திங்கள், ஆகஸ்ட் 02, 2010

நகரத்தார்களும் ஆன்மீகமும்




நகரத்தார்கள் என அழைக்கப்படும் தேவகோட்டை மற்றும் அதனைச் சார்ந்து வாழும் செட்டியார்கள் ஆன்மீகத்தை வளர்ப்பதில் பெரும்பங்கு வகித்து வருகின்றனர். நாடு கடந்தும் அவர்கள் பக்திப் பணியால் ஆன்மீகத்தை வளர்த்து வருகின்றனர். கோயிலைச் சார்ந்து வாழும் குடி என்று நகரத்தார்களைக் குன்றக்குடி அடிகளார் போற்றி உரைத்துள்ளார்.


ஒன்பது நகரக்கோயில்கள்
இவர்கள் ஒன்பது நகரக்கோயில்களைச் சார்ந்துத் தங்கள் வாழ்வினை அமைத்துக் கொண்டுள்ளனர். பிள்ளையார்பட்டி, வயிரவன் கோயில், மாத்தூர், இரணிய+ர், இளையாத்தங்குடி, நேமம், இலுப்பைக்குடி, வேலங்குடி, சூரக்குடி என்பன அவ்வொன்பது கோயில்களாகும்.. இவை நகரத்தார்தம் ஆளுமையில் இன்றும் உள்ளது பெருமைக்கு உரிய செய்தியாகும்.
இவ்வொன்பது கோயில்களின் அடையாளத்தில் இவர்களின் இனப்பிரிவானது அமைக்கப் பெற்றுள்ளது. இவ்வொன்பது கோயில்களில் சில கோயில் பிரிவினரிடம் பெண் கொண்டும் கொடுத்தும் கொள்ள முடிகின்றது. சிலவற்றில் சகோதரத்தன்மை கருதிப் பெண் கொண்டு- கொடுக்கிற முறைமை இல்லாமல் உள்ளது. இவ்வாறு கோயிலின் சார்பில் இனத்தின் அடையாளத்தைப் பெற்றிருப்பதன் காரணமாக இவர்கள் பக்தி சார்புடையவர்கள் என்பது தௌ;ளத் தெளிவாகின்றது. பாண்டி நாட்டரசன் இவர்கள் பொறுப்பில் ஒன்பது கோயில்களை நிர்வகிக்கக் கொடுத்துள்ளமையில் இருந்து இவர்கள் மீதான நம்பிக்கை தெரியவருகிறது.


நகரக்கோயில்கள்
இந்தக் கோயில்களை வணங்கினாலும் இவர்கள் இந்தக் கோயில்கள் உள்ள ஊர்களில் இருந்து மாற்று இடங்களில் வாழவேண்டிய நிலைக்கு ஆளாயினர். அப்பொழுது சிவன் கோயில்களைத் தங்கள் தங்கியுள்ள ஊர்களில் கட்டிக் கொண்டுள்ளனர். இக்கோயில்கள் பெரும்பாலும் மதுரை மீனாட்சி அம்மன் கோயில் வடிவமைப்பில் அமைக்கப் பெற்றுள்ளன. பெரும்பாலும் மதுரைப் பெயரையே ஏற்றும் அத்தெய்வங்களுக்கு வைத்துள்ளனர். இந்நகரக் கோயில்களில் ப+சையின்பொழுது முதல் மரியாதை என்பது அயலூர் நகரத்தார்களுக்கு இன்றளவும் வழங்கப் பெற்று வருகின்றது. இக்கோயில்களுக்கு நகரச் சிவன் கோயில் என்று பெயரும் ஏற்பட்டுள்ளது. நகரத்தார் கட்டிய கோயில் என்றும், நகரத்தில் உள்ள கோயில் என்றும் இதனைப் பொருள் கொள்ளலாம். இக்கோயில்களின் நடைமுறைச் செலவு, வாகன அலங்கரிப்பு போன்றவற்றை இக்குலத்தார் ஏற்றுக்கொண்டு நடத்தியும் வருகின்றனர். இதன் காரணமாக வெள்ளி, தங்கம், கல், இரும்பு போன்றவற்றில் செய்யப்பட்ட கலைநயமிக்க கோயில் பயன்படுபொருள்கள் ஆக்கப் பெற்றன. இவ்வாறு கோயில்கலை வளர இவர்கள் பெரும்பாடு பட்டுள்ளனர்.


வேல் வழிபாடு
ஆதி வழிபாடு என்பது வேல் வழிபாடே ஆகும். அதாவது சங்ககாலத்தில் இருந்த வேலன் வெறியாட்டு என்ற வழிபாட்டு முறையில் வேல் கொண்டு கடவுள் சக்தி பெற்று வேலன் என்பவன் ஆடுவான். இந்த அமைப்பில் தற்போதும் வேல் கொண்டு வழிபாடு நிகழ்த்தும் நடைமுறை நகரத்தாரிடம் உள்ளது. தேவகோட்டை, மேலைச்சிவபுரி போன்ற இடங்களில் இருந்து ஆண்டுதோறும் செல்லும் பழனி நடையாத்திரையில் இவ்வேல் வழிபாடு சிறப்பிற்கு உரியதாக உள்ளது.

படையல் வழிபாடு
படையலிட்டு வழிபடுவது என்பது பழைய வழிபாட்டு முறையாகும். உணவும், உடையும் மனிதனின் அவசியத் தேவையாகும். இவற்றைப் படைத்து வழிபடும் வழிபாடு படைப்பு எனப்படுகிறது. நகரத்தார்கள் இந்த முறையிலும் தெய்வங்களை வணங்கி வருகின்றனர். குடும்ப இரத்த உறவுள்ள பெரியவர்கள், கன்னிப்பெண்கள் எதிர்பாராமல் இறந்து போனால் அவர்களின் நினைவாக படையலைச் செய்வது இன்னமும் இவர்களின் வழக்கில் உள்ளது. துணி அடுக்கி வைத்து அடுத்த படையலுக்குப் பயன்படுத்தும் வழக்கமும், அந்தத் துணிவைக்கும் பிரம்புக்கூடைக்கு பேழை என்ற பெயரும் இன்னமும் வழங்கி வருருகிறது. ஏறக்குறைய குடும்பப் படைப்பு என்று இது தொடங்கி ஊர் பங்காளிகள் கொண்டாடும் படைப்பாக வளர்ந்துள்ளது. அதாவது குடும்பம் பெருகப் பெருக அவர்கள் உடன் பங்காளிகளாகிப் பின் ஊர் பங்காளிகளாக ஆகிப் படைக்கும் முறை இதிலுண்டு. இதன் காரணமாக படைப்பின் மக்கள் அளவினைக் கொண்டு அதன் பழமையைக் கணக்கிட்டுவிட முடியும்.

இல்லறத்தில் இருந்துத் துறவு
இல்லறத்தில் இனிமை கண்டபின் துறவு ப+ணுவது என்பது தமிழ் இலக்கண நூல்கள் தரும் முறைமை ஆகும். இந்நிலைப்பட்ட வாழ்வு இவர்களிடம் காணப்படுகிறது. மணநாளில் மணிமுடி கொண்டு மாப்பிள்ளை அலங்காரம் செய்யப் பெறுவார். அறுபதாம் ஆண்டு நிறைவை இவர்கள் மணிவிழா எனக் கொண்டாடுகிறார்கள். இவர்களின் பெரும்பான்மை நடைமுறை மற்ற குலங்களிலும் ஏற்கப் பெற்றுள்ளது. இந்த அறுபதாம் ஆண்டு நிறைவில் வைக்கப்படும் அணியப்பெறும் முடி, அணிகள் போன்ற வாழ்வின் நிறைவை, துறவை , ஆன்மீக நிலையை எடுத்துரைப்பதாக அடையாளமாக உள்ளது. இந்நடைமுறை சமண சமய வயப்பட்டதாகும். இம்மதத்தில் இருந்து இவர்கள் இதனைப் பெற்றிருக்க வேண்டும்.
அறுபதாண்டு மணிவிழா பெற்றவர்கள் உபதேசம் பெற்று தினமும் சிவப+சை செய்ய வேண்டும் என்பது கட்டளையாகும். இந்நிலையில் தங்கள் வாழ்வு முழுவதும் பக்திச் சிந்தனையிலேயே இருக்கின்றனர் என்பது அறியத்தக்கது.


திருநீற்றின் வழி நிற்றல்
ஞானசம்பந்தர் திருநீற்றின் பெருமையை உலகறிய வைத்தார். கூன்பாண்டியனின் கூனை நீக்கியது திருநீறு. இதன் பெருமையை உணர்ந்த நகரத்தார்கள் திருநீற்றின் வழியில் தம்மை நடத்திக் கொண்டு வருகின்றனர். குழந்;தைகளின் உடல் நலம் பெறவும், பயம் ஏற்படும்போதும், பலவீனம் ஏற்படும்போதும் இவர்கள் திருநீற்றையே மந்திரம் என்றும், திருநீற்றையே விடுதலை என்றும் அவர்கள் கொள்ளுகின்றனர்.


சிறுதெய்வ வழிபாடு
நகரத்தார்கள் கருப்பர், முன்னோடியான் போன்ற சிறு தெய்வங்களையும் வணங்கி வருகின்றனர். ஏறக்குறைய நூற்றி எட்டு சிறு தெய்வங்களை இவர்கள் வணங்கி வருவதாக அறியமுடிகின்றது. இத்தெய்வங்களுக்கு கள், அசைவம் வைத்துப் படைக்கும் முறையும் இவர்களிடம் உண்டு. இத்தெய்வங்களுக்கு முடி கொடுத்தல், கரும்புத் தொட்டில் கட்டுதல் போன்ற நடைமுறைகளை அவர்கள் செய்து கொள்ளுகின்றனர்.


முருக வழிபாடு
முருக வழிபாடு இவர்களின் சிறந்த வழிபாடு ஆகும். சிங்கப்ப+ரில் இவர்கள் காவடி செலுத்தும் அழகு அதனை சிங்கப்ப+ரின் தேசிய விழாவாக ஆக்கியுள்ளது. அதுபோல ஆறுபடை வீடுகளுக்கும் இவர்கள் நடைபயணம் மேற்கொள்வது சிறப்பு. இது தவிர குன்று இருக்கும் இடமெல்லாம் குமரன் இடமென்றால் அங்கு நடைபயணம் மேற்கொள்வது இவர்களின் கடமையாகும். காவடி எடுத்தல் என்ற கடமையையும் இவர்கள் செய்து வருகினறனர். இவர்கள் காவடிக்குச் சர்க்கரை காவடி என்றும், அழகுக் காவடி என்றும் பெயர்கள் உண்டு. மயில் தோகைகள் சூழ பட்டுத்துணி உடுத்திப் பக்கவாட்டில் குஞ்சம் தொங்க அகல பட்டையுடன் வரும் இக்காவடிகள் பார்க்க அழகானவை. ஒருமுறை காவடி எடுக்கத் தொடங்கினால் அது வழக்கமாக தொடரும் நன்முறையும் இவர்களிடத்தில் உள்ளது.


இராமாயணம் படித்தல்
சிவ ஆலயங்கள் கட்டியதோடு வைணவ ஆலயங்களையும் இவர்கள் ஏற்படுத்தியும் நிர்வகித்தும் வந்துள்ளனர். அரியக்குடி பெருமாள் கோயில், காரைக்குடி கிருஷ்ணன் கோயில், பள்ளத்தூர் பெருமாள் கோயில் முதலியன இவ்வகையில் குறிக்கத்தக்கன. மேலும் இராமாயணம் படித்தல் என்னும் வழக்கதத்தை நூற்றாண்டுகளுக்கு மேலாக நகரத்தார் சமூகத்தினர் செய்து வருகின்றனர். இதற்காக இராமயண மடம் ஏற்படுத்திய பெருமை அவர்களுக்கு உண்டு. இம்மடங்களில் இராமாயணம் ஆண்டுதோறும் புராட்டாசி மாதத்தில் படித்து வருகின்றனர். இம்மாதத்தில் புலால் உணவு முற்றிலும் தவிர்க்கப்படுகிறது.


மடங்கள், வேதபாடசாலைகள், பசுமடங்கள்
தமிழகத்தின் புகழ் மிக்க தலங்கள் இருக்கும் இடங்களில் எல்லாம் இவர்கள் மடங்களைக் கட்டி வைத்துள்ளனர். காவிரிப்ப+ம்பட்டிணம் முதல் காசி வரை இவர்கள் கட்டியுள்ள மடங்கள் பெருமை வாய்ந்தவை. அழகுணர்வு மிக்கவை. கல், மரம், சுண்ணாம்புத் தொழில்நுட்பம் சார்ந்தவை. காசி விசுவநாதருக்கு தினம் தினம் ப+சைக்குரிய சந்தனம், ப+, முதலியன அடங்கிய மங்கல் பொருள்களை இவர்கள் வழங்கி வருகின்றனர். பந்த் நடைபெற்றாலும், ஊரடங்கு நடைபெற்றாலும் இவர்களின் இந்த ஊர்வலத்திற்குத் தடை ஏற்படாது என்ற நிலையில் இவர்களின் பக்தி காக்கப் பெற்றுள்ளது.
கோவிலூர், சாக்கோட்டை போன்ற பல இடங்களில் இவர்கள் வேதபாடசாலைகள் அமைத்து நடத்தி வருகின்றனர். திருவானைக்கோயில், திருக்கடைய+ர் போன்றவற்றில் இவர்கள் பசுமடங்கள் நிறுவி அவற்றினைத் தொடர்ந்து நடத்தியும் வருகின்றனர்.


நகரத்தார் ஆன்மீகவாதிகள்
பட்டினத்தார், காரைக்கால் அம்மையார், இயற்பகை நாயனார், பாடுவார் முத்தப்பர் போன்றவர்கள் நகரத்தார் குலம் சார்;ந்த ஆன்மீகவாதிகள் ஆவர். பண்டிதமணி கதிரேசன் செட்டியார், கண்ணதாசன், முரு. பழ ரத்தினம் செட்டியார், மலர் மணம் கமழச் செய்யும் சோம. செட்சுமணன் போன்றோரும் இவ்வகையில் நினைவு கூரத்தக்கவர்கள் ஆவர். மதுரை மொட்டைக் கோபுரம் கட்டக் காரணமான வயிநகரம் குடும்பத்தார் அறப்பணி நின்று நிலைக்கக் கூடியது. கோவிலூர் மடலாயம் ஆன்மீக வழிகாட்டும் பணிகளில் தன்னை அர்ப்பணித்துக் கொண்டுள்ளது.
நகரத்தார் இறைபணியை மகாகவி பாரதியார் பின்வருமாறு பாராட்டியுரைக்கின்றார்.
உண்மைதே தாரகமென்று உணர்ந்திட்டார்
அன்பொன்றே உறுதி என்பார்
வன்மையே குலதர்மம் எனக் கொண்டார்
தொண்டொன்றே வழியாக் கண்டார்
ஒண்மையுயர் கடவுளிடத்து அன்புடையார்
என்ற பாரதியாரின் வாழ்த்து இவர்களை இன்னும் வாழ்த்துவதாக உள்ளது.
கவியரசு கண்ணதாசன் இவர்களின் பக்திச்சிறப்பினைப் பின்வருமாறு பாராட்டுகின்றார்.
நடமாடும் சிவமாக
திருநீரும் சந்தனமும்
நதிபோல ப+சும் உடலே
நமசிவாயம் என்று
நாள்தோறும் சொல்லுமவர்
நயமான சிவந்த இதழே
தடம்பார்த்து நடைபோடும்
தனிப்பண்பு மாறாத
தகைமிக்க தெங்கள் குலமே
என்று தகைமிக்க நகரத்தார் குலத்தின் பக்திப் பெருமையைப் பறைசாற்றுகின்றார் கண்ணதாசன். இவரின் அர்த்தமுள்ள இந்துமதம் பத்து தொகுதிகளும் பக்தி நீரி;னைப் பாய்ச்சுபவை என்றால் அதில் மிகையில்லை.
இவ்வாறு பல்வேறுபட்ட ஆன்மீகப் பணிகளில் தங்களை, தம்மரபினரை ஆட்படுத்திக் கொண்டு ஆன்மீக வழியில் பயணித்து வருகிறது நகரத்தார் குலம்.

3 கருத்துகள்:

cheena (சீனா) சொன்னது…

அன்பின் பழனியப்பன்

நல்லதொரு இடுகை நகரத்தாரினைப் பற்றி - புகழ பரப்ப இன்னும் பல இடுகைகள் தேவைப் படுகின்றன - எழுதுக - தொடர்க

நல்வாழ்த்துகள் பழனியப்பன்
நட்புடன் சீனா

R.DEVARAJAN சொன்னது…

’வண்மையே குலதர்மம் எனக்கொண்டார்’ என அமைதல் வேண்டும்.
வண்மை - வள்ளல் தன்மை


தேவ்

பெயரில்லா சொன்னது…

thank u for ur correction