Saturday, November 07, 2009

கட்டுரையின் தலைப்பை விமர்சிப்பதாக ஒரு கட்டுரை

நான் மணற்கேணி போட்டிக்காக எழுதிய (பெண்ணிய மாயையும் தொடரும் ஆணாதிக்கமும்) ஒரு கட்டுரையின் தலைப்பை விமர்சிப்பதாக ஒரு கட்டுரையைக் காண நேர்ந்தது, தலைப்பே பதிவர் சித்தூர் முருகேசன் அவர்களை நிறைய எழுத வைத்திருப்பது எனக்கு மிக்க மகிழ்ச்சியைத் தருகிறது
இருப்பினும் என் கட்டுரையைப் படிக்காமலே சித்தூர் முருகேசன் அவர்கள் மேற்சொன்ன பதிவை வரைந்துள்ளார்,
தற்போது பெண்ணியம் என்று கருதப்பட்டுவரும்- பேசப்பட்டு வரும்-எழுதப்பட்டுவரும் கருத்துக்களில் உள்ள போலித்தனங்களை அரங்கேற்றிட முனைவதே என் கட்டுரையின் நோக்கம் சித்தூராரின் கட்டுரை பின்வருமாறு
பெண்ணிய மாயையும் தொடரும் ஆண் ஆதிக்கமும்
Posted by சித்தூர்.எஸ்.முருகேசன் on Sunday, August 2, 2009
Labels:

மணற்கேணி அமைப்பு அறிவித்த ஒரு போட்டியின் தலைப்பு இந்த பதிவை எழுதும் தூண்டுதலை அளித்தது. தலைப்பே தவறு என்று இந்த கட்டுரையை துவக்க காரணம் அதிர்ச்சி மதிப்பிற்கான முயற்சியே. மணற்கேணிக்கு நன்றி. இதை போட்டிக்கு அனுப்பாததற்கு ஒரு காரணம் இருக்கிறது. காரணம் ரொம்ப பெர்சனல் (அதாவது நம்ம எழுத்து அந்தளவுக்கு டிப்ளமேட்டிக் கிடையாதுங்க)இந்த தலைப்பை உன்னிப்பாக கவனித்தால் தலைப்பே தவறானது என்பது புரியும். தலைப்பு பெண்ணிய மாயை என்று துவங்குகிறது. மாயை என்றால் என்ன பொருள் ?புத்திக்கு மயக்கத்தை தருவது மாயை. அல்லது இல்லாத ஒன்றை இருப்பதாய் எண்ணி மயங்குதல் மாயை அல்லது இருப்பதை இல்லாததாக கருதி மயங்குதல் மாயை அல்லது தேவையில்லாத ஒன்றை மிகத் தேவையானதாய் எண்ணி மயங்குதலே மாயை எனப்படும்.பெண்ணியம் என்பது புத்திக்கு மயக்கத்தை தருவதல்ல. தெளிவை தருவதே பெண்ணியம் . பெண்ணியம் என்பது இல்லாத ஒன்றல்ல. இருக்கிறது. என்ன சற்றே சோனியாய் உள்ளது. .பெண்ணியம் என்பது தேவையில்லாத விஷயம் அல்ல. மனித குலத்துக்கு அத்யாவசியமான ஒன்று பெண்ணியம்.பெண்ணியம் என்பது மாயையல்ல. பெண்ணியம் என்பது பெண்ணுக்கு சம உரிமை கோரும் கொள்கை. பெண்ணியத்தை நேரிடையாக அணுகும்போது அது ஏதோ பெண்களுக்கு மட்டுமே உரியது போலும் மறைமுகமாகவேணும் ஆண்களுக்கு ஆப்பு வைப்பது போலும் தோன்றும். ஆனால் பெண்ணியம் வெற்றி பெறாவிடில் ஆண் இனம் மொத்தமாய் பைத்தியம் பிடித்து சட்டையை கிழித்துக்கொண்டு கும்பலாய் ரோட்டில் அலைவது நிச்சயம் (என்னா.. இப்ப தனியே புலம்புறானுங்க )மக்கள் தொகையில் சரிபாதியாக இருக்கும் பெண் இனம் ஆணாதிக்கம் காரணமாய் உடல்,உள்ள பலமின்றி,பொருளாதார சுதந்திரம் இன்றி, மன உளைச்சல்களுடன், சமுதாயம் மீதான அதிருப்தியுடன் வாழ்வது என்பது சமுதாய நலன்களை எந்த அளவுக்கு பாதிக்கும் என்பதை பார்த்துக்கொண்டே தான் இருக்கிறோம்.தனக்கு மறுக்கப்பட்டவற்றாய் பெண்ணினம் முறையற்ற முறைகளில் பெற முனைந்து கொண்டே தான் இருக்கிறது . சில சந்தர்ப்பங்களில் வெற்றி பெற்றும் வருகிறது. உம்: தமிழகத்தில் ஜெயலலிதா, உ.பி.யில் மாயாவதி இதன் விளைவுகளை நாடு அனுபவித்தே தீர வேண்டும். இது நாட்டு வளங்களை எந்த அளவுக்கு விரயமாக்குகிறது என்பதை கிட்னிக்கு வேலை கொடுத்து சிந்தித்தாலே தெரியும். புரியும்.தொடரும் ஆண் ஆதிக்கம் என்ற வார்த்தையை பார்க்கும்போது பெண்கள் என்னவோ ஆண் ஆதிக்கத்துக்கு எதிராய் பெரிய போராட்டமே செய்துவிட்டது போலும் என்றாலும் ஆண் ஆதிக்கம் தொடர்வது போலும் ஒரு ஃபீலிங் வருகிறது. இதனால் போட்டிக்கான தலைப்பே தவறு என்று கூறி இக்கட்டுரையை ஆரம்பிக்கிறேன்.பெண்ணியம்,ஆணியம் என்று பிரித்து பார்ப்பதே முட்டாள் தனம். ஆனால் என்ன செய்ய வேத காலம் முதலாக (ஒரு சில விதிவிலக்குகள் தவிர)பெண் அடிமையாகவே வாழ்ந்து பின் தங்கிப்போனாள்.தண்ணீரை அழுத்தி சுருக்க முடியாது . இது பாஸ்கலின் தத்துவம். மனித மனம்,நீர் இரண்டுக்கும் சந்திரன் காரகத்வம் வகிப்பதாய் ஜோதிடவியல் கூறுகிறது. அவளுக்கு மறுக்கப்பட்ட உரிமைகளை அவள் எவ்வழியிலேனும் பெற்றிடத்தான் துடிப்பாள். அழகு,கவர்ச்சி,கண்ணீர் போன்ற ஆயுதங்களை அவள் பயன்படுத்த ஆரம்பிக்கும்போது சமுதாய மோரல் பாதிக்கப்படுகிறது. இதனால் பெண்ணியத்துக்கு காட்டப்படும் ஆதரவும் பெருமளவு குறைவதோடு பெண்ணியமே கேள்விக்குட்படுத்தப்பட்டுவிடுகிறது.எனவே பெண்ணிய வாதிகள் தம் போராட்டத்தை தீவிரப்படுத்துவதோடு தமது வியூகத்தை மாற்றிகொண்டாக வேண்டிய நிலை இன்றுள்ளது. நாளிதுவரை பெண்ணிய வாதிகள் பெண்ணை ஆணாக மாற்றத்தான் போராடினார்கள். இதனால் பெண் இருபுறம் ஏற்றப்பட்ட மெழுகு வர்த்தியாகி தன் ஆயுளையும்,சுதந்திரத்தையும் இரட்டிப்பு வேகத்தில் இழந்து வருகிறாள். கிருக இம்சையோடு (Domestic Violense) ,புற உலகின் இம்சையையும் அவள் கூடுதலாக எதிர்கொள்ள வேண்டி வந்துவிட்டது. இவற்றையெல்லாம் இந்த பதிவில் தொட்டேனும் பார்க்காது விடுவதாய் இல்லை.அவள் சம உரிமைகளுடன் வாழ்ந்தது மனித குலம் குகைகளிலும், வனங்களிலும் வசித்த காலத்தில் தான் என்பது என் அனுமானம். ஆணுக்கு சமமான உடல் வலிமையுடன்,வேட்டைத்திறமையுடன் இருந்திருப்பாள். அந்த வாழ்வில் மாதவிலக்கு எல்லாம் அவளை சொர்வுறச்செய்திருக்கவோ, ஓய்வை வேண்டவோ வைக்குமத்தனை நிலை கூட இருந்திருக்காது என்று நம்புகிறேன். பிரசவம் கூட அவளை பெரிதாய் பாதித்திருக்காது. தற்போதும் கூட பிரசவம் முடிந்த கையோடு அரிசி புடைக்கும் பெண்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். மனித குலம் காடு விட்டு நதிக்கரையோரமாக கடலோரமாக பயணத்தை துவக்கிய போது கூட பெண்ணுரிமைக்கு பங்கமிருந்திருக்காது. ஸ்திரவாசம், ஸ்திர விவசாயம் என்று வளர்ந்த போதுதான் தான் திருத்திய காடு தன் ரத்தத்துக்கே என்ற சுய நலம் மனிதனில் ஸ்திரப்பட்ட போதுதான் பெண்ணை சுற்றி வேலி முளைத்திருக்க வேண்டும்.அதுவரை செக்ஸ் என்பது கொழுப்பேறிய போது, அதிகப்படி சக்தியை வீசி எறியும் செயலாகவோ, அல்லது மழை,குளிரின் போது இதம் தரும் ஒரு செயலாக இருந்திருக்க வேண்டும். ஸ்திர வாசம் , மற்றும் வாரிசு குறித்த கவலை ஆணினத்தின் சிந்தனை போக்கை மாற்றிவிட்டது. அவள் இன உறுப்புக்கு பூட்டு போட முடியாத நிலையில் அவளையே பூட்டி வைக்க ஆரம்பித்தது. (சில பிரகிருதிகள் மேற்படி பூட்டுக்கே கூட முயற்சித்ததாக சரித்திர ஆதாரங்கள் உள்ளன)ஒருவனுக்கு ஒருத்தி என்ற இயற்கைக்கு முரணான ஏற்பாடு ஆரம்பித்த பின் தான் செக்ஸ் விஷயத்தில் தான் எந்த அளவுக்கு பலவீனன் என்பது தெரிந்திருக்க வேண்டும். ஒரு முறைக்கு பின் மறுமுறைக்கு அவன் சற்று நேரமாவது காத்திருக்க வேண்டியது கட்டாயம். பெண்ணோ ஒரே இரவில் 23 முறைகள் வரை உச்சம் எய்தும் சக்தியை பெற்றிருக்கிறாள். (இது இப்போதைய கணக்கு. அந்த காலத்தில் இது கு.ப இரட்டிப்பாகவேணும் இருந்திருக்கலாம்.இதையெல்லாம் ஆராய்ந்தறிய வன வாழ்வில் நேரமும் கிடையாது. அவசியமும் கிடையாது. (வாரிசுக்கான அவசியமோ ஒருவனுக்கு ஒருத்தி என்ற ஏற்பாடோ கிடையாது என்பதால்) . பெண்ணின் பலத்தை அறிந்த ஆண் நடு நடுங்கிப்போனான். அவளில் தாழ்வு மனப்பான்மையை விதைக்க தலைப்பட்டான். (இதற்கு மாதவிலக்கு ஒரு பெரும் வாய்ப்பானது) அவள் கால்களை மட்டுமல்ல மனதையும் கட்டிப்போட்டான். சிறுமியிடம் ஜிமிக்கி திருட வந்தவன் அவளுக்கு மிட்டாய் தருவது போல அவளது சுதந்திரத்தை பறித்துக் கொண்டு தாய் என்றும் சகோதிரி என்றும் பட்டங்கள் சூட்டினான். உழைப்பிலிருந்து அவளை விடுவித்து ஓய்வு கொடுத்தான். அந்த ஓய்வு பெண்ணை மேலும் பலவீனப்படுத்தியது. உடல் ரீதியான பலவீனம் அவளை மன ரீதியில் பெரிதும் பாதித்தது. பாதுகாப்பற்ற தன்மை அவளை ஒட்டுண்ணியாக்கியது. சதிகாரியாக்கியது.பெண்ணுக்கு பால்யத்தில் தந்தையும், இளமையில் கணவனும், முதுமையில் மகனுமே பாதுகாப்பு என்று கூறப்பட்டது. அதனால் அவள் பால்யத்தில் தந்தையையும், இளமையில் கணவனையும், முதுமையில் மகனையும் இன்ஸ்பைர் செய்வதே பிழைப்பாய் வாழ வேண்டியதாயிற்று.உண்டிச்சுருங்குதல் பெண்டிற்கழகு என்று கூறப்பட்டது. இந்த பழமொழி இந்த காலத்திற்கு வேண்டுமானால் பொருந்தலாம். க்ரைண்டர்,மிக்ஸி, யுகம் இது. அந்த காலத்தில் அதுவும் கூட்டுக்குடும்ப யுகத்தில்,இயந்திரங்களின் துணையில்லாத காலத்தில், கு.க.அமலில் இல்லாத காலத்தில் ? யோசித்துபாருங்கள்.அடப்பாவிகளா !போதிய போஷாக்கு இல்லாவிடில் உடல் உடலை உண்டு விடாதோ. அவளை உடலாகவே பச்சையாக சொன்னால் வெறும் துளையாகவே பார்த்தது சமுதாயம்.அதை எவனேனும் உபயோகித்து விடக்கூடும் என்றும் சீல் உடைபட்டுவிட்ட பொருளை சந்தைப்படுத்த முடியாது என்றும் வேறு வார்த்தைகளில் கூறியது. அதை ஒரு பாதுகாப்பு குறைபாடாக காட்டி கற்பனை வளத்துடன் கற்பு என்ற நூதன அணிகலனை உருவாக்கி அதையே முழு முதல் தகுதியாக்கி அதை இழந்து விடுவாய் என்று கல்வியை மறுத்தது. வேலை வாய்ப்பை மறுத்தது. பொருளாதார சுதந்திரத்தை மறுத்தது. மீறி கேள்வி கேட்டால் நீ விலைமகளாக விரும்புகிறாயா என்று எதிர்கேள்வி எழுப்பியது.ஒரு விலை மகள் விஷயத்திலேனும் அவளிடம் உறவாட வருபவனுக்கு சில நிபந்தனைகள் விதிக்க அவளுக்கு உரிமை இருந்தது .வந்தவன் இடம்,பொருள்,ஏவல் எல்லாம் பார்க்க வேண்டியிருந்தது. ஆனால் திருமணமான குலமகளுக்கோ அந்த உரிமைகள் கூட கிடையாது. இன்னும் சொல்லப்போனால் ஒரு சர்வீஸுக்க் ஒரு சர்வீஸ் ஃப்ரீ என்பது போல் சில கேஸ்களில் அவள் தன் கணவனின் தந்தை, அண்ணன் தம்பிமார் இச்சைகளுக்கும் இணங்க வேண்டியிருந்தது. (சமீபத்தில் கூட இது போன்ற வழக்கு விவரம் தமிழ் வார இதழ்களில் வெளியானதை கவனித்திருக்கலாம்)பெண் என்பவள் ஒரு துளை, அத்துளையின் சகல உரிமைகளுக்கும் கணவனே பட்டாதாரன்.அவள் சரீர சுகம் தரும் நீண்ட கால ஒப்பந்த அடிப்படையில் வந்த வேசி.இலவசமாகவே வாரிசை பெற்று தரும் வாடகைதாய் . சம்பளமில்லாத வேலைக்காரி. இவன் குழந்தைகளின் ஆயா. அதுகளின் கழிவை அகற்றும் தோட்டி. என்னங்கடா இது எங்கயாவது அடுக்குமா ? எந்த ஜீவ ராசியிலாவது இது போல் நடக்கிறதா ? ஏதோ சில உயிர் இனங்களில் ஒருவனுக்கு ஒருத்தி ஏற்பாடு இருக்கலாம். ஆனால் அது இயற்கையின் ஏற்பாடு. அங்கும் கூட அது பரஸ்பர அங்கீகாரத்தின் பேரில்தான் அமலாகிறது.இன்றைய திருமணமான பெண்களுக்கு நீங்கள் விரும்பினால் உங்கள் கணவர்களை விவாகரத்து செய்துவிடலாம் .உங்களை இந்த சமுதாயத்தில் உள்ள ஆணினம் இழிவாய் நோக்காது. நோக்கினால் அவர்களுக்கு லுல்லா கட் செய்யப்படும். பெண்ணினமும் புறம்பேசாது. பேசினால் அவர்களின் நாக்கு கட் செய்யப்படும். உங்களுக்கு தேவையான வேலை வாய்ப்பு,சுய தொழிலுக்கான கடனுதவி அனைத்தும் 24 மணி நேரத்தில் ஏற்பாடு செய்யப்படும் என்று அறிவிக்கட்டும். எந்த கணவனின் கீழும் ( நான் ஆதிக்கத்தை சொன்னேங்க ) பெண் என்பவளே இருக்கமாட்டாள் . வேணும்னா ஆண்கள் எல்லாரும் ஹோமோக்களா மாறியிருப்பாங்க.நான் பெண்ணியம் என்ற கருத்துக்கு ஆதரவாக இத்தனை ஆவேசமாக கருத்துக்களை கொட்டினாலும் பெண்களுக்கான உரிமைகளை ஆண்களே முன் வந்து வழங்க வேண்டும் அ அரசு அதற்கான சட்டங்களை கொண்டு வரவேண்டும் என்று மட்டும் கூறமாட்டேன். ஏனெனில் ஆண்கள் மனமுவந்து வழங்குவதாயின் எப்போது வழங்கியிருக்க வேண்டும். அரசின் சட்டங்கள் என்கிறீர்களா ? இருக்கும் சட்டங்கள் ஒழுங்காக அறிமுகமானாலே போதும். ஆனால் அவை அமலாகா.இதற்கு என்ன காரணம் என்றால் ஆண் பெண்ணின் மீது ஆதிக்கம் செலுத்துவது அவள் குறித்த அச்சத்தால். அரசுகளை நடத்துவது ஆண்கள். சரி அரசியலதிகாரம் கிடைத்தால் போதாதோ உ.ம் 33 சதம் ஒதுக்கீடு. இதனை ஸ்தூலமாக பார்க்கும்போது பெண்ணின விடுதலைக்கே கொண்டு வரப்போவதாக தோன்றும். ஆனால் சற்றே அவதானித்துப்பார்த்தால் அய்யராத்து அழகுகள் இப்போதிருக்கும் இட ஒதுக்கீட்டு கொள்கைக்கு பாச்சா காட்டிவிட்டு கொல்லைப்புறவழியாக பாராளுமன்றங்களில் நுழையத்தான் வழிவகுக்கும்.உண்மையான தலித் பெண்தான்: நமது நாட்டில் உண்மையான தலித்தாக ஒடுக்கப்படுபவள் பெண் தான் . உயர் சாதிக்காரன் தலித்தை கொடுமைப்படுத்தினால் மேற்படி தலித் தன் மனைவியை கொடுமைப்படுத்துகிறான். சாதீய அமைப்பு தாழ்த்தப்பட்ட,பிற்படுத்தப்பட்ட ஆண்களுக்கு கல்வியை மறுத்து வெறும் கூலிகளாக மாற்றினாலும் இது தாழ்த்தப்பட்ட,பிற்படுத்தப்பட்ட பெண்களுக்கு ஓரளவு நன்மையை செய்ததென்றே கூறவேண்டும். ஆம் அவர்களுக்கு குலப்பெருமை இத்யாதி (?) இல்லாமையால் ,அவர் தம் கணவன் மாருக்கு வாரிசுகள் வந்து ஆள சொத்துக்கள் கிடையாதென்பதால், கற்பு, ஒருவனுக்கு ஒருத்தி ஏற்பாடுகள் அந்த அளவுக்க் கடுமையாக அமலாகவில்லை. மேலும் நிலங்களில் பாடுபட மனித வளம் அபரிமிதமாக தேவைப்பட்டதால் அந்த பெண்கள் அந்த அளவுக்கு பாதிக்கப்படவில்லை.இந்த விஷயத்தில் மு.படுத்தப்பட்ட பெண்களின் நிலை மோசம். அவர்கள் வெறுமனே லேயர் கோழிகளாக தான் பாவிக்கப்பட்டனர்.ஆண்கள் தமது குலம் தந்த எதேச்சதிகாரத்தால் பிற வர்க,குல பெண்களை பெண்டாளும் முயற்சியிலும், ஊர் நிலங்களை கொள்ளையடிப்பதிலும் கருமமே கண்ணாயிருந்தனர். தமது ஆதிக்கத்தை நிலை நிறுத்திக்கொள்ளவும், வளர்த்துக்கொள்ளவும் அரசனோ, இன்ன பிற அதிகார மையங்களோ கோரிய போது தமது வீட்டு லேயர் கோழிகளை ப்ரொவைட் செய்து வந்தனர். பெண்டிரோ உண்டி சுருங்கி, அடிமைத்தளையால் மனம் சுருங்கி கிடந்தனர். உள்ளடக்கி வைக்கப்பட்ட செக்ஸ் தேவைகள் சேடிசமாகி தம் கணவரின் இதர மனைவியரையும்,ஆசை நாயகியரையும்,வேலைக்காரர்களையும், துன்புறுத்தி அதில் இன்பம்கண்டனர். தம்மை துளையாகவே கருதி அடிமைத்தளையில் பிணைத்த ஆண்களை அதையே கருவியாக கொண்டு பழிவாங்கவும் செய்தனர். அல்லது கணவன் உடல் ஒடுங்கி கிடக்கையில் பிள்ளைகளை அவனுக்கு எதிராக திருப்பி திருப்தியடைந்தனர். மொத்தத்தில் மன நோயாளிகளாகவே இருந்தனர். அந்தப்புரத்து பெண்களின் நிலை வேறு விதம் செயற்கை பொருட்களால் தயாரிக்கப்பட்ட ஆணுறுப்பை ஒத்த பொருட்களால் அலிகள் இன்பம் தர (?) கைதி வாழ்வை வாழவேண்டியதாயிற்று. காலம் மாறியது. அன்னியர் படையெடுப்பின் போது ஆண்களின் நேரம் ,சக்தி அவர்களை எதிர்ப்பதில் செலவாகிக்கொண்டி ருக்க பெண் சற்றே தன்னை ஆசுவாசப்படுத்திக்கொள்ள முடிந்தது. ஆனால் அவர்களிலும் பெண்ணடிமைத்தனம் இருந்ததால் அவர்களின் ஆட்சியிலும் பெண்களின் நிலையில் பெரிதாய் மாற்றம் வரவில்லை. பஞ்சாங்கங்கள் மிலேச்சர் என்று இழிவாக குறிப்பிடும் கால் கழுவாத ஆங்கிலேயர் வருகைக்கு பின்புதான் பெண்ணின் நிலையில் மாற்றம் துவங்கியது. பால்ய திருமண தடை, உடன் கட்டை ஏறுதலுக்கு தடை, பெண் கல்வி போன்ற அம்சங்கள் பெண்ணின் அடிமைத்தளைகளை ஓரளவு தளர்த்தவே செய்தது. சுதந்திர இந்தியாவில் இந்த அடிமைத்தளைகள் ஏறக்குறைய ஒரு பெண் திடமான சங்கல்பத்துடன் துணிந்தால் உஃப் என்று ஊதிவிடக்கூடிய ஒட்டடையாக மாறியது. ஆனால் சங்கல்பத்துக்கு தூண்ட வேண்டிய கல்வி பெண்ணினத்துக்கு கிடைத்ததா?, சங்கல்பம் கார்யரூபமடைய ஒத்துழைக்க வேண்டிய அமைப்புகள் ஒத்துழைக்கின்றனவா ? என்றால் இல்லை என்றுதான் கூறவேண்டும் . பெண் தனது சுதந்திரத்தையோ , உயிர் அ மானத்தையோ காத்துக்கொள்ள தனியளாக அணுகும்போது அவளுக்கு உதவும் நிலையில் பிரதம பிரபுத்வ கார்யாலயங்களான காவல் நிலையங்கள் உள்ளனவா என்றால் இல்லை. அவளுக்கு அங்கு கிடைப்பது இலவச உபதேசங்களும், மெலிதான அச்சுறுத்தல்களும் தான். ஒரு வேளை அவள் இவற்றிற்கு மசியாது போனால் இருக்கவே இருக்கின்றன பொய்வழக்குகள் ,லாக்கப் டெத்ஸ். மகளிர் காவல் நிலையங்கள் உள்ளனவே என்று நீங்கள் கேள்வி எழுப்பலாம். முதற்கண் அங்குள்ள பெண்கள் ஆண்களாக மாறிவிட்டிருப்பார்கள்.தப்பித்தவறி யாரேனும் மாறாதிருந்தாலும் மேல் சாவனிஸ்டு துறையில் ஒரு எல்லைக்கு மேல் அவர்களால் சுதந்திரமாக செயல்பட முடியாது.கோர்ட்டுகள் பற்றி சொல்லவே வேண்டாம். இருக்கும் கடுப்பில் எதையாவது எழுதப்போய் நீதிமன்ற அவமதிப்பாகிவிடப்போகிறது. சுருக்கமாக சொன்னால் எந்த அரசுமே, அந்த அமைப்புமே பெண்ணின் உரிமையை , வாழ்வை , கு.ப. உயிர் வாழ்வை கூட உறுதி செய்வதாய் இல்லை.Half knowledge is too dangerous என்பது போல் பெண்ணுக்கு கிடைத்துள்ள அரை குறை சுதந்திரம் பெண்ணின் வாழ்வை குளிக்கப்போய் சேறு பூசிக்கொண்ட கதையாக்கி விட்டது. கல்வி பெற கல்விச்சாலைக்கு போனால் அங்கு அவளை சக மாணவர்கள் மட்டுமே அல்லாது , அவர்களிடமிருந்து காப்பாற்ற வேண்டிய ஆசிரியர்கள் மற்றும் நி ர்வாகமே அவளை குதறிப்போடுகின்றன. ஒரு முறை அம்பேத்கர் பவனில் சுய உதவிக்குழு பெண்களுக்கான ஒரு அரசு நிகழ்ச்சி நடந்தத். நாற்காலிகள் காலியாய் கிடக்க ஆளுங்கட்சியை சேர்ந்த ஒரு பிரமுகர் தான் நடத்தும் நர்சிங் கல்லூரி பெண்களை யூனிஃபார்மிலேயே வரவழைத்து உட்கார வைத்த் ஹாலை நிரப்பினார் என்றால் பாருங்கள்.அவள் வந்ததோ கல்வியை பெற. கல்வி மூலம் வேலை வாய்ப்பை பெற்று பொருளாதார சுதந்திரத்தை பெற. ஆனால் அங்கு அவள் நிலை என்ன ? பள்ளி நிர்வாகி சார்ந்த கட்சி ஆட்சியில் இருக்கும்போது அரசு நிகழ்ச்சியில் காலி நாற்காலிகளை நிரப்பவேண்டும்கல்வி பயில வரும் பெண்ணுக்கு அக்னிபரீட்சையாக இருப்பது பிராக்டிக்கல் மார்க். தொந்தி சரிந்து, தலை முடி இழந்து, சோடா புட்டி கண்ணாடி போட்டாலன்றி பகலில் பசு மாடு தெரியாத லெக்சரனுக்கு இவள் கேவலம் இரண்டு சதை கோளமாக உபயோகப்பட வேண்டும். அல்லது துளையாக மாற வேண்டும். இல்லாவிட்டால் ப்ராக்டிக்கல்ஸ் கோவிந்தா.. இந்த அரசுக்கு உண்மையிலேயே பெண்ணிய நோக்கிருந்தால் முதலில் இந்த ப்ராக்டிக்கல் மார்க் என்ற சமாச்சாரத்தையே தூக்கி எறிய வேண்டும்.முன்னர் வீடுகளில் மட்டும் நரகத்தை அனுபவித்த பெண்ணுக்கு அலுவலகமும்,பணியிடமும் கூடுதல் நரகமாயின. முன்னர் தந்தை/கணவனுக்கு அஞ்சி பரபரத்த காலம் போய் அலுவலகத்தில் முதலாளி,மேலதிகாரி,சூப்பர்வைசர் என்று கண்ட நாய்கள் முன்னும் நாயாய் வாலை குழைக்க வேண்டியதாயிற்று. இதற்காக வீட்டிலான கடமைகள் ஏதேனும் குறைந்ததா என்றால் இல்லை. மேலும் சின்ன சின்ன விஷயத்துக்கும் "ஹ்ம்..மகாராணி நாலு காசு சம்பாதிக்கிறால்ல இனி இதெல்லாம் செய்ய உடம்பு வளையுமா? " என்ற கமெண்டுகள். வீட்டிலிருந்து பணியிடம் செல்கையில் பயண போக்குவரத்தில் படும் இம்சைகள். (சொந்த வாகனமே ஆனாலும் அதற்கான தவணையை பெண்தான் தன் வருமானத்தில் இருந்து கட்ட வேண்டியுள்ளது. சொந்த வாகனத்தால் போக்க்வரத்த் தொடர்பான சில்லறை இம்சைகள் கட்டுப்படுத்தப்பட்டாலும் விபத்து என்ற கத்தி அவள் தலை மீது தொங்கிக்கொண்டேதான் இருக்கிறது.தப்பித்தவறி நியாயமான வழிகளிலோ /அநியாயமான வழியிலேயோ விடுதலை பெற்று விட்ட பெண் ஆணாக மாறிவிடுகிறாள்.(சிலர் பேச்சு, நடை ,உடை பாவனைகளில் மட்டுமல்லாது ,பழக்க வழக்கங்களில் மட்டுமல்லாது ( புகைத்தல், மது அருந்துதல்) உடலியல் ரீதியாகவும்மாறிவிடுவதாக கேள்வி. ஆம் . அவள் முன்னர் ஆண்கள் உலகத்தில் தான் சந்தித்த அவமானங்களையெல்லாம் நினைவு கூர்ந்து ஆண்களை பெண்களாய் நடத்த ஆணாகவே மாறிவிடுகிறாள். அவளால் விடுதலை பெற துடிக்கும் பெண்களுக்கு எந்த வழிகாட்டுதலும்.மோரல் சப்போர்ட்டும், உதவியும் கிட்டாமலே போய் விடுகிறது. மேலும் ஒரு சோகம் என்னவென்றால் அவள் என்னதான் தன் அடிமைத்தளைகளை தகர்த்தெறிந்து சமுதாயம் தன்னை புதைத்து எழுப்பிய சமாதியை பெயர்த்து நிமிர்ந்தாலும் அவளின் சாதனை அங்கீகரிக்கப்படுவதில்லை. அவள் முன் புழுவாய் நெளிந்து காரியம் சாதிக்கும் ஆண் கூட சற்றும் தயங்காது அவள் கற்பின் மேலோ, அவள் நடத்தையின் மேலோ ,கல்லெறிகிறான். வாரிசு முறைப்படி அரசியல் அதிகாரம் , நிர்வாக அதிகாரம், பொருளாதார பலம் பெறும் பெண்ணை சுற்றிலும் கூட கண்ணுக்கு தெரியாத கண்ணாடி சுவர் இருக்கிறது. அடிமை வேலியை தாண்டிச்செல்ல துடிக்கும் பெண்களை மீண்டும் பட்டியில் கொண்டுவந்து அடைக்க கும்கி யானைகளாய் பெண்களே உபயோகிக்கப்படுகிறார்கள்ஆக இந்த கட்டுரை ஆன கல்யாணத்துக்கு மேளம் போல் அமைந்து பெண் எப்படி அடிமைப்பட்டாள், எப்படி அடிமையாய் தொடர்கிறாள் என்பதை இதுவரை விவரித்தது. சரி பெண்ணியம் வெற்றி பெற, அதன் மூலம் மனித குல மாண்பை காத்து நல்லதொரு எதிர்காலத்தை ஏற்படுத்த அரசு,சமூகம், பெண்கள்,ஆண்கள் ,பெண்ணிய வாதிகள் என்ன செய்ய வேண்டும் என்பதை இப்போது பார்ப்போம். மாறியுள்ள உலக பொருளாதார நிலை, மந்தத்தன்மை , உலகமயமாக்கல், தனியார் மயம், க்ளோபலைசேஷன், தாராளமயம் ஆகியன ஆணை பலவீனனாக்கியுள்ளது. ஜாப் செக்யூரிட்டி என்பது இனி கனவுதான். எனவே ஆண் தன் சர்வைவலுக்கு அதிக நேரம்,சக்தி செலவழிக்கவேண்டியுள்ள இந்த நிலை பெண்ணிய வெற்றிக்கு அருமையான சந்தர்ப்பமாகும். இந்த நேரத்தில் நான் கீழே தரும் அம்சங்களில் பாதியேனும் சாத்தியமானால் பெண்ணியம் வெல்வது உறுதி. அதன் மூலம் மனித குலம் மாண்புறுவதும் உறுதி. (இல்லாட்டி எதிர்கால புதை பொருள் ஆராய்ச்சிகாரங்க காறித்துப்புவாங்கப்பா !)(மீதி அடுத்த பதிவில்1.அனைத்து எல்லைகள்,பிரிவுகளுக்கு(பிரிவினைகள்) அப்பாற்பட்டு பெண்கள் ஒன்று திரள வேண்டும்.2.முதற்கண் பெண்ணிய நோக்குள்ள அமைப்புகள் ஒன்று திரள வேண்டும். பெண்களை ஒருங்கிணைக்க செயல்படவேண்டும்.3.கேட்க நாதியில்லை என்று தான் பெண்கள் தம் தளைகளை அமைதியுடன் ஏற்று வாழ்கின்றனரே தவிர அடிமைத்தனத்தை விரும்பி அல்ல. எனவே பெண்ணுக்கெதிரான குற்றங்களை /உரிமை மறுப்புகளை பாகுபாடுகளை உள்ளூர் காவல் நிலையம் முதல் ஐ.நா சபை வரை எடுத்துச்செல்ல வேண்டும்4. நாடு தழுவிய இந்த அமைப்பில் அரசியல் பின்னணி, சினிமா , தொலைக்காட்சி பின்னணி கொண்ட எந்த பெண்ணையும் சேர்க்க கூடாது. (காரணம் : பெண்ணடிமை கோலோச்சுவது இந்த துறைகளில் தான். சில கட்சிகளின் மகளிர் அணியின் முக்கிய வேலையே தலைவர்களின் சதைப்பசிக்கு ஏற்பாடு செய்வதுதான் என்று கேள்வி. 5.இந்த அமைப்புக்கென்று ஊருக்கு நூறு பேராவது இருக்குமாறு மோட்டிவேட் செய்யவேண்டும் இவர்கள் ஒன்றும் ஜீன்ஸ், சட்டை பார்ட்டிகளாகத்தான் இருக்க வேண்டும் என்ற கட்டாயம் கிடையாது. பொருளாதார சுதந்திரம் பெற்று சக பெண்களின் சுதந்திரத்துக்காக தமது ஓய்வு நேரங்களை செலவழிக்கும் நிலையில் இருந்தால் போதுமானது.பேனா பிடித்து ஒரு மனு எழுதவும், மவுஸ் பிடித்து ஒரு மெயில் அனுப்பவும் தெரிந்திருந்தாலே போதுமானது6.சொந்த வெப்சைட் + சொந்த பத்திரிக்கை . இதில் கோலங்கள், எந்த சாமிக்கு எந்த நாள் விசேஷம் மாதிரி சமாச்சாரங்கள் வெளியாக கூடாது. முக்கியமாய் ராசிபலன்.7. பெண்களுக்கான அரசியல் ஒதுக்கீடு அமலாக தடையாக உள்ளது அதில் உள் ஒதுக்கீட்டுக்கு (சாதிவாரி) ஆளும் கட்சி தரப்பில் மறுப்பு இருப்பது தான்.இது குறித்த விழிப்புணர்ச்சியை ஊட்டி உள் ஒதுக்கீட்டுக்கு ஆதரவு திரட்ட வேண்டும்8.எந்த பெண்ணுக்கு எந்த பிரச்சினை வந்தாலும் அவள் வேசியாகவே இருந்தாலும் சரி அவளுக்கு இந்த அமைப்பு துணை நின்று அவள் உரிமைகளை காத்துக்கொள்ள உதவ வேண்டும்

பெண்ணிய மாயையும் தொடரும் ஆணாதிக்கமும்


பெண்களை தனித்த உயிரியாக, உரிமையுடையதாக சொல்லாலும் செயல்களாலும் பாதிப்புகளுக்கு உள்ளாகாத தற்காப்புடையதாக, தன் வாழ்வை தானே நிர்ணயிக்கிற சுய சிந்தனை உடையதாக மாற்ற/ இருக்க/ இயங்க வழிகோலும் கருத்துக்களுக்கு இடமளிக்கும் இயம் பெண்ணியம்.
குளிர்சாதனப் பெட்டி = பெண்
ஒரு கடையில் உணவுப்பொருள்களைப் பாதுகாப்பதற்காக புதிய குளிர் சாதனப் பெட்டி ஒன்றைக் கடைக்காரர் வாங்குகிறார். அது பார்க்கச் சிவப்பாக அழகாக இருக்கிறது. தேவையானபோது அது கடைக்காரரைக் குளிர்பானங்களைத் தந்து குளிர்விக்கிறது. அவற்றை மற்றவர்களுக்கும் அளித்து மகிழ்கிறது. தேவையான பொருள்கள், தேவையற்ற பொருள்கள், அழுகின பொருள்கள், அழுகாத பொருள்கள் எல்லாவற்றையும் சுமந்து கொண்டு அது கடைக்காரரின் நன்மைக்கே இயங்கி வருகிறது.இதற்கும் தற்காலப் பெண்களுக்கும் எத்தனை ஒற்றுமைகள் இருக்கின்றன. நிறம், குளிர்வித்தல், சுமத்தல் இவை அனைத்தும் இரண்டுக்கும் உள்ள ஒற்றுமைகள். கடைக்காரரின் நன்மைக்கே இயங்குதலும், கணவனின் நன்மைக்கே இயங்குதலும் மிகச் சிறந்த ஒற்றுமை. என்றாவது ஒருநாள் கடைக்காரர் குளிர்சாதனப் பெட்டியின் மீது கரிசனம் கொண்டிருப்பாரா? அல்லது அதனைக் கேட்டு ஒரு பொருளை வைக்க, எடுக்க முயன்றிருப்பாரா? இருக்க முடியாது. அது தேவையில்லை. தான் வாங்கிய பொருள் தனக்கே. . . அது முற்றிலும் உழைக்க வேண்டும் என்ற அவர் எண்ணுவது இயல்பு.இதைவிடக் கொடுமை. குளிர்சாதனப் பெட்டி தன் வேலையில் குறைவு பட்டுவிட்டால் உடனடியாகக் கடைக்காரரால் இந்தப் பெட்டி தூக்கியெறியப்படும். அதன்பின் புதிதாக ஒன்று வரும். அதுவும் கடைக்காரருக்கே உழைக்கும். கூடுதலாக ஒரு மின்சமப்பெட்டியையும் ( stubliser) வாங்கி வைத்து விடுவார். அந்தக் குளிர்சாதனப் பெட்டி இன்னும் கூடுதலாக உழைக்கும்.இந்த அடிப்படையில் எண்ணிப் பார்த்தால் தற்காலப் பெண்களின் சூழலும், இந்தக் குளிர் சாதனப் பெட்டியின் இயல்பும் மிகப் பொருந்தி நிற்பது புரியும். பெண் உயிரினமாகக் கூட கருதப்படாமல் ஏதோ ஒரு பொருளின் இயல்பில் அவர்களை வாழவைக்கும் சுயமற்ற போக்கு மாறவேண்டும் என்றே பெண்ணியம் விரும்புகிறது. பெண் ஒரு பொருள் அல்ல. அவளுக்கு விருப்பு வெறுப்புகள் உள்ளன. அவளின் பொருளை, உடலை அவள் விருப்பப்படி பயன் கொள்ளலாம். துய்க்கலாம்.அதற்கான பல முன்னெடுப்புகளை பெண்ணியவாதிகள் முன்வைக்கின்றபோதும் பெண்ணிய எழுச்சிகள் இன்னும் சரிவர வந்து சேர்ந்தபாடில்லை.
பெண் அனுபவிப்பின் தளமல்ல
அமெரிக்கா முதல் அந்தமான் வரை, காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை பெண்ணைச் சொல்லாலும், செயலாலும் இழிவு படுத்தும் போக்கு குறையவே இல்லை.அமெரிக்க அரசியல் மையத்தில் ஒரு பெண்ணுக்கு நேர்ந்த கொடுமைக்குப் பல சோதனைகள் நடத்த வேண்டியிருக்கிறது. காஷ்மீர்ப் பெரியவர்களுக்கு விளையாட்டுப் பொம்மைகளாக அனுப்பப்பட்ட பெண்கள் இறந்ததும் அதை எதிர்த்துக் கேள்வி கேட்டால் அரசியல் அரங்கம் ஆட்டம் கொள்கிறது. அனுப்பப்பட்ட பெண்கள் ஓரினச்சேர்க்கையர் என்பதும், அவர்களை அனுப்பியது ஒரு பெண் தலைமையிலான கூட்டம் என்பதும் கூடுதல் வருத்தத்தைத் தரும் செய்திகள். கள்ளக்காதலுக்குத் தடையாக இருந்த மகனை அம்மாவே நறுக்கிய கதை மனத்தை உலுக்குகிறது. கள்ளக்காதலி வீட்டுக்கு வர அவளை உண்மை மனைவியும் கணவனும் இணைந்து கொல்கிறார்கள். காதலன் முன்பே அவனுடன் இருசக்கர வாகனத்தில் பின்னால் வந்த பெண் பிற ஆண்களால் விருப்பமின்றித் தன்னை இழக்கிறாள். மனநிலை பாதிக்கப்பட்ட ஒரு ஆண் பெண்களை சாகடித்துக் கொன்று அதன்பின் அவர்களைப் பயன்படுத்தியிருக்கிறான். தன்னைக் குடித்துத் துன்புறுத்திய கணவனை அரிவாளால் வெட்டிய மனைவி, நறுக்கி வீட்டுத் திண்ணையாக்கிய மனைவி . . . இப்படி விரியும் நாளிதழ்ச் செய்திகள் எதை உணர்த்துகின்றன.இந்நிகழ்வுகள் அனைத்திலும் பெண்ணும் இடம் பெற்றிருக்கிறாள். ஆண்களும் இடம் பெற்றிருக்கிறார்கள். பெண்ணை அழகின் இருப்பிடமாக, அனுபவிப்பின் தளமாகக் காண்கிற, கொள்கிற ஆணின் புத்தியாலேதான் மேற்கண்ட நிகழ்வுகள் நடைபெற்றுள்ளன. இந்த ஆணின் புத்திக்குப் பெண்ணும் துணைபோகிறபோது அவளும் ஆண்தன்மையைப் பெற்றவளாகவே மாறிவிடுகிறாள்.
ஆண்சூழலில் வாழுபவள் பெண் அல்ல
ஓர் ஆண் தன்னோடு பழகிய ஆண்களைப் பார்க்கிறபோது/ பழகாத ஆண்களைப் பார்க்கிறபோது கவர்ச்சிகரமான சிந்தனை ஏற்படுவதில்லை. ஆனால் அவனே எந்தப் பெண்ணைப் பார்த்தாலும் கவர்ச்சி கொள்கிறான். அவளை அடைந்து விட முயல்கிறான். அவளை அடைய வாய்ப்புக் கிடைத்தால் அதைப் பயன்படுத்திக் கொள்கிறான்.ஓர் பெண் தன்னோடு பழகிய பெண்களை/ பழகாத பெண்களைப் பார்க்கிறபோது கவர்ச்சிக்கு ஆட்படுவது இல்லை. ஆண்களைப் பெண்கள் பார்க்கிற பார்வையில் ஓரளவிற்குக் கவர்ச்சிக்கு ஆட்பட்டாலும் அது அவர்களை அடையவேண்டும் என்ற உணர்வெழுச்சியை ஏற்படுத்துவதில்லை.ஆண்களிடத்தில் உள்ள பயன்படுத்துதல் என்ற ஒன்றே பெண்களுக்கு எதிரான அடக்குமுறைகளுக்கும், பெண்களுக்கு எதிரான செயல்பாடுகளுக்கும், ஆணாதிக்கத்திற்கும் காரணமாக அமைந்துவிடுகின்றது.
பெண்ணுக்கு எதிரான நிகழ்வுகளை வெளிப்படுத்தும் தகவல் தளங்களும் செய்திகளை வெளியிடுகையில் ஆண்சார்புத்தன்மையுடனேயே வெளியிடுகின்றன. “கள்ளக்காதலால் மகனையே கொன்ற தாய்” என்ற ஒரு தலைப்பு, செய்தித்தாளில் வந்த தலைப்பு ஆகும். இந்தச் செய்தியை எழுதியவர் ஓர் ஆண் என்பது அதன் தலைப்பிலேயே தெரிந்துவிடுகிறது. கள்ளக்காதலுக்குக் காரணமான, உடந்தையான ஆணே கள்ளக்காதலியின் மகனைக் கொல்லக் காரணமாக இருந்தாலும், அவன் இத்தலைப்பிற்குள் மறைந்து கொள்கிற ஒரு பக்க சார்பைப் புரிந்து கொண்டால் இதனுள் இருக்கும் ஆணாதிக்கம் புரிய வரும்.
எனவே இக்கால நிலையில் குழப்பான சூழலில் பெண்கள் இருக்கிறார்கள் என்பது தெளிவாகிறது. ஆண் சூழலுக்குள் தன்னை இழந்து நிற்கிறார்கள் என்பது உண்மை.இவர்களை மீட்டுத் தன்னை உணர்ந்து கொள்ளச் செய்ய வேண்டிய பெண்ணியம், பெண்ணியவாதிகள் செய்தது என்ன? செய்ய வேண்டியது என்ன? என்பதை ஒரு மீளாய்விற்கு உட்படுத்த வேண்டும்.
பெண்கள் பள்ளிக்கூடம், பெண்கள் கல்லூரிகள், பெண்கள் பல்கலைக்கழகங்கள் போன்றன தொடங்கப் பெற்று விட்டன. இவற்றில் பெண்களே வேலைபார்க்கிறார்கள். படிக்கிறார்கள். தோட்டக்காரர்கள் முதல் துணைவேந்தர் வரை பெண்கள்தான். என்றாலும் அவர்கள் படிக்கிற படிப்பு பெண்ணுக்குச் சாதகமானதா என்ற கேள்வியை எழுப்பிப்பார்க்கவேண்டும். பாடதிட்டம், அதற்குள் இடம் பெறும் பாடங்கள், அதனை எழுதிய ஆசிரியர்கள் ஆகியனவற்றை ஆராய்ந்துப் பார்த்தால் பத்து விழுக்காடு கூட பெண்கள் தொடர்புடையதாக இருக்க வாய்ப்பிருக்காது. ஆணின் பாடங்களைப் படித்து வரும் பெண்கள் எப்படி உண்மையான பெண்களாக இருக்க இயலும்.பெண்களே எழுதும் புத்தங்கள், தொகுக்கும் புத்தகங்கள் வந்துவிட்டன. எனினும் பெண்கள் தொகுக்கும் புத்தகங்களில் பெண்களுக்கு உரிய சாதகமான கருத்துக்கள் இடம் பெற்றுள்ளனவா என்பது கேள்விக்குறிதான். குறிப்பாகச் சொல்லவேண்டுமானல் தற்போது சாகித்திய அகாதமி வெளியிட்டுள்ள பெண் மையக் கதைகள் தொகுப்பில் ஆண்களோடு பெண்களின் கதைகளும் இடம் பெற்றுள்ளன. இதனைத் தொகுத்தவர் பெண். இவர் எப்படி ஆண் கதைகளைப் பெண்களுக்குச் சாதகமானதாக ஏற்று அவற்றைத் தொகுக்க இயலும். ஆண்கள் எவ்வளவு விழிப்பாக எழுதினாலும் அதற்குள்ளும் ஆணாதிக்கக் கருத்து வந்து புகுந்து கொள்ளும் என்பது தான் உண்மை.
புறச்சூழலை மாற்றி அமைக்க முடிந்தால் மட்டுமே, அல்லது புறச்சூழல் மாறினால் மட்டுமே பெண் உண்மையான பெண்ணாக வலம் வர இயலும்.
பெண்ணியத் தோற்றமும் மாயையும்
பெண்ணியம், பெண்ணியவாதிகள் என்பதற்கான பொருள் தமிழ்ச்சூழலில் வேறுமாதிரியாகத் திரிக்கப் பெற்றுள்ளது. இத்திரிப்பிற்குக் காரணம் ஆண் விமர்சகர்கள். பெண்ணியம் என்பதை ஒரு பெண் மற்றொரு பெண்ணுடன் கொள்ளும் காம உணர்வு என்பதே பல ஆண்விமர்சகர்களின் கருத்து. மணமுறிவு பெற்றவர்கள், மணமாகாதவர்கள் இவர்களெல்லாம் பெண்ணியவாதிகள் என்பதும் மேற்சொன்னது போன்றதொரு தவறான பார்வையாகும்.உண்மையான பெண்ணியவாதிகள் என்பதான எண்ணத்தை எட்டவே இன்னும் பல நூற்றாண்டுகள் ஆக வேண்டி இருக்கும். ஆண்களின் தோழியாக வாழும் பெண்கள், ஆண்களின் பராமரிப்பில் இருக்கும் பெண்கள் இவர்களெல்லாம் பெண்ணியவாதிகள் என்ற தவறான எண்ணமும் தமிழ்ச்சூழலில் விளங்கி வருகிறது.இவற்றில் இருந்து உண்மையான பெண்ணியத்தை, பெண்ணியவாதிகளை இனம் கண்டறியவேண்டி தேவை தற்போது ஏற்பட்டிருக்கிறது. அப்படித் தேடிப்பார்த்தால் உண்மையான பெண்ணியம் என்பதும், உண்மையான பெண்ணயவாதி என்பதும் கிடைக்காமல் கூடப் போகலாம்.
சக பெண்களை முன்னேற்றும் பெண் பெண்ணியவாதி ஆவாள். அவள் எலைன் ஷோவால்டர் சொல்வது போன்று சகோதரித்துவ குணம் பெற்றவளாக இருப்பாள். தனக்கு எதிராக நடந்த இழப்புகளை, அவமரியாதைகளை தன் சகோதரி அனுபவிக்காமல் காப்பவளே உண்மையான பெண்ணியவாதி.
மேலை நாடுகளில் உங்கள் எதிரியோடு உறங்குகிறீர்கள் என்று கூறி படுக்கையறையை விட்டு வெளியேறிய பெண்களின் போராட்டம் தரும் கருத்து என்ன? என்றைக்கும் ஆண் ஆணாகவே இருப்பான். அவன் பெண்ணைப் பற்றிச் சிந்திக்க வேண்டாம். அவன் உறவின்றி நாமே நமக்கான வாழ்வைத் தொடங்குவோம் என்பதுதான்.
குடும்பத்தில் பிறந்த பெண் குடும்பத்தவளாக வாழ்கிறபோது பல அனுசரிப்புகளுக்கு உள்ளாக வேண்டியவளாக இருக்கிறாள். அப்படி வாழ்வது சரியென வாழும் பெண்களின் வாழ்வில் பெண்ணியம் நுழைந்து அவர்களைக் கெடுத்துவிடப் போவதில்லை. ஆனால் குடும்பத்தில் சம உரிமையை நிலைநாட்டப் பெண்ணியம் அவர்களுக்குக் கற்றுக் கொடுக்கிறது. மின்னல் பூக்கள் என்ற நாவலில் இறந்த பெற்றோருக்கு ஆண் இறப்புக் கடன் செய்வது போல பெண்ணும் செய்யலாம் என்பதை திலகவதி முன்வைக்கிறார். அவரே சொப்பன பூமி நாவலில் அச்சகத்தொழிலில் உள்ள ஆண், பெண் தொழில் மதிப்பு வேறுபாட்டைக் களைய முன்வருகிறார். குடும்பச் சூழலை முன்வைத்து பெண்களை முன்னேற்றும் தற்கால போக்கு ஒருபுறம் தற்போது தமிழ்ப் பெண்ணியத்திற்குத் தேவையாகின்றது.
மணம் வேண்டாத, ஆண்துணை வேண்டாத, தன்னையே நம்பி, தன்உழைப்பினைத் தனக்கே உரிமையாக்கிடத் துடிக்கும் தனித்த பெண்நிலைக்கும் இக்காலத்தில் விதை இட வேண்டி இருக்கிறது. இவ்வாறு தனித்துப்போனால் உலகம் இயங்காது. உற்பத்தி பெருகாது என்ற மரபுக் குரல்கள் வாடகைக் கருப்பைத் தாய்களாலும், வாடகை ஆண்விந்தணுக்களாலும் மறைந்து போய்விட்டன. தேவைப்பட்டால் தந்தை தாய் – யார் யாரெனத் தெரியாமல் புதிய உற்பத்திக் கோட்பாடுகளை மருத்துவம் உருவாக்கி வருவது இந்தக் கேள்விக்கு முற்றுப் புள்ளியை வைத்துவிடும்.
இதுவும் அல்லாமல், அதுவும் அல்லாமல் இரண்டுங்கெட்டான ஆகிவிட்ட பெண்ணியத்தை பெண்ணிய மாயை என்றே குறிக்க இயலும். ஆடைகளில் விடுதலையைத் தேடி ஆண்களின் ஜீன்ஸ்களில் நல்லதைத் தேடுதல் உண்மையான பெண்ணியமாகாது. காமத்தில் விடுதலைதேடி ஆண்குழுவோடு தன்னை இணைத்துக் கொள்ளும் குழு விளையாடல்கள் உண்மையான பெண்ணியமாகாது. இதில் வீழ்ந்துகிடக்கும் தற்போதைய தமிழ்ப் பெண்ணிய உலகைக் கண்டிப்பான கரங்கள் கொண்டுத் தூக்கியே நிறுத்த வேண்டும்.

ஆணாதிக்கம்
எழுதுதலும், வெளியிடுதலும் ஆணாதிக்கக் கரங்களில் தற்போது உள்ளன. ஆனந்தவிகடன் வெளியிடும் புதிய புத்தகங்களில் பெண்களின் புத்தகங்கள் எத்தனை என்பதை எண்ணினால் இது தெற்றெனத் தெரியும். காலச்சுவடு தான் கண்டறிந்துள்ள பெண் எழுத்தாளர்களைத் தவிர வேறு பெண் எழுத்தாளர்களே உலகில் இல்லை என உண்மைபேசும். தன் கைக்காசு செலவழித்து ஆண்வெளியீட்டகத்தில் கவிதைத் தொகுதிகள் போட்டுச் சில பெண்கள் கவிதைத் தொகுப்புகளை வெளியிட்டுக் கொள்ள முடிகிறது.இணைய தளங்களில் உண்மையான பெயர்களில், உண்மையான புகைப்படங்களுடன் பெண்கள் உலாவரஇயலாது. வந்தால் பின்னூட்டங்களில் பல இடைஞ்சல்கள் வரும். அம்பை எழுதிய முகமுடிகளுக்குப் பின்னால் முகங்கள் (The face behind the mask) பெண்கள் தம் சொந்தப் பெயரில் எழுதாமைக்கான பல காரணங்களை முன்வைக்கிறது. இதே சூழல்தான் தற்போது இணையத்தில் உள்ள பெண்களுக்கும். இணையத்தில் வெளியான ஒரு பெண்ணின் புகைப்படத்தையும், ஒரு குழந்தையின் புகைப்படத்தையும் அவர்கள் அனுமதி இன்றிப் போட்டு விட்டு தற்போது தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாட்டுக் கழகம் அதை வெளியிட்ட விளம்பரக் குழு மீது நடவடிக்கை எடுக்கச் சொல்லி கண்டிப்பினைக் காட்டியிருக்கிறது.இந்தச் சூழலில் வெளியிட்டுத் தளங்கள் ஆண்கள் கட்டுப்பாட்டில் உள்ளன என்பதில் ஒரு சிறிதும் மாறுபாடு இல்லை. ஆண்களின் வெளியீட்டுச் சாதனத்துக்குள் பெண் எவ்வாறு விடுதலையுடன் செயல்பட முடியும்.
எழுத்தாளர் ஜெயமோகன் அவர்கள் தமிழ்ப் பெண்ணியம் சுருக்கமான வரலாறு என்ற ஒரு கட்டுரையை எழுதியுள்ளார்.அவர்தம் கட்டுரையின் ஒவ்வொரு வரிக்குள்ளும் எள்ளல் நிறைந்திருக்கிறது. பெண் எழுத்தாளர்களைக் கேலிபேசும் மேதாவிக்குணம் நிறைந்திருக்கிறது.அவர் பிரிக்கும் பல்வேறு பெண்ணியக் காலகட்டங்களின் பெயர்களில் உள்ள கேலித்தன்மையை உங்களுக்குச் சுட்ட விரும்பிகிறேன். அவர் தமிழ்ப்பெண்ணியத்தைப் பின்வரும் உட்பகுப்புகளாகப் பிரித்துக் கொள்கிறார்.1. கொண்டைக்காலம்( 1950 ஆம் ஆண்டுக்கு முன்னால்)2. பின்சடைக்காலம் (1950 முதல் 1965 வரை)3. மாறு சடைக்காலம் ( 1965 முதல் 1975வரை)4. முன்சடைக்காலம் ( 1975 முதல் 1985 வரை)5. சுரிதார் காலம் ( 1985 முதல் 1995 வரை)6. ஜீன்ஸ்காலம் (1995 ஆம் ஆண்டு தொடங்கி)

இந்தக் கால வரிசையைப் பார்க்கும் எவருக்குள்ளும் எள்ளல் தோன்றும் என்பதில் ஐயமில்லை. பெண்களின் இயக்கத்தினை, அரசியலை, விழிப்புணர்வை இதைவிடக் கொச்சைப்படுத்த முடியாது. இன்னும் அந்தக் கட்டுரையின் சில பகுதிகள் ஆணிய எழுத்து அகங்காரத்தின் விளைவுகள். அவற்றைத் தந்து அவற்றில் உள்ள ஆணியச் சொல்லாடல்களை விளக்கவேண்டியது இக்கட்டுரையின் கடமை. (கட்டுரையைப் படித்து ஏற்றது செய்ய அதன் இணைப்பு பின்வருமாறு: http://jeyamohan.in/?p=276 ) ஜீன்ஸ் காலகட்டத்தைப் பற்றிய விவரணை பின்வருமாறு.
“பெண்ணியம் ஒரு தனி அழகியல் மற்றும் அறிவுத்துறையாக மலர்ச்சி அடைந்த காலகட்டம் இது. இக்காலகட்டத்தின் எழுத்தாளர் அம்பை என்னும் சி.எஸ்.லக்ஷ்மி. இவர் எழுதிய கதைகளில் பெண்கள் நிறைய படித்தமையால் ஒன்றுமே தெரியாமலாகி குழந்தைத்தனத்துடன் ‘தோசை ஏன் வட்டமாக இருக்கிறது” போன்ற கேள்விகளை கிராமத்துப் பெண்களிடம் கேட்டார்கள். அம்பையின் நாயகி ”வாழ்நாளில் இதுவரை எத்தனை தோசை சுட்டிருப்பீர்கள்?”என்று கிராமத்து ஆச்சியிடம் கேட்டபோது பக்கத்து டீக்கடை ராமையாக் கோனார் அவர் அடித்த டீக்களின் கணக்கையும் கேட்பாளோ என்று அஞ்சி கடைபூட்டி அம்பாசமுத்திரத்திற்கு கம்பிநீட்டியதாக சொல்லப்படுகிறது.கணவனை டேய் என்று அழைப்பது, நல்வழிப்படுத்தும் பொருட்டு மட்டும் அவ்வப்போது அவனை அடிப்பது, கணவன் நண்பனின் தோளில் சாய்ந்துகொண்டு ஆங்கிலச் செய்தித்தாள் படிப்பது போன்றவை இக்காலகட்டத்தில் வலியுறுத்தப்பட்டிருக்கின்றன. பேச்சில் ‘ஷிட்’ ‘மென்ஸ்ட்ரூவல் பிளட்’ ‘சிமோங் த பூவா’ போன்ற சொற்கள் கலப்பது அவசியமாக இருந்திருக்கிறது. பொட்டு வைக்காமை, பிரா போடாமை போன்றவையும் அக்கால வழக்கம் எனச் சொல்கிறார்கள். சிகரெட் பிடிப்பதும் பீர், ஒயின் அருந்துவதும் சாலச்சிறப்பே. பெண்ணிய ஆயுதமாக துப்பட்டா மாறியதை இக்காலகட்ட வரலாறு ஆவணப்படுத்துகிறது.
துப்பட்டாவை தோளில்போட்டுக்கொள்ள இருநூற்று எண்பத்தேழு வழிகள் இருக்கின்றன. அதை மார்புகளை மறைக்கவும் பயன்படுத்தலாம், கல்யாணத்துக்கு பிறகு. இலக்கிய மேடைகளில் துப்பட்டா கொடியாகப் பயன்படும். இக்காலகட்டத்தில்தான் பெண்கவிஞர்கள் நிறைய உருவாகி வந்தார்கள். ‘நீ நீதான்,நான் நான்தான்’ என்பதே இக்காலகட்டத்தில் எழுதப்பட்ட கிட்டத்தட்ட நாற்பத்தியெட்டாயிரத்தி அறுநூற்று எண்பத்திமூன்று கவிதைகளின் மையக்கரு என்று தெரிகிறது. ‘நல்லவன் இல்லையோ நீ?’ என்று ஒரு பெண்கவிஞர் எழுதிய வரியை சில விஷமிகள் தவறாகப் படித்து பொருள்கொண்டமையால் ஏற்பட்ட பரபரப்பைத் தொடர்ந்து அதே சொல்லை பெண்கவிஞர்கள் அனைவருமே பாவிக்க வேண்டிய கட்டாயத்துக்கு ஆளானதை வரலாற்றுக் கொடுமை என்றே சொல்லவேண்டும். ஒரு பெண்கவிஞரின் கவிதைத்தொகுதியை நாயுடுஹால் ஸ்பான்ஸர் செய்து வெளியிட்டது என்ற செய்திக்கும் ஆதாரம் ஏதுமில்லை.
ஜீன்ஸ் காலகட்டத்தில் பெண்கள் இறுக்கமான டாப்ஸும் அதைவிட இறுக்கமான ஜீன்ஸும் அணித்து இரண்டுக்கும் நடுவே அரையடி இடைவெளி விட்டு சிவந்த சாயமிட்ட கூந்தலை அலைபாய விட்டு குரல்வளை தெரிய சிரித்தார்கள். பைக்குகளில் பின்னால் கால்பரப்பி அமர்ந்து ஒட்டிக்கொண்டு சென்றார்கள். செல்போனில் பதினெட்டுமணிநேரம் பேசும் வழக்கம் இருந்தது. இப்பேச்சுக்களை இடைவிடாது கேட்கும்பொருட்டு இளைஞர்கள் தன்னையறியாமலேயே உம் கொட்டும் பழக்கத்தை உருவாக்கிக் கொண்டிருந்தார்கள். இவர்களின் ஊடகமாக இணையமே இருந்தது என்று வரலாறு ஆவணப்படுத்துகிறது. இவர்கள் அதிகமும் ஆர்குட் என்ற இணைய தளத்தை பயன்படுத்தினார்கள். ‘தினத்தல்’ என்று தமிழ்க்கொண்டல் மூலம்கிழார் அவர்களால் [பேரன் அவர் பெயரை பைல்ஸ்கிழார் என்று மாற்றியதாக கூறப்படுவது அவதூறு] தமிழாக்கம் செய்யப்பட்ட டேட்டிங் இக்காலகட்டத்தில் பரவலாக இருந்திருக்கிறது.”இந்த விவரணையில் அம்பையின் பிரபலமான பெண்ணிய கதை ஒன்று சீரழிக்கப் பெற்றிருக்கிறது. அது மட்டும் இல்லாமல் பெண்களின் உள்ளாடைகள் குறித்த கேலிகளும் வருத்தமளிப்பன. இதுதவிர ”நல்லவன் இல்லையோநீ” என்ற கவிதைத் தொடரில் யோநீ என்பதன் வாயிலாக வெளிப்படுத்தப்பட்டுள்ள இழி நிலை கவனிக்கத்தக்கது. பெண்கள் தங்களை, தம் உடலைப் பற்றி எழுதுவது என்பது அவர்களுக்கான இலக்கியமாகக் கொள்ளப்படுகிறது. அதை ஆண்கள் படிக்க வேண்டும் என அவர்கள் விரும்பவில்லை. பெண்களின் தனித்துவ படைப்புக்களை ஆண்கள் படிப்பதே குற்றம் என்ற நோக்கில் புனையப்படுகிற பெண் எழுத்துச் சுதந்திரத்தினை இத்தனைக் கேவலப்படுத்தியிருக்க வேண்டாம். மேலும் எழுத்தாளர் லட்சுமி- கோதைநாயகி அம்மாள் குறித்தும் சில நம்பிக்கையற்ற விமர்சனங்கள் இவரால் வைக்கப்பெற்றுள்ளன. இவை ஆணாதிக்க மமதையால் வந்தனவன்றி வேறல்ல.இதுபோல நச்சு தேய்ந்த விமர்சனங்கள் பெண்ணியத்தை வளர்ப்பன அல்ல. அதனைத் தேய்த்து அழிப்பன.காலம் நிற்பதையும், தோற்பதையும் கணக்கீடு செய்து கொண்டு வரலாறாக ஆக்குகிறது. இந்நிலையில் விழிப்புற்ற பெண்கள் நூறாண்டுகள் கழித்து அடையப் போகிற வெற்றிக்காக இன்றைக்கு எழுதுகிறார்கள். ஏக்கம் கொள்கிறார்கள். அவர்கள் மீது ஆணாதிக்கச் சகதியை, சங்கதிகளைப் பூசாமல் இருப்பது நல்லது.

திருச்சியில் நூல் வெளியீட்டு விழா




சைவ சித்தாந்த சாத்திரங்கள் பதினான்கு ஆகும். இவை தமிழர்தம் தத்துவக் கொடை ஆகும். தனித் தமிழ்ச் சிந்தனை வயப்பட்டதாக அமைந்த, உயிர்களின் நிறைநிலை பற்றிச் சிந்தித்த இந்தத் தத்துவ நூல்களுள் பல மறைபொருள்கள் பொதிந்து கிடக்கின்றன. இவற்றை வெளிக் கொணர்ந்து இவை தரும் உண்மைகளை அறிந்து கொள்ள பல முயற்சிகள் மேற்கொள்ளப் பெற்று வருகின்றன.
அதன் ஒரு பகுதியாக பதினான்கு சாத்திரநூல்களுக்கும் எளிய உரை வரைந்து ஒரே நூலாகத் தரும் பணியை உமா பதிப்பகம் தற்போது செய்துள்ளது. இந்நூலுக்கான உரை விளக்கத்தை முனைவர் பழ. முத்தப்பன் அவர்கள் வரைந்துள்ளார்கள். தத்துவப் புலமையும் தமிழ்ப் புலமையும் ஒரு சேர அமையப் பெற்ற அவர்கள் தம் உரை தமிழ் உலகிற்கு புதிய எளிய வழியைத் தரும்.
முனைவர் பழ. முத்தப்பன் அவர்களின் உரையுடன் சைவ சித்தாந்த சாத்திரங்கள் என்ற நூலின் வெளியீட்டு விழா வரும் 14.11.2009 அன்று (சனிக்கிழமை) மாலை ஆறு மணியளவில் திருச்சி புத்தூர் நெடுஞ்சாலையில் உள்ள முகூர்த்தம் திருமண மண்டபத்தில் நடைபெற உள்ளது.
இவ்விழாவிற்கு உமா பதிப்பகத்தின் உரிமையாளர் திருமிகு உமாஇராம. லெட்சுமணன் வரவேற்புரை வழங்குகிறார்கள். சீர் வளர் சீர் திருவாவடுதுறை ஆதீனம் அவர்கள் தலைமை தாங்கி நூலினை வெளியிடுகிறார்கள். நூலைப் பெற்று வாழ்த்துரையை திருமிகு எஸ். பி. காசிச் செட்டியார் அவர்கள் வழங்குகிறார்கள். மேலும் இவ்விழாவில் மாண்புமிகு இ. எம். சுதர்சன நாச்சியப்பன் அவர்களும், மாண்புமிகு எஸ். இரகுபதி அவர்களும் விஜயா பதிப்பக உரிமையாளர் திரு எம். வேலாயுதம் அவர்களும், அகத்தியர் புத்தக நிலைய உரிமையாளர் எஸ். கோபால கிருஷ்ணன் அவர்களும் வாழ்த்துரை வழங்க உள்ளார்கள். நூலினை மதிப்புரை செய்யும் பணியைத் திருமிகு கம்பன் அடிசூடி பழ. பழனியப்பன் அவர்கள் செய்ய உள்ளார்கள். மேலும் அறநெறிஅண்ணல் முக்கப் பிள்ளை, மது. ச. விமலானந்தம் அவர்களும் நூல்ச் சிறப்புகளை எடுத்துரைக்க உள்ளார்கள்.
விழாவில் முனைவர் பழ. முத்தப்பன் அவர்கள் மகிழ்வுரை ஆற்றுகிறார்கள். மேலும் இவ்விழாவில் காஞ்சிபுரம் பேராசிரியர் அமுத. இளவழகன் அவர்கள் நன்றியுரை ஆற்றுகிறார்கள்.
இவ்வழைப்பினை ஏற்று அனைவரும் திருச்சியில் வந்து இருந்துச் சுவைத்து நூலை வாங்கி வாசித்து மகிழ்ந்திட அன்புடன் அழைக்கிறோம்.

Friday, November 06, 2009

சுற்றம் சூழ வாழும் வாழ்க்கை நெறி



மனிதன் சமுதாயச் சார்புடையவன். ஒவ்வொரு மனிதனும் சமுதாயத்தைச் சார்ந்தே வாழ வேண்டிய கட்டமைப்பில் உள்ளான். அவனின் தனி முயற்சி ஒரு புறம் அவனை உயர்த்தினாலும் அவன் சமுகத்தின் ஒரு அங்கமாக அந்தச் சமுகத்தின் கருத்துகளுக்கு மதிப்பளிப்பவனாக வாழ்ந்தால் மட்டுமே அனைவராலும் போற்றப் படுகிற உயர் நிலைக்கு உயரமுடியும்.
உலகத்தோடு ஒட்ட ஒழுகல் பலகற்றும்
கல்லார் அறிவிலா தார் (140)
எவ்வது உறைவது உலகம் உலகத்தோடு
அவ்வது உறைவது அறிவு (425)
மேற்சுட்டிய குறட்பாக்களும் மனிதன் சமுகச் சார்புடையவன் என்பதை உணர்த்துவனவாகும். உலகத்தோடு ஒட்ட ஒழுகும் பண்பே மனிதர்க்குத் தேவையான அடிப்படை பண்பாகும். இப்பண்பினை ஒரு மனிதன் பெற வேண்டுமானால் சமுகத்தில் உள்ள அனைத்து மக்களோடும் இடையீடு இன்றிப் பழகவேண்டும். அனைவரும் மாசற்ற அன்பு கொள்ள வேண்டும். சண்டை சச்சரவு அற்ற ஒப்பற்ற உலகாக இவ்வுலகு உயர்வர்தற்கு இதுவே சரியான வழி. அந்த உன்னத வழியை உலகம் அடைவதற்காகவே இலக்கியங்கள், தத்துவங்கள் போன்றன நாடுகள் தோறும் தோன்றின. தோன்றிக் கொண்டு இருக்கின்றன. யாதும் ஊரே யாவரும் கேளீர் என்ற புறநானூற்றுப் புலவன் இன் சொல் இன்னுலகம் முழுமைக்கும் ஏற்கப்பட்டிருப்பதன் நோக்கமும் இதுவே ஆகும்.
சமுதாயக் கூட்டத்தில் மக்கள் அனைவரும் சரிசமம் என்ற போதிலும் அவர்களுடன் பழகுகின்ற போது, அன்பைப் பகிர்ந்து கொள்கின்றபோது அவரவர் குணம், பண்பு பார்த்தே பழகவேண்டி இருக்கிறது. மனிதர்களின் குணம், பண்பு போன்றன வெளிப்பட தெரிவதில்லை. அவை உடலுக்குள், உணர்வுக்குள், மனதிற்குள் புதைந்து கிடக்கின்றன. புதைந்து கிடக்கும் இந்த உணர்வுகளைப் புரிந்து கொண்டு, இக்குணம் பண்பு போன்றவற்றிற்கான நிலையில் மனிதர்களைப் பிரித்து அறிந்து கொள்வது மிக்கடினம். இந்த கடின நிலையை எளிதாக்கிட வள்ளுவர் சிற்றினம் சேராமை, பெரியாரைத் துணைகோடல், பெரியாரைப் பிழையாமை, சுற்றந்தழால் போன்ற பல அதிகாரங்களில் மனிதர்களை இனம் பிரிந்து அறிந்து கொள்ள ஏற்ற வழிகளை எடுத்துச் சொல்லியுள்ளார்.
மனிதன் சார்ந்து வாழ வேண்டிய சமுதாய அமைப்பு என்பது சுற்றத்தார், நண்பர்கள் போன்றோரை உள்ளடக்கியதாகும். நண்பர்களைப் பற்றி அறிந்து கொண்டு அவர்களிடம் நட்பு பாராட்ட "நட்பு, தீநட்பு, கூடா நட்பு, நட்பாராய்தல்'' போன்ற பல அதிகாரங்கள் வழிகாட்டுகின்றன. சுற்றத்தார் குறித்த செய்திகளைப் பகிர்ந்து கொள்ள வாய்ப்பாகக் கிடைத்தது சுற்றந்தழால் என்ற ஒரே ஓர் அதிகாரம் ஆகும்.
சுற்றந்தழால் என்ற அதிகாரம் பொருட்பாலில் அரசனுக்கு கூறப்படுகிற அரசியல் சார்புடைய கருத்துக்கள் கொண்ட பகுதியில் வைக்கப் பெற்றுள்ளது. அரசன் சுற்றத்தாரைக் காத்து அவர்களுக்கு நன்மை செய்து, தானும் நன்மை பெற்று வாழ வேண்டும் என்ற நிலையில் இது வள்ளுவரால் படைக்கப்பெற்றுள்ளது.
என்றாலும் இக்காலத்தில் சுற்றந்தழால் என்ற பண்பு ஆள்பவருக்கு உரிய பண்பா என்ற கேள்வி சில அறிஞர்களால் எழுப்பப்டுகிறது. இது குடியாட்சி நிலையில் ஆள்பவருக்கு உரிய பண்பு ஆகாது என்று கருதுகிறார் க. ப. அறவாணன்.
"மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் சார்பாளர்களைக் கொண்டு ஆளப்பெறும் குடியரசு அமைப்பில் ஆளுவோர் தம் உறவினரைத் தழுவி இருத்தலும், பதவி அளித்தலும் குடியரசு முறைக்கு ஏற்பானவை அல்ல'' (க. ப. அறவாணன்., திருக்குறள் சிறப்புரை, ப. 209) என்ற க. ப. அறவாணனின் கருத்து சிந்தனைக்குரியது.
இருப்பினும் ஆள்பவர் மன்னராக இருப்பினும், தேர்ந்தெடுக்கப் பெற்ற மனிதராக இருப்பினும் அவர் தனித்து இயங்கமுடியாதவரே ஆவார். அவர் சுற்றத்தால், மற்ற அதிகாரிகளால், நண்பர்களால் ஆன கூட்டத்தால்தான் நன்மையோடு இயங்கமுடியும். இச்சூழலில் சுற்றந்தழால் என்ற அதிகாரம் உணர்த்தும் சமுதாய நெறி அனைத்து மனிதர்க்கும் உரிய நெறியாகின்றது.
இக்கருத்திற்கு அரண் செய்வதாக சமுதாய மாமுனிவர் குன்றக்குடி அடிகளார் பின்வருமாறு இவ்வதிகாரத் தேவையை எடுத்துரைக்கின்றார்.
"சுற்றம் ஆக்கம் தரும். பாதுகாப்பு தரும். சுற்றம் சூழ வாழ்தல் ஒருகலை. சுற்றம் பேணி வாழ்தலுக்கு இடையறாத அன்பு, நினைவில் வைத்துப் பாராட்டுதல், அன்பு காட்டுதல், ஒத்துப் போதல், குற்றம் பாராட்டாது இருத்தல் ஆகியன தேவையானது. நாடள்வோருக்கும் சரி, தனி ஒருவராய் வெற்றி பொருந்திய வாழ்க்கை நடத்த விரும்புவோருக்கும்சரி சுற்றம் தேவை'' (குன்றக்குடி அடிகளார், திருக்குறள் உரை, ப. 158) என்ற அடிகாள் அவர்களின் கருத்து மனிதருக்கான சுற்றத்தின் இன்றியமையாமை எடுத்துரைப்பதாக உள்ளது.
சுற்றந்தழால் என்ற அதிகாரத்தில் சுற்றத்தார் இயல்பும், சுற்றத்தால் ஏற்படும் நன்மை, சுற்றத்தினைப் பேணிக்காக்க வேண்டிய முறைமை, பிரிந்த சுற்றத்தை ஏற்றுக் கொள்ளுகிற முறைமை முதலியன வள்ளுவரால் எடுத்துரைக்கப்படுகின்றன.
சுற்றத்தார் இயல்பு
சுற்றத்தோடு தொடர்பற்று, பற்றற்றுச் சிலர் வாழ்ந்த போதிலும் அவர்களை ஒதுக்கிவிடாது தேவையான நேரத்தில் வந்து இருந்து உதவி செய்து பழமை பாராட்டும் பேரியல்பு சுற்றத்தாருக்கு மட்டுமே உண்டு என்ற அனுபவப் பாடத்தை இவ்வதிகாரத்தின் தலைக்குறள் எடுத்துரைக்கின்றது.
பற்றற்ற கண்ணும் பழமைபா ராட்டுதல்
சுற்றத்தார் கண்ணே உள (521)
பழமை பாராட்டும் இப்பண்பு சுற்றத்தாரின் தனிச்சிறப்பாகும். மாதவி கண்ணகியின் உறவை ஏற்றிப் போற்றும் பாங்கு இக்குறளுக்கு இலக்கியமாகும்.
மணிமேகலையைக் கண்ணகியின் மகள் என உரிமைப்படுத்துகிறாள் மாதவி. மாதவிக்கும் கண்ணகிக்கும் இடையே நிலவிய முரண்பாடு மாதவியின் மகளான மணிமேகலையின் தொடர்வால் உறவாக மாறும் தன்மையைப் பெற்றது.
கண்ணகியும் கோவலனும் ஒருங்கிருக்கும்போது மாடலன் கூறும் மொழிகள் வழியாகக் கண்ணகி மணிமேகலையின் பிறப்பை அறிந்து மௌனமாகவே ஏற்றுகிறாள். மேலும் வஞ்சிக்காண்டத்தில் மாதவியின் மணிமேகலையின் துறவினை எடுத்தியம்பும் அடித்தோழி வாயிலாகவும் இந்தச் சொந்தம் வலுவான நிலையைப் பெறுகிறது.
கணவற் குற்ற கடுந்துயர் பொறாஅள்
மணமலி கூந்தல் சிறுபுறம் புதைப்பக்
கண்ணீராடிய கதிரிள வனமுலை
திண்ணிதிற்றிருகித் தீயழற் பொத்திக்
காவலன் பேருர் கனையெரியூட்டிய
மாபெரும் பத்தினி மகள் மணிமேகலை
(மணிமேகலை 5156)
என்ற அடிகளில் உள்ள உறவின் தொடர்பு மேற்குறளுக்கு இலக்கியம் என்பதில் ஐயமில்லை.
இதற்கு அடுத்த நிலையில் சுற்றத்தாரால் ஏற்படும் நன்மைகள் வள்ளுவரால் எடுத்துரைக்கப்படுகின்றன.
சுற்றத்தாரால் ஏற்படும் நன்மைகள்
அன்பு மாறாத சுற்றம் ஒருவனுக்கு அமைந்தால் அது அவருக்கு குன்றாத செல்வம் பலவும் தரும். (522) கரையில்லாத குளத்தில் நீர் தங்காதைப் போல சுற்றத்தார் துணையில்லாதவனின் வாழ்க்கையும் பயனற்றுப் போய்விடும். (523)
இதனோடு தொடர்புடையதாக பின்வரும் நாலாடியார் பாடல் அமைகின்றது.
வயாவும் வருத்தமும் ஈன்றக்கால்
கவாஅன் மகற்கண்டு தாய் மறந்தாங்கு
அசாஅத்தான் உற்ற வருத்தம் உசாஅத்தான்
கேளிரைக் கானக் கெடும் (211)
கரு சுமந்தபோதும், ஈன்றபோதும் ஏற்பட்ட வருத்தங்கள் குழந்தையைப் பெற்றபின் அக்குழந்தையைப் பார்த்தபின் தீருவதுபோல வருத்தம் உற்றவர்கள் தம் சுற்றத்தாரைப் பார்த்தால் அவ்வருத்தம் தீர்வார்கள் என்ற பொருளுடையதாக இப்பாடல் அமைகின்றது.
உறவினர்களின் துணை மனிதத் துயரத்தை ஓட்டும் பயனுடையதாக உள்ளது என்பதை இவற்றின்வழி உணரமுடிகின்றது.
சுற்றத்தாரைப் பேணும் முறை
ஒருவன் செல்வந்தனாக இருக்கிறான் என்றால் அவன் அச்செல்வத்தால் பெரும்பயன் சுற்றத்தைக் காக்க வேண்டுவதே ஆகும்.(524) இனிய சொற்கள், கொடைத்தன்மை உடையவனிடத்தில் அடுக்கடுக்காகச் சுற்றம் சூழ்ந்து நிற்கும்.(525) பெருங்கொடை கொடுப்பவனிடத்திலும், கோபப்படாதவன் இடத்திலும் சுற்றத்தார் சூழ்ந்து நிற்பர். (526) காக்கை தன் இனத்தைக் கூட்டி உண்ணுவது போல சுற்றத்தாரை அழைத்து அரவணைத்துக் கொள்ளவேண்டும் (527). இக்குறள்கள் தரும் இலக்கணத்தின்படி பல இலக்கியங்கள் அமைந்துள்ளன.
`குகனொடும் ஐவர் ஆனேம் முன்பு பின் குன்று சூழ்வான்
மகனொடும் அறுவர் ஆனேம் எம்முழை அன்பின்வந்த
அகன் அமர் காதல் ஐய நின்னொடும் எழுவர் ஆனேம்
புகல் அருங்கானம் தந்து புதல்வரால் பொலிந்தான் நுந்தை'
(கம்பராமாயணம். இலங்கைக்கேள்விப்படலம், 143)
தயரத மன்னன் இராமனால் ஏற்கப் பெற்ற சுற்றங்கள் அனைவருக்கும் தந்தையாக மாறிப் பொலிவுற்றான் என்ற கம்பனின் அடிகள் மேற்குறள்களின் பாற்பட்டதே. வேறு உள குழுவை எல்லாம் மானுடம் வென்றதற்குக் காரணம் சுற்றம்தான் என்பதைக் கூறவும் வேண்டுவதில்லை.
வேந்தனும் சுற்றமும்
இவ்வதிகாரத்தின் நிறைவில் இடம்பெறும் முன்று குளட்பாக்கள் வேந்தர்கள் சுற்றத்தோடு கொள்ளவேண்டிய உறவுநிலையை எடுத்துரைக்கின்றன.
வேந்தன் சுற்றத்தாரின் தரமறிந்து அவர்களின் பெருமைக்கேற்ப செல்வ வரிசைகளை அளித்து அவர்களின் உறவைப் போற்றிக் கொள்ள வேண்டும். (528) காரணம் கருதியோ, காரணம் இன்றியோ பிரிந்து சென்ற சுற்றத்தார்கள் மீண்டும் இணைவது இயல்பு. இதற்குக் காரணம் கருதத் தேவையில்லை(529) அவ்வாறு வரும் சுற்றத்தாரைத் தேர்ந்தே தமராக்கிக்கொள்ள வேண்டும் (530).
இக்குறட்பாக்கள் வேந்தருக்கு மட்டுமல்லாது சாதாரண மனிதர்களுக்கும் உரிய முறைமையே ஆகும். சுற்றத்தாருக்குள் ஏற்படும் மனக்கசப்புகளுக்குக் காரணம் இருக்கலாம்,இல்லாமலும் இருக்கலாம் என்ற நிலை எல்லா தரப்பினருக்கும் உரியதே.
வீடணன் வருகை புரிந்தபோது அவனைத் தமராக்கிக் கொள்ள இராமன் யோசித்தே முடிவு செய்கிறான். இந்தப்பகுதி மேற்குறள்களுக்கு இலக்கியமாகலாம்.
எனவே வள்ளுவர் வாய்மொழிகள் எக்காலத்திற்கும், எத்தரப்பினர்க்கும் இயல்பான நல்லறங்களைக் கூறக் கூடிய தன்மையது என்பதை மீண்டும் இக்குறள்கள் வாயிலாக நிலைநிறுத்துக் கொள்ள முடிகின்றது.
மேலும் சுற்றத்தார்கள் ஒரு மனிதனின் உயர்விற்கு மிக முக்கியமான காரணமாக அமைகின்றனர். அவர்களைப் பேணிக்காக்க கோபமின்மையும் கொடைத்தன்மையுமே தேவை என்ற அடிக்கருத்தை மனித குலம் உணர்ந்து கொள்ள வேண்டும்.

Friday, September 25, 2009

இந்தியக் கணினியுகமும், மனித சக்தி வளர்ச்சியும்


அனைத்துத் துறைகளுக்கும் மனித சக்தி இன்றியமையாததாகும். துறைகளை உருவாக்குவதும், வளர்ப்பதும், பயன்கொள்வதும் ஆகிய அனைத்தும் மனிதனே என்பதால் அவன் அவனின் சக்தியை எண்ணியே தன்குல முன்னேற்றத்திற்கான முன்னெடுப்புகளை எடுத்துவைக்கிறான். மனிதனின் சக்தியை உடல் சக்தி, அறிவு சக்தி எனப் பிரித்துக் கொள்ளலாம். மனித உடலின் சக்திச் செலவை அறிவு சக்தி மிச்சப்படுத்துகிறது. இதன்முலம் உடலின் அதிக உழைப்பு சேமிக்கப்படுகிறது. இந்த உழைப்புச் சேமிப்பிற்குத்தான் கருவிகள் மனித அறிவால் கண்டுபிடிக்கப்படுகின்றன.
குறிப்பாக இந்தியாவின் மனித சக்தி மகத்தான மாபெரும் சக்தியாக விளங்குகிறது. இந்த மனித சக்தியைக் கொண்டு உலகமே முன்னேற்றம் கண்டு வருகிறது என்பது பற்பல புள்ளி விபரங்களால் தெரியவருகின்றன. இந்தியாவின் இளைய மனித சக்தி, கணினித் துறையில் எதிர்கொள்ளும் வாய்ப்புகள் / சவால்கள், நன்மைகள / சிக்கல்கள், முன்னெடுப்புகள்/ தடைகள் முதலானவற்றை ஆய்வதாக இக்கட்டுரை அமைகிறது.
சன் மைக்ரோ சிஸ்டத்தினைத் தொடங்கியவர்களுள் ஒருவர் வினோத் கோசலா என்ற இந்தியர் ஆவார். தற்போதைய அளவில் தொண்ணூறு விழுக்காடு கணினிகளில் பயன்படுத்தப்படும் பென்டியம் சிப் என்பதைக் கண்டறிந்தவர் வினோத் தாம் என்ற இந்தியர். சபீர் பாட்டியா என்ற இந்தியர்தான் ஹாட்மெயில் என்ற மின்னஞ்சல் சேவையை உருவாக்கியவர். அருண் நேட்ராவலி என்ற இந்தியர் தான் சி, சி+ போன்ற மொழிகள் உருவாகக் காரணமான ஏடி:டிபெல் என்ற குழுமதின் தலைவர். மைக்ரோ சாப்ட் நிறுவனத்தின் விண்டோஸ் 2000 என்பதன் இயக்கச் சோதனைப் பிரிவின் தலைவராக விளங்கிய இந்தியர் சஞ்சய் தெஜ்விரிகா என்பவராவார். இவர்கள் அனைவரும் கணினித் துறையில் கால் பதித்து வெற்றி கண்ட அமெரிக்கா வாழ் இந்தியர்கள். இவர்களின் உதவியால் இந்தியா அறிவு சார் அறிஞர்களின் நாடாகத் தற்போது கணினி வல்லுநர்களால் ஏற்கப்பட்டு வருகின்றது.
அறிவு சார்ந்த இந்திய வல்லுநர்கள் இந்தியாவில் இல்லாமல் அமெரிக்காவில் இருக்கக் காரணம் என்ன என்பதையும் இங்குச் சிந்தித்தாக வேண்டும். ஐ.ஐ.டி என்ற உயர் தொழில்நுட்பக் கூடங்களில் படிக்கும் நான்கில் முன்று பங்கு மாணவர்கள் உடன் அமெரிக்காவிற்குச் சென்றுவிடுவதாக ஒரு புள்ளிவிபரம் தெரிவிக்கின்றது. இவ்வாறு செல்லும் அறிவு சார் மாணவர்களால் இந்தியாவிற்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்தும் சிந்தித்தாக வேண்டும்.
இந்தியாவில் அறிவு சார் வல்லுநர்கள் வாழ்வதற்கு ஏற்ற சூழல் இல்லையா? வாழத் தேவையான பணம் கிடைக்கவில்லையா? வசதி வாய்ப்புகள் இல்லையா? முதலான பல கேள்விகள் மேற்சொன்ன விளைவுகளில் இருந்து பிறக்கின்றன. இந்தியாவில் உள்ள போட்டி மனப்பான்மை, உழைப்பினைச் சுரண்டும் அதிகார வர்க்கங்கள், மலிந்து கிடக்கும் குறுக்குவழிகள், அரசியல் சமுகவியல் குறுக்கீடுகள் முதலான பல காரணங்கள் அமெரிக்காவை நோக்கி அறிவுசார் இளைஞர்களை அழைத்துச் சென்றுவிடுகின்றன. இத்தடைகளைத் தகர்த்து அறிவுசார்ந்த இந்திய ஆற்றல் வளங்களை இங்கேயே தக்க வைத்துக் கொண்டால் இந்தியாவின் அறிவு உலக அரங்கில் இன்னும் மதிக்கப்படும்.
இந்தியாவில் கணினியுகம்
தற்போது கணினித் துறை இந்திய அளவில் பெருத்த முன்னேற்றங்களை அடைந்துள்ளது. வீட்டுக்கு ஒரு கணினி, அலுவலகங்கள் அனைத்தும் கணினிமயமாக்கப்படல், இணைய வழிப்படல், வீதிக்கு இரண்டு கணினிப் பயிலகங்கள், தொழில்கள் அனைத்திலும் கணினி நுழைவால் விரைவும், எளிமையும், அழகும் நேர்த்தியும் புகுந்து கொண்ட நிலை போன்றனவற்றைக் கொண்டு அளவீடும் பொழுது கணினி இந்தியாவின் கணினி யுகம் தொடங்கிவிட்டதை உணரமுடிகின்றது.
விளம்பரம், விமானப்போக்குவரத்து, கட்டடக்கலை, வங்கித்துறை, உயிர் தொழில் நுட்பம், தகவல் பரிமாற்றம், கல்வி, பொருளாதாரம், உடல்நலம், ஆயுள் காப்பீடு, உற்பத்தி, இதழியல், தொலைத்தொடர்புத்துறை, சுற்றுலா போன்ற பல துறைகளில் கணினி நுழைந்து மனித சக்திக்குப் பெருமளவில் உதவி வருகின்றன.
இந்தக் கணினியுகத்திற்கு ஏற்ற நிலையில் மக்களை வளர்த்தெடுக்க வேண்டிய கட்டாயம் கணினி சார்ந்த வல்லுநர்களுக்கு உருவாகியுள்ளது. தொட்டால் செய்திகள் தரும் கணினிகளை, தொட்டால் பணம் தரும் கணினிகளை உருவாக்கவேண்டிய உற்பத்தியையும், மக்கள் பயன்படுத்தக் கூடிய விழிப்புணர்வையும் இவர்கள் செய்ய வேண்டியுள்ளது. இதற்காக இளைய உலகைத் தயார் படுத்தியாக வேண்டியிருக்கிறது.
இளைய உலகினரை கணினியோடு மிகு தொடர்புடையவர்களாக மாற்ற வேண்டிய கட்டாயம் இன்றைக்கு உருவாகியுள்ளது. இந்தச் சூழலில் கல்வி நிலையங்கள் கணினியைக் கட்டாயப் பாடத்திட்டத்தில் கொண்டு வருகின்றன. அரசு சார் கல்வி நிலையங்களும் அரசு சாரா கல்வி நிலையங்களும் இத்தகைய பணியை தம்மால் முடிந்த அளவில் செய்து வருகின்றன.
அரசும் கணினி விழிப்புணர்வும்
அரசு கல்வி நிலையங்களில் தற்போது குறைந்த விலையில் மடிகணினிகளை மாணவர்கள் வாங்கிக் கொள்ள ஏற்ற வகை செய்யப் பெற்றுள்ளது. பள்ளிகளில் முதன்மை பெற்ற மாணவர்களுக்கு மடி கணினிகள் வழங்கப் பெறும் முன்முயற்சியும் பாராட்டத்தக்கது. இவ்வகையில் மெல்ல கணினியுகத்திற்கு இளைஞர்களைத் தயார் படுத்தும் முயற்சி நடைபெற்று வருகின்றது.
தமிழக அரசு கல்லூரிகளைப் பொறுத்தவரையில் கணினிப் பட்டப் படிப்பு பயிலும் மாணவர்கள் நல்ல வாய்ப்புக்களைப் பெற்றவர்களாகின்றனர். ஆனால் பிற படிப்பு படிக்கும் மாணவர்கள் கணினித் துறை அறிவு பெற்றிட அவர்களுக்கு தனித்த சான்றிதழ்ப் பயிற்சி வழங்கப்படுகிறது.
இச்சான்றிதழ்ப் பயிற்சி கணினிப் பட்டப் படிப்பு படிக்காத மற்ற துறை சார்ந்த மாணவர்களுக்கு உரியதாக கற்பிக்கப்பட்டு வருகிறது. குறைந்த செலவில் நிறைந்த கணினிக் கல்வியை இதன்வழி மாணவர்கள் பெறுகின்றனர். கல்லூரியில் மாணவர்கள் சேர்ந்த முதலாம் ஆண்டிலேயே இக்கல்வி அறிமுகப்படுத்தப்படுகிறது. அதற்கு அடுத்த ஆண்டில் அதாவது இரண்டாம் ஆண்டில் இப்பயிற்சியின் தேர்வு நடத்தப்பட்டுத் தக்கமுறையில் சான்றிதழ் வழங்கப்படுகிறது.
இப்பயிற்சி வழியாக மாணவர்கள் கணினிக்குள் தரவுகளை உள்ளீடு செய்து, அவற்றை முறைப்படுத்தித் தக்க நிலையில் வெளியீடுகளைப் பெறும் அடிப்படைக் கணினி மென்பொருட்களும், செயல்பாடுகளும் கற்பிகக்கப் படுகின்றன.
எதிர்கொள்ளும் சாவல்கள்
இப்படிப்பின் வாயிலாக ஒவ்வொரு மாணவரும் கணினியுடன் நேரடித் தொடர்பு கொள்ளுகிறார். இயக்க, அணைக்க, உள்ளீடு செய்ய, வெளியீட்டைப் பெற அம்மாணவர் எவர் துணையும் இன்றி செயல்பட முடியும். என்றாலும் முன்றாண்டு படிப்பில் இச்சிறு சான்றிதழ் பயிற்சி எந்த அளவிற்கு வெற்றியைத் தரும் என்பது எதிர்கொள்ளும் சவால்களுள் ஒன்றுதான்.
இந்தப் பயிற்சியை வெற்றிகரமாக படித்த மாணவர் தொடர்ந்து இந்தப் பயிற்சியை நினைவில் கொள்ள தொடர் முயற்சிகளை எடுத்தாக வேண்டும். தன் வீட்டிலோ, அல்லது தனியார் நிறுவனத்திலோ, அல்லது கல்லூரியிலோ அவர் வாரம் ஒரு முறையாவது தன் பயிற்சியை நினைவு கூர வேண்டும். இல்லையெனில் கற்றது மறந்து போக வாய்ப்புண்டு.
இப்பயிற்சி பெற்று சான்றிதழ் பெற்ற மாணவர்க்கு கணினி சார்ந்த வேலைகள், தொழில்கள் கிடைக்க வேண்டும். அதற்கு ஏற்ற நிலையில் இப்பயிற்சி வெற்றி கரமாக உள்ளது என்று மீளாய்வு செய்யப்பட வேண்டும்.
இதற்குப் பயிற்சி அளிக்கும் பயிற்றுனர்கள் தரம் மிக்கவர்களாக இருக்கவேண்டும். வரும் மாணவர்கள் ஆர்வத்துடன் கற்கவேண்டும். வராமல் பின்தங்கும் மாணவர்களை மீண்டும் வரச் செய்ய வேண்டும். இத்தனைச் சவால்களுக்கு இடையில் இப்பயிற்சி கடந்த ஐந்தாண்டுகளுக்கும் மேலாக அரசு கல்லூரிகளில் நடைபெற்றுவருகின்றது.
இதன்முலம் ஏற்பட்ட நன்மைகள் என்று காணுகையில் பல துறை சார்ந்த மாணவர்கள் தம் துறைக்கு எவ்வாறு கணினி பயன்படும் என்பதை அறிந்து கொள்ளுகிறார்கள். ஓரளவிற்குக் கணினி குறித்த அச்சத்தை , வெட்கத்தைப் போக்கிக் கொள்ளுகிறார்கள். கணினியை வெறும் பொழுது போக்குச் சாதனமாகக் கருதாமல் அறிவு சார் மதிப்புக் கருவியாக அவர்கள் எண்ணுகிறார்கள்.
இந்தக் கல்வித்திட்டத்திற்கான உடன்பாடு அரசு கல்லூரிகளுக்கு மட்டும் நிகழ்ந்துள்ளது. இந்தக் கல்வித்திட்டம் தொடர்ந்து அனைத்துக் கல்லூரிகளுக்கும் விரிதல் வேண்டும். இதன்முலம் ஒரு வலிமை மிக்க கணினிப் பயன்பாட்டு நாடாக இந்தியாவை முன்னேற்ற முடியும். இதனைத் தற்போது செய்யத் தவறினால் இந்தியாவின் வளர்ச்சியில் தக்க முன்னேற்றங்கள் ஏற்பட முடியாது.

முனைவர் மு. பழனியப்பன் தமிழ் விரிவுரையாளர்,
M.சந்திரசேகரன் கணினித் துறைத்தலைவர்,
மா. மன்னர் கல்லூரி, புதுக்கோட்டை
--
M.Palaniappan
manidal.blogspot.com
puduvayalpalaniappan.blogspot.com

Tuesday, September 22, 2009

மண்மணம் கமழும் புதுக்கோட்டை நவராத்திரி விழா
























































கால் தூக்கி ஆடும் சிவனின் கீழே மத்தளம் வாசிக்கும் பிரம்மாவும்- தாளம் போடும் பெருமாளும் கொண்டிருக்கும் சிற்பம் (படம்2.)










தசரதனைத் தூக்கியபடி காட்சி தரும் கைகேயியின் சிற்பம் (படம்ஒன்று )
புதுக்கோட்டைக்கு அருகில் உள்ள திருகோகர்ணம் கோயில் சரித்திரப் புகழ் வாய்ந்த திருக்கோயில் ஆகும். அக்கோயிலில் உள்ள பிரகதாம்பாள் என்ற அம்மன் புதுக்கோட்டை மன்னர்களால் பெரிதும் வணங்கப் பெற்றுள்ளாள். இவ்வம்மனின் தாசனாக ஒரு மன்னர் விளங்கியுள்ளார். அக்காலம் முதலே நவராத்திரி விழாக்கள் சிறப்புடன் இங்கு நடைபெற்று வந்துள்ளன.
இதன் தொடர்பாக கலைஞர்கள் பரிசளிக்கப் பெற்றுப் பாராட்டப் பெற்றுள்ளனர்.இது குறித்து உ.வே.சாமிநாதையரே ஒரு குறிப்பினை தன் கட்டுரை நூலில் எழுதியுள்ளார். தொடர்ந்து அரச விழாவாக நடைபெற்று வந்த நவராத்திரி விழா மெல்ல அதன் பொலிவை இழக்கத் தொடங்கியது.
தற்போது இழந்த பெருமையை மீட்டு எடுக்கும் வண்ணமாக பலரது முயற்சியால் நவராத்திரி விழாக்கள் கலைவிழாக்களாக நடைபெற்று வருகின்றன. இதற்கு புதுக்கோட்டை மன்னர் பரம்பரையினரும்- கோயில் நிர்வாக அதிகாரிகளும், நல்லுள்ளங்களும் உதவி வருகின்றனர்.
இங்கு கொலு வைக்கப் பெற்றுள்ளது. இக்கொலு மண்டபம் பல நல்ல கலைச் சிற்பங்களுடன் கூடிய மண்டபமாக விளங்குகின்றது. இதிலுள்ள பல சிற்பங்கள் கண்டு ரசிக்கத்தக்கன. குறிப்பாக தசரதனைத் தூக்கியபடி காட்சி தரும் கைகேயியின் சிற்பம் காணத்தக்கது. சம்பரா அசுரப்போரில் தசரச சக்கரவர்த்தி வெற்றிப்பெறப் போகும் நேரத்தில் அவரின் தேர் அச்சாணி முறிந்து விட அந்நேரத்தில் கைகேயி காத்து நிற்கிறாள். இதனை உள்வாங்கி இச்சிற்பம்செய்யப்பட்டுள்ளது. (படம்1)
அதுபோல கால் தூக்கி ஆடும் சிவனின் கீழே மத்தளம் வாசிக்கும் பிரம்மாவும்- தாளம் போடும் பெருமாளும் கொண்டிருக்கும் குழுச் சிற்பமும் கவனிக்கத்தக்கது. (படம்2.)
இவ்வாறு பல சிற்பங்களுடன் கூடிய இம்மண்டபத்தில் கொலு வைக்கப் பெற்றுள்ளது. இக்கொலுவில் புதுக்கோட்டை கலாச்சாரத்தினை உணர்த்துகின்ற பல பொம்மைகள் இடம் பெற்றுள்ளன. அவற்றின் சாயலைப் பார்த்தால் எவை போலும் இல்லாமல் தனிப் பாணியில் அவை இருப்பது புரியும். அவற்றின் சாயல் புதுக்கோட்டை மண்ணைப் பிரதிபலிப்பதாக உள்ளது. சிலவே காணப்படும் இப்பொம்மைகள் நன்றாகப் பராமரிக்கப் பெற்றால் இன்னும் பல ஆண்டுகளுக்குப் புதுக்கோட்டை பெருமை நிலைத்துநிற்கும்.
மூன்றாம்நாளில் செய்யப்பட்ட அலங்காரமும் உங்களின் பார்வைக்கு
இவற்றோடு கோகர்ணேசுவரின் தோற்றமும், குடைவரையில் உள்ள கணபதி, கங்கை சூடிய பெருமானின் தோற்றமும் உடன் உங்கள் கண்களுக்கு விருந்தாகக் காட்சிதருகின்றன.

Friday, August 07, 2009

சேக்கிழார் விருது பெற்ற முனைவர் பழ. முத்தப்பன்.


முனைவர் பழ. முத்தப்பன் நாற்பதாண்டு காலமாக தமிழ்ப்பணியாற்றி வருபவர். இவரின் பணியால் மயிலம் தமிழ்க்கல்லூரி, மேலைச்சிவபுரி கணேசர் செந்தமிழ்க்கல்லூரி ஆகியன மேம்பாடு அடைந்தன. தற்போது திருச்சிராப்பள்ளி செட்டிநாடு கலை அறிவியல் கல்லூரியின் முதல்வராகப் பணியாற்றி வரும் இவர் சிறந்த பேச்சாளர். சைவ சிந்தாந்தச் சாத்திர வல்லுநர். பல நூல்களின் ஆசிரியர். சிந்து இலக்கியம், முப்பொருள் இயல்பு, கோவை இலக்கியம், திருமுறைகளில் அகக்கோட்பாடு, சிவஞான முனிவரின் அந்தாதி இலக்கியங்கள் போன்ற இவர் படைத்த நூல்கள். இவர் உரை வரைந்த திருக்கோவையார் முன்று பதிப்புக்களை இதுவரை கண்டுள்ளது. மேலும் இவர் காஞ்சி புராணம், சைவ சித்தாந்த சாத்திரங்கள் அனைத்திற்கும் உரை கண்டுள்ளார். அவை உடன் வெளிவர உள்ளன.
இவர் தமிழாகரர், சிந்தாந்தச் செம்மணி, சிவஞானச் செம்மல், பட்டிமன்றமாமணி, மேகலை மாமணி போன்ற பல பட்டங்களைத் தேர்ந்த அறிஞர்கள் வழியாக வளமையுடன் பெற்றவர். இப்பட்டியலில் சேக்கிழார் விருதும் சேர்கிறது.
இவரின் பணியைப் பாராட்டி இவ்வாண்டு சென்னை சேக்கிழார் ஆராய்ச்சி மையம் சிறந்த பேராசிரியருக்கான சேக்கிழார் விருதினை அளித்து இவரைப் பெருமை படுத்தியுள்ளது. இவ்விருது பேராசிரியர் அ. ச. ஞானசம்பந்தன், இராசம்மாள் அறக்கட்டளை என்ற பெயரில் வழங்கப் பெற்றுள்ளது. இவ்வறக்கட்டளையை நிறுவியோர் அமெரிக்காவைச் சார்ந்த அன்புச் செல்வி அப்புலிங்கம் ஆவார்.
இவ்விருது ஐயாயிரம் ருபாயையும், பாராட்டுச் சான்றினையும் உள்ளடக்கியதாகும். இதனை 24.07.2009 அன்று மாலை 6 மணி அளவில் சென்னை இராணி சீதை மன்ற அரங்கில் நடைபெற்ற சேக்கிழார் விழாவில் நீதியரசர் பொன். பாஸ்கரன் அவர்கள் வழங்கினார்கள்.
சாத்திர நூற்புலமைக்கும், சேக்கிழார் நெறி பரப்புதலுக்குமாக வழங்கப் பெற்ற இவ்விருது பேராசிரியர் பழ. முத்தப்பன் அவர்களுக்கு மேலும் பெருமை சேர்ப்பதாகும்.

Saturday, August 01, 2009

சாங்கியத் தாயும், சாங்கிய மதமும்.

இந்தியாவில் தோன்றிய, இந்தியாவை வந்தடைந்த பெரும்பாலான சமயங்களின் கொள்கைகள் தமிழிலக்கியங்களில், தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன. சமணத்திற்கு கவுந்தியடிகளையும், பௌத்தத்திற்கு மணிமேகலையும், வைணவத்திற்கு சீதையையும், சைவத்திற்கு திலகவதியாரையும், கிற்த்துவத்திற்கு மரியாளையும், இஸ்லாத்திற்கு கதீஜாவையும் எடுத்துக்காட்டும் வரிசையில் சாங்கிய மதத்திற்குப் பெருங்கதையின் சாங்கியத்தாய் பாத்திரத்தை எடுத்துரைக்க முடிகின்றது. குறிப்பாக பெண்பாத்திரங்கள் சமயவழி மீறாத, தவறாத அளவில் படைக்கப்பெற்றிருப்பதால் அவை, தான் சார்ந்த சமயத்தின் சிறந்த குறியீடுகளாக நிற்கின்றன.
சாங்கியமதம்
சாங்கியம் , என்ற சொல்லுக்குப் பொருள் பூரண (முழுமையான) அறிவு (கி.லட்சுமணன்,இந்தியத்தத்துவஞானம், ப.184). முலப்பொருள் பற்றி முழுமையான அறிவைத்தரும் மதம் சாங்கிய மதமாகும். அறிவே சொருபமான பொருள் எதுவோ அது மாற்றமடையாது என்ற இதன் கொள்கையால், முலப்பொருள் மாற்றமடையாத ஒன்று என இம்மதம் முடிவு கொள்ளுகின்றது. இம்மதத்தினைத் தோற்றுவித்தவர் கபிலமுனிவர் ஆவார். இவருக்குப்பின் இவரது சீடர்களான அசூரி, பஞ்சசீசர் முதலானோர் நூல்கள் படைத்து இச்சமயம் வளரஉதவினர்.
கி. பி. நான்காம் நூற்றாண்டிற்கு முற்பட்ட சாங்கியக் காரிகை என்னும் நூல் சாங்கிய கொள்கைகளை தெளிவுபடவுரைத்தது. இந்நூலின் ஆசிரியர் ஈஸ்வரகிருஷ்ணர் ஆவார். இதனைத் தொடர்ந்து கி. பி 6ம் நூற்றாண்டில் `யுக்திதீபிகை' என்னும் நூல் இயற்றப் பெற்றது. இதன் பின் சாங்கியப்பிரவசன சூத்திரம் வெளிவந்தது (சத்காரி முகர்ஜி கீழை மேலை மெய்ப்பொருள் வரலாறுதொகுதி 1: ப.415) . இவ்வாறு தொடர்ந்து சாங்கியமதம் நின்று நிலவி வந்துள்ளது.
இச்சமயம் கடவுள் என்ற கருத்துருவை ஏற்பதில்லை. உலகம் பிரகிருதி, புருடன் ஆகிய இருபொருட்களால் ஆனது. பிரகிருதி என்ற பொருள் அநித்தியமானது, வியாபகமானது, சடஉலகம் ஒடுங்குவது அதில் தான். மீண்டும் தோன்றுவது அதிலிருந்துதான்: புருடன் மாற்றமடையாத பொருள் அல்லது முலப்பொருள் என்ற கொள்கைகளை இச்சமயம் முன்வைத்தது.
சாங்கியத்தாய்
பெருங்கதைப் பாத்திரங்களுள் குறிப்பிடத்தக்க இடம் பெறுவது இப்பாத்திரமாகும். கதைத்தலைவியருள் ஒருவரான வாசவதத்தையின் செவிலித்தாயாகவும், உதயணனுக்குத் தக்கநேரத்தில் உதவுகின்றவளாகவும், யூகிக்கு அறிவு கொளுத்துகின்றவளாகவும் இப்பாத்திரம் விளக்குகின்றது.
இப்பாத்திரம் அந்தணவகுப்பைச் சார்ந்ததாகும். உதயணனின் தந்தை அவையில், அலுவல் பார்த்து வந்த அந்தணர் ஒருவரை மணம்புரிந்து இப்பாத்திரம் வாழந்துவரும் நாளில், அவ்வந்தணன் மீண்டுவரா அளவில் யாத்திரை மேற்கொண்டதால் தனக்குரிய கற்பொழுக்கத்திலிருந்துச் சற்று சரிந்தது. இதுகுறித்து அனைவரும், இப்பாத்திரத்திற்கான தண்டனை யாதென ஆலோசிக்கின்றனர். செங்கற்பொடியை உடல் முழுதும் தூவி, ஊர்க்கு இவளின் இவ்விழிநிலையை பறையறிவித்துத் தெரிவித்துப்பின், குடங்களைக் கட்டி ஆற்றுநீரில் இறக்கிவிட முடிவெடுக்கப்படுகின்றது. உயிர்போகும் அளவு தண்டிக்கப்பட்ட இத்தண்டனையை அறிந்த உதயணன் அதனைத் தடுத்து நிறுத்திட வேண்டுகின்றான். இளவரசனின் ஆணைகேட்டு: படகில் ஏற்றப்பட்டு தண்டிக்கப்படவிருந்த அவள் தடுக்கப்படுகிறாள். அப்போது நிகழ்ந்த அவசரச்செயல்களால், துடுப்பின் பகுதி இவள் நெற்றியில் பட, வடுப்பெறுகிறாள். இவளின் உடல் வடுவையும், மனவடுவையும் கண்ட உதயணன் இவளுக்கு, அறம் தவறியோர்க்கான தேசயாத்திரைத் தண்டனையை வழங்குகிறான். இதன்முலம் உயிர்க்கொலையிலிருந்து விடுதலைபெற்ற இவள் வடதிசைநோக்கிச் செல்கிறாள். அங்கு சாங்கிய குழுவினருடன் இணைந்து ஈராண்டு வாழ்கிறாள். இவளின் அந்தணச்சாதி மாற்றப்படவில்லை. மாறாக இவளின் மதக்கொள்கை மட்டும் மாற்றப்படுகின்றது. உடல்வடு, மனவடு நீங்கி, மாற்றம் பெறுகிறாள்.
சாங்கியம் காட்டிய `பிரகிருதி' தத்துவம் இவள் வாழ்வில் புது மலர்வை உண்டாக்கியிருக்க வேண்டும். புருடன் என்னும் ஆன்மாவை உடைய இவள் இவ்வாறு மாறியதற்கான காரணம் `பிரகிருதி' என்னும் உலகச்சூழலே ஆகும். அது முதல் இவளின் இயற்பெயர் மறைந்து, அந்தணி என்றும் சாங்கியத்தாய் என்றும் அழைக்கப்பெறுகிறாள்.
சாங்கியர்களின் புறத்தோற்றம்
இவள் தான் இணைந்த சாங்கியமதத்தாரைப் பற்றிக் குறிப்பிடும் இடத்து, அவர்களின் உருவநலன் தெரியவருகின்றது.
"பூதியும், மண்ணும், பொத்தகக்கட்டும்
மானுரி மடியும் மந்திரக் கலப்பையும்
கானொடு மனையும் கட்டுறுதியாத்த
கூறை வெள்ளுறிக் குண்டிகைக்காவினர்''
(சாங்கியத்தாய் உரை: 225228)
விபூதி அணிந்த நெற்றியனர், முனைமழுங்கிய புத்தக்கட்டுகள் வைத்திருப்பர், மான்தோலாடை அணிந்திருப்பர். மந்திரக்கலங்களைப் பைக்குள் இட்டுத் தோளில் அணிந்திருப்பர், அமர்வதற்கான மனை தாங்கியிருப்பர், கமண்டலம் கைக்கொண்டிருப்பர். வெள்ளைத்துணியைக் காவடியாகக் கொண்டு பொருள்கள் சுமந்து நடப்பவர்கள் என்று சாங்கியமதத்தாரின் காட்சி பெருங்கதை வழி தெரியவருகின்றது. இப்படிப்பட்ட கூட்டத்தில் ஒருத்தியாகச் சாங்கியத் தாய் இருந்தாள். இவர்களுக்குக் குருவாக சாறயர் முனிவர் என்பவர் இருந்துள்ளதாகக் கருதலாம். அவர்
"தரும தருக்கர் தற்புறஞ் சூழப்
பரிபு மெலிந்த படிவப் பண்டிதன்
சாங்கிய நுணித்தவோர் சாரயர் முனிவனை''
(சாங்கியத்தாய் உரை: 230232)
எனக்காட்சிதருகிறார். அம்முனிவரைச் சுற்றிலும் தருக்கவாதிகள் இருந்தனர். அவர் பரிவுடையவராக, மெலிந்தவராக, பண்டிதப் படிவமுடையவராக, சாங்கிய அறிவு தெளிந்தவராகத் திகழ்ந்தார் எனப் பெருங்கதை காட்டுவது அதன் சமயப்பொதுமைக்குச் சான்றாகின்றது.
இவர் அக்காலத்து திகழ்ந்த அறுவகைச் சமயங்கள் குறித்த அறிவு பெற்றவராக இருந்தார். அவர்முலம் சாங்கியத் தாய் அறுவகை சமய அறிவைப் பெற்றாள். மேலும் இக்கூட்டத்தார் இமயம் முதல் குமரிவரை தம்சமயம் பரப்பும் எண்ணமுடையவராகவும் இருந்துள்ளனர்.
"அத்தவப் பட்டாங்கு அவகைச்சமயமும்
கட்டுரை நுனித்த காட்சியே னாகி
இமயப் பொருப்பத்து ஈராண்டுரைந்தவின
குமரித்தீர்த்தம் மரீஇய வேட்கையின்
அருந்தவ நுனித்த அறவாசிரியன்
தரும வாத்திரையெனத் தக்கனம் போந்துழி''
(சாங்கியத்தாய் உரை: 233238)
என்ற பாடலடிகள் முலம் மேலுணர்த்திய செய்தி தெரியவருகின்றது.
தென்னாட்டில் சாங்கிய மதவெற்றி
ஒரு சமயம், ஒரு நாட்டு அரசனால் பின்பற்றப் பெறும் பொழுது, அது அதிக செல்வாக்கை மக்களிடம் பெற்றுவிடுகின்றது. அரச செல்வாக்கால் இது நடைபெறுகிறது என்றாலும், அம்மதத்திற்கு அது சிறந்த வெற்றியேயாகும்.
சாங்கியர் தென்னாட்டு வருகையின் போது, அவந்தி நாட்டரசன் பிரச்சோதனன் ஒரு சமயவிவாதத்திற்கு அழைப்பு விடுகின்றான். அதில் ஐவகை சமயங்களும் கலந்து கொள்ளுகின்றன. இவ்விவாதத்திற்கு ஏற்பாடு செய்தவர் `காள சமணன்' என்பார் ஆவார். அதனால் சமணசமயம் விவாதத்திற்கு அப்பாற்பட்டு, அரசனின் முதல் மரியாதைக்குரிய திகழ்ந்தது என்பதைக் குறிப்பால் உணரமுடிகின்றது. இரண்டாம் நிலையில் அரச மரியாதை பெற விரும்புகிற ஐவகை சமயங்களே போட்டி போட்டன என்பது தெளிவு
"கற்றோர் மொய்த்த முற்றவை நடுவண்
தாழாப் பெரும்புகழ்க் காளக் கடவுள்முன்
பாலக னென்னும் பண்ணவர் படிவத்து
காள சமணன் காட்சி நிறுப்ப
ஐம்பெரும் சமயமும் மறந்தோற் றனவென
வேந்தன் நுதலிய வேதா சிரியரும்
தாந்தம் மருங்கிற்று ஆழங் காட்டி
சாங்கிய சமயந் தாங்கிய பின்னர்
நல்வினை நுனித்தோன் நம்மொடு வாழ்கவென''
(சாங்கியத்தாய் உரை :245253)
இங்கு இடம் பெற்றுள்ள `நம்மொடுவாழ்க' என்பதால் சமணமும் சாங்கியமும் அங்கு அரச சமயங்களாயின என முடியலாம்.
இவ்வரசன் சபையில் சாங்கியர் வாழ, அரச மாதேவிக்குத் தோழியாக சாங்கியத்தாய் ஏறக்குறைய 11 ஆண்டுகளாக வாழ்ந்து வருகின்றாள். அப்பொழுது, வாசவதத்தையும் பிறந்ததால், இவள் அவளுக்குச் செவித்தாயாகவும் விளங்குகின்றாள். இவ்வாறு சாங்கிய மதம் அரசமரியாதை பெற்றுத்திகழ்ந்தது.
மதக்கொள்கைகளும், சாங்கியத்தாயின் மொழிகளும்
(அ) யூகிக்கான மொழிகள்
உதயணனை நல்வழிப்படுத்திய பின் அவன் வாசவதத்தையுடன் கூடி இன்பம் நுகருதலையே தலைமையாகக் கொண்டடொழுகினான். அவனைத் திருத்த யாதுசெய்வது என அவனின் நண்பன் யூகி எண்ணிய போது, அவனுக்கு நல்நெறி காட்டுகின்றாள் சாங்கியத்தாய் அதில் அவளின் சமயம் சார்ந்த உரைகள் அடங்கியுள்ளன. இதன் முலம் சாங்கியமதக் கொள்கைகளையும் அறிய முடிகின்றது.
இனியவர் கடமை குறித்த அவள் கூறும் மொழிகள் பின்வருமாறு.
"அற்றம் காத்தலின் ஆண்மை போவும்
குற்றம் காத்தலிற் குரவர் போலவும்
ஒன்றி யொழுகலின் உயிரே போலவும்
நன்றி யன்றிக் கன்றியது கடிதற்குத்
தகவில செய்தலிற் பகைவர் போலவும்
இனைய பிறவும் இனியோர்க் கியன்ற
படுகடன் ஆதியிற் பட்டது ...'' (யூகி சாக்காடு: 220226)
அழிவுகாத்தலுக்கு வாய்மை போலவும், குற்றம் நீக்கி அணைந்து கொள்வதற்குப் பெற்றோர் போலவும், உடலோடு வேறான உயிர் அதனோடு ஒன்றி நிற்றல் போலவும், தகவில செய்கின்றபோது அதனை கேலிசெய்யும் பகைவர் போலவும் இனியவர்கள், தம் நண்பர்களுடன் பழகவேண்டியது கடமையாகும் என்ற சாங்கியத் தாயின் கூற்று, அவள் சார்ந்த மதக்கருத்துக்களின் வெளிப்பாடாக விளங்குகின்றது.
"ஒன்றியொழுகலின் உயிரே போலவும்'' என்ற வரி சாங்கியத் தத்துவத்தின் உயிர்க்கருத்தினை அறிவிப்பதாக உள்ளது. உடலிருந்து உயிர் தோன்றியது, உயிரிலிருந்து உயிர் தோன்றியது எனப் பற்பல சமயங்கள் கொள்கை கொண்டன. ஆனால் சாங்கியமதம் "சித்தும், சடமும் ஒன்றிலிருந்து மற்றது உற்பத்தியாகா வெவ்வேறான இரு முலப் பொருள்கள். உலகப் பொருள்கள் அனுபவிப்பதற்குரியவை. அவற்றை அனுவிப்பவனும் உளன் என்பது புலனாகின்றது. இதுவே ஆன்மா உண்டு (கி.லட்சுமணன்,இந்தியத்தத்துவஞானம், ப. 203)'' எனக் கருதுகின்றது. இக்கருத்தின் வெளிப்பாடே மேற்காட்டிய வரியாகும். வேறுவேறான இவை ஒன்றும் போது இதுவேறு அதுவேறு எனச் சொல்லமுடியாத அளவிற்கு ஒன்றாகின்றன. அதுபோல இனியவர்கள் இருக்க வேண்டும் எனக் கருதும் கருத்து சாக்கிய மத கொள்கையின் கருத்தே ஆகும். எனவே நண்பனைத் திருத்த பகைவர் போல ஒழுகுக எனக் கூறி, வாசவதத்தையை மறைத்து இன்பமொழிக்க வழிகாட்டுகிறாள் சாங்கியத்தாய்.
(ஆ) வாசவதத்தைக்கான மொழிகள்
வாசவதத்தையை யானையிலேற்றித் தக்க இடம் கொணர்ந்த உதயணனை வாழ்த்தச் சாங்கியத்தாய் செல்கிறாள். அவளைக் கண்டு, வாசவதத்தை கலங்க, பெற்றோரைக் காண முடியாத அவளின் ஏக்கத்தைத் துடைக்கச் சாங்கியத்தாய் முயலுகின்றாள்.
"நாகாய் காண்கூன் பெருமான் நன்னகர்
உந்தத் திசையது என்றொன்றப் பிறவும்''
(யூகிக்கு விலாவித்தது: 7273)
சாங்கியத்தாய், வாசவதத்தையை ஒருமலையின் மீதேற்றி "அதோபார், உன் தந்தை ஆளும் நல்ல நகர் தெரிகின்றது. பின் ஏன் கலங்குகின்றாய். என்றும் அவனை நீ சென்று காணலாம்'' என்று தேற்றும் குறிப்பின் முலம் "புருடன்(அ) ஆன்மா கலங்கும் கலக்கத்தை நீக்க, பிரகிருதியின் இயல்பு இது எனக்காட்ட முயலும் குரு சிஷ்ய சாங்கிய மத உறவு இங்கு செயல்பட்டுள்ளது ''என்பது தெளிவு.
இவ்வாறாக சாங்கியம் என்னும் சமயம், பெருங்கதையால் எடுத்தாளப் பெற்றுள்ளது. அந்தணப்பெண் ஒருத்திக்கு ஏற்பட்ட அவச்சொல்லை மாற்றி, அவள் சொல்லைக் கேட்டு மற்றவர்கள் நடக்கும் படி, பெருமையடையும் படி அவளைச் சாங்கியமதம் மாற்றியுள்ளது. அம்மதக் கொள்கைகளை ஏற்று சமுதாயத்தை வழி நடத்துபவளாகவும் அவள் விளங்கியுள்ளாள் என்பது மேலும் சிறப்பாகும்.
--

Saturday, July 25, 2009

மேலைச்சிவபுரி -வேல் வழிபாடும் வழிபாட்டு முறைகளும்



"சூர் மருங் கறுத்த சுடரிலை நெடுவேல்
சினமிகு முருகன் தண்பரங் குன்றத்து''
என்று முருகனையும், அவனின் ஞான ஆயுதமான வேலையும் சிறப்புற இணைத்துக் காணும் மரபு சங்ககாலம் தொட்டே இருந்து வந்திருக்கின்றது. முருகனின் ஆயுதமாக மட்டும் வேல் கருதப்பட்டிருக்குமாயின் அதற்கென தனி வழிபாட்டு மரபுகள் ஏற்பட்டிருக்க முடியாது . அதற்கு மேலும், அதாவது முருகனே வேலாக, வேலே முருகனாக எண்ணி வழிபடும் மரபு தோன்றிய போது தான் அதற்கென தனி வழிபாட்டு முறைகள் பின்பற்றப்பட்டுள்ளன. சங்க காலம் தொட்டு வளர்ந்து வந்துள்ள இவ்வழிபாட்டு முறைகளை ஆராய்கின்றபோது சங்ககாலம் தொட்டு இன்று வரை மக்கள் வேலின் பால் தெய்வநம்பிக்கை கொண்டு வழிபட்டு வந்துள்ளமையை உணரமுடிகின்றது.
"வெறியயர்தல்''
சங்ககாலத்தில் `வேல்' வழிபாட்டுச் சடங்குகள் `வெறியயர்தல்' என்ற பெயரில் நிகழந்துள்ளன. அழகும் இளமையும் கொண்ட மகளிர் நலம் குன்றின காலத்து, அவர்களனி பெற்றோர் வேலனை வெறியாட அழைத்துள்ளனர் . இவ்வாறு அவன் வெறியாட அழைக்கப்படும் போது வேலன் கையில் வேல் கொண்டு வருகின்றான். வழிகள் சில சந்திக்கும் இடத்தில் வெய்மணலைப் பரப்பி, செந்நெல் வெண்பொறிகளைத் தூவி, பந்தர் அமைத்து, பூபல பெய்து, பசுந்தழை, காந்தள், பூக்குலைகளைச் சுற்றிக்கட்டி, வேலை மையமாக வேலன் நடுகின்றான். பிறகு முருகன் பெயரை வாழ்த்தி, முருகன் தம்மேல் எழுந்ததாகக் கொண்டு, வேல் எடுத்து ஆடுகின்றான். இவ்வாறு அவன் ஆடுகையில் மணிகள், இயம்பங்கள் ஒலிக்கின்றன. மகளிர் குறிஞ்சி பாட, தூபம் எங்கும் புகைகிறது.
"பொய்யா மரபினூர் முதுவேலன்
கழங்கு மெய்ப்படுத்துக் கன்னந்தூக்கி
முருகென மொழியுமாயின் ''
என்ற பாடலின் படி வேலன் கழங்கு இட்டு. கணக்கு பார்த்து நடந்தது. நடப்பது, நடக்கப் போவது உரைப்பதும் உண்டு. "வெறியறி சிறப்பின் வெவ்வாய் வேலன் '' என இவனின் சிறப்பைத் தொல்காப்பியம் (பொருள் :60) குறிப்பிடும். இவ்வாறு வெறியாடும் திறம் குறுந்தொகை, நற்றினை அகநாநூறு போன்ற சங்க இலக்கிய நூல்களிலும் உள்ளன.
சிலம்பில் வேலுக்கென தனிக் கோட்டம் அமைக்கப் பெற்றதற்கான சான்று உள்ளது. (9. 1 ) மேலும் இவ்வெறியயர்தல் பற்றி,
`நேரிழை நல்லாய் நகையா மலைநாடன்
மார்புதரு வெந்நோய் தீர்க்க வரும் வேலன்'
(சிலம்பு. குன்றக்குரவை . க. க )
இறைவனை நல்லாய் இது நகையாகின்றே
கறிவளர் தண்சிலம்பன் செய்தநோய் தீர்க்க
அறியாள்மற் றன்ளை அலர்கடம்பன் என்றே
வெறியாடல் தான் விரும்பி வேலன் வரு சென்றாள்'
(சிலம்பு குன்றக் குரவை .
என்றவாறு சிலம்பு பேசுகின்றது. மே
(சிலம்பு குன்றக் குரவை .
என்றவாறு சிலம்பு பேசுகின்றது. மேலும் வேலைப் பாராட்டும் வண்ணமுமாக,
`உரையினி மாதராய் உண்கள் சிவப்ப
புரைதீர் புனல்குடைந் தாடினோ மாயின்
உரவு நீர் மாகொன்ற வேலேந்தி ஏந்திக்
குரவைத் தொடுத்தொன்று பாடுகம் வா தோழி '
(சிலம்பு குன்றக்குரவை . 6)
என்று புகழந்து பாடி : சூரமா தடிந்த வேல்,
பிணிமுகம் கொண்டவுணர் பீடழியும்
வண்ணம் செய்த வேல், கிரி தடிந்த வேல்
என வேலை மட்டுமே நான்கு பாடல்களில் வாழ்த்துமாறு படைக்கின்றார் இளங்கோவடிகள்.
வேல் பெற்ற வரலாறு
கந்தபுராணம் வேல் பெற்ற வரலாற்றை விரித்துக் கூறி வேலின் பெருமை பேசுகின்றது.
"ஆயதற் பின்னர் ஏவின் முதண்டத்
தைம் பெரும் பூதமும் அடுவது
ஏயபல் உயிரும் ஒருதலை முடிப்பது
ஏவர் மேல் விடுக்கினும் அவர் தம்
மாயிரும் திறலும் வரங்களும் சிந்தி,
மன்னுயிர் உண்பது எப்படைக்கும்
நாயகம் ஆவது ஒரு தனிச் சுடர் வேல்
நல்கியே மதலைகைக் கொடுத்தான் ''
(கந்தபுராணம் . விடைபெறுபடலம் 38)
சிவபெருமான் சூரர்களை அழிக்க, முருகனுக்குத் தந்தது வேல். அது எப்படைக்கும் நாயகம் ஆவது என்று கந்தபுராணம் பேசுவது வேலின் தனித்த சிறப்பை முன் வைப்பதாக உள்ளது. மேலும் இற்றைக்காலத்தில் சிக்கல் போன்ற பல திருத்தலங்களில் வேல் வழங்கும் விழா சிறப்புற நடைபெறுவதும் இங்கு குறிப்பிடத்தக்கது,
வேல் குறித்த பக்திப்பனுவல்கள்''
வேல், புராணப்பின்னணி, சங்க இலக்கிய வழிபாட்டுப் பின்னணி பெற்றிருப்பினும், அருணகிரியார் காலத்தில் தான் தனி பெரும் நிலையை அஃதடைகின்றது. வேல் வகுப்பு , வேல் வாங்கு வகுப்பு, வேல்விருத்தம் போன்றன அருணகிரியாரால் `வேலை' முன்னிறுத்தி பாடப்பட்ட பனுவல்கள் ஆகும். இவை காலப்போக்கில், வேலை தனிப்பெருந் தெய்வமாக வணங்கும் நிலைக்கு உயர்த்துகின்றன.
"கண்டு குலையும் பொழுதில் அஞ்சலென மென்சரண
கஞ்சமுத அங்கருணை வேள்
கந்தன் முருகன் குமரன் வண்குறவர் தம்புதல்வி
கணவன் அடல் கொண்ட வேலே''
(வேல் விருத்தம் . 4)
இப்பாடல் வரிகள் வேல் உணர்வுக்குச் சான்றாகின்றன. மேலும் மெய்ஞ்ஞான நிலைக்கு, `அயனுமாலும் முறையிட அசுரல் கோடி துகளெழ விடு மெய்ஞ் ஞான அயிலோனே (திருப்புகழ் . 317) என வேலை அருணகிரி நாதர் உணர்த்திப் பாடுகின்றார்.
எனவே வேல் இவ்வாறு பல புலவர் களாலும், முருகனுக்கு ஈடான புகழைப் பெருமளவிற்குச் சிறப்பு பெற்றுள்ளது என்ற தெளியமுடிகின்றது.
"வெல்லுகின்ற தன்மை உடையது ஆதலின் வேல் என்ற பெயர் உண்டாயிற்று . அந்தவேல் ஞான சக்தியின் வடிவத்தைப் பெற்றது''
"முருகனுக்கு ஆறுமுகம் இருப்பது போல வேலுக்கும் ஆறுபடைகள் உண்டு. முருகப் பெருமான் திருவுருவத்தையும், அவன்பால் சார்ந்திருக்கும் வேலையும் தரிசிக்கும் போது கவனித்தால், அது அவன் அடியையும் கரத்தையும் தொட்டுக் கொண்டு முடியுமளவும் செல்வதைக் காணலாம் ''
"இலங்கையில் (கதிர்காமம் ) சில கோயில்கள் மலேசியாவில் பத்துமலைக் கோயில், கோலாலம்பூர் கந்தசாமி கோயில் ஆகியவற்றில் வேலே நிறுவப்பெற்று வழிபடப் பெறுதல் முருகனும் வேலும் ஒன்றே என்ற சிந்தனையையும், முருகனுக்குக் கொடுக்கும் மதிப்பையே வேலுக்கும் கொடுத்தார்கள் என்ற உண்மையையும் புலப்படுத்துகின்றன.''
என்ற அறிஞர்களின் கருத்துக்களின் படி வேல் தனியொரு தெய்வமாக விளங்கி இக்காலத்தில் சிறப்புப் பெற்றுள்ளது என்பதை உணரலாம்.
மேலைச்சிவபுரி வேல் வழிபாடு
சங்ககால வெறியாட்டு நடைமுறை, அதன் பின் எழுந்த வேல் தனித்த தெய்வமாக ஆக்கப் பெற்ற நடைமுறை இரண்டும் இன்னமும் தமிழ்நாட்டின் சிலபகுதிகளில் நடைபெற்று வருகின்றன. "பழநியில் நடைபெறும் தைப்பூசத்திற்குச் சுமார் 200 ஆண்டுகளுக்கு முன்னிருந்தே நெருக்குப்பை, கண்டனூர், காரைக்குடி, தேவக்கோடடை முதலிய இடங்களிலிருந்து , பாதயாத்திரை மேற்கொண்ட செய்தியை காப்புகளுடன் சென்ற செய்தியை கி. பி. 1788 ல் தோன்றிய செப்பேட்டுப் பட்டயங்கள் நன்கு தூளக்குகின்றன'' என்ற கருத்து மேற்சொன்னதற்குச் சான்றாகும்.
இவ்வாறு தைப்பூசத்திற்குச் செல்லும் வேல்களுள் ஒன்றாகச் சிவபுரி வேலும் விளங்குகின்றது.
மேலைச்சிவபுரி வேல் வரலாற்றுப் பின்னணி.
புதுக்கோட்டை மாவட்டத்தில் திருமயம் தாலுகா, பொன்னமராவதி 3. கி. மீ தொலைவில் இருப்பது மேலைச்சிவபுரி ஆகும். இஃது சைவம் தமிழ் இரண்டையும் வளர்க்கும் சன்மார்க்கசபை, கணேசர் செந்தமிழக் கல்லூரி இரண்டையும் கொண்டு தமிழுலகில் தனியிடம் பெற்றுத் திகழ்கிறது. அதனுடன் சுப்பையா கோவில் ஒன்றும் உள்ளது. இக்கோயிலில் சக்தி வேலாயுத சுவாமி என்ற வேல் வழிபடு கடவுளாக உள்ளது. இக்கோயில் எழுப்பப்படக் காரணம் சிறப்பிற்குரியதாகும்.
மேலைச்சிவபுரிக்கு அருகில் 2. கி. மீ தொலைவில் உள்ள பிடாரம்பட்டி கிராமத்தில் சுமார் ஆறு தலைமுறைகளுக்கு முன்னால் முத்தப்ப செட்டியார் என்பவர் வசித்து வந்தார். இவருடனே , நாடடக்கோட்டை செட்டியார் மரபினர் சிலரும் வசித்துவந்தனர். அப்போது மேலைச்சிவபுரி ஊரார்கள் செட்டியார்கள் இல்லாததால் . முத்தப்ப செட்டியாரை மேலைச்சிவபுரிக்கு அழைத்து வந்தனர்.
முத்தப்பசெட்டியார் சிறந்முருகபக்தர். இவர் வருடம் தோறும் பழனிக்கு மேலைச்சிவப்புரியிலிருந்து, தைமாதம் கார்த்திகை அன்று, காவடிகட்டி பாதயாத்திரையாகச் செல்வது வழக்கம், சென்று வந்தபின் தம்வீட்டில் சுக்கிரவாரம் தோறும் முருக பூசனை செய்து திருவிளையாடல்கள் புரிந்து வந்தார். எனவே அவரின் வீடு கோவில் வீடு என்றழைக்கப்பட்டது.
இவரின் திருவிளையாடல் புகழ் பெற்று புதுக்ட்டை மன்னர் தொண்டமான் ராஜா மருதப்பன் அரண்மனை வரை சென்றது. எனவே அரசரும் முத்தப்பச் செட்டியார் இல்லம் வந்து சில அருள் வாக்குகள் கேட்டார். பழனியாண்டவர் அருளால் அவர் சான்ன வாக்குகள் மெய்ம்மையுற , அரசர் செட்டியாருக்கு பொற்சால்வை, மோகரா மாலை, வளைதடி, குத்தீட்டி தந்து வேறென்ன வேண்டும் என்றார். அதற்குச் செட்டியார் தம் கோவில் வீட்டுக்கு ஒரு தாமிர வேல் சாஸ்திரப்படி செய்து தரவேண்டும் என்றார். அரசரும் செய்து தந்து, பழனி அன்னதான மடத்தில் வேலை நிறுத்திப் பூசை செய்யவும் வேண்டிய உத்தரவுகளைச் செய்தார். இவ்வாறு முத்தப்பச் செட்டியார் காவடி கட்டிப் புறப்பட்டு, வேல் எடுத்துச் செல்லும் முறை ஆண்டுதொறும் இன்றுவரை நடைபெற்று வருகின்றது.
மேலைச்சிவபுரியில் உள்ள சுப்பையா கோவில் `வேல்' வழிபாட்டு முறையைக் கொண்டிருப்பினும் அது, முருகனுக்கு ஈடான பெருமை பெற்றதாகும். ஒருமுறை புதுக்கோட்டை மன்னர் பரம்பரையில் வந்த மருதப்பருக்குப் பிள்ளை இல்லாத குறையை இவ்வேல் போக்கியது என்ற வரலாறும் வழங்கப் பெறுவது இக்கருத்திற்குச் சான்று பயப்பதாகும்.
இவ்வாறு முத்தப்ப செட்டியார் செய்த பணியை, அவரின் பரம்பரையாக வந்த முன்று கரைகாரர்களும் தொடர்ந்து செய்து வருகிறார்கள். முரு. ஆறு . ஆறுமுகம் செட்டியார், முருகுமணி, ஆளு. சுப. ஆறுமுகம் , ஆறுமுருகப்பன் , ஆறு, சுப்பபையா, ஆறு. கதிரேசன், ஆறு. அண்ணாமலை, ஆறு. முத்தப்பன், ஆறு . சண்முகம், சுப. முருகப்ப செட்டியார், முரு. பழனியப்பன், முரு. ஆறுமுகம், சுப. பழனியப்பன் , பழ. சுப்பிரமணியன், பழ. முருகப்பன், மு. அண்ணாமலைச் செட்டியார், அண. சுப்பிரமணியம், அண. முத்துராமன், பழ. ஆதிமுலம் போன்றோர் இப்போது இப்பணியைப் புரிந்து வருகின்றனர்.
சுப்பையா கோவில் அமைப்பு:
சுப்பையா கோவில் என்று இக்கோவில் அமைக்கப்பட்டாலும் கோவிலுக்கான முழு அமைப்பையும் பெறவில்லை. ஏனென்றால் இது பங்காளிகள் செய்து கொள்ளும் படைப்பு வீடு. அதாவது ஒரு தெய்வாம்சம் நிரம்பிய வீடாகும். என்றாலும் முன் மண்டபம் , கோபுரம் போன்ற அமைப்புடன் கூடிய உள் மண்டபம் என்ற அமைப்போடு விளங்குகிறது.
உள் மண்டபத்தில் மரக் கேடகத்துள், புதுக்கோட்டை மன்னர் தந்த தாமிரவேல் ஒன்றும், சிறுவேல் ஒன்றும் உள்ளன. இது தவிர, இடும்பன் ஆயுதமான இரும்புத்தடி ஒன்றும் உள்ளது.
இவற்றுள், மன்னர் தந்த வேல் பதினைந்து நாட்கள் பழனி நடையாத்திரையின் போது எடுத்துச் செல்லப்படுகின்றது. சிறுவேல், பெரியவேல் பழனி செல்லும் காலத்தில் கோவில் தெய்வமாக வணங்கப்பட்டு வருகின்றது. இச்சிறுவேல் முன்னொரு காலத்தில் பங்குனி உத்திரத்தின் போது குன்றக்குடி கோவிலுக்குச் சென்று வந்ததாகக் கூறப்படுகின்றது. இந்நடைமுறை இப்போது பின்பற்றப் படவில்லை மேலும் இச்சிறுவேல் மன்னர் தந்த வேலுக்கு முன்னதாக முத்தப்பச் செட்டியாரால் பழனிக்குக் கொண்டு செல்லப் பட்டிருக்கக் கூடும் என்ற ஒரு செய்தியும் நிலவுகின்றது. இடும்பனுக்கு உள்ள தடிக்கு அபிஷேகம், தீபாராதனை ஆகியன செய்யப்படுகின்றன. மற்றவை ஏதும் இல்லை.
வழிபாடு :
படைப்பு வீடு என்பதால் மற்ற கோவில்கள் போலத் தினசரி வழிபாடுகள் கட்டாயப் படுத்தப் படவில்லை . வாரந்தோறும் வரும் வெள்ளி, மாதம்தோறும் வரும் கார்த்திகை, தினங்களில் அபிஷேகம் , தீபாராதனை முதலியன செய்யப் படுகின்றன. இவை தவிர நெய்வேத்தியம் போன்றனவும் கட்டாயப் படுத்தப்படவில்லை. விரும்பி எவர் எது தரினும் படைக்கப்பட்டுப் பக்தர்களுக்குப் பகிர்ந்தளிக்கப் படுகின்றது.
பொங்கல் தினத்தில் சர்க்கரைப் பொங்கல் வைக்கப் பட்டுப் படையல் செய்யப் படுகின்றது. சிவன் ராத்திரியின போது ஆறுகாலப் பூஜை நடைபெறுகின்றது.
சிறப்பு வழிபாடு:
ஆண்டு தோறும் தைப்பூச விழாவை முன்னிட்டு, நடையாத்திரை சிறப்புற நடை பெற்று வருகின்றது. நடையாத்திரையை வழி நடத்திச் செல்வது வேலே ஆகும் . எவ்வூரினரும் மேலைச்சிவபுரியைக் கடந்து நடை பயணம் பழனிக்கு மேற்கொள்வாராயின் இக்கோயிலுக்கு வந்து விபூதி பெற்றே செல்வர். எனவே தைப்பூச நடையாத்திரையின் போது சிறப்பு வழிபாடுகள் இயற்றப் படுகின்றன.
பெரிய கார்த்திகை (கார்த்திகை தீபம்) அன்று கோவில் வீட்டு வேல் கொண்டு செல்லும் சாமியாடி மாலையிட்டுக் கொள்கின்றார். தூய விரதம் மேற்கொண்டு அன்று முதல் தினசரி அபிஷேகம் , பஜனை செய்கின்றார். அவருடன் கோவில் வீட்டுப் பங்காளிகள் , ஊர்மக்கள் இணைந்து பக்திப் பாடல்கள் இசைக்கிறார்கள்.
பாதயாத்திரை விழா: தைப்பூசத்திற்கு 5 நாள் முன்னதாக வரும் கார்த்திகை அன்று பாத யாத்திரை தொடங்கப் பெறுகின்றது. அக்கார்த்திகை அன்று, படைப்பு வீடு, கழுவிச் சுத்தம் செய்யப் பெற்று, மாவிலை, விளக்குகள், பூக்கள் ஆகியவற்றால் அலங்காரம் செய்யப் பெறுகின்றது. பின்னர் காவடி கட்டுபவர்கள் அங்கு காவடி கட்டுகிறார்கள் சிலர் வீட்டிவிருந்தே காவடியுடன் வந்து இங்கு சேர்கின்றனர். மதியம் அன்னதானம் நடைபெறுகிறது . அன்னதானம் படைப்பு வீட்டைச் சார்ந்த திருமண மண்டபத்தில் , பழனி முருகன் படம் முன்பு படையலிடப்பட்டுப் படைக்கப் படுகின்றது. இரவு நடையாத்திரை தொடங்கப் பெறுகின்றது. வேலை எடுத்துக் கொண்டு சாமியாடிவர , மேளவாத்தியம். கொட்டு, வேட்டு, மணி,அரோகரா கோஷம் முழங்க, அன்றைய கட்டளை பங்காளியர் பரிவட்டம் கொண்ட, வழியனுப்ப வர, ஊர் எல்லை வரை மக்கள் சென்று வழியனுப்புவர் , வேல் முன்னும் காவடிகள் பின்னும் செல்ல நடையாத்திரை தொடக்கம் பெறுகிறது. வழியில் உள்ள பிரான் மலைச் சிவன் கோவிலில் பானக பூஜை , செய்வித்துச் சமுத்திராபட்டியை வேல் அடையும். மாலை வேலுக்கு அபிஷேகம், ஆராதனை , காவடிக்கு அன்னதானப் பூஜை , செய்து பின் குயவபட்டியை வேல் மற்றும் காவடி அடையும், அதன் பின் அதே முறைப்படி அபிஷேக, ஆராதனை, அன்னதானம் தொடர , செம்மடைப்பட்டி அடைவர், பின் முன்முறைகள் தொடர, குழந்தை வடிவேலன் சன்னதியில் பானக்க பூஜை முடிந்து, காலை 7 மணிக்குக் கடுக்காய்பாறை செல்லும்.
கடுக்காய் பாறையில் வேல் மட்டும் குன்னக்குடி வேலாயுத (வேல்) சுவாமியுடன் இணைந்து பழனி அன்னதான மடம் செல்லும். காவடிக்கும் பாத யாத்திரையினரும் வேல் போனபின் பிரிந்து இடும்பன் குணம் அடைவர். பிறகு தீர்த்தமாடி இடும்பருக்குப் பூஜை செய்து. இடும்பர் மலை தென்பாகத்தில் குன்னக்குடி, மேலைச்சிவபுரிக் காவடிகளுக்கு அன்னதான பூஜை நடைபெறும்.
பழனி அன்னதான மடத்திலிருந்து காவடிகளுக்கு வரவேற்பு தரப்படும்.
அன்னதான மடம் வழிபாடு:
மடத்தில் அன்னதானமட பார்வதி அம்மாள் இரும்பு வேலாயுதம், தேவகோட்டை நகரத்தார் சொர்ணரத்தின வேலாயுதம், குன்றக்குடி மடத்து வெள்ளி வேலாயுதம், மேலைச்சிவபுரி தாமிர வேலாயுதம் ஆகியவை ஆறுகால் சவுக்கையில் ஒன்றாய் வைக்கப்பட்டு புனர்பூசம் முதல் ஐந்து நாட்களுக்கு அபிஷேகம் , பூஜை , ஆராதனை நடைபெறும்.
ஆறாம்நாள் காவடி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெறும். பழனி தேவஸ்தானத்தில் இந்தத் தொடர் நிகழ்ச்சி காலங்காலாமாய் நிகழ்ந்து வருவதால் இவர்களின் காவடிக்குக் கருவறை சென்று பூஜிக்க தனிச் சிறப்பு அனுமதி அளிக்கப் படுகிறது. பிறகு மலைத்தீபம் ஏழாம் நாள் பார்க்கப்பட்டு, அன்னதான மடத்தில் பரிவட்டம் கட்டும் விழா நடை பெறுகிறது. இதில் முறைகாரர்கள், சாமியாடிகள் கலந்து கொள்கின்றனர்.
மேலைச்சிவபுரி நகரத்தார் மட்டும் , பூசத்திற்கு நான்கு நாள் கழித்து ஒரு பஞ்சாமிர்த அபிஷேகம் சிறப்புடன் செய்கின்றனர். இதற்கும் தனித்த அனுமதி உள்ளது.
இவை முடித்தபின் வேல் திரும்பும் விழா நடைபெறுகிறது. காவடிகளும் வேலுடன் திரும்புகின்றன. காவடி எடுக்க வேண்டிக் கொண்டவர்கள் இதில் கலந்து கொள்ளாவிட்டாலும், காவடிகள் மீண்டும் நடைபயணமாகவே கொண்டுவருவத கட்டயமாக்கப்பட்டுள்ளது.
திண்டுக்கல் , சமுத்திரபெட்டி, ஆகிய இடங்களில் வேல் நிறுத்தம் பெற்று பூஜை கொள்கிறது. பிறகு சாமியாடிச் செட்டியாரிடம் விபூதிப்பிரசாதம், மரியாதை பெற்று, மேலைச்சிவபுரிக்கு அருகில் உள்ள எடுத்தலங்கண்மாய்க்கு வேல் வர, மீண்டும் ஊர் மக்கள் பங்காளிகள் வரவேற்பு நிகழ வேல் தன்னிடம் சார்கிறது.
இவ்வாறு பதினைந்து நாள் திருவிழா சீரும் சிறப்புமாக லட்சம் மக்களைத் தாண்டி நடையாத்திரை விழா சென்று கொண்டுள்ளது. ஏறக்குறைய வேலின் பயணம் 270 கிலோமீட்டர்களாக இருக்கலாம். வேல் போகும் வழியில், பலவித திண்பண்டங்கள், நீர் ,மோர், இளநீர் பக்தர்களுக்கு வழங்கப்படுகிறது.
வேல் புறப்படும் போதும், வரும் போதும் குறிகளும் கேட்கப்படுவதுண்டு, வேலுக்கு அபிஷேகம் மட்டுமே, அன்னதான பூஜை இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
காவடி கட்ட சில வரையறைகள்
காவடி அழகுற தண்டு இணைக்கப் பட்ட , வெல்வெட் துணிகளால் , மயிலிறகால் அழகு செய்யப்பட்ட சக்கரை வைத்துக் கட்டப் பெறுகின்றது. இச் சக்கரையே பிறகு பழனியில் அபிஷேகப் பொருளாகின்றது. இதற்கென கோவில் வீட்டில் 11ரு தந்து பதிவு பெற வேண்டும். தூய விரதம் பெரிய கார்த்திகையிலிருந்து காக்கப்பட வேண்டும். துக்க வீடு, புலால் வீடு, முதலியன தவிர்க்கப்படுகின்றன. பச்சை நிற வேட்டிகள், மணி மாலைகள் அணியப்படுகின்றன. ஆண்கள் மட்டுமே காவடிக்கு உரியவர்கள் . பெண்கள் வீட்ட விலக்கு நேரங்களில் விரதக்காரர்களுக்கு சமைப்பதில்லை. கண்ணில் எதிர்படுவதுமில்லை. காவடி செல்லும் போதும் திரம்பி வரும் போதும் நடையிலேயே வரவேண்டும். குளித்த பின்பே காவடியைத் தொட உரிமை உண்டு . நடுவில் இயற்கை உபாதைகள் தவிர்க்கப்பட வேண்டும். இல்லையாயின் மீண்டும் குளிக்க வேண்டும்.
வேல் சாமியாடி தேசிகர்
இவர்கள் ல்லுப்பட்டியிலிருந்து ஒரு காலத்தில் பூஜைக்காக அழைத்து வரப் பெற்றிருக்கின்றனர். ஏறக்குறைய புதலைமுறைகளாக பூஜைபுரிவதுடன் இவர்களே தற்போது வேலையும் சுமந்து நடைபயணம் மேற்கொள்கின்றனர். தகவாளியின் நினைவுக்கு எட்டிய வரை, சுப்பையா 30 வருடம், செம்பு லிங்கம் 30 வருடம், ராமையா 3வருடம் , மாணிக்கம் (தற்போது ) 25 வருடம் வேல் கொண்டு செல்லும் பணியில் உள்ளனர். இவர்களுக்கும் மேற்சொன்ன விரதம் பொருந்தும், மேலும் செட்டியார் இனத்தாரிடமிருந்து இவர்கள் எவ்வாற வேல் கொண்டு செல்லும் பணியைப் பெற்றனர் என்பத நுணுகி ஆராயப்பட வேண்டிய ஒன்றாகும். இவர்களுக்கென சில கைமாறுகள் செய்யப் பெறுகின்றன. இருப்பினும் நடை யாத்திரையின் போது மக்கள் வழங்கும் தட்சிணை இவர்களுக்கானதாகக் கொள்ளப்படுகின்றது.
வேல் வழிபாட்டில் சிலவரை முறைகள்
வேல் நடையாத்திரை சென்றிருக்கும் போது மங்கல விழாக்கள் நிகழ்த்தப்படுவதில்லை. இறப்பு நிகழ்ந்தால் கொட்டு கொட்டப்படுவதில்லை. வேலின் மேற்புறம் வெள்ளி , தங்க. முருகனின் கழுத்தளவு அங்கி சார்த்தப் பெற்று வருகின்றது. இஃது வேலையே முருகனாக வழிபடும் வழிபாட்டின் பாற்பட்டதாகும்.
மேலும் குழந்தை பிறந்தால் கரும்புகழிகள் கொண்டு தொட்டிச் சீலை வழி தொட்டி கட்டப்படுதல் உண்டு. கொப்பனாபட்டி ஊரார் சிலர் குழந்தை பிறந்ததும் மொட்டைஅடித்துப் பேர் வைக்க இங்கு வருகின்றனர்.
எண்ணெய் தீபம் ஏற்ற, மற்ற செலவுகளுக்கென பங்காளிகள் முறைப்படி ஆண்டாண்டு பணம் தருகின்றனர் . என்றாலும் வரும் வருமானம் குறித்த கணக்கு வழக்ககள் கேட்டுக் கொள்ளப்படுவதில்லை. இவ்வாறாக பழனி ஆண்டவரை, மேலைச்சிவபுரி சார்ந்த மக்கள் வேல் வடிவில் கண்டு வணங்குகின்றனர். வேலே முருகனாக வழிபடும் இம்முறை சங்ககாலந் தொட்ட இன்று வரை நடைபெற்று வந்திருப்பது எண்ண எண்ண இனிப்பதாகும். மேலும் வெறியாடல் முறை போன்ற வழிபாட்டு முறையும் இங்கு சுட்டப்பட்டுள்ளது. முருகவழியாடு இன்றும் பரவலாக, வழக்கில் இருந்து வருவது சிற்ப்பிற்குரிய ஒன்றாகும்.
1. ஔவை. சு. துரை சாமிப்பிள்ளை. (உ. ஆ ) , ஐங்குறுநூறு. அ . ப. க. சிதம்பரம் 1957 , ப. 57 முதல் 77 வரையுள் செய்திகளின் சுருக்கம்.
2. கி. வ. ஜகந்நாதன் , கந்தவேள் கதையமுகம் கந்தவேள் பதிப்பகம். சென்னை. 94 . ப. 183.
3. கி. வ. ஜகந்நாதன் (உரை . ஆ) அநுபூதி விளக்கம் , அமுத நிலையம். சென்ளை . 1967. ப. 53.
4. ப. அருணாசலம். முருகன் வழிபாடு. வேலும் மயிலும் . தமிழ் ஔ இதழ் 11. 197374 பக். 3. 4.
5. டாக்டர். சுப. திண்ணப்பன் (க. ஆ) தைப்பூசம், அருள் மிகு தெண்டாயுதபாணி கோயில் மஹா கும்பாபிஷேக மலர், சிங்கப்பூர், 1996. ப. 53 .
6. சுப்பையா கோவில் பங்காளிகள் மகேஸ்வர பூஜைமலர், சுப்பையா கோவில் வரலாறு . மேலைச்சிவபுரி 1982 பக் இல்லை . (கட்டுரையின் சுருக்கம்)
7. தகவளாளி : செ. பழனியப்பன், வயது . 43. ஆண் மளிகைக் கடை வைத்துள்ளார். வேல் பூஜை செய்யும் குடுபத்தவர்.
muppalam2006@gmail.com

Tuesday, July 21, 2009

கல்வி தரும் சகலகலாவல்லி மாலை


துயரம் நீங்க வேண்டுமானால் `சுந்தரகாண்டம்' வாசியுங்கள். மகப்பேறு வேண்டுமானால் "கண்காட்டும் நூதலானும்'' என்ற சம்பந்தர் பாடலை பாடுங்கள். செல்வம் பெறவேண்டுமானால் கண்ணதாசன் படைத்த `பொன்மழை' படியுங்கள். கல்வி பெருக வேண்டுமானால் குமரகுருபரர் இயற்றிய சகலகலாவல்லி மாலையைப் படியுங்கள் என்ற பாராயணமுறை, மரபாக இன்று வரை தமிழகத்தில் பின்பற்றப் பெறுகின்றது.
இறைவனிடம் , இவற்றைத் தந்தருளவேண்டும் என மேற்கண்டபாடல்கள் முறையிடுகின்றன் அதனால் விரும்பிய செல்வங்களைத் தரும் வல்லமையை அப்பாடல்கள் பெற்றுவிடுகின்றன. இவற்றைப் பாடுவதன்முலம் பயனும் கிட்டுகின்றது பக்தியும் மேலோங்குகின்றது. இன்றைக்குக் `கற்றதனால் ஆயபயன்' என்றமுறை, சற்று மாறுபட்டு `பயனுக்காகக் கற்றல்' என்பது நிகழத் தொடங்கிவிட்டது. ஆகவே பயன்கருதி பல பனுவல்கள் பாராயணம் செய்யப்பெறுகின்றன.
`சகலகலாவல்லி மாலை' என்பது பத்துபாடல்கள் கொண்டபதிகம் ஆகும். `இந்துஸ்தானி ' மொழியை அறிந்து கொள்வதற்காக நாமகளை வேண்டி இப்பாடல்களைக் குமரகுருபரர் இயற்றினார். இப்பத்துப்பாடல்களைப் பாடிமுடித்ததும், சரஸ்வதிதேவி அருளால் குமரகுருபரருக்கு கற்காமலே இந்துஸ்தானமொழிப்புலமை வாய்த்தது என்பது கர்ணபரம்பரைக் கதையாகும்.
இப்பத்துப்பாடல்களில் நாமகளிடம் குமரகுருபரர் முறையான, செழுமையான கல்வியைத் தந்தருள வேண்டுகின்றார். கலைகளுக்கு அரசியான சரஸ்வதிதேவியை, சகலகலை வல்லவளாக நமக்கு அவர் அறிமுகப்படுத்தி, அவளிடம் கலைகளைப்பெற நம்மை ஆற்றுப்படுத்துகின்றார். இப்பத்துப்பாடல்களைப் பாடுவதால் கல்வி பெருகுமா?, இப்பாடல்களில் என்ன சொல்லி குமரகுருபரர் வேண்டுகின்றார்? என்ற கேள்விகளுக்கு விடைகாண்பதாக இக்கட்டுரை அமைகின்றது.
1. வெள்ளையுள்ளம்
சகலகலாவல்லி மாலையில் இடம்பெற்றுள்ள பத்துப்பாடல்களும் படிப்படியாக கல்விவளம் சேர்க்கும் வகையில் இயற்றப் பெற்றுள்ளன. கற்பவனுக்குக் கொலை, களவு, குழப்பம், வஞ்சனை , பொய், கரவு போன்ற குற்றங்கள் அனுகா வெள்ளையுள்ளம் தேவை என முதல்பாடல் எடுத்துரைக்கின்றது.
"வெண்தாமரைக்கு அன்றி நின்பதம் தாங்க, என் வெள்ளையுள்ளத்
தண்டாமரைக்குத் தகாதுகொலோ...''(1)
`சரஸ்வதிதேவியே, வெண்தாமரையில் நிற்கும் உன் மெல்லிய பாதங்கள், எந்தன் வெள்ளையுள்ளம் எனும் தாமரையில் நிற்கக் கூடாதா?' என மறைமுகமாக கற்பவரின் வெள்ளையுள்ளம் குறித்து இப்பாடல் எடுத்துரைக்கின்றது. உள்ளத்தூய்மை இருந்தால்தானே கற்கும் கல்வியிலும் தூய்மை இருக்கமுடியும். உள்ளம் தீயதன் வழிப்பட்டால் காப்பியம் முதலானவற்றைப் படிக்கும்போது, தீயவர்களின் செயல்கள் அல்லவா உள்ளத்தில் இடம்பிடிக்கும் அத்தீயவர்கள் சென்ற வழியில் அல்லவா மனம் செல்ல நினைக்கும். எனவே தீயதில்லா உள்ளம் வேண்டும் என குமரகுருபரர் இப்பாடலில் கருதியுள்ளார்.
கற்கவரும் மாணவசமுதாயம் நல்ல உள்ளத்துடன் கல்விநிலையங்களுக்கு வரவேண்டும் என எண்ணும் அவர் வழிப்படி நடந்தால் இற்றைக்கு மாணவ, மாணவியர்க்கு எதிராக நடக்கும் `கேலிச்சிக்கல்கள்' இல்லாமல் போகும் என்பது உறுதி.
2. நாற்பாடல் புனையும் திறம்
வெள்ளையுள்ளத்தில் நாமகள் வந்து நின்றுவிட்டால் எவரும் படிப்பாளராக, படைப்பாளாராக மாறிவிடலாம். படிப்பதோடு மட்டும் நின்றுவிடாமல், மாணவர்கள் படைக்கும் ஆற்றலைப் பெறவேண்டும் என குமரகுருபரர் நினைக்கின்றார்.
"நாடும் பொருட்சுவை சொற்சுவை தோய்தர நாற்கவியும்
பாடும் பணியிற் பணித்தருள்வாய்...''(2)
வெண்பா, ஆசிரியப்பா, கலிப்பா, வஞ்சிப்பா ஆகிய நான்குவகைத் தமிழ்ப்பாக்கள் புனையும் அளவிற்கு தமிழறிவு பெற வேண்டும் தமிழ் மொழியைக் கற்பது மட்டுமல்லாது, படைக்கவும் திறம் பெற்றிருக்க வேண்டும் என்ற குமரகுருபரரின் தமிழ்க்கல்வி, தமிழ்நாட்டிற்கு என்றைக்கு ஏற்படுமோ? என்ற ஏக்கம் இப்பாடலைப் படிக்கும்போது எற்படுகின்றது. உள்ளத்தூய்மைக்குப்பிறகு, தாய்மொழிக்கல்விக்கு அவர் தந்துள்ள முதன்மைஇடம் இக்கால கல்வியாளர்கள் கவனிக்கவேண்டிய ஒன்றாகும். தூய்மையான உள்ளத்தில் தாய்மொழிக்கல்விதான் உடன்புக முடியும் என்பதைக் குமரகுருபரர் உணர்ந்து கொண்டு, மேற்கண்ட கல்வி முறையைக் காட்டியுள்ளார்.
3. செந்தமிழ்க்கடல் குளித்தல்
தமிழில் பாடல் புனையும்திறம் பெறுவதோடு மட்டும் குடரகுருபரரின் எண்ணம் நிறைவு பெறவில்லை. தமிழ் என்பது கடல். அதில் குளித்து,முழ்கி, முத்துக்களை அள்ளி வர அனைவரையும் அவர் வேண்டுகின்றார்.
"அளிக்கும் செழுந்தமிழ்த் தெள்ளமுது ஆதார்ந்து உன் அருட்கடலிற்
குளிக்கும் படிக்கென்று கூடுங்கொலோ...''(3)
என்ற அவரின் தமிழ்கடல் கல்விவிருப்பம் தமிழ்ப்படிப்போருக்கு தேவையான விருப்பமாகும்.
4. பிறதுறைக்கல்வி.
தமிழ்க்கல்வியை முதன்மையாகக் காட்டிய குமரகுருபரர், பிறதுறைக்கல்வியைப் புறக்கணிக்கவில்லை.
"தூக்கும் பனுவலத் துறைதோய்ந்த கல்வியுஞ் சொற்சுவைத்தோய்,
வாக்கும் பெருப் பணித்தருள்வாய், வட நூற்கடலுந்,
தேக்குஞ் செழுந்தமிழ்ச் செல்வமும், தொண்டர்செந் நாவினின்று
காக்கும் கருணைக் கடலே சகலகலாவல்லியே.''(4)
இப்பாடலில் `துறைதோய்ந்த கல்வி' என வருவதால் பல்துறைக்கல்விகளைக் கற்கவும் குமரகுருபரர் வழிகாட்டியுள்ளார். அறிவியல், புவியியல், வரலாறு, கணிதம், வங்கியியல், ஆளுமையியல், கணினியியல் எனப் பல்துறைகளாகக் கல்விஉலகம் தற்போது பரந்து விரிந்து நிற்கின்றது. இவ்வாறு கல்வி வளருமென அப்போதே உணர்ந்திருந்த குமரகுருபரர், அவற்றைக் கற்கவும் வழிகாட்டியுள்ளமை அவரின் எதிர்காலஅறிவிற்குச் சான்றாக உள்ளது. மேலும் இப்பல்துறைக்கல்விகளையும் வழங்குபவள் சகலகலாவல்லி என அவர் இப்பாடலுள் முடிந்துள்ளார்.
வடநூற்கடலும், செழுந்தமிழ்ச் செல்வமும் ஒவ்வொருவருக்கும் கல்வியாகக் கிடைக்கவேண்டும் என்பது இப்பாடலின் வழியாகக் கிடைக்கும் மற்றொரு கருத்தாகும். இவ்வெண்ணம் அவரின் பிறமொழிகாழ்ப்பின்மையை விளங்குவதாக உள்ளது.
`வடநூற்கடலும், தேக்கும் செழுந்தமிழ்ச் செல்வமும், தொண்டர் செந்நாவினின்று காக்கும் கருணைக் கடலே சகலகலாவல்லியே' என்ற இவ்வரி இவர் இந்துஸ்தானப் புலமையைக் கலைமகளிடம் இருந்து பெற்றதற்கான அகச்சான்றாக உள்ளது.
5. பண், பரதக்கல்வி
தமிழ்க்கல்வி, பிறதுறைக்கல்வி கற்றுத்தேர்ந்தபின், அதற்கு அடுத்த நிலையில், இசை, நாட்டிய நாடக அறிவு பெற வேண்டும் என மாணவர்களை குமரகுருபரர் வேண்டுகின்றார்.
`பண்ணும் பரதமும் கல்வியும் தீஞ்சொற் பனுவலும்யான்
எண்ணும் பொழுது எளிதெய்தநல்லாய்'(6)
என்ற குமரகுருபரின் கல்வி முறை, `காலை எழுந்தவுடன் படிப்பு, பின்பு கனிவு கொடுக்கும் நல்லபாட்டு' என பாரதியாலும் பின்பற்றப்பெற்றுள்ளமை இங்கு குறிக்கத்தக்கது. பண், பரதம், நாடகம் முதலானவை மனித உள்ளங்களை மகிழ்விக்கும் அழகுக்கலைகளாகும். இதனைக் கற்பதன்முலம் மனிதமனம் இன்பம் கொள்ளுகின்றது என்பதால் இக்கல்வியையும் கல்விமுறையுள் ஒன்றாகக் காட்டியுள்ளார் குமரகுருபரர். தற்காலத்தில் வடிவமைக்கப்பட்டுள்ள `கற்றலில் இனிமைப்பள்ளிகளின் பாடத்திட்டங்கள்' பாட்டும், நடனமும் கலந்தவை என்பது இங்கு எண்ணத்தக்கது.
6. கல்வியும் பயனும்
படிக்கின்ற கல்வி பயன் நல்க வேண்டும். பயன்நல்காக்கல்வி பயனற்றதாகும்.
`பாட்டும் பொருளும் பொருளாற் பொருந்தும் பயனும் என்பால்
எட்டும்படி நின் கடைக்கண்நல்காய்'(7)
என கல்விப்பயன் நல்கத் தேவியைக் குமரகுருபரர் வேண்டுகின்றார். பண், பாட்டு என இசைகல்வி கற்றபின்னால், அவவிசைப்பாடல் தரும் பொருள், அப்பொருள்தரும் பயன் ஆகியனவற்றை உணர்ந்து, அதன்படி நடக்க வேண்டும் என்ற இவரின் கூற்று `கற்றபின் நிற்க அதற்குத்தக' என்ற வள்ளுவரின் குறளுக்கு இலக்கியமாக உள்ளது. மேலும் பாட்டு, பொருள், பயன் அனைத்தும் தருபவள் அவளே என முழுஅடைக்கலாமாக, நாமகளைப் பணிவதாகவும் இப்பாடல் விளங்குகின்றது.
7. அவதானம், விற்பன்னம்
இதுவரை படித்தல், படைத்தல் என்ற கல்விப்படிநிலைகளைக் காட்டிய குமரகுருபரர் எட்டாம் பாடலில் அதற்கடுத்த கல்விப் படிநிலையை எடுத்துரைக்கின்றார். படித்தவற்றைத் தக்க சான்றுகளுடன் சொற்பொழிவாக எடுத்துரைத்தல், சொற்பொழிவாற்றும்பொழுது ஏற்படும் பல்வகை நிகழ்வுகளை அவதானித்தல் முதலானவை முத்தகல்விப்படி நிலைகள் எனக் குமரகுருபரர் கொள்கின்றார்.
சொற்பொழிவாற்றல் என்ற படிநிலைக்கு, மனப்பாடம் செய்தல், ஏற்றஇறக்கத்துடன் பேசுதல், மேற்கோள்களைக்கையாளல், இசையுடன் பாடுதல் போன்ற பல்வகைத்திறமைகள் வேண்டும். அவதானம் எனும் போது, பதின்கவனகம், பதினெனெண் கவனகம் நிகழ்த்தும்போது, முறையே பத்து, பதினெட்டு கவனஈர்ப்பு அறிவு தேவைப்படும். எனவே இவை இரண்டும் செய்ய வல்லார் கற்றாருள் சிறந்தவர் ஆகின்றார். அவரே கற்பிக்க உகந்தவர் என குமரகுருபரர் முடிகின்றார்.
"சொல்விற் பனமும், அவதானமும்,கல்வி சொல்லவல்ல
நல் வித்தையும் தந்து அடிமைகொள்வாய் ''(8)
என்ற இத்தகுதிகள் உடையவரே ஆசிரியர் ஆகும் நிலைபெறுவர்.
8. மெய்ஞானக்கல்வி
மேற்கூறிய அறியாமை அகற்றும் கல்வியைக் கற்றபின்னர், அதனோடு மட்டும் நின்றுவிடாது, மெஞ்ஞானக்கல்வி பெறவேண்டும் என உயர்வழிகாட்டுகின்றார் குமரகுருபரர்.
`சொற்கும் பொருட்கும் உயிராம்மெய்ஞ் ஞானத்தின் தோற்றமென்ன'(9)
என்ற அவரின் கூற்று `வாலறிவனைத் தொழுவதே' கல்வியின்பயன் எனக் காட்டுவதாக உள்ளது. சொல், பொருள் அறிந்தாலும் அதனுளே மறைந்துகிடக்கும் உயிரான மெய்ஞ்ஞானத்தின் தோற்றம் என்ன ? என அறிய வேண்டுவதே ஒவ்வொருவரின் சிறந்த கல்வி என்ற குமரகுருபரரின் கல்விமுறை, ஆன்மக்கல்வி முறையாகும். மனக்கோணல் நீக்கும் நூற்கல்வியை முதலில் கற்று, அதன்பின் ஆன்மக்கூன் நீக்கும் ஞானக்கல்வி அடையக்கூறும் குமரகுருபரர் கல்விநெறி உயிர்களை உய்வடையச் செய்யும் நன்னெறி என்பதில் ஐயமில்லை.
9. பயன்
இப்பத்துப்பாடல்களைப் படிப்பதால் ஏற்படும் பணனையும், நூற்கல்வி, ஞானக்கல்வி, கற்றுத்தேர்ந்தால் வரும்பயனையும் இறுதிப்பாடலில் குமரகுருபரர் காட்டியுள்ளார். பதிகத்திருக்கடைக்காப்பு முறைப்படி பயன் கூறுவது தேவை என்பதால் இப்பாட்டு இன்றியமையாததாகின்றது.
"மண்கண்ட வெண்குடைக்கீழாக மேற்பட்ட மன்னரும் என்
பண்கண்டளவில் பணியச் செய்வாய் ''(10)
என முழுமைக்கல்வி கற்றவரை, எந்நிலமன்னரும் வணங்கிநிற்பர் எனப் பயன் கூறுகின்றார் குமரகுருபரர்.
இம்மாலையின்முலம் உள்ளத்தூய்மை கொண்டு, தமிழ்க்கல்வி, பிறதுறைக்கல்வி, வடமொழிக்கல்வி தேர்ந்து, பண் நாட்டியம் பயின்று, அவதானம் விற்பன்னம் முதலான அறிவு மிக்குடைச் செயல்களில் ஈடுபட்டு நூற்கல்வி நிறைவுபெறவேண்டும் என்பது தெரியவருகின்றது. இவ்வரிய வழியைக்கூறுவதன் முலம் இப்பாடல்களைப்படிப்பதால், இப்பாடல்கள் வழி நடப்பதால் நூற்கல்வி பெருகும் என்பது தெளிவு மேலும் ஒவ்வொரு பாடலும் கல்வியை வேண்டி கலைமகளிடம் முறையிடுவதாக அமைவதால், வேண்டுதல் இறைவியால் நிவேற்றப்படும் என்பதால் கல்விபெருகும் என்பது உறுதி இப்பதிகத்தைப்பாடிக் குமரகுருபரர் வடமொழி அறிவு பெற்றார் என்பதாலும், சிறுவயதில் அவர் தெய்வத்தன்மையால் பேசும் சக்தி பெற்றார் என்பதாலும், அவரின் சொற்கள் தெய்வத்தன்மை பொருந்தியனவாக இருக்கும் என்பதாலும் இப்பதிகத்தைப் பாராயணம் செய்வோர் கல்விப்பெருமை பெறுவர் என்பதில் ஐயமில்லை.
நூற்கல்வி பெற்ற பின்னால் ஞானக்கல்வி பெறுவது ஒவ்வொரு உயிர்க்கும் தேவையான உய்யும்முறை எனக்காட்டி, அது உடையோர் எவராலும் (மன்னராலும்) மதிக்கப் பெறுவர் என கருதும் குமரகுருபரர் நெறிப்படி அனைத்து உயிர்களும் முழுமைக்கல்வியை நோக்கிப் பயணித்தால் உலகம் நன்மைபெறுவது உறுதி.

Thursday, July 16, 2009

பெண்ணியத்தின் மூன்று நிலைகள்

பெண்ணியம் அதன் துவக்க காலத்தில் இருந்து இற்றைக் காலம் வரை முன்று முக்கிய நிலைகளைக் கடந்து வந்துள்ளது. அவற்றை முதல் அலை, இரண்டாம் அலை, முன்றாம் அலை என்று வகைப்படுத்தி உரைக்கின்றனர் பெண்ணிய வாதிகள்.முதல் அலை பெண்ணியத்தின் துவக்ககால நிலையை இம்முதல் அலை குறிப்பிடுகிறது. இவ்வலை பத்தொன்பதாம் நூற்றாண்டளவில் தோற்றம் கண்டது. இது பெண்களின் சமுக மற்றும் சட்டங்கள் இவற்றில் காணப்படும் ஆண் பெண்ணுக்கான ஏற்றத் தாழ்வுகளை எடுத்துரைத்து அவற்றைச் சமப்படுத்த வேண்டும் என்ற நோக்கில் பெண்ணியவாதிகளால் கையாளப்பெற்றது. நடுத்தரப் பெண்ணின் கல்வி, வேலைவாய்ப்பு, திருமணச் சட்டங்கள் போன்றவற்றில் காணப்பட்ட சமமற்றத் தன்மையை எதிர்த்துப் போராடுவதாக இவ்வியக்கம் அக்காலத்தில் அமைந்திருந்தது. இது பணிக்குப் போகும் பெண்களின் இன்னல்கள் குறித்துக் கூட கருத்துத் தெரிவிக்க இயலாத தொடக்க கால பெண்நிலை வாத அடிப்படை வாய்ந்ததாக இவ்வலை இருந்தது. மேலும் இது நவீனத்துவ அடிப்படையில் இவ்வியக்கத்தை நடத்திச் செல்லவில்லை. இத்தகைய பின்னடைவுகள் இருந்த போதும் இதுவும் ஓரளவிற்குத் தான் கொண்ட கொள்கைளில் வெற்றிகண்டது. இதன் முலம் பெண்கள் உயர்கல்வி கற்க இருந்த தடைகள் நீங்கின. பெண்களின் கல்வியில் பல மாற்றங்கள் உருவாக இம்முதல் அலை காரணமாக அமைந்தது. பெண்கள் ஆண்கள் பங்கேற்கும் அனைத்துத் தகுதித்தேர்வுகளிலும் பங்கேற்றுத் தேர்வு எழுதும் வாய்ப்புகளைப் பெற்றனர். இதன் காரணமாக இங்கிலாந்து நாட்டில் ஆயிரத்து எண்ணூற்று எழுபதாம் ஆண்டில் திருமணமான பெண்களின் சொத்துரிமை குறித்த சட்டம் இயற்றப்பட்டது. மேலும் பெண்களுக்கு ஓட்டுரிமையைப் பெற்றுத்தந்தது. மணவிலக்கு, குழந்தை பராமரிப்பு போன்றவற்றில் ஓரளவிற்கு பெண்களின் சமத்தன்மை எடுத்துரைக்க வழிகள் செய்யப்பெற்றது. முதல் உலகப்போரின் நிறைவு வரை பெண்ணியத்தின் முதல் அலை எனப்படும் இவ்வெழுச்சி மெல்ல நாடுகள்தோறும் வீச ஆரம்பித்தது.இரண்டாம் அலை முதல் உலகப்போரின் நிறைவில் உலகஅளவில் பல மாற்றங்கள் ஏற்பட்டன. இதன் காரணமாக பெண்களின் சமுக வாழ்விலும் பல முன்னேற்றங்கள் தோன்ற வேண்டும் என்ற சிந்தனை எழுந்தது. ஆயிரத்துத் தொள்ளாயிரத்து அறுபது வாக்கில் பிரான்ஸ், ஐரோப்பா, அமெரிக்கா போன்ற நாடுகளில் பெண்ணியக் கூறுகள் அடங்கிய பல நிகழ்வுகள் நடக்கத் தொடங்கின. இரண்டாம் பாலினமாகத் தள்ளிவைக்கப் பெறும் பெண்கள் அதனின்று முன்னே வர திடமாகச் செயல்பட்டனர். ஆயிரத்துத் தொள்ளாயிரத்து அறுபத்தெட்டாம் ஆண்டில் நடத்தப் பெற்ற மிஸ் அமெரிக்கா என்ற அழகிப்போட்டிக்கு எதிராக அமெரிக்காவில் மிகப் பெரிய மறுப்புக் கூட்டங்களும்,பேரணிகளும் நடைபெற்றன. இது குறிக்கத் தக்க விழிப்புணர்வை பெண்களிடம் ஏற்பட்டிருப்பதை எடுத்துக்காட்டியது. இவ்வகையில் பல போராட்டங்களை உலக அளவில் பெண்கள் நடத்தி வந்தனர். இக்காலத்தில் பெண்ணியம் கறுப்புப் பெண்ணியம், ஓரினச்சேர்க்கைப் பெண்ணியம், சமுகப் பெண்ணியம் எனப் பலவகைகளில் பிரிவு பட்டு வளரத் தொடங்கியது. ஆயிரத்துத் தொள்ளாயிரத்து அறுபத்தெட்டில் பிரிட்டனில் போர்டு மகிழ்வுந்து தயாரிப்பகத்தில் நிலவிய ஆண், பெண் ஊதிய ஏற்றத்தாழ்வைக் கருத்தில் கொண்டு பெண்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வென்றனர். இதுபோன்று உலகம் முழுவதும் பல நிலைகளில் பல போராட்டங்களைச் செய்ய இவ்வியக்கம் வளர்ந்தது. தனது என்பதே தன் அரசியல் என்ற முழக்கம் ( வாந நசளடியேட ளை டிடவைஉயட) என்ற பதாகை இவ்வியக்கத்தின் முக்கியமான முழக்கமாக இருந்தது. இவ்விரண்டாம் அலை பெண்களுக்கான சமுக வாய்ப்புக்களைப் பெற்றுத் தருவதில் கடுமையான முயற்சிகளை மேற்கொண்டது. மேலும் இனப் பெருக்கம், விழைவு, கலாச்சாரக் கட்டு என்ற சுழல்வட்டத்தில் பெண்கள் தங்களுடைய சுய வாழ்வை இழந்து விடுகிறார்கள் என்பதையும் இவ்வலை எடுத்துக் காட்டியது. மேற்கத்திய நாடுகளில் இவ்வலை பெண்களின் நிலை குறித்த விழிப்புணர்வு எண்ணங்களை விதைத்தது. மற்றம் உலகு தழுவிய பெண் விடுதலை முழக்கங்களுக்கு இடமளித்தது.இவ்வகையில் பெண்ணியத்தின் இரண்டாம் அலை செயல்பட்டது.முன்றாம் அலை பெண்ணியத்தின் முன்றாம் அலை தோன்றக் காரணமாக இருந்த பெண் ரெபாக்கா வாக்கர் என்பவள் ஆவார். இவர் அலைஸ் வாக்கர் என்பவரின் குழந்தை ஆவார். மேலும் இவர் குளோரியா ஸ்டினிம் என்பவரால் அவரின் கொள்கை சார் குழந்தையாக வளர்த்தெடுக்கப் பட்டவர். இவர் எழுதிய "நானே முன்றாம் அலை '' ( ஐ யஅ கூந கூசைன றயஎந ) என்ற தலைப்பிட்டு எழுதியக் கட்டுரையே முன்றாம் அலை தோன்றக் காரணமாக இருந்தது. இந்த கட்டுரையின் முலம் இளம் பெண்ணியவாதிகள் ஒருங்கு திரண்டனர். இதன் வழியே தங்களின் வயது, இனம், பால், பிறப்பிடம், பொருளாதார நிலை, விழைவு நிலை, கல்வி நிலை போன்றவற்றில் ஏற்பட்டுள்ள தடைகளை, சமமற்ற தன்மைகளை வெளிப்படுத்தி அவற்றில் தன்னிறைவை அடையச் செய்ய விரும்பும் மாற்றங்களை இவர்கள் தேட ஆரம்பித்தனர். சமுக இயக்கதிற்கான வழியைத் தேடுவதாக இவ்வலை அமைந்தது. ஆயிரத்துத் தொள்ளாயிரத்துத் தொண்ணூற்றாறில் தோற்றம் பெற்ற இந்தப் பெண்ணிய அலை பெண்ணியத்தின் முழுத் தோற்றத்தையே மாற்றி அமைத்தது. இளம் பெண்கள் புற உலகால் பாதிக்கப் பெறும் நிகழ்வுகளுக்கு எதிராக உலகு தழுவிய குரலாக இவ்வமைப்பின் குரல் ஒலிக்கத் தொடங்கியது. எங்கு இளம் பெண்களுக்கான முன்னேற்றச் செயல்கள் நடத்தப்பெறுகின்றனவோ அங்கெல்லாம் பொருளாதார அடிப்படையிலும் இவ்வமைப்பு உதவி செய்து வருகிறது. இவ்வகையில் பெண்ணிய இயக்கம் முன்று அலைகளாகக் கால நிலையில் பிரிந்து பெண்களை முன்னேற்றி வருகிறது.

Friday, July 10, 2009

மூன்று கவிதைத் தொகுதிகள் ஒரு கண்ணோட்டம்





கவிதைகள் படைப்பவர்களின் மனங்களில் உருவாகும் அழகுணர்ச்சியின் வெளிப்பாடுகள் ஆகும். இவ்வெளிப்பாடுகள் படிப்பவர்களின் மனங்களிலும் படிந்து அவர்களை அந்த கவிதை வயத்தில் ஆட்கொள்ளச் செய்யும் பாங்குடையனவாக அமைகின்றபோது கவிஞன் வெற்றிபெறுகின்றான். மரபு, புதியது என்ற வடிவப் பாகுபாடெல்லாம் இந்தக் கவிதை வயத்திற்கு இல்லை. ஒவ்வொரு வடிவத்திற்குள்ளும் அந்தக் கவிதை வயம் அமைந்தே கிடக்கின்றது. அதனாலே அது கவிதையாகின்றது. படிப்பவர்களை நெகிழ்விக்கிற இக்கவிதை ஆக்கங்கள் படித்தவர்களை உறுதியாக மற்றவர்களிடத்தில் பகிர்ந்து கொள்ள வேண்டிய தேவையை உருவாக்கிவிடுகின்றன.
அந்த வகையில் ஒரு வார காலம் கவிதைகளோடு கைகோர்த்து நடக்கின்ற வாழ்க்கை எனக்கு அமையப் பெற்றது. பாரதியின் வாழ்க்கைப் பதிவுகள், கம்பனடிப்பொடி சா. கணேசனாரின் வாழ்க்கைப் பதிவுகள், இளைஞனின் பார்வையில் தற்கால மக்களின் வாழ்க்கைப் பதிவுகள் என்ற வகையில் முன்று கவிதை ஆக்கங்களை வாசிக்க நேர்ந்தது. அவை பற்றிய கருத்துக்கள் இனி உங்களுடன் பகிர்ந்து கொள்ளப் படுகின்றன.



கவிராசனின் புவிவாசனை ( கவித்தென்றல் நா. கண்ணன், கவிராசன் அறக்கட்டளை,36 கவிராசன் இல்லம், புதுநகர், புதுக்கோட்டை, 2008, விலை:50)
பாரதி அன்பர்கள் என்பவர்கள் பாரதியைப் படித்தவர்கள், பாரதியின் பெயரைத் தன்வீட்டுக்கு ஆக்கிக் கொண்டவர்கள், பாரதியின் பெயரைத் தன் பிள்ளைகளுக்குச் சூட்டியவர்கள் போன்றவர்கள் என்றால் அந்த அத்தனைக்கும் ஒரே சாட்சியாக வாழ்ந்து வருபவர் புதுக்கோட்டையைச் சார்ந்த கவித்தென்றல் நா. கண்ணன் அவர்கள்.
சோர்ந்து போன நேரத்தில், வைரமுத்துவின் கவிராசன் கதையைப் படிக்க நேர்ந்த கவிஞர் கண்ணனின் உள்ளத்தில்கவிராசக் கனவுகளை நனவுகளைத் தன் எழுத்தில் எழுதிப் பார்த்து மகிழ்ந்து கொள்ளும் எண்ணம் தோன்றியிருக்கிறது. அதன்விளைவே இந்தக் கவிதைத்தொகுதி.
எண்பத்துநான்கு பக்கங்களை உள்ளடக்கி, ஐம்பத்துஏழு தலைப்புக்களில் பாரதியின் வாழ்க்கையைச் சித்திரிக்கிறது இத்தொகுதி. கவிதைகளின் வேகத்தில் பாரதியின் காலத்தினை மீண்டும் எண்ணிப்பார்க்கச் செய்கிற அரிய முயற்சி இது.
கவிதைக்குள் வரலாற்றையும், வரலாற்றுக்குள் கவிதையையும் அழகாக இணைத்துக் கவிதைகளைத் தந்திருக்கிறார் கவிஞர் கண்ணன். கவிதைச் சொற்களுக்குள் பொடி(றி) வைத்துப் படைக்கின்ற நேர்த்தி கவிஞர்க்கு கைவந்த கலையாய் இருக்கிறது. இந்தப் பொடிகளின் நெடியில், பொறிகளின் பிடியில் சிக்கிக் கொள்கிற வாசகர் வெளிவர பெரும்பாடாக இருக்கிறது என்பது உண்மை.
பாரதி புதுவைக்கு வந்த நிகழ்வைப் பின்வரும் அடிகள் பொடி வைத்துச் சுட்டுகின்றன. பொறி வைத்துப் படிப்பவரைப் பீடிக்கின்றன.
அரிமுக மாவனவன் அறிமுக மடலுடன்!
தெரிமுக மானவர் தேடுமோர் மனமுடன்!
புதுவை நுழைந்தனன் புதுமை நுழைந்திட!
மதுகை வழியும் மக்களும் விழைந்திட!(பக். 50)
இவ்வரிகளுக்குள் அரிமுகம், அறிமுகம், தெரிமுகம், புதுவை , மதுகை போன்ற சொற்களுக்குள் காணலாகும் இயைபு ஓட்டம் கண்ணன் கவிதையைச் சிறக்கச் செய்கிறது. மதுகை வழியும் மக்கள் என்ற குறிப்பு தற்காலம் சார்ந்தது எனக் கொண்டு இக்கவியடிகளை மீண்டும் படித்தால் இதன் பொருள் இன்னும் பெருகும்.
குவளைக் கண்ணன். பாரதியை நேசித்த நல்ல உள்ளம். கவிஞர் கண்ணன் பாரதியை நேசிக்கும் நல்ல உள்ளத்தார். குவளைக் கண்ணனைப் பாடும் வரிகளில் தானே குவளையாகக் கண்ணன் மாறிவிடுகிறார். பாரதியோடு தானும் வாழ்ந்ததாகக் கற்பனை கொள்ளுகின்றார்.
அன்றுமோர் குவளை! இன்றுமோர் குவளை!
ஆயினும் நாட்டிலோ இரட்டைக் குவளை!
பாட்டிடை யிட்டதும் பார்வையில் பட்டதும்
பாரதி பார்வையில் பட்டவன் யானென! (பக். 51)
என்ற அடிகளின் வழியாக பாரதியோடு யான் வாழ்ந்ததாகக் கவிஞர் கொள்ளும் கற்பனைக்கால உலகம் அவரையும் திருப்திப்படுத்துகிறது. எடுத்துக் கொண்ட பாத்திரத்தையும் திருப்தியுறச் செய்கிறது. இரட்டைக் குவளை என இச்சிறுவரிக்குள் இன்னொரு சமுகசிந்தனைப் பொறி(டி)யையும் தூவிவிடுகின்றது.
இதுபோலவே "தத்துவம் பாரதி தலைக்குள் வந்தது, தன்னை அறியுமோர் தவிப்பும் தந்தது'' என்ற அடிகளில் அரவிந்தரின் நட்பு நயமுடன் தெரிவிக்கப் பெறுகிறது.
கனகலிங்கத்தின் மார்புப் பூணூல் பெறும் கவிதை மாண்பு பின்வருகிறது.
"வாயில் லிங்கமாய் வந்தவனில்லை . . .
நூலும் லிங்கமாய் நோற்றனன் கனகன்.''
என்ற வரிகளில் பிரோமானந்தாவின் பிரேமைப் பொடியின் நெடி வீசுகிறது. மேலும் `நூலும் லிங்கம் கனகன்' என்ற சொற்களின் மாற்றிப் போட்ட (நூல் நோற்ற கனக லிங்கம்) வரிசை இன்னும் அழகு கூட்டுகிறது.
இப்படி இப்படி பற்பல பொடிகளின் காரத்துடன், பொறிகளின் பிடித்தலுடன் கவிதைப் பெருமழையாய் இத்தொகுதி பாரதிக்கு மேலும் வலு சேர்க்கின்றது. ஆங்காங்கே தேவைக்கேற்ப பாரதியின் வரலாற்றை ஒட்டிய நல்லோரின் படங்கள் ஓவியர் ராகவன் கைவண்ணதில் இடம்பெற்றுப் பெருமை கொள்ளுகின்றது. தேடி வரைந்த ஓவியருக்கு நன்றி. அட்டை ஓவியமும் அழகாய் அவரால் வரையப் பெற்றுள்ளது.
கூடவே தன்னோடு இணைந்த , இயைந்த கவிஞர்களின் பார்வையில் பட்ட பாரதி வரிகளைத் தந்திருப்பதன் வாயிலாக தனிக் கவிஞராக கண்ணன் விளங்காமல் கூட்டுக் கவிஞராக இத்தொகுதிக்குள் விளங்குகிறார். அவரின் கவிதைப் பெருவழி பெருகட்டும். இன்னும் கொஞ்சம் இருக்கம் தளரட்டும். நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்கள்.
கம்பனடிப்பொடி சா. கணேசன் கவிதை வரலாறு, சித. சிதம்பரம், (சிவா பதிப்பகம், 140 பெரியார் பாதை, சூளைமேடு, சென்னை, 94. 2009, விலை. 50.00)
கம்பனடிப்பொடியின் நூற்றாண்டு விழாவை ஒட்டி வெளியிடப் பெற்ற கவிதைக் காப்பியம் இந்நூல். தரவுகளைத் தேடி அலைந்துத் தொகுத்து அதன் வேகம் மாறாமல், சுவை குன்றாமல் கவிதை ஆக்கியமைக்காக வெகுவாக இக்கவிஞரைப் பாராட்ட வேண்டும். அடிப்பொடியுடன் வாழ்ந்த, ஏறக்குறைய இருபது அன்பர்களைச் சந்தித்து அவர்கள் வழியாகவும், தானகவும் அறிந்து பெற்றச் செய்திகளை கவிதை வயமாக்கியிருக்கும் கவிஞரின் உழைப்பிற்குத் தக்கப் பரிசுகள் கிடைக்க வேண்டும்.
எண்பத்தெட்டுப் பக்கங்களில் நிகழ்விற்கு ஏற்ற பல்வகைக் கவிவடிவத்துடன் செறித்துச் செய்யப் பெற்றிருக்கிற உணர்வுக் காவியம்/ காப்பியம் இக்கவிதை நூல்.
தன்னிகரில்லாத் தலைவன், இருசுடர் தோற்றம், உலா, விழா எனப்பல காப்பியப் பாவியத் தகுதிகளுடன் இக்கவிதைக் காப்பியம் இலங்குகின்றது. அதனால் இதனைக் காப்பியம் என்றே தமிழுலகம் ஏற்க வேண்டும்.
இந்நூலுள் சிறுச் சிறு செய்திகளுக்குக் கூட அழுத்தம் தரப் பெற்றிருப்பது காப்பியத்தில் இடையே வரும் கிளைக்கதைகள் போன்று சுவை பயப்பதாக உள்ளன. காமராசரை முன்னறிவிப்பு இன்றிச் சந்திக்கப் போன கணேசனார் அனுபவத்தைப் பின்வரும் அடிகள் காட்டுகின்றன.
"திருமலைப் பிள்ளை வீதியில் வாழ்ந்த காமராசர் வீட்டுக்கு
ஒருமுறை முன்னர் அறிவிப்பின்றி சா. க. சென்றார் காணற்கு
வருவதை அறிந்த காமராசர் வழித்த பாதி முகத்தோடு
வரவேற்றாராம் கணேச அண்ணலை மரியாதை அன்புமனத்தோடு''
(ப. 58)
இரு சான்றோரிடத்திலும் சமமான அணுகுதலோடு இக்கவிதை அடிகளைக் கவிஞர் செய்திருக்கிறார்.
"காந்திச் சதுக்கத் துப்பாக்கிச் சூட்டில் பலியானார் தொழிலாளி நெல்லியான் ( ப. 31)'' என்று காரைக்குடியின் விடுதலை வரலாற்றிற்கும் சிம்மாசனம் இட்டுச் சிறுசெய்திகளுக்குத் தக்க இடம் கொடுக்கிறது இக்காப்பியம்.
இக்காப்பித்தில் சா. கணேசனாரின் தலைமறைவு, சிறைவாழ்வு மிக்க நேர்த்தியாக வடிவமைக்கப் பெற்றிருக்கிறது. மையப்பகுதியில் வரும் இப்பகுதி காப்பியத்தின் அழுத்தமிக்கப் பகுதியாகும்.
அட்டுழியங்களின் பட்டியல்கள்/ ஆணவத்தின் உத்தரவுகள்/ சா. கவின் தாயாரும்/ மனைவியும் மக்களும்/ தனித்திருந்த வீட்டில் / மலபார் போலிசார் வழியை / மறித்து நின்றனர்/ சிலுவையைச் சுமந்த மகன்/ சிறுசைச் சுமந்த மருமகள்/ வறுமை அறியாத வாழ்க்கை/ வாரிக் கொடுத்தச் செங்கை/ நாட்டிற்குத்/ தன்மகளை ஈன்ற தாய்/ வீட்டிற்குள் அடைக்கப்பட்ட வேதனை/ புன்னகை தொலைத்த போராளியின் மனைவி/ சின்னஞ்சிறிய செல்லமகள்/ தன்னை அடக்கித் தவமிருந்த தோற்றம்/ தியாகியைத் தெரிகிறது/ தியாகத்தைத் தெரிகிறது/ பின்புலம் என்றேனும் பேசப்படுகிறதா?( ப. 35)
வருத்தக் கோர்வைகளின் பட்டியலாய் கவிதை புதுக்கவிதை வடிவமெடுத்து ஓடுகின்றது. மனதில் வேதனை மறையாமல் நிற்கிறது.
தமிழ்த்தாய்க்குக் கோயில் வடித்து நிற்கும் கணேச அண்ணலின் பக்கத்தில் நின்று அங்குள்ள தமிழ்த்தாய்க்கு வணக்கம் பல சொல்லிக் கவிஞர் தன் தமிழ்த் தாகத்தினைத் தீர்த்துக்கொள்ளுகிறார். தமிழ்த் தாய்க்காகப் பாடப்பட்ட பதிமுன்று விருத்தங்களும் தமிழுக்குக் கிடைத்த விருந்துகள். ஒன்று மட்டும் பின்வருமாறு.
மொழிப்புலத்தின் ஒருமையிலே தொழுது போற்ற
முகம்மதியர் கிறித்தவர்கள், சமணர், இந்து
எழிலான மதம்கடந்த தேவி ஆனாய்!
எந்தமிழர் காரைநகர்க் கணேச மண்ணில்
அழியாத அறுகோணக் கோபுரத்தில்
அய்யன் வள்ளுவன் இளங்கோ கம்பனோடு
மொழியரசி நடுவிருக்க பரிவாரத்தில்
முன்னிருந்து வாழ்த்துகிறாய் முவாத்தாயே! (ப. 76)
கம்பன் திருநாளின் பெருமை கூறும் பெரும் பகுதி இத்தனை நாள் கம்பன் திருநாள்களின் அழியாப் பட்டியல். படிக்கப் படிக்க மேடைகள் நினைவிற்கு வருகின்றன. பேச்சாளர்கள் பேசும் மனக்காட்சி விரிகின்றது. இப்பகுதிகளில் கவிஞர் நேரடி சாட்சியாக கம்பன் திருநாளுக்கு அமைந்துள்ளார்.
தற்காலத் தடுமாற்றங்களும் ஆங்காங்கே சுட்டிக்காட்டப்படும் கவிஞரின் கருத்து நேர்மை சுட்டிக்காட்டத்தக்கதாகும். கணேசனார் தேர்தல் களம் கண்டபோது சில பின்னடைவுகளைச் செய்யச் சிலர் எண்ணினர். அதுகுறித்தக் கவிதைக் கண்டனம் பின்வருமாறு.
திசையெங்கும் பணம் கொடுத்து வாக்கு வாங்கும்
பணநெறியை இந்தியா கண்டதன்று!
பலமடங்கு கூடியது காணும் இன்று! (ப. 47)
இப்படி இனிய எளிய, தேவையான கவிதைச் செழுமையாய் இக்காப்பியம் அடிப்பொடியின் பெருமைக்கு அணி சேர்க்கின்றது. கவிஞரின் கவி உள்ளம் நம்மைப்போன்று படித்தவர்களால் பெரிதும் பேசப்பட வேண்டும். பேசப்படும்.


உயிர்வலி


வேல். சரவணக்குமார் யாழினி வெள்ளவெட்டான் விடுதிபெருங்களுர் அஞசல்2009
இளைஞனின் பார்வையில் வாழும் மக்களின் பதிவை உயிர்வலி என்ற வேல். சரவணக்குமாரின் தொகுதி எடுத்துக்காட்டுகின்றது.
பல கவிதைகளின் தொகுப்பாக நூற்று எட்டுப் பக்கங்களில் விரிகின்றது இத்தொகுப்பு. இதனுள் கவிஉளம் மிக்க, கவிவளத்தை நோக்கிச் செல்கிற இனிய கவிஞராக வேல். சரவணக்குமார் தெரிகிறார். இவரால் இவரின் ஊரான வெள்ளவெட்டான் விடுதி இலக்கியப் பெருமை பெறுகின்றது.
அஃறிணையை அழைப்பதாய்/ அதட்டவாள் அம்மாள்/ அன்போடு ஓடிவருவார் அப்பா/ இருவரும் பேசிக் கொள்வார்கள்/ வாதம் சூடாக இருக்கும்/ சாப்பிடாமல் கூட படுத்துக் கொள்வார்கள் இருவரும்/ ஆறிப்போன தோசையைத் தின்போம் நானும் தம்பியும்/ விடிந்தபொழுது சூடாகக் காப்பி தருவாள் அனைவருக்கும்/ எதுவும் தெரியாமல் விழித்துக் கொண்டிருப்போம் நானும் தம்பியும்(ப. 47)
என்ற இக்கவிதையின் தலைப்பு காதலர் என்பதாகும். அப்பா, அம்மாவின் சண்டை எதனால் சமாதானம் ஆனது என்பதை அறியாத அண்ணன் தம்பிகளின் எதார்த்த நிலையை இக்கவிதை தெற்றெனப் புலப்படுத்துகிறது.
சுடிதாரின் சோகத்தை சில வரிகள் தெரிவிக்கின்றன. "எப்படிப் பசியாற்ற முடியும்/ மாராப்பு இல்லாத/ சுடிதாரை விலக்கி''(ப. 33) என்ற கவிதைக்குள் ஆணின் தவிப்பை உணரமுடிகின்றது.
"வீச்சமெடுத்த வார்த்தைகளால்/ என் வீட்டாரை இழுக்கும் பொழுதும் சகித்துக் கொள்கிறேன்/ இரவுகளில் கட்டித் தழுவி /நீ புரளும்போது இறந்து விடுகிறேன்'' என்ற வரிகளில் பெண்ணின் வேதனைப் புலப்படுகிறது.
ஒதுக்கப்பட்ட இவர்கள் / உயிருடன் இருப்பதே/ இறந்தபொழுதுதான் தெரிகிறது (ப. 76) என்று ஒதுக்கப்பட்டவர்களுக்காகக் குரல் கொடுக்கிறது ஒரு கவிதை.
தன் அனுபவத்தை தக்க நிலையில் சேமித்துத் தடையின்றி வழங்கியிருக்கிற வேல். சரவணக்குமாருக்கு வாழ்த்துக்கள். எழுதுங்கள்! இன்னமும் நிறைய எதிர்பார்க்கிறோம்.
--
M.Palaniappan
muppalam2006@gmail.com

Tuesday, July 07, 2009

பாராட்டும் பரிசும்


2008 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் ஆறாம் தேதி அன்று நடைபெற்ற கம்பன் திருநாள் விழாவில் கம்பன் அடிப்பொடி குறித்து ஒரு வலைப்பூவை உருவாக்கியமைக்காகப் பாராட்டினைப் பெற்றேன் (http://kambanadippodi.blogspot.com/) திருமிகு சக்தி திருநாவுக்கரசு அவர்களும் கம்பன் அடிசூடி திருமிகு பழ. பழநியப்பன் அவர்களும் இணைந்து இருக்கிறார்கள்

Wednesday, June 17, 2009

திருக்குறள் பேரவை அழைப்பு


உலகத் திருக்குறள் பேரவையின் மூன்றாம் மாநில மாநாடு (வேலூர் இரத்தினகிரி) நிகழ்முறை


Tuesday, June 16, 2009

உலகத் திருக்குறள் பேரவைமாநில மாநாடு


உலகத் திருக்குறள் பேரவை என்ற அமைப்பு தவத்திரு குன்றக்குடி அடிகளார்அவர்களைத் தலைவராகக் கொண்டு திருக்குறள் நெறியைப் பரப்பி வருகின்றது,
அவ்வமைப்பின் மாநில மாநாடு வரும் சனி- ஞாயிறு அதாவது 20,21 ஆகிய நாட்களில் வேலூர் மாவட்டம் கீழ்மின்னல் அதாவது இரத்தினகிரியில் நடை பெறஉள்ளது, அதன் அழைப்பு கீழே உள்ளது, அனைவரும் வருக

Tuesday, May 19, 2009

விடுதலைக்குப் பிந்தைய பெண்களின் நாவல்கள்

விடுதலைக்குப் பிந்தைய பெண்களின் நாவல்கள்
ஆய்வு குறித்த முன்னோட்டம்


இந்திய விடுதலைக்கு முன் தமிழ் நாவல் உலகில் ஏறக்குறைய முப்பதுக்கும் மேற்பட்ட நாவலாசிரியைகள் நாவல்களைப் படைத்துள்ளனர்.அவர்கள் பற்றிய ஆய்வு விடுதலைக்கு முந்தைய பெண்களின் நாவல்கள் என்ற தலைப்பில் என்னால் முனைவர் பட்டத்தி்ற்காகச் செய்யப்பட்டது

விடுதைலக்கு முந்தைய நாவலாசிரியைகள்

இராஜலட்சுமி அம்மாள்,
குமுதினி,
கோதைநாயகி அம்மாள்
வி, சரஸ்வதி அம்மாள்,
சித்தி ஜுனைதா பேகம்,
சாரநாயகி அம்மாள்,
பாலாம்பாள்,
மலைமகள்,
மீனாட்சி சுந்தரம் அம்மாள் ,
ராமாமிர்தத்தம்மாள்,
விசாலாட்சி அம்மாள்,
வேங்கடலட்சுமி,
ஸரோஜா ராமமூர்த்தி,
ஜெயலட்சுமி சீனிவாசன்,

இந்திய விடுதலைக்குப் பின் கல்வி கற்ற பெண்களின் நாவல் படைப்புகள் வெளிவர ஆரம்பித்தன.எனவே தமிழ் நாவல் உலகில் மிகப் பெரிய மாற்றங்கள் ஏற்பட்டன.இக்காலத்தை பெண்ணிய காலம் எனலாம்.

இக்காலத்தில் எழுதிய பெண் எழுத்தாளர்கள் நாற்பது பேருக்கு மேல் அமையலாம்.


அம்பை,
அமுதாகணேசன்,
அரசுமணிமேகலை,
அனுராதா ரமணன்,
அனுத்தமா,
ஆனந்தி,
இந்துமதி,
உமா சந்திரன்,
கார்த்திகா ராஜ்குமார்,
காவேரி,
குமுதினி,
கோமகள்,
சரளா ராஜகோபாலன்,
சல்மா,
சித்திஜுனைதா பேகம்,
சிவகாமி,
சூடாமணி,
திலகவதி,
பாமா,
ரமணிச்சந்திரன்,
ராஜம் கிருஷ்ணன்,
லஷ்மி,
லஷமி சுப்பிரமணியன்,
லீலா கிருஷ்ணன்,
வாசந்தி,
வித்யா சுப்பிரமணியன்,
ஜெயந்தி சங்கர்,
ஜோதிர்லதா கிரிஜா,

இவர்களின் ஏறக்குறைய 300 நாவல்கள் ஆய்வுக்குரிய களம் ஆகும்,

Friday, April 03, 2009

கந்த உபதேசம்

உயிர்கள் தெளிவு பெற குருவின் கருணை இன்றியமையாதது. குருவின் உபதேசமே கடவுளைக் காட்டி உயிர்களைத் தெளிவு பெற வைக்கின்றது. சமணம், பௌத்தம், சைவம், வைணவம், கிறித்துவம், இசுலாம் போன்ற அனைத்துச் சமயங்களிலும் இவ்வுபதேச நடைமுறை காணப்படுகிறது. குறிப்பாக சைவ நெறியாளர்களுக்குக் குருபாராம்பரியம் என்பது மிக்க உறுதியுடையதாக இருந்து வருகிறது.

நந்தி குருவாக அமைந்து திருமுலருக்கு அருளிய செய்திகள் திருமந்திரமாக உயிர்களுக்குக் கிடைத்தது. நந்தியின் வழியில் தற்போது சைவமடங்கள் அமைந்து குருநெறிகளைப் பரப்பி வருகின்றன. தட்சிணாமுர்த்தி வடிவம் இறைவனின் குரு வடிவமாகும். மாணிக்கவாசகருக்குக் குறுந்தமரத்தடி குருபீடமாகவும், இறைவன் குருவாகவும் அமைந்து கிடைத்த பேறு சிறப்புடையது. முருகப் பெருமான் சுவாமிநாதனாக அமைந்துச் சிவபெருமானுக்கு பிரணவம் அருளிய பெருமையும் இதனுடன் எண்ணத்தக்கது. இவ்வகையில் குரு காட்ட கோடி நன்மை உயிர்களுக்கு விளைகின்றது என்பது தெளிவு.

அருணகிரிநாதருக்கு முருகனே குருவாக இருந்து ஞானஉபேதசத்தை அருளியுள்ளார். அதற்கான பல அகச் சான்றுகள் அருணகிரிநாதரின் பாடல்களில் உள்ளன. உணரும் பொருளாகவும், உணர்த்தும் பொருளாகவும் முருகப் பெருமான் அருணகிரிநாதருக்கு அமைந்தது வேறு எவருக்கும் கிடைக்காத பேறு ஆகும். இவ்வுபதேசம் பெற்றதன் வழியாக பெறுவதற்கு முன்பிருந்த நிலை மாறி புதிய ஞானநிலை அருணகிரிநாதருக்கு வாய்த்தது. இதன்பிறகு அவர் வாக்குகள் அனைத்தும் முருகனின் திருப்புகழ் பரவும்படி வெளிவந்தன. அருணகிரிநாதரை மனம், வாக்கு, காயம் ஆகிய அனைத்தாலும் புதிய உயிராக ஆக்கிய பெருமை இந்த உபதேசத்திற்கு உண்டு. அருணகிரிநாதருக்குக் கிடைத்த இந்த உபதேசத்தின் பெருவலியை உயிர்கள் அனைத்தும் அறிந்து கொண்டால் உயிர்கள் அனைத்தும் கடைத்தேறும் என்பதில் ஐயமில்லை. இவ்வகையில் ஞானத்தின் தாழ்நிலைக்கும், ஞானத்தின் உச்ச நிலைக்கும் ஒரே காட்டாக அருணகிரிநாதர் விளங்கியுள்ளார். தாழ்நிலை பெற்றவரும் குருவருள் பெற்றால் உயர் நிலை பெறுவர் என்பதற்கு அருணகிரியாரின் வாழ்வே சான்றாகின்றது.

குறிப்பாக அருணகிரிநாதரின் கந்தர் அலங்காரம் என்ற நூலில் இவ்வுபதேசம் உபதேசிக்கப் பெற்ற முறையும், உபதேசம் பெறப்பட்ட நிலையும் மிகத் தெளிவாகக் காட்டப் பெற்றுள்ளன. இவ்வலங்காரம் அருணகிரிநாதர் பல வேளைகளில் பாடிய பாடல்களில் தொகுப்பு என ஆய்வாளர்கள் கருதுகின்றனர். ஆனால் உபதேசம் பெற்ற நிலையின் அடுத்து இது எழுதப் பெற்றிருக்க வேண்டும் என்ற கருத்து வலுப்பெறும் நிலையில் இதனுள் பல பாடல்கள் அமைந்திருக்கின்றன. குறிப்பாக முருகன் சாவின் விளிம்பில் அருணகிரிநாதரைத் தடுத்து நிறுத்தியபோது அவர் கண்ட அருள் வடிவே அலங்காரமாகப் பாடப் பெற்றுள்ளது என்பதில் சிறிதும் ஐயமில்லை.

அருணகிரிநாதருக்கு முன்புவரை இலக்கண நூல்களுக்கே அலங்காரம் என்ற பெயர் தமிழ் வழக்கில் இருந்துள்ளது. தண்டியலங்காரம், மாறனலங்காரம் போன்றன செய்யுள்களை அழகுபடுத்தும் இலக்கணங்களை இயம்பிய காரணத்தால் அவை அலங்காரம் காட்டும் இலக்கண நூல்களாகி அலங்காரப் பெயர் பெற்றன. இதனின்னறு மாறிப் பெருத்த மாற்றத்தை அருணகிரிநாதர் ஏற்படுத்தி நூறு பாடல்கள் கொண்ட சிற்றிலக்கிய வகையாகக் கந்தர் அலங்காரத்தை புதுமை செய்துப் படைக்கின்றார்.

சலங்காணும் வேந்தர் தமக்குமஞ் சார்யமன் சண்டைக்கஞ்சார்
துலங்காநரகக் குழியணுகார் துட்ட நோயணுகார்
கலங்கார் புலிக்கும் கரடிக்கும் யானைக்கும் கந்தநன்னூல்
அலங்கார நூற்றுள் ஒருகவி தான் கற்றறிந்தவரே.
( கந்தர் அலங்காரம் 101)

என்பது கந்தர் அலங்காரப் பயன் கூறும் பாடலாகும். அலங்காரத்துள் அத்தனை கவியும் சிறந்திருக்க வேண்டும் என்பதை இப்பாடல் உணர்த்துகிறது. அதனால்தான் ஒருபாடல் போதும் என்ற நிலையில் இக்காப்புச் செய்யுள் பாடப்பெற்றுள்ளது.

இவ்வகையில் சிற்றிலக்கிய வரிசையில் முதல் அலங்கார நூல் பாடிய அரும் பரும் படைப்பாளராக அருணகிரிநாதர் வைத்து எண்ணத்தக்கவர் ஆகின்றார்.
அழகு கூட்டும் இவ்வலங்கார நூலில் முருகப் பெருமான் அருளிய உபதேசத் தன்மையை எடுத்தியம்புவதாக இக்கட்டுரை அமைகின்றது.

அருணகிரிநாதர் உலக வாழ்வை வெறுத்துத் தன்னை முடித்துக் கொள்ளத் துணிந்தபோது முருகப் பெருமான் காட்சி தந்து வேலால் அருணகிரிநாதர் நாவில் மெய்ப் பொருளை எழுதினார் என்பது அவர் வாழ்வில் நிகழ்ந்த வரலாறு ஆகும்.

தோதிமி தித்தித் தனத்த தந்தவெனி சையோடே
சூழ நடித்துச் சடத்தில் நின்றுயிரான துறத்தற்
கிரக்க முஞ்சுப சோபன முய்க்கக்
கருத்தும் வந்தருள் புரிவோனே (திருப்புகழ் 394)

என்ற திருப்புகழ்ப் பாடலில் தான் உயிரை முடித்துக் கொள்ள எத்தனித்த நிலையினைப் பதிவு செய்கின்றார் அருணகிரிநாதர். அவ்வேளையில் முருகப் பெருமான் காட்சி தந்து தன்னைக் காத்தார் என்ற குறிப்பும் இப்பாடலில் காட்டப் பெற்றுள்ளது.

ஒளியில் விளைந்த உயர்ஞான பூதரத் துச்சியின் மேல்
அளியில் விளைந்ததொர் ஆநந்தத் தேனை அநாதியிலே
வெளியில் விளைந்த வெறும்பாழைப் பெற்ற வெறுந்தனியை
தெளிய விளம்பிய வாமுக மாறுடைத் தேசிகனே
(கந்தரலங்காரம் 8)

இவ்வலங்காரப் பாடலில் பாழ்வெளியில் வெறுந்தனியாக தனிப்பொருளாக இருக்கும் முருகனின் நிலையைக் கண்டு அவன் வாய்ச் சொல் தெளியக் கேட்ட நிலையை அருணகிரிநாதர் வெளிப்படுத்துகின்றார்.

முருகப் பெருமான் ஔ பொருந்திய அருணைமலையின் மேலே ஆநந்தத் தேனாக இருந்து அருள் தர அதனைத் தனியே தான் மட்டும் மாந்தியத்திறம் மேற்பாடலில் தெரிவிக்கப் பெற்றுள்ளது.

தேன்என்று பாகுஎன்று உவமிக்க ஒணாமொழித் தெய்வவள்ளி
கோன்அன்றுஎனக்கு உபதேசித்தது ஒன்று உண்டு கூறவன்றோ
வான்அன்று கால்அன்று தீயன்று நீர்அன்று மண்ணும்அன்று
தான்அன்று நான்அன்று அசரீரி அன்று சரீரியன்றே
(கந்தரலங்காரம் 9)
இப்பாடலில் உபதேசித்த வரலாறு உறுதிப்படுத்தப் படுவதோடு அவ்வுபதேசத்தின் தன்மையும் தெற்றெனக் காட்டப் பெறுகிறது. அவ்வுபதேசம் பெறும்போது ஐந்து பெரும் புதங்கள் சூழும் இவ்வுலக நிலை இல்லாமல் போயிற்று என்பதைத் தான் இப்பாடலின் முன்றாம் வரி எடுத்துரைக்கின்றது. மேலும் அவ்வுப