சனி, ஜூலை 13, 2024

பெரிய துறவாண்டவர் வரலாறு

 

கோவிலூரின் கதை -2                                        பெரிய துறவாண்டவர் வரலாறு

 


 

முனைவர் மு.பழனியப்பன், தமிழ்த்துறைத் தலைவர்,

                                    அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, திருவாடானை

 

பெரிய துறவு

            வேதாந்த ஞான சூரியனாக விளங்கிய கோவிலூர் ஆண்டவர் முத்தி ராமலிங்கரிடத்தில் அன்பும், பணிவும், குரு பக்தியும் கொண்டு மகிழ்ந்து,  ஞான வாழ்க்கையைக் கைவரப் பெற்றவர்கள் பலர். அவர்களுள் முதன்மையானவர் பெரிய துறவாண்டவர் என்றழைக்கப்பட்ட அருணாசல சுவாமிகள் ஆவார்.

            தேவகோட்டையில்  வாழ்ந்த, வினைதீர்த்தான் செட்டியார், முத்தாத்தாள் ஆச்சிக்கு இரு மகன்கள் பிறந்தனர். அவர்களுக்கு அருணாசலம், சிதம்பரம் என்று பெயரிட்டு வளர்த்து வந்தனர்.  பிள்ளைகள் இருவரும் பிறவியிலேயே அருள் நாட்டம் உடையவர்களாகத் திகழ்ந்தனர்.  வளர்ந்தனர். கற்றனர். இருவருக்கும் திருமணமும் முடித்து வைக்கப்பட்டது.

            முன்னவரான அருணாசலம் தன் குடும்பத்தின் வருமானத்திற்காகத் தொழில் செய்தவற்காக திருநெல்வேலிக்குச் சென்றார். திருநெல்வேலியில் வேலை பார்த்து வரும் காலத்தில் அவருக்கு உற்ற தோழராக விளங்கியவர் மற்றொரு அருணாசலம். இவர் கண்டனூரைச் சார்ந்தவர். இருவரும் ஒருவரை ஒருவர் நன்றாக அறிந்து பழகினர். இருவருக்கும் அருள் நாட்டம் ஏற்பட்டு உலக வாழ்வு சுமையாகத் தெரிந்தது.

            இதன் காரணமாக  உலகப் பற்றில் இருந்து விடுதலை பெற இருவரும் ஞானவழியைத் தேடினர். பல நூல்களைப் படித்தனர். துறவு, முக்தி நெறி பற்றி அறிந்து கொள்ள யாது செய்வது எனத் தெரியாது கவலையுற்றனர்.  கோவிலூர் மடாலயத்தின் ஆண்டவர் இவர்கள் தேடிய ஞானவழிக்கு முதல்வராக விளங்கினார். அவரை இருவரும் சென்றுச் சந்தித்தனர். தங்களின் நிலையைத் தெரிவித்தனர். ஆண்டவரிடம் பாடம் கேட்டனர். அத்தோடு பல நூல்களைத் தாமே படிக்கவும்  செய்தனர். அஞ்ஞாத வதைப் பரணி படிக்கவேண்டும் என்று அந்நூலைத் தேடி இருவரும் அலைந்தனர். அந்நூல் குன்றக்குடி ஆதீனத்தில் இருந்ததாகக் கேள்விப்பட்டு அங்குச் சென்று அந்நூலைத் தரக் கேட்டனர். அங்கு ”பரணி படித்தெல்லாம் துறவியாவது ஆகாத காரியம்” என்று சொல்லிக் கொண்டே அந்த நூலை அவர்களுக்கு வழங்கினர். அச்சொற்கள் இருவரையும் இன்னமும் துறவின் மீதான எண்ணத்தை மிகுதிப் படுத்தியது.

பெரிய துறவும், சின்னத் துறவும்

 ஆண்டவரின்  அனுமதி பெற்று  இருவரும், இல்லற வாழ்வினைத் துறந்து நெடுங்குடியில்  உள்ள கைலாசநாதர் ஆயலத்தில் உள்ள தட்சிணாமூர்த்தி சன்னதியில் துறவு நிலையை மேற்கொண்டனர்.  தேவகோட்டை அருணாசலத்திற்கு வயது சிறிது அதிகம். அதனால் அவர் பெரிய துறவு எனப் பெயர் பெற்றார். கண்டனூர் அருணாசலம் சிறிய துறவு ஆனார்.   இவர்கள் இருவரும் சிதம்பரம் சென்று பரம்பொருள் திருவடியைச் சிந்திக்கத் துவங்கினர்.

            சிதம்பரத்தின் வடக்குக் கோபுரம் சின்னத்துறவு ஆண்டவரின் தவம் செய்யும் இடமானது. பெரிய துறவின் தவம் செய்யும் இடம் கேணி மடமாக விளங்கியது. இருவரும் சுவாமி தரிசனத்திற்கு வருகையில் சந்தித்துக் கொள்வது என்ற நிலையில் துறவுப் பயணம் தொடர்ந்தது.

அப்பன் தந்த அன்னம்

            இருவரும் தமக்கென எப்பொருளும் கொள்ளாது, பிச்சை புகுந்து உண்டு வந்தனர்.  ஒருமுறை இருவரும் திருவெண்காடு சென்று இறைவனைத் தரிசித்து அங்கேயே தங்க வேண்டிய நிலை வந்தது. இவர்கள் இருவரும் பிச்சை புகுந்து உண்ணும் கொள்கையினர் என்பதால் அன்று இரவு இவர்களுக்குப் பிச்சை தருபவர் யாரும் இல்லை. பசியோடு இருவரும் சற்று தீர்த்தம் அருந்திக் களைப்புற்று இருந்தனர். அந்நேரத்தில் கோயிலின் உள்ளிருந்து ஆதி சைவர் ஒருவர் இறைவனின் பிரசாதத்தைத் தந்து இவர்களின் பசியாற்றினார். இனிது உண்டு இருவரும் உறங்கினர்.

 

            அடுத்தநாள் காலையில் மீளவும் சாமி தரிசனம் செய்யச் சென்றபோது, அதே உருவில் இருந்த ஆதிசைவர் ‘‘ நேற்று தாங்கள் எங்கு உண்டீர்கள்? எங்கு தங்கினீர்கள்” என்று கேட்க இவர்கள் இருவருக்கும் அவரின் கேள்விகள் ஆச்சர்யத்தை அளித்தன. ‘‘தாங்கள் தானே இறை பிரசாதத்தைக் கொண்டு வந்து தந்தீர்கள் ” என்று சொல்ல அவரோ நான் இரவில் தங்களைக் காணவே இல்லை. எதுவும் தரவே இல்லையே ” என்று மறுத்தார். வந்தவர் ஆதிசைவர் அந்தப் பரம்பொருள் என்றே இருவரும் உணர்ந்தனர். பசிக்குப் பாலமுது தரும் பரமசிவன் தமக்கும் அருளிய மேன்மையை எண்ணி இருவரும் கசிந்து உருகி அவனைத் தொழுதனர்.

பாத்திரம் அறிந்து பிச்சை கொள்வோம்

            பெரிய துறவும், சின்னத் துறவும் பிச்சைப் பாத்திரம் ஏந்திச் சென்றபோது ஏற்பட்ட திருவிளையாடல்கள் பலப்பல. ஒருமுறை ஒரு வீட்டின் முன் பிச்சை ஏற்று நிற்க, அந்த வீட்டில் அன்னம் சமைக்கக் காலதாமதம் ஏற்பட்டு விட்டது. அவசர அவசரமாக அன்னத்தைப் பொங்கி அவ்வில்லத்தின் அம்மையார் பிச்சை அளித்தார். சுடச் சுட அன்னம் நீருடன் கலந்திருக்க அதனைத் தாங்காது பெரிய துறவு பாத்திரத்தைச் சற்று வேகமாக அசைக்கிறார். அருகில் இருந்த சுவற்றில் அவ்வன்னம் பரவி ஓடியது. சூடு தனிந்தது. சுவற்றியல் ஒட்டிய அன்னத்தைச் சேகரித்து பெரிய துறவு உண்டார். இல்லத்து அம்மையார் கண்களில் தவற்றினுக்கு மன்னிப்பு கேட்டுக் கண்ணீர் சிந்தினார்.

 

            மற்றொரு முறை அலங்காரமான ஒரு வீட்டின் முன் நின்று இருவரும் பிச்சை கேட்டனர். அவ்வீட்டில் அலங்கரிக்கப்பட்ட பெண்கள் மட்டுமே இருந்தனர். அவர்கள் உள்ளே வாருங்கள் என்று இருவரையும் அழைத்தனர்.  சின்னத் துறவும், பெரிய துறவும் வீட்டின் உள்ளே சென்று அமர்ந்தனர். அந்த வீடு  இவர்கள் வருவதற்குத் தகுதியில்லாத வீடு. அவ்வீட்டில் உள்ள பெண்கள் இவர்களை வேறுவிதமாக எண்ணி கதவைத் தாழிட்டு விட்டனர். சின்னத் துறவும் பெரிய துறவும் அங்கேயே ஜப தபங்களை ஆரம்பித்து அசையாது நிட்டையில் மூழ்கினர். நேரம் நேரம் ஆக ஆக பெண்களின் எண்ணம், மோகம் குறைந்தது. இவர்கள் ஞானிகள் என உணர்ந்து பயந்து அலறிக் கதவைத் திறந்து இவர்களை வெளியில் செல்ல வேண்டினர். அதுமுதல்  வீட்டினுள் சென்று பிச்சை கொள்வது இல்லை என்று முடிவெடுத்தனர் துறவியர்.

 

வஸ்திரம் போய் கௌபீனம் கொண்ட கதை

                பெரிய துறவு  ஒருமுறை நீராடித் தன்  ஒற்றை ஆடையைக் கையில் பிடித்துக் கொண்டு காய வைத்துக் கொண்டு இருந்தார். அடித்த காற்றில் ஒற்றை நான்கு முழ வேட்டி காற்றோடுபோய்விட்டது.  இறைவன் ஆடையையும் துறக்கச் செய்தான் என்று எண்ணி பெரிய துறவு அதனையும் துறந்தார்.

                சின்னத் துறவும், பெரிய துறவும்  அருணாசல மலைக்குச் சென்று தவம் செய்ய காலம் கை கூட்டியது. இருந்தாலும் மலையினைக் காவல் செய்யும் காவலர்கள் அவர்களை மலைக்குள் செல்ல விடாது தடுத்தனர். ‘‘துறவியரையும் தடுக்கலாகுமோ?” என்று கேட்க, இங்கு விலங்குகள் பறவைகள் மட்டுமே செல்ல இயலும் என்றனர். ஏன் அவ்வாறு என்று கேட்க, அவை இயற்கையாய் இயற்கையோடு வாழ்கின்றன என்றனர். இருவரும் எங்களுக்கு மலைக்குச் செல்ல இடையாடைதான் காரணம் என்றால் நாங்களும் இயற்கையாகவே வாழ இயற்கை நிலை எய்துகிறோம் என்று சொல்லி ஆடை துறந்து அம்மலை சென்று தவமியற்றினர்.

 

சிதம்பரமும் காசியும்

பிச்சை புகுந்து, ஆடையையும் வெறுத்தொதுக்கிய புண்ணிய ஆன்மா பெரிய துறவாண்டவர் ஆவார். இவருடன் இருந்து கண்டனூர் அருணாசலம் என்னும் சின்னத் துறவாண்டவர்  மெய்நெறி பற்றி வந்தார்.

            இவர்கள் இருவரையும் பல நாள் கண்டு தரிசித்த இலங்கை நாட்டைச் சார்ந்த யாழ்ப்பாணம் ஆறுமுகநாவலர் இவர்களே துறவின் இலக்கணம் என்றுப் போற்றி பல காலும் பணிந்து வந்தார். துறவாண்டவர்கள், அவரின் தமிழ்ப் புலமை கண்டு அவரைக் கந்தபுராணச் சொற்பொழிவு செய்யச் சொல்லி மக்களுக்குப் பக்தி நெறிப் பரப்ப வைத்தனர்.  அவரும் தொண்டு நெறி பரப்பினார்.

            இந்நாளில் எம்பெருமான் சின்னத் துறவாண்டவருக்கு நேரில் தோன்றி காசி, முதலான வட நாட்டுத் தலங்களுக்குச் சென்று வருக என்று கட்டளையிட்டருளினார். இதனை ஏற்று சின்னத் துறவாண்டவர் வடநாட்டுப் பயணம் மேற்கொண்டு காசியில் வாழ்ந்து வந்தார்.

 

                அவரின் நிறைவுக் காலம் அவருக்குத் தெரியவர திருவாவடுதுறை மடத்தினருக்குத் தெரிவித்து அவர் முக்தி பெற்றார். அவரைக் கற்பெட்டியில் வைத்து கங்கைக் கரையில் இறக்கி செய்வன செய்து தகவலைக் கோவிலூர் மடாலயத்திற்குத் தெரிவித்தனர். இதன் பின் சிதம்பரத்தில் இருந்த பெரிய துறவாண்டவர் கோவிலூருக்கே வந்து, ஆண்டவரின் பணிகளுக்கு உதவியாய் இருந்தார்.

                ஆண்டவரின் முக்திக் காலத்தின் போது கோவிலூர் வேதாந்த மரபின் தொடர்ச்சியாய்ப் பெரிய துறவாண்டவரை இருக்கச் செய்த இறையருள் கலந்தார். இதன்பின் கோவிலூர் வேதாந்த மரபின் தொடர்ச்சியைப் பெரிய துறவாண்டவர் இரண்டாம் பட்டமாக ஏற்றார். 

முத்தி ராமலிங்க ஆண்டவர் காலத்திலேயே தேவகோட்டை  வினைதீர்த்தான் செட்டியார், முத்தாத்தாள் ஆச்சியின் இரண்டாம் மகன்  சிதம்பரம் மடத்தின் வரவு செலவுகள், மற்ற காரியங்களைக் கவனித்து வந்தார். அவர் குட்டையா சுவாமிகளுக்குப் பணி செய்ய சிறிது காலம் மதுரை சென்று பின்பு திருப்பெருந்துறை என்றும் ஆவுடையார் கோயிலில் பணிகளைச் செய்துவந்தார்.

இந்நிலையில் அவர் கோவிலூர் ஆண்டவர் அருகிருந்து அகன்றமையைப் பொறுக்கமாட்டாமல் பெரிய துறவாண்டவர்  அவரைக் கோவிலூருக்குத் திருப்பும் முயற்சியை மேற்கொண்டார். அவருக்குப் பலரும் குருவின் பெருமை கருதி எழுதிய பாடல்கள் பலவற்றைத் தொகுத்து சீடாசாரம் என்ற தொகுப்பு நூலாக்கி அதனை உரியவர்களிடம் தந்து உரியவரிடம் ஒப்படைக்க வைத்தார். இதனைக் கண்ட சிதம்பரம் கண்களில் கருணை வெள்ளம் பெருகி மீளவும் முத்திராமலிங்க ஆண்டவரின் அடிநிழல் பற்றினார்.

இரண்டாம் பட்டமான பெரிய துறவாண்டவர், மற்றும் சிதம்பரம் ஆகியோர் தம் மேற்பார்வையில் கோவிலும், கோவிலூரும், மடமும் வளர்ந்தது. நித்ய அன்னதானமும் மடத்தில் நடைபெற்று வந்தது. இவர் கைவல்ய நவநீதத்திற்கு பத சாரம் என்ற  உரை எழுதினார். மேலும் உலக நாத சுவாமிகளைக் கொண்டு, சமி வன சேத்திர மான்மியம், விவேக சூடாமணி, ஜீவந் முக்தி விவேகம், சூத சம்கிதை, முக்திக் காண்டம், சூத கீதை, ரிபு கீதை போன்றவற்றை வடமொழயில் இருந்து தமிழ்ப் படுத்தினார்.

சீர்வளர் சீர் முத்திராமலிங்க ஞான தேசிகர் பரிபூரணத்தில் கலந்த, பதினேழாவது மாதம் இரண்டாம் பட்டமாகிய பெரிய துறவாண்டவர் எனப்பட்ட  சீர் வளர் சீர் அருணாசல ஞான தேசிக சுவாமிகள் பரிபூரணம் அடைந்தார். சௌமிய வருஷம், கடக மாசம், சுக்கிலபட்சம், சதுர்த்தி திதி, பூர நட்சத்திரம், மிதுன லக்னம் கூடிய நாளில் பெரிய துறவாண்டவர் பரப்பிரம்ம சமரச சுபாவமடைந்தார்.

 

சீர் வளர் சீர் வீரசேகர ஞான தேசிக சுவாமிகள் என்னும் திருக்களர் ஆண்டவர் (1883-1911)

 

கோவிலூரின் கதை -5

 சீர் வளர் சீர் வீரசேகர ஞான தேசிக சுவாமிகள் என்னும் திருக்களர் ஆண்டவர்

(1883-1911)

 

முனைவர் மு.பழனியப்பன்

தமிழ்த்துறைத் தலைவர்

அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி

திருவாடானை

 

             கோவிலூரின் ஐந்தாம் பட்டமாகத்  தன் விருப்பத்தின்பேரில் இல்லாமல் பலரது வேண்டுகோளுக்கு இணங்க  பட்டமேற்றவர் புதுவயல் வீரசேகர ஞான தேசிக சுவாமிகள் ஆவார். இவர்  திருவாரூருக்கு அருகில் உள்ள திருக்களர் என்றும் ஊரில் உள்ள சிவாலயத்தின் மீது மிகு பற்றுக் கொண்டு அவ்வாலயத்திற்குத் திருப்பணி செய்து,  அங்கு தன் நிறைவாழ்வைக் கண்டவர் என்பதால் திருக்களர் ஆண்டவர் என்றும் அழைக்கப்படுகிறார்.

            சீர் வளர் சீர் முத்திராமலிங்க ஆண்டவர்  அருள்மிகு கோவிலூர் திருநெல்லை உடனாய கொற்றவாளீசர் ஆலயத்திற்கான விரிவான வரைபடத்தைத் தயாரித்த போது அவரின் அருகிருந்த நல்லான் செட்டியார் இவ்வளவு விரிவானதொரு கோயிலைக் கட்ட இயலுமோ என்று கேட்டார். அதற்கு ஆண்டவர் சுவாமிகள்  ‘‘கவலை வேண்டாம். கண்டோர் வியக்கும் வண்ணம் இதனைக் கட்டி முடிக்க ஒரு வீரன் வருவான் ” என்று உரைத்தார்.  அத்தகைய நல்வாசகத்தின்படி சத்திய ரூபமாக வீரனாக வந்தவர்  சீர் வளர் சீர் வீரசேகர ஞான தேசிக சுவாமிகள் ஆவார்.

            புதுவயலில் வாழ்ந்த அருணாசலம் செட்டியார், உமையாள் ஆச்சி ஆகியோரின் பிள்ளைக் கலி தீர்க்கப் பிறந்த மகன் வீரசேகரர் ஆவார். இவர் 1848 ஆம் ஆண்டு, ஆவணி மாதம் பன்னிரண்டாம் நாள் வெள்ளிக்கிழமை அன்று மண்ணுலகு மேன்மை பெற உதித்தார்.

            இவருக்கு இளம் வயது முதலே புதுவயல் அழகப்பா ஐயா என்பவர், பட்டினத்தார், தத்துவராய சுவாமிகள் ஆகியோர்  நூல்களையும் கொடுத்து இவருக்கு வேதாந்த அறிவினைப் புகட்டினார்.  இவர் தம் பத்தாம் வயதில் வெளிநாடு சென்று திரவியம் தேடச் சென்றார்.  அப்பயணம் முடித்து வந்தபின் இவ்வுலக வாழ்வில் நாட்டம் இல்லாது அருள் உலக வாழ்வில் நாட்டம் பெற்றவராக விளங்கினார்.

            இவரின் ஞானவாழ்விற்கு வீரப்ப ஐயா என்பவர் வழிகாட்டினார். கோவிலூர் வேதாந்த மடம் சென்று  அங்குக் கருணாநிதி சுவாமிகளிடம் சீடராகச் சென்றிட அவர் நல்வழி காட்டினார். கோவிலூர் வந்து சேர்ந்த வீரசேகரர் அங்கிருந்த பொன்னம்பல சுவாமிகள் வழியாக கோவிலூர் மடாலயத்தின் மூன்றாம் பட்டமாக விளங்கிய சீர் வளர் சீர் கருணாநிதி சுவாமிகளின் சீடராக ஏற்கப்பட்டார். இந்நிலையில் இவரின் குடும்பத்தார் இவருக்குத் திருமணம் நடத்திட எண்ணினர். இதனை அறிந்த வீரசேகரர் ஒருவரும் அறியாது பொருள்வைத்த சேரிக்குச் சென்று அங்கு அப்போது உத்தலிங்க சுவாமி மடத்தில் இருந்த சட்டையப்ப சுவாமிகளிடத்தில் சந்நியாச தீட்சை பெற்றுத் துறவாடை ஏற்றுத் துறவியானார். மீண்டும் கோவிலூர் வந்து  கோவிலூர் மடாலயத்தின் மரபின்படி நாநா சீவ வாதக் கட்டளை  என்ற நூல் தொடங்கி ஞான  வாசிட்டம் வரை உள்ள வேதாந்த நூல்கள் அத்தனையையும் தன் குருவிடம் பாடம் கேட்டார்.

            இதனைத் தொடர்ந்து தலயாத்திரையை நடை பயணமாக மேற்கொள்ள வீரசேகர சுவாமிகள் விருப்பம் கொண்டார். சிதம்பரத்திற்கு நடந்தே சென்றார். வழிநடையில் கிடைத்த பொருளைப் புசித்து நடந்தார். பின்பு மௌன சுவாமிகள் மடத்தில் இருந்தபடி பன்னிரு ஆண்டுகள்  நடராச மூர்த்தியைத் துதித்து வந்தார். இந்நேரத்தில் மூன்றாம் பட்டமான கருணாநிதி சுவாமிகள் விவேக முக்தி அடைய, பொன்னம்பல சுவாமிகள் அவரின் பாதுகைகளைப் பெற்றுச் சிதம்பரத்தில் தங்கி மடம்  நிறுவினார். அப்போது வீரசேகர சுவாமிகள் சிதம்பரத்தில் இருப்பதை அறிந்து அவரை அழைத்து வந்து இரவு நேரத்தில் இம்மடத்தில்  நடைபெறும் வேதாந்த சத் சங்கத்தில் கலந்து கொண்டுப் பிச்சை ஏற்று அருள வேண்டினார். இவ்வாறு பொன்னம்பல சுவாமிகளும் வீரசேகர சுவாமிகளும்  இணைந்து சிதம்பரத்தில் அருளாட்சி புரிந்து வந்தனர்.

            இந்நிலையில்  கோவிலூர் மடாலயத்தின் நான்காம் பட்டமாகிய  சீர் வளர் சீர் இராமநாத சுவாமிகள்  இறைநிலை அடைந்த நிலையில்  கோவிலூர்  மடத்திற்கான அடுத்தப் பட்டத்திற்கு உரியவராக யாரை ஏற்பது என்ற  கேள்வி எழுந்தது. பொன்னம்பல சுவாமிகள் தில்லையில் நடந்த வேதாந்த சத் சங்கத்தில்  வீரசேகரே தக்கவர் என்று அசரீரி போல் ஒலித்தார். இதைக் கேட்டுத் திகைத்த வீரசேகர சுவாமிகள் அன்று இரவே ஒருவரும் அறியாது  மடத்திற்குத் தலைமை ஏற்றல் தனக்கு ஏற்புடையதன்று என்று  கருதி வேறு ஓர் ஊரில் சென்று மறைந்து கொண்டார்.

            அவர் மறைந்திருந்த வளவனூர் மடத்திற்குப் பலரை அனுப்பி வீரசேகர சுவாமிகளை வரவழைத்துக் கோவிலூர் மடத்தின் தலைமை ஏற்ற சம்மதிக்கச் செய்தார். தம்மை எல்லாம் கடைத்தேற்றிட குருமார்கள் உதவினார்கள். அவர்களைப் போல உலக உயிர்களை உய்விக்க இப்பணி ஏற்றருள்க என்று பொன்னம்பல சுவாமிகள் இவரை ஆற்றுப்படுத்தினார். மேலும்  நான்காம் பட்டத்தின் விருப்பமும் அதுவே ஆன காரணத்தினால் இத்தலைமை சீர் வளர் சீர் வீரசேகர சுவாமிகளுக்கு அமைந்தது. அவருடன் கோவிலூரில் உடன் இருந்து பொன்னம்பல சுவாமிகள் பல நற்காரியங்கள் செய்துவித்தார். சில நாட்களில் தில்லை மடம் சென்றார்.

            சீர் வளர் சீர் வீரசேகர ஞான தேசிக சுவாமிகள்  கோவில், மடம் எல்லாவற்றையும் கலைநயம் பொலிய சிறப்புடன் ஆக்குவித்தார். கைலாசக் கொட்டகை, பிரம்ம சபை, கொற்றவாளீசர் ஆலயம், திருநெல்லை அம்மன் சந்நிதி கரும் சலவைக்கல் பணி, பூ மண்டபம், குருபூசைக் கட்டு, ஊருணி கல் படித்துறை, நெற்களஞ்சியம், அடியார் தங்குமிடம்  போன்றன கலை எழில் மிகுந்து உருவாகின. கோவிலூர் கலைநயமிக்கக் கலைநகரானது இவரது காலத்தில்தான்.

            சிருங்கேரி மடத்து சங்கராச்சாரிய சுவாமிகள் இராமேசுவர யாத்திரையாக வந்த போது, அவரைக் கோவிலூர் அழைத்து வந்து  வீரசேகர சுவாமிகள் பெருமை கொண்டார். இவரின் கலை நயமிக்க எழில் கட்டுமானம் கண்டு சிருங்கேரியில் உள்ள அருள்மிகு சாரதா தேவிக்குக் கருங்கல் கோவில் அமைக்க வேண்டினார். இதனை ஏற்று பொருள் செலவு செய்து அருமைப் பணியாக சாரதா கோயில் பணியையும் செய்துமுடித்தார் வீரசேகர சுவாமிகள். தொடர்ந்து நடைபெற்ற கொற்றவாளீசர் திருக்கோயில் குடமுழுக்கில் சாரதா பீட சங்கராச்சாரியார் கலந்து கொண்டு  வீரசேகர சுவாமிகளுக்குப் பஞ்சரத்தினம் வழங்கிச் சிறப்பித்தார்.

            இவரின் சீடர்களாக பலர் விளங்கினர். வேங்கட்ட முனிவர், வெள்ளியங்கிரி, சுப்பையா, அண்ணாமலை, நாராயணன், காசிகாநந்தர், மகாதேவர், சிவாநந்தர் போன்றோர் அச்சீடர்களுள் குறிக்கத்தக்கவர்கள். இவ்வாறு நடந்து வரும் நிலையில் திருவேரகத் தலத்தில் (சுவாமி மலை) நடைபெற்ற குடமுழுக்கு விழாவில்  வீரசேகர சுவாமிகள் கலந்து கொண்டார். அப்போது அன்பர் ஒருவர் திருக்களர் என்ற தலம்  திருப்பணி செய்ய வேண்டிய நிலையில் இருப்பதை சுவாமிகளுக்குத் தெரிவித்தார்.

            சுவாமிகளும் இதனைக் கருத்தில் கொண்டார். வீரசேகர சுவாமிகள் முன்கோப குணம் உடையவர். அவரின் கோபம் குறைய வேண்டியும் திருக்களர் செல்ல  அவர் விரும்பினார். துருவாச முனிவருக்கு ஆடல் காட்டி அவரின் கோபத்தைக் குறைத்த தலம் அத்தலம். எனவே அத்தலம் வீரசேரக சுவாமிகளின் ஏற்பு தலமாக விளங்கியது. திருக்களர் சென்று அங்கு அக்கோயில் திருப்பணிகளைச் செம்மையுடன் செய்து வந்தார். பெரும்பாலும் இக்காலத்தில் சுவாமிகள் திருக்களரில் தங்கியபடி கோவிலூர் பணிகளையும் செய்து வந்தார்.

            திருக்களர் குடமுழுக்கு விழாவினைச் சிறப்புடன் முடித்தார் வீரசேகர சுவாமிகள். மேலும் திருவிழாவிற்குத் தேவையான  வெள்ளி வாகனங்கள், வெள்ளிக் கவசங்கள், அலங்காரப் பொருள்கள், தீப தூப பொருள்கள், குடை முதலான பொருட்கள் எல்லாவற்றையும் அக்கோயிலுக்கும் மக்களின் பேராதரவுடன் வீரசேகர சுவாமிகள் அமைத்துத் தந்தார். திருவிழாக்களும், நாள் வழிபாடுகளும் சிறப்புற அக்கோயிலுக்கு அமைந்தது.

            கோவிலூரில் ஆடிப்பூர உற்சவம் இக்காலத்தில் வந்தது. அதனையும் நியம முறைப்படி வீரசேகர சுவாமிகள் நடத்தினார். இதனிடையில் திருக்களர் மண்டலாபிஷேக நிறைவு விழா வந்தது. திருக்களர் பிரம்மோத்சவமும் வந்தது. ஆனால் மற்றவர்கள் இவற்றை அடுத்த ஆண்டு நடத்தலாம் என்று எண்ணியபோது வீரசேகரர் அவ்வாண்டே நடத்தவேண்டும் என்று கொடியேற்றித் துவக்கி வைத்தார்.

            திருக்களர் பாரிஜாதவனேஸ்வரர், அமிர்தவல்லிக்கு அருள்பெருந்திருவிழா சிறப்புடன் நடக்கத் தொடங்கியது. தேர்த்திருவிழாவும் நடைபெற்றது. வீரசேகர சுவாமிகள் தேர்த்திருவிழாவின்போது நடத்தப்படும் உயிர்ப்பலியை நடத்தக் கூடாது என்று தவிர்த்தார். பஞ்ச மூர்த்திகளின் தேர்கள் அசைந்தாடிக் கொண்டு வந்தன. சுவாமியின் தேர் தென்கிழக்கில் நகராமல் நின்றுவிட்டது. இது சற்று கவலையை அனைவருக்கும் அளித்தது. வீரசேகர சுவாமிகள் தன் இருப்பிடத்திற்கு வந்து மற்ற பணிகளைக் கவனித்தார்.

            அடுத்த நாளுக்கான வேலைப் பணிகள் சுவாமிகளால் அருளப்பெற்றன. அப்போது சுவாமிகள் ‘‘நாளை கற்பூரமும், பூக்களும் அதிக அளவில் தேவைப்படும் . வாங்கி வாருங்கள்” என்றார். இது ஓர் அருள் குறிப்பு. மேலும் அனைவரிடத்திலும் எடுத்த பணியை விடாது செய்ய வேண்டும் என்று கூறினார்.

            காலை எழுந்து  அன்பர்களிடத்தில்  இன்று மதியப் பொழுதிற்குள் தேர்கள் அனைத்தும் சேர்க்கை சேரவேண்டும். அதற்கேற்ப ஆட்களைச் சேருங்கள் என்று ஆணையிட்டார். வீரசேகர சுவாமிகள்  மிக்க மகிழ்வுடன் தேரின் பக்கத்தில் சென்று அதனை உருட்டிட ஆவன செய்தார். அருகிருந்து ‘‘அர கர மகாதேவா” என்று பலமுறை முழங்கினார். என் உயிர் கொண்டு தேர் நகரட்டும் என்று அவர் மனம் இறைஞ்சியது.

            அரகர மகா தேவா முழக்கத்துடன் அவர் பூமியில்  சாய்ந்தார். அருகிருந்த அந்தணர் அவரைத் தாங்கிப் பிடிக்கிறார். சீர் வளர் சீர் வீரசேகர ஞான தேசிக சுவாமி முக்தி பெற்றார். அவரை உரிய முறையில் அவர் நிர்மானித்த திருக்களர்  சீவசமாதிக்குகையில் வைக்க ஏற்பாடுகள் நடந்தன. வைகாசி விசாகம் அவரின் நிறைவாலும் புகழ் கொண்டது.

             அந்நேரத்தில் தேர்கள் அனைத்தும் சேர்க்கை சேராமல் இருப்பது உணர்ந்து வீரசேகர சுவாமிகளை மனதால் எல்லோரும் நினைந்து இழுக்க தேர்கள் நகரத் தொடங்கின. இத்தேர்களை வணங்கியபடி சீர் வளர் சீர் வீரசேகர சுவாமிகளின் முக்திப் பயணம் தொடங்கியது. நிறைவுபெற்றது.

 அவரின் ஆலயம் கர்ப்ப கிரகம், அர்த்த மண்டபம், மகா மண்டபம் முதலானவற்றுடன் அமைக்கப்பெற்றது.             இவருக்குப் பின் பட்டமேற்ற மகாதேவ ஞான தேசிகர் இவரின் ஆலயத்திற்கு  பிரகார மண்டபம், உற்சவ மூர்த்தி ஆலயம், இராச கோபுரம், பதினாறு கால் மண்டபம் போன்றவற்றை எழுப்பினார்.

            சீர்வளர் சீர் வீர சேகர சுவாமிகளின் ஐம்பதாம் ஆண்டு,  திருவருள் திருவிழா 1961 ஆம் ஆண்டு நடத்தப்பெற்றது. திருக்களரில் நடந்த இவ்விழா குரு ஒருவருக்குச் செய்யப்பெற்ற உன்னத விழாவாகும். இவ்விழாவில் ஸ்ரீவீரசேகர புகழ் உரை ரச மஞ்சரி என்னும் நூல் வெளியிடப் பெற்றுள்ளது. மேலும் இவர் மீது பதிகம், நான்மணி மாலை, பிள்ளைத்தமிழ் முதலியன பாடப்பெற்றுள்ளன. இவரின் சரிதம் உரைநடையிலும் கவிதையிலும் வெளியிடப்பெற்றது. வீரசேகர மணிமாலை என்பதும் இவர் குறித்துப் பாடப்பெற்றுள்ளது.

 

திருக்களரில் உள்ள சீர் வளர் சீர் வீரசேகர சுவாமிகளின் திருவுருவச் சிலை

             

           

சீ்ர் வளர் சீர் மகாதேவ ஞான தேசிக சுவாமிகளின் வரலாறு

 

கோவிலூரின் கதை-7

சீ்ர் வளர் சீர் மகாதேவ ஞான தேசிக சுவாமிகளின் வரலாறு

முனைவர் மு.பழனிப்பன்

தமிழ்த்துறைத் தலைவர்

அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி

திருவாடானை

கோவிலூர் வேதாந்த மடத்தின் ஏழாம் பட்டமாக அருள்பீடம் ஏறி,  இருபத்தெட்டு ஆண்டுகள் அருளாட்சி நடத்திய தவசீலர் சீர் வளர் சீர் மகாதேவ ஞான தேசிக சுவாமிகள் ஆவார். இவர் திருவண்ணாமலை ஈசானிய மடத்தில் இருந்த காலத்தில் ரமண மகரிஷி இவருடன் அருள் நட்பு கொண்டிருந்தார். இவரின் காலத்தில் அதிக அளவில் வேதாந்தப் பாடம் கற்கும் சீடர்கள் அமைந்து  அருள் சுரந்தனர்.

அண்ணாமலையார் தந்த செல்வர்

அண்ணாமலை என்ற இயற்பெயர் பெற்ற ஏழாம் பட்ட சுவாமிகள் சீர் வளர் சீர் வீரசேகர ஞான தேசிக சுவாமிகளால் மாகதேவ ஞான தேசிகர் என்ற தீட்சா நாமத்தைப் பெற்றவர். இவர் தேவகோட்டையைச் சார்ந்த சுப்பிரமணியஞ் செட்டியார், சிட்டாளாச்சி ஆகியோருக்கு அண்ணாமலையாரின் திருவருளால் திருமகனாக அவதரித்தார். இவர் 1882 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம்  பதினைந்தாம் நாள்  இப்பூவலகில் அவதரித்தார். இவருக்கு சுப்பிரமணியர் அண்ணாமலை என்று பெயர் சூட்டினார்.

இவர் இளம் வயது முதலே தெய்வீக நாட்டம் பெற்றிருந்தார். இவர் கல்வி, கேள்வி ஆகியவற்றில் சிறந்து, விளங்கினார். இளமைப் பருவம் தாண்டிய நிலையில் செல்வம் சேர்க்க அக்கால முறைப்படி திரைகடல் கடந்து சென்று பொருள் சேர்த்து வந்தார். இவருக்கு உரிய வயதில் திருமணம் செய்விக்கப் பெற்றோர் எண்ணினர். சிவஞானப் பற்றுடைய இவர் திருமண பந்தத்தைத் தவிர்க்க விரும்பினார். குலமரபு தழைக்கத் திருமணம் செய்வது அவசியம் என்று பெற்றோர் வலியுறுத்த அதனை ஏற்று திருமணத்திற்கு ஒத்துக்கொண்டார்.

அலமேலு என்ற மங்கை நல்லாளை மணம் புரிந்து இல்லறத் தொடர்பில்  மகாதேவ அண்ணாமலை இணைந்தார். இருப்பினும் மனம் முழுவதும் சிவஞானம் பெறுவதை எண்ணித் தவம் கிடந்தது. சிறிது நாள்களில் பெற்றோர்  வாழ்வின் நிறைவினை அடைய அவர்களுக்கும் உரிய முறையில் அண்ணாமலை மகாதேவர் நீத்தார் கடன் செய்து முடித்தார்.

இல்லறத்தின் விளைவாக அண்ணாமலை மகாதேவர்  அண்ணாமலை, திருநெல்லை என்ற இருமக்களைப் பெற்றெடுத்தார். மகன் அண்ணாமலையைக் காசி என்று அழைத்து மகிழ்ந்தார் அண்ணாமலை மகாதேவர்.

குருவருள் பெற்ற செல்வர்

குழந்தைகள் வளர்ந்து வந்த நிலையில் இவரின் அருள் நோக்கம் சிவானுபவத்தை நோக்கிச் சென்றதால், கோவிலூர் வேதாந்தப் பெருவெளி இவரை வரவேற்றது. கோவிலூரில் அருளாட்சி புரிந்து வந்த சீர் வளர் சீர் வீரசேகர சுவாமிகளிடத்தில் இவர் அருள் சீடராக அமைய இறை திருவருள் உதவியது.

இவரின் அருள் நோக்கத்தை அறிந்து கொண்ட சீர் வளர் சீர் வீரசேகர ஞான தேசிக சுவாமிகள் இவரை மகாதேவர் என்ற பெயருடன் தம் சீடர்களின் கூட்டத்தில் இணைத்துக் கொண்டார். இவருக்கு வேதாந்தப் பாடத்தை நடத்தினார். குருவருளின் துணையினால் திருவருளின் இயல்புகளை அறிந்து கொண்டார் மகாதேவர்.

கோவிலூர் முறைப்படி ஆண்டு ஒன்றுக்கு ஒரு நூல் கற்பிக்கவும் கற்கவும் வேண்டும். மேலும் அவ்வாண்டில் அந்நூல் மனப்பாடம் செய்து கொள்ளப்பட வேண்டும். இவ்வகையில் பதினாறு ஆண்டுகள் பதினாறு நூல்கள் என்ற நிலையில் இவர் வேதாந்தப் பாடம் கற்றார். மேலும் ஒருமுறை பாடம் கேட்டல் மட்டும் முறைமை அன்று. மறுமுறையும் பாடம் கேட்டாக வேண்டும். இவ்வகையில் சீர்வளர் சீர் அண்ணாமலை ஞான தேசிக சுவாமிகளிடத்தில் வேதாந்தக் கல்வி பயின்றார்.

ஞானவாசிட்டம் ஏடு பெற்ற செல்வர்

கோவிலூர் மரபின்படி ஞானவாசிட்டம் ஏடு வாங்குதலையும் இவர் தன் வாழ்வில் பெற்றார். சீர் வளர் சீர் வீரசேகர ஞான தேசிக சுவாமிகளுக்கு உரிய முறையில் வழிபாடு இயற்றி இவர் அவரின் திருக்கரங்களால் ஞான வாசிட்ட ஏட்டினைப் பெற்றார். இவ்வாறு ஏடு பெறுவது என்பது வேதாந்தத்தை முறைப்படி முழுமையாக உணர்ந்ததற்கான அறிகுறியாகக் கொள்ளப்படுகிறது. இது குருவிற்குச் செய்யும் நன்றியறிதல் நிகழ்வாகும்.குருவிற்கு நன்றி செலுத்தி மகிழ்ந்தார் அண்ணாமலை மகாதேவர்.

திருப்பணிகளுக்கு துணைநின்ற செல்வர்

இவ்வாறு  இந்நிகழ்வுகள் நடந்து வரும் வேளையில் கோவிலூர் கொற்றவாளீசர் ஆலயம், திருக்களர்  பாரிஜாதவனேசுவரர் ஆலயம் ஆகியவற்றிற்குத் திருப்பணிகள்  நடைபெற்றுவந்தன. அப்பணிகளுக்குத் துணைநின்றார் அண்ணாமலை மாகதேவர்.  இவ்வாயலங்கள் குடமுழக்கு  பெற்றன. இதன்பின் சீர்வளர் சீர் வீரசேரக ஞானதேசிகர் விவேக முக்தி பெற, ஆறாம் பட்டமாக சீர்வளர் சீர் அண்ணாமலை ஞானதேசிகர் குருபீடம் ஏற்கிறார்.

ஈசானியம் வந்தமர்ந்த செல்வர்

 திருவண்ணாமலை ஈசானிய மடத்தின் குருமூர்த்தமாக இருக்க அண்ணாமலை மகாதேவரை  ஆறாம் பட்டம் வேண்ட, அவர் மறுக்க, இருப்பினும் சீர் வளர் சீர் மகாதேவ ஞான தேசிக சுவாமிகளாக ஈசானிய மடத்தில் குருபீடம் ஏற்க வைத்தது இறை திருவுளம்.

அண்ணாமலைக்கே அண்ணாமலை மகாதேவர் வந்தமரச் செய்கிறார் அண்ணாமலையான். இவ்வண்ணாமலையில் பல சீடர்களுக்கு வேதாந்தப் பாடம் சொல்லி வருகிறார் சீர்வளர் சீர் மகாதேவ ஞானதேசிக சுவாமிகள். மேலும் இக்காலத்தில் ரமண மகரிஷி சீர் வளர் சீர் மகாதேவ ஞான தேசிக சுவாமிகளைச் சந்தித்து அவ்வப்போது வேதாந்த விசாரணை செய்துவருவார். மேலும் ஈசானிய மடத்தில் அவருக்கு அன்னம்பாலிப்பும் நடைபெறும். ரமண மகரிஷி  தியானத்தில் அமர, குகை நமசிவாயர் ஆசிரமத்திற்கு மேற்கில் கந்தாஸ்ரமத்தை அமைத்துத் தந்தவர் சீர் வளர் சீர் மாகதேவ ஞான தேசிகர் என்பது சிறப்பிற்குரியது.

கோவிலூர் பட்டம் ஏற்ற ஞானச் செல்வர்

            ஆறாம் பட்டமாக விளங்கிய சீர் வளர் சீர் அண்ணாமலை ஞானதேசிகர் தம் வாழ்வின் நிறைநாளை அறிந்து எண்ணி, திருவண்ணாமலை ஈசானிய மடத்தில் இருந்த சீர்வளர் சீர் மாகதேவ ஞான தேசிகரை அழைத்து, கோவிலூர் மடத்தில் ஏழாம் பட்டமாக அமைய அருள் நோக்கம் செய்தார். இதற்கான உயில் எழுதப்பட்டது. 1919 ஆம் ஆண்டு, மே மாதம் பத்தாம் நாள்  இவ்வுயில் சாசனம் எழுதப்பெற்றது. இவ்வாண்டின்  இருபத்தொன்றாம் நாள்  ஆறாம் பட்டம் முக்திப் பேற்றினை அடைகிறார். இதனைத் தொடர்ந்து ஏழாம் பட்டமாக சீர் வளர் சீர் மகாதேவ ஞான தேசிகராக கோவிலூர் மடத்தின் ஞான பீடமாக காலம் வரவேற்றுக்கொண்டது.

            இவர் தன் வாழ்நாளில் ஏழு முறை வேதாந்தப் பாடங்களைச் சொல்லி வந்து நிறைவில் ஞானவாசிட்ட ஏடு வழங்கலை நிகழ்த்தியுள்ளார். இவர் காலத்தில் மிக அதிக அளவில் வேதாந்த சீடர்கள் பயின்றனர் என்பது எண்ணிப் பார்க்க வியப்பினைத் தரும் செய்தியாகும்.

மடாலயத்தின் மாண்பினைப் பெருக்கிய செல்வர்

            சீர் வளர் சீர் மாகதேவ சுவாமிகள் அருள், வேதாந்தக் கல்வி  ஆகியவற்றைப் பெருக்கியதுடன் மடத்தின் நிர்வாகத்தையும் மேன்மைப் படுத்தினார். சாணானேந்தில் என்னும் கிராமத்தில் மடம், நெற்களஞ்சியம் இவர்  காலத்தில் நிறுவப்பெற்றன. இவர் காலத்தில் மடத்தில் ஆயிரக்கணக்கான பேர் அனுதினமும் அன்னம் பெற்று மகிழ்ந்தனர்.

            பொருள்வைத்த சேரி மடத்திற்கு  வீர சண்முக சுவாமிகள், சிதம்பரம் கோ. சித. பொன்னம்பல சுவாமிகள் மடத்திற்கு சோமசுந்தர சுவாமிகள், ஈசானிய மடத்திற்கு நடேச சுவாமிகள், திருக்களர் மடத்திற்கு கிருஷ்ணானந்த சுவாமிகள் ஆகியோர் அருளாட்சி செய்துவர நியமிக்கப்பெற்றனர்.

            இவர் காலத்தில் திருக்களர் சீர் வளர் சீர் வீரசேகர ஞான தேசிகரின் அருட்கோயிலுக்கு இராச கோபுரம், வெளிமண்டபம், பிரகார பத்தி போன்றன உருவாக்கப்பெற்று திருக்குடமுழுக்கு நடத்தப்பெற்றது.

சிருங்கேரி சாரதா பீடத்தில் பெருமை பெற்ற செல்வர்

            சிருங்கேரி சாரதா பீடத்தின் 34 ஆம் பட்டத்தினரான சீரு்வளர் சீர் சந்திரசேகர பாரதி சுவாமிகளைக் கோவிலூருக்கு அழைத்து வந்து, கோயில் மடம் காட்டி வேதாந்தப் பெருமையை உணரச் செய்தவர் சீர் வளர் சீர் மகா தேவ ஞான தேசிக சுவாமிகள். மேலும் அவரின் அழைப்பின் பேரில் பெங்களுர் சங்கர மட சாரதாம்பாள் பிரதிஷ்டைக்குச் சென்று அங்கு சுவாமிகள் அருள் காட்சி நல்கினார்.

நூல்கள் தந்த செல்வர்

            சீர் வளர் சீர் மகாதேவ ஞான தேசிக சுவாமிகள் காலத்தில் பல நூல்களும் வெளியிடப்பெற்றன. சிதம்பரம் பொன்னம்பல சுவாமிகள் உரை செய்த கைவல்லிய நவநீதம் ஆறாம் பதிப்பாக 1941 ஆம் ஆண்டு வெளியிடப்பெற்றது. மேலும் அத்வைத சாஸ்திர மான்மிய சங்கிரகம், கைவல்லிய உக நிஷதார்த்தம், பட்டினத்தார் பாடல்கள் போன்ற பல நூல்களும் இவர் காலத்தில் வெளியிடப்பெற்றன.

நிறைவாழ்வு பெற்ற செல்வர்

            பல தலங்களுக்குச் சென்று அருள்பெற்று வந்த சீர்வளர் சீர் மகாதேவ ஞான தேசிக சுவாமிகள் தன் வாழ் நாள் நிறைவின் எல்லையை உணர்ந்து 1946 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 13 ஆம் நாள் உயில் ஒன்றை எழுதினார். தன்னுடைய அறுபத்தாராம் வயதில் 26-6-1947 ஆம் நாள் விவேக முக்தி பெற்றார்.

 

 

முனைவர் மு. இளங்கோவன் இயற்றிய இணைய ஆற்றுப்படை – நூல் அறிமுகம் இணையத் தமிழ்த் தொண்டர் தொகையாக விளங்கும் இணைய ஆற்றுப்படை

 



மு.பழனியப்பன்,

இணைப் பேராசிரியர்,

அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி,

திருவாடனை

 தமிழுக்கு தொண்டு செய்வோரை நாளும் அறிமுகம் செய்து வரும் நற்றிமிழ்த் தொண்டர்,  இணைய ஆற்றலாளர்  அறிஞர் மு. இளங்கோவன் ஆவார். மரபில் கருக் கொண்டு நவீனத்தில் உருக்கொண்டவர். புதுச்சேரியின் தமிழ் அடையாளங்களில் அவரும் ஒருவர். உலகு தழுவிய தொல்காப்பிய அறிஞர். அவரின் புதிய படைப்பாக்க நூல் இணைய ஆற்றப்படை.

திறனாய்வாளர்களாக உருவானபின் படைப்புக்கண் பலருக்குத் திறப்பதில்லை. இணையத்திற்கு வந்தபின் மரபில் நோக்கம் கொள்வதில்லை. எழுத்து சிறப்பானால் பேச்சில் ஒளிரமுடிவதில்லை.  பாடல் திறன் இருந்தால் மற்றவை இருப்பதில்லை. இசைத் திறன் நுகர்வதற்கு வாய்ப்பே இல்லை. இதுபோன்ற பல இல்லாமைகளுக்கு இடையில் இல்லாமைகளே இல்லாதத் தமிழறிஞர் மு. இளங்கோவன்.   படைப்பாளர், திறனாய்வாளர், இணைய ஆற்றலர், கவிஞர், நாட்டுப்புறப் பாடலாசிரியர், நல்ல பேராசிரியர், எழுத்துக் கலை வல்லவர், பேச்சுக்கலையில் சிறந்தவர். பாடல்கலையில் முத்தெடுப்பவர். தமிழிசை அறிந்தவர். இவரின் மற்றொரு ஆற்றுப்படை தற்போது  இணைய ஆற்றுப்படையாக அமைந்து, இணையம் கற்போருக்கு வழிகாட்டி வரலாற்று நூலாக அமைகிறது.

இணைய ஆற்றுப்படை என்ற இந்நூல் தொகை நூல். இணையத் தமிழ்ச் செய்திகளைத் தொகுத்துச் சொல்வது மட்டும் இத்தொகை நூலின் தன்மை அன்று. திருத்தொண்டர் தொகை போல இது ஒரு தொகை நூல். இதனை அடியொற்றி, இதனுள் சுட்டப்பெற்று இணையத் தமிழ்த் தொண்டர்களை விரித்துப் பாட ஒரு அந்தாதி, மற்றும் ஒரு புராணம் செய்யப்பட வேண்டும். இந்தச் சுந்தரனார் தொட்ட பணியை விரிவு படுத்த, நம்பியும் வருவார். சேக்கிழாரும் வருவார்.

நூலின் ஒவ்வொரு அடியும் பொன்னடி. நேர்த்தியான , அடத்தியான செம்மைத் தமிழில் செய்யப்பட்ட ஆற்றுப்படை  இணைய ஆற்றுப்படை. இணையத்தில் இணைய மறுப்பவரையும் இணைய வைக்கும் இவ்விணைய ஆற்றுப்படை. இது தமிழின் தமிழரின் வளர்ச்சியை அளந்து உரைக்கிறது. இணையத் தமிழின் இனிய வளர்ச்சியையும் இலக்கியச் சுவையில் தருகிறது.

‘‘கல்லிலும் செம்பிலும் கவின்பனை ஏட்டிலும்,

விண்ணியல் நிலத்தியல் விரிந்த வாழ்வியல்

அறிவியல் மருத்துவம் அரும் பொறியியல் எல்லாம்

குறிப்பாய் உரையாய் கொண்ட  செய்யுளாய் முன்னோர் காத்தனர்

என்பது தமிழின் , தமிழரின் நேற்றைய நிலை.

          அறிவுத் துறையில் அரசோச்சிய

          குமரிக்கடல் முனைக் கொள்கைத் தமிழர்

          கணினித் திரையில் கவினுறு தமிழை

          நிலைபெறச் செய்து அலை புகழ் பெற்றனர்

          இந்திய மொழிகளில் இணையம் கணினியென

          முந்தித் தோன்றிய முதல்மொழி தமிழாம்

என்று இன்றைத் தமிழின் இனிய நிலையை இணைய ஆற்றுப்படை பதிவு செய்கிறது.

          கம்பன் பாடிய வாசுதேவனார்

          விசய குமாரின் சரசுவதியாரும்

          கோவிந்தராசனாரின் பல்லாடமும்

          அணங்கிடை வயங்கிய குப்புசாமியார்

          கனடா நாட்டின் இதயப் பிறப்போர்

          துணைவன் தந்த கதிரவர் தினமலர்

 ஏட்டின் தீரர்  கிருட்டின மூர்த்தியார்

முரசு அஞ்சலின் முத்து  நெடுமாறன்

பொன்மொழி தந்த பொறிஞர் மூர்த்தி

என்ற அடிகள் எல்லாம் இணையத் தமிழ்த் தொண்டத்தொகையே ஆகும்.

          மேலும் இவ்விணைய ஆற்றுப்படையில் இந்தி எதிர்ப்பு, மது எதிர்ப்பு, இலங்கைத் தமிழர் துயர் துடைப்பு  ஆகிய தமிழரசியலும் இடம்பெற்று இருப்பது கருதத்தக்கது. இணையப் பல்கலையின் செயல்பாடு, உலகத் தமிழ் இணைய மாநாடுகளில் இணையத் தமிழ் வளர்ந்த நிலை, தமிழ் விசைப்பலகை தோற்றம் , ஒருங்குறி எழுச்சி போன்ற பல  இணையத் தமிழ் வளர்ச்சி செய்திகளும் வரலாற்று முறையில் தரப்பெற்றுள்ளன.

          இணையத்தில் உணவு மணக்கிறது. தமிழகத்து ஊர்களின் உயர்வான உணவுப்பொருள் வரிசை கட்டுகிறது. நல்ல ருசியாளர் மு. இளங்கோவன் என்பதையும் அவர் நல்ல ஊர்சுற்றி என்பதையும்,  இவ்வாற்றுப்படை காட்டுவதன் வாயிலாக உணவிற்கும் ஆற்றுப்படை செய்துள்ளது.

          இந்நூலின் முன்னுரையும், தமிழ் வளம் தாங்கிய இணையதளங்கள் என்ற பகுதியும், தமிழ் இணையத்திற்குப் பங்கேற்றோர் பற்றிய புகைப்பட விவரக்குறிப்பும் (அரசியலுக்கு அப்பாற்பட்டு) பாடத்திட்டங்களில் இடம்பெறச் செய்யப்பட வேண்டியன. இதனால்  இணையத் தமிழ் மாணவர்கள்  பல நிலைகளில் பயன்பெறுவர்.

          நூலின் நிறைவில்”சங்க இலக்கிய ஆற்றுப்படை வடிவில் கங்கை கொண்ட சோழபுரத்து அண்மிய இடைக்கட்டு எனும் ஊரில் வாழ்வாங்கு வாழ்ந்து வானுலகெய்திய அசோதை – முருகேசன்  இணையரின் தலைமகனார்  இளங்கோவனார் இயற்றிய இணைய ஆற்றுப்படை முற்றிற்று ” என்ற முத்திரை -  உலகின் ஒரு பக்க மூலையில் இருந்து  உலகை நோக்கி எழுந்த அறைகூவல் என்பதில் ஐயமில்லை.

   இந்த இனிய இணைய நூலைப் பதிப்பித்து வெளியிட்டுள்ள பதிப்பாசிரியர் முனைவர் நாக. கணேசன் சிறந்த அறிவியலாளர். தமிழ்ப் பற்றாளர். இணைய ஆற்றலர். தக்கார் தகவறிந்து பழகும் அன்பர். உற்றார் உறவினராய்த் தமிழ் மக்களை நேசிக்கும் நல்லார். அவரின் பதிப்பாக இந்நூல் வருவது சிறப்பு.  அவரின் இணைய மாநாட்டு முன்னெடுப்பில் இதுவும் ஒன்று. இனிதாய் ஒன்று 

 

         

வெள்ளி, டிசம்பர் 22, 2023

ஞான வாசிட்டம் தந்த ஞானம்

 

கோவிலூரின் கதை                                                    கோவிலூர் ஆண்டவர் திவ்ய வரலாறு

 

ஞான வாசிட்டம் தந்த ஞானம்

கனகு, காரைக்குடி

            முத்திராமலிங்கர் எனப்படும் கோவிலூர் ஆண்டவர் சீர்வளர் சீர் முத்துராமலிங்க ஞான தேசிகரின் ஞான வாழ்க்கை தொடர்கிறது.

முத்திராமலிங்கரின் முத்தி ரேகை

முத்திராமலிங்க ஆண்டவருக்கு மெய்ப்பொருளின் தொடக்கம் பொருள் வைத்த சேரியில்  நிகழ்ந்தது. அவர் செல்லப்போகும் ஞான வழியைப் பலரும் முன்னரே அறிந்து ஆண்டவருக்குச் சொல்லி மகிழ்ந்தனர். சிக்கலில் ஆண்டவரின் தந்தையாரின் கீழ் பணிசெய்த சொக்கலிங்கம் பிள்ளை என்பவர் ஆண்டவரின் கைரேகைகளின் குறிப்புகளைப் பார்த்து அவர் ஞான வழி செல்ல வேண்டியவர் என்று வழிகாட்டினார். ஆண்டவர் தட்சிணாமூர்த்தி வடிவம் என்று உணர்ந்தார்.

திருநீற்றுக் காப்பு

இளம் வயதில் திருநீற்றை முழுவதும் பூசிக் கொள்வது ஆண்டவரின் வழக்கம். இதில் கிடைக்கும் ஆனந்தம் அவருக்குப் பேரானந்தம். இதனை ஏதோ வித்தியாசமான செயல் என்று கருதி சாமியாடியிடம் அவரின் குடும்பத்தார் அவரின் வித்தியாசமான செயல்கள் விலகிப் போக ஒரு சாமியாடியிடம் அழைத்துச் சென்றனர். அந்தச் சாமியாடி சாமியாடினார். கண்களை மூடிக் கொண்டு அச்சாமியாடி தாம்பூலம் கேட்க ஆண்டவர் வெற்றிலையுடன் மூன்று சுண்ணாம்புக் கட்டிகளை வைத்துக் கொடுக்க, சாமியாடியும் வெற்றிலை உண்டார்.  அவரின் வாய் வெந்துபோனது. வெற்றிலை சாமியாடிக்கா? சாமியாடியின் மேல் வந்த இறையருளுக்கா? என்ற சந்தேகத்திற்குப் பதில் கிடைத்தது. வெற்றிலை சாமியாடியின் உடலுக்குத்தான். சாமியாடியின் மேல் வந்த இறையருள் வலிதில் வந்தது என்று எல்லோருக்கும் உணர்த்தினார் ஆண்டவர்.

குட்டிச் சுவரும் ஞானக் குதிரையும்

ஆண்டவர் சிறுவராக இருந்தபோது அவரின் இல்லத்திற்கு ஒரு முறை தீயினால் பாதிப்பு வந்தது. வீடு தீப்பற்றி எரிந்து கொண்டு இருந்தது. வீட்டில் உள்ளவர்கள் குழந்தைகளை முதலில் காப்பாற்றி வேறு இடத்திற்கு அழைத்துச் சென்றனர். அன்பின் உணவுப் பொருள்கள், மற்ற பண்ட பாத்திரங்கள் எல்லாவற்றையும் எடுத்துக் கொண்டிருந்தனர். ஆண்டவர் மற்ற குழந்தைகளுடன்  இவற்றையெல்லாம் கவனித்துக் கொண்டு இருந்தார். மற்ற குழந்தைகளின் மனதில் கவலையும் வயிற்றில் பசியும் இருப்பதைக் கண்டார். தானே முன்வந்து எல்லாக் குழந்தைகளுக்கும் உணவு பரிமாறி வயிற்றுப் பசி போக்கினார். அதன் பின் அந்தக் குழந்தைகளுக்கு விளையாட்டு காட்டு ஒரு குட்டிச் சுவரின் மீது ஏறி  அதனைக் குதிரையாகப் பாவித்து குழந்தைகளுக்கு  விளையாட்டு காட்டினார். குதிரையின் மீது இருந்த ஆண்டவர் ‘‘செவலைக் காளை ஊரை மேய்கிறது. நீ செவ்வையாக நட ” என்று மெய்வாக்குகளைச் சத்தம் போட்டுச் சொல்லிக் கொண்டு குதிரையை ஓட்டினார். குழந்தைகளும் திரும்பத் திரும்பச் சொல்லின. செவலைக் காளை என்பது எரியும் நெருப்பு. அதுவே சிவந்த காளை. அந்தக் காளை ஊரை அழித்துக் கொண்டிருக்கிறது. அழிவன எல்லாம் அழியப் போகின்றன. உன் பாதையைப் பார்த்து நீ போ  என்று ஞானம் தேடி, ஞானக் குதிரை ஓட்டினார் ஆண்டவர்.  இதனைப் பார்த்த அவரின் உறவுப் பெண் ஒருவர் ”குட்டிச் சுவர் குதிரையாகுமா?” என்றார்.  அதற்குப் பதிலாக மகிழ்நன் இன்றி மகப்பேறு வாய்க்கப் பெறும் காலத்தில் ”குட்டிச் சுவரும் குதிரையாகும்” என்றார்.இன்றைக்கு மகிழ்நன் இன்றி மகப்பேறு காண நவீன மருத்துவம் வழி காட்டுகிறது. இனி குட்டிச் சுவரெல்லாம் குதிரையாகிவிடும் காலமும் வரலாம்.

வேதாந்தப் பாடம்

பொருள்வைத்த சேரி  ஆண்டவர் வாழ்வில் திருப்புமுனையாக அமைந்தது. எத்திசை போவது எனத் தெரியாத கப்பல் ஞானத் திசை போக உகந்த லிங்க ஞான குரு வழிகாட்டினார். தன்னுடனேயே ஆண்டவரை இருக்க வைத்து, அவருக்கு நாளும் ஞான உபதேசங்களைச் சொல்லி வைத்தார். அவரின் நெசவு செய்யும் தறியின்மேல் விரிந்து கிடந்த ஞான வாசிட்டத்தை எடுத்து இதுவே உனக்கான நூல் என்று ஆண்டவருக்கு அவரின் ஞான குரு வழங்கினார். ஞான வாசிட்டம் என்னும் பெரு நூலை ஆண்டவர் வணங்கி வணங்கிப் படித்துப் படித்து மனதில் இருத்தினார்.

இல்லறமும் கூடியது

            உகந்த லிங்க ஞான குருவிடம் ஆண்டவரின் தந்தையார்  தன் மகனுக்கு இல்லற பந்தம் ஏற்படுத்த வேண்டும் என்ற வேண்டுகோளை வைத்தார். இல்லற ஞானியாக விளங்கிய உகந்த லிங்கரும்  ஆண்டவருக்கு இல்லற பந்தத்தை ஏற்படுத்த மனம் ஒப்பினார். தேவகோட்டையைச் சார்ந்த மீனாட்சி (மீனாம்பிகை) என்ற துணையும் ஆண்டவரின் வாழ்க்கைத் துணையானது. இல்லறமே நல்லறமாக நாளும் வளர்ந்து வந்து ஆண்டவர் என்னும் ஞான விருட்சம்.

யோகீஸ்வரரின் ஞான வாக்கு

            காரைக்குடி என்னும் ஓங்காரக்குடிக்கு ஒரு நாள் யோகீஸ்வரர் ஒருவர் வந்து மக்களுக்கு ஆசி வழங்கிக் கொண்டிருந்தார். அவர் தன்னுடன் உரையாடும் அளவிற்கு ஞானம் உடைய யாராவது இருந்தால் அவரை அழைத்து வாருங்கள் என்று தன்னைச் சுற்றியிருந்தவர்களிடம் கூறினார். அப்போது ஞானம் மிகுந்தவராக விளங்கிய ஆண்டவரை அறிமுகம் செய்தனர். அந்த யோகீஸ்வரர் ஆண்டவரை அப்படியே தழுவி மகிழ்ந்தார். மேலும் ”இவர் பலரையும் நன்னிலை அடையச் செய்யும் ஞான குருவாக விளங்கக் கூடியவர். வேதாந்தத்தை உபதேசிக்க வந்தவர். இவரை நகரத்தார்களின் ஞான குருவாகக் கொள்ளுங்கள். இதற்கான அடையாளம் இன்னும் சில நாள்களில் தெரியும்” என்றார். இதனைக் கேட்ட மக்கள் அனைவரும் ஆனந்தம் அடைந்து தங்களுக்குத் தேடாமல் கிடைத்த ஞானமுத்து என்று ஆண்டவரை வணங்கி நின்றனர்.

கொப்புடைய நாயகியின் பாதுகாவல்

            ஆண்டவர் திருக்கல்யாணம் முடித்து மீண்டும்  தனது தந்தை வாணிபம் செய்து வந்த சிக்கல் என்னும் ஊருக்கு வந்தார். இல்லறத்தையும்  நடத்தினார். வேத விழுப்பொருளையும் நாளும் பயின்றார். ஆண்டவருக்குத் தாங்க முடியாத சுர நோய் வந்தது. ஆண்டவர் துவண்டுபோனார். சுர நோயில் இருந்து எவ்வாறு தப்புவது என்று வழி தெரியாது நின்றார். அப்போது ஒரு பெண் ஆண்டவரின் அருகில் வந்து தீர்த்தம் ஒன்றை வழங்கினார். அதனை வாங்கிப் பருகிய அந்த நொடியில் ஆண்டவருக்கு இருந்த சுரநோய் தீர்ந்துபோனது. அதுவரை தெரிந்த அந்தப் பெண்ணின் உருவமும் உடன் மறைந்தது.

            ஆண்டவருக்கு இது அதிசயமாக இருந்து. வந்தது யார் என்று எண்ணி எண்ணி ஏங்கினார். வந்தது கொப்புடையம்மை என்று உணர்ந்தார். அவரின் உள்ளம் கொப்புடையம்மையைத் துதித்தது.  ஞானப்பால் தந்தாள் உமையம்மை. ஞான தீர்த்தம் அருளினாள் கொப்புடையம்மை. வருத்தப்படுபவருக்கு வந்து நிற்கும் காவல் தெய்வமாகக் கொப்புடையம்மை என்றும் பாதுகாக்கிறாள். ஞானப்பால் உண்ட சம்பந்தர் பாடியதுபோல் ஞான தீர்த்தம் உண்ட ஆண்டவரும் கொப்புடையாளைப் பாடினார்.

ஆலோன் இறந்தும் உமை பாகத்  தண்ணல் இறந்தும் கமலமுறை

நாலா நநத் தோன் முடிந்து இறந்தும் நார தாதி யோர் இறந்தும்

காலா திகளும் மொழிந்து இறந்தும் ககனமாதி யழிந்து இறந்து

மாலோ கங்களில் இறந்து நின்றாள் அம்மே கொப்பை யுடையவளே

சந்திரமண்டலம், சிவபெருமான், பிரம்மன், மக்கள், காலம், உலகம், மற்ற உலகங்கள் கடந்து நிற்பவள் அன்னை கொப்புடையாள் என்று நம்மைக் கடந்து நமக்காக நிற்பவள் கொப்புடையம்மை என்று மனமுருகிப் பாடினார் ஆண்டவர்.

காலடி பற்றிய கதை

            ஞான வாசிட்டமும் ஆண்டவரின் மனதிற்குள் நிறைந்து வந்தது. ஒருநாள் இரவில் உகந்த லிங்க ஞானகுரு உறங்கிக் கொண்டிருந்தார். அருகில் அவரின் பாதங்களைப் பார்த்து, பிடித்து ஆசிரியருக்கு அசதி போக்கிக் கொண்டிருந்தார் ஆண்டவர். ஆண்டவரைச் சோதிக்க ஏதேனும் ஒரு பாடலைச் சொல்லுக என்றார் ஆசிரியர்.

            குருவின் பெருமையை  அறிந்த வண்ணம் ஆண்டவர் வைராக்கிய சதகப் பாடல் ஒன்றைச் சொன்னார்.

            ”உன்னுமுணர் வுக்குணர் வாயென  உண்மை தந்தாய்

            மன்னும் சுருதிப் பொருளாய் வழி காட்டி நின்றாய்

            பின்னும் குருவாய் அடைந்து உன்னருள் பேண வைத்தாய்

            என்னென்றுரைப்பேன் நின் கருணை இருந்தவாறே”

என்ற பாடலைச் சொன்னவுடனேயே மிக மகிழ்ந்தார் உத்தலிங்க ஞான குரு. தக்க சீடன், வேதாந்த தத்துவத்தினை உலகிற்குத் தரும் உத்தமன் என்று, பாராட்டி மிக மகிழ்ந்தார்.

ஞானவாசிட்டம்  நிறைவு

            ஞானவாசிட்டம் முழுவதையும் கற்றார், உணர்ந்தார்,ஓதினார் ஆண்டவர்.  ஞானவாசிட்ட நிறைவின் பொருட்டு தன் குருவிற்குப் பலவகை அலங்காரங்கள்,அபிடேகங்கள், காணிக்கைகள் செய்து ஞான வாசிட்ட வெற்றியைக் கொண்டாட எண்ணினார் ஆண்டவர். அதற்கான பொருளுக்கு என்ன செய்வது என்று யோசித்தார்.

            அந்நேரம் அவரின் தந்தையார் காரைக்குடிக்குச் செல்லக் கடைப் பொறுப்பினையும், பணப்பெட்டிச் சாவியையும் வியாபாரக் கூட்டாளியிடம் தந்தார். அத்தோடு, அவரிடம் ‘‘என் மகனிடம் பெட்டிச் சாவி சென்றுவிடாமல் பார்த்துக் கொள் ” என்று சொல்லிவிட்டுச் சென்றுவிட்டார்.

            அவரும் சாவியைக் காத்தார். அப்போது ஊரில் இருந்து ஓலை வழியாகச் செய்திகளைக் கொண்டுவரும் வேலையாள் பல ஓலைகளை எடுத்து வந்தான். அவனைப் பார்த்த, ஆண்டவர் இதுவே சரியான தருணம் என்று எண்ணி அவனை வழி மறித்து ஓலை மாற்றினார். ”கூட்டாளியின் அன்னை இறந்து போய்விட்டார் என்றும் உடன் புறப்பட்டு வரும்படியும்” ஓலையில் எழுதி ஆண்டவர் அவ்வோலை கூட்டாளிக்குச் சென்றது. அவரும் ஓலையை மெய் எனக் கருதி ஆண்டவரிடம் சாவிகளை ஒப்படைக்கிறார்.

            பெட்டியில் தூங்கிய பணம் ஞான வாசிட்ட வெற்றி விழாவிற்கு உதவி- பெரும்பேறு அடைந்தது. விழா சிறந்தது. ஊர் போன கூட்டாளியை ஆண்டவரின் சித்தப்பா மாயாண்டி விசாரிக்க பொய் மெய்யானதும்,மெய் பொய்யானதும் தெரியவந்தது. என்ன செய்வது . ஞானவாசிட்ட விழா நிறைவடைந்து இருநாள்கள் கழித்தபின்பே உண்மை வெளிப்பட்டது.

மயில் பிடிக்கப் போய் கோயில் பிடித்த கதை

            காரைக்குடிக்கும் சிக்கலுக்கும் அவ்வப்போது தொடர்பு ஏற்பட்டுக் கொண்டே இருக்கும். ஆண்டவர் காரைக்குடிக்குச் செல்கிறேன் என்று ஒரு முறை தன் குருவிடம் சொல்லிவிட்டுக்கிளம்பினார். அப்போது குருவின் பத்தினி ”காரைக்குடிக்குச் சென்று, திரும்பி வரும்போது, மயில்குஞ்சுகளைப் பிடித்துக் கொண்டுவரவேண்டும்” என்றார். அதனை குருவாசகமாக ஏற்று ஆண்டவரும் காரைக்குடிக்கு வந்தார். அவரின் பணிகள் நிறைவடைந்த பின் மயில் குஞ்சுகள் பற்றிய நினைவு வந்தது.

            காரைக்குடிக்கு அருகில் உள்ள மரங்கள் அடர்ந்த பகுதியான கோவிலூர் அருகில் மயில் குஞ்சுகள் கிடைக்கும் என்று எண்ணி தன் நண்பர் நல்லானுடன் ஆண்டவர்  கோவிலூருக்கு வந்தார். வந்த நேரம் நல்ல நேரம். கோவிலூர் தெய்வ வளம் பெறுவதற்கான நேரம் அது. வந்தவர் வேடர்களை அழைத்து இரு மயில் குஞ்சுகள் வேண்டும். பிடித்து வாருங்கள் என்றார். அவ்வேடர்கள் மயில் குஞ்சுகள் பிடிக்கப் போயினர்.

            அந்நேரத்தில் அருகில் உள்ள  கோயில் ஆண்டவர் கண்ணில் படுகிறது. வன்னி மரங்கள் சூழ்ந்திருக்க அருள்மிகு கொற்றவாளீசர் , திருநெல்லை அம்மன் வீற்றிருக்கு புராதன தலம் அது. இருந்தாலும் பராமரிப்பு இன்றி அக்கோயில் இருந்தது. அப்பனும் அம்மையுமாக வீற்றிருக்கும் அக்கோலம் ஆண்டவரின் மனதில் அழியாக் கோலமானது. நல்லானிடம் நாம் இக்கோயிலுக்கு வாரந்தோறும் வரவேண்டும் என்றார். திங்கள் கிழமையும், வியாழக் கிழமையும் கோயிலுக்கு வந்து தொண்டாற்றுவது என்று இருவரும் முடிவு செய்தனர்.

            மயில் குஞ்சுகளை வேடர்கள் பிடித்து வந்தனர். அவற்றைப் பொருள் வைத்த சேரிக்கு அனுப்பி வைத்தார் ஆண்டவர்.

            மயில் குஞ்சு பிடிக்கப் போனவர்களைக் கோயில் பிடித்துக் கொண்ட கதை இதுதான். வாரந்தோறும்  அருள்மிகு கொற்றவாளீசர், திருநெல்லை அம்மனை இருமுறை ஆண்டவர் சுவாமிகள் வழிபட்டு வந்தார். அவ்வாறு வழிபடும் ஒரு நாளில் மழை மிகுந்தது. ஒதுங்க இடம் இன்றி ஆண்டவனுடன் ஆண்டவரும் ஒடுங்கினார். இருந்தாலும் மழையின் வேகம், பெய்யும் காலம் ஆகியன அதிகமாயின. இரவு முழுவதும் நித்திரை கொள்ளாது யோகம் செய்து கொண்டிருந்தார் ஆண்டவர்.

            விடியலில் அன்னைக்கும் அப்பனுக்கும்  இருக்க இடம் நன்மையாய் அமைக்கவேண்டுமென ஆட்களை ஏவினார். பனை ஓலைகள் மாற்றப்பட தயாராக இருந்தன. ஆட்கள் பனையோலையை வேய முற்பட்டனர். அப்பன், அம்மை இருந்த குடிசை சாய்ந்து விழுந்தது. ஆண்டவர் மனதில் இக்கோயில் கற்கோயிலாக வேண்டும் என்ற எண்ணம் தோன்றியது.

           

தந்தை செவிகள் கேட்டும் கேட்காதவை

            ஆண்டவரின் மனதிற்கு ஏற்ப பணம் தருவதில் ஆண்டவரின் தந்தைச் சற்று கண்டிப்புடன் இருந்து தடைகள் செய்துவந்தார். ஆண்டவர் தன் குருவின் பத்தினியும், அவரின் இரு பெண்குழந்தைகளும் மங்கலம் பெற பெரும் பொருள் கொடுக்க வேண்டித் தன் தந்தையிடம் வேண்டுகோள் வைத்தார்.

            வேண்டுகோளைக் காதில் வாங்கவே இல்லை ஆண்டவரின் தந்தையார். ஆண்டவர் தன் தந்தையை நோக்கி ‘‘ தங்களுக்குக் காது கேட்காதா ” என்றார்.அந்தச் சொற்கள் தந்தையின் காதுகளில் விழுவதற்குமுன்பு அவரின் காதுகள் கேட்கும் திறனை இழந்துவிட்டன.

            தந்தையாருக்கு என்ன செய்வதென்றே புரியவில்லை. உடனே ஆண்டவரின் குருவினைக் கண்டார். நடந்ததைச் சொன்னார். உகந்த லிங்க ஞானகுரு, ”ஆண்டவர் கையால் திருநீறு பெற்று உய்க ” என்றார். குருவின் முன்னிலையில் தந்தைக்கு நீறளித்து அவரின் செவிகள் பழுதினை நீக்கினார் ஆண்டவர். மேலும் ”இந்நாள் முதல் தன் குருவின் குடும்பத்தைக் காத்துவருக!” என்று திருவாய் மலர்ந்தருளினார். அவ்வாறே ஞானக் காதுகள் பெற்று உய்ந்தார்.