செவ்வாய், ஆகஸ்ட் 01, 2017

பிழைதிருத்திகள்



Siragu tamil in computer2
தற்காலத் தமிழின் வளர்ச்சிக்குப் பெரிதும் துணையாக நிற்பது கணினித் துறையாகும். தமிழில் எழுதுவது என்பது குறைந்து நேரடியாக கணினி அச்சாக்கம் செய்யும் நிலையில் தமிழின் படைப்புகள் கணினியுடன் நேரடித் தொடர்புகள் கொண்டு விளங்குகின்றன. எழுதுவது, அழகுபடுத்துவது, வெளியிடுவது என்று அனைத்து நிலைகளிலும் கணினியின் பயன்பாடு தமிழுக்கு மிக நெருக்கமாக அமைந்துவருகிறது. இந்நிலையில் கணினியின் வேகம், அதன் இயந்திரத்தன்மை, உள்ளிடும் நிலையில் ஏற்படும் கைபிசகல்கள், ஆகியன கருதி சில பிழைகளும் நேர்ந்துவிடுகின்றன. இந்தப்பிழைகளைக் களைந்து நலமான தமிழை வெளியிட தேர்ந்த பிழைதிருத்தி மென்பொருள்கள் தேவைப்படுகின்றன. இத்தேவை பெரிதும் உணரப்பெற்று வந்தாலும், இத்தேவையை முழுவதுமாக அமைத்துக்கொள்ள இயலவில்லை.
எம்.எஸ் வேர்டு என்ற சொல் செயலி வழியாகத்தான் தமிழை உள்ளிடுவதும் வெளியிடுவதும் பெருமளவில் நடைபெற்று வருகிறது. இச்சொல் செயலி ஆங்கில சொல், தொடர் பிழைகளை வசதிகளைப் பெற்றிருக்கிறது. இதனைக் கொண்டு – தமிழ்ச் சொல், தொடர் பிழைகளை நீக்க இயலாது. எனவே இதற்கென தனித்த மென்பொருள் உருவாக்கப்பட வேண்டிய நிலை ஏற்பட்டது.
தற்போது சிற்சில பிழைதிருத்தி மென்பொருள்கள் கிடைத்துவருகின்றன. சந்திப்பிழைகளைக் களைய நாவி, எழுத்துப்பிழைகளைக் களைய வாணி சொற்திருத்தி ஆகியன ஓரளவிற்குப் பிழைகளைத் திருத்தி உதவுகின்றன. தெய்வசுந்தரம் அவர்கள் வடிவமைத்துள்ள மென்தமிழ் (அம்மா மென்பொருள்)  சொல் செயலியாகச் செயல்படுகிறது. இதனுள் பல வசதிகள் உள்ளன. இருப்பினும் ஒரு முமுமையான பிழை திருத்தி தமிழ்க் கணினி உலகத்திற்கு இன்னும் கிடைக்கவில்லை என்பதே உண்மை. தற்போது கிடைத்துவரும் பிழைதிருத்திகள் பற்றிய மதிப்பீட்டுக் கட்டுரையாக இக்கட்டுரை அமைகிறது.
வாணி (சொல்திருத்தி)
Siragu pizhaithiruththi1
தமிழ் சொற்களில் உள்ள பிழைகளைத் திருத்திக் கொள்ள வாணி (http://vaani.neechalkaran.com/) என்ற மென்பொருள் பெரிதும் உதவுகின்றது. இம்மென்பொருளில் ஒருங்குறி எழுத்துரு உள்ளீடுகள் மட்டுமே திருத்த இயலும்.  நேரடியாகவும் உள்ளீடு செய்து பிழை திருத்திக் கொள்ளலாம். அல்லது வெட்டி ஒட்டியும் பிழை திருத்திக்கொள்ளலாம். ‘“வாணி எழுத்துப் பிழை திருத்தியை உருவாக்க நான்கு வருடம் ஆகிவிட்டது. வார்த்தைகளைத் திருத்துவதற்காக இதை வடிவமைத்திருக்கிறேன். அது மட்டுமல்ல; இது முந்நூறுக்கு மேற்பட்ட பிறமொழிச் சொற்களைகளையும் அடையாளம் கண்டுகொள்ளும். அந்தப் பிறமொழி சொற்களுக்கு இணையான தமிழ்ச் சொற்களையும் இந்தத் திருத்தி பரிந்துரைக்கும்” என்று நீச்சல்காரன் (ராஜாராமன்) இச்சொல் திருத்தி பற்றி உரைக்கின்றார்.
வாணி சொல் திருத்தி வழியாக இரண்டாயிரம் சொற்களை ஒரே நேரத்தில் திருத்திக் கொள்ள இயலும். இந்த அளவிற்குமேல் சொற்கள் உள்ளிடப்படும் நிலையில் அதனை இம்மென்பொருள் ஏற்காது. மேலும் இதனுள் மூன்று சுட்டிக்காட்டல் அமைந்திருக்கிறது. அடிக்கோடு, சிவப்பெழுத்து, பச்சையெழுத்து ஆகியன அவையாகும். அடிக்கோடு என்பது திருத்தும் சொல்பட்டியலில் சொல் இல்லை என்ற அடையாளத்தைக் குறிக்கிறது. சிவப்பெழுத்து என்பது பிழையான சொல்லைக் காட்டி அதற்கு மாற்றாக பிற பரிந்துரைச் சொற்களைத் தரும். பச்சையெழுத்து தானாகத் திருத்திக்கொள்ளும் தன்மை பெற்றது. அதாவது இந்தச்சொல் தவறு என்பதை இது உறுதிப்படுத்தும். இம்மென்பொருள் வழியாக சொற்பிழைகளைக் கண்டறியமுடியம் என்பதே நல்ல வெற்றி. பிழையான சொற்களைக் கண்டறிந்துவிட்டால் அதனைத் திருத்திக்கொள்வது எளிமை என்ற நிலையில் இம்மென்பொருள் உதவிகரமாக அமைகின்றது.
நாவி (சந்திப்பிழைதிருத்தி)
Siragu pizhaithiruththi2
தமிழில் நிலைமொழி வருமொழி ஆகிய இரண்டில் தொடர்பில் சில இணைப்புகள் சில திரிபுகள் அமையும். அவற்றைச் சந்தி என அழைப்பது முறை. அந்தச் சந்திப்புகளில் ஏற்படும் பிழைகளைத் திருத்திக் கொள்ள நாவி என்ற மென்பொருள் பயன்படுகிறது. http://dev.neechalkaran.com/p/naavi.html#.WVr6hcbhXIU இதன்வழியாக மரபுப்பிழை, சந்திப் பிழைகளை ஓரளவு இனம் கண்டு களைய முடிகின்றது. இதுவும் ஒருங்குறி எழுத்துரு உள்ளீட்டை மட்டுமே ஏற்கிறது. இதனுள்  பச்சை வண்ணம், சிவப்பு வண்ணம், நீல வண்ணம் ஆகியன பயன்படுத்தப்பெற்றுள்ளன. பச்சை வண்ணம் என்பது சந்தேகத்திற்கு இடமானது. சந்தியில் ஒற்று மிகும் மிகாது என்பதை ஆய்ந்தறியவேண்டும். சிவப்பு வண்ணமானது ஒற்றுப் பிழையைச் சுட்டுவது. நீலம் மரபுப் பிழையைச் சுட்டுவது. இதன் வழி சந்திப் பிழைக்கான இடங்களைத் தேர்ந்து கொள்ள முடிகின்றது. இவற்றை ஆராய்ந்து சரி செய்து கொண்டால் நல்ல தமிழ் எழுதும் முறை கைவந்துவிடும். இதனை உருவாக்கியவர் நீச்சல்காரன் என்ற ராஜாராமன். இது உருவாதற்குக் காரணம் உண்டு. ராஜாராமனின் இணைய எழுத்துகளில் அதிக சந்திப்பிழை காணப்படுவதை ஓர் அன்பர் சுட்டிக் காட்ட அதன் விளைவாக பிழையற தமிழ் எழுத இவர் இம்மென்பொருளை உருவாக்கினார். இதற்கு நன்னூல், தொல்காப்பியம் காட்டும் புணர்ச்சி விதிகள் உதவி புரிந்துள்ளன. இம்மென்பொருளில் பொருளறிந்து திருத்தும் முறை இல்லாத காரணத்தால் நூறு விழுக்காடு சரி செய்யும் என்ற நம்பிக்கையைப் பெற இயலவில்லை.
மென்தமிழ்
Siragu pizhaithiruththi3
பேராசிரியர் ந. தெய்வசுந்தரம் அவர்கள் உருவாக்கிய மென்தமிழ் சொல்லாளர் என்ற சொல் செயலி  தமிழைப் பிழையற எழுத உதவும் மென்பொருளாக விளங்குகிறது. இதனைக் கணினியில் நிறுவி, இதன்வழியாகவே உள்ளீடும் செய்யப்படவேண்டும். ஏறக்குறைய எம்.எஸ். வேர்டு சொல் செயலி போலவே இதனைத் தனிப்பட பயன்படுத்த இயலும்.   தமிழ்த் தட்டச்சு விசைப்பலகைகள்(Tamil Keyboards), ஒருங்குறி எழுத்துருக்கள்(Unicode Fonts), குறியேற்ற மாற்றி(Encoding Converter) சொற்பிழை திருத்தி(Spell Checker), சந்திப்பிழை திருத்தி(Sandhi Checker), தமிழ்ச்சொல் சுட்டி (Tamil Word Suggester), அகராதிகள்(Dictionaries), அகரவரிசைப்படுத்தம் (Sorting), சொல்லடைவு (Indexing), துணைநூற்பட்டியல் கருவி (Bibliography), எண்<->எழுத்து மாற்றி(Number to Word Converter) போன்ற பல வசதிகளுடன் இச்செயலி அமைக்கப்பெற்றுள்ளது. இது தமிழக அரசின் பரிந்துரையைப் பெற்றுத் தற்போது அம்மா மென்பொருள் என்ற நிலையில் விற்பனைக்குக் கிடைக்கிறது. இதன் தற்போதைய விலை ரூபாய் முன்னூறு. இதனைப் பெற்றுக் கணினியில் நிறுவி பயன்படுத்தலாம். இதன் வெற்றி என்பதும் தொன்னூறு விழுக்காட்டு அளவில் இருப்பதாக கணினித் தமிழ் அறிஞர்கள் குறிக்கின்றனர்.
 இவ்வகையில் பல பிழை திருத்திகள் தமிழ்க் கணினி உலகிற்கு வந்து கொண்டிருக்கின்றன. பயனீட்டாளர் தேவையை இவை ஓரளவு நிறைவு செய்கின்றன. இன்னும் இத்துறை வளரவேண்டு்ம். இலக்கணப் பிழைத் திருத்தி என்ற நிலையில் பிழை திருத்திகள் வர வேண்டும்.  அவற்றை எதிர்நோக்கிக் கணினிப் பயன்படுத்துனர் காத்திருக்கின்றனர்.

3 கருத்துகள்:

பெயரில்லா சொன்னது…

இதுவரை பயன்படுத்தி பார்த்ததில்லை.பயன்படுத்தி பார்த்துவிட்டு இதன் நிறை குறைகளை பதிவிடுகிறேன். ஆயினும் தமிழ் எழுத்து உலகில் இது வரவேற்கத்தக்க மிகப்பெரிய முயற்சி👏உருவாக்கியவர்க்கும் வெளியிட்டவர்க்கும் நன்றிகள் பல🙏

முனைவர் கி. அய்யப்பன் சொன்னது…

சிறப்பான...பயனுள்ளக் கட்டுரை

பெயரில்லா சொன்னது…

புரட்சி கலைஞர்ரே புன்னைகையின் மன்னனே புவித்ததாய்ன் தவபுதல்வனே கார்த்திகைக்கு பின் மழையும் இல்லை கர்ணன்க்கு பின் கொடையும் இல்லை உனது பின் கொடுத்தே சிவ வந்த உன் கரங்கள் மார்கழியின் மாதவன்... அடிசேர்ந்ததே...

TOLON

பாசமுள்ள அன்பு தம்பிகள்

ஜலபதி

மாவட்ட செயலாளர்

சிவா ஒன்றிய செயலாளர் மு.மணிகண்டன்

தேர்தல் பணிகுழு உறுப்பினார் மாப்படுகை மயிலாடுதுறை