வியாழன், அக்டோபர் 29, 2015

சைவத்தின் தொன்மை


சமயம் என்பது ஓர் அமைப்பு, நிறுவனம். இது அமைப்பாகவும் நிறுவனமாகவும் வளர்வதற்கு முன்னால் தனிமனிதனின் விழைவாக இருந்திருக்க வேண்டும். தனிமனித விழைவு விருப்பம் அவன் குழுவால் ஏற்கப்படும்போது அது சற்று விரிகிறது. குழுவிலிருந்து மற்ற குழுக்களுக்கு அது விரிய இன்னும் பரவலாகிறது. நாடுகளுக்கு விரிய உலக அளவில் விரிகிறது. தனிமனித விழைவில் தொடங்கிய இந்தப் பயணம் உலகை அடைய எத்தனை நூற்றாண்டுகள் கடந்திருக்க வேண்டும். இந்நூற்றாண்டுகளில் ஏற்ற இறக்கங்கள், அழிவுகள், பேரழிவுகள் போன்ற பலவற்றைச் சந்தித்திருக்க வேண்டும்.
இன்றைக்குப் பல நாடுகளில் சைவ சமயச் சின்னங்களும், கோயில்களும், வழிபாட்டு மரபுகளும் பெருமளவில் பரவிக் கிடப்பதைக் காணும்போது அதன் ஆதி நிலை என்பது எப்படி ஒற்றைமனிதனின் சிந்தனையில் உதித்தது என்பதை அறியவேண்டியுள்ளது. அந்த ஒற்றை மனிதன் கண்ட மெய்ஞ்ஞானம் உலக மெய்ஞ்ஞானமாக ஏற்கப் பெற்றுப் பரவி இன்றைக்கும், என்றைக்கும் மெய்ஞ்ஞானப்பெருவெளியில் தனித்த இடம் பெற்றுள்ளது என்றால் அந்தத் தனிமனிதன் கண்டுபிடித்த இறைஞானம் பெரிதா, தனி மனிதச் சிந்தனை பெரிதா என்ற எண்ணம் தோன்றுகிறது. இருப்பினும் சைவத்தின் மூல விதையை ஊன்றிய தனிமனிதன் யாரெனத் தெரியாமல் இருப்பதே சைவத்தின் சிறப்பாகின்றது. புத்தமதம் புத்தரின் விருப்பத்தை ஒட்டியது என்றால், வர்த்தமானரின் சமணம் அவரின் விருப்பத்தை ஒட்டியது என்றால் சைவம் என்பது எந்தத் தனிமனிதனின் விருப்பம் என்பதற்கு என்றைக்குமே பதிலில்லை. ஆதியும், அந்தமும் இல்லாத அருட்பெருஞ்சோதியை மனித குலத்தின் ஆதியிலேயே பெயரறியா மனிதனொருவன் கண்டறிந்து கொண்டுள்ளான். சிவனே தானே சைவத்தை உருவாக்கியிருக்கிறான். அவனே தன்னை அர்ச்சித்துக் கொண்டிருக்கிறான். ஆதியும் அந்தமுமில்லா அருட்பெருஞ்சோதியாக அவன் இருக்கிறான். இந்த நிலையில் ஒவ்வொரு தனிமனிதரின் ஆன்மபலத்துக்குள்ளும் அச்சிவன் இருந்து கொண்டிருக்கிறான்.
தமிழுக்குச் சங்கம் வைக்கிறார்கள். அச்சங்கத்தின் முதல் புலவன் இறையனார் என்றால் அந்த முதல் மனிதனும் இறையானார்தானே. தமிழகத்தில் இறையனார் என்ற ஒரு பெயரே இருந்திருக்கிறது என்றால் அந்தப் பெயரே சிவனுக்கு ஆகியது என்றால் தமிழகத்தில் சங்ககாலத்தில் வேறு தெய்வமில்லை என்பதுதானே பொருள்.
தனித்த மூலத்தில் இருந்து கிளம்பி, என்றைக்கும் உலகை ஆக்கி, அழித்து, இயக்கி நிற்கும் பரம்பொருள் தன்மை உடைய சிவனே முதல்வன் என்றால் அவனே சைவத்தின் தோற்றுவாய் என்பதில் மறுகருத்திற்கு இடமிருக்கப் போவதில்லை.
இன்றைக்கு உலக அளவில் பரவியுள்ள சைவ சமயத்தின் ஆதி விதையைத் தேடிப் பயணிப்பது என்பது பல்வேறு யுகங்கள், நாகரீகங்கள் கடந்த முயற்சியாகும். இம்முயற்சியில் எழுத்துச் சான்றுகள், புதைபொருள் சான்றுகள், பண்பாட்டுச் சான்றுகள் போன்றவற்றையும் உட்படுத்தியாக வேண்டியுள்ளது. குறிப்பாக எழுத்து வடிவம் என்றபோது வேதங்களையும், புதைபொருள் சான்றுகள் என்றபோது ஹரப்பா, மொகஞ்சதாரோ ஆகியவற்றில் கிடைத்த பொருள்களையும், பண்பாட்டுச் சான்றுகள் என்றபோது தற்போது எச்சமாகக் கிடக்கும் வழிபாடு சார்ந்த பண்பாடுகளையும் உட்படுத்திச் சைவ சமயத்தின் பழமையை நிறுவவேண்டியுள்ளது.
சிந்து சமவெளி நாகரீகமும் – சைவ சமய அடையாளங்களும்:
ஆங்கிலேயர்களின் இருப்புப்பாதை பதித்தல் பணியின்போது தற்போதைய பாகிஸ்தான் பகுதிகளை ஒட்டி அமைந்த சிந்துசமவெளிப் பகுதிகளில் புதையுண்ட இரு நகரங்களைக் கண்டுபிடித்தார்கள். அந்த நகரங்கள் தொன்மைக் காலம் நாகரீகச் சான்றுகளாகக் கொள்ளப்பெற்றன. சிந்துசமவெளி நாகரீகம் என்று அழைக்கப்பெற்று அதன் மீதான ஆய்வுகள், அகழ்வு ஆய்வுகள் தொடங்கப்பெற்றன.
சிந்து சமவெளி நாகரீகம் திராவிட நாகரீகம் என்று ஆய்வாளர்களால் உறுதிசெய்யப்பட்டுவிட்டது. அதன் கலை, பண்பாடு, சமயம் போன்ற பற்றிய பல கருத்துகள் ஆய்வாளர்கள் வாயிலாக வெளியிடப்பெற்றது. அங்கு கிடைத்த ஒரு முத்திரை மிக முக்கியமான சமயச் சான்றாக விளங்குகின்றது.
hindus valley
பசுபதி வடிவ முத்திரை
1930 ஆம் ஆண்டில் இப்பகுதியை ஆய்வு செய்த ஜான் மார்சல் என்ற அறிஞர் அங்கு கிடைத்த ஒரு முத்திரையை யோகி வடிவ முத்திரை என்றும். யோகிகளுள் சிறந்தவரான சிவனின் உருவம் அது என்றும் இந்த முத்திரையைக் குறித்து அறிவித்தார். இரு கொம்புகளைத் தாங்கிய நிலையில் கால்களை மடித்து அமர்ந்த கோலத்தில் விலங்கினங்கள் சூழ இம்முத்திரை அமைந்துள்ளது. இதன் காரணமாக இதனை அவர் சிவபெருமானின் உருவம் என்றார்.
ஆனால், பின்னால் வந்த அறிஞர்கள் பலர்இது பெண் தெய்வம் என்றும், புத்த சமயத்தின் ஆதிவடிவம் என்றும், சமணத் தீர்த்தங்கரரின் முன் நிலை என்றும் பல்வேறு கருத்துகளை வெளியிட்டனர். ஆய்வு உலகில் இன்னமும் இது குறித்தான சர்ச்சைகள் நிலவி வருகின்றன.
இவற்றை ஒருபுறம் வைத்துக்கொண்டாலும் சிந்துசமவெளிப் பகுதிகளில் பல்வேறு சிவலிங்க வடிவங்கள் கிடைத்துள்ளன.
hindus valley2
இந்த உருவச் சான்றுகளை வைத்துப் பார்க்கும்போது சிந்து சமவெளி நாகரீக காலத்திலேயே சிவலிங்க வழிபாடு இருந்துள்ளது என்பது தெரியவருகிறது. இதன் காலம் ஐயாயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்தது என்கிறார்கள் ஆய்வாளர்கள். அதாவது இப்போது இருக்கும் இரண்டாயிரம் ஆண்டுகளைத் தள்ளிவிட்டுப் பார்த்தால் கி. மு. மூவாயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்தது. சைவ சமயம் என்பது தெரியவருகிறது.
ஆறாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய சிந்துசமவெளியில் சைவ சமயப் பண்பாட்டு எச்சங்கள் இருந்துள்ளன என்றால் அதற்கு முன்போ சைவ சமயம் தோன்றியிருக்க வேண்டும் என்பது குறிக்கத்தக்கதாகும்.
வேதங்கள் சுட்டும் பழமை:
இந்தியாவின் மிகப் பழமை வாய்ந்த எழுத்தாவணங்கள் வேதங்கள் ஆகும். நால்வகை வேதங்களில் யஜுர் வேதத்தில் மையப்பகுதியில் அமைந்திருப்பது ருத்ரம் என்பதாகும். இது சமகம் நமகம் என்று இருபிரிவுகளை உடையது. சமகம் என்ற பகுதியில் நமக்கு வேண்டும் பொருள்களின் பட்டியலும், நமகம் என்பதில் சிவபெருமானுக்கான பெயர்கள் பலவும் தரப்பெற்றுள்ளன. இவ்வேதப் பகுதி தவிர ரிக் வேதத்திலும் சிவபெருமான் பற்றிய குறிப்புகள் காணப்படுகின்றன. ருத்திரன் என்ற பெயரைச் சிவனாகக் கொள்ளலாம் என்றாலும் சிவனுக்கு உரியப் பல தன்மைகளுக்கு முரணாக சில பகுதிகளும் ருத்திரத்தில் காணப்படுகிறது. பசுபதி – விலங்குகளின் தலைவன் என்று யஜுர் வேதம் ருத்திரனைக் குறிப்பிடுகிறது. அம்பிகாவின் உடன் பிறந்தவன் ருத்திரன் என்றும் குறிப்புகள் காணப்படுகின்றன. இவற்றால் ருத்திரன் வேறு சிவன் வேறு என்று வேற்றுமை பாராட்டினாலும் பெரும்பாலும் ருத்திரன் என்ற பெயர் சிவனுக்கு உரியது என்பதே சரியாகும்.
யஜுர், ரிக் வேதங்களில் சிவன் பற்றிய குறிப்புகள் இடம்பெற்றிருப்பதால் சைவத்தின் அடிப்படைகளை வேதங்களே சொல்லியுள்ளன என்ற அடிப்படையில் சைவம் வேதகாலத்திற்கும் முந்தைய சமயம் என்பதும், அது ஆரியர் வருகைக்கு, ஆரிய எழுச்சிக்கு முன்பே இருந்த திராவிட கலாச்சாரம் என்பதும் இவற்றின் வழி தெளிவாகின்றது.
பண்டைத்தமிழ்ப் பனுவல்களின் வாயிலாகப் பெறப்படும் சைவ சமயத் தொன்மை தொல்காப்பியமும், சங்க இலக்கியங்களும் தமிழின் பழமையான பனுவல்கள் ஆகும். இவற்றில் பல இடங்களில் சிவபெருமான் பற்றிய குறிப்புகள் காணப்படுகின்றன. தொல்காப்பியத்தில் கடவுள் என்ற சொல் காணப்படுகிறது.
காமப்பகுதி கடவுளும் வரையார் (தொல்காப்பியம். புறத்திணையியல், 81) என்று தொல்காப்பியர் கருதும் கடவுள் முழு முதற் கடவுள் என்று கொண்டால் அவர் சிவபெருமான் என்று கொள்வது பொருத்தமானதாகும்.
‘‘கொடிநிலை, கந்தழி, வள்ளி என்ற 
வடுநீங்கு சிறப்பின் முதலான மூன்றும் 
கடவுள் வாழ்த்தோடு கண்ணிய வருமே’’ 
(பொருளதிகாரம், புறத்திணையியல், 85)
என்ற தொல்காப்பிய நூற்பாவிலும் கடவுள் என்ற சொல் பயின்று வந்துள்ளது. இவை அனைத்தும் சிவபெருமானைக் குறிப்பாகக் கொள்ளலாம்.
மற்றொரு இடத்தில்,
‘‘வழிபடு தெய்வம் நிற்புறங் காப்ப 
பழிதீர் செல்வமொடு வழி வழி சிறந்து 
பொலிமின் என்னும் புறநிலை வாழ்த்தே’’ 
(தொல்காப்பியம், பொருளதிகாரம், 415)
என்ற நூற்பா இடம்பெற்றுள்ளது. இதில் உள்ளவழிபடு தெய்வம் என்ற சொல் வழிபடக் கூடிய தெய்வம் உண்டென்று சொல்வதன் காரணமாக அது சிவபெருமானைக் குறித்தது என்று கொள்ளமுடிகின்றது.
இவ்வாறு தொல்காப்பிய காலத்தில் தெய்வம், கடவுள் என்ற பொதுப்பெயர்கள் அக்காலத்தில் வழிபடு தெய்வமாக இருந்த சிவபெருமானைக் குறித்தது என்று முடிவு கொள்ளவேண்டியுள்ளது.
சங்க இலக்கியங்களில் சைவ சமயத்தின் தொன்மை பற்றிய செய்திகள்:
சங்க இலக்கியங்களில் சிவன் பற்றிய பல குறிப்புகள் காணப்படுகின்றன.
“நீரும் நிலனும் தீயும் வளியும் 
மாக விசும்போடு ஐந்துடன் இயற்றிய 
மழுவாள் நெடியோன் தலைவனாக’’ 
(மதுரைக் காஞ்சி453-455).
என்ற சங்க இலக்கியப் பகுதியில், நெடியோன் என்று சிவபெருமான் குறிப்பிடப் பெறுகிறார்.
இமையவில் வாங்கிய ஈர்ஞ்சடை யந்தணன் 
உமை யமர்ந் துயர்மலை இருந்தனனாக 
ஐயிரு தலையின் அரக்கர் கோமான் 
தொடிப்பொலி தடக்கையிற் கீழ்புகுத் தம்மலை 
எடுக்கல் செல்லாது உழப்பவன் போல…….. 
(கலித்தொகை, 38)
என்று கலித்தொகையில் இராவணனை வென்ற புராணச் செய்தி குறிப்பிடப்படுகிறது. இவ்வாறு பல நிலைகளில் சிவன் பற்றிய குறிப்புகள் சங்க இலக்கியங்களில் காணப்படுகின்றன.
இம்முன்னோடி இலக்கியங்களை முன்வைத்து இதன் பின்பு எழுந்த சைவத் திருமுறைகள், சைவசிந்தாந்த நூல்கள், சிற்றிலக்கியங்கள் காப்பியங்கள் போன்றன சைவத்தின் பெருமையையும், வலிமையையும் உலகிற்கு எடுத்துரைத்தன.
அவற்றைச் சைவ பெருமக்கள் தன் உள்ளத்திலும் உடலிலும் உயிரிலும், உணர்விலும் கலந்து அனுபவிப்பதால் சிவானுபவம் பெருகுகிறது. தொன்மை வளருகிறது.
————————————————————————–

1 கருத்து:

பெயரில்லா சொன்னது…

சைவமே சமயம் சிவமே தெய்வம் என்ற விண்ணார்ந்த முழக்கத்தோடு, சைவத்தின் தொன்மையை நமது இறையனார் தான் சொல்ல வேண்டும், என்னுடைய வேண்டுகோள் தொல்காப்பியனுடைய குருநாதர் சித்தர் கோன் அகத்திய மாமுனிவர், அகத்திய மகாமுனிவருடைய பாடல்களை ஆய்வு செய்தால் இன்னமும் நாம் தெளிவாகலாம்