ஆய்வு

மாத்தளை சோமுவின் கதைகளில் செவ்வியல் இலக்கியத் தாக்கம்

முனைவர் மு.பழனியப்பன்

mathalaisomu

இலங்கைத் தமிழ் எழுத்தாளர்களின் படைப்புகள் கூர்ந்து நோக்கப்பட வேண்டியனவாகும். தொடர்ந்து தமிழக இலக்கிய வளர்ச்சியோடு இணைந்து போட்டி போட்டுக் கொண்டு வளர்ந்துவரும் இலங்கைத் தமிழ் இலக்கியம் தற்போது புலம்பெயர்ந்தோர் இலக்கியமாக உலக நாடுகளில் பரவி நிற்க வேண்டிய சூழலை அடைந்துள்ளது. கி.பி. 1983 ஆம் ஆண்டு முதல் இலங்கையின் அரசியல் சூழல் காரணமாகப் புலம் பெயர்தல் என்பது தவிர்க்க முடியாததாகிவிட்டது. புலம் பெயர்தல் வழியாகப் பல தரப்பட்டவர்களும் வெளியேற வேண்டிய சூழல் உருவானபோது எழுத்தாளர்களும் புலம் பெயர்ந்து எழுதத் தொடங்கினார்கள். கருணாமூர்த்தி ஷோபா சக்தி சை.பீர் முகம்மது முருகப+பதி மாத்தளை சோமு அ.முத்துலிங்கம் போன்றோர் இன்றைய நிலையில் இலங்கையில் இருந்து புலம் பெயர்ந்த தமிழ் எழுத்தாளர்களில் குறிக்கத்தக்கவர்கள் ஆவர்.
மாத்தளை சோமு தமிழகத்தின் ப+ர்வீகக் குடியினர் என்றாலும் இலங்கையில் வாழ்ந்தவர். தற்போது புலம்பெயர்ந்து ஆஸ்திரேலியாவில் குடியேறியுள்ளவர். தமிழகத்தின் திருச்சிராப்பள்ளியில் சில காலம் அவ்வப்போது உறைந்துவருபவர். நாவல்கள் சிறுகதைகள் பயணக்கட்டுரைகள் ஆய்வுக்கட்டுரைகள் எனப் பலவற்றை எழுதி வருபவர். இவரின் சிறுகதைகள் தொகுக்கப் பெற்று மாத்தளை சோமுவின் கதைகள் என்று இரு தொகுதிகளாக வந்துள்ளன. இவர் ~~வியக்கவைக்கும் தமிழர் அறிவியல்|| ~~வியக்கவைக்கும் தமிழர் காதல்|| ஆகிய கட்டுரை நூல்களைப் படைத்தளித்துள்ளார். இவ்விரு நூல்களும் செம்மொழித் தமிழ் இலக்கியங்கள் வழியாகத் தமிழர் அடையாளத்தை வெளிப்படுத்துவனவாகும். மேலும் இவர் திருக்குறளுக்கு அறிவியல் நோக்கில் ஓர் அகல உரையைத் தந்துள்ளார். இவை இவர் செம்மொழித் தமிழ் இலக்கியங்களின் மீது கொண்டுள்ள ஈடுபாட்டினை எடுத்துக்காட்டுவனவாக உள்ளன.
இக்கட்டுரையில் மாத்தளை சோமுவின் சிறுகதைகள் – தொகுதி இரண்டு- என்ற தொகுப்பில் செவ்விலக்கியத் தாக்கம் பெற்ற கதைகள் மட்டும் எடுத்துக் கொள்ளப் பெற்று அவற்றின் திறம் ஆராயப் பெறுகின்றன.
~தமிழில் சங்க கால இலக்கியங்களாக முப்பத்தாறு நூல்கள் இருக்கின்றன. இவை தமிழின் தமிழரின் மூல வேர்கள். இவை ஊடாகத்தான் பழந்தமிழரின் அரசியல் நீதி கொடை வீரம் பண்பாடு காதல் சமூகவியல் வணிகம் வானவியல் ஆடை கட்டிடக் கலை மண்ணியல் நாட்டியம் இசை மருத்துவம் அணிகலன் அளவியல் கடல் நாகரீகம் சிற்பக்கலை என பலதுறைகளைப் பார்க்கின்றோம். அவற்றில் எல்லாம் அறிவியலின் பரிணாமமும் கலந்தே இருக்கிறது. பழந்தமிழ் நூல்கள் அடங்கிய இலக்கியங்கள் தமிழ்மொழியின் அடித்தளம். அவற்றில் மிக உன்னதமான கருத்துகள் குவிந்துள்ளன. ஆனால் இன்று ஆங்கில மற்றும் பிறமொழி மாயையில் தமிழர்கள் அவைகளைத் தொடுவதே தேவையில்லாத வேலை என்ற உணர்வு கொண்டவர்களாக இருக்கிறார்கள். தாய்மொழி என்பது மரபுவேர் கொண்டது. பழந்தமிழ் இலக்கியங்கள் இல்லாமல் தமிழ் இல்லை. இலக்கியம் மக்களுக்காக மக்கள் மேம்பட எழுதப்பட்டவை. ||( மாத்தளை சோமு வியக்கவைக்கும் தமிழர் அறிவியல்.ப. 111) என்ற இவரின் கூற்று செம்மொழித் தமிழ் இலக்கியங்கள் மீது இவர் கொண்டுள்ள மதிப்பினை வெளிப்படுத்துவதாக உள்ளது. இதன் காரணமாக இவரின் படைப்புகளில் செம்மொழித் தமிழ் இலக்கியங்களின் தாக்கங்கள் நிறைய காணப்பட வாய்ப்புண்டு என்பது தெளிவாகின்றது.
மாத்தளை சோமுவின் சிறுகதைகள் – தொகுதி 2 என்ற தொகுப்பு இவரின் முப்பத்து மூன்று கதைகளைக் கொண்டுள்ளது. இவற்றில் பல கதைகள் இலங்கையில் வாழ் மலையகத் தமிழர்தம் வாழ்க்கை முறையை நினைவு கூர்வன. இன்னும் சில கதைகள் இவரின் ஆஸ்திரேலிய வாழ்க்கை அனுபவங்களை உள்ளடக்கியன. ஒரு கதை இலங்கையின் வரலாறு சார்ந்து எழுதப் பெற்றுள்ளது. இக்கதைகள் அனைத்திலும் ஆங்காங்கே செம்மொழி இலக்கியத்தின் தாக்கங்கள் காணப்படுகின்றன. என்றாலும் முழுக்க தாக்கம் பெற்ற ஐந்து கதைகள் இங்கு எடுத்தாளப்பெறுகின்றன.
தமிழ்ப் பண்பாடும் அதை வெளிநாடு வாழ் தமிழர்கள் உயிரெனக் கருதுவதும்
தமிழருக்கென்று தனித்த பண்பாடுகள் உண்டு. அந்தப் பண்பாடுகளை எழுத்து வடிவில் பதிவு செய்வன இலக்கியங்கள். இவ்விலக்கியங்கள் இப்பண்பாட்டைத் தலைமுறைதோறும் கடத்தும் கருவிகளாகவும் விளங்குகின்றன. தமிழ்ப் பண்பாட்டை மறந்த மறுத்த வெளிநாடு வாழ் தமிழர்கள் அதனால் பாதிப்புகள் ஏற்படுகையில் தமிழர் பண்பாட்டின் தன்னிகரற்ற தன்மையை உணர்ந்து கொள்ளுகின்றனர்.
தமிழர்களின் பெயர்கள் நீளமானவை. அவற்றை வெளிநாடுகளில் சுருக்கி அழைப்பது என்பதும் சுருக்கி வைத்துக் கொள்வது என்பதும் தற்போது தவிர்க்க முடியாததாகிவிடுகின்றது. ~~இந்தத் தாயின் வயது|| என்ற சிறுகதையின் நாயகி காயத்ரி – காயா எனச் சுருக்கப்படுகிறாள். இவளின் பன்னிரண்டு வயது மகள் லாவன்யா. லாவண்யா வயதுக்கு வந்த நிகழ்வுடன் கதை தொடங்குகின்றது. காயாவும் அவளது கணவனும் பணம் சம்பாதிப்பதில் நாட்டம் செலுத்த லாவண்யா என்ற பன்னிரண்டு வயதுடைய குழந்தை வீட்டில் தனிமையில் பல நேரத்தைக் கழிக்கவேண்டியுள்ளது. குறிப்பாக மாலை நேரத்தில் இவளின் தனிமையை ஓர் அயலக இளைஞன் பயன்படுத்திக்கொள்கிறான். இதன் காரணமாக ஒரு நாள் பள்ளியில் இருந்து காயாவுக்கு அழைப்பு வருகிறது. இவ்வழைப்பின் வழியாக லாவன்யா கர்ப்பமாக இருப்பதாக பள்ளி நிர்வாகத்தார் ஐயமுறுகிறார்கள். மருத்துவர்கள் பரிசோதனையில் அது உறுதியும் ஆகிறது. லாவன்யாவிடம் காயா பேசிப்பார்த்தாள். ஆனால் ~~அவள் எனக்கு பேபி பிறந்தால் அதனோடு விளையாடுவேன். எங்க அம்மா சிஸ்டர் பேபி தரவே இல்லை || என்று அறியாத பிள்ளையாய் இது குறித்து மகிழ்ச்சி அடைகிறாள்.
இக்கட்டான நிலையில் காயா சிந்திக்கிறாள். ~~அவள் இப்படி ஆவதற்குத் தானே ஒரு காரணமாகிப் போய்விட்டேனா? எப்போது பார்த்தாலும் பணம் என்ற சிந்தனை அதைத் தேட வேலை ஓவர்டைம் என்று இருந்துவிட்டேன். எல்லாம் இங்கே இருக்கிற திமிரில் எவரோடும் ஒட்டாமல் ஒதுங்கி இருப்பதே உயர்வென்று வீட்டில் தாய்மொழியின் நினைவோ நிழலோ இல்லை. லாவண்யாவுக்குத் தமிழே தெரியாது. தாய்மொழி என்பதை வெறும் மொழி என்றே நினைத்து வி;ட்டேனே! அது நமது அடையாளமாகவும் அதனோடு நமது வேர் ஊடுறுவி இருப்பதையும் மறந்து வி;ட்டேனே|| ( ப. 189) என்ற தற்சிந்தனையில் தமிழ் மொழியின் தேவை அம்மொழி சார்ந்த பண்பாடு போன்றவற்றின் தனித்தன்மையைக் குழந்தைகளுக்குச் சொல்லித் தந்திருக்க வேண்டிய அவசியத்தைக் காயா உணர்கிறாள்.
இதற்குப் பின் காயா தன் மகள் லாவண்யாவிற்குத் தனக்கும் தன் கணவனுக்கும் நடந்த திருமண நிகழ்வைக் காணொளியாக் காட்டி அதன் வழியாக திருமணம் குடும்பம் போன்றவற்றின் இன்றியமையாமையை உணர்த்துகிறாள். இவற்றோடு மனநல மருத்துவரின் நல்லுரைகளும் சேர லாவண்யா தன் கர்பத்தைக் கலைத்துவிட முன்வருகிறாள். அப்போது அவள் பேசிய மொழிகள் குறிக்கத்தக்கவை. ~~மம்மி! மம்மி! ஐ டோன்ட் வான்ட் பேபி. ஐ வான்ட் சிஸ்டர்|| (ப. 191) என்ற அவளின் தொடர் ஆங்கில வடிவமானது என்றாலும் அதனுள் புதைந்திருப்பது தமிழ்ப் பண்பாடு. இதனை உணர லாவண்யாவை காயா என்ற தாய் காயப்பட வைக்கவேண்டிய சூழல் ஏற்பட்டுவிட்டது.
~~வேர்கள்|| என்ற கதையும் தமிழ் மொழி பண்பாடு ஆகியவற்றின் வேர்களை வெளிநாடு வாழ் தமிழர்கள் உணர உணர வைக்க ஏற்ற கதையாகும். இதில் சுலோச்சனா (சுலோ) என்ற சிறுமி சிட்னி நகரத்தில் இருந்து தன் வேரை அறிந்து கொள்ளத் திருச்சிக்கு வருகிறாள். வந்த சில நாட்கள் வரை ஆஸ்திரேலிய நாட்டுச் சிறுமியாக விளங்கிய சுலோ மெல்ல மெல்ல இந்திய தமிழகப் பெண்ணாக மாறும் கதை இந்தக் கதையாகும்.
சுலோச்சனாவின் தந்தையும் தாயும் சுலோச்சனாவை அழைத்துக் கொண்டு அவரின் தாத்தா வீட்டிற்கு அதவாது திருச்சிக்கு வருகின்றனர். இதற்குக் காரணம் சுலோச்சனாவின் அப்பா ஒரு மொரீசியஸ்காரரை ஆஸ்திரேலியாவில் சந்தித்ததுதான்.
மொரீசியஸ்காரரின் தாத்தா இந்தியாவைச் சார்ந்தவர். தந்தை மொரிஷியஸ் சார்ந்தவர். இவரின் மகள் ஒரு பிரெஞ்சு இளைஞனை மொரீசியஸில் திருமணம் செய்துவிட்டு மூன்றாண்டுகளில் அவனை விட்டுப் பிரிந்துவிடுகிறாள். இதற்குமேல் மொரீஸியசில் வாழ இயலாது என்று ஆஸ்திரேலியாவிற்கு அவர் குடி புகுந்துவிடுகிறார். ~~ நாங்கள் எங்கள் பிள்ளைகளுக்கு எங்கள் மொழி பண்பாடு என்பனவற்றைச் சின்ன வயதிலேயே சொல்லிக் கொடுத்திருக்க வேண்டும்…. நவ். டூ லேட்|| (ப. 156) என்று தன் தவற்றை மொரீசியஸ்காரர் சுலோச்சனாவின் அப்பாவிடம் எடுத்துரைக்கிறார். இதனால் தன் மகளுக்குத் தன் நாட்டின் வேர் தெரியவேண்டும் என்று சுலோச்சனாவின் அப்பா அவளை அவளின் தாத்தா வீட்டிற்கு அழைத்துவருகிறார். ~~மொரீசியஸ்காரரின் அனுபவம் எல்லாம் எனக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கையாகவே நினைத்தேன். அதன் பின்னர்தான் குடும்பத்தோடு நீண்ட விடுமுறையில் இந்தியா போக முடிவெடுத்தேன்|| (ப. 157) என்ற சுலோச்சனாவின் அப்பாவின் முடிவு பண்பாட்டு வேர்களைத் தேடி தன் மகளுக்காக அவர் தொடங்கிய தாய்நாட்டு; பயணத்தை எடுத்துரைப்பதாக உள்ளது.
கதையின் வளர்ச்சியாக சுலோச்சனாவின் தந்தை ஒரு திருமணத்திற்காகக் கொழும்பு சென்று விட்டு தன் பழைய உறவுகளைச் சந்திக்க முயற்சி செய்து சிலரைக் கண்டுச் சில நாள்களில் வருகிறார். இச்சிலநாள்களில் சுலோச்சனா தமிழக் சூழலில் வளரும் குழந்தையாகிவிடுகிறாள்.
~~வீட்டுக் கேட்டைத் திறந்து உள்ளே கால் வைத்தபோது என்னால் நம்பவே முடியவில்லை.சுலோச்சனா எதிர்வீட்டு ஜமுனாவேர்டு தேங்காய்ச் சிரட்டையைச் சட்டியாக வைத்து சமைத்துக் கொண்டிருக்கிறாள். என்னைக் கண்டதும் மண் ஒட்டிய கரங்களோடு சுலோ ஓடிவந்தாள். அப்பா எனக்கு என்ன வாங்கியாந்த? …சுலோவின் தமிழைக் கேட்பதில் மகிழ்ச்சியானேன். அதே சமயம் மகளுக்கு எதுவுமே வாங்கி வரவில்லை என்ற குற்ற உணர்வு என்னை அழுத்தியது. மெல்ல சுலோவைத் தூக்கி அணைத்து முத்தமிட்டேன். பிறகு அவள் தன்னை விடுவித்துக் கொண்டு விளையாடப் போய்விட்டாள்|| (ப. 158) என்ற இந்தச் சொற்றொடர்கள் தாய்நாட்டிற்கு வருவதன் வழியாகக் குழந்தைகளுக்குப் பண்பாட்டின் வேர்களைக் கற்றுத் தந்துவிட இயலும் என்பதை உறுதிப்படுத்துகின்றன.
சங்க காலத்தில் அகநானூற்றுத் தலைவி ஒருத்தி சிறுசோறு சமைக்கிறாள்.
~~..கானல்
தொடலை ஆயமொடு கடல்உடன் ஆடியும்
சிற்றில் இழைத்தும் சிறுசோறு குவைஇயும்
வருந்திய வருத்தம் தீர யாம் சிறிது
இருந்தனமாக|| (அகநானூறு. 110- 7-9)
என்ற இப்பாடலில் தலைவி சிறுவீடு கட்டிச் சிறு சோறு சமைக்கிறாள். இதனால் அத்தலைவிக்குக் களைப்பு ஏற்படுகின்றது. சிறு சோறு சமைக்கின்ற இந்நிகழ்வே மாத்தளை சோமுவின் கதையில் தேங்காய்ச் சிரட்டையில் மண்சோறு சமைப்பதாகத் தொடர்கின்றது. மண் விளையாட்டு வண்டல் விளையாட்டாகச் சங்க காலத்தில் விளையாடப்பெற்றுள்ளது.
~~மணல் காண்தொறும் வண்டல்தைஇ|| (நற்றிணை 9 -8) என்று நற்றிணையிலும் ~~கோதை ஆயமொடு வண்டல் தைஇ ஓரை ஆடினும் உயங்கும் நின் ஒளி|| ( அகநானூறு 60- 10-11) என்று அகநானூற்றிலும் பெண்கள் விளையாடும் வண்டல் விளையாட்டு இடம் பெற்றுள்ளது. அகநானூற்றுத்தலைவி மணல் விளையாட்டு விளையாடுவதன் காரணமாக அவளின் உடல் ஒளி குறைந்துவிடும் என்று- தாய் அவளை வீட்டுக்குள் அழைத்தாளாம். இங்கு சுலோ ஜமுனா ஆகியோர் விளையாட்டு ஆயமாகின்றனர். அவர்களும் வண்டல் தடவி விளையாடுகின்றனர். இவ்வாறு தொடர்கின்றது தமிழர் வண்டல் விளையாட்டு மரபு.
முதுமையும் துயரமும்
முதுமைக் காலத்தில் அரவணைப்பு இன்றி முதியவர்கள் அனாதைகளாக விடப்படும் சூழல் இக்காலத்தில் எல்லா நாடுகளிலும் நடைபெறுகின்ற செயலாகிவிட்டது. இளமையின் துடிப்பான தன்மையையும் முதுமையில் கோல் ஊன்றி நடக்கும் தளர்ந்த தன்மையையும் பின்வரும் புறநானூற்றுப் பாடல் எடுத்துக்காட்டுகின்றது.
~~இனிநினைந் திரக்க மாகின்று திணிமணற்
செய்வுறு பாவைக்குக் கொய்பூத் தைஇத்
தண்கய மாடு மகளிரொடு கைபிணைந்து
தழுவுவழித் தழீஇத் தூங்குவழித் தூங்கி
மறையென லறியா மாயமி லாயமொ
டுயர்சினை மருதத் துறையுறத் தாழ்ந்து
நீர்நணிப் படிகோ டேறிச் சீர்மிகக்
கரையவர் மருளத் திரையகம் பிதிர
நெடுநீர்க் குட்டத்துத் துடுமெனப் பாய்ந்து
குளித்துமணற் கொண்ட கல்லா விளமை
அளிதோ தானே யாண்டுண்டு கொல்லோ
தொடித்தலை விழுத்தண் டூன்றி நடுக்குற்
றிருமிடை மிடைந்த சிலசொற்
பெருமூ தாளரே மாகிய வெமக்கே (புறநானூறு.243)
இளமையில் குளத்தில் பெண்களோடு கைகோர்த்து விளையாடுதலும் மருத மரத்தின் மீது ஏறி ஆற்றில் குதித்து மூழ்கி ஆழ்மணலை எடுத்து வந்தமையும் இன்று எண்ணிப் பார்க்கத்தக்கதாக உள்ளது. இன்றைக்கு முதுமை வந்துவிடக் கோலூன்றி நடந்து இருமல் இடையில் பேசி வாழ்க்கையைக் கடத்த வேண்டி இருக்கிறது என்று இளமை முதுமை ஆகியவற்றின் இயல்பினை தொடித்தலை விழுத்தண்டினார் பாடுகின்றார். இப்பாடலை எழுதியவர் யாரென்று தெரியாததால் தொடித்தலை விழுத்தண்டினார் என்று பாடல் தொடரே பெயராக தரப் பெற்றுள்ளது.
இத்தகைய இரங்கத் தக்க முதுமையைப் பல இடங்களில் காட்டுகின்றார் மாத்தளை சோமு. அதில் ஒன்று அவருடைய ~~தேனீக்கள்|| என்ற தலைப்பிட்ட கதையில் இடம்பெற்றுள்ளது. ~~கிழவனுடைய தேகம் முழுவதும் வரிக்குதிரைபோல் காய்ந்த முந்திரிக் கோடுகளாகச் சுருங்கிக் கிடந்தது. அவன் மிகவும் தளர்ந்து போய்விட்டான். அது வயதின் காரணமோ வாழ்வின் காரணமோ தெரியவில்லை. கிழவன் கிழிந்த சட்டையும் இடுப்பில் வேட்டியும் கட்டியிருக்கிறான். வேட்டி என்ன நிறமோ? புதிதாக வாங்கும்போது வெள்ளை வெளேரென்று இருந்தது. இப்போதோ காய்ந்த மண்ணின் நிறமாகக் கூடவே வியர்வை நாற்றத்தையும் அள்ளி வீசியது.|| என்ற அம்மாசிக் கிழவனைப் பற்றிய வருணனை தொடித்தலை விழுத்தண்டூன்றிய பாடலின் மறுபதிப்பாக விளங்குகின்றது.
முதுமையின் இரங்கத்தக்கச் சாயலை ~~நமக்கென்றொரு ப+மி|| ~ஒரு கதா பாத்திரத்தின் முடிவுறாத கதை|| ~~அனாதைகள்|| ஆகிய இத்தொகுப்பில் அடங்கியுள்ள கதைகள் வாயிலாகவம் அறியமுடிகின்றது.
ஊஞ்சல்
ஊஞ்சல் விளையாட்டை மையமாக வைத்து ஒரு கதையினைப் பொருளாதார ஏற்றத்தாழ்வுகளை உள்ளடக்கி மாத்தளை சோமு படைத்துள்ளார். கதையின் பெயர் ~~ஊஞ்சல் மரம்||.
~~அந்த ஊஞ்சலைக் கட்டி வைத்ததே அவர்கள்தான். முதலில் லயத்தில் ஒரு காம்பராவில் ஒருத்தன் கயிற்றைக் கட்டி சும்மா ஆடினான். அதைப் பார்த்துவிட்டு ஒருவன் அந்த மரத்தில் கயிற்றைக் கட்டி ஆடினான். அப்புறம் எல்லோரும் ஆட ஒருநாள் கயிறு அறுந்து ஒருவன் கீழே விழுந்துவிட்டான்.
அதைப் பார்த்துவிட்டு அந்த லயத்தின் கடைசிக் காம்பராவில் இருப்பவர் – டவுனுக்குப்போய்ச் சங்கிலியும் பலகையும் வாங்கி வந்து மரக்கொம்பில் ஊஞ்சல் அமைத்தான். மரத்தின் கீழே முளைத்திருந்த புற்களை அப்புறப்படுத்தி மணல் கொண்டு வந்து கொட்டி லயத்து வாண்டுகளின் அபிமானத்தைப் பெற்றான்|| (ப. 80)
என்பது மாத்தளை சோமு வரைந்துள்ள ஊஞ்சல் அனுபவம். இதே அனுபவம் சங்க இலக்கியப் பாடலொன்றில் கிடக்கின்றது. ~~ஞாழல் ஓங்குசினைத் தொடுத்த கொடுங்கழித் தாழை வீழ்கயிற்று ஊசல் தூங்கி ||(அகநானூறு. 20- 5-6) என்பது அப்பாடலடி.
சங்க காலச் சூழல். மரங்கள் அடர்ந்த ஒரு சோலை. அச்சோலயின் நடுவே ஒரு கொன்றை மரம். அம் மரம் ப+த்துக் குலுங்குகின்றது. அந்த மரத்தின் ப+விதழ்கள் புலிநகம் போன்று காட்சியளிக்கின்றன. அதனால் அம்மரத்திற்குப் புலிநகக் கொன்றைமரம் என்றே பெயர் ஏற்பட்டுவிட்டது. அம்மரத்தில் ஒரு கிளை வாகாக வளைந்து வளர்ந்துள்ளது. அந்தக் கிளையில் தாழை நாரால் செய்யப் பெற்ற மணமிக்க நாரால் ஊஞ்சல் உருவாக்கப்படுகிறது. இந்த ஊஞ்சல்தான் மலையகத்து இலங்கைத் தமிழர் தம் குடியிருப்பு அருகிலும் கட்டப் பெற்று தமிழ் செவ்விலக்கிய மரபு தொடர்கிறது.
கதை மேலும் தொடர்கிறது. பிள்ளைகள் ஊஞ்சலைத் தள்ளுவதும் ஊஞ்சல் ஆடுவதும் எனக் கோலகலமாக இருந்த இந்தவிளையாட்டைத் தேயிலைத் தோட்டத்தையாளும் துரையின் மகன் பார்க்கிறான். அவனுக்கு ஊஞ்சல் மீது ஆசை வருகிறது. துரைவீட்டில் உருட்டுக் கம்பிகளால் ஆன ஊஞ்சல் வந்து சேர்கின்றது. அங்கு துரைமகனுக்கு ஆடுவது சிறப்பாக இல்லை. எனவே அவன் உழைப்பாளர்களின் குழந்தைகள் ஆடும் ஊஞ்சலுக்கு வந்துவிடுகிறான். உழைப்பாளர் குழந்தைகளுடன் துரையின் மகனும் விளையாடுவதா என்று துரைக்கு அது கௌரவப் பிரச்சனையாகிவிடுகிறது. இதைத் தடுக்க என்ன செய்வது என்று எண்ணுகிறார் துரை.
நாள்கள் நகருகின்றன. அவர் ஒருமுறை இந்த ஊஞ்சல் இருப்பிடத்தைக் கடக்கையில் ஒரு குழந்தை அவரின் மகி;ழ்வுந்தில் விழுந்துவிட விபத்து ஏற்பட்டு விடுகிறது இதனையே காரணமாக வைத்து துரை ஊஞ்சல் விளையாட்டைத் தடுத்து நிறுத்த மரத்தை வெட்டிவிடச் சொல்கிறார்.
இந்த மரத்தின் இழப்பு அந்தப் பகுதியையே சோகத்திற்கு உள்ளாக்குகின்றது. மரம் குழந்தைகளை நேசித்தது. மனிதர்கள் நேசிக்கவில்லையே என்று கவலை கொள்கிறார் படைப்பாளர்.
~~அவர்கள் ஊஞ்சல் ஆடும்போது அந்த மரம் அவர்களை ஆசிர்வதிப்பதுபோல் தன்னிடம் ஒட்டிக்கிடக்கிற காய்ந்த இலைகளைக் காகிதப் ப+வாகச் சொரியும்….. குழந்தைகளை அந்த மரம் நேசிக்கிறது. இன்றைய குழந்தைகள் நாளைய சமுதாயம் அல்லவா! அதனால் அந்த மரம் அவர்களை ஆசீர்வதிக்கிறது. அது இந்த மனிதர்களுக்குத் தெரியவில்லையே|| (ப. 81) என்று படைப்பாளர் மக்களிடத்தில் மனிதநேயம் இல்லாநிலையை மரத்தின் வாயிலாக வெளிப்படுத்திவிடுகின்றார்.
ஒருவாய் நீர்
ஒருவாய் நீருக்காகக் தவிக்கும் குடும்பத்தைப் பற்றிய கதை ‘ஒருவாய் நீர்|| என்பதாகும். இந்தத் தலைப்பே புறநானூற்று பாடல் ஒன்றை உடனே நினைவுக்குக் கொண்டுவந்துவிடுகின்றது. செங்கணான் என்ற சோழ மன்னனுடன் நடந்த போரில் சேரமான் கணைக்கால் இரும்பொறை தோல்வியைத் தழுவுகிறான். கணைக்கால் இரும்பொறை செங்கணானி;ன் சிறையில் கிடக்கிறான். அவனுக்குத் தண்ணீர்த் தாகம் ஏற்படுகின்றது. சிறைக்காவலர்கள் நீரைத் தராது காலம் நீட்டியபோது தன் தன்மானம் குறைவுபடுவதை அம்மன்னன் உணர்கிறான். காலம் நீட்டித்து வந்த அவ்வொருவாய் தண்ணீரை அவன் குடிக்க மறுத்துத் தாகத்துடன் உயிர்விடுகிறான்.
~~….. வேளாண் சிறுபதம்
மதுகை இன்றி வயிற்றுத் தீத்தணியத்
தாம் இரந்து உண்ணும் அளவை
ஈன்மரோ இவ்வுலகத் தானே?||( புறநானூறு.பாடல். 74)
என்ற இந்தப் பாடல் ஒருவாய் நீருக்காகத் தன்மானத்தை இழக்காத தமிழனின் தலைசிறந்த பாட்டு.
இலங்கையின் அரசவையில் சிங்களத்திற்கும் தமிழுக்கும் மொழிப் பெயர்த்துக் கருத்துகளை வெளிப்படுத்தும் அதிகாரி ஒருவர் தன் குடும்பத்துடன் உள்நாட்டுப் போர் காராணமாக ஒரு பதுங்குக் குழியில் பதுங்கி இருக்கிறார். அப்பொழுது தொடர்ந்து: சீறிவந்து ஏவுகணைகள் அவர்கள் இருக்கும் இடத்தைத் தாக்குகின்றன. இந்த இக்கட்டான சூழலில் அவரின் அன்பு மகள் ஒரு வாய் தண்ணீர் கேட்கிறாள். அவரால் பதுங்குக் குழிவிட்டு எழுந்து போக முடியாத நிலை. தொடர்ந்து வெடித்த ஏவுகணைகளுக்கு இடையில் பத்துநிமிட இடைவெளி கிடைக்கிறது. அந்த இடைவெளிக்குள் தண்ணீர் கொண்டுவர அவர் பதுங்குக்குழி விட்டு எழுகிறார். தண்ணீர் எடுக்கிறார். சொம்பில் எடுத்துக் கொண்டு குழி நோக்கிவருகிறார். இதன்பின் நடந்த நிகழ்வுகளை கதையாசிரியார் காட்டுவதை அப்படியே காட்டுவது நல்லது.
~~வேக வேகமாக பதுங்கு குழியை நோக்கி நடந்தார். திடீரென்று வெச்சத்தம் கேட்டது மறுபடியும் எறிகணைகளை வீசத்தொடங்கி விட்டார்கள். வேறு வழியே இல்லை. வெளியே வந்தாகிவட்டது இன்னும் சில அடிகள் எடுத்து வைத்தால். . அதற்குள் ~விர்| ரென்று பறந்து வந்த ஓர் ஏவுகணையின் சிதறல் அவர் இடதுகையை பதம் பார்த்தது. வலது கையில் சொம்பு . அப்போதும் அந்த சொம்பை விடாமல் பதுங்கு குழியில் இறங்கினார். இடது கை விரல்களிலிருந்து ரத்தம் கொட்டுவதைக் கண்ட மனைவி அலறினாள் ~~அய்யோ! உங்கட ஒரு விரல் காணலியே?||
…மகள் அப்போதுதான் இடதுகையைப் பார்த்தாள் . ஒரு விரல் இல்லை. ரத்தம் கீழே கொட்டியது. மௌ;ள சொம்பைத் தூக்கிய மகள் அப்பாவிடம் வந்து அவரின் இடதுகையைத் தண்ணீர் ஊற்றிக் கழுவினாள். . . கந்தசாமியின் கண்களில் இருந்து நீர்த்துளிகள் விழுந்தன. அது கண்ணீர் அல்ல. .. . . || (ப. 270) என்ற கதையாடலில் இரக்கம் படிப்பவர்க்கு மேலிடுகிறது. துயரமான நிகழ்வுகளுக்கு இடையில் மனித உயிர்கள் படும் பாட்டினை இந்தச் சிறுகதை அவலச் சுவை ததும்ப விவரிக்கின்றது.
மாத்தளை சோமு படைத்துள்ள கதைகளில் அவரின் கதையாடல் வளர்ச்சிமுறை மிகத் n;தளிவாகத் n;தரிகின்றது. அவரின் ஆரம்ப நிலைக் கதைகள் வளர் நிலைக் கதைகள் எனப் பல நிலைக் கதைகள் இத்n;தாகுப்பில் இடம்பெற்றுள்ளன. இவற்றின் வழியாக அவரின் படைப்பு வளர்ச்சி அறியத்தக்கதாக உள்ளது.
மலையக மக்களை முன்வைத்து அவர்களுக்கான இலக்கியத்தைப் படைத்து வரும் அவரின் முயற்சி அவரின் படைப்புகள் சான்றுகளாக அமைகின்றன. இலங்கை சார்ந்த மலையக இலக்கியம் என்ற பிரிவிற்கு இவர் தனிச் சான்றாகின்றார்.
புலம் பெயர் இலக்கியம் என்ற நிலையில் ஆஸ்திரேலிய நாட்டில் வாழும் இலங்கைத் தமிழர்தம் நிலையை இவரின் கதைகள் எடுத்துரைக்கின்றன. சிட்னி நகர வாழ்வைப் படம்பிடித்துக்காட்டும் அவரின் படைப்புத்திறன் புலம் பெயர்ந்தோர் இலக்கியத்தில் குறிக்கத்தக்க இடம் வகிக்கின்றது.
குறிக்கத்தக்க ஐந்து கதைகளை மட்டும் எடுத்துக் கொண்டு அவற்றில் தொனிக்கும் செம்மொழிச் சாயல்களை இக்கட்டுரை எடுத்துரைக்கிறது என்றாலும் விடுதலாகியுள்ள கதைகள் அனைத்திலும் அங்கொன்றும் இங்கொன்றுமாக தமி;ழ்ச் செவ்விலக்கிய மரபு உறைந்துள்ளது என்பது மறுக்க இயலாத உண்மை. இலங்கைத் தமிழர்கள் மலேயத் தமிழர்கள் சிங்கைத் தமிழர்கள் மொரிசீயஸ் தமிழர்கள் இன்று எல்லை தாண்டினாலும் அனைத்துத் தமிழர்களின் தாய்மண் தாய் இலக்கியம் செம்மொழி இலக்கியங்கள் என்பது கருதத்தக்கது. செம்மொழி இலக்கியங்களின் தாக்கம் திரைகடலோடிய தமிழர்கள் அனைவரிடத்திலும் ஏதாவது ஒருவகையில் தாக்கம் செலுத்துகின்றது என்பதற்கு மாத்தளை சோமுவின் கதைகள் நல்ல சான்றுகள்.
பயன் கொண்ட நூல்கள்
மாத்தளை சோமு மாத்தளை சோமுவின் சிறுகதைகள் (தொகுதி.2)
இளவழகன் பதிப்பகம். சேன்னை 2003
சுப்பிரமணியம்.ச.வே. சங்கஇலக்கியம் எட்டுத்தொகை தொகுதி 123)
மணிவாசகர் பதிப்பகம் சென்னை 2010

 

மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம்


    மண்ணுலகம், பூவுலகம், மக்கள் உலகம் என்று இந்த பூமி பல பெயர்களால் அழைக்கப்படுகிறது.  மண்ணால் நிரம்பியிருப்பதால் இதனை மண்ணுலகம் என்கிறோம். இந்த உலகம் பூமி என்றழைக்கப்படுவதால் பூவுலகம் எனப்படுகின்றது. மக்கள் நிரம்பி வாழ்வதால் இதனை மக்கள் உலகம் என்று அழைக்கிறோம். ,மக்கள் உலகம், பூவுலகம் இவற்றையெல்லாம் விட மண்ணுலகம் என்று சொல்லுவதில்தான் பொருள் ஆழம் அதிகம்.
மண் தனக்குள் முளைக்கும் திறனைக் கொண்டுள்ளது. அதே நேரத்தில் இட்ட பொருளை அழிக்கும் திறனையும் கொண்டு விளங்குகின்றது. ஆக்க சக்தியாகவும், அழிக்கும் சக்தியாகவும் விளங்கும் மண்ணில் தோன்றும் அத்தனைப் பொருட்களும் மண்ணில் இருந்துத் தோன்றி, இந்த மண்ணுக்குள்ளே தன்னை அழித்துக் கொள்கின்றன. மூலமும் முடிவுமாக விளங்குகின்ற இந்த மண்ணுலக வாழ்வில் வாழும் காலம் என்பது ஒரு இடைப்பட்ட காலம்தான்.

பிறப்பு , இறப்பு என்ற ஆரம்பத்திற்கும் நிறைவிற்கும் இடையில் இருப்பது – வாழ்தல் என்ற இடைவெளியாகும். இந்த வாழ்தல் என்ற இடைவெளியை ஒவ்வொரு உயிரும் வெற்றிகரமாக ஆக்கிக் கொள்ள வேண்டியிருக்கிறது. வெந்ததைத் தின்று வெறும் வாழ்க்கை வாழ்வதைவிட வெற்றிகரமான நல்ல வாழ்க்கையை வாழவேண்டும் என்ற துடிப்பு ஒவ்வொரு மக்கள் உயிருக்குள்ளும் இருக்கின்றது. இந்த ஆர்வத்தாலேயே இந்த பூமி மகத்தான கண்டுபிடிப்புகளால் நிரம்பியுள்ளது. இதன் காரணமாக மண்ணில் நல்ல வண்ணம் வாழ முடிகின்றது.

மண்ணில் பிறந்துவிட்ட ஒரு மனிதன் தன் கடமைகள் என்ன என்ன என்பதை உணர்ந்து செயல்பட வேண்டியிருக்கிறது. வாழத் தொடங்கும் காலத்திலேயே தனக்கான கடமைகள் என்ன என்பதை அவன் அறிந்து கொண்டுவிட்டால் அவனின் பயணம் வெற்றியை நோக்கிப் பயணிக்கத் தொடங்கிவிடுகிறது. கடைசிவரை தன் கடமைகள் என்ன என்பதையே அறியாமல் சிலர் வாழ முற்பட்டு, வாழ்ந்து முடிக்கின்ற காலத்தில் ‘‘ஐயையோ எதையும் செய்யாமல் போனோமே’’ என்று வருந்துவது அவனுக்கும் சோகம். பூமிக்கும் பாரம்.

அதிவீரராம பாண்டியர் என்ற புலவர் எழுதிய நூல்களுள் ஒன்று காசி காண்டம் என்பதாகும். இதனுள் மக்களின் கடமைகளை, நெறிகளை அவர் தொகுத்து அளிக்கின்றார்.  மனிதனாக பிறந்த ஒவ்வொருவரும் ஒன்பது சக மனிதர்களைப் பாதுகாக்க வேண்டும்; ஒன்பது கடமைகளை நிறைவேற்ற வேண்டும் என்று அவர் காசி காண்டத்தில் குறிப்பிடுகின்றார்.

ஆசிரியர், தாய். தந்தை, மனைவி, குழந்தைகள், விருந்தினர்கள், காலையும் மாலையும் கோயிலுக்குச் சென்று வழிபாடு செய்பவர்கள், புதியவர்கள், ஆகியோர்களையும் ஒளியையும் பாதுகாப்பவனே மனிதர்களில் பயன் மிக்கவன். இவ்வொன்பதையும் பாதுகாக்காதவன் மக்களுள் பயன் இல்லாதவன் என்று காசிக்காண்டம் குறிப்பிடுகின்றது.

குரவனைத் தாயைத் தந்தையை மனைவியை
குற்றமில் புதல்வனை விருந்தை
இரவு நண்பகலும் வழிபடுவோனை
அதிதியை எரியினை ஈங்குக்
கருதும்ஒன் பதின்மர் தம்மையும் நாளும்
கருணைகூர்ந்து இனிது அளித்திடாது
மருவும்இல் வாழ்க்கை பூண்டுளோன் தன்னை
மக்களுள் பதடிஎன்று உரைப்பர்
என்பது காசி காண்டத்தில் இடம்பெறும் பாடலாகும். இல்வாழ்க்கை மேற்கொள்பவர்களின் கடமை என்பது காசி காண்டம் காட்டும் ஒன்பதையும் பாதுகாத்து வாழும் வாழ்க்கை ஆகும். இந்தப் பாடலில் குரவர் என்ற நிலையில் ஆசிரியர்  ஒன்பது பேருள் முதல்வராக வைத்துப் போற்றப்படுகிறார். சமுதாயத்தில் ஆசிரியர் என்பவருக்குத் தரப்பட்டுள்ள இடம் எத்தகைய பெருமை வாய்ந்தது என்பது புலனாகும். பெற்றோர்களை மகிழ்ச்சியுடன் பாதுகாப்பது என்பது அடுத்து இடம்பெறுகிறது. இதனைத் தொடர்ந்து மனைவி, மக்கள், விருந்து என்று தொடரும் இந்தப் பட்டியலில் உள்ளவர்களை நாளும் கருணை கூர்ந்துப் பொருள்கள் அளித்து மகிழ்வுடன் பாதுகாத்து வந்தால், அதுவே மண்ணில் நல்ல வண்ணம் வாழ்ந்ததற்கான அடையாளம் ஆகும். இந்த அடிப்படை கடமையான இதனை நிறைவேற்றியபின்னே அரிய சாதனைகளைப் படைக்க மனிதன் புறப்படலாம்.

இதுபோன்று இல்வாழ்க்கை வாழுகின்ற மனிதனுக்குத் தேவையான ஒன்பது குணங்களையும் காசிகாண்டம் எடுத்துரைக்கிறது.
மெய்ம்மை, நற்பொறை, வெங்கொலை செய்யாது ஒழுகல்
மேவும் எக்கரணமும் அடக்கல்
செம்மைசேர் தூய்மை வரைவுறாது அளித்தல்
சீற்றம் நீங்குதல் களவின்மை
அம்மவென்று எவரும் அரற்றுதல் பரியா
அருள் செயல் ஆய ஒன்பானும்
வம்மென அமரர் எதிர் புகுந்து அழைப்ப
வானிடை விடுத்த தூது ஆமால்
என்பது இல்லறத்தாருக்கு வேண்டிய ஒன்பது குணங்களையும் எடுத்துரைக்கும் பாடலாகும்.

மனிதனாக வாழ்கின்றவனுக்குத் தேவையான குணங்கள் ஒன்பது என்பது அதிவீரராம பாண்டியரின் தெளிந்த கருத்தாகும். உண்மையைப் பேசுதல், பொறுமை, கொல்லாமை, புலன்அடக்கம், தூய்மை, மற்றவர்களுக்கு மனம் கோணாமல் பொருள்களை அளித்தல், கோபத்தை அடக்குதல், மனத்தால் கூட பிறர் பொருளை அடைய எண்ணாமை, மற்றவர்களின் துயரைக் கண்டு அதனைத் துடைத்தல் என்ற ஒன்பது குணங்களை உடையவனே மனிதன் எனப்படுவான். .

வையத்துள் வாழ்வாங்கு வாழ நல்ல குணங்களை மனிதன் கடைபிடித்து நடக்கவேண்டியுள்ளது. உண்மை என்பதை மட்டும் மக்கள் அனைவரும் பின்பற்றினால் உலகத்தில்  குற்றம் குறைகளே இல்லாமல் செய்துவிடலாம். பொறுமை இருந்துவிட்டால்  நோய்களுக்கே இடமில்லாமல் ஆகிவிடும். கண், காது, மூக்கு, வாய், உடல் என்ற ஐந்து புலன்களை அடக்கிவிட்டால் துன்பமே எந்நாளும் இல்லை. கோபத்தை அடக்கிவிட்டால் எதிரிகளே இல்லாமல் ஆகிவிடுவர். மனதால் பிறர் பொருளை எடுத்துக்கொள்ளவேண்டும் என்ற எண்ணம் ஏற்படாவிட்டால் அமைதியான வாழ்க்கை கிட்டிவிடும். மற்றவர்களின் துன்பத்திற்கு இரங்கி அவர்களின் துன்பம் துடைக்க நம்மால் முடிந்த வழிகளைச் செய்துவிட்டால் மனிதநேயம் ஏற்பட்டுவிடும். இந்த எல்லாப் பண்புகளையும் விட்டுவிட்டு வாழ்பவர்கள் மனிதர்கள் அல்ல.இயந்திரங்கள். இயந்திரங்களே மற்றவர் துயரத்தைப் பார்த்தும் ஏதும் செய்யாமல் இருந்த இடத்திலேயே இருப்பனவாகும்.

இத்தகைய ஒன்பது குணங்களில் ஒன்றிரண்டை மட்டும் பின்பற்றினால் போதும் என்று திருப்தியடைந்துவிடாமல் அனைத்துக் குணங்களையும் பின்பற்றி வாழத் தொடங்கினால் மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம். ஆசிரியர், பெற்றோர், மனைவி, மக்கள், விருந்தினர், வழிபாடு நிகழ்த்துவோர் போன்ற ஒன்பதுபேரில் ஒருவரையும் விட்டுவிடாமல் அனைவரையும் அன்புடன் பாதுகாத்தால் மண்ணில் நல்ல வண்ணம் வாழ்ந்த அடையாளம் கிடைக்கும். மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம். நல் கதிக்கு இவற்றைவிட வேறுவழியில்லை.
---------------------------------------------------------------------------------------------------------------------------

 

 

 

 

 

கம்பனில் அழகியல்

பதினேழாம் நூற்றாண்டு முதல் இருபதாம் நூற்றாண்டு வரை ஐரோப்பாவில் அழகியல் திறனாய்வு பெருவளர்ச்சியுடன் திகழ்ந்தது.  நவீனத்துவ திறனாய்வுகளில் அழகியல் திறனாய்வு முன்னணி வகித்தது, ஜெர்மன், இங்கிலாந்து ஆகிய நாடுகளின் அழகியல் திறனாய்வாளர்கள் அழகுணர்வு என்பதே படைப்பின் நோக்கமும் அடிப்படையும் என்று கருதினர். இமானுவல் கான்ட், ஆஸ்கர் வொயில்டு, ஐhன் ரஸ்கின் போன்றோர் அழகியல் சார்ந்து இயங்கிய மேலைநாட்டுத் திறனாய்வாளர்கள் ஆவர்.
பழங்காலத்திலேயே எகிப்து, இந்தியா, ரோம், சீனா போன்ற பல நாடுகளில் அழகுணர்வு என்பது தனித்துவம் மிக்கக் கலைக்கூறாக மக்களால் விரும்பப்பட்டுள்ளது. கட்டிடம், ஓவியம், நாட்டியம் போன்றவற்றில் அழகுணர்வைத் தனித்துவமான நிலையில் அந்நாட்டு மக்கள் வெளிப்படுத்தி வந்துள்ளனர். இதனைத் தொடர்ந்து இலக்கியப் படைப்பாளர்களும் அழகுணர்வு வயப்பட்டுப் படைப்புகளைப் படைத்தளித்துள்ளனர்.
குறிப்பாக இந்தியாவில் எழுந்த ரசக் கோட்பாடு, நாட்டிய சாஸ்திரம் போன்றன அழகியல் தன்மை உடையனவாகும். தமிழில் தொல்காப்பியத்தில் இடம்பெறும் உவம இயல், செய்யுளியல், மெய்ப்பாட்டியல் போன்றன முழுக்க முழுக்க அழகியல் சார்ந்தன. தொடர்ந்து வந்த தமிழ் இலக்கியங்களில் அழகுணர்வு என்பது போற்றப்பட்டு வந்துள்ளது.
~~அழகியல் திறனாய்வு என்பது இலக்கியத்தை அழகுடையது, அழகற்றது – சுவையுடையது, சுவையற்றது – என்று உணர்த்துவது,  இலக்கியப்படைப்பின் தனித்த பாணி, நாகரீகம், வடிவழகு ஆகியன குறித்து அறிவது, மனிதர்களின் நம்பிக்கை, மகிழ்வு துயரம் ஆகியன எவ்வாறு ஒரு படைப்பில் வெளிப்பட்டுள்ளது என்பதைக் காட்டுவது  மனித வாழ்க்கை என்பது அதிக அளவிலான அழகியல் கூறுகளைக் கொண்டது என்பதால் அழகியல் ஆய்விற்கு வளமான வாய்ப்புகள் அமைகின்றன.
அழகியல் ஆய்வு என்பது படைப்புகளை ஆராய்ந்து ஒற்றை வரியில் இது அழகானது, இது அழகற்றது என்று சொல்லிவிடுவதல்ல. ஒரு படைப்பின் முழுமையை அறிந்து, அப்படைப்பின் படைப்புத் தன்மையில் உள்ள கலைத்துவத்தை வெளிப்படுத்துவது, ஏன் படைப்பின் சில பகுதிகள் அழகாக உள்ளன, ஏன் சில பகுதிகள் அழகுணர்வற்று உள்ளன என்று உணர்த்துவது, இவற்றோடு படைப்பினுள் பயன்படுத்தப்பட்டுள்ள வலிமையான, மென்மையான கலாச்சாரக் கூறுகளை உற்று நோக்குவது என்ற நிலையில் பல கோணங்களை உடையதாக உள்ளது. பின்வரும் நோக்கங்களை உடையதாகவும் இவ்வாய்வு அமைகின்றது.
•    படைப்புக்கான பின்புலத்தினை அறிவது.
•    இலக்கியப் படைப்பாக்க முயற்சியில் எவ்வகை படைப்புச் செயல்பாடு நிகழ்ந்துள்ளது என்று கண்டறிதல்;
•    அழகியல் உணர்வினை ஊட்டக் கூடிய உத்திமுறைகள் எவ்வாறு கையாளப்பெற்றுள்ளன என அறிவது.
•    படைப்பினுள் பொதிந்து வைக்கப் பெற்றுள்ள சமுதாய மதிப்புகள், நம்பிக்கைகள், விருப்பங்கள், தேவைகள் முதலானவற்றை அறிதல்
•    படைப்;பினோடு தொடர்புடைய பிற கொள்கைகள், மரபுகள் போன்றவற்றை உணர்தல்
•    படைப்பினால்  ஏற்படும் பயனை உணர்த்தல்
போன்ற நோக்கங்களை உடையதாக அழகியல் ஆய்வு அமைகின்றது.
~~உருவமே முதன்மையானது. அதுவே இலக்கியத்திற்குக் கலையழகைத் தரக்கூடியது என்பதும், இலக்கியத்தில் என்ன சொல்லப்பட்டிருக்கிறது என்பதைவிட எப்படிச் சொல்லப்பெற்றிருக்கிறது என்பதே பார்க்கப் பட வேண்டும் என்பதும் அழகியல் திறனாய்வின் அடிப்படையாகும். தோற்றத்தின் திரட்சியும், நளினமும் லயமும், முதலில் ரசிக்கப்பட வேண்டும். அதன இனிமையே ஒரு சுகானுபவம் என்று ரசனையை முதன்மைப் படுத்துகிறது இத்திறனாய்வு. பெரும்பாலும் மனப்பதிவு முறையிலேயே இது கூறப்படுகிறது. முக்கியமாக சொல்லிலும் ஓசையிலும் காணக் கூடிய ஒருவித ஒழுங்கமைவு,தொனி, பொருட்சுழற்சி, உணர்ச்சி வடிவங்கள், உவம, உருவகங்கள், ஆர்வத் தூண்டல்கள் முதலியவற்றை ரசனைக்குரிய பகுதிகளாக இது விளக்கவும் வருணிக்கவும் செய்கின்றது,  என்று அழகியல் திறனாய்விற்கு விளக்கம் அளிக்கிறார் தி.சு. நடராஜன்.
“அழகியல் திறனாய்வு என்பது ரசனை முறைத் திறனாய்வாக தமிழ்த்திறனாய்வுப் போக்கில் நிகழ்த்தப் பெற்று வந்துள்ளது. கம்பராமாணயம் பற்றிய ரசனை முறைத்திறனாய்வுகள் தமிழில் குறிக்கத்தக்க இடம்பெறுவனவாகும். ரசிகமணி டி.கே.சி, கல்கி, ராஜாஜி, அ. சீனிவாச ராகவன், தொ. மு. பாஸ்கர தொண்டைமான், வித்வான் ல. சண்முகசுந்தரம், அ.ச. ஞானசம்பந்தம் போன்ற அறிஞர்களின் பெரும் பட்டியல் கம்பராமாயணம் பற்றிய ரசனைமுறைத் திறனாய்வுக்கு உள்ளது. ~~இலக்கிய ரசனைக்குக் கவிதையே இவர்களுக்கு உகந்ததாக இருந்தது. எளிமை,தாளம், லயம், உணர்வு, சொல் இவற்றிற்கெல்லாம் கவிதையே இடம் தருவதாக இவர்களுக்குப்பட்டது. அதிலேயே லயித்துப் போய்ப் பொருள் விளக்கம் (முக்கியமாக பொழிப்புரை) தருவது இவர்கள் வழக்கம்” என்று ரசனை முறைத் திறனாய்வாளர்கள் பற்றிய மதிப்புரையை வழங்குகிறார் தி.சு நடராஜன்.
~~கம்பராமாயணத்தில் உள்ள ரசனைச் சுவை மிகவும் உயர்ந்தது. ரஸிகருடைய அறிவுக்கு அது அமுதமாக நிற்கின்றது. கம்பராமாயணத்தின் ரசனைச் சுவையை உணராமல் மற்ற சுகங்களை மாத்திரம் உணருகிறவர்கள் அதன் சுவையில் செம்பாதிக்கு மேல் இழந்துவிடுகிறார்கள்,  என்ற அமைப்பில் ரசனைமுறைத் திறனாய்வுகள் கம்பராமாயணத்திற்கு அமைந்தன.
ஓர் இலக்கியத்தை ரசிப்பது என்ற நிலையில் இருந்துச் சற்று மேம்பட்டது அழகியல் திறனாய்வு. ரசனை முறைத் திறனாய்வு என்பது பாராட்டு முறைத் திறனாய்வு வயப்பட்டதாக அமைந்துவிட அதிலிருந்து வேறுபட்டு அமைவது அழகியல் திறனாய்வாகின்றது. கம்பராமாயணம் காப்பியப் படைப்புகளில் மிக முக்கியமானது. அதன் அளவாலும், கவிவளத்தாலும் நிலையான இடத்தைத் தமிழ்க்காப்பியப் பகுதியில் பெற்றிருக்கிறது. குறிப்பாக இதனுள் இடம்பெறும் சுந்தரகாண்டம் என்பது அழகியல் சார்ந்த பல கருத்துகளைக் கொண்டமைகின்றது.
நவீனத்துவ ஆய்வுகள் வாசகனுக்கு முக்கிய இடம் தருகின்றன. வாசகர்களால் சுந்தரகாண்டம் அதிகம் படிக்கப்படுவதாக இன்றளவும் உள்ளது. இதற்கு சமய நம்பிக்கை ஒரு காரணமாக அமைகிறது என்பது ஒருபுறம். என்றாலும் சுந்தர காண்டம் என்பது மற்ற இராமயணப் பகுதிகளைக் காட்டிலும் மக்கள் மத்தியில் குறிக்கத்தக்க இடத்தைப் பெற்றுள்ளது. உரைநடைவடிவம், அல்லது சுருங்கிய கவிதைவடிவம், கம்பர் தந்த சுந்தரகாண்டம், வால்மீகி தந்த சுந்தர காண்டம் என்று பற்பல நிலைகளில் மக்களிடம் சுந்தரகாண்டம் சென்று சேர்ந்துள்ளது. இதற்கு மிக முக்கியமான காரணம் அழகியல் உணர்வு சார்ந்த பின்புலத்துடன் சுந்தர காண்டம் படைக்கப்பட்டிருப்பது ஆகும்.
~~கம்பன் பாடிய ஆறு காண்டங்களுக்குள்ளும் காவியத்துள் ஒரு காவியம் என்றே போற்றப்பெறுவது ஐந்தாவது காண்டமான சுந்தர காணடம் ஓர் அனுபவச் சுரங்கம். அள்ள அள்ளக் குறையாத பெருநிதியம். அறிதொறும் அறியாமை கண்டாற்போல அனுபவ எல்லை விரிந்து கொண்டே செல்லும்,  என்ற நிலையில் சிறப்பு வாய்ந்தது சுந்தரகாண்டம்.
~~சுந்தரம் என்பது உலக நூன்முறையால் இக்காப்பிய நாயகியாகிய சீதாபிராட்டியின் திருமேனியழகினையும், குணநலன்களையும் உணர்த்தி நின்றது. இக்காவிய நாயகனான இராமபிரானுடைய திருமேனியழகினையும் ஆன்ம குணங்களையும் உணர்த்தி நின்றது எனலும் ஆகும். அன்றியும் காவிய நாயகனான இராமபிரானது பணிமேற்கொண்டு கடத்தற்கரிய கடலையும் தாவிக் கடந்து புகற்கரிய பகைப்புலமாகிய இலங்கை நகரிற்புக்கு தேடிப் பிராட்டியைக் கணட தன மேலும் செயற்கருஞ்செயல் பல செய்து வென்றியோடு மீண்ட தலையாய தூதனான அநுமனுடைய அறிவும் ஆற்றலும் முயற்சியும் ஊக்கமும் எண்ணித் துணியும் திறமும் உரையாடற்றிறமும்; பிறகுண நலங்களும் ஆகிய பெருமையினை உணர்த்தி நின்றது எனினும அமையும்||  என்று இதற்கு சுந்தர காண்டத்திற்குப் பெயர்க்காரணம் சுட்டப் படுகிறது.
மேற்காட்டிய கருத்துகள் வழியாக சுந்தர காண்டம் அழகியல் சார்ந்தமைவது என்பது தெற்றெனத் தெரிகின்றது. கம்பராமாயணத்தில் சுந்தர காண்டத்தை மட்டும் இக்கட்டுரை அழகியல் நோக்கில் அணுகுகின்றது.
இராமனின் அழகு, சீதையின் அழகு ஆகியன அனுமனால் எடுத்துரைக்கப்படுவதாகக் கம்பர் படைத்துள்ளார். இராமனின் அழகையும், சீதையின் அழகையும் இருபது, இருபது பாடல்களில் வடித்துள்ளார் கம்பர். ஆனால் இவ்விரு அழகுகள் சொல்லப்படும் முறை வேறு வேறு அழகுகளை உடையதாக உள்ளன.
அனுமன் காட்டும் இராமனின் அழகு

அசோக வனத்தில் இருக்கும் சீதாபிராட்டி அனுமனை இராமதூதன் எனத் தெளிந்தபின் அவனிடம்
 அய்ய! சொல்! அனையன் மேனி எப்படித்து அறிவி || என்று கேட்கிறாள்.
இதற்கு அனுமன் இராம அழகை அடி முதல் முடி ஈறாக|| அறிவுறச் சொல்லத் தொடங்கினான்.
இராம அழகு
படியெடுத்து உரைத்துக் காட்டும் படித்து அன்று: படிவம்,பண்பின்
முடிவுள உவமைக்கு எல்லாம் இலக்கணம் உரைக்கின் முந்தா
என்று படி எடுக்கமுடியாத அளவிற்குப் பெருமையும், உவகைளால் எட்டமுடியாத அழகும் கொண்டு இருப்பதாக அனுமன் கருதுகின்றான். இராமபிரானின் உருவ நலனைப் பின்வரும் நிலையில் அனுமன் எடுத்துக்காட்டுகின்றான்.
திருவடிகள்
சேயிதழ் தாமரை போன்றன என்றால் தாமரை மலரும் குவியும். ஆனால் திருவடிகள் மலர்ந்தே இருக்கும். பவழத்தை உவமை காட்டினால் பவழம் இராமபிரானின் கால்களின் சிவப்பிற்குப் பொருந்தாமல் குவளை மலர்போல பொலிவழியும்.
திருவடி விரல்கள்
இராமபிரானின் கால் விரல்களுக்குக் கற்பக மரத்தின் மொட்டுகள் ஒக்கும் என்றாலும், பவழத்தின் இளங்கொடி ஒக்கும் என்றாலும் அவை ஒரு புறம் அழகற்றுக் கிடக்கும்;. சூரியனின் இளங்கதிர்; போன்று இராமபிரானின் கால்விரல்கள் ஒளிபெற்றுத் திகழ்ந்தன என்றால் அது சரியாகும்.
திருவடி விரல்களின் நகங்களின் அழகு
திருவடியின் விரல்களில் உள்ள நகங்கள் பிறைச்சந்திரனைப் போன்றன என்றால் திங்கள் பத்து என்ற எண்ணிக்கையில் இல்லை. விரல்;கள் வயிரம் போன்றன என்றால் அவற்றில் திரட்சி இல்லை. எனவே விரல் நகங்களுக்கு உவமை கூற இயலாது.
திருவடிகளின் செய்கை
நிலவுலகையே அளந்து, கடந்து நிற்கும் திருவடிகள் நிலத்;தில் வந்து பொருந்தின, காட்டில் நடந்தன என்றால் அவற்றின் எளிமை பாராட்டத்தக்கது. இராமன் உலகினைக் கடந்து நிற்பவன் என்று ஞானநூல்கள் உரைக்கின்றன. அவன் நிலஉலகில நடந்தான் என்றால் அந்த நூல்கள் சொன்ன கருத்துகள் முரண்பாடுகள் உடையதாகும். ஞான நூல்களால் உணரப்படாத திருவடிகளின் பெருமையை உரைத்துவிட முடியுமா?
இறையடியார்கள் இறைவின் பாதங்களுக்கு மிகுந்த முக்கியத்துவம் அளிப்பர். இறைவன் பாதங்களை அடையும் சரணாகதி நிலையே உயிரை உய்விக்க வல்லது என்ற நிலையில்; இங்கு அனுமன் உயிர்களுக்கு இறைவனின் பாதச் சிறப்பினை எடுத்துரைப்பதாக சுந்தரகாண்டம் படைக்கப்பெற்றுள்ளது.
கணைக்கால்
கணைக்கால் அம்பறாத்தூணியை ஒத்திருந்தது என்று சொல்லாம் என்றால் தன்னை அடைந்தவரைக் காக்கும் சிறப்புடையது இறைவனின் கால்கள். அக்கால்களுக்கு அழிக்கத் துணைபுரியும் அம்புகள் வைக்கும் புட்டியை உவமை காட்டுவது பொருத்தமாக இருக்காது.
தொடைகள்
இராமபிரானின் தொடைகள் கருடனின் பிடரியை, மதயானையின் துதிக்கையை ஒத்திருந்தன என்று சொன்னால் அவை நாணம் அடையும். அந்த அளவிற்கு அழகு வாய்ந்தனவாக தொடைகள் அமைந்திருந்தன.
திருவுந்தி
வலப்புறமாகச் சுழித்து ஓடும் கங்கையாற்றின் நீர்ச்சுழலை ஒத்து அமைவது திருவுந்தி என்று சொன்னால் அதுவும் பொருந்தாது. மகிழம்ப+வை ஒத்தது என்று சொன்னாலும் அது பொருந்தாது.
திருமார்பு
மரகத மலை குறுகும்படியாக அகன்ற மார்பு இராமனுடையது. அதில் நீங்காமல் உறையும் திருமகள் பெற்ற செல்வமே உயர்ந்த செல்வம். இதனில் சீதாபிராட்டி இராமனின் நெஞ்சத்தில் நீங்காமல் இருக்கிறாள் என்ற குறிப்பும் உள்ளது.
கைத்தலங்கள்
இராமனின் கரங்கள் தாமரை போன்று காணப்படுவதால் அக்கரங்களைச் சுற்றிலும் வண்டுகள் மொய்த்துக் கொண்டே இருக்கும் பெருமை மிக்கது. அக்கரங்களுக்கு ஐராவத யானையின் துதிக்கையை உவமை காட்டினால் ஓரளவிற்குப் பொருந்தும்.
கைத்தல நகங்கள்
இராமனின் கை சூரியனைக் கண்டால் மலரும் தாமரையை அழகில் ஒத்தன. அவை வச்சிர யாக்கை உடைய இரணியனைப் பிளந்த செயல் உண்மையானதுதானா என்று அதன் மென்மைத்தன்மை குறித்து ஐயப்படுவார்கள் ஆனால் அவர்கள் நகங்களைப் பார்த்தால் அச்செயல்; உண்மைதான் என்று காட்டும் அளவிற்கு வலிமையைக் காட்டி நிற்கும்.
திருப்புயங்கள்
புயங்களுக்கு மலையை உவமை காட்டலாம் என்றால் பொருந்தாது. ஏனெனில் இராமனின் தோள்கள் போல் மலைகள் திரட்சியும் ஒளியும் உடையன அல்ல. திருமகள் மலையில் சேர்ந்திருப்பதில்லை. மலையில் வில்லின் நாண் புரளாது. இராமனின் தோள்கள் போல மலைகள் புகழ்பெற்றன அல்ல.
திருமிடறு
இராமனின் கழுத்துக்கு பாக்கு மரத்தையும், உப்புக்கடலில் கிடக்கின்ற சங்கையும் உவமை காட்டலாம் என்றால் அது பொருந்தாது. திருமாலின் இடது கரத்தில் உள்ள பாஞ்சசனியம் என்ற சங்கு ஒருவழியில் உவமையாகலாம்.
திருமுகம்
இராமபிரானின் திருமுகம் சந்திரன் போன்றது என்று சொன்னால் அது தேய்வும் வளர்வும் இல்லாத நிறைத்தன்மை உடையது. எனவே அது பொருந்தாது. அவரின் முகத்திற்கு தாமரையை உவமை காட்டினால் கண்களுக்கு எதனைக் காட்டுவது.
திருவாய்
தாமரை மலர்போன்றது திருவாய் என்றால் தாமரை அது கேட்டு நாணும். பவழம் திருவாய்க்கு உவமையாகும் என்றால் அது வெண்ணகை புரியாது. இனிய சொற்களைப் பேசாது.
பற்கள்
இராமனின் பற்களுக்கு முத்து, நிலவு, அமுதம், முல்லை, மயிலிறகின் அடிக்குருத்து, புன்னைமொட்டு, அறம் என்னும் வித்திலிருந்து கிளைத்த முளை ஆகிய யாவும் பொருந்துமா? அறங்கள் முப்பத்திரண்டு. அதுபோன்று பற்களும் முப்பத்திரண்டு என்று குறித்திருப்பது இங்குக் கருதத்தக்கது.
திருமூக்கு
இந்திர நீலக்கல்லில் எழுந்த ஒளி, மரகதமணியின் ஒளித்திரட்சி ஆகியன இராமபிரானின் மூக்கிற்கு ஒப்புகையாகும் என்றால் அது பொருந்தாது. இந்திரகோபப்பச்சியைக் கவ்வ வரும் பச்சோந்தியும் மூக்கிற்கு உவமையாக அமையாது.
திருப்புருவங்கள்
இராமனின் புருவங்கள் கரன் முதலான அரக்கர்களைக் கண்டதும் வளைந்தன. இதன் காரணமாக வில்லும் வளைந்தது. அரக்கர்கள் அழிந்தனர். இனி அரக்கர் குலம் அழந்தது என்ற வாழ்த்தொலி கேட்டது. அந்த வளைந்த வில் போன்றது இராமபிரானின்; புருவங்கள். இங்கு இராமபிரான் அரக்கர்களை அழிக்க வருவார் என்ற செய்தியும் இணைத்துச் சீதாபிராட்டிக்கு உணர்த்தப்பட்டு ஆறுதல் அளிப்பதாக இப்பகுதி அமைகிறது.
திருநெற்றி
எட்டாம் நாள் சந்திரன் வளர்தல், தேய்தல் இல்லாமல், நாள்தோறும் தோன்றல் மறைதல் இல்லாமல், இராகு என்ற கோளால் விழுங்கப்படாமல் இருந்தால், களங்கமே இல்லாமல் இருந்தால் இருளின் அழகான நிழலில் பல காலம் இருந்தால் இராமபிரானின் நெற்றிக்கு உவமையாக அமையலாம்.
திருக்குழல்
நீண்டு, திரண்டு, பளபளப்புடன், கருத்து, நீலமணியின் நிறத்தைப்பெற்று, முறுக்குண்டு, பின்னே தாழ்ந்து, நுனி சுருண்டு, தெய்வத்தன்மை பொருந்திய இயற்கைமனத்துடன் திகழ்ந்த இராமபிரானின் திருமுடி சடையாக மாறிவிட்டது. இதனை மழை என்று உவகை காட்டுதல் பொருந்தாது.
நடை
அரசு ஏற்கத் துணிந்த நாளினும், ஆட்சிச் செல்வம் கிடைக்காமல் துன்பம் நிறைந்த காட்டில் வாழும் நாளிலும் தன்தன்மை மாறாத நடையை உடையவர் இராமபிரான். இவரின் நடை காளையிடத்தில் உள்ளது என்று சொன்னால் மதயானை வருந்தும்.
இவ்வாறு இராமபிரானின் அழகை    அடிமுதல் முடிவரை சீதாபிராட்டியிடம் அனுமன் எடுத்துரைக்கிறான். மேற்கண்டவற்றில் இருந்து ஒட்டுமொத்தமாகப் பெறப்படும் செய்தி உவகைளுக்கு அப்பாற்பட்ட வடிவழகு உடையவன் இராமன் அல்லது இறைவன் என்பதை உணரமுடிகின்றது.
மேலும் சங்கப்பாடல்களிலும், காப்பியங்களிலும் பெண்களின் அழகு கேசாதிபாதமாகச் சுட்டப்பெறும். பெண்களின் அழகை வருணிக்க உவமைகள் பலவற்றைப் புலவர்கள் புனைந்தேத்துவர். ஆனால் கம்பர் இராமன் என்ற ஆண்மகனை அழகின் உயர்நிலையில் படைக்கின்றார். இது மிகப்பெரிய வேறுபாடாக கருதத்தக்கது.  ஒரு ஆண்மகன் மற்றொரு ஆண்மகனின் உருவ அழகை வருணிக்கும் நிலைப்பாட்டில் கம்பரின் அழகியல் உணர்வு இங்குச் செயல்பட்டுள்ளது. அனுமனைச் சற்று மறந்து அந்த இடத்தில் கம்பனை அமரவைத்து இராம அழகைத் தரிசித்தால் அது வாசகனுக்கு இன்னும் அழகுணர்வினைக் கூட்டும். கம்பர் கொண்டுள்ள இராமபக்தியை விளக்கும். இராம அழகில் உவரு நலன் காட்டப்பெறுவதைவிட இராமனின் வீரம், வலிமை, எளிமை, புகழ் ஆகியன எடுத்துரைக்கப்பெற்றுள்ளன என்பது கவனிக்கத்தக்கது.
இதே கம்பர் அனுமன் சீதையின் அழகை இராமனிடம் கூறும்போது கையாளும் அழகுணர்வு முற்றிலும் வேறுபட்டு அமைகின்றது.    சீதையைக் கண்ட அனுமன்,  சீதாபிராட்டியின் நிலையையும் அவளின் இருப்பையும் காட்டுவதாக இருபதுபாடல்களைப் படைத்துள்ளார் கம்பர். இப்பாடல்களில் சொல்லடுக்குகளையும், சொல் விளையாட்டுகளையும் கம்பர் உத்திகளாகப் பயன்படுத்தி அழகுணர்ச்சியை ஏற்படுத்தியுள்ளார். இவ்வழகு வெளி;ப்பாட்டில் வருணனைகளோ, உவமைகளோ, கேசாதிபாதமோ, பாதாதி கேசமோ இடம்பெறவில்லை. ஆனால் படிக்கும் வாசகன் இராமனின் அழகைக் கூறும் பாடல்களை விட சீதையின் அழகு கூறப்படும் பாடல்களை அதிகம் படித்து இன்புறுகின்றான். இதற்கு உரிய காரணங்கள் ஆராயப்படவேண்டியதாகும்.
சீதையின் அழகை குடும்பப் பெருமையில் இருந்து கூறத் தொடங்குகிறான் அனுமன். அதிலிருந்து தொடங்கி இராவணன் சிறையில் சீதாபிராட்டியைத் தான் கண்டதுவரை எடுத்துரைக்கின்றான். அனுமனின் இக்கருத்து வெளிப்பாட்டில் கதைக்கோப்பு இடையீடுயின்றி வளர்த்துச் செல்லப்பெற்றுள்ளது.
குடும்பப் பெருமை
சீதாபிராட்டி இராமபிரானுக்கு ஏற்ற மனைவியாகவும், தசரத மன்னனுக்கு ஏற்ற மருமகளாகவும்,  மதிலை ஜனக மன்னனின் புதல்வியாகவும் உரிமை, வாய்மை, தகைமை ஆகிய பண்புகளுக்கு இலக்கணமாக விளங்குகிறாள்.
பொறுமை
பொன் அலது இல்லை பொன்னை ஒப்ப எனப் பொறையில்; நின்றாள்
தன் அலது இல்லைத் தன்னை ஒப்பு எனத்தனக்கு வந்த
நின் அலது இல்லை நின்னை ஒப்பு என நினக்கு நேர்ந்தாள்
எனஅலது இல்லை என்னை ஒப்புஎன எனக்கும் ஈந்தாள் (1306)
என்ற இப்பாடலில் சீதை பொன் போன்று பொறுமையுடன் இருந்தாள் என்ற பண்பு எடுத்துரைக்கப்படுகிறது. இப்பாடலில் அலது, இல்லை, ஒப்பு, என ஆகிய சொற்கள் அடிதோறும் பயின்று வந்து சொல்லழகு செய்கின்றன.
குலப்பெருமை
சீதை இராமனின் குலப்பெருமைக் காத்து நிற்கிறாள். தன் குலத்தையும் சிறப்புறச் செய்தாள். இராவணனின் குலத்தைக் கூற்றுவனுக்குக் கொடுத்தாள். தேவர்கள் குலமும் இதனால் வாழ்ந்தது. வானவர் குலத்தையும் வாழ வைத்தாள். இப்பாடலில் குலம் என்ற சொல் அடிதோறும் வந்து இனிமை கூட்டியுள்ளது.
இற்பிறப்பு, இரும்பொறை, கற்பு
வில்லை உடைய இராமபிரானே, இலங்கையில் சீதை என்ற பெண்ணைக் காணவில்லை. உயர்குடிபிறப்பு, பொறுமை, கற்பு என்ற மூன்றும் களிநடம் புரியக் கண்டேன் என்று அனுமன் கூறுவதாக கம்பர் படைக்கின்றார்.  அனுமன் பெண் என்னும் நோக்கில் சீதையைக் காணவில்லை என்பதற்கு இப்பாடல் மிக முக்கியமான சான்று. உயர்ந்த ஒழுக்க சீலர் ஒருவரைக் கண்ட காட்சியாக சீதாபிராட்டியைக் கண்டுள்ளான் அனுமன்.
கண்ணிலும் கருத்திலும் எண்ணத்திலும் இராமன்
சீதா பிராட்டியின் கண்ணிலும், கருத்திலும், சொல்லிலும், அவள் மார்பகத்திலும் இராமபிரான் இருப்பதைக் கண்டேன் என்று அனுமன் குறிக்கின்ற இப்பாடலில் உளை, நீ ஆகிய சொற்கள் திரும்பத் திரும்ப வந்துப் பாடலுக்கு அழகு சேர்க்கின்றன.
சீதையின் இருப்பிடம்
இலங்கையில் காலை, மாலை எனப் பகுத்தறிய முடியாத ஒளிமிக்கக் கற்பகச் சோலையில் தம்பி இலக்குவன் புல்கொண்டு அமைத்த பர்ணசாலையில் தவம் செய்த தவம் ஆம் தையலாக சீதை வீற்றிருந்தாள் என்று சீதை இருந்த இருப்பிடத்தை அனுமன் காட்டுகின்றான். இப்பாடலில் இடம்பெற்று தவம்செய்த தவமாம் தையல் என்ற சொல்சேர்க்கை அழகுமிக்கது.
இராவணன் பெற்ற சாபம்
சீதையை மண்ணொடும் கொண்டு போனான் இராவணன் என்று அனுமன் குறிப்பிடுகின்றான். இந்தப் பகுதி தமிழ் மரபினைப்பின்பற்றியதாகும். வடமொழியில் பற்றி இழுத்துச் செல்லப்பெற்றாள் சீதை. ஆனால் இங்கு இம்முறை மாற்றப்பெற்றுள்ளது. அதற்குத் துணையாக கம்பர் ஒரு நிகழ்வையும் இதனோடு இணைத்துச்சொல்லுகிறார். பிரம்மன் இராவணனுக்கு விரும்பாத ஒரு பெண்ணைத் தீண்டினால் எண்ணிலாத கூறுகளாய் உடல சிதறி இறப்பாய் என்று ஒரு சாபம் இட்டுள்ளார். அதனால் சீதையின் மேனியைத் தீண்டாமல் மண்ணோடும் பெயர்த்து எடுத்துக்கொண்டு இராவணன் சென்றதாக கம்பர் படைக்கின்றார். தமிழ்மரபினை காக்கும் அழகியல் இங்குச் செயல்பட்டுள்ளது.
சீதையை தீண்டாத இராவணன்
இராவணன் சீதையைத் தீண்டவில்லை என்பதற்கு பிரம்மன் படைத்த அண்டம் வெடிபடவில்லை என்பதாலும், ஆதிசேடனின் ஆயிரந் தலை பெற்ற படங்கள் கிழிந்து போகவில்லை என்பதாலும், கடல் கரையைக் கடக்கவில்லை என்பதாலும், சூரிய சந்திரர்கள் கீழேவிழவில்லை என்பதாலும் இராம பிரானே நீவீர் அறிந்து கொள்ளலாம் என்று அனுமன் இராமனிடம் கூறுகின்றான். இப்பாடலில் இலது, இல என்ற இன்மைக் குறிப்புகள் இடம்பெற்றுப் பாடலைச் சிறக்கச் செய்கின்றன.
தேவர் வியக்கும் கற்பு
சீதாபிராட்டியின் கற்பின் சிறப்பினால் தேவர்களின் தேவியரும் கற்பினால் பெருமை பெற்றனர். சிவபெருமான் இடப்பாகத்தில் இருந்த பார்வதி கற்பின் திண்மையால் சிவன் தலையில் இருக்கலானாள். திருமாலின் மார்பில் இருந்த திருமகளும் அவரின் தலைமீது இருக்கலானாள். சோகத்தாள், பாகத்தாள், மகுடத்தாள், பதுமத்தாள், ஆகத்தாள் என்ற சொற்கள் இங்கு ஒத்த ஒலிக்குறிப்பினைத் தருவதாக உள்ளது.
சீதையைத் தேடிக் கண்டறிந்த முறை
இலங்கை முழுவதும் தேடிப்பார்த்து, இராவணனின் இருக்கையிலும் தேடிப்பார்த்து,  அசோக வனத்தில் கண்ணின் நீர்க்கடலின் இடையே தேவமகள் போன்ற  சீதையைக் கண்டேன்; என்று அனுமன் சீதையைக் கண்டறிந்த செய்தியைக் குறிப்பிடுகிறான். கண்ணின் நீர்க்கடலில் கண்டேன் என்ற தொடர் அழகுமிக்கது.
அரக்கியர் நடுவே சீதாபிராட்டி
பேய் போன்ற அரக்கியர் பாதுகாவலுக்கு இடையில் இராமபிரானே உன் மேல் கொண்ட அன்பின் காரணமாக அச்சத்தைப் போக்;கி இரக்கம் என்ற பண்பு பெண் வடிவம் பெற்றால் எப்படி இருக்;குமோ அப்படி அந்தச் சிறையில்  சீதாபிராட்டி இருந்தாள். நின்பால் நேயமே அச்சம் நீக்க இரக்கம் என்ற ஒன்று தானே ஏந்திழை வடிவம் எய்தி தருக்கு உயர் சிறை உற்றன்ன தகையள் அத்தமியள்|| என்ற அடிகள் அழகியல் வயப்பட்டன.
இதன்பின் இராவணன் வந்து சீதாபிராட்டியைப் பணிந்தது, இரந்தது, அவள் கடுஞ்சொல் சொன்னது, பின் அரக்கியர்களைப் புத்தி கூறச் சொன்னது, அரக்கியர் உறங்கியது, பிராட்டி தற்கொலை புரிந்து கொள்ளச் சென்றது, தடுத்து அனுமன் இராம நாமம் சொன்னது போன்ற செய்திகள் விரிகின்றன.
இதன்பின் மோதிரத்தைச் சீதாபிராட்டியிடம் அனுமன் தருகின்றான். அப்போது அம்மோதிரத்தைச் சீதாபிராட்டி அணைக்க அது உருகியதாம்.  மோதிரம் பட்ட மகிழ்ச்சியால் ஏற்பட்ட குளிர்வால் அம்மோதிரம் உடன் குளிர்ந்து தன் நிலை பெற்றது என்று கம்பர் காட்டுகின்றார்.
அனுமன் சொல்லிய இப்பகுதிகளில்  சீதா பிராட்டியின் உருவ நலன் எடுத்துரைக்கப்படவில்லை. சீதாபிராட்டியின் புறஅழகினைக் கடந்து அக அழகினை அனுமன் கண்டு உரைப்பதாக இப்பாடல்கள் பாடப்பெற்றுள்ளன. மேலும் கண்டனென் கற்பினுக்கு அணியைக் கண்களால்- என்ற தொடர் அனுமனின் நிலைப்பாட்டை எடுத்துரைப்பதாக உள்ளது.
இராமனின் அழகை அடி முதல் முடி வரை உவமைகளால் அழகுபட புனைந்த கம்பரால் ஏன் சீதையின் அழகு அவ்வாறு சொல்லப்படவில்லை என்பது இங்கு எண்ணத்தக்கது. மேலும் தமிழ் இலக்கியங்களில் பெண் பாத்திரப்படைப்புகள் உருவ அழகிற்கு முக்கியத்துவம் தந்து அவற்றைப் பல பட விரித்துரைக்கும். இப்படி ஒரு வாய்ப்பு வந்தபோதும் அதனை மறுத்து சீதாபிராட்டியை ஒழுக்க சீலர் ஒருவரைப் பாராட்டும்படியாகக் காட்சிப்படுத்தியிருப்பதற்கான காரணம் என்ன என்று எண்ண வேண்டியுள்ளது.
அனுமன் என்ற ஆண்மகன், திருமணமாகாதவன், தொண்டன் தான் வணங்கும் தெய்வமாக விளங்கும் இராமனின் துணையைக் காணுகையில் அவன் உள்ளத்தில் ஏற்படும் மரியாதை உணர்ச்சி இங்குக் கம்பரால் வெளிப்படுத்தப்பெற்றுள்ளது. ஆண் மற்றொருவரின் மனைவியாக விளங்கும் பெண்ணைக் காட்சிப்படுத்துகையில் இத்தகைய மதிப்பு மிக்க தன்மை வரவேண்டும் என்று கற்போருக்குக் கம்பன் உணர்த்துகிறான். சாதாரண ஆண்மகன் பார்க்கும் சாதாரணப் பார்வையில் இருந்துக் காப்பிய மாந்தர்களை வேறுபடுத்திப் பண்பாடு மிக்க உயர் பாத்திரங்களாக படைக்கக் கம்பர் உறுதி கொண்டுள்ளார். இதைக் கற்கும் அனைவர் உள்ளத்திலும் மற்றவர் மனைவி என்றால் அவளின் அழகு தெரியாமல் அவளின் கற்புத் திறம் தெரியவேண்டும் என்று கம்பர் எண்ணியுள்ளார்.
உவமைகள் வாயிலாக இராம அழகை வெளிப்படுத்த விழைந்த கம்பன் சொல்லடுக்கு, சொல்லழகுகளைக் கொண்டு சீதையின் அழகினை விவரித்திருப்பதற்குக் கம்பருக்குள் உள்ள உயர்பண்பாடு காரணம் என்பதைச் சுந்தர காண்ட அழகுகள்; எடுத்துரைக்கின்றன. அழகு வெறும் உருவ அழகு மட்டும் சாரந்தது அல்ல என்பதை விளக்குவதாகவும் உள்ளது.
இராமன் கேட்கிறான், இராமனை வணங்குபவர்கள் கேட்கிறார்கள் என்ற எண்ணத்தில் சீதாபிராட்டியின் அழகு  மிகுந்த கவனத்துடன் கற்பினை முன்னிறுத்தி கம்பரால் எடுத்துரைக்கப்பெறுகிறது. ஆணை அழகுபட வருணித்தல், பெண்ணை அவளின் குணங்களின் வழியாக அடையாளம் காட்டுதல் என்ற நாகரீக மரபு இந்தச் சுந்தரகாண்டத்திற்குள் இடம்பெற்றுள்ளது, பிறன் மனை நயத்தல் தவறு என்ற அடிப்படை கோட்பாட்டில் சற்றும் விலாகமல் அனுமன் இங்குக் கம்பன் வாயிலாகச் செயல்பட்டுள்ளான்.
இராம அழகைக் கம்பன் பாட உவமைகள் கைகொடுத்தன. சீதை அழகைப் பாட சொற்சேர்க்கைகள் கைகொடுத்துள்ளன. கற்பவர்களுக்கு உவமை அழகைவிட சொல்லழகுகள் சுகம் தருகின்;றன என்பதை சீதாபிராட்டியின் நிலையைக் கூறும் பாடல்கள் அதிக அளவில் பயன்படுத்தப்படுவதன் வாயிலாக உணரமுடிகின்றது.
கவிஞன் தன் ஒவ்வொரு பாடலையும் வாசகர் மனதில் இடம்பிடிக்க ஏற்றவகையில் அமைக்கவேண்டும் என்ற பேராவல் கொண்டுப் படைக்கின்றான். கவிச்சக்கரவர்த்தி தன் ஒவ்வொரு பாடலையும் மக்கள் மனதில் இருத்த பற்பல உத்திகளைக் கையாளுகின்றார். சீதையின் அழகினை, இராமனின் அழகினை வாசகர்கள் தமக்குள் ஏற்க இத்தகைய உத்திகளைக் கையாண்டுள்ளார்.
ஒட்டு மொத்தத்தில் அழகு என்பது மற்றவர் பார்வையில் உருவம் சார்ந்து அமைவதல்ல. மனநலன், குணநலன், ஒழுக்க நலன் சார்ந்து அமைவது. மதிப்புகளின் அடிப்படையில் அழகு வரையறுக்கத்தக்கது என்பதை சுந்தரகாண்டம் எடுத்துக் காட்டுகின்றது.
-----------------------------------------------------------------------------------------------------------
பயன் கொண்ட நூல்கள்
அண்ணாமலைப் பல்கலைக்கழகம், கம்பராமாயணம்,சுந்தர காண்டம், (இருபகுதிகள்), இரண்டாம் பதிப்பு 2010
நடராஜன். தி.சு., திறனாய்வுக் கலை, என்சிபிஎச், ஏழாம் பதிப்பு 2010
பழனியப்பன், பழ., சுந்தரகாண்டம் புதிய பார்வை, வானதிபதிப்பகம், 2008
கம்பமலர், அகில இலங்கைக் கம்பன் கழகம், 15 ஆம் ஆண்டுமலர், 1995
ஜெயராசா.சபா.கலாநிதி,, அழகியல், அம்மா வெளியீடு, இணுவில், மருதனா மடம், இலங்கை, 1989

கருத்துகள் இல்லை: