Saturday, March 17, 2012

































புதுக்கோட்டை திருவப்பூர் முத்து மாரியம்மன் கோயில் திருவிழாக் காட்சிகள்
12.3.2012 அன்று நடைபெற்ற தேர் திருவிழாவை ஒட்டி புதுக்கோட்டை நகரமே விழாக் கோலம் பூண்டது. பால் காவடிகள், பறவைக் காவடிகள், அன்னதானம், கடைகள், விளையாட்டுகள் எனக் கொண்டாடப் பெற்ற விழாக் காட்சிகள் இவை.

Tuesday, March 13, 2012

ஆரோவில்லில் மக்கள் கருத்தரங்கம் -௨௫.௩.௨0௧௨



ஆரோவில்லில் மக்கள் கருத்தரங்கம் உலகப் பொது மறை நமது வாழ்வின் வழிகாட்டி என்ற தலைப்பில் நிகழஉள்ளது. அழைப்பிதழ் பார்வைக்கு உள்ளது அனைவரும் வருக.

Monday, March 12, 2012

இராமநாதன் பழனியப்பன் “திருச்செந்தூரின் கடலோரத்தில்” நூல் விமர்சனம்


பக்தி என்பது அறிதல், அறிவித்தல், அனுபவித்தல் அனுபவித்ததை பகிர்தல் போன்ற நடைமுறைகளைச் சார்ந்தது. பக்தியை அறிந்தவர்கள் அறியாதவர்களுக்கு அறிவிக்கும் பேறு பெறுகிறார்கள். பக்தியை அனுபவித்தவர்கள் அனுபவிக்காதவர்களுக்கு அனுபவிக்கக் கற்றுத்தருகிறார்கள். தொடர்ந்து உருவாகிவரும் இந்த பக்தி இழை அவ்வப்போது சிக்குண்டு, சிதறுண்டு, நெருக்குண்டு கிடந்ததும் உண்டு. நெருக்குதல்கள் பற்பல இருந்தாலும் அதன் தொடர் இழை அறுந்துபோகாலமல் ஞானிகள் காத்தார்கள், காத்து வருகிறார்கள். காத்துவருவார்கள். அவர்களின் சொற்கள்,இலக்கியங்கள் காட்டாதனவற்றைக் காட்டும். கேட்காதனவற்றைக் கேட்கச் செய்யும். புரியாதனவற்றைப் புரியச் செய்யும். அறியாதனவற்றை அறியச் செய்யும். அனுபவிக்காததை அனுபவிக்கச் செய்யும்.

பக்தி என்பதன் அடிப்படையை மக்களிடத்தில் உணர்த்தவேண்டிய காலக்கட்டம் இது. மக்களைப் பயபக்தியில் ஈடுபடுத்தும் வன்மையான காலக்கட்டம் இது. மக்களை அவர்களின் அறியாமையைக் காட்டிப் பயமுறுத்திக் கடவுளைக் காசாக்கி வணக்க வைக்கும் இந்தக் காலக்கட்டத்தில் பக்தியின் உண்மையை, நன்மையை, அதன் அன்புருவை வெளிக்காட்ட வேண்டிய பல பணிகள் இன்றைக்குத் தேவைப்படுகின்றன.

முரட்டு பக்தியாக உடலை வருத்தும் குழுக்கூட்டம் ஒருபுறம். திரட்டு பக்தியாக மக்கள் திரளைக் கூடச் செய்யும் கூட்ட பக்தி ஒருபக்கம். களிப்புகளுக்கு இடம் தந்து ஆடல், பாடல், கரகாட்டத்துடன் இயங்கும் களிப்பு பக்தி ஒருபுறம். கவலை பக்தி ஒருபுறம். காக்க வேண்டும் என்ற காவல் பக்தி ஒருபுறம். இவ்வகை நடப்புகளை உடைய ஆரவார பக்தியில் அமைதி பக்தி, ஆன்ம பக்தி காணாமல்போய்க் கொண்டிருக்கிறது. இச்சூழலில் உண்மையான, நன்மையான, இனிமையான பக்தியின் பாங்கினை துறைதோறும், துறைதோறும் துணைக்கருவிகள் பல கொண்டு அறிவிக்கவேண்டி இருக்கிறது.

காலம் காலமாக அறிவின் ஆற்றல் பெருகி வந்தாலும் அறியவேண்டியனவாகவே உயிர்கள் இருந்து கொண்டே இருக்கின்றன. இந்த உயிர்களுக்குப் பக்தி வழியில் பகவானை அடைந்த பேரின்பவாதிகளை அறிமுகப் படுத்திக் கொண்டே இருக்கவேண்டும். அப்போதுதான் உயிர்களின் அறியாமை களைந்துபோகும். இவ்வினிய முயற்சியில் திட்டமிட்டு திடமுடன் இறங்கி இருக்கும் அருளடியார் இராமநாதன் பழனியப்பன் அவர்களின் இனிய நூலான திருச்செந்தூரின் கடலோரத்தில் நூலைக் காணும், படிக்கும், ருசிக்கும், துதிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

முருகனைச்,சேந்தனைக் கந்தனைச் செங்கோட்டு வெற்பனைக் கடம்பனை அணுஅணுவாக ரசித்து உலகமெல்லாம் அவனடியில் கிடப்பதை எடுத்துரைக்கும் அருள் அனுபவ நூல் திருச்செந்தூரின் கடலோரத்தில் என்ற நூலாகும்.

வடமொழியில் ஆதி சங்கர மாமுனிவர் அருளிய சுப்பிரமணிய புஜங்கத்தின் அருமையான அருள் தமிழ்ப் பதிப்பு திருச்செந்தூரின் கடலோரத்தில். சங்கரர் தனக்கு ஏற்பட்ட நோவு நீங்க ஜெயந்திபுரம் என்ற திருச்செந்தூருக்கு வருகை தந்துப் பாடிய அருள் பாடல்கள் முப்பத்து முன்றின் இனிய சர்க்கரைப் பிழிவு இந்த நூல். முருகப் பெருமான் காலடியில் கிடந்த கரும்பாம்பு நீங்கியதாகச் சங்கரருக்கு இப்புஜங்கம் பாடும்போது கிடைத்த அருள் அனுபவம் அவரின் நோவைத் தீர்த்தது. முப்பத்து முன்று என்ற எண்ணிக்ககை முப்பத்து முன்று கோடி தேவர்கள் என்ற எண்ணிக்கையின் உள்ளடக்கக் குறியீடு ஆகும்.

இந்த நூலின் அமைந்திருக்கும் சிறப்புகள் பற்பல. உரைநடை வளமும், காட்சி நயமும், கவிதை வளமும், எளிமையும், இனிமையும் அருளும், அனுபவமும் முற்றி முதிர்ந்திருந்து இந்நூலை அணி செய்கின்றன. இணையதளம் முதல் இனியவன் கோயில் கொண்டிருக்கும் அனைத்துத் தலங்கள் பற்றிய உண்மைத் தகவல்களுடன் நேர்த்தியான கட்டுமானம், ஓவியங்கள், படங்கள் என்று வீட்டின் சூழலைக் கூட கோயிலாக மாற்றிவிடும் வலிமை பொருந்தியது இந்நூல்.

முருகப் பெருமானின் திருச்செந்தூர் பற்றியும், தலப் பெருமை, தலநூல்கள் என அனைத்தையும் தந்து எண்ணூறு பக்கங்களுக்கு விரிகிறது இந்நூல். முன்னதாக அறிமுக இயலில் முக்தி அனுபவம், முருக வரலாற்றின் சிறப்பு, உலக முருகன் கோயில்கள், ஞானவான்களாம் அருணகிரிநாதர், இரத்தினகிரி பாலமுருகன் அடிமை சுவாமிகள், சங்கரர் அருள் வரலாறு முதலிய தக்க சான்றுகளுடன் எடுத்துக்காட்டப் பெறுகின்றன.

படங்களும் சித்திரங்களும் கலந்து நிற்கும் இந்நூலில் ஆங்காங்கே வண்ணமிட்டுக் கட்டம் கட்டி முக்கியமான தகவல்கள் இணைக்கப் பெற்றிருக்கின்றன. இதனைக் கண்ணூற்றாலே பல அறியாச் சிக்கல்கள் அழிந்து போகின்றன. அறியச் செய்கின்றன.

இரண்டாம் பகுதியான புஜங்க இயலில் சுப்பிரமணிய புஜங்கத்தின் வடமொழி, தமிழ் வடிவம் , விரிவான உரை முதலிய எடுத்துரைக்கப் பெறுகின்றன.

முன்றாம் பகுதி இணைப்பாக முருகப் பெருமானின் அருள் வெள்ளத்தைப் பாடிப் பரவும் பக்திப் பனுவல்கள் இணைக்கப் பெற்றுள்ளன.

இம்முன்று நிலைகளில் அமைந்துள்ள இந்நூல் சுப்பிரமணிய புஜங்கத்தின் புகழை இனிது நிலை நிறுத்துகிறது. புஜங்கம் என்பது தோளால் நகரும் முறைமை என்று பொருள். பாம்பின் நகர்ச்சி போன்ற ஓசையுடன் இது வடமொழியில் பாடப் பெற்றுள்ளது. தமிழ் வடிவில் கவிதை நடைக்கு ஒட்டிய இந்த இசை இணையும் முறை பின்பற்றப் பெற்றுள்ளது. எனவே இது புஜங்கம் என்று பெயர் பெற்றது.

மச்சக் காவடி, சர்ப்ப காவடி பற்றி சரியான தகவல்களை இந்நூல் பதிவு செய்துள்ளது. சர்ப்பகாவடி என்பது பாம்பினைப் பச்சை மண்பாத்திரத்தில் கொண்டு வந்துத் திருச்செந்தூர் சீரலைவாய்ப் பகுதியில் விட்டுவிடுதல் என்ற முறைமை கொண்டது என்ற செய்தி பிரமிப்பை ஏற்படுத்துகிறது. மச்சக் காவடி என்பது திருச்செந்தூரில் கிடைத்த மீனை முன்று கூறிட்டு மஞ்சள் நீரில், மஞ்சள் துணிமுடப்பட்டு கொண்டுவருவது என்றும், இம்மீனை கடலில் விட்டால் இறந்தமீன் துள்ளித் திரியும் என்றும் தரும் கருத்து இறையிருப்பை உணர்த்துவதாக உள்ளது.

இதுபோன்ற பல புதிய தகவல்களுடன் இந்த நூல் அமைந்து சிறக்கிறது.

தீராத வியாதிகளான வலிப்பு, தீமைமிகு காசம்
குஷ்டம், சுரம், மேகவெட்டை, குடல்ப்புண்
புற்றுநோய், பிசாசு, பொல்லாத மனப்பயம்,
இன்னபிற நோய்கள் அனைத்தும்
தாரகனை வதம் செய்தவனே
பன்னீர் இலையில் மடித்த உன் திருநீற்றைப்
பார்த்த மாத்திரத்தில் பறந்தோடி மறைந்துவிடுமே(25)

என்ற புஜங்கப் பகுதி திருச்செந்தூரின் இடப் பெருமைக்கும், சொல் பெருமைக்கும், பொருள் பெருமைக்கும் சான்றாக அமைவது ஆகும். இது போன்று முப்பத்து முன்று வடமொழிப் பாடல்களுக்கும் இனிய தமிழாக்கம் ஆசிரியரால் தரப் பெற்றுள்ளது. இப்பாடல்களுக்குச் சொல்லுக்குச் சொல் விளக்கம், பொருள் விளக்கம், இட விளக்கம், வரலாறு விளக்கம் என்று விளக்கங்களின் வரிமை இந்நூலை விரிதாக்கி படிப்பவரின் பாராட்டைப் பெறுகின்றது. இன்னும் படிக்கலாம் என்பது போன்ற ஆசிரியரின் இனிய நடை புத்தக உலகில் புதிய நடை முறைமையைக் கொண்டுவந்துச் சேர்த்துள்ளது.

இந்நூலின் ஒவ்வொரு பகுதி எழுதப்படும்போது அதற்கு தொடர்புடைய பல அருளனுபவங்கள் ஆசிரியருக்குக் கிடைத்துள்ளன. மலேசிய நாடு சார்ந்து தண்ணீர் மலை முருகனுக்கு தேங்காய்கள் உடைப்பதை ஓருமுறை கண்ட இவருக்கு பல முறை முருகனையும் அவள் அருள் வெள்ளத்தையும் காண எண்ணம் சென்று கொண்டே இருக்கிறதாம். மேலும் சங்கரரின் பிறந்த இடமான காலடியைப் பற்றி இவர் எழுத முற்பட்டபோது அந்தக் காலடிக்கு இவர் காலடி வைக்கவேண்டிய சிறப்பு நிகழ்ந்துள்ளது.

தண்ணீர் மலை முருகன் வரும்போது தேங்காய்கள் உடைக்கின்ற நிகழ்ச்சி இவருக்கு வேறுபட்ட அனுபவத்தைத் தந்துள்ளது. அதாவது தேங்காயின் இளநீர் கொண்டு தண்ணீர் மலையான் வரும் வழி முழுவதும் கழுவப் படுவதாக ஆசிரியர் வரைகிறார். இவ்வாறு அருள் அனுபவம் கலந்து இந்நூல் செய்யப் பெற்றுள்ளது.

நகரத்தார்களின் இனிய முருக பக்தியும், அவர்கள் அயல் நாடுகளுக்குச் செல்கையில் பழனியாண்டவனை வழிபட்டதிறமும், அன்னதான மடம் ஏற்படுத்திய அறக் கொடையும், பழனி பாதயாத்திரை பற்றிய வரலாற்று ஆவணங்களும் இந்நூலின் சக்தியைப் பெரிதும் கூட்டுகின்றன.

முருகப் பெருமான் பற்றிய ஒரு கலைக்களஞ்சியம் என்று சொல்லத்தக்க அளவில் நல்ல அருமையான வடிவில் அழகன் முருகனுக்கு பல்லாண்டு பாடும் சிறப்பான நூல் இது.

நம்மைப்போன்றோர் கரங்களில் இருந்தால் நமக்கு பயம் அணுகாது. படபடப்பு அணுகாது. துணை இதுவே ஆகும். இந்நூல் கொண்டு சங்கரர் என்ற குருவை இனம் காண முடியும். அவரின் அத்வைத தத்துவத்தை அறிந்து கொள்ளமுடியும். அதன் வழி நடக்க முடியும். முருகனின் பாதத் துளிகளைத் தலைமேல் கொள்ளமுடியும். வடமொழியை வணங்க இயலும். தமிழால் வாழ்த்த இயலும். புராணம் கற்கலாம். புனிதம் கற்கலாம். இன்னும் எத்தனையோ எத்தனையோ பயன்கள் தரக்கூடிய கிட்டக் கூடிய கிடைத்தற்கரிய பொக்கிஷம் இந்நூல்.

என்றும் இதுபோன்ற பல நல்ல பணிகளை ஆசிரியர் செய்ய கந்தக்கடவுள் அருள் துணை கூட்டும்.

நூல் விபரம்

விற்பனை உரிமை. பழனியப்பா பிரதர்ஸ், கோனார் மாளிகை, 25. பீட்டர்ஸ் சாலை, சென்னை, 14

நூலின் விலை ரு 600

ஆசிரியர் முகவரி இராமநாதன் பழனியப்பன், ஸ்ரீ புவனேஸ்வரி, 3362ஏஎக்ஸ் 11ஆவது மெயின் ரோடு, அண்ணாநகர் மேற்கு, செனனை 40, 04426211194

Monday, March 05, 2012

மறுமலர்ச்சிக் கவிஞர் மு. முருகுசுந்தரம் வாழ்வும் அவரின் படைப்புகளும்

கருப்பையன்
முனைவர் பட்ட ஆய்வாளர்,(பகுதிநேரம்)
மா. மன்னர்கல்லூரி,
புதுக்கோட்டை.

தமிழ்க்கவிதை மரபில் மறுமலர்ச்சிக் கவிதைகள் என்றொரு வகைமை மகாகவி பாரதியாரில் இருந்துத் தொடங்குவதாகக் கொள்ளாலாம். மக்கள் விரும்பும் மெட்டில், மக்களுக்குத் தேவையான கருத்துக்களை எளிய இனிய முறையில் படைத்தளிப்பது என்பதே மறுமலர்ச்சிக்காலக் கவிதைகளின் இயல்பாகும்.

அரசர்களை, இறைவுருவங்களை முன்வைத்துப் புனையப்பெற்ற கற்பனை படைப்புகளை, சிற்றிலக்கிய மரபுகளை சாதாரண மக்களின் வாழ்க்கை நிலையைப் பாட மறுமலர்ச்சிக் கவிதைகள் தோன்றின. பாரதியில் இருந்துத் தொடங்கும் இக்கவிதைகள் புதுக்கவிதையின் எழுச்சியாகக் கருதப்படும் ஆயிரத்துத் தொள்ளாயிரத்து எழுபது வரை தமிழ் இலக்கியப் பரப்பில் மிகுந்த வலிமையுடன் திகழ்ந்து வந்தன.

பாரதியாரைத் தொடர்ந்து அவரின் கவிதை மரபுகளைப் பின்பற்றிச் செல்வோராக பாரதிதாசன், வாணிதாசன், சுரதா போன்ற பாரதி பரம்பரையினர் இக்காலப்பகுதியில் குறிக்கத்தக்கவர்கள். இவர்களுடன் தொடர்ந்து இக்கவிதை உலகிற்குச் செழுமை சேர்த்தவர்கள் தமிழ்ஒளி, சௌந்தரா கைலாசம், பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம், கண்ணதாசன் போன்ற பலர் ஆவர். இவர்களுள் ஒருவர் குறிக்கத்தக்கவர் முருகு சுந்தரம் என்ற கவிஞர் ஆவார்.

இவர் பிறந்த நாள் 26.12.1929 என்பதாகும். இவரின் பெற்றோர் முருகேசன், பாவாய் ஆகியோர் ஆவர். இவரின் சொந்தஊர் திருச்செங்கோடு ஆகும்.

இவர் புலவர் கல்வித் தகுதி பெற்றவர். கல்வியியலில் இளநிலையையும் முடித்துள்ளார். இவர் மேல்நிலைப்பள்ளி ஆசிரியராக, தலைமை ஆசிரியராகப் பணியாற்றியவர்.

இவரின் படைப்புகள் பின்வருமாறு.
இவர் தன் முதல் கவிதையை ஆயிரத்துத் தொள்ளாயிரத்து அறுபத்தொன்பதாம் ஆண்டு படைத்தளித்துள்ளார். தொடர்ந்து பல கவிதைகளையும் கவிதைத் தொகுப்புகளையும் அளித்துள்ளார்.

இவரின் படைப்பாற்றலைப் பின்வருமாறு பாலா மதிப்பிடுகிறார். ” கவிஞர் முருகு சுந்தரம் மரபிலும் புதுமையிலும் கைகோத்துக் கொண்டவர். கவிதையில் கதை சொல்லும் கவிதைப்பேரழகு இவருக்கு சிறப்பாய்க் கைவந்திருக்கிறது. காவியங்கள் அதிகம் காணப்படாத குறையைப் போக்கியவர். “சோம்பல் முறிக்கும் சொற்களைக் களைந்துவிட்டு அர்த்தப் படிமங்களாக அணிவகுக்கப்பட்ட அழகு நடையில் முன்னேறும் கதைக்கவிதை புனைவதில் புகழ் உச்சியில் நிற்கின்றவர்” என்ற மதிப்பீடு இவரின் கவிதைத் திறனை வெளிப்படுத்துவதாகும்.

இவர் பெற்ற பரிசுகள் பலவாகும். ஆயிரத்துத் தொள்ளாயிரத்து எண்பத்து இரண்டாம் ஆண்டில் பனித்துளிகள் என்ற இவரின் கவிதைத் தொகுப்பிற்கு தமிழக் அரசின் சிறந்த நூலிற்கான தமிழ வளர்ச்சிக் கழகப் பரிசு வழங்கப் பெற்றுள்ளது. ஆயிரத்துத் தொண்ணூறாம் ஆண்டு இவரின் கவிதைத் திறனைப் பாராட்டி தமிழக அரசு `பாரதிதாசன் ‘ விருதினை வழங்கியது.

இவை தவிர பல இலக்கிய அமைப்புகளும் இவரின் படைப்புத் திறனைப் பாராட்டியுள்ளன. திருக்குறள் பேரவை அமைப்பு ஈரோட்டில் நடத்திய திருக்குறள் மாநாட்டில், திருக்குறள் முனிசாமி அவர்கள் முன்னிலையில் இவருக்குப் `பாட்டுச்சிற்பி’ என்ற பட்டம் வழங்கப்பட்டது.

1994ஆம் ஆண்டு இருபதாம் நூற்றாண்டில் வெளியான சிறந்த தமிழ்க்காப்பியங்கள் பத்தனுள் இவருடைய பனித்துளிகள் என்ற காப்பியமும் ஒன்று எனக் கோயில்பட்டி திருக்குறள் பேரவை பாராட்டிப் பரிசு வழங்கியது.

1994 ஆம் ஆண்டு கோயம்புத்தூரைச் சார்ந்த இலக்கியப் பாசறை என்ற அமைப்பு இவருடைய கவிதை நாடகமான எரி நட்சத்திரத்துக்குப் பாராட்டுப் பரிசினையும், இவருக்குப் பாவேந்தர் விருதினையும் வழங்கிச் சிறப்பித்தது.

1999 ஆம் ஆண்டு சென்னையில் உள்ள பாவேந்தர் பாசறை என்ற அமைப்பு “பாவேந்தர் பைந்தமிழ்ச் செல்வர்’ என்ற பட்டத்தை இவருக்கு வழங்கிச் சிறப்பித்தது.

இவரின் படைப்புகள் பின்வருமாறு.
கவிதைப் படைப்புகள்
கடைத்திறப்பு,
பனித்துளிகள்,
சந்தனப்பேழை,
தீர்த்தக்கரையினிலே,
எரிநட்சத்திரம்,
வெள்ளை யானை,
இளைஞர் இலக்கியம்,
பாட்டும் பதையும்,
அண்ணல் இயேசு,
பாரதி பிறந்தார்
முதலியனவாகும்.

உரை நூல்கள்
மறத்தை மகளிர் பாரும் போரும்,
வள்ளுவர் வழியில் காந்தியம்,
காந்தியின் வாழ்க்கையிலே,
கென்னடி வீர வரலாறு,
தமிழகத்தில் குறிஞ்சிவளம்,
நாட்டுக்கொரு நல்லவர்,
பாவேந்தர் நினைவுகள்,
அரும்புகள் மொட்டுகள் மலர்கள்,
குயில்கூவிக் கொணருக்கும்,
புதுவைக் கல்லறையில் புதிய மலர்கள்,
மலரும் மஞ்சமும்,
குயில்களும் இளவேனில் காலமும்,
பாவேந்தர் ஒரு பல்கலைக்கழகம்,
புகழ்பெற்ற புதுக்கவிஞர்கள்,
சுரதா ஓர் ஒப்பாய்வு
பாவேந்தர் படைப்பில் அங்கதம்

இருபதாம் நூற்றாண்டின் இணையற்ற வகைகளான மரபுக்கவிதை, காப்பியம், உரைநடை நூல்கள் போன்றவற்றைப் படைத்தளித்துக் குறிக்கத்தக்க பாராட்டுகளை, பரிசுகளைப் பெற்றவராக முருகுசுந்தரம் விளங்குகின்றார்.

சிலப்பதிகாரத்தில் காட்சிக்கலை

தமிழ் இலக்கியப் பரப்பில் இளங்கோவடிகள் காப்பிய வடிவத்தையும், காப்பிய மரபுகளையும் தொடங்கி வைக்கும் முதன்மையாளராக விளங்குகின்றனார். காப்பியம் என்ற நீண்ட வடிவத்தின் இழுவைத் தன்மை குன்றாமல், சுவைத்திறன் மாறாமல் படைத்துச் செல்லும் திறன் மிக்க காப்பியப் படைப்பாளராகவும் இளங்கோவடிகள் விளங்குகின்றார். தன் காப்பியத்தை ஒரு தழுவலாகவும், வேறுமொழி இலக்கியச் சாயல் உள்ளதாகவோ அவர் படைத்துக்காட்டாமல் சுயம்புத் தன்மை மிக்கதாக தன் படைப்பினை உருவாக்கியிருப்பது கண்டுகொள்ளப்பட வேண்டிய ஒன்றாகும்.

இலக்கிய வகைகளை முதன் முதலாகப் படைத்துக் கொள்ளும் படைப்பாளருக்கும் பற்பல விடுதலைகள் இருப்பதுபோன்றே பற்பல இடைஞ்சல்களும் உண்டு. விடுதலைகள், இடைஞ்சல்கள் இவற்றைத் தாண்டி முழுமைமிக்கப் படைப்பாக, அனைத்துப் பார்வைகளுக்கும், போக்குகளுக்கும், பிற்கால உலகினர்க்கும் இடமளிக்கின்ற உயிர்ப்பு மிக்கக் களமாக தன் படைப்பினை காலகாலத்திற்கும், நிலைநிறுத்திவிடுகிற படைப்பாளனின் தன்மை நினைந்து நினைந்து போற்றுதற்குரியது.

அவ்வகையில் சிலப்பதிகாரம் தமிழ்ப்பரப்பில் முதல் காப்பியம் என்றாலும் அது முழுமை பெற்ற காப்பியமாக முதிர்ச்சி பெற்ற காப்பியமாக அள்ள அள்ளக் குறையாத சுவையமைப்பு, கட்டமைப்பு உடையதாக விளங்கி நிற்கின்றது. ஒன்றே செய்தாலும் அதனை நன்றே செய்து என்றைக்கும் படைப்புலகில் தன்னிகரற்று விளங்குகின்றதன்மை உடையவராக இளங்கோவடிகள் எக்காலத்தும் உணரப்படுவார்.

இவரின் சிலப்பதிகாரத்தில் காட்சிக் கலைகள் குறித்த செய்திகளை இக்கட்டுரை வழங்கி நிற்கிறது.

காட்சிக்கலைகள் ஒரு அறிமுகம்
விஷூவல் ஆர்ட்ஸ் என்று ஆங்கிலத்தில் உணரப்படுகிற இந்தக் காட்சிக் கலைகள் தற்போது அதிக அளவில் மக்களின் பயன்பாட்டிற்கு வந்துள்ளது. நாடகம், தொலைக்காட்சி நிகழ்வுகள், திரைப்படம் போன்ற மேடை சார்ந்த கலைகள், கரகாட்டம், ஒயிலாட்டம், மயிலாட்டம் போன்ற நாட்டுப்புற ஆடல்கலைகள் போன்ற பதிவு செய்து திருத்தப்பட்ட, பதிவு செய்யப்படாத, திருத்தப்படாத குழு சார்ந்து இயங்கும் அனைத்து வடிவங்களையும் காட்சிக்கலைக்குள் கொண்டு வர இயலும் என்றாலும் தனி மனித படைப்புகள் காட்சிக் கலையில் முக்கியத்துவம் பெறுகின்றன.

குறிப்பாக விளம்பரங்கள், துண்டு அறிக்கைகள், முகப்பு அட்டைகள் (டுயடெநள), செயற்கைப் பூக்கள், தாவரங்கள், துணிகள் மற்றும் சில பொருள்களில் செய்யப்படும் கலைவேலைப்பாடுகள், வரைபடங்கள், நிலவரைபடங்கள், கேலிச்சித்திரங்கள், உருவாக்கப் பெற்ற கேலிச்சித்திரப் பாத்திரங்கள், பொம்மைகள், விளையாட்டுப் பொருள்கள், வண்ணமற்ற ஓவியங்கள், வண்ண ஓவியங்கள், கலை வடிவம் கொண்ட வாழ்த்து அட்டைகள், நகை வடிவங்கள், விளையாட்டுகள், புதிர்கள், ஊசித் தையல்கள், தரைக்கற்களில் வரையப்படும் ஓவியம் சார்ந்த மாதிரிகள், கணினியால் வரையப்பெற்ற மாதிரிகள், புகைப்படங்கள், குறிப்பேடுகளுக்கு போடப்படும் முன் அட்டை மாதிரிகள், சிலைகள், கண்ணாடி மற்றும் மண் போன்றவற்றால் ஆன பொருள்களின் மீது வரையப்பெறும் கலைவடிவங்கள், பல முறை வரைவதற்காக உறுதியான பொருள்களால் ஏற்படுத்தப் பெற்ற மாதிரிகள், பொருள்களின் வடிவம், கட்டடங்களின் வடிவம் போன்றன கருதி வரையப் பெறுகின்ற வரைபட மாதிரிகள் போன்ற பலவும் தனிமனித காட்சிக் கலைகள் ஆகும்.

குழுக் காட்சிக்கலைகளைவிட இந்தத் தனிமனிதக் காட்சிக்கலைகள் தற்போது உலகஅளவில் பதிவு பெறத்தக்கனவாக, ஒருவரின் உரிமைக்கு உரியனவாக பதிப்புரிமை செய்யப் பெறுகின்றன. உலக அளவில் இதற்கான சட்டம் வரையப் பெற்றுள்ளது. ஊடிலசபைவ சுநபளைவசயவடி கடிச றடிசமள டிக வாந ஏளைரயட _சவ என்ற சட்டம் தற்போது உலக அளவில் ஏற்படுத்தப் பெற்றுள்ளது. 1989க்குப் பின் இந்தச் சட்டம் அனைத்து நிலைகளிலும் ஒரு காப்புறுதியை ஏற்படுத்தித் தந்துள்ளது. இதற்குப்பின் படைக்கப் பெற்ற அனைத்தும் இந்தக் காப்புறுதிச் சட்டத்திற்கு உரியவை ஆகின்றன. இதன்படி ஒருவருக்குச் சொந்தமான கலைப்படைப்பு, மிகப் பெரிய அளவில் ஒரு வெளியீடாக வெளிப்படுத்தப்படுகிற நிலையில் காப்புறுதியை உறுதி செய்து அந்தப் படைப்பாளருக்கு உரிய பங்குத் தொகை அளிக்கப்படவேண்டும்.

சிலப்பதிகாரமும் காட்சிக்கலையும்
சிலப்பதிகாரத்தில் சுட்டப்படும் அனைத்துக் கலைப் பொருட்களும் காட்சிக்கலை சார்ந்தவை என்பது தற்போது புரியவரும். சிலப்பதிகாரம் என்ற பெயரே காட்சி கலை சார்ந்துதான் வைக்கப் பெற்றுள்ளது. சிலம்பு என்ற அணியின் கலைவடிவம், அதன் உள்ளிடு பொருள் ஆகியன ஒவ்வொரு பகுதிக்கும் ஒவ்வொரு நிலையில் அமைக்கப் பெற்றுள்ளது. சிலம்பின் காட்சி ஒற்றுமை ஒரே தன்மையதாக இருந்தாலும் உள்ளிடு பொருளின் வேறுபாடுதான் சிலம்பின் வேறுபாடு, காட்சி நுணுக்கமாக அமைந்து விடுகின்றது.

“நற்றிரம் படராக் கொற்கை வேந்தே
என்கால் பொற்சிலம்பு மணியுடை அரியே எனத்
தேமொழி உரைத்தது செவ்வை நன்மொழி
யாமுடைச் சிலம்பு முத்துடை அரியே
தருகென தந்து தான் முன் வைப்ப
கண்ணகி அணி மணிக் கால்ச்சிலம்பு உடைப்ப
மன்னவன் வாய் முதல் தெரித்தது மணியே மணி கண்டு
தாழ்ந்த குடையன்”
(வழக்குரை காதை 6673)

என்ற பகுதியில் சிலம்பின் அடையாளங்கள் அக்காலத்திலேயே ஒரு வரையறைக்கு உட்பட்டுச் செய்யப் பெற்றுள்ளன என்பதை உணர முடிகின்றனது. கண்ணகியின் கால் சிலம்பு மாணிக்கப் பரல்களை உடையது. பாண்டிய மன்னனின் சிலம்பு கொற்கை முத்துக்களை உடையது.

கண்ணகி பாண்டிய அரசனின் சிலம்பைப் பார்த்தவள் இல்லை. இருப்பினும் பாண்டிய அரசர்களின் அணிகலன் முறைகளை அறிந்து கொண்டவளாக இருக்கிறாள். கொல்லனால் கண்டறியப்படாத நுணுக்கமான அணி வேறுபாடு வணிக மரபினர்க்குத் தெரிந்திருக்கிறது. ஏனெனில் இவர்கள் உலகம் சார்ந்த வணிகத்தைச் செய்தவர்கள். அந்தஅந்தக் கலாச்சாரத்தின் மண்ணின் வாசனையை அறிந்தவர்கள்.

காட்சிக் கலைக்குச் சிலம்புகளே அடிப்படையாக விளங்குகின்றன. கண்ணகி உடைத்தது எந்த சிலம்பு என்பதில் வேறுபாடு இருக்கலாமே தவிர இந்தக் காட்சிப் பிழைகளில் தவறு உள்ளது என்பதில் வேறுபாடு அறிஞர்களிடத்தில் இல்லை.

மாதவி எழுதிய அகமடல்கள் உருவாக்கப் பட்ட முறைமையும் தனித்துவமானது.

முதல்மடல் மலர்களின் கூட்டுச்சேர்க்கையால் உருவானது. கொண்டு சென்றவள் மாதவியின் தோழியான வயந்தமாலை. அம்மடல் தாழம்பூவின் மடலில், சுற்றிலும் பல்வகைப் பூக்கள் பொருத்தப்பட்டு, செம்பஞ்சுக் குழம்பு மையாகவும், பித்திகையின் மொட்டு எழுத்தாணியாகவும் கொண்டு எழுதப் பெற்றுள்ளது.
“மாதவியோலை மலர்க்கையின் நீட்ட
உடன் உறை காலத் துரைந்த நெய்வாசம்
குறுநெறிக் கூந்தல் மண்பொறி உணரத்திக்
காட்டியது ஆதலின் கைவிடல் ஈயான்”
(புறஞ்சேரி இறுத்த காதை, 8184)

மாதவி தனிப்பட எழுதிய அவளின் சொந்தத் தயாரிப்பு இந்த மடல். இந்தச் சொந்தத் தயாரிப்பில் முக்கிய இடம் வகிப்பன மண் முத்திரையும், தலைமுடியும். இவை இரண்டும் மாதவியின் நினைவினை, அவளின் வாத்தினைக் கோவலனுக்கு உணர்த்தின. ஆனால் இவற்றைப் பிரித்த கோவலன் இவற்றை விடுத்தே தன் பெற்றோருக்கு இந்தக் கடிதத்தை அனுப்பியிருக்க வேண்டும். காட்சிக் கலைக்குரிய கலைச் சின்னங்களாக மண்பொறியும், மாதவியின் தலைமுடியும் விளங்கியிருக்கின்றன. அவற்றைத் தனக்கானதாக எடுத்துக் கொண்ட கோவலன் மடலின் செய்தியைத் தன் பெற்றோருக்கு அளித்து விடுகிறான்.

மிக்க நுணுக்கமான இடங்களில் நுணுக்கமான செய்தி வேறுபாடுகளைப் படைத்துக் காட்டுவதில் காட்சி நிலைக் கவிஞராக இளங்கோவடிகள் விளங்குகின்றார்.

இவரின் முன்று காண்டங்களிலும் காட்சிக் கலை நிகழ்வுகள் எடுத்துரைக்கப் பெற்றுச் சிறப்பிக்கப்பெறுகின்றன. புகார் காண்டத்தில் இடம்பெறும் நாடுகாண் காதை, மதுரைக் காண்டத்தில் இடம்பெறும் காடு காண் காதை, ஊர்காண் காதை, வஞ்சிக் காண்டத்தில் இடம்பெறும் காட்சிக் காதை போன்றன காட்சிக்கலை சார்ந்தன. இவற்றின் பெயர் அமைப்பிலேயே காட்சிகள் இருப்பது தெளிவு.

நாடுகாண் காதையில் கவுந்தியடிகளின் காட்சி முதன்மை பெறுகிறது. காடுகாண் காதை, ஊர்காண் காதையில் கோவலனின் காட்சி முதன்மை பெறுகிறது. காட்சிக்காதையில் மலைமக்களின் காட்சி முதன்மைப் படுத்தப்படுகிறது. இவர்களின் கண்களின் வழியாக இளங்கோவடிகள் காட்சிகளைக் காப்பியத்தில் நிகழ்த்துகிறார்.

நாடுகாண் காதை காட்சிக் கலைத்திறன்
கோவலனும் கண்ணகியும் நாட்டினை விட்டுப் புறப்பட எண்ணுகின்றனர். இந்தத் துயரமான சூழ்நிலையில் இந்தக் கதை மாந்தர்களின் சித்திரப்பு மிகச் சிறந்த அவலக் காட்சியாக காப்பியத்தில் விரிகின்றது.

” வான்கண் விழியா வைகறை யாமத்து
மீன் திகழ் விசும்பின் வெண்மதி நீங்க
காரிருள் நின்ற கடைநாள் கங்குல்
ஊழ்வினை கடைஇ உள்ளம் துறப்ப
ஏழகத்தகரும் எகினக் கவரியும்
தூமயிர் அன்னமும் துணைஎனத்திரியும்
தாளொடு குயின்ற தகைசால் சிறப்பின்
நீணொடு வாயில நெடுங்கடை கழிந்தாங்கு
அணிகிளர் அரவம் அறிதுயில் அமர்ந்த
மணிவண்ணன் கோட்டம் வலசெயாக கழிந்து ”
(நாடுகாண் காதை, 110)
கோவலன் புறப்படுகிறான். கதை செய்யும் படைப்பாளனுக்கு அவன் இனி திரும்பப்போவதில் என்பது தெரிந்துவிட்டது. அவன்மேல் படைப்பாளர் இரக்கம் கொள்கிறார்.

வெண்மதி நீங்க, கடைநாள் போன்றன கோவலன் திரும்பான் என்பதற்கான குறிச்சொற்கள். மேலும் ஆடு, கவரிமான், அன்னம் என்ற முன்றும் செல்லப்போகின்ற முவரின் குறியீடுகள். ஆடாகக் கோவலனை,கவரிமானாக கவுந்தி (கவரி)யை, அன்னமாகக் கண்ணகியை நினைந்து காணலாம்.

ஊரை விட்டுப்போகிறவர்கள் காலைப் பொழுதில் கிளம்புகிறார்கள். ஊரில் சொல்லிச் செல்ல இயலாது. அதனால் கோயில்களுக்குப் போவார்போல கைகளில் அதிக சுமையின்றிச் செல்கின்றனர். இருக்கின்ற ஒரே பொருள் இணையான சிலம்புகள். அவை கண்ணகியின் கால்களில் பாதுகாப்புடன் இருக்கின்றன. வேறெதும் கொண்டுபோக இயலாத சூழலில் திருமால் கோயில், புத்த விகாரம், சமணர் கோயில் அனைத்தும் தொழுது செல்லும் இந்த ஆதரவற்ற நிலையை வருத்தத்துடன் படைப்பாளர் படைக்கின்றார்.

வீட்டைவிடடுவிட்டுச் செல்கிறவர்கள் படும் பாட்டை “நீணொடு வாயில் நெடுங்கடை கழிந்தாங்கு” என்ற அடிகள் உணர்த்துகின்றன. கோவலனின் வீடு பெரிய நிலைக்கதவுகளை உடையதாம். அதற்கேற்ற நிலையில் அதற்குத் தாழ் உண்டு. இந்தக் கதவினைச் சாத்திக் கொள்ளவும், தாழ் போட்டுக் கொள்ளவும் கூட யாருமில்லாத மாளிகை அந்த மாளிகை.

துணைக்கு கவுந்தியும் பயணப்படுகிறார். மதுரையில் உள்ள சமணப் பள்ளிகளைக் கண்டு தரிசிக்க இவர்களுடன் வருகிறார். அவர் வழிநடையில் ஏற்படும் துயரங்களை, அவற்றை எவ்வாறு எதிர்கொள்ளுவது என்ற சூழலில் அவர்கள் நடக்கின்றனர்.

அப்போது நாட்டில் நடைபெறும் பல்வகை ஒலிகளைக் கொண்டு நாட்டின் நிலைப்பாட்டை இளங்கோவடிகள் எடுத்துரைக்கிறார்.

கம்புள் கோழியும், கனைகுரல் நாரையும்
உள்ளும் ஊரலும் புள்ளும் புதாவும்
வெல்போர் வேந்தர் முனையிடம் போலப்
பல்வேறு குழுஉக் குரல் பரந்த ஓதையும்
( நாடுகாண் காதை 116119)
என்பன பறவைகள் எழுப்பிய ஓசைகள். இதுதவிர எருமைகளின் செயல்பாடுகள், பயிர்த்தொழில் செய்பவரின் செயல்பாடுகள் எனக் காட்சிகள் ஒன்றன்பின் ஒன்றாக இவர்களைத் தொடர்ந்து வந்து கொண்டே இருக்கிறது.

காட்சிப்பிழையாகத் தோன்றும் காட்சி ஒன்றும் இங்கு இடம் பெறுகிறது. வம்பப்பரத்தை, வருமொழியாளன் என்ற இரு பாத்திரங்கள் காட்சிப்பிழைக்கு உள்ளாகின்றன. இவர்கள் கவுந்தியடிகளிடம் “யார் இவர்கள்” என்று கோவலன், கண்ணகியைக் கேட்க அவரோ “மக்கள் காணீர்” என்று உரைக்கின்றார்.

உடன் வயின்றோர்கள் ஒருங்குடன் வாழ்க்கை கடவதும் உண்டோ என்ற சந்தேகம் கேள்வி கேட்டவர்களுக்கு வருகின்றது. கண்ணகியும் கோவலனும் உடன்பிறப்புகள் என்ற நிலையைத் தாண்டி அன்பொழுக நடந்து கொண்டுள்ளனர் என்பதை இந்தக் காட்சிப்பிழை எடுத்துரைக்கின்றது. இதனைக் கேட்ட கண்ணகி உள்ளம் நடுங்க கேள்வி கேட்டவர்கள் முதுநரிகளாக மாறும் சாபக்காட்சி அங்கு அரங்கேறுகிறது.

காடுகாண் காதை காட்சிக் கலைத்திறன்
பூம்புகார் விட்டு திருச்சியை நோக்கி இவர்கள் பயணிக்கிறார்கள். காவிரியின் போக்கிலேயே இவர்கள் நடந்து வருவதால் யாரிடமும் செல்லும் இடம் பற்றி விசாரிக்க வேண்டி வரவில்லை. இவர்கள் முவரும் திருவரங்கம் அடைந்துப் பின் உறையூர் வருகின்றனர்.

உறையூரைத் தாண்டி வரும்போது மாங்காட்டு மறையவன் எதிர்ப்படுகிறான். இவனிடம் மதுரை செல்லும் வழி யாது என்று வினவுகின்றபோது இவன் இவர்களின் வருகைக்காக இரங்குகிறான். வேனில் காலத்தில் காரிகையை அழைத்துவருவது குறித்துக் கவலைப்படுகிறான். அப்போதுதான் பாலை என்ற நிலத்தின் இயல்பு தமிழுலகிற்கு காட்சிப்படுத்தப்படுகிறது.

“முல்லையும் குறிஞ்சியும் முறைமையின் திரிந்து
நல்லியல்பிழந்து நடுங்குதுயர் உறுத்துப்
பாலை என்பதோர் படிமம் கொள்ளும்”
(காடுகாண்காதை 6466)

படிமம் என்ற காட்சி சார்பான உத்திமுறை தமிழுக்கு அறிமுகமான இடமும் இதுவே. இரங்கிப் பேசிய இவன் முன்று வழிகளைச் சுட்டுகிறான்.

முதலாவதாக இவன் அடையாளம் காட்டுவது கொடும்பாளுர், நெடுங்குளம் என்ற இரண்டு இடமாகும். இந்த இடத்திற்குச் சென்ற பிறகு மதுரை முன்று நிலையில் செல்லலாம் என்பது இவனது கருத்து.

“கொடும்பை நெடுங்குளக் கோட்டகம் புக்கால்
பிறைமுடிக் கண்ணிப் பெரியோன் ஏந்திய
அறைவாய்ச் சூலத் தருநெறி கவர்க்கும்”
(காடு காண் காதை, 71- 73)
என்ற இவ்வடிகளில் சூலம் போன்று முவழிகள் தோன்றும் என்று மாங்காட்டு மறையவன் கூறுகின்றார்.

முவழிகளில் முதல்வழி வலப்புற வழியாகும். இது சிறுமலை வழியாக மதுரைக்குப் போகும் பாதை. இரண்டாவது அழகர் மலை என்ற திருமாலிருஞ்சோலை வழியாக இடப்புறமாக மதுரைக்குச் செல்லும் வழி. இவை இரண்டிற்கும் இடையில் காடுகள் சூழந்த இடைவழி ஒன்றுண்டு. இதில் செல்வதும் நல்லதே. இதில் சென்றால் ஒரு அணங்கை எதிர் கொள்ளவேண்டும் என்று பல செய்திகளை மாங்காட்டு மறையவன் எடுத்துரைக்கிறான்.

வலப்புற வழியின் காட்சித்தன்மை
இவ்வழியில் ஓமை, வெண்கடம்பு, முங்கில் போன்ற நீரற்றுச் சுருங்கிக்கிடக்கும். நீர் இல்லாத காடு, எயினர் குடியிருப்பு முதலானவற்றை இவ்வழியில் காண இயலும். அடுத்துச் சிறுமலை தோன்றும். இம்மலைப் பழங்கள் அன்றும்,இன்றும் சிறப்பிற்குரிய பழங்களாகும்.

“வாழையும்,கமுகும், தாழ்குலைத் தெங்கும்
மாவும் பலாவும் சூழடுத்து ஓங்கிய
தென்னவன் சிறுமலை”
(காடுகாண்காதை 8385)
என்ற இக்காட்சி இன்னமும் மெய்யாக உள்ளது. சிலப்பதிகார எச்ச மிச்சங்கள் அழிந்த இந்த காலச் சூழலில் அவர் காட்டிய இயற்கைக்காட்சிகள் இன்னம் மிச்சம் இருப்பது ஆறுதல் அளிக்கிறது. சிறுமலையின் வலப்புறமாகச் சென்றால் மதுரையை அடையலாம் என்ற இந்தக் குறிப்பு வரைபடக் காட்சிகலைக்குச் சான்று.

இடப்புற வழியின் காட்சித்தன்மை
இடப்புறவழி திருமாலிருஞ்சோலை வழியாகும். இவ்வழி மருத நிலம் சார்ந்த பல பகுதிகளை உடையது. இவ்வழியில் செல்லும்போது புண்ணிய சரவணம், பவகாரணி, இட்டசித்தி என்னும் முன்று பொய்கைகள் காணப்பெறும். இவை ஒவ்வொன்றில் முழ்கினால் ஒவ்வொரு பலன் கிட்டும். பின் சிலம்பாறு தோன்றும். இந்த ஆற்றைத் தொடர்ந்தால் இயக்கமாது தோன்றுவாள். அவளின் வினாக்களுக்கு பதில் இறுத்துப் பின் திருமாலிருஞ்சோலை அடையலாம். எட்டெழுத்து மந்திரத்தை உச்சரித்து திருமாலிடம் அடைக்கலம் பெறலாம் என்று இந்த வழி பற்றிய செய்திகள் அறிவிக்கப் பெறுகின்றன.

இவற்றில் முன்று குளங்கள் பெயரில் கூட இன்று இல்லை. சிலம்பாறு என்ற பெயர் அழகர்கோயில் தீர்த்தங்களில் ஒன்றாகக் குறிக்கப்படுகிறது. தற்காலத்தில் அழைக்கப் பெறும் நூபுர கங்கை என்ற தீர்த்தம் சிலம்பாறு என்று அழைக்கப்படுகிறது.

இவ்வாறு இவ்வழி இளங்கோவடிகள் சொன்ன இயற்கைக் காட்சிகள் பொருந்திய நிலையில் உள்ளது.

இடைவழி
குறிக்கத்தக்க எவ்வித அடையாளங்களும் இல்லாத காட்டுவழியாக இது அமைகின்றது. இவ்வழியில் கானுறை தெய்வம் ஒன்று எதிர்ப்படும் என்று இவ்வந்தணன் குறிப்பிடுகிறான். இவ்வழியிலேயே செல்ல முவரும் ஒருப்படுகின்றனர்.

இக்கானுறை தெய்வம் வழியிடையீடு செய்துக் கோவலனை வெருட்டியபோதும் அவன் கொற்றவை வழிபாட்டின் துணையால் அத்தெய்வத்தை எதிர்கொண்டு வெற்றி பெறுகிறான்.பின்னர் இவர்கள் ஒரு காளி கோயிலின் பக்கத்தில் இளைப்பாறுகின்றனர்.
இவளோ கொங்கச் செல்வி குடமலையாட்டி
தென்தமிழ்ப்பாவை, செய்தவக் கொழுந்து
ஒருமாமணியாய் உலகிற்கு ஓங்கிய திருமாமணி
(வேட்டுவ வரி 4749)
என்ற இந்தப் புகழ்மொழிகளைச் சாலினி உரைக்கின்றாள். இதில் மணி என்ற சொல் பின்னால் நிகழ உள்ள சிலம்பின் மணிகள் பற்றிய குறிப்பு என்பது நினைவில் கொள்ளவேண்டும். குறிப்பாக இங்குக் கண்ணகியை மட்டும் வாழ்த்துவதால் அது உலகிலிருந்து எழக்கூடிய திருமாமணி என்பதால் மற்ற இருவரும் இறப்பை நாடப் போகின்றனர் என்பதும் அவர்களை இத்தெய்வம் ஏறிய பாரட்டவில்லை என்பதும் எண்ணிப் பார்க்கத்தக்கது.

ஊர்காண்காதை
காடு, நகரம், நாடு, உலகம் என்று தன் காட்சிக்கண்களை விரித்துக் கொண்டே போகின்றார் இளங்கோவடிகள். நாட்டையும், காட்டையும் காட்டியவர் இப்போது ஊராக மதுரை மாநகரத்தைக் காட்ட ஊர்காண் காதையைச் செய்கிறார்.

இதில் கோவலன் கண்களில் புகுந்து மதுரைக் காட்சிகளைப் பதியவைக்கிறார். மதுரை மாநகர கோட்டைக்குள் நுழைந்து வணிக வீதிகளைப் பார்வையிடுகிறான் கோவலன்.

கடிமதில் வாயில் காவலில் சிறந்த
அடல்வாள் யவனர்க்கு அயிராது புக்காங்கு
ஆயிரம் கண்ணோன் அருங்கலச் செப்பு
வாய்திறந்து அன்ன மதில்
( ஊர்காண்காதை, 6668 )
என்ற இந்த அடிகளில் மதுரை மாநகரின் காப்புகை மிக்க கடிமதில் எடுத்துக்காட்டப் பெறுகின்றது. அருங்கலச் செப்பு என்ற இந்தச் சொல்லாக்கம் அருமையான அணிகலன்களை வைக்கும் பாதுகாப்பு அறை என்ற பொருளில் கையாளப் பெற்றுள்ளது. கலை வண்ணம் காட்சி வண்ணம் சிறந்த இந்தத் தொடர் பின்னாளில் நூல் பெயராக வளர்ந்தது என்பதும் இளங்கோவிற்குப் பெருமை அளிக்கத்தக்க கூறாகவே உள்ளது.

இதன்பின் மகளிர் விளையாட்டு, பருவ வருணனை போன்ற காப்பியப் பண்புகளுக்கு இளங்கோவடிகள் இடம் தருகின்றார். மதுரை நகரின் பருவ வருணனை இங்கு இடம் பெற்றுச் சிறக்கிறது. இதில் காட்டப் பெறும் வருணனைகளும் காட்சித் திறம் சார்ந்தவை என்றாலும் கட்டுரையின் விரிவஞ்சி இவை சுட்டுதலாக மட்டும் அமைகின்றன.

இதன்பின் அரசர், செல்வர் பயிலும் காமக்கிழத்தியர் பகுதிகளுக்குச் சென்றான் கோவலன். தொடர்ந்து எண்ணெண் கலைஞர்கள் வீதி, அங்காடி வீதி, நவரத்தின வீதி, பொன்மிகு கடைவீதி, துணிக்கடைவீதி, கூல வணிக வீதி முதலான பல வீதிகளைப் பார்வையிடுகிறான்.

எண்ணெண் கலைஞர்கள் என்று குறிப்பிடப்படுவோர் ஆயகலைகள் அறுபத்துநான்கினையும் கற்றுத் தேர்ந்த கூத்தியர்கள் வாழும் பகுதியாகும். முடியரசு ஒடுங்கும் கடிமண வாழ்க்கை என்று இளங்கோவால் குறிக்கப்படுகிறது. கூத்தியர் வீட்டுக்கு வந்திருப்பவர் யார் என்று யாராலும் அறியப்பட முடியா அளவிற்குக் காப்பு மிகுந்த நிலையில் இக்கலைஞர்கள் வீடுகள் அமைக்கப் பெற்றிருந்தன.

சிலப்பதிகார காலத்தில் பல வகைகள் சார்ந்த தங்கம் இருந்துள்ளது. “சாதருபம், கிளிச்சிறை, ஆடகம், சாம்பூநதம் ” என்ற நான்குவகையின அவற்றில் குறிக்கத்தக்கனவாகும்.

அதுபோல் துணியில் கலைநயம் மிக்க படைப்புகள் அக்காலத்தில் இருந்துள்ளன. “நூலினும், மயிரினும், நுழைநூல் பட்டினும் பால்வகை தெரியாது பன்னூறு அடுக்கத்து நறுமடி சிறந்த அறுவை வீதி” என்று துணிக்கடை வீதியின் சிறப்பு குறிக்கப்படுகிறது. நூல், மயிரிழை, பட்டு முதலானவற்றில் இழையடுக்கு தெரியாத வண்ணம் துணிகள் நெய்யப்பட்டு அக்காலத்தில் இருந்துள்ளன. இவை வகை தெரியாமல் பல நூறாக அடுக்கி வைக்கப்பட்டிருந்த துணி வீதியைக் கோவலன் கண்டான்.

இவ்வாறு கடைகள், கலைகள் பற்றிய காட்சி வருணனை காட்சியியலின் பாற்பட்டதே ஆகும்.

காட்சிக் காதையும் காட்சிச்சிறப்பும்
காட்சிக்காதையில் முக்கியத்துவம் பெறுவது கண்ணகி வானுலகு சென்ற காட்சியேயாகும். மலைவளம் காணச் சென்ற செங்குட்டுவன் மலைவாழ் குறவர் இனமக்கள் தாங்கள் கண்டதாகக் கூறிய காட்சிகளைக் கேட்டறிகிறான்.

“ஏழ்பிறப்படியேம் வாழ்க நின் கொற்றம்
கான வேங்கைக் கீழோர் காரிகை
தான்முலை இழந்து தனித்துயர் எய்தி
வானவர் போற்ற மன்னொடும் கூடி
வானகம் போற்ற வானகம் பெற்றனள்
எந்நாட்டவர்கொல்? யார்மகள் கொல்லோ?
நின்னாட்டு யாங்கள் நினைப்பினும் அறியேம்
பன்னூறு ஆயிரத் தாண்டு வாழியர் என
மண்களி நெடுவேல் மன்னவன் கண்டு
கண்களி மயக்கத்துக் காதலோடிருந்த”
( காட்சிக்காதை, 5865)
என்பது குறவர்கள் கண்ட காட்சிச் செய்தியாகும். இச்செய்தியில் மார்பகம் இழந்து, தனித்துயர் எய்திய பெண் ஒருத்தி வானகம் புக்கதை அவர்கள் கண்டுள்ளனர். இந்தக் காட்சி புதுமை செறிந்தது. இக்காட்சியின் வியப்பே கண்ணகிக்குக் கோயில் காணச் செய்த விதையாகும்.

பின்பு சாத்தனார் ” கொற்ற வேந்தன் கொடுங்கோல் தன்மை இற்றெனக் காட்டி இறைக்குரைப்பனள் போல் தன்னாட்டாங்கண் தனிமையில் செல்லாள் நின்னாட்டு அகவையின் அடைந்தனள் நங்கை” என்று துயருற்ற கண்ணகி அவள் நாட்டிற்குத் திரும்பிச் செல்லாது உன்நாட்டிற்கு வந்துள்ளாள் என்று இக்காட்சியின் நிகழ்வுகளைக் காரணகாரியத்துடன் கூறி முடிக்கிறார்.

இதுகேட்ட மன்னன் அரசவாழ்வின் நிலையாத்தன்மையை வெளிப்படுத்துகிறான். “மன்பதை காக்கும் நன்குடிப்பிறத்தல் துன்பமல்லது தொழுதகவில்லென” உணருகிறான். அல்லது இளங்கோவடிகள் உணர்த்துகிறார். இதன் தொடர்வாக சேரமாதேவியிடம் “உயிருடன் சென்ற ஒருமகள் தன்னினும், செயிருடன் வந்த இச்சேயிழை தன்னினும் நன்னுதல் வியக்கும் நலத்தோர் யார்?’ எனச் சேரன் வினவுகின்றான்.

சேரமாதேவி “காதலன் துன்பம் காணாது கழிந்த மாதரோ பெருந்திரு வுறுக வானகத்து அத்திறம் நிற்கநம் அகனாடு அடைந்தஇப் பத்தினித் தெய்வத்தைப பரசல் வேண்டுமென” தன் விருப்பத்தை எடுத்துரைக்கிறாள்.

இந்தக் காட்சியே இமயம்வரை சென்று சேரனை வெற்றி பெற வைக்கின்றது. கண்ணகியை இறைவியாகக் காண்கின்றது. உலகம் போற்ற உயர்த்துகின்றது. “எம்நாட்டு ஆங்கண் இமயவரம்பனின் நன்னாள் செய்த நாளணி வேள்வியில் வந்தீக ” என்று மன்னர்கள் இறைஞ்ச “தந்தேன் வரமென்று ” கண்ணகி தெய்வவாக்கு அருளுகிறாள்.

இவ்வகையில் காட்சிக்கலையின் சிறப்பு தொட்ட தொட்ட இடங்களில் எல்லாம் துலங்குவதாகச் சிலப்பதிகாரம் படைக்கப் பெற்றுள்ளது.

முடிவுகள்

1. காட்சிக்கலை என்பது நுண்ணிய படைப்பாற்றல் கலை சார்ந்தது.தற்போது இக்கலை ஆவணப்படுத்தப் பெற்று பதிப்புரிமையை உலக அளவில் பெற்று உயர்ந்துள்ளது.

2. இவ்வாறு இக்கலை வளர்வதற்கு பன்னூறு ஆண்டுகளுக்கு முன்னதாகவே காட்சிக்கலையைச் சிலப்பதிகார ஆசான் இளங்கோவடிகள் நேர்த்தியுடன் படைத்துள்ளார்.

3. சிலப்பதிகாரம் என்பதே அழகாகச் செய்யப் பெற்ற இரு இணைச் சிலம்புகளின் குழப்பத்தால் ஏற்பட்டது. உள்ளிருக்கும் பொருளை நுண்ணிதின் வேறுபடுத்தி கலைப் பொருள்களின் காட்சி வடிவு மிகப் பெரும் சாட்சியாக ஏற்கப்பட்டிருக்கிறது.

4. மாதவியின் மடல்கள் காட்சி வடிவம் சார்ந்தவை. அவற்றில் தனித்த மாதவிகோவலன் இருவருக்கான காட்சிப் பொருள்கள் இருந்துள்ளன. இவை அடையாளக் குறிகள் ஆகும்.

5. இளங்கோவடிகள் காட்சியளவையை ஊர், காடு, நாடு, உலகு என்று வளர்த்தெடுத்துள்ளார்.இவற்றிற்கு ஊர்காண்காதை, காடுகாண் காதை, நாடுகாண்காதை, காட்சிக் காதை போன்ற சான்றுகளாகும்.

6. நாடுகாண் காதை வருத்தக்காட்சியாக புனையப் பெற்றுள்ளது. கோவலன், கண்ணகி, கவுந்தி முவரும் புகார் திரும்பப்போவதில்லை என்ற சோகம் இளங்கோவடிகளால் உணரப்பெற்றிருக்கிறது. ஆனால் பாத்திரங்கள் உணர்ந்து கொள்ளாமல் விதிப்படி தன் பயணத்தைத் தொடருகின்றனர். வருத்தத்தோடு தன் காட்சிகளை எடுத்துக் கொண்டு இளங்கோவடிகளும் பின்செல்லுகின்றார்.

7. காடுகாண் காதையில் முவகை வழிகள் விளக்கப்படுகின்றன. அவற்றில் சுட்டப்படுகின்றன இயற்கை இன்னமும் அழியாமல் இருப்பது கோவலன் உள்ளிட்ட முவர் நடந்த பாதைக்குக் காட்சியாக உள்ளது.

8. ஊர்காண்காதையில் மதுரை என்ற ஊரின் கலைவடிவக் காட்சிகள் விளக்கப்படுகின்றன. கடைவீதி வருணனை காட்சியியலின் முன்னுரையாகின்றது.

9. காட்சிக்காதையில் குறவர்கள் கண்ட காட்சி கண்ணகியை உயர்த்துகிறது. இமயத்தை எட்டுகிறது. இலங்கைக்குச் செல்ல உறுதியாகின்றது.

10. காட்சிகளின் வல்லமை நுணுக்கமாகப் பற்பல இடங்களில் சிலப்பதிகாரத்தில் கையாளப் பெற்றுள்ள போக்கு சிலப்பதிகாரத்திற்கு மேலும் பெருமை சேர்ப்பதாக உள்ளது.

Friday, March 02, 2012

காரைக்குடி கம்பன் மணி மண்டபத்தில் குழந்தைக் கவிஞர் அழ. வள்ளியப்பா அவர்களின் நினைவுக் கூட்டமாக கம்பன் மாதக் கூட்டம்


3.3.2012 அன்று மாலை ஆறுமணியளவில் காரைக்குடி கம்பன் மணி மண்டபத்தில் குழந்தைக் கவிஞர் அழ. வள்ளியப்பா அவர்களின் நினைவுக் கூட்டமாக கம்பன் மாதக் கூட்டம் நடைபெறுகின்றது.

இதில் விருத்தாசலம் அரசு கல்லூரி விரிவுரையாளர் ப. வேலாயுத ராஜா அவர்கள் குழந்தைக் கம்பன் என்ற தலைப்பிலும், புதுக்கோட்டை புலவர் அரங்க நெடுமாறன் அவர்கள் இராமர் கதைத் தாலாட்டு என்ற தலைப்பிலும் உரையாற்ற உள்ளனர்.அனைவரும் வருக. அழைப்பிதழ் இணைக்கப் பெற்றுள்ளது.

Sunday, February 19, 2012

ஆய்வுச் சுற்றம் ஆய்விதழ் தொடக்கம்

ஆய்வாளர்களுக்கு ஒரு மகிழ்வான செய்தி

தமிழ் ஆய்வுகளுக்கு மதிப்பளிக்கவும், தமிழ் ஆய்வாளர்களைஒருங்கிணைக்கவும் ஆய்வுச் சுற்றம் என்ற வலைப்பூவிதழைத் தொடங்கியுள்ளோம்.

இதன் முகவரி http://aaivussuttram.blogspot.in/ என்பதாகும்.
அன்பர்கள் தங்களின் ஆய்வுக்கட்டுரைகளை இதற்கு அனுப்பி உதவினால் அவற்றை தர மதிப்பிட்டு வெளியிட உள்ளோம் என்பதை அன்புடன் தெரிவித்துக் கொள்கிறோம்.

மேலும் ஆய்வுச் செய்திகள் , அறிக்கைகள், அறிவிப்புகள் அளித்தாலும் அதையும் வெளியிட்டு உதவுவோம்
இவ்விதழுக்கு மேலாண் வல்லுநர்கள் நியமிக்க உள்ளோம் அதற்கு விருப்பம்தெரிவிப்பவர்கள் இவ்விதழின் மின்னஞ்சலில் தொடர்க

--

Tuesday, January 17, 2012

மதுரைக்காஞ்சி உணர்த்தும் அறச் சூழலும், அறங்களும்

சங்ககால இலக்கியமான பத்துப்பாட்டினுள் ஒன்றாக விளங்குவது மாங்குடி மருதனார் இயற்றிய மதுரைக்காஞ்சியாகும். இந்நூல் எழுநூற்று எண்பது அடிகளை உடைய நெடும்பாடலாகும். இப்பாடலில் சங்ககால அறங்கள் எடுத்துரைக்கப் பெறுகின்றன. அரசர், அந்தணர், வணிகர், வேளாளர் என்ற நால்வகை வருணத்தாருக்கு உரிய அறங்கள், சமண, பௌத்த மதத்தோருக்கான அறங்கள், அறத்தைக் காக்கும் குழுக்களின் செயல்பாடுகள். பெண்களுக்கு உரிய அறங்கள் ஆகியன தெளிவு பட எடுத்துரைக்கப் பெற்றுள்ளன. இக்கருத்துகளின் முலம் சங்ககால அறங்கள் பற்றிய தெளிவினைப் பெற முடிகின்றது.

மதுரைக் காஞ்சியின் காலம்
மதுரைக் காஞ்சியின் பாட்டுடைத் தலைவன் தலையாலங்கானத்துச் செறுவென்ற நெடுஞ்செழியன் ஆவான். "ஆரியப் படை கடந்த நெடுஞ்செழியன் அரியணையிலிருந்து வீழ்ந்து இறந்தபிறகு பாண்டிய நாட்டில் செல்வாக்குப் பெற்ற அரசன் இல்லை. நாட்டில் நல்லாட்சி இல்லாமையால் பாண்டிய நாடு வளம் குன்றி நலிவுற்றது. இந்நிலை ஏற்படுவதற்குச் சில ஆண்டுகள் பிடித்திருக்கும். அக்காலத்தில் பாண்டிய நாட்டை ஆண்டவர் யார் என்பது தெளிவாகத் தெரியவில்லை. பின்னர்த் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன் கூடல் நகரைக் கைப்பற்றி அரசனானான்'' என்று தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன் ஆட்சிக்கு வந்த காலச் சூழலை மயிலை சீனி. வேங்கடசாமி குறிப்பிடுவார். இக்கருத்தின்வழி பாண்டிய நாட்டில் ஒரு இடைவெளிக்குப் பிறகு இப்பாண்டிய மன்னன் ஆட்சிக்கு வந்துள்ளான் என்பது தெரியவருகின்றது.

ஆட்சிக்கு வந்த இவனும் மிக இளைய வயதினனாக இருந்துள்ளான். இதன் காரணமாக இவன் சான்றோர் சொற்களுக்கு முன்னுரிமை அளித்து அவ்வழி நடந்துள்ளான். மேலும் இவன் பாடிய பாடலாக கிடைக்கும் புறநானூற்று எழுத்தியிரண்டாம் பாடலில் இடம்பெறும் "ஓங்கிய சிறப்பின் உயர்ந்த கேள்வி மாங்குடி மருதன் தலைவன் ஆக உலகமொடு நிலைஇய பலர்புகழ்சிறப்பின் புலவர் பாடாது வரைக என் நிலவரை '' என்ற அடிகள் இவனின் சான்றோர் சொல் கேட்கும் முறைமையில் உள்ள விருப்பத்தை வெளியிடுவதாக உள்ளது.

பல சான்றோர்களின் அறிவுரைகளின்படி நடக்கும் குணம் உடையவனான இவனின் போர்விருப்பத்தை மாற்றி அறவிருப்பத்திற்கு ஆற்றுப்படுத்தும் போக்கில் இந்நூல் வரையப் பெற்றுள்ளது. இவன் ஏழுஅரசர்களைத் தலையாலங்கானத்தில் வென்றார். அதன்பின் வடபுல அரசர்கள், நெல்லூர் அரசர் போன்ற பலரை வென்று போர்த்தொழில் உடையவனாக விளங்கிய இவனின் விருப்பத்தை மடைமாற்றி அறத்தின் பக்கம் சாரச் செய்யும் நோக்கில் மதுரைக்காஞ்சி மாங்குடி மருதனாரால் பாடப் பெற்றுள்ளது.

இதன் காரணமாக மதுரைக்காஞ்சியின் தோற்றச் சூழல் அறத் தன்மை வாய்ந்தது என்பது தெளிவாகின்றது. இவ்வறச்சூழலில் படைக்கப் பெற்றுள்ள மதுரைக்காஞ்சி சங்கத் தமிழகத்தின் அன்றைய அற நிலையையும், அறம் பெருக வேண்டிய நிலையையும் எடுத்துரைக்கின்றது.

மதுரைக்காஞ்சியின் அடிப்படையில் அறம் என்னும் பொருள்
அறம் என்பதற்கு தருமம், புண்ணியம்,தகுதியானது, சமயம், ஞானம் எனப் பல பொருள்களைத் தருகின்றது தமிழ் லெக்ஸிகன். "மனத்துக்கண் மாசிலன் ஆதல், பிறன் பழிப்பது இல்லாயின் நன்று'' என்று அறத்திற்குப் பொருள்தருவார் திருவள்ளுவர்.

"தொல்லாணை நல்லாசிரியர்
புணர்கூட்டுண்ட புகழ்சால் சிறப்பின்....
வியப்பும் சால்பும் செம்மை சான்றோர்
பலர்வாய் புகர்அறு சிறப்பின் தோன்றி ''

என்று மதுரைக் காஞ்சி அறத்திற்கு இலக்கணம் வகுக்கின்றது. பழமையான மொழிகளை ஆணைகளாகத் தருகின்ற நல்லாசிரயர்கள் உரைக்கும் மெய்யறிவின் தெளிவு, வியப்பும் சால்பும் உடைய செம்மை மிக்க சான்றோர் பலரின் குற்றமற்ற வாய்மொழிகளும் அறம் எனப்படும் என்று மதுரைக் காஞ்சி தெளிவு படுத்துகின்றது.

மதுரைக் காஞ்சியின் அடிப்படையில் அறம் என்பதை மாறும் தன்மை உடையதாக அறியமுடிகின்றது. அறம் என்பது செம்மைத் தன்மை உடைய சான்றோர்கள் தன் வழித் தலைமுறைக்கு உரைக்கும் முறைமையது என்பதை உணரமுடிகின்றது. அறத்தின் தன்மை காலத்திற்குக் காலம் மாறக் கூடியது என்பதை இவ்வடிகளின் வழி உணர முடிகின்றது.

மதுரைக் காஞ்சியைப் படைத்த மாங்குடி மருதனார் உயர்ந்த கேள்வியை உடையவர் என்பதை இப்பாட்டுடைத்தலைவன் பதிவு செய்துள்ளான். இந்நிலையில் செம்மைத்திறம் வாய்ந்த மாங்குடி மருனாரின் வாய்மொழிகள் அறத்தின் தன்மையின என்பது தெளிவாகின்றது.

சமுகப் படிநிலை
மதுரைக்காஞ்சி சமுக படிநிலைகளைக் காட்டி அச்சமுக படிநிலைகளுக்கான அறங்களை உணர்த்திச் சென்றுள்ளது. மதுரைக்காஞ்சி காலத்தில் நான்கு வகைப்பட்ட சமுக படிநிலையைக் காண முடிகின்றது.

தொல்காப்பிய காலம் முதலாக அரசர், அந்தணர், வணிகர், வேளாளர் என்ற சமுதாயப் படிநிலை தமிழகத்தில் இருந்து வந்துள்ளது. இப்படிநிலையின் அமைப்புமுறையை மதுரைக்காஞ்சியின் படைப்பு முறையிலும் இடம்பெற்றுள்ளது. இருப்பினும் அரசர்க்கு முதலிடம் தந்து அதன்பின் அந்தணர்,வணிகர், வேளாளர் என்ற முறைமை இதனுள் காட்டப் பெற்றுள்ளது. இந்நால்வகை நிலையினரும் அவரவர்க்கான ஓழுக்கங்களில் தலை நிற்க வேண்டிய நிலையை மதுரைக்காஞ்சி காட்டுகின்றது.

அரசர்க்கான அறங்கள்
மதுரைக்காஞ்சியின் பாட்டுடைத்தலைவன் தலையாலம் கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன் ஆவான். இவனுக்கு நிலையாமை பற்றி இந்நூல் எடுத்துரைக்கின்றது. போர் வெற்றி போன்றன நிலையில்லாவை என எடுத்தரைத்து உலகில் என்றும் நிலைக்கும் அறத்தினைச் செய்ய இம்மன்னனை வற்புறுத்துவதாக இப்பாடல் பாடப் பெற்றுள்ளது. எனவே அரசர்க்குரிய பொது அறங்கள் இப்பாடலில் வகைப்படுத்தப் பெற்றுள்ளன.

அரசனுக்கு போர்வெற்றி மட்டும் போதாது, அரசன் அறம் தலை நிற்க வேண்டும் என்பதே இந்நூலின் முக்கிய நோக்கமாக விளங்குகின்றது.

"பணைகெழு பெருந்திறல் பல்வேல் மன்னர்
கரைபொருது இரங்கும் சுனைஇரு முந்நீர்
திரையிடு மணலினும் பலரே உரைசெல
மலர்தலை உலகம் ஆண்டு கழிந்தோரே!''

இவ்வடிகளில் போர்வெற்றி பெற்ற மன்னர் பலர் பிறந்து மண்ணாயினர் என்று காட்டப் பெற்றுள்ளது. போரில் வெற்றி பெற்று புகழ்பெற்ற மன்னர்கள் கடற்கரை மணலினும் பலர். அது உண்மையான புகழ் இல்லை என்பது இதன் முலம் அரசனுக்குத் தெரிவிக்கப் பெற்றுள்ளது.

"பரந்து தோன்றா வியன்நகரால்
பல்யாகசாலை முதுகுடுமியின்
நல்வேள்வித் துறைபோகிய

அரியதந்து குடிஅகற்றி
பெரியகற்று இசைவிளக்கி
முந்நீர் நாப்பண் ஞாயிறு போலவும்
பன்மீன் நடுவண் திங்கள் போலவும்
பூத்த சுற்றமொடு பொலிந்து இனிது விளங்கிப்
பொய்யா நல்லிசை நிறுத்த'' (778770)

என்ற அடிகள் அரசர்க்கான அறங்களை எடுத்துரைப்பனவாக உள்ளன.

அசரன் வேள்விகள் பல செய்யவேண்டும். சான்றோர் பலரின் நல்லக் கருத்துகளை ஏற்று அதன்படி நடக்கவேண்டும். குடிமக்களுக்குக் கிடைக்காத அரிய பொருள்களாயினும் அவற்றைத் தந்துக் காக்கவேண்டும். நிறைய கற்கவேண்டும். சுற்றத்தைக் காக்கவேண்டும். இவை அரசரக்குரிய அறங்களாக மதுரைக் காஞ்சியில் எடுத்துரைக்கப் பெறுகின்றன.

அந்தணர்க்குரிய அறங்கள்
சங்க காலத்தில் அந்தணர்கள் மதுரை மாநகரில் அவர்க்குரிய அறங்களுடன் வாழ்ந்துள்ளனர்.

சிறந்த வேதம் விளங்கப் பாடி
விழுச்சீர் எய்திய ஒழுக்கமொடு புணர்ந்து
நிலமமர் வையத்து ஒருதாம் ஆகி
உயர்நிலை உலகம் இவணின்று எய்தும்
அறநெறி பிழையா அன்புடை நெஞ்சின்
பெரியோர் மேஎய் இனிதின் உறையும்
குன்றுகுயின் அன்ன அந்தணர் பள்ளி (468 474)

அந்தணர்கள் வாழ்ந்த இடம் அந்தணர் பள்ளி என்று சங்ககாலத்தில் அழைக்கப்பெற்றுள்ளது. அந்தணர்கள் வேதம் ஓதவேண்டும். அந்தணர்க்கான ஒழுக்கங்களைப் பேணி வாழவேண்டும். அறநெறி பிறழாது வாழவேண்டும். அன்புடை நெஞ்சத்தோடு இருக்கவேண்டும். உயர்நிலையான வீட்டுலகினை இங்கிருந்தே அடைவதற்கான செயல்களை அவர்கள் செய்து ஒழுகவேண்டும்.

வணிகர்
பெருவணிகர், சிறு வணிகர் என்று பலபிரிவினர் மதுரைக்காஞ்சியில் காட்டப் பெறுகின்றனர். பெருவணிகர்கள் மலை, நிலம், நீர் படு பொருள்களை விற்பனை செய்தனர். அவர்களின் வீடுகள் பருந்துகள் வந்து தங்கும் அளவிற்கு வலிமையும், பெருமையும், உயரமும் கொண்டு விளங்கியிருந்தன. அவர்கள் "அறநெறி பிழையா ஆற்றின் ஒழுகி'' வாழ்ந்து வந்தனர்.

சிறுவணிகர் என்ற நிலையில் வீடுதோறும் சென்று பூ, பண்ணியம் முதலானவற்றை விற்ற பெண்களை மதுரைக்காஞ்சியில் காணமுடிகின்றது. இவர்கள்

"கைஇ மெல்லிதின் ஒதுங்கிக் கை எறிந்து
கல்லா மாந்தரொடு நகுவனர் திளைப்பப்
புடையமை பொலிந்த வகையமை செப்பில
காமர் உருவின் தாம் வேண்டு பண்ணியம்
கமழ்நறும் பூவோடு மனைமனை மறுக''

என்ற நிலையில் மெல்ல நடந்து கைதட்டி அழைத்து, கற்காத மக்களோடு கலந்து, ஒவ்வொரு வீடாகச் சென்று பொருள் விற்றுக் கொண்டிருந்தனர் என்று குறிப்பிடப்படுகிறது.

கல்லாத மாந்தருக்கு நல்ல பொருள் விற்கவேண்டிய அறத்தின் கூறுபாடு இவர்களிடம் காணப்படுகிறது.

இவை தவிர பூமாலைகள், பூக்கள் கொண்டு தயாரிக்கப்பெற்ற சுண்ணம், பாக்கு, வெற்றிலை, சுண்ணாம்பு போன்ற பல பொருள்களும் அங்கு விற்கப் பெற்றன. அப்போது போர்ப்படை ஒன்று அவ்வழியாக கடந்துபோக அஞ்சி தங்கள் கடைகளைச் சுருக்கிப் பின் விரித்து வைத்த நிலையை மதுரைக் காஞ்சி பாடுகின்றது.

வேளாளர்
வேளாளர் பற்றிய தனித்த செய்திகள் மதுரைக்காஞ்சியில் இடம்பெறவில்லை. ஆங்காங்கே சிற்சில இடங்களில் மட்டும் இவர்களுக்கான அறங்கள் எடுத்துக்காட்டப் பெற்றுள்ளன.

இருவகையான் இசைசான்ற
சிறுகுடி பெருந்தொழுவர்
குடிகழீஇய நால்நிலவரொடு
தொன்று மொழிந்து தொழில்கேட்ப
என்ற அடிகளின்வழி வேளாளர்க்கான அறங்கள் சுட்டப் பெற்றுள்ளன. இருவகையான் என்பதற்கு உழவும் வாணிகமும் என்று உரையெழுதுவோர் பொருள்கொள்ளுகின்றனர். சிறுகுடி என்பது உழவர்களையும், பெருந்தொழுவர் என்பது உழவால் விளைந்த பொருள்களை விற்பவராகவும் ஏற்கப் பெறுகின்றனர். இதன் காரணமாக உழவரும் வணிகரும் நால்வகை நிலத்தாருடன் உறவு கொண்டிருந்ததாக மதுரைக்காஞ்சி குறிப்பிடுகின்றது. தொன்று தொட்டு உழவுமுறைகளைச் சொல்லி தொழில் நடத்துதல் இவர்களின் அறமாக மதுரைக் காஞ்சி சுட்டுகின்றது.

படைஞர்
இம்மன்னன் படையெடுத்துச் செல்வதில் விருப்பம் கொண்டவன் என்பதால் மதுரைக்காஞ்சி படைஞர் பற்றிய பல செய்திகளைத் தருகின்றது. யானை, குதிரை,தேர், காலாள் ஆகிய நான்கு படைஞர்கள் இம்மன்னனுக்கு உதவியுள்ளன. படை கருதியும் தூது கருதியும் பிரியும் பிரிவு அனைத்துப் பிரிவினருக்கும் உண்டு என்பதால் மேற்கண்ட சமுதாயப் படிநிலைக்கு உட்பட்டோர் படைஞராகவும் விளங்கியுள்ளனர். இவர்களுக்கு உள்ள அறங்கள் பற்றியும் மதுரைக் காஞ்சி கருத்துரைக்கின்றது. "எழாத் தோள் '' இம்மறவர்களின் தோள்களாகும். அதாவது புறமுதுகிட்டு ஓடுவாரை விரட்டிச் சென்று அழிக்காத அறம் இவர்களுக்குரியது என்று மதுரைக்காஞ்சி குறிப்பிடுகின்றது.

செல்வர் செய்யும் அறம்
பொருள்நிலையில் ஏற்றம் பெற்று விளங்கும் செல்வர்களுக்கான அறத்தையும் மதுரைக் காஞ்சி எடுத்துரைக்கின்றது. அக்காலத்தில் செல்வர் பூத்தொழில் ஆடையை அணிந்து இருந்தனர். அவர்கள் பொன்னால் அமைந்த கைப்பிடியை உடைய உடைவாளைக் கொண்டிருந்தனர். தேர் அவர்களின் வாகனமாக இருந்தது. காற்றைப்போலக் குதிரைகளைச் செலுத்தி அவர்கள் செல்வர். தேர்த்தட்டில் அவர்களின் ஆடைகள் பரவி இருந்தன. இவர்கள் வீரக்கழலை அணிந்து இருந்தனர். " வான வண்கை வளம்கெழு செல்வர் நாள் மகிழ் இருக்கை காண்மார் '' என்று இவர்களின் அறம் பற்றி எடுத்துரைக்கின்றது மதுரைக்காஞ்சி. வானம் போல வரையாது வறியவர்க்கு வழங்குதல் என்பது செல்வர்களுக்கான அறமாகும்.

கலைஞர்களைக் காக்கும் அறம்
பாணர், பாடினியர், புலவர்,கூத்தர், கலைஞர்களின் சுற்றத்தார், இரவலர் போன்ற பலரும் சமுதாய அடுக்கில் தமக்கான பகுதியில் சங்க காலத்தில் வாழ்ந்து வந்துள்ளனர். இவர்களைக் காக்கும்படி தேர்களை யானைகளுடன் பொருளுடன் வழங்கிக் காக்கும் முறைமை மதுரைக் காஞ்சியில் சுட்டப் பெற்றுள்ளது. இவர்கள் அரசனுக்கு செவியறிவுறுக்கும் நிலையில் நன்மையானக் கருத்துகளை அவ்வப்போது மென்மையாக எடுத்துரைக்க வேண்டிய பொறுப்பில் இருந்துள்ளனர்.

பெண்களுக்கான அறங்கள்
பெண்களுக்கான பல அறங்களும் மதுரைக் காஞ்சியில் சுட்டப் பெற்றுள்ளன. செல்வ மகளிர், குலமகளிர், வரைவில் மகளிர், சூலுற்ற மகளிர், ஊடல் கொண்ட மகளிர் போன்ற பல பெண்களை இந்நூல் எடுத்துக்காட்டுகின்றது. சங்க காலப் பெண்கள் பற்றிய சமுக மதிப்பீட்டை இந்நூல் வழியே அறிந்து கொள்ள முடிகின்றது.

செல்வப் பெண்கள் தங்கள் செல்வ நிலைக்கு ஏற்ப திருவிழாக்களை மகிழ்வுடன் கண்டுள்ளனர். செல்வர்கள் திருவிழாக்களைத் தம் வாழ்க்கையாகக் கொண்டிருக்க அவற்றைக் காண்பதை செல்வப் பெண்களின் நிலையாகக் காட்டுகின்றது மதுரைக்காஞ்சி.

குலமகளிர் "நாணுக்கொள ஏழ்புணர் சிறப்பின் இன்தொடைச் சீறியாழ் தாழ்பெயல் கனைகுரல் கடுப்பப் பண்ணுப் பெயர்த்து வீழ் துணை தழீஇ'' என்ற நிலையில் குலமகளிருடன் அறத்துடன் நிற்க விழைகின்றது மதுரைக்காஞ்சி. நாணம் என்ற அணியுடன், யாழ் மீட்டி, இனிமையான குரலில் பாடி தன் துணையுடன் வாழ்கின்ற வாழ்க்கை அறவாழ்க்கை என்று இதற்குப் பொருள்கொள்ளலாம்.

வரைவு பெறாத மகளிர் வரைவில் மகளிர் எனப்படுகின்றனர். இவர்கள் செல்வர்களின் வளத்தை தம் பக்கத்தில் பறித்துக் கொள்ளும் இயல்பினர் ஆவர். இதன் காரணமாக இவர்களைக் கொண்டி மகளீர் என்று மதுரைக் காஞ்சி அழைக்கின்றனது. மணிமேகலையிலும் கொண்டி மகளீர் என்ற சொல் இம்மகளிருக்குப் பயன்படுத்தப் பெற்றுள்ளது.

சூல் பெற்ற மகளிர் தேவராட்டி என்ற கடவுளை வணங்கும் வழிபாட்டுப் பெண்ணுடன் கூடி தெய்வங்களுக்கு இனிமையான பொருட்களைப் படைப்பர். கணவன் உவப்ப புதல்வரைப் பெற்ற மகளிர் பால் ஊறும் தனங்களுடன் சுற்றத்தினருடன் குளத்தில் முழ்கி நீராடும் இயல்பினை உடையவர்களாக இருந்தனர்.

மேற்கண்ட குறிப்புகள் வழியாக பெண்கள் அறந்தலைப்பட்டவர்களாக இருந்துள்ளனர். அறத்தைச் செய்யும் பொருள்வளம் மிக்கவர்களாக ஆண்கள் இருக்க, அறத்தைப் பொருளற்ற வகையில் செயல் நிலையில் செய்யக் கூடியவர்களாகப் பெண்கள் விளங்கியுள்ளனர் என்பது தெரியவருகிறது.

சமுதாயத்தின் படிநிலையில் நிற்கும் மாந்தர்களின் அறத்தைப் பற்றி விவரித்த மதுரைக்காஞ்சி அறம் தவறாமல் இருக்க பல மன்றங்கள் இருந்தமையையும் சுட்டிச் செல்கின்றது.

அற மன்றங்கள்
அறத்தை நிறுத்தும் வல்லமை அரசனிடம் சங்ககாலத்தில் இருந்துள்ளது. அவனை அறம் தலைப்படுத்த புலவர் பாணர் முதலியோர் இருந்துள்ளனர். பொதுவான அறத்தை நிலைநிறுத்த அற மன்றங்களும், மத மன்றங்களும் சங்க காலத்தில் இருந்துள்ளன.

அறம் கூறு அவையம்
அச்சமும் அவலமும் ஆர்வமும் நீக்கிச்
செற்றமும் உவகையும் செய்யாது காத்து
ஞெமன்கோல் அன்ன செம்மைத்து ஆகிச்
சிறந்த கொள்கை அறங்கூறு அவையம்

என்ற பகுதி அறங்கூறு அவையத்தின் சிறப்பினைக் காட்டுவதாக உள்ளது. அறங்கூறு அவையத்தில் இருந்தோர் அச்சமில்லாதவர்களாக இருந்துள்ளனர். மற்றவர்களுக்கு அச்சத்தைத் தராதவர்களாகவும் இருந்துள்ளனர். மேலும் அவலம் மற்றவர்க்கு ஏற்பட்டிருப்பின் அதனை அவலத்துடன் நோக்காது சம நிலையில் நோக்கும் குணம் அவர்களிடத்தில் இருந்துள்ளது. சினம்,உவகை காட்டாது அவர்கள் நீதி வழங்கினர். குறிப்பாக அவர்கள் பற்றுள்ளம் இன்றி இருந்துள்ளனர். தனக்கு நீதி சொல்வதால் ஏதேனும் வருமானம் வருமா என்று எதிர்பார்க்காது அவர்கள் அறம் காட்டியுள்ளனர். துலாக்கோல் போல் அவர்கள் அறத்தை நிலை நிறுத்தியுள்ளனர்.

காவிதிப் பட்டம் பெற்றோர்
காவிதிப் பட்டம் சிலருக்கு மன்னனால் வழங்கப் பெற்றுள்ளது. இவர்கள் காவிதிப் பட்டத்திற்கு உரிய தலைப்பாகையை அணிந்திருப்பர்.

நன்றும் தீதும் கண்டாய்ந்து அடக்கி
அன்பும் அறனும் ஒழியாது காத்து
பழிஒரீஇ உயர்ந்து பாய்புகழ் நிறைந்த
செம்மை சான்ற காவிதி மாக்கள்
என்று இவர்களின் அறத்தன்மையை மதுரைக்காஞ்சி சுட்டுகின்றது. பழிக்கு அஞ்சும் தன்மை இவர்களிடத்தில் காணப்படும் மிக்க நல்ல தன்மையாகும்.

நாற்பெரும் குழு
நாற்பெரும் குழு என்பது அறத்தை நிலை நிறுத்த நன்மொழிகளைக் கூறும் அமைப்பாக இருந்துள்ளது. இது செய்திகளைக் காரண காரிய இயல்புடன் அரசனுக்கு எடுத்துரைக்கும் போக்கினதாகும்.

இம்முன்று குழுக்களும் அறத்தை நிலை நிறுத்தும் பொது அமைப்புகள் ஆகும். இம்மன்றங்கள் அரசன் முதல் அனைத்துச் சமுதாய படிநிலையாரையும் ஒன்றுபோலவே கருதியுள்ளது.

மத மன்றங்கள்
பல்வேறு மத மன்றங்கள் அவ்அவ் மதங்களின் அறங்களை நிலை நிறுத்த மதுரைக் காஞ்சி காலத்தில் இயங்கியுள்ளன. குறிப்பாக பௌத்தபள்ளி, அமண் பள்ளி, அந்தணர் பள்ளி இவை குறிக்கத்தக்கன.

பௌத்த பள்ளி என்பது குழந்தைகளையும், பெண்களையும், ஆடவர்களையும் வழிநடத்தும் பள்ளியாக இருந்துள்ளது. சிறந்து புறங்காக்கும் கடவுள் பள்ளியாக அது விளங்கியுள்ளது. அந்தணர் பள்ளி வேதங்களின் முழக்கங்களைச் செய்து, வேள்வியாற்றி அறம் தலை நின்றுள்ளது. சமணப்பள்ளி கற்றறிந்த அறிஞர் பலரைக் கொண்டிருந்தது.

இவ்வாறு மத மன்றங்கள் மக்கள் அறவழியில் செல்ல உதவியுள்ளன.

அறத்தை மறந்தவர்கள்

அறத்தை மறந்தவர்களாக பேய், அணங்கு, கள்வர் ஆகியோரை மதுரைக் காஞ்சி காட்டுகின்றது. குறிப்பாக கள்வர் கூர்மையான வாள், செருப்பணிந்த கால்கள்,உடைவாள், நூல் ஏணி ஆகியவற்றைக் கொண்டு கலன் நசைஇ கொட்கும் இயல்பினராக இருந்தனர். பொன் அணிகலன்களைக் கவரும் பான்மையில் கள்வர் செயல்பட்டனர் என்று மதுரைக் காஞ்சி குறிப்பிடுகின்றது.

அறம் காக்கும் காவலர்கள்
மற்றவர் பொருளைக் கவரும் கள்வர், மற்றவரை மயக்கும் அச்சுறுத்தும் பேய், அணங்கு போன்றவற்றில் இருந்து மக்களைக் காக்கும் காவலர்கள், ஒற்றர்கள் மன்னனால் சங்ககாலத்தில் நியமிக்கப் பெற்றுள்ளனர். இவர்கள் தவறுகள் புரிந்துத் தப்ப நினைப்போரை ஊக்குவிக்காத அம்பினை உடையோர் ஆவார். இதுவே இவர்களின் அறம்.

இவ்வாறு அறச் சூழல் மிக்கதாகவும், அறந்தலைப்பட்டதாகவும் மதுரைக்காஞ்சி படைக்கப் பெற்று ள்ளது.

முடிவுகள்
மதுரைக் காஞ்சி மறப்போர் ஆற்றுவதில் ஆர்வம் காட்டிய மன்னனை மடைமாற்றி அறத்தின் பக்கம் சேர்க்கும் நிலைமைத்ததாகப் படைக்கப் பெற்றுள்ளது.

மதுரைக் காஞ்சியில் அறம் என்பதை முன்னோர் மொழியும் நன்மை மொழிகள் என்பதாகக் கொள்கின்றது. இதனடிப்படையில் காணுகையில் அறம் என்பது நிரந்தரத் தன்மை உடையது அன்று என்பதும், அவ்வவ்போது மாறும் போக்கினதாக இருக்கும் என்பதும் தெரியவருகிறது.

தொல்காப்பிய நடைமுறையில் அமைந்த நால்வகை வருணத்தாருக்கும் ஏற்ற அறங்கள் மதுரைக்காஞ்சியில் சுட்டப் பெறுகின்றன. அரசன் என்பவன் தலைமை நிலையில் நின்று அறத்தைக் காப்பவனாக மதுரைக்காஞ்சியின் சூழல் காட்டுகின்றது. அந்தணர்கள் வேதநெறிப்படி வாழ்பவர்கள். விண்ணுலகு செல்ல மண்ணுலகில் ஏற்ற நிகழ்வுகளை நடத்துதல் என்பது அவர்களுக்குரிய அறமாகும். வணிகர்கள் தனக்கான அறத்தின்படி வணிகம் புரிவர். வேளாளர்கள் இருவகைத் தொழில்நிலையில் நின்று அறம் விளங்க வாழ்பவர்கள்.

போர் எழுகின்றபோது இந்நால்வரும் போர் ஆற்றுவதற்குரிய முதன்மை நிலையிலும், தூது போதல் என்ற துணை நிலையிலும் இருந்து மன்னனுக்கு உதவிபுரிந்துள்ளனர். புறங்கொடுக்கும் பகைவர்கள் மீது படைதொடுக்காத அறம் இங்கு நிலைநாட்டப் பெற்றுள்ளது.

பாணர், பாடினி,புலவோர் போன்றவர்கள் அரசனுக்கு செவுயறிவுறூஉ என்ற நிலையில் இனிமையாக நல்ல கருத்துக்ளை வழங்குபவர்களாக விளங்கியுள்ளனர்.

செல்வந்தர்களுக்கான அறங்களாக வான்போல் கொடுத்தல், விழாக்கள் எடுத்தல் என்பது காட்டப் பெற்றுள்ளது.

பெண்களுக்கான அறங்கள் குலமகளிர், வரைவில் மகளிர், சூலுற்ற பெண்கள், புதல்வர் பயந்த பெண்கள் போன்ற பல நிலையில் அமைக்கப் பெற்றுள்ளது. குலமகளிர் கணவனைச் சார்ந்து வாழும் தன்மை உடையவர்கள் ஆவர். வரைவில் மகளிர் பொருளை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு வாழ்பவர்கள் ஆவர். சூலுற்ற மகளிர் இறையைத் தொழும் பாங்கினர். புதல்வரைப் பெற்ற மகளிர் குளத்தில் நீராடித் தூய்மைத் தன்மை பெற்றுள்ளனர். மகளிர்க்கு உரிய அறம் என்பது செய்கைகளை முன்வைத்து அமைக்கப் பெற்றுள்ளது. ஆண்களின் அறம் பொருளைத் தருதல் என்பதை அடிப்படையாக வைத்துச் செய்யப் பெற்றுள்ளது.

சமுதாயம் என்ற ஒட்டு மொத்த அமைப்பில் அறம் நிறுத்தப்பட காவிதி மாக்கள், அறங்கூறு அவையம், நாற்பெருங்குழு என்ற பொதுஅற மன்றங்களும், பௌத்தப் பள்ளி, சமணப் பள்ளி, அந்நணப்பள்ளி போன்ற மத அற மன்றங்களும் மதுரைக்காஞ்சிக் காலத்தில் இருந்துள்ளன. இவற்றின் முலம் அறம் நிலை நிறுத்தப் பெற்றுள்ளது.

அறத்தைக் குலைப்பவர்களாக கள்வர்,அணங்கு, பேய் போன்றன விளங்கியுள்ளன. இவர்களின் இயல்பையும், இவற்றிலிருந்து மக்களைக் காக்கும் ஒற்றர், காவலர் பற்றியும் மதுரைக்காஞ்சி குறிப்பிடுகின்றது.

இவ்வகையில் தமிழகத்தின் சங்க கால அறச் சூழலை எடுத்துரைக்கும் பனுவலாக மதுரைக்காஞ்சி விளங்குகிறது என்பது முடிந்த முடிபாகும்.

Friday, January 06, 2012

முனைவர் பட்ட வார்மொழித்தேர்வு - ௧0.௧.௨0௧௧ பிறபகல் ௨.மணி


என் மேற்பார்வையின் கீழ் முனைவர் பட்ட ஆய்வினை தன்வரலாற்று இலக்கியங்கள் ஓர் ஆய்வு என்ற தலைப்பில் செய்துள்ள ஜி்.பி முருகானந்தம் என்ற ஆய்வாளருக்கு வாய்மொழித்தேர்வு 0..0௧௧ அன்று பிற்கபல் மணியளவில் புதுக்கோட்டை மா. மன்னர் கல்லூரியின் ஆங்கில மொழிக் கூடத்தில் நடைபெற உள்ளது. அனைவரும் வருக

Monday, January 02, 2012

பட்டி டு சிட்டி நூல் மதிப்புரை


நூலாசிரியர்: சிவசக்தி இராமநாதன்,
வெளியீடு நந்தினி பதிப்பகம், சூர்யா பிரிண்ட் சொலுசன்ஸ்,534. காமராசர் ரோடு, சிவகாசி, 9842124415 விலை. ரு. 150

கிராமங்களில் இருந்து நகரங்களுக்குப் பெயரும் நாகரீக வாழ்க்கை என்பது தற்போது சர்வசாதாரணமாகிவிட்டது. நாடுகள் கடந்துப் பெருநகரத்திற்குப் போகவேண்டிய உயரத்திற்குத் தற்போதைய இந்திய மக்களின் சூழல் வளர்ந்துவிட்டது. இருப்பினும் பிறந்த நாட்டை, பிறந்த தாய்மண்ணை வெளிநாடுகளில் பெயர்ந்து வாழும் இந்தியமக்கள் மறவாமல் இருக்கிறார்கள் என்பது மகிழ்விற்கு உரிய செய்தியாகும். அவ்வகையில் வெளிநாடு செல்ல விரும்புகின்ற மக்களுக்கு வெளிநாட்டு நகரங்களின் வனப்பை, வசதிகளை, காண வேண்டிய இடங்களைத் தொகுத்தளிக்கும் முயற்சியாக பட்டி டு சிட்டி என்ற நூல் உருவாக்கப் பெற்றுள்ளது.

அழகிய அச்சாக்கம், நல்ல வழுவழுப்பான தாள், அத்தனைப் பக்கங்களிலும் வண்ணச் சேர்க்கை என்று படிக்கத்தூண்டும் வகையில் இந்நூல் வடிவமைக்கப் பெற்றுள்ளது.

நூலாசிரியராக விளங்கும் சிவசக்தி இராமநாதன் தன் வாழ்க்கைப் பின்புலத்துடன் நூலைத் தொடங்கி தான் ஒரு பயணியாக உலகம் முழுவதும் சுற்றிய அனுபவத்தை நூலுள் விரித்துரைக்கின்றார். ஒரு பெண், மனைவி, தங்கை, மகள் என்ற குடும்பநிலைகளை வெற்றிகரமாக ஆற்றிக்கொண்டு சிறந்த நிர்வாகியாக வளர்ந்து பயணியாக உலகம் சுற்றிய அனுபவப்பதிவு இந்நூல் என்பது கருதத்தக்கது. இத்தனை எல்லைகளை ஒரு சாதாரணப் பெண் கடக்க வேண்டுமானல் அவளின் மனஉரம், துணையிருப்போர் தரும் வலிமை முதலியன கணக்கில் கொள்ளப்பட வேண்டியன என்றால் அதுமிகையாகாது.

பதினெட்டு பட்டி என்ற நாட்டுப்புற வழக்கு, பதினெட்டு சிட்டிகள் என்ற நகர்புற வழக்காக இந்நூலுள் மாற்றம் பெற்றுள்ளது. கட்டுப் பெட்டி என்று கட்டுக்குள் இருந்தப் பெண்ணினம் கடல்கடந்து சென்றதன் வெற்றி அடையாளம் இந்த நூல் என்பது இந்நூல் பற்றிய சரியான விமர்சனமாக இருக்கும்.

சிங்கப்பூர், கோலாலம்பூர், கொழும்பு, துபாய்,லண்டன், நியூயார்க்,சிகாகோ, வாஷிங்டன், சான்பிரான்சிஸ்கோ, லாஸ் ஏஞ்சல்,ஓர்லாண்டோ, இஸ்தான்புல், ஆம்ஸ்டர்டாம், மெல்பர்ன், ஹாங்காங், ஷங்காய், பாரீஸ், ஜெனிவா என்ற பதினெட்டு சர்வதேச நகரங்கள் பற்றி அவற்றின் நிலவியல், பொருளாதார நிலை பற்றி, அந்நகரங்களின் சிறப்புகள் பற்றி எடுத்துரைக்கும் இந்நூல் உலகை பயணத்தால் அளக்க நினைக்கும் அன்பர்களுக்கு ஒரு வரப்பிரசாதம்.

ஆங்காங்கே வண்ணப்படங்கள், பெட்டிச் செய்திகள் என்று படிப்பவரைக் கவரும் பாங்கு சிறப்பானது. நல்ல தமிழை துபாய் சென்றும் மறக்காத ஆசிரியருக்கு வாழ்த்துக்கள். எண்ணியிருந்தால் இந்த நூல் ஆங்கிலத்தில் கூட ஆக்கப் பெற்றிருக்கலாம். ஆனால் பட்டியில் இன்னமும் வாழும் மக்கள் சிட்டிகள் பற்றி அறிந்து கொள்ள முடியாமல் போயிருப்பர். இவ்வகையில் உலகம் சுற்றும் முதல் (வாலிபி) பெண் இவர்தான் என்ற துணிச்சலை இந்நூல் வழங்குகின்றது.

டிஸ்னி பூங்காக்களில் ஒன்றான எப்பாட் தீம்பார்க் பற்றி ஆசிரியர் பின்வருமாறு குறிப்பிடுகின்றார். “இந்த பூங்கா வால்ட் டிஸ்னியின் நான்கு பூக்காக்களில் ஒன்றாகவும் 300 ஏக்கர் பரப்பளவில் மேஜிக் கிங்டம் எனப்படும் பூங்காவைப் போல் இரண்டு மடங்கு பெரியதாகவும் உள்ளது. இது உலகின் எதிர்கால நிலையைக் குறிக்கும் வண்ணம் உள்ளது. …மேலும் ஆச்சர்யமுட்டும் சில வகையான யோசனைகள் நிஜமாகவே ஆவதற்குரிய சாத்தியக் கூறுகள் உள்ளன” என்ற கணிப்பு இவரின் நுண்ணிய அறிவை, ஓரிடத்தைப் பற்றி அறிவிக்க வேண்டிய செய்திகளை அறிவிக்கும் நேர்த்தியை எடுத்துரைப்பதாக உள்ளது.

சிறுவர் முதல் பெரியவர் வரை படிக்க, பார்க்க, ரசிக்க உதவும் ஒரு நல்ல புத்தகத்தை ஆசிரியர் வழங்கியுள்ளார். இன்னமும் பல நாடுகள் சுற்றி அடுத்தடுத்து புத்தகங்களை எழுதவேண்டும். இவரின் ஆர்வம் பதிவுகளாக மாறவேண்டும்.

பெண்ணிய வாசிப்பில் மணிமேகலை


பெண்ணியத் திறனாய்வின் ஒரு பகுதி பெண்ணிய வாசிப்பு என்பதாகும். ஆண் படைத்த இலக்கியங்களை பெண்ணிய அடிப்படையில் வாசிப்பது என்பது பெண்ணிய வாசிப்பு எனப்படும். ஆண்படைப்பில் எழுப்பப்பட்டுள்ள ஆண்சார்பு அரசியலை இனம் காட்டுவதாக இவ்வாசிப்பு அமையும்.

ஆணால் எழுதப் பெற்ற ஒரு இலக்கியத்தில் ஆண் சார்பு கருத்துகளே அதிகம் இருக்கும் என்பது உறுதி. சில ஆண்படைப்பாளர் தன்னுடைய ஆண் பால் சார்ந்த படைப்பு அரசியலை அப்படியே வெளிப்படுத்த முனைகின்றனர். சிலர் மறைமுகமாக வெளிப்படுத்துகின்றனர். அதாவது ஆணாதிக்க அரசியலை தெளிவாக வெளிப்படுத்திடாமல் பொதுமைப்படுத்தி வெளியிடுவதுபோல ஆண்சார்புக்கு அவர்கள் இட்டுச் சென்றுவிடக் கூடும்.

இன்னும் சிலர் தன் படைப்பில் பெண்பாலாற்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பதுபோல படைத்தளிக்கலாம். ஆனாலும் இம்முக்கியத்துவத்திற்குள் ஆண்சார்புத் தன்மை ஒளிந்துக் கோலோச்சிக் கொண்டு இருக்கும்.

ஒருபடைப்பின் உண்மைத் தன்மை என்பதை நிலைநாட்ட அதனை ஒவ்வொரு கோணத்திலும் ஆராயவேண்டும். பெண்ணிய நோக்கில், பெண்மனத்தின் அடிப்படையில் ஒரு ஆண்படைப்பினை உணர்கின்றபோது பெண்ணுக்கு எதிராகப் புனைந்துள்ள பல கருத்துகள் அப்படைப்பில் இருப்பதை இனம் காண முடியும். இவ்வகையில் ஆண் படைப்புகளில் உள்ள பெண்ணுக்கு எதிரான கருத்துக்களை இனம் காட்டுவது பெண்ணிய வாசிப்பு ஆகின்றது.

கேட் மில்லட் என்ற பெண்ணிய அறிஞர் ” ஒரு குறிப்பிட்ட நேரத்தில் ஆளுமை மிக்கதாக இருக்கும் ஒரு பாலினம் தனக்கு கீழ்ப்பட்ட பாலினத்தின் மீது தன்னுடைய வலிமையை நிலைநாட்டிக் கொள்ள, அல்லது தன் வலிமையை அதன் மீதுகாட்ட முயன்று கொண்டே இருக்கும் ” என்று ஆதிக்கத் அரசியலின் இயல்பை எடுத்துரைக்கிறார். இக்கருத்தின் அடிப்படையில் காணுகின்றபோது ஆண் ஆதிக்கச் சூழலில் படைக்கப்படும் படைப்பு ஆணாதிக்கத்தை வலியுறுத்துவதாகவே இருக்கும் என்பது உறுதியாகின்றது. அவ்வாதிக்க சூழல் பெண்பாலினை அடக்கி வைக்கவே முயற்சிப்பதாகவே இருக்கும்.

மணிமேகலை என்ற காப்பியம் எழுதப்பட்ட காலத்தில் எவ்வகைப்பட்ட ஆதிக்கம் புறச் சூழலில், படைப்புச் சூழலில் நிலவியது என்பதை முதலில் ஆராய வேண்டும். அதாவது ஐம்பெரும் காப்பியங்கள், ஐஞ்சிறுங்காப்பியங்கள் என்பன அனைத்தும் ஆணாலேயே எழுதப் பெற்றுள்ளன. மேலும் கம்பராமாயணம், வில்லிபாரதம், பெரியபுராணம், சீறாப்புராணம், தேம்பாவணி,, பாஞ்சாலி சபதம், மனிததெய்வம் காந்தி காதை, மாங்கனி போன்ற பல காப்பிய முயற்சிகள் அனைத்தும் ஆண்களாலேயே படைக்கப் பெற்றுள்ளன. பெண் எழுதிய காப்பியம் என்ற அளவில் இனம் காணக் கூடிய ஒன்றே ஒன்று அசலாம்பிகை அம்மையார் எழுதிய காந்திபுராணம் மட்டுமே. காந்திபுராணமும் காந்தி என்ற ஆண்தலைவரையே கதைத்தலைமையாகக் கொண்டுள்ளது. எனவே இதுவும் ஆண் ஆளுமையைச் சிறப்பிக்கும் போக்கினது என்பதில் ஐயமில்லை.

இத்தகைய சூழலில் காப்பியம் என்ற வடிவம் ஆண்களுக்கு உரிய படைப்பு வடிவமாகவே பெரும்பாலும் தமிழ்ப்பகுதியில் விளங்குவது தெரியவருகின்றது. எனவே காப்பிய வெளி என்பது பெண்களுக்கு திறக்காத இருப்புக் கதவாகவே அமைந்துவிட்டதை உணரமுடிகின்றது.

மணிமேகலை சிலப்பதிகார காப்பியத்தின் தொடர்வாய் படைக்கப் பெற்றது.

“தெரிவுறு வகையால் செந்தமிழி யற்கையில்
ஆடிநன்னிழலின் நீடிருங் குன்றம்
காட்டுவார்போல் கருத்து வெளிப் படுத்து
மணிமே கலைமேல் உரைப்பொருள் முற்றிய
சிலப்பதிகாரம் முற்றும்”

என்ற நூற்கட்டுரைப் பகுதி இதனைத் தெளிவு படுத்தும். சிலப்பதிகாரம் எழுவதற்குக் காரணமாக சூழலும் இங்குக் கவனிக்கத்தக்கது. குன்றக்குறவர் பத்தினிப் பெண் ஒருத்தி விண்ணகம் ஏறிச் சென்றதைக் கண்ட அதிசயக் காட்சியை இளங்கோவடிகளிடம் கூறுகின்றனர். அப்போது உடனிருந்த சாத்தனார் “யான் அறிகுவன்அது பட்டது என்று உரைப்போன்” என்று கோவலன் கண்ணகி வரலாற்றை எடுத்துரைக்கின்றார். இதனைக் கேட்ட இளங்கோவடிகள் “நாட்டுதும் யாம்ஓர் பாட்டுடைச் செய்யுள்” என்று கூறி சிலப்பதிகாரத்தைப் படைக்கின்றார். இது முவேந்தர்க்கு உரியது என்பதன் காரணமாக “நீங்களே படைக்கலாம்” என்று சீத்தலைச் சாத்தனார் கூறுகின்றார். இதன்காரணமாக இளங்கோவடிகள் சிலப்பதிகாரத்தைப் படைக்க முயலுகின்றார் என்ற படைப்புச் சூழல் இங்குக் கவனிக்கத்தக்கது. இவற்றின்முலம் ஆண் படைப்புச் சூழலில் சிலப்பதிகாரம் உருவாகியது என்பதையும் அதன் தொடர்வாக தண்டமிழ் ஆசான் சீத்தலைச் சாத்தனார் மணிமேகலையைப் படைத்தார் என்பதும் தெரியவருகிறது.

மணிமேகலையின் பதிகப்பகுதியில் இடம்பெறும்

” இளங்கோவேந்தன் அருளிக் கேட்ப
வளம் கெழு கூலவணிகன் சாத்தன்
மாவண் தமிழ்த் திறம் மணிமேகலை துறவு
ஆறுஐம் பாட்டினுள் அறியவைத்தனன் என்”
என்ற அடிகளின் வழியாக இளங்கேவடிகள் கேட்ப சாத்தனார் மணிமேகலை துறவு பெற்ற கதையினை வடித்த செய்தி தெரியவருகின்றது.

இதன்வழி இரட்டைக் காப்பியங்கள் இரண்டும் ஆண் சொல்ல ஆண் கேட்கும் தன்மையில் செய்யப் பெற்ற ஆண் வயப்பட்ட சூழலைப் பெற்றுள்ளன என்பது உறுதி.

எனவே காப்பியம் என்ற வகைமையை ஆக்குவதிலும், இரட்டைக் காப்பியங்களான சிலம்பும் மணிமேகலையும் ஆண்கள் அருகிருக்க படைக்கப்பெற்ற காப்பியம் என்பதை எண்ணும்போதும் ஆண் சூழலில்தான் மணிமேகலை படைக்கப் பெற்றுள்ளது என்பது தெளிவாகின்றது.

மணிமேகலை யாக்கப் பெற்ற காலத்தில் அரசமுறைமை என்பது ஆண் வயப்பட்டது என்பதில் கருத்து மாறுபாடு இருக்க முடியாது. ஏனெனில் தூங்கெயில் எறித்த தொடிதோட் செம்பியன் என்ற அரசன் காவிரிப்பூம்பட்டினத்தில் இந்திரவிழாத் தொடங்க ஏற்பாடு செய்ததாக ஒரு குறிப்பு மணிமேகலையில் இடம் பெறுகின்றது. எனவே அரசாட்சியும் ஆண்பாலிடத்தில் இருந்தது என்பதும் இங்கு உணரத்தக்கது.

இவ்வாறு ஆண் வயப்பட்ட அரசியல் சூழ்நிலையில் படைக்கப்படும் இலக்கியம் ஆண்வயப்பட்ட செய்திகளையே கொண்டிருக்க முடியும்.

மணிமேகலை என்ற பெண்ணைக் கதைத்தலைவியாகக் கொண்ட காப்பியம், கணிகை ஒருத்தியின் பெண்ணை துறவி என்ற உயர் நிலைக்கு உயர்த்திய காப்பியம், பெண்களும் துறவேற்கலாம் என்பதன் அடையாளமாக விளங்கும் காப்பியம் போன்ற கருத்துகள் மணிமேகலையைப் பற்றிக் கட்டப் பெற்றுள்ள கருத்துகள் ஆகும்.

“பேரழகுச் செல்வி மணிமேகலையை ஒரு பெண்ணைப் பேரறிவுச் செல்வியாய்ப் பிறங்க வைத்து, பேரறச் செல்வியாய் நடமாடவிட்டு, மாதவச் செல்வியாய் மிளிரச் செய்து, பொதுநலச் செல்வியாய் சேவைச் செல்வியாய் தியாகத்திலகமாய்த் திகழச் செய்து காப்பியத் தலைமகளாக்கி, அக்காப்பியத் தலைப்புக்குரியவளாகவும் உயர்த்திய பெண்மை போற்றும் பெருங்காப்பியம் ”

“அவள் (மணிமேகலை) காப்பியத்தின் கற்பனைத் தலைவியாக மட்டும் அல்லாமல் நாட்டு வரலாற்றின் பெருமைக்கு உரிய ஒரு பெண் பிறவியாகவும் பலருடைய உள்ளத்தில் இடம் பெற்றுவிட்டாள். அழகும், இளமையும், அறிவும், பண்பும் நிரம்பிய அவள், அரசிளங்குமாரனுடைய காதலைக் கைவிட்டுப் பௌத்தத் துறவியான சிறப்பு ஒருபுறம். அதைவிடப் பெரியது அவள் அருள்நிரம்பிய வாழ்வு நடத்திய சிறப்பு ஆகும்”

மேற்கண்ட கருத்துகள் தமிழ் இலக்கிய வரலாறுகளில் மணிமேகலை பற்றி அறிமுகப்படுத்தும் வரிகள் ஆகும். இவை மிகுத்து உரைக்கின்றன என்பது மணிமேகலையை முழுதும் கற்கப் புகுவோருக்குத் தெரியும்.

மணிமேகலைக் காப்பியம் பெண்ணை மையப் படுத்தி எழுதப் பெற்றக் காப்பியம் என்றாலும் சீத்தலைச் சாத்தனார் காலத்தில் பெண்களுக்கு இருந்த எல்லைகளை விளக்கும் காப்பியம் என்று கொள்வதே பொருத்தமுடையதாகும். பெண்களைப் பற்றி எழுதத் துணிந்த காப்பியம் என்று அதனை ஏற்றுக் கொண்டாலும் அது பெண் பாலினரை அடக்கும் ஆண் சார்பு காப்பியம் என்றே நோக்க வேண்டியுள்ளது. இந்தக் கருத்தை அடிப்படையாக வைத்தே இக்கட்டுரை படைக்கப் பெறுகின்றது. இக்கட்டுரையின் எல்லை கருதி இங்கு மணிமேகலை என்ற பாத்திரம் மட்டுமே கொள்ளப்படுகின்றது. மற்ற பாத்திரங்கள் இதே நோக்கில் நோக்குகின்றபோது இன்னும் இவ்வாய்வு வலுப் பெறும். அதிக கருத்துகள் கொண்டிலங்கும்.

மணிமேகலை பிறந்த செய்தியை சிலப்பதிகாரம் அறிவிக்கின்றது. அவள் வளர்ந்து பௌத்த துறவியாக மாற்றப் படுவதற்கான ஆயத்தநிலையில் இருந்து மணிமேகலை தொடங்குகின்றது. மணிமேகலை யார் என்பதைப் படிப்பவர்க்கும், மணிமேகலைக்கும் உணர்த்தும் முறையில் ஊரலர் உற்றகாதையில் மாதவி சில செய்திகளை எடுத்துரைக்கின்றாள்.

அதில் தான் பெற்ற மகளைக் கண்ணகியின் மகள் என்று நிறுவ முயற்சிக்கிறாள்.

“மாபெரும் பத்தினி மகள் மணிமேகலை
அருந்தவப் படுத்தல் அல்லது யாவதும்
திருந்தாச் செய்கைத் தீத் தொழில் படாஅள்”
(5557)
என்ற மாதவியின் கூற்று மணிமேகலை தன் மகளாய் இருக்கின்ற நிலை வரை கணிகையாகவே இருக்கக் கூடும். எனவே அவளை மேல்நிலைப் படுத்தும் முயற்சியில் பத்தினித் தன்மை வாய்ந்த குலமகளாய் அறிவிக்கின்ற பெருமுயற்சியை மாதவி செய்கின்றாள். இதனை இவ்வரிகள் எடுத்துரைக்கின்றன.

இருப்பினும் மாதவியின் தாய் சித்திராபதி காப்பியத்தின் பல இடங்களில் மணிமேகலையை கணிகையாகவே உலகிற்கு அறிவிக்கிறாள்.

” தீவகச் சாந்தி செய்தரு நல்நாள்
மணிமேகலையொடு மாதவி வாராத்
தணியாத் துன்பம் தலைத்தலைமேல்வர”
( ஊரலருற்ற காதை 35)

என்று மணிமேகலைப் பாத்திரம் சித்திராபதியின் வாயிலாக அறிமுப்படுத்தப்படும்போதே கணிகையாக காட்டப் பெறுகின்றது.

கன்னிக்காவலும், கடியின் காவலும்
தன் உறு கணவன் சாவுறின் காவலும்
நிறையின் காத்துப் பிறர் பிறர்க் காணாது
கொண்டோன் அல்லது தெய்வமும் பேணாப்
பெண்டீர் தம் குடியில் பிறந்தாள் அல்லள்
நாடவர் காண நல் அரங்குஏறி
ஆடலும் பாடலும் அழகும் காட்டி
கருப்பு நாண் கருப்பு வில் அருப்புக் கணை தூவச்
செருக் கயல் நெடுங்கண் சுருக்கு வலைப்படுத்துக்
கண்டோர் நெஞ்சம் கொண்டு அகம் புக்குப்
பண்தேர் மொழியின் பயன் பலவாங்கி
வண்டின் துறக்கும் கொண்டி மகளிரைப்
பான்மையின் பிணித்து படிற்று உரை அடக்குதல்
கோன்முறை அன்றோ குமரற்கு” என்றலும்
( உதயகுமரன் அம்பலம் புக்ககாதை 98111)

என்ற பகுதிகள் மணிமேகலை காலத்தில் இருந்த கணிகையர் குலப் பெண்கள் இயல்பை வெளிப்படுத்துவதாக உள்ளன. ” கொண்டிமகளிர் ” என்ற மரபினள் என மணிமேகலையை அவளின் பாட்டியே உரைக்கும் கீழ்மை அவ்வப்போது காப்பியத்தில் தலை தூக்கச் செய்யப் பெற்றுள்ளது.

இது மட்டுமில்லாமல் ஊரார்களும் மணிமேகலை, மாதவி ஆகியோரின் செய்கையை கேலிபேசக் கூடிய சூழலும் காட்டப் பெற்றுள்ளது.

“விராடன் பேர் ஊர் விசயன் ஆம் பேடியைக்
காணிய சூழ்ந்த கம்பலை மக்களின்
மணிமேகலை தனை வந்துப் புறம் சுற்றி
அணிஅமை தோற்றத்து அருந்தவப்படுத்திய
தாயோ கொடியள் தகவு இலள் ”
(மலர்வனம் புக்க காதை, 146150)
என்ற பகுதியில் மக்களும் மாதவி கணிகை என்ற நிலையில் திரிந்துவிட்டாள் என்பதற்காக ஏசுவதாக படைக்கப் பெற்றுள்ளது. இவ்வடிகளில் மணிமேகலையைக் காணவந்த மக்களின் இயல்பிற்கு பேடியைக் காணவந்த கூட்டம் ஒப்பு நோக்கப் பெற்றுள்ளது எனின் பேடியை ஒத்து இருந்தனளா மணிமேகலை என்ற கருத்தும் இங்கு ஏற்படுகின்றது.

இவ்வகையில் மணிமேகலையை மேல்நிலைப் படுத்தும் முயற்சிக்குச் சரிசமமாக அவளை கீழ்நிலைப்படுத்தும் முயற்சியிலேயே வைத்திருப்பதற்கான முயற்சி மணிமேகலைக் காப்பியத்தில் ஆங்காங்கே நடைபெற்றுள்ளது என்பதை உணரமுடிகின்றது.

மாதவி, சித்திராபதி என்ற தாய் மகள் உறவினை ஒரு புறத்திலும், மாதவி, மணிமேகலை என்ற தாய் மகள் உறவினை ஒரு புறத்திலும் வைத்துக் கொண்டு இச்சூழலைச் சற்று விரிவாக்கிப் பார்க்கவேண்டி உள்ளது.

சித்திராபதி தன் மகளை கணிகையாக வளர்த்துத் தன்னிலையை உறுதிப்படுத்திக்கொண்டாள். அச்சித்திராபதி தன் பேத்தியையும் இதே வழியில் இட்டுச் சென்று வெற்றி பெற வேண்டும் என்று எண்ணுகிறாள். இதற்காக அரச குமாரனின் உதவியை அவள் நாடுகிறாள்.

மாதவி தன் மகளை கணிகையாக ஆக்கிவிடாமல் காக்கும் முறைமையில் ஈடுபடுகிறாள். அசோக குமாரன் என்ற இளவரசன் மணிமேகலை மீது மையல் கொள்ளுகின்றான். இவனின் மையல் என்பது கணிகை மீது கொண்ட காம மயக்கமாகவே உள்ளது. இந்த மயக்கத்தை உடையவனோடு மணிமேகலை கற்புடைப் பெண்ணாக வாழமுடியாது. அரசனுக்கு ஆட்பட்டவள் பின்னாளில் அனைத்துத் தரப்பினரின் இச்சைக்கும் ஆட்படவேண்டிய அபாயமும் உள்ளது. இந்நிலையில் மணிமேகலை என்ற பாத்திரத்தை பலர் காண ஆடச் செய்யவும் முடியாமல், கற்புடைப் பெண்ணாக குடும்ப நிலைக்கு இட்டுச் செல்லவும் முடியாமல் இருக்கும் சூழலில் மணிமேகலையைத் துறவியாக்குவதே சரி என்று மாதவியோ அல்லது சாத்தானரோ முடிவு கொள்ளுகின்றனர். இதன் வழி காப்பியம் வளருகின்றது.

இப்போது மணிமேகலையைத் துறவியாக்கிவிடுவதற்காகவே மாபெரும் பத்தினி கண்ணகியின் மகள் அவள் என்ற குறிப்பு காப்பியத்தில் இடம் பெறச் செய்யப்படுகிறது.

பெண்ணிய நிலையில் சிந்திக்கையில் இங்கு ஒரு கேள்வி எழுகிறது. மாபெரும் பத்தினியின் மகள் மணிமேகலை என்றால் அவளையும் கற்பு வாழ்க்கைப் படுத்தியிருக்கலாமே? என்ற ஐயத்திற்கு விடை இல்லை. கணிகை குலத்தவள் கற்பு வாழ்வு வாழ அக்காலச் சூழலில் இடம் இல்லை. கணிகையைக் காமத்திற்கு உரியவளாகவே சமுகம் கருதியிருக்கிறது. அழகான இளம் பெண் காப்பார் அற்று இருக்கும் சூழலில் அவள் காமப்பொருளாகவே ஆக்கப்படுவாள் என்ற முறையே இன்றுவரைக்கும் நிலவி வருகின்றது. இதே சூழலே மணிமேகலைக்கும் வாய்த்திருக்கின்றது. இதிலிருந்துத் தப்பிக்க ஒரே வழி அவளைத் துறவியாக்குவதே என முடிவு கட்டி அவள் “தீத்திறம் படாஅள்” என்று அளபெடை கொடுத்துப் படைப்பாளன் தன் கருத்தையும் மாதவி கருத்தையும் உடன் படுத்துகிறான்.

மாதவியின் வாயிலாக மணிமேகலை தன் கதை, தன் பெற்றோர் கதை ஆகியனவற்றை அறிந்து கொள்வதாக காப்பியத்தின் முன்பகுதி அமைக்கப் பெற்றுள்ளது. இவற்றோடு மணிமேகலை தன் முற்பிறப்புக் கதையையும் காப்பியப் போக்கில் அறிந்து கொள்ளுகிறாள். மணிமேகலா தெய்வத்தின் உதவியால் இச்செயல்பாடு மணிமேகலைக்குக் கிடைக்கின்றது.

மணிமேகலை முற்பிறவி வரலாறு ஒன்றும் இக்காப்பியத்தில் காட்டப் பெறுகின்றது. அதாவது அவள் முற்பிறவியில் இராகுலன் என்பவனின் மனைவியாக இருந்தாள் என்பது அக்கதையின் சாரமாகும்.

அசோதர நகரத்தை ஒருகாலத்தில் ஆண்ட இரவிவன்மனின் மனைவி அமுதபதி ஆவாள். இவர்கள் இருவருக்கும் பிறந்தவள் இலக்குமி என்பவள் ஆவாள். இவளே பின்னால் மணிமேகலை என்னும் பிறவி எடுக்கிறாள். இவளுடன் பிறந்தவர்கள் தாரை, வீரை ஆகியோர் ஆவர். பின்னாளில் இவர்கள் மாதவியும், சுதமதியுமாகப் பிறக்கின்றனர்.

அத்திபதி என்னும் அரசனுக்கும், நீலபதி என்பவளுக்கும் பிறந்தவன் இராகுலன் ஆவான். இவன் பின்பிறப்பில் அசோக குமாரன் ஆவான்.

இவர்கள் இருவரும் இனிது வாழ்ந்திருந்தனர். ஒரு முனிவரை இருவரும் சந்திக்கின்ற நிகழ்ச்சி நடைபெறுகிறது. மணிமேகலையில் இந்நிகழ்ச்சி இருவகைகளில் விவரிக்கப்படுகின்றது.

வகை.1.
பாத்திரம் கொடுத்த காதையில் மணிமேகலா தெய்வம் ஒரு முறையில் இச்சந்திப்பு நிகழ்ந்ததாகக் கூறுகின்றது.

இலக்குமி தன் கணவனான இராகுலனுடன் ஒரு முறை பூஞ்சோலை ஒன்றில் மகிழ்ந்து இருந்தாள். இவர்கள் இருவருக்குள் ஊடல் தோன்றியது. அவ்வூடலில் தோற்ற இராகுலன் இவளை வீழ்ந்து வணங்கினான். அப்போது சாது சக்கரன் என்ற முனிவர் அங்கு வந்தார். அவரைக் கண்டதும் இலக்குமி மயங்கி உடல் நடுக்கமுற்று அவரை வணங்கினாள். இவள் வணங்கியதைக் கண்ட இராகுலன் கோபமுற்று ” ஏன் இவரை வணங்கினாய்” என்று மீளவும் கோபமுற்றான்.

இவனின் கோபத்தை அடக்கினாள் இலக்குமி. பின் இருவரும் வணங்கி அம்முனிவர் மகிழும் வண்ணம் உண்ண உணவும் பருக நீரும் கொடுத்தனர். இதனை அவர் ஏற்றுக் கொண்டார். அவ்வறமே இன்று உனக்குத் தொடர்கிறது.

இப்பிறவிக் கதையை மணிமேகலா தெய்வம் உரைக்கின்றது.

வகை.2.
கந்திற்பாவை மணிமேகலையின் முற்பிறவியினை மற்றொரு இடத்தில் உரைக்கின்றது. கந்திற்பாவை வருவது உரைத்த காதை என்ற இந்தப் பகுதியில் விவரிக்கப்படும் நிகழ்ச்சி பின்வருமாறு.

இலக்குமி, இராகுலன் என்ற இருவரும் காயாங்கரை என்ற ஆற்றின் கரையில் இருந்த பிரம்ம தருமன் என்னும் முனிவனை வணங்கச் சென்றனர். அவரை வணங்கிய பின்னர் நாளை தங்களின் இல்லத்திற்கு அவரை உணவுண்ண அழைத்தனர். அவரும் வருவதாய் ஒப்புக் கொண்டதால் மகிழ்வுன் இரவைக் கழித்தனர். காலையில் சமையல் தொழிலுக்கு வந்த பணியாளனின் கவனக்குறைவு காரணமாக சோற்றுப் பாத்திரம் உடைந்து அமுது அழிந்தது. இதனால் கோப்பட்ட இராகுலன் அவனை தோளும், தலையும் சிதையுமாறு வெட்டினான். இதன் காரணமாக அவனும் வினைப்பயன் கருதி அழிய வேண்டியவனாயினான்.

இவ்விரு கதைகளில் பல ஒற்றுமைகள் இருப்பதைப் போன்று பல வேற்றுகைளும் இருக்கின்றன. பின்வரும் வினாக்கள் இவ்விரு கதைகளின் மேல் கேட்கப்படுகின்றபோது இக்கதைகளின் உண்மைத்தன்மை வெளிப்படலாம்.

பிரும்மதருமன், சாதுசக்கரன் என்ற இருவரும் ஒருவரா?, அல்லது வேறு வேறு துறவிகளா? வேறு வேறானவராக இருப்பின் நிகழ்ச்சி ஒன்றா? வேறா? என்ற பல அடிப்படை கேள்விகளை இதிலல் எழுப்ப வேண்டி உள்ளது.

வேறு வேறு நிகழ்ச்சிகள் என்று கொண்டால் முனிவர்களைச் சந்திக்கின்ற வழக்கமும், அவர்களின் கோப தாபங்களுக்கு ஆளாகின்ற சராசரி மனித வாழ்க்கையை உடையவர்களாக இப்பாத்திரங்கள் படைக்கப் பெற்றுள்ளன என்று கொள்ள வேண்டும்.

அடுத்து இலக்குமியின் மறுபிறவி மணிமேகலை. இராகுலனின் மறுபிறவி அசோக குமாரன். அசோக குமாரன், இராகுலன் ஆகியோர் முற்பிறவியிலும் இப்பிறவியிலும் அரசகுமாரர்கள். ஆனால் இலக்குமி முற்பிறவியில் அரசிமகள். இப்பிறவியில் கணிகையின் மகள். ஏன் அவள் அரசியின் மகளாக பிறப்பெடுத்திருக்கக் கூடாதா. முற்பிறவியில் கொலை செய்த ஆண் பின் பிறவியில் ஆணாக அரசகுமாரான இறக்கம் இல்லாமல் படைக்கப்படுகின்றபோது நன்மை செய்த இலக்குமி மட்டும் ஏன் அடுத்த பிறவியில் இவ்வாறு கீழிறக்கப் பெற்றுப் படைக்கப்பட வேண்டும்.

அதுபோல தரை, வீரை ஆகியோர் முற்பிறவியில் அரச குடும்பத்தில் பிறந்து, ஒரே அரசனை மணக்க பிற்பிறவியில் அவர்கள் இருவரும் ஒருத்தி கணிகையர் குலம், ஒருத்தி அந்தணர் குலம் என பிறப்பிக்கப்படச் செய்யவேண்டும். மேலும் முற்பிறவியில் குடும்ப மகளிராக இருந்த இவர்கள் இப்பிறவியில் பதியிலாளராக ஏன் மாற்றப்படவேண்டும். இக்கேள்விகளின் அடிப்படையில் கிடைக்கும் உண்மை ஒன்றுதான். ஆண் என்றும் தன் வலிமையுடன் இருக்க பெண் என்றும் தன்னிலைக்குக் கீழே சென்று கொண்டிருக்கும் படியாகப் படைக்கப்பெறுவாள் என்பதுதான் அந்நிலையாகும்.

மணிமேகலை என்ற பாத்திரம் அவ்வப்போது உயர்நிலைகளை அடைவதாகக் காட்டப் பெற்றாலும் அவ்வப்போது அவள் அடைந்த உயரத்தை விட அடைவிக்கப் பெற்ற தாழ்வுகள் அதிக அளவில் உள்ளன.

மணிமேகலை தன் பழம் பிறப்பினை மணிபல்லவத் தீவில் அறிகிறாள். அப்போது அவளைச் சுமந்து வந்த மணிமேகலா தெய்வம் முன்று மந்திரங்களை அவளுக்குக் கற்பிக்கின்றது.

“அல்லிஅம்கோதை! கேட்குறும் அந்நாள்
இளையள் வளையோள் என்று உனக்கு யாவரும்
விளைபொருள் உரையார் வேற்று உரு எய்தவும்
அந்தரம் திரியவும் ஆக்கும் இவ்வருந்திறல்
மந்திரம் கொள்க’ என வாய்மையின் ஓதி”
( மந்திரம் கொடுத்த காதை 7882)

“மக்கள் யாக்கை உணவின் பிண்டம்
இப்பெரு மந்திரம் இரும்பசி அறுக்கும் என்று
ஆங்கு அது கொடுத்து ” (மேலது 9091)
என்ற பகுதிகள் மணிமேகலைக்கு மணிமேகலா தெய்வம் அளித்த மந்திரங்களைச் சுட்டுவனவாகும். இதன்வழி

1. இளையவள், வளையணிந்த பெண் என்பது கருதி யாரும் மணிமேகலைக்குத் தத்துவப் பொருளைக் கூறமாட்டார்கள். எனவே வேற்று உருவம் எடுத்து அம்மெய்ப் பொருள்களை அறிவதற்கு வாய்ப்பாக ஒரு மந்திரத்தை மணிமேகலா தெய்வம் வழங்குகின்றது. அது உருமாற்று மந்திரம் ஆகும்.
2. இன்னொரு மந்திரம் அந்தரத்தில் செல்வதற்கு உரிய மந்திரம் ஆகும்.
3. மற்றொன்று பசி களையும் மந்திரம் ஆகும்.

இம்முன்று மந்திரங்களில் முதல் மந்திரம் ஆணாதிக்க வயப்பட்டுள்ளது மிக்கத் தெளிவாகத் தெரிகின்றது. அக்காலத்தில் சமயத் தத்துவ அறிவு பெற்றவர்கள் ஆண்கள்தான். அவர்கள் வழியாகத்தான் யாரும் மெய்ப் பொருள் அறிய இயலும். மணிமேகலை பெண் என்பதால் அவள் தத்துவத்தை அறிய இயலாது. எனவே உருவை மாற்றிக் கொண்டுதான் அவள் தத்துவம் கேட்டாக வேண்டும். அவ்வாறே பின்பகுதியில் வஞ்சி மாநகரில் மாதவன் வடிவினை அவள் எடுத்துக் கொண்டுத் தத்துவம் கேட்கிறாள்.

பெண் என்பதால் தத்துவம் கேட்க இயலாது என்ற இதே கருத்தினை கண்ணகி படிமமும் வஞ்சியில் எடுத்துரைக்கின்றது.

“இளையள், வளையோள் என்று உனக்கு யாவரும்
விளைபொருள் உரையார் வேற்று உருக் கொள்க’
( வஞ்சி மாநகர்புக்க காதை, 6869)

என்று முன் கூறிய அதே கூற்றினை மீளவும் இக்காதையில் சாத்தனார் எடுத்துரைக்கின்றார்.

இதன் காரணமாக அவருள் உள்ள ஆண் சார்ந்த மனநிலை உணரக் கூடியதாக உள்ளது. பெண்களே பெண் உருவில் செல்லாதே என்று கூறக்கூடிய நிலையில் இவ்வாறு படைப்பது என்பது ஆண் படைப்பு மனத்தாலேயே இயலும்.

உண்மையைக் கேட்டுணரப் போகின்றபோது உண்மையை மறைத்துப் பொய்வேடம் கொள்ளும் முறைமையால் பயன் ஏதும் விளையுமா என்று என்ணிப் பார்த்தால் இதன் வேறுபட்டதன்மை புரிபடும்.

மணிமேகலை இம்மந்திரங்களையும், அமுதசுரபிப் பாத்திரத்தையும் பெற்றுக் கொண்டு பூம்புகார் வருகிறாள். ஆதிரையிடம் முதல் பிச்சை பெற்றபின் அவள் எளியோர்க்கும், ஏழைகளுக்கும் உணவிடுகிறாள். அவ்வாறு உணவிடும் இவளை உதய குமாரன் பின்தொடர்ந்தே வருகிறான். அவளிம் ” நல்லாய்! என்கொல் நல் தவம் புரிந்தது? ” என்று வினவுகின்றான்.

இதற்கு மணிமேகலை அளிக்கும் பதில் கவனிக்கத்தக்கது.

” பிறத்தலும் முத்தலும் பிணிப்பட்டு இரங்கலும்
இறத்தலும் உடையது இடும்பைக் கொள்கலம்
மக்கள் யாக்கை இது என உணர்ந்து
மிக்க நல் அறம் விரும்புதல் புரிந்தேன்
மண்டு அமர் முருக்கும் களிறு அணையார்க்கு
பெண்டிர் கூறும் பேர் அறிவு உண்டோ?”
( உதய குமாரன் அம்பலம் புக்க காதை 136142)
என்ற பதிலில் பெண்டிர் ஆண்களுக்கு அறிவு கூறலாகாது என்று மணிமேகலை உரைப்பதாக படைக்கப் பெற்றுள்ளது. பெண்கள் அறிவுரை கூறக்கூடாது. அறமாவது செய்யலாமா என்றால் அதுவும் முடியாததாகி விடுகின்றது.

இது கழிந்தபின்னர் தன் உண்மை உருவத்துடன் உலவினால் உதயகுமரனால் தொல்லைகள் ஏற்படும் எனக்கருதி யானைப்பசி நோய் பெற்ற பெண்ணான காயசண்டிகையின் உருவத்தினை மணிமேகலை மந்திரத்தின் வழி பெறுகிறாள். காய சண்டிகை, வயந்தமாலை போன்றோர் விஞ்சையர்களால் கைக் கொள்ளப் பெற்றவர்கள். பின்னாளில் அவர்களால் தன் வாழ்வை இழந்தவர்கள் என்ற பகுதி ஒரு தனிக்கட்டுரையாக விரியத்தக்கது. காயசண்டிகை கணவனுடன் இணையாமலே இறப்பினைத் தழுவுகிறாள். அவளின் உருவத்தில் மணிமேகலை மறைந்து நின்று அறம் செய்கிறாள்.

அறம் செய்யவும் பெண் வரக்கூடாது. அப்படிச் செய்ய வருவதானால் வேற்றுருவில்தான் செய்யவேண்டும் என்பது போன்று இக்காப்பியத்தில் மணிமேகலைப் பாத்திரப்படைப்பு அமைக்கப் பெற்றுள்ளது.

மேலும் அரசன் மணிமேகலையின் அறத்திறத்தைப் பற்றிக் கேள்விப்பட்டு அவளை அழைத்து நேரடியாக விசாரிக்கின்றான். அப்போதும் அவள் தன் உண்மை நிலையைக் கூறாது காயசண்டிகையின் வரலாற்றையே தன் வரலாறாக உரைக்கின்றாள். சமய உண்மைகளை நிலை நாட்டவேண்டிய பெண்ணாக வளரவேண்டிய மணிமேகலைப் பாத்திரத்தில் இவ்வளவு முரண்கள் காணப்படுகின்றன என்பதை கவனத்தில் கொண்டாகவேண்டியுள்ளது.

இதன்பின் உதய குமரனைக் காஞ்சனன் வாளால் வெட்டுகின்றான். வெட்டுப் பட்டவனைப் பற்றியோ, வெட்டியவனைப் பற்றியோ யாரும் கவலைப் படவில்லை. ஆனால் வெட்டுவதற்குக் காரணமாக மணிமேகலை இனம் காணப்பட்டு அவள் சிறையில் அடைக்கப்படுகிறாள்.

சிறைக்கோட்டத்தை அறக்கோட்டமாக்கிய மணிமேகலைக்குக் கிடைத்த பரிசு அவள் சிறைவீடு புகுதலே ஆகும். இந்நிலையில் சிறைக்கோட்டத்தை அறக்கோட்டமாக்கிய உயர் மனிதச் சிந்தனை உடனடியாக தாழ்வினைச் சந்திக்கின்றது. இவ்வாறு ஏறுமுகமும் இறங்குமுகமும் அடுத்தடுத்து மணிமேகலைப் பாத்திரத்திற்கு அமைக்கப் பெற்றுள்ளது கவலைக்குரியதாக உள்ளது.

இக்கருத்தை அரசனின் செவியல் படும்படி தெரிவிக்க சில முனிவர்கள் வருகின்றனர். இவ்விடைவெளியில் அசோக குமாரன் பிணத்துடன் மணிமேகலை மறைத்து வைக்கப்படுகிறாள். அரசனிடம் வந்த முனிவர் பல கருத்துக்களைக் கூறிக் காம வயப்படுபவனை அரசன் தண்டிக்க வேண்டும். அதற்கு முன்னதாகவே அவன் தண்டிக்கப்பட்டுவிட்டான் என்று அவர்கள் பற்பல கருத்துக்களைக் கூறுகின்றனர்.

இதுபோழ்து இரு கதைகளை ளடுத்துரைக்கின்றனர். மருதி, விசாகை என்ற இரு பெண்களின் கதை இங்கு எடுத்துக்காட்டப் பெறுகின்றது. மருதி பிற ஆடவனால் விரும்பப்படுகிறாள். அவ்வளவில் பிறர் நெஞ்சு புகுந்ததே கற்பிற்குக் கேடு என்று அவள் கருதுகிறாள். இதன் காரணமாக பூதத்திடம் முறையிட ஏழு நாளில் அந்தக் காமுகன் அழிகிறான். அடுத்து விசாகை என்பவளின் கதை கூறுப்படுகிறது. இவளுக்கும் இவளின் முறைப்படி கணவனாகவேண்டிய ஒருவனுக்கும் தொடர்பு இருப்பதாக ஊரார் பேசிக் கொள்ள இவளும் அவனும் இறுதி வரை திருமணமே செய்து கொள்ளாமல் காமத்தைத் தவிர்த்து அறமுணர்ந்து வாழ்ந்த நிலையை இக்கதை விளக்குகின்றது.

இவ்விரு கதைகளிலும் பெண்கள் குற்றம் செய்யவில்லை என்றபோதும் அதிகம் துயரத்திற்கு ஆட்படுவது பெண்கள்தான் என்பது தெளிவு.

இவ்வாறு ஏற்றமும் இறக்கமும் கொண்ட பெண்கள் பாத்திரப்படைப்பினைப் பெற்றதாக மணிமேகலை விளங்குகின்றது.

இதன் காரணமாக காமத்தின் விளைவினை எடுத்துரைக்க முனிவர் முனைந்தாலும் அரசன் மணிமேகலையைச் சிறைக் கோட்டத்தில் அடைக்கின்றான்.

இதன்பின் மணிமேகலை சிறைக் கோட்டம் சார்கிறாள். அரசமாதேவியின் யோசனையின்படி அரசமாதேவியின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்படுகிறாள். அங்கு அவளுக்கு பித்தேற்றும் மருந்தினைப் புகட்டுகிறாள். மணிமேகலை அதனின்றும் தப்பிக்கிறாள். அடுத்து காமுகன் ஒருவனைக் கொண்டு மணிமேகலை அடையச் செய்வதான தவறான நிலையை எடுக்கிறாள். அப்போது மணிமேகலை ஆண் வடிவம் கொள்கிறாள். இதன் காரணமாகக் காமுகன் பயந்து ஓட்டமெடுக்கிறான்.

பின்பு புழுக்கம் மிக்க அறையில் உண்ண உணவும் நீரும் இன்றி அடைக்கிறாள். இதிலிருந்தும் மணிமேகலை மந்திரம் சொல்லித் தப்பிவிடுகிறாள். இதன்பின் அவ்வரசி நல்வழிப்படுகிறாள். மணிமேகலையை விடுவிக்கிறாள்.

இங்கும் மணிமேகலையைத் துன்புறுத்தும் சூழலுக்கு உரியவராகப் பெண் படைக்கப் பெற்றுள்ளாள். பெண்ணே பெண்ணுக்கு எதிரி என்ற அடிக்கருத்து இக்காப்பியத்துள் புதைந்து பல்வேறு இடங்களில் பல்வேறு நிலைகளில் செயல்பட்டுள்ளது.

இதன்பின் மணிமேகலை முன்பிறவியில் ஆபுத்திரனாகப் பிறந்து தற்போது புண்ணியராசனாகப் பிறந்துள்ள அரசனைக் கண்டு அவனுடன் மணிபல்லவம் அடைந்து அவனையும் முற்பிறவி பற்றி அறியச் சய்து வஞ்சி காஞ்சி போன்ற நகரங்களுக்குச் சென்று பௌத்த நெறிபரப்பி பவத்திறம் அறுக என பாவை நோற்ற நிலையில் மணிமேகலைக் காப்பியம் நிறைவு பெறுகின்றது.

அடிக்கடி திருப்புமுனைகள் இக்காப்பியத்தில் ஏற்பட்டபோதும் பெண்களை உயரத்தில் ஏற்றியும் பின் பள்ளத்தில் தள்ளியும் வீழச் செய்யும் முயற்சியே அதிக அளவில் நடைபெற்றுள்ளது என்பதை பெண்ணிய வாசிப்பின்போது உணரமுடிகின்றது.