலும் இவன் இமயமலை வரை சென்று விற்பொறி அங்குப் பொறித்தவன் என்பதும் இங்குச் சுட்டப்பெற்றுள்ளது.

இவனைத் தொடர்ந்து அரசாட்சி புரிந்த பல்யானை செல்கெழுகுட்டுவன் நான்மறையை ஓதும் அந்தணனாகிய பாலைக் கௌதமனார் வேண்டுகோளுக்கு ஏற்ப அவரை மேலுலகம் புகச் செய்தவனாக விளங்கினான். மேலும் இவன் யவனரை அடக்கியவன். அகப்பா என்னும் கோட்டையை அழித்து வென்றவன். மேலைக்கடல் கீழைக்கடல் என்ற இருகடல்களில் இருந்தும் நீரைக் கொணர்ந்து அயிரை என்ற இறைக்கு நீராடல் நிகழ்த்தியவன்.

இவர்கள் இருவரையும், சேரன் செங்குட்டுவனின் முன்னோர்களாகக் காட்டுகிறது சிலப்பதிகாரம்.

இமயவரம்பன் – வேளாவிக்கோ பதுமன் தேவி ஆகியோரின் மூத்த மகன் களங்காய்க் கண்ணி நார்முடிச் சேரல்

இமயவரம்பன் நெடுஞ்சேரலாதனுக்கு இரு மனைவியர். ஒருவரின் பெயர் வேளாவிக்கோ பதுமன் தேவி என்பதாகும். மற்றொருவரின் பெயர் சோழன் மணக்கிள்ளி மகள் நற்சோணை என்பதாகும். இவ்விரு தேவியருக்கும் பிறந்த மக்கள் தன் சித்தப்பாவிற்குப் பின்பு அரசுரிமை பெறுகின்றனர்.

“ஆராத் திருவின் சேரலாதற்கு
வேளாவிக் கோமான்
பதுமன் தேவி ஈன்ற மகன் முனை
பனிப்பப் பிறந்து, பல் புகழ் வளர்த்து,”

என்று களங்காய்க்கண்ணி நார்முடிச்சேரலின் பெற்றோர் பற்றிய குறிப்பு கிடைக்கின்றது. இவன் குடநாட்டில் இருந்து அரசாட்சி புரிந்து வந்தான். இவனின் ஆட்சிக்காலம் இருபத்தைந்து ஆண்டுகள் ஆகும். இவனின் ஆட்சிக்காலம் கி.பி நூற்று ஆறாம் ஆண்டு முதல் கி.பி. நூற்று முப்பதாம் ஆண்டுவரை எனக் கணக்கிடப்பெறுகிறது.

”சிலம்பி கோலிய அலங்கற் போர்வையின்
இலங்கு மணி மிடைந்த பசும் பொன் படலத்து
அவிர் இழை தைஇ மின் உமிழ்பு இலங்கச்
சீர்மிகு முத்தம் தைஇய
நார்முடிச் சேரல்! நின் போர் நிழல் புகன்றே”
என்று இவன் நார்முடி அணிந்த நிலையைக் காட்டுகிறார் காப்பியாற்றுக் காப்பியனார். பசும்பொன் தகட்டில் முத்துக்கள் பதித்த நிலையில், சிலந்தி வலை போன்ற அமைப்பில், நார் தொங்க இவன் மணிமுடி சூட்டிக்கொண்டமையால் களங்காய்க் கண்ணி நார்முடிச்சேரல் என்று அழைக்கப்பெற்றான்.

இவனைப்பற்றி அகநானூற்றிலும் ஒரு குறிப்பு இடம்பெற்றுள்ளது.

”இரும் பொன் வாகைப் பெருந்துறைச் செருவில்,
பொலம் பூண் நன்னன் பொருது களத்து ஒழிய,
வலம் படு கொற்றம் தந்த வாய் வாள்,
களங்காய்க் கண்ணி நார் முடிச் சேரல்
இழந்த நாடு தந்தன்ன
வளம் பெரிது பெறினும், வாரலென் யானே.”

என்ற இப்பாடலில் நன்னன் என்பவன் சேரர்களிடம் இருந்து பெற்ற நிலப்பகுதியை மீண்டும் களங்காய்க்கண்ணி நார்முடிச் சேரல் போர் செய்து நன்னனை வென்று பெற்றான் என்ற குறிப்பு கிடைக்கப்பெறுகின்றது.

இவனின் தம்பி ஆடுகோட்பாட்டுச் சேரலாதன் என்பவன் ஆவான். இவன் ஆறாம் பத்தின் பாட்டுடைத் தலைவன் ஆவான். சேரநாட்டை நார்முடிச்சேரலுக்குப் பின்பு அரசுரிமை ஏற்ற கடல் பிறக்கோட்டிய செங்குட்டுவனுக்குப் பின்பு அரசுரிமை பெற்றவன் ஆவான்.

இமயவரம்பன்- சோழன் மணக்கிள்ளி மகள் நற்சோணை ஆகியோரின் மகன் கடல் பிறகோட்டிய செங்குட்டுவன்

இமயவரம்பன் நெடுஞ்சேரலாதனின் மகனான களங்காய்க்கண்ணி நார்முடிச்சேரல் என்பவனுக்குப் பின்பு குடநாட்டினை மையமாக வைத்து சேரநாட்டை ஆண்டவன் இமயவரம்பன் சேரலாதனுக்கும், அவனின் மற்றொரு மனைவியான சோழன் மணக்கிள்ளி நற்சோணை என்பவளுக்குப் பிறந்த கடல் பிறக்கோட்டிய செங்குட்டுவன் என்பவன் ஆவான். இவன் களங்காய்க்கண்ணி நார்முடிச்சேரல் காலத்தில் குடநாட்டிலேயே இருந்து தன் அண்ணனுக்கு ஆட்சியல் உதவிகள் பல புரிந்து வந்தான். இவனின் ஆட்சிக் காலம் ஐம்பத்து ஐந்து ஆண்டுகள் ஆகும். இவனே சிலப்பதிகாரத்தில் குறிக்கப்படும் சேரன் செங்குட்டுவன் ஆவான். இவனுக்குத் தம்பியாகிய இளங்கோவடிகள் பற்றிய குறிப்புகள் பதிற்றுப்பத்தில் இல்லை.

“வடவர் உட்கும் வான் தோய் வெல்கொடிக்
குடவர் கோமான் நெடுஞ்சேரலாதற்குச்
சோழன் மணக்கிள்ளி ஈன்ற மகன்”
என்று, சேரன் செங்குட்டுவனின் பெற்றோர் பற்றிய குறிப்பு பதிகத்தில் இடம்பெற்றுள்ளது. இவனின் ஆட்சிக்காலம் ஐம்பத்தைந்து ஆண்டுகள் ஆகும். இவன் ஆண்ட காலம் – கி.பி நூற்று இருபத்தொன்பது முதல் கி.பி நூற்று இருபத்தொன்பதாம் ஆண்டு முதல் நூற்று எண்பத்து நான்காம் ஆண்டு வரை என்று கருதப்படுகிறது.

இவனின் மனைவி இளங்கோ வேண்மாள் ஆவாள். இவளைப் பற்றிய குறிப்பு சிலப்பதிகாரத்தில் இடம் பெற்றுள்ளது.

‘‘வாய் வாள் கோதை,
விளங்கு இலவந்தி வெள்ளி மாடத்து,
இளங்கோவேண்மாளுடன் இருந்தருளி,”

என்று இலவந்திகை வெள்ளி மாடத்தில் சேரன் செங்குட்டுவன் இருந்தபோது அவனுடன் அவன் மனைவியும் உடன் இருந்தாள் என்பது தெரியவருகிறது. இவனின் மகன் குட்டுவன் சேரல் என்பவன் ஆவான். இவனைப் பற்றிய குறிப்பு, பரணருக்குப் பரிசளித்த நிலையில் தெரியவருகிறது. இவன் பரணருக்குப் பணிவிடைகள் செய்து அவரைக் காத்து வாழ்ந்துள்ளான். இவனுடன் பிறந்தவன் குட்டுவன் கோதை ஆவான். இவனே சேரன் செங்குட்டுவனுக்குப் பின்பு அரசாட்சி பெற்றுள்ளான். பாண்டியன் நெடுஞ்செழியன் இவனுடன் போர் செய்து வென்றான் என்ற குறிப்பும் கிடைக்கின்றது.

இவனைப் பற்றி புறநானூற்றில் ஐம்பத்து நான்காம் பாடலில் குறிக்கப்பெற்றுள்ளது.

”வானம் நாண, வரையாது, சென்றோர்க்கு
ஆனாது ஈயும் கவிகை வண்மைக்
கடுமான் கோதை”
என்ற நிலையில் குட்டுவன் கோதை தன்னிடம் பொருள் பெற வந்தவர்களுக்கு எளிமையானவனாக இருந்துள்ளான். ஆனால் பகைவர்களுக்கும் அச்சம் தருபவனாக விளங்கியுள்ளான். இவன் சேரமான் கோக்கோதை மார்பன் என்றும் அழைக்கப்பெற்றுள்ளான். இவனைப் பற்றிப் பொய்கையார் ஒரு பாடல் புறநானூற்றில் பாடியுள்ளார்.

”கோதை மார்பிற் கோதை யானும்
கோதையைப் புணர்ந்தோர் கோதை யானும்
மாக்கழி மலர்ந்த நெய்த லானும்
கள்நா றும்மே கானல்அம் தொண்டி;
அஃதுஎம் ஊரே; அவன்எம் இறைவன்;”
என்று தொண்டியை தன்னகராகவும், இம்மன்னனைத் தன் மன்னனாகவும் கருதிப் பொய்கையார் பாடுகிறார்.
இவனைப் பற்றி அகநானூற்றிலும் ஒரு குறிப்பு இடம்பெற்றுள்ளது.

‘‘இழை அணி யானைப் பழையன் மாறன்,
மாட மலி மறுகின் கூடல் ஆங்கண்,
வெள்ளத் தானையொடு வேறு புலத்து இறுத்த
கிள்ளி வளவன் நல் அமர் சாஅய்,
கடும் பரிப் புரவியொடு களிறு பல வவ்வி,
ஏதில் மன்னர் ஊர் கொள,
கோதை மார்பன் உவகையின் பெரிதே”

என்று சோழன் கிள்ளிவளவன், பாண்டியன் பழையன் மாறனை வென்ற நிலையில் சேரமான் கோக்கோதை மார்பன் உவகை கொண்டதை மேற்பாடல் பதிவு செய்கின்றது. இதற்குக் காரணம் பாண்டிய மன்னன் இவனை வென்ற நிலையில் தற்போது அவன் தோல்வியைத் தழுவியது இவனுக்கு மகிழ்வைத் தருவதாக உள்ளதாகக் கொள்ளலாம்.
இவன் கண்ணகிக்குக் கோயில் எடுத்ததை ‘கடவுள் பத்தினி கல்கோள் வேண்டி” என்று பதிற்றுப்பத்தின் பதிகம் குறிக்கிறது. மேலும், சிலப்பதிகாரமும் பதிற்றுப்பத்தும் இவனின் வெற்றிகளை ஒன்றுபட உரைக்கின்றன.

‘‘சிறு குரல் நெய்தல், வியலூர் எறிந்தபின்;
ஆர் புனை தெரியல் ஒன்பது மன்னரை
நேரிவாயில் நிலைச் செரு வென்று;
நெடுந் தேர்த் தானையொடு இடும்பில் புறத்து இறுத்து,
கொடும் போர் கடந்து; நெடுங் கடல் ஓட்டி;
உடன்று மேல்வந்த ஆரிய மன்னரை,
கடும் புனல் கங்கைப் பேர் யாற்று, வென்றோய்!
நெடுந் தார் வேய்ந்த பெரும் படை வேந்தே!”

என்று சேரன் செங்குட்டுவனின் வியலூர், கொடுங்கூர் வெற்றி, இமயத்தில் கண்ணகிக்குக் கல் எடுத்தது போன்ற வெற்றிச் செயல்கள் சிலப்பதிகாரத்திலும் குறிக்கப்பெற்றுள்ளது. பதிற்றுப்பத்திலும் குறிக்கப்பெற்றுள்ளது.
இவனைப் பற்றிய குறிப்பு அகநானூற்றிலும் இடம்பெற்றுள்ளது.

‘‘மட்டு அவிழ் தெரியல் மறப் போர்க் குட்டுவன்
பொரு முரண் பெறாஅது விலங்கு சினம் சிறந்து,
செருச் செய் முன்பொடு முந்நீர் முற்றி,
ஓங்குதிரைப் பௌவம் நீங்க ஓட்டிய
நீர் மாண் எஃகம் நிறத்துச் சென்று அழுந்தக்
கூர் மதன் அழியரோ நெஞ்சே! ஆனாது”
என்று கடல் பிறக்கோட்டிய செய்து பரணரால் பதிவு செய்யப்பெற்றுள்ளது. இவன் கடலுடன் போர் செய்து கடலைப் பிறக்கோட்டி வேல் நட்ட செய்தி மேற்பாடலில் பரணரால் பதிவுசெய்யப்பெற்றுள்ளது.

இமயவரம்பன் – பதுமன் தேவி ஆகியோருக்குப் பிறந்த இளைய மகன் ஆடுகோட்பாட்டுச் சேரலாதன்

இமயவரம்பனின் மகன் சேரன் செங்குட்டுவனுக்குப்பின்பு இமயவரம்பன் –பதுமன் தேவி ஆகியோருக்குப் பிறந்த இளையமகன் ஆடுகோட்பாட்டுச் சேரலாதன் சேரநாட்டின் முடியுரிமை பெறுகிறான். இவன் சேரநாட்டினை முப்பத்தெட்டு ஆண்டுகள் ஆட்சி புரிகிறான்.

“குடக்கோ நெடுஞ்சேர லாதற்கு வேஎள்
ஆவிக் கோமான் றேவி யீன்றமகன்”
என்று பதிகம் இவனின் பெற்றோர் பற்றிக் குறிப்பிடுகிறது.

இவனின் தேவியுடன் இவன் ஊடல் கொண்டு இரந்து நிற்கும் காட்சியைப் பதிற்றுப்பத்து காட்டுகின்றது.
‘‘துணங்கைக்குத் தழூஉப்புணை யாகச்
சிலைப்புவல் ஏற்றின் உடன்றனள் ஆகி
உயவும் கோதை ஊரல் அம் தித்தி
ஈர்இதழ் மழைக்கண் பேரியல் அரிவை
ஒள்இதழ் அவிழ் அகம் கடுக்கும் சீறடிப்
பல்சில கிண்கிணி சிறுபரடு அலைப்பக்
கொல்புனல் தளிரின் நடுங்குவனள் நின்று நின்
எயிறர் ஓங்கிய சிறுசெங்குவளை
ஈ என இரப்பவும் ஒல்லாள் நீ எமக்கு
யாரையோ எனப் பெயர்வோள்”
என்ற நிலையில் கோபம் கொள்பவளாக இவனின் தேவி விளங்குகிறாள்.

இவன் வரை இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன் பரம்பரையினர் சேரநாட்டை ஆண்டு வந்துள்ளனர். கி.பி. நாற்பத்தைந்து முதல் கி.பி. நூற்று அறுபத்தேழு வரை சேரநாடு இமயவரம்பன் பரம்பரையினரால் ஆளப்பெற்று வந்துள்ளது.