செவ்வாய், ஏப்ரல் 18, 2006

மண்ணும் மரமும்



பழைய மாளிகை
ஏலத்திற்கு வந்தது

பத்து பன்னிரண்டு
சுத்தத் தேக்குத் தூண்கள்

நான்கு
மிகப் பெரிய கதவுகள்

எதற்கும்
எந்தக் குறைபாடும் வராமல்
லாரியில் ஏற்றப்பட்டன.

உடைந்த மாளிகை
இடிந்த செங்கற்கள்
உதிர்ந்த காரைகள்

ஒரே ஒரு தூண்மட்டும்
உளுத்துப்போய்

ஏலம் எடுத்தவன்
அதனை
எதற்கும் ஆகாது
என்று விட்டுவிட்டான்

உளுத்த மரத்திற்கு
இப்போது உற்சாகம்

நான்தான்
இந்த மாளிகையைத் தாங்கி வந்தேன்
ஏதோ போதாத காலம்
ஏலம் விடப்பட்டு விட்டது

என்னைத்தான்
முதன்முதலாக
இந்த மாளிகையில் நட்டார்கள்

மற்றவர்கள்
எல்லாம் பிறகு வந்தவர்கள்
அவர்கள் எல்லாம்
இப்போது லாரியில்
ஏறிப் போய்விட்டார்கள்

அவர்களிடம்
குறைகள் ஏராளம்
குறையே இல்லாதவன்
நான் மட்டுமே

நான்மட்டுமே
இந்த மாளிகை
வந்த நாள் முதல் இருக்கிறேன்
இனிமேலும் இருப்பேன்

நான் வானத்தையும்
தாங்குவேன்
பூமியையும் தாங்குவேன்

காற்றே
என்னைக் கேட்டுத்தான் இயங்கும்

அதற்கு வழி தெரியாது
என்வழிப்படி தான் அது நடக்கும்

என்னைவிட
உறுதியானவன்
உலகத்தில் இல்லை

என்னைவிட நிறைவானவன்
யாரும் இல்லை

பேசிக் கொண்டிருந்த
உளுத்த மரத்தில் சிறுவன்
ஒருவன்
சிறுநீர் கழித்து
மானபங்கப் படுத்தினான்

அப்போதும் அது பேசியது
முன்னொரு காலத்தில்
இப்படித்தான்
ஒரு சிறுவன் வந்தான்,,

கருத்துகள் இல்லை: