வெள்ளி, டிசம்பர் 22, 2023

ஞான வாசிட்டம் தந்த ஞானம்

 

கோவிலூரின் கதை                                                    கோவிலூர் ஆண்டவர் திவ்ய வரலாறு

 

ஞான வாசிட்டம் தந்த ஞானம்

கனகு, காரைக்குடி

            முத்திராமலிங்கர் எனப்படும் கோவிலூர் ஆண்டவர் சீர்வளர் சீர் முத்துராமலிங்க ஞான தேசிகரின் ஞான வாழ்க்கை தொடர்கிறது.

முத்திராமலிங்கரின் முத்தி ரேகை

முத்திராமலிங்க ஆண்டவருக்கு மெய்ப்பொருளின் தொடக்கம் பொருள் வைத்த சேரியில்  நிகழ்ந்தது. அவர் செல்லப்போகும் ஞான வழியைப் பலரும் முன்னரே அறிந்து ஆண்டவருக்குச் சொல்லி மகிழ்ந்தனர். சிக்கலில் ஆண்டவரின் தந்தையாரின் கீழ் பணிசெய்த சொக்கலிங்கம் பிள்ளை என்பவர் ஆண்டவரின் கைரேகைகளின் குறிப்புகளைப் பார்த்து அவர் ஞான வழி செல்ல வேண்டியவர் என்று வழிகாட்டினார். ஆண்டவர் தட்சிணாமூர்த்தி வடிவம் என்று உணர்ந்தார்.

திருநீற்றுக் காப்பு

இளம் வயதில் திருநீற்றை முழுவதும் பூசிக் கொள்வது ஆண்டவரின் வழக்கம். இதில் கிடைக்கும் ஆனந்தம் அவருக்குப் பேரானந்தம். இதனை ஏதோ வித்தியாசமான செயல் என்று கருதி சாமியாடியிடம் அவரின் குடும்பத்தார் அவரின் வித்தியாசமான செயல்கள் விலகிப் போக ஒரு சாமியாடியிடம் அழைத்துச் சென்றனர். அந்தச் சாமியாடி சாமியாடினார். கண்களை மூடிக் கொண்டு அச்சாமியாடி தாம்பூலம் கேட்க ஆண்டவர் வெற்றிலையுடன் மூன்று சுண்ணாம்புக் கட்டிகளை வைத்துக் கொடுக்க, சாமியாடியும் வெற்றிலை உண்டார்.  அவரின் வாய் வெந்துபோனது. வெற்றிலை சாமியாடிக்கா? சாமியாடியின் மேல் வந்த இறையருளுக்கா? என்ற சந்தேகத்திற்குப் பதில் கிடைத்தது. வெற்றிலை சாமியாடியின் உடலுக்குத்தான். சாமியாடியின் மேல் வந்த இறையருள் வலிதில் வந்தது என்று எல்லோருக்கும் உணர்த்தினார் ஆண்டவர்.

குட்டிச் சுவரும் ஞானக் குதிரையும்

ஆண்டவர் சிறுவராக இருந்தபோது அவரின் இல்லத்திற்கு ஒரு முறை தீயினால் பாதிப்பு வந்தது. வீடு தீப்பற்றி எரிந்து கொண்டு இருந்தது. வீட்டில் உள்ளவர்கள் குழந்தைகளை முதலில் காப்பாற்றி வேறு இடத்திற்கு அழைத்துச் சென்றனர். அன்பின் உணவுப் பொருள்கள், மற்ற பண்ட பாத்திரங்கள் எல்லாவற்றையும் எடுத்துக் கொண்டிருந்தனர். ஆண்டவர் மற்ற குழந்தைகளுடன்  இவற்றையெல்லாம் கவனித்துக் கொண்டு இருந்தார். மற்ற குழந்தைகளின் மனதில் கவலையும் வயிற்றில் பசியும் இருப்பதைக் கண்டார். தானே முன்வந்து எல்லாக் குழந்தைகளுக்கும் உணவு பரிமாறி வயிற்றுப் பசி போக்கினார். அதன் பின் அந்தக் குழந்தைகளுக்கு விளையாட்டு காட்டு ஒரு குட்டிச் சுவரின் மீது ஏறி  அதனைக் குதிரையாகப் பாவித்து குழந்தைகளுக்கு  விளையாட்டு காட்டினார். குதிரையின் மீது இருந்த ஆண்டவர் ‘‘செவலைக் காளை ஊரை மேய்கிறது. நீ செவ்வையாக நட ” என்று மெய்வாக்குகளைச் சத்தம் போட்டுச் சொல்லிக் கொண்டு குதிரையை ஓட்டினார். குழந்தைகளும் திரும்பத் திரும்பச் சொல்லின. செவலைக் காளை என்பது எரியும் நெருப்பு. அதுவே சிவந்த காளை. அந்தக் காளை ஊரை அழித்துக் கொண்டிருக்கிறது. அழிவன எல்லாம் அழியப் போகின்றன. உன் பாதையைப் பார்த்து நீ போ  என்று ஞானம் தேடி, ஞானக் குதிரை ஓட்டினார் ஆண்டவர்.  இதனைப் பார்த்த அவரின் உறவுப் பெண் ஒருவர் ”குட்டிச் சுவர் குதிரையாகுமா?” என்றார்.  அதற்குப் பதிலாக மகிழ்நன் இன்றி மகப்பேறு வாய்க்கப் பெறும் காலத்தில் ”குட்டிச் சுவரும் குதிரையாகும்” என்றார்.இன்றைக்கு மகிழ்நன் இன்றி மகப்பேறு காண நவீன மருத்துவம் வழி காட்டுகிறது. இனி குட்டிச் சுவரெல்லாம் குதிரையாகிவிடும் காலமும் வரலாம்.

வேதாந்தப் பாடம்

பொருள்வைத்த சேரி  ஆண்டவர் வாழ்வில் திருப்புமுனையாக அமைந்தது. எத்திசை போவது எனத் தெரியாத கப்பல் ஞானத் திசை போக உகந்த லிங்க ஞான குரு வழிகாட்டினார். தன்னுடனேயே ஆண்டவரை இருக்க வைத்து, அவருக்கு நாளும் ஞான உபதேசங்களைச் சொல்லி வைத்தார். அவரின் நெசவு செய்யும் தறியின்மேல் விரிந்து கிடந்த ஞான வாசிட்டத்தை எடுத்து இதுவே உனக்கான நூல் என்று ஆண்டவருக்கு அவரின் ஞான குரு வழங்கினார். ஞான வாசிட்டம் என்னும் பெரு நூலை ஆண்டவர் வணங்கி வணங்கிப் படித்துப் படித்து மனதில் இருத்தினார்.

இல்லறமும் கூடியது

            உகந்த லிங்க ஞான குருவிடம் ஆண்டவரின் தந்தையார்  தன் மகனுக்கு இல்லற பந்தம் ஏற்படுத்த வேண்டும் என்ற வேண்டுகோளை வைத்தார். இல்லற ஞானியாக விளங்கிய உகந்த லிங்கரும்  ஆண்டவருக்கு இல்லற பந்தத்தை ஏற்படுத்த மனம் ஒப்பினார். தேவகோட்டையைச் சார்ந்த மீனாட்சி (மீனாம்பிகை) என்ற துணையும் ஆண்டவரின் வாழ்க்கைத் துணையானது. இல்லறமே நல்லறமாக நாளும் வளர்ந்து வந்து ஆண்டவர் என்னும் ஞான விருட்சம்.

யோகீஸ்வரரின் ஞான வாக்கு

            காரைக்குடி என்னும் ஓங்காரக்குடிக்கு ஒரு நாள் யோகீஸ்வரர் ஒருவர் வந்து மக்களுக்கு ஆசி வழங்கிக் கொண்டிருந்தார். அவர் தன்னுடன் உரையாடும் அளவிற்கு ஞானம் உடைய யாராவது இருந்தால் அவரை அழைத்து வாருங்கள் என்று தன்னைச் சுற்றியிருந்தவர்களிடம் கூறினார். அப்போது ஞானம் மிகுந்தவராக விளங்கிய ஆண்டவரை அறிமுகம் செய்தனர். அந்த யோகீஸ்வரர் ஆண்டவரை அப்படியே தழுவி மகிழ்ந்தார். மேலும் ”இவர் பலரையும் நன்னிலை அடையச் செய்யும் ஞான குருவாக விளங்கக் கூடியவர். வேதாந்தத்தை உபதேசிக்க வந்தவர். இவரை நகரத்தார்களின் ஞான குருவாகக் கொள்ளுங்கள். இதற்கான அடையாளம் இன்னும் சில நாள்களில் தெரியும்” என்றார். இதனைக் கேட்ட மக்கள் அனைவரும் ஆனந்தம் அடைந்து தங்களுக்குத் தேடாமல் கிடைத்த ஞானமுத்து என்று ஆண்டவரை வணங்கி நின்றனர்.

கொப்புடைய நாயகியின் பாதுகாவல்

            ஆண்டவர் திருக்கல்யாணம் முடித்து மீண்டும்  தனது தந்தை வாணிபம் செய்து வந்த சிக்கல் என்னும் ஊருக்கு வந்தார். இல்லறத்தையும்  நடத்தினார். வேத விழுப்பொருளையும் நாளும் பயின்றார். ஆண்டவருக்குத் தாங்க முடியாத சுர நோய் வந்தது. ஆண்டவர் துவண்டுபோனார். சுர நோயில் இருந்து எவ்வாறு தப்புவது என்று வழி தெரியாது நின்றார். அப்போது ஒரு பெண் ஆண்டவரின் அருகில் வந்து தீர்த்தம் ஒன்றை வழங்கினார். அதனை வாங்கிப் பருகிய அந்த நொடியில் ஆண்டவருக்கு இருந்த சுரநோய் தீர்ந்துபோனது. அதுவரை தெரிந்த அந்தப் பெண்ணின் உருவமும் உடன் மறைந்தது.

            ஆண்டவருக்கு இது அதிசயமாக இருந்து. வந்தது யார் என்று எண்ணி எண்ணி ஏங்கினார். வந்தது கொப்புடையம்மை என்று உணர்ந்தார். அவரின் உள்ளம் கொப்புடையம்மையைத் துதித்தது.  ஞானப்பால் தந்தாள் உமையம்மை. ஞான தீர்த்தம் அருளினாள் கொப்புடையம்மை. வருத்தப்படுபவருக்கு வந்து நிற்கும் காவல் தெய்வமாகக் கொப்புடையம்மை என்றும் பாதுகாக்கிறாள். ஞானப்பால் உண்ட சம்பந்தர் பாடியதுபோல் ஞான தீர்த்தம் உண்ட ஆண்டவரும் கொப்புடையாளைப் பாடினார்.

ஆலோன் இறந்தும் உமை பாகத்  தண்ணல் இறந்தும் கமலமுறை

நாலா நநத் தோன் முடிந்து இறந்தும் நார தாதி யோர் இறந்தும்

காலா திகளும் மொழிந்து இறந்தும் ககனமாதி யழிந்து இறந்து

மாலோ கங்களில் இறந்து நின்றாள் அம்மே கொப்பை யுடையவளே

சந்திரமண்டலம், சிவபெருமான், பிரம்மன், மக்கள், காலம், உலகம், மற்ற உலகங்கள் கடந்து நிற்பவள் அன்னை கொப்புடையாள் என்று நம்மைக் கடந்து நமக்காக நிற்பவள் கொப்புடையம்மை என்று மனமுருகிப் பாடினார் ஆண்டவர்.

காலடி பற்றிய கதை

            ஞான வாசிட்டமும் ஆண்டவரின் மனதிற்குள் நிறைந்து வந்தது. ஒருநாள் இரவில் உகந்த லிங்க ஞானகுரு உறங்கிக் கொண்டிருந்தார். அருகில் அவரின் பாதங்களைப் பார்த்து, பிடித்து ஆசிரியருக்கு அசதி போக்கிக் கொண்டிருந்தார் ஆண்டவர். ஆண்டவரைச் சோதிக்க ஏதேனும் ஒரு பாடலைச் சொல்லுக என்றார் ஆசிரியர்.

            குருவின் பெருமையை  அறிந்த வண்ணம் ஆண்டவர் வைராக்கிய சதகப் பாடல் ஒன்றைச் சொன்னார்.

            ”உன்னுமுணர் வுக்குணர் வாயென  உண்மை தந்தாய்

            மன்னும் சுருதிப் பொருளாய் வழி காட்டி நின்றாய்

            பின்னும் குருவாய் அடைந்து உன்னருள் பேண வைத்தாய்

            என்னென்றுரைப்பேன் நின் கருணை இருந்தவாறே”

என்ற பாடலைச் சொன்னவுடனேயே மிக மகிழ்ந்தார் உத்தலிங்க ஞான குரு. தக்க சீடன், வேதாந்த தத்துவத்தினை உலகிற்குத் தரும் உத்தமன் என்று, பாராட்டி மிக மகிழ்ந்தார்.

ஞானவாசிட்டம்  நிறைவு

            ஞானவாசிட்டம் முழுவதையும் கற்றார், உணர்ந்தார்,ஓதினார் ஆண்டவர்.  ஞானவாசிட்ட நிறைவின் பொருட்டு தன் குருவிற்குப் பலவகை அலங்காரங்கள்,அபிடேகங்கள், காணிக்கைகள் செய்து ஞான வாசிட்ட வெற்றியைக் கொண்டாட எண்ணினார் ஆண்டவர். அதற்கான பொருளுக்கு என்ன செய்வது என்று யோசித்தார்.

            அந்நேரம் அவரின் தந்தையார் காரைக்குடிக்குச் செல்லக் கடைப் பொறுப்பினையும், பணப்பெட்டிச் சாவியையும் வியாபாரக் கூட்டாளியிடம் தந்தார். அத்தோடு, அவரிடம் ‘‘என் மகனிடம் பெட்டிச் சாவி சென்றுவிடாமல் பார்த்துக் கொள் ” என்று சொல்லிவிட்டுச் சென்றுவிட்டார்.

            அவரும் சாவியைக் காத்தார். அப்போது ஊரில் இருந்து ஓலை வழியாகச் செய்திகளைக் கொண்டுவரும் வேலையாள் பல ஓலைகளை எடுத்து வந்தான். அவனைப் பார்த்த, ஆண்டவர் இதுவே சரியான தருணம் என்று எண்ணி அவனை வழி மறித்து ஓலை மாற்றினார். ”கூட்டாளியின் அன்னை இறந்து போய்விட்டார் என்றும் உடன் புறப்பட்டு வரும்படியும்” ஓலையில் எழுதி ஆண்டவர் அவ்வோலை கூட்டாளிக்குச் சென்றது. அவரும் ஓலையை மெய் எனக் கருதி ஆண்டவரிடம் சாவிகளை ஒப்படைக்கிறார்.

            பெட்டியில் தூங்கிய பணம் ஞான வாசிட்ட வெற்றி விழாவிற்கு உதவி- பெரும்பேறு அடைந்தது. விழா சிறந்தது. ஊர் போன கூட்டாளியை ஆண்டவரின் சித்தப்பா மாயாண்டி விசாரிக்க பொய் மெய்யானதும்,மெய் பொய்யானதும் தெரியவந்தது. என்ன செய்வது . ஞானவாசிட்ட விழா நிறைவடைந்து இருநாள்கள் கழித்தபின்பே உண்மை வெளிப்பட்டது.

மயில் பிடிக்கப் போய் கோயில் பிடித்த கதை

            காரைக்குடிக்கும் சிக்கலுக்கும் அவ்வப்போது தொடர்பு ஏற்பட்டுக் கொண்டே இருக்கும். ஆண்டவர் காரைக்குடிக்குச் செல்கிறேன் என்று ஒரு முறை தன் குருவிடம் சொல்லிவிட்டுக்கிளம்பினார். அப்போது குருவின் பத்தினி ”காரைக்குடிக்குச் சென்று, திரும்பி வரும்போது, மயில்குஞ்சுகளைப் பிடித்துக் கொண்டுவரவேண்டும்” என்றார். அதனை குருவாசகமாக ஏற்று ஆண்டவரும் காரைக்குடிக்கு வந்தார். அவரின் பணிகள் நிறைவடைந்த பின் மயில் குஞ்சுகள் பற்றிய நினைவு வந்தது.

            காரைக்குடிக்கு அருகில் உள்ள மரங்கள் அடர்ந்த பகுதியான கோவிலூர் அருகில் மயில் குஞ்சுகள் கிடைக்கும் என்று எண்ணி தன் நண்பர் நல்லானுடன் ஆண்டவர்  கோவிலூருக்கு வந்தார். வந்த நேரம் நல்ல நேரம். கோவிலூர் தெய்வ வளம் பெறுவதற்கான நேரம் அது. வந்தவர் வேடர்களை அழைத்து இரு மயில் குஞ்சுகள் வேண்டும். பிடித்து வாருங்கள் என்றார். அவ்வேடர்கள் மயில் குஞ்சுகள் பிடிக்கப் போயினர்.

            அந்நேரத்தில் அருகில் உள்ள  கோயில் ஆண்டவர் கண்ணில் படுகிறது. வன்னி மரங்கள் சூழ்ந்திருக்க அருள்மிகு கொற்றவாளீசர் , திருநெல்லை அம்மன் வீற்றிருக்கு புராதன தலம் அது. இருந்தாலும் பராமரிப்பு இன்றி அக்கோயில் இருந்தது. அப்பனும் அம்மையுமாக வீற்றிருக்கும் அக்கோலம் ஆண்டவரின் மனதில் அழியாக் கோலமானது. நல்லானிடம் நாம் இக்கோயிலுக்கு வாரந்தோறும் வரவேண்டும் என்றார். திங்கள் கிழமையும், வியாழக் கிழமையும் கோயிலுக்கு வந்து தொண்டாற்றுவது என்று இருவரும் முடிவு செய்தனர்.

            மயில் குஞ்சுகளை வேடர்கள் பிடித்து வந்தனர். அவற்றைப் பொருள் வைத்த சேரிக்கு அனுப்பி வைத்தார் ஆண்டவர்.

            மயில் குஞ்சு பிடிக்கப் போனவர்களைக் கோயில் பிடித்துக் கொண்ட கதை இதுதான். வாரந்தோறும்  அருள்மிகு கொற்றவாளீசர், திருநெல்லை அம்மனை இருமுறை ஆண்டவர் சுவாமிகள் வழிபட்டு வந்தார். அவ்வாறு வழிபடும் ஒரு நாளில் மழை மிகுந்தது. ஒதுங்க இடம் இன்றி ஆண்டவனுடன் ஆண்டவரும் ஒடுங்கினார். இருந்தாலும் மழையின் வேகம், பெய்யும் காலம் ஆகியன அதிகமாயின. இரவு முழுவதும் நித்திரை கொள்ளாது யோகம் செய்து கொண்டிருந்தார் ஆண்டவர்.

            விடியலில் அன்னைக்கும் அப்பனுக்கும்  இருக்க இடம் நன்மையாய் அமைக்கவேண்டுமென ஆட்களை ஏவினார். பனை ஓலைகள் மாற்றப்பட தயாராக இருந்தன. ஆட்கள் பனையோலையை வேய முற்பட்டனர். அப்பன், அம்மை இருந்த குடிசை சாய்ந்து விழுந்தது. ஆண்டவர் மனதில் இக்கோயில் கற்கோயிலாக வேண்டும் என்ற எண்ணம் தோன்றியது.

           

தந்தை செவிகள் கேட்டும் கேட்காதவை

            ஆண்டவரின் மனதிற்கு ஏற்ப பணம் தருவதில் ஆண்டவரின் தந்தைச் சற்று கண்டிப்புடன் இருந்து தடைகள் செய்துவந்தார். ஆண்டவர் தன் குருவின் பத்தினியும், அவரின் இரு பெண்குழந்தைகளும் மங்கலம் பெற பெரும் பொருள் கொடுக்க வேண்டித் தன் தந்தையிடம் வேண்டுகோள் வைத்தார்.

            வேண்டுகோளைக் காதில் வாங்கவே இல்லை ஆண்டவரின் தந்தையார். ஆண்டவர் தன் தந்தையை நோக்கி ‘‘ தங்களுக்குக் காது கேட்காதா ” என்றார்.அந்தச் சொற்கள் தந்தையின் காதுகளில் விழுவதற்குமுன்பு அவரின் காதுகள் கேட்கும் திறனை இழந்துவிட்டன.

            தந்தையாருக்கு என்ன செய்வதென்றே புரியவில்லை. உடனே ஆண்டவரின் குருவினைக் கண்டார். நடந்ததைச் சொன்னார். உகந்த லிங்க ஞானகுரு, ”ஆண்டவர் கையால் திருநீறு பெற்று உய்க ” என்றார். குருவின் முன்னிலையில் தந்தைக்கு நீறளித்து அவரின் செவிகள் பழுதினை நீக்கினார் ஆண்டவர். மேலும் ”இந்நாள் முதல் தன் குருவின் குடும்பத்தைக் காத்துவருக!” என்று திருவாய் மலர்ந்தருளினார். அவ்வாறே ஞானக் காதுகள் பெற்று உய்ந்தார்.

           

 

திருநீற்றுக் காப்பு

 

கோவிலூரின் கதை

கோவிலூர் ஆண்டவர் திவ்ய வரலாறு

திருநீற்றுக் காப்பு

            அவர் சிறு குழந்தை என்று எண்ணிவிட வேண்டாம். அவர் தன் பதிமூன்று வயதிலேயே, பல கலைகளையும் கற்றுத் துறை போகியவர். அவரின் எண்ணம் முழுவதும் பரம்பொருளின் பக்கமே இருந்தது. எந்நேரமும் திருநீறு அணிந்தவராகவே அவர் இருப்பார். நெற்றி நிறைய திருநீறு, பக்தி நிறைய மனம் என்றே அவரின் இளமை வாழ்க்கை அமைந்திருந்தது. பேசுவதெல்லாம் ஞானம். சொல்வதெல்லாம் நடந்தேறும். எண்ணம், சொல், செயல் எல்லாவற்றிலும் மெய்ப்பொருளையே எண்ணுபவர், சொல்பவர், செய்பவர்.

            திருநீற்றுக்காப்பு என்பது அவருக்கு மிகவும் பிடித்த செயல். ஒண்மைய னே! திருநீற்றை உத்தூளித்து ஒளிமிளிரும் வெண்மையனே விட்டிடுதிகண்டாய் என்று மாணிக்கவாசக சுவாமிகள் காட்டும் திருவாசக நெறிப்படி திருநீற்றை உத்தூளித்து ஒளிமிளர்வதில் அவருக்கு அளவு கடந்த ஆசை. நெற்றி மட்டுமல்லாது அங்கமெல்லாம் திருநீற்றைப் பூசிக் கொள்வதில் அவருக்கு அளவு கடந்த ஆசை.

            திருக்கோயிலுக்குச் செல்கிறோம். கோயிலில் திருநீறு அளிக்கப்படுகிறது. அளவுக்கு அதிகமாக தரப்பெற்ற திருநீற்றை என்ன செய்ய முடியும். நெற்றியில் அணிந்து, மீதமுள்ளதை தட்டி வீச முடியுமா?  அல்லது தூணில் தடவி கைகளுக்கு இதம் கொள்ள முடியுமா? எது நல்லது. இவை எதுவும் நல்லவை அல்ல. மீதமிருக்கும் திருநீற்றை உடல் முழுவதும் காப்பிட்டுக்கொள்ளலாம். அதுவே சிறப்பு. இளம் வயதில் மூத்தோர்கள் சொல்வார்கள் மீதமுள்ள திருநீற்றை வயிற்றில் தடவிக்கொள் என்று. மிக நல்ல பழக்கம் அது. நமக்கு நாமே செய்துகொள்ளும் திருநீற்றுக் காப்பு அது.

            ஞான சம்பந்தர் கூன் பாண்டியரின் உடல் முழுவதும் வெப்பு நோய் நீங்க திருநீற்றுக் காப்பு செய்தார். இதையெல்லாம் எண்ணி அறிந்து உணர்ந்து அவர் தன் உடலம் முழுவதும் தீருநீற்றைக் காப்பாகச் சாத்திக் கொண்டார்.

            கண்டவர்களுக்கு இது  விநோதமாக இருந்தது. விபரீதமாக இருந்தது. வித்தியாசமாக இருந்தது. அவரின் திருநீற்றுக் காப்பினை அவர்களது பெற்றோரிடத்தில் சொல்லிச் சொல்லி ஞானமின்றி மகிழ்ந்தார்கள்.

            தனது குழந்தை இப்படித் திருநீற்றில் விளையாடிக் களிப்பதைக் கண்ட பெற்றோரும் துணுக்குற்றனர். என்ன செய்வது இந்தக் குழந்தையை! எப்படித் தவிர்ப்பது இந்த வழக்கத்தை என்று எண்ணி எண்ணிக் கலங்கினர்.

            யாது செய்யலாம் என்று எண்ணிய அவர்களுக்கு ஒரு வழி கிடைத்தது. அருகில் சாமியாடி ஒருவர் இருப்பதை அறிந்தார்கள். அவரிடத்தில் இந்தத் திருநீற்றுக் காப்புக் குழந்தையை அழைத்துப் போய் காட்டினர்.

            சாமியாடி  அந்தச் சிறு குழந்தையை எதிரில் உட்காரவைத்து  நேருக்கு நேர் பார்த்தார். நெட்டி முறித்தார். கைகளைத் தூக்கி தூக்கி ஆடினார்.

”மனிதரில் சாமி வந்து இறங்குவது உண்டா? ” ஐயம் எழுந்தது அந்த ஞானக் குழந்தைக்கு.

சாமியாடியின் ஆட்டம் அதிகமானது. அவர்  பலவாறு கத்திக் கூச்சலிடுகிறார். இதனைக் கண்ட அந்தக் குழந்தைக்கு அதே கேள்விதான். மனிதரில் சாமி வந்து இறங்குவது உண்டா? பிறகு ஏன் தெய்வம். கோயில். சாமியாடியே போதுமே எல்லாவற்றுக்கும் என்று பல வகை எண்ணம் அந்தத் தெய்வீகக் குழந்தைக்கு.

இப்போது சாமியாடி ஆட்டத்தை நிறுத்தினார். கத்துவதை நிறுத்தினார். மெல்லிய குரலில் ”தாம்பூலம் தா!”  என்றார் சாமியாடி

”தந்தேன் தாம்பூலம்” என்றது குழந்தை

குழந்தை தந்த தாம்பூலத்தை வாங்கிச் சுவைத்தார் சாமியாடி. சுவைக்க சுவைக்க வாய் வெந்துபோனது. நாக்கு அழற்சி ஏற்பட்டது.

”என்ன தந்தாய்” என்றார் சாமியாடி

‘தின்ன வெத்திலையும் பாக்கும் சுண்ணாம்பு மூன்று கட்டியும்” என்றது

குழந்தை

”என்னது மூன்று சுண்ணாம்புக் கட்டியா?” அதிர்ந்தார் சாமியாடி

‘எல்லாம் அறிந்த தாங்கள் வெற்றிலைக்குள் என்ன இருக்கிறது என்பதை அறிய முடியவில்லையா”

‘‘ம்...ம்...” விழித்தார் சாமியாடி

‘‘போலிச்சாமிக்கு மூன்று சுண்ணாம்புக் கட்டி சாட்சி” என்றது குழந்தை

”......”

சாமியாடியின் ஆட்டம் நின்றது. தான் போலி என்று உணர்ந்தார் சாமியாடி. ஞானக் குழந்தை சிரித்தது.

திருநீறும் வெள்ளை, சுண்ணாம்பும் வெள்ளை. முன்னது மெய். பின்னது பொய்.  முன்னது ஞானம். பின்னது போகம். சுண்ணாம்புக் கட்டிகள், திருநீற்று வெள்ளைக் காப்பின் அருமையைக் காட்டின. ஞானக்குழந்தை சிரித்துக் கொண்டே இருந்தது.

சீர் வளர் சீர் முத்திராமலிங்க ஆண்டவர்தம் இளவயதில் நடந்த திருநீற்றுக் காப்பு  நிகழ்ச்சி இது. அவர் அணிந்த திருநீறு இன்னமும் கோவிலூர் வேதாந்த மடத்தில் நின்றுவெல்கிறது.

ஒவ்வொரு காட்சியாய் ஒவ்வொரு சொல்லாய் ஒவ்வொரு கருத்தாய்க் கண்டு கொண்டிருந்த பெற்றோர்கள் தம் குழந்தை மற்ற குழந்தைகளைப் போல அல்லாமல் வேறுபட்டது. மெய்வயப்பட்டது என்பதை உணர்ந்து கொண்டுச் சாமியாடியை விட்டு விலகினர்.

            பொய் ஓடும். மெய் நிற்கும்.

பொருள் வைத்த சேரி தந்த மெய்ப்பொருள்

 

கோவிலூர் ஆண்டவர் திவ்ய வரலாறு

                              பொருள் வைத்த சேரி  தந்த மெய்ப்பொருள்

மனிதர்கள் தமது உடல்  தோற்றத்தை பல்வேறு வகை  ஆடைகள் அணிந்து அழகு படுத்துகின்றனர்.  இந்த ஆடைகளை நெய்து தயாரித்துத் தரும் நெசவாளர்கள் மனிதர்களின் மானத்தையும் அழகையும் காப்பவர்கள்.  ஆள் பாதி,  ஆடை பாதி இதுவே மனித நாகரீகம். உழவிற்கும் தொழிலிற்கும் வந்தனை செய்வோம் என்றார் பாரதியார். உழவு என்பது விவசாயத்தைக் குறிக்கும். தொழில் என்பது நெசவுத் தொழிலைக் குறிக்கும்.  நெசவுச் தொழில் செய்து, மனித உடலையும், மனித மனத்தையும் அழகுபடுத்தய அன்பர்கள் பலர் உண்டு. வள்ளுவரும் நெசவுத் தொழில் செய்தவர். கபீர்தாசரும்  உடலையும் உள்ளத்தையும் காக்கும் நெசவுத்தொழில் செய்தவர்.  பொருள் வைத்த சேரி என்ற இடத்தில் வாழ்ந்த உகந்த ஞான தேசிக சுவாமிகளும் நெசவுத்தொழில் செய்தவர். தற்காலத்தில் வாழ்க வளமுடன் என்ற மங்கல வாசகத்தை உலகிற்களித்த ஞானி வேதாத்திரி மகரிஷியும் நெசவுத் தொழில் புரிந்தவர். இவ்வாறு நெசவுத் தொழில் புரிந்தவர்கள் மனிதர்தம் அக அழகையும், புற அழகையும் வளமைப் படுத்தியவர்கள். அவர்களின் வழியில் உடலையும் உள்ளத்தையும் பேணி பண்படுத்தி வாழ வேண்டியது மக்களின் வாழ்க்கைக் கடமையாகும்.

            பொருள்வைத்த சேரியில் உகந்த ஞான தேசிகர்  தன் வருவாயை எண்ணிக் கொண்டிருந்தார். நெசவுத்தொழிலில் ஓரளவிற்கு வருமானம் வந்து கொண்டுதான் இருந்தது. தன் வருவாயை அவர் மூன்றாகப் பகுத்தார். ஒன்றில் நாளைக்குத் தன் தொழிலுக்கு வேண்டிய பொருள்களை வாங்கிட செலவழிப்பது அவரின் இயல்பு. மற்றொன்றில் தன் குடும்பச் செலவுகளுக்கு என்று ஒதுக்கி வைத்தார். மூன்றாம் பகுதியை தன் இல்லத்திற்கு வரும் அடியவர்க்கு உணவு தருதல், அவர்களுக்கு வேண்டுவன தருதல் என்று செலவழித்தார். இம்மூன்றில் மூன்றாவதைச் செலவழிக்கையில் அவரின் மனம் பெரிதும் மகிழ்ந்தது.

            நாள்தோறும் இப்படித்தான். மூன்றாய் பிரித்த வருவாய், நன்றாய் வளர்ந்தது. நாளும் அடியவர்கள் உகந்தலிங்க ஞான தேசிகர் இல்லத்திற்கு வந்து உணவருந்தினர். அவருடன் ஞானத்தைக் கலந்து பேசி மகிழ்ந்தனர்.

            அன்று சிக்கலில் இருந்து ஓர் ஆன்மப் பக்குவப்பட்ட இளைஞர்  உகந்த லிங்க ஞான தேசிகரைப் பணிந்து வணங்க வந்தார். அவருடனே என்றும் அவரைப் பிரியாது இருக்கும் நல்லான்  என்ற நண்பரும் வந்தா்.  வந்த இளைஞர் சகல கலைகளிலும் தேர்ச்சி பெற்றவராகக் காணப்பட்டார். தன் மேனி முழுவதும் திருநீறு பூசியவராக விளங்கினார். மேலும் அவர் தன் நண்பன் நல்லானோடு  தெய்வ சம்பந்தமான விஷயங்களை விவாதிப்பார். தென்கிழக்கு திரைசயில் இருந்த திருவாசல் மடம்தான் அந்த இளைஞரின் இருப்பிடமாக விளங்கியது. தனக்கான குருவைத் தேடிடும்  பார்வை அவரிடத்தில் இருந்தது.  தனக்கென  யாதுமின்றி இறையுளத்துடன் திரிபவராக விளங்கிய அந்த இளைஞரை உகந்த லிங்க ஞான தேசிகர் திருக்கண் நோக்கிப் பார்த்தார்.

            அப்பார்வையிலேயே தான் தேடிவந்த ஞான குரு இவர் தான்  உணர்ந்து கொண்டார் அந்த இளைஞர். அந்த இளைஞரிடத்தில் அவரது பெற்றோர் பற்றியும் ஊர் பற்றியும் உகந்த லிங்க ஞான குரு வினவினார்.

            இறைபற்றைத் தவிரக் குடும்பப் பற்று அற்று இருந்த அந்த இளைஞரிடம் கேட்கப் பட்ட இந்தக் கேள்விகள் அர்த்தமற்றவையாக விளங்கின. இருந்தாலும் கேட்பது குரு என்பதை உணர்ந்து அவர் பதில் தந்தார்.

            ”என் பெயர் முத்து ராமலிங்கம். ஆனால் முத்தி ராமலிங்கம் என்றே என்னை நான் அழைத்துக்கொள்வதுண்டு. முத்தி நிலை அடையவேண்டும் என்பதாலேயே  நான் என் பெயரை முத்திராமலிங்கம் என்று வைத்துக் கொண்டேன்.

            இந்த முத்தி ராமலிங்கம்  முத்தி பெறுவதற்காக உகந்தரை உவந்து வந்துள்ளது. தாங்கள் எனக்கு நல்வழி காட்ட வேண்டும்.

            என் ஊர் பற்றி தாங்கள் கேட்டதற்கு நான் பதில் சொல்ல வேண்டும்.  வணிகர்கள் வாழும் காரைக்குடி எனது ஊர். அந்த ஊரில் என் தந்தையான மெய்யப்பரும் தாயான வள்ளியம்மை வாழ்ந்து இல்லறத்தின் விளைபயனாய் என்னைப் பெற்றெடுத்தார்கள். பெற்றவர்கள் அவர்கள் என்றாலும் என்னை ஆட்கொண்டு ஞானத் தந்தையாக விளங்கவேண்டியவர்கள் தாங்களே” என்று சொல்லி  அவரிடத்தில் தன்னை அந்த இளைஞர் முற்றிலும் ஒப்படைத்தார்.

தன்னை நாடிவந்த நல்ல ஆன்மாக்களை ஈடேற்றும் பெரும்பணியைச் செய்துவந்தவர் பொருள் வைத்த சேரி உகந்த லிங்க ஞான தேசிகர். அவரும் இந்த இளைஞனின் அருள் நோக்கத்தை அறிந்து அவருக்கு ஞான உபதேசம் அளிக்க திருக்கண் பார்வை சேர்த்தார்.

இந்த இளைஞருக்குச் சில நாள்கள் முன்னர்தான் இதுபோல் கந்தசாமி என்பவரும்  முழுவதுமாக உகந்த லிங்க ஞானதேசிகரிடம் ஒப்படைத்து குரு உபதேசம் பெற்றார்.  அவரின் தகுதி அறிந்து அவருக்கு உபதேசம் செய்தருளி அவரை அண்ணாமலையில் சென்று மடம் அமைத்து சேவையாற்ற குருவாசகம் கிடைத்தது.

கந்தசாமி ஞான தேசிக சுவாமிகளும் திருவண்ணாமலையை அடைந்து அங்குக் கிழக்குப் புறத்தில் ஞான வேள்வியைத் தொடங்கினார். இவரின் இருப்பிடத்தில் இவருக்கு இவரின் அடியார்கள் மடம் அமைத்தனர். திருவண்ணாமலையில் அமைந்த முதல் மடம் ஈசானிய மடம் என்பது குறிக்கத்தக்கது. ஈசானத்தில் அமைந்த மடம் ஈசானிய மடம் ஆனது. கந்தப்பர் ஈசானிய தேசிகர் ஆனார். அவர் ஞானவழியில் அருஞ்சாதனைகள் புரிந்தார்.

 ஈசானிய மடம் கோவிலூர் மடத்தின் ஆளுகைக்கு உட்பட்டு நாளும் இறை பணி ஆற்றி வருகிறது. இம்மடம் செட்டிநாட்டுக் கட்டடக் கலையில் கட்டப்பெற்று இன்று பொலிவுடன் திகழ்கிறது.  இவ்வீசானிய  மடத்தில், கந்தப்ப சுவாமிகள் சுரங்கம் அமைத்து தவமியற்றும் வழக்கம் கொண்டார். ஒருநாள் கந்தப்பசாமி  தவத்தின்போது இவர் அருகே புலியொன்று அமர்ந்திருப்பதை இவர் கண்டார். ‘‘அண்ணாமலையப்பா! வந்து அணையப்பா!” என்று இவர் தம்மை ஆட்கொள வேண்ட அப்புலி அமைதியாய் அகன்று போனது.

இவ்வாறு பக்குவப்பட்ட உயிர்களுக்கு, ஞானம் தேடிவரும் ஆன்மாக்களுக்கு ஆதரவாய் ஆன்ம பலம் தரும் அரும்பணியை உகந்த லிங்க சாமிகள் பொருள் வைத்த சேரியில் நிகழ்த்தி வந்தார். நமது நல் இளைஞர், கோவிலூர் ஆண்டவர் என்று பின்னாளில் அழைக்கப்பெற்ற முத்திராம லிங்கர் தமது ஞானத் தேடலின் வழியாகச் சிறந்த ஆசிரியரை, நெறிகாட்டும் நல்லவரை உகந்த லிங்க ஞான குருவை அடைந்து ஞானவழிக்குத் தொடக்கம் பெற்றார்.

அன்றிலிருந்து ஞானம் அடைய விரும்பும் இளைஞனாக  அவர் ஆனார். அப்போது அவருக்கு வயது பதின் மூன்று  அவ்வயதிலேயே ஞானத்தின் வலிமையை அவர் உணர்ந்து கொண்டார்.

இவ்வாறு முத்தி ராமலிங்கம் வாழ்க்கையில் பொருள் வைத்து சேரி மெய்ப்பொருளை ஆண்டவர் மனதில், முத்திராமலிங்கவர் மனதில் வைத்த சேரியாக விளங்கியது. பொருள் வைத்த சேரிக்கு நாமும் போவோம். மெய்ப்பொருள் பெறுவோம்.

           

கோவிலூர் ஆலயமும் மடாலயமும் எழுப்பிய திருவுள்ளம்.

 


திருக்கோவிலும் மடாலயமும்   எழுப்பிய திருவுள்ளம்

 

-       கனகு, காரைக்குடி

கோவிலூர் ஆண்டவர் முத்துராமலிங்கர் வாழ்வில் பல்வேறு அற்புதங்களும், திருவிளையாடல்களும், அருள்மாட்சிகளும் நடைபெற்று வந்தன. ஆண்டவர் தன் குருவான ஸ்ரீ உகந்தலிங்கருக்கும் அவரின் குடும்பத்தாருக்கும் வேண்டுவன அளித்து வந்தார். குருவிற்கு காணிக்கையாக நெல் மூட்டைகளையும் வழங்கி அவர் அருள் பெற்றார். ஆண்டவரை நண்பர்களும், பக்தர்களும், சீடர்களும், பணிந்துப் போற்றி மகிழ்ந்து அவர் புகழ் பரவினர்.

கருட தரிசனம்

நல்லான் செட்டியார் ஒரு முறை கருடனைப் பார்த்த பின்பே உணவருந்த வேண்டும் என்று எண்ணியிருந்தார். அவரிடத்தில் ”யாமே கருடன்! என்னைக் கண்டு கொண்டாய். இனி உண்ணலாம்” என்று ஆண்டவர் கூற அதனையும் தாண்டி நல்லான் செட்டியார் கருடனைத் தேடித் தேடி அலைந்தார். கருடனைக் காணமுடியாமல், ஆண்டவரைத் தரிசித்து அவர் சொற்கள்படியே அவரே கருடனாகி நிற்க இவர் தன் விரதத்தை முடித்துக்கொண்டார்.

குரு பரிபூரணம்

இவ்வாறு இருக்கும் காலத்தில்  ஆண்டவரின் குருவான ஸ்ரீ உகந்த லிங்கர்  1970 ஆம் ஆண்டு, அதாவது வெகுதான்ய வருடம்  பங்குனி மாதம் 26 ஆம் நாள் பரிபூரணம் அடைந்தார்.  தம் குருவின் பரபூரண நிகழ்வை பல அடியார் பெருமக்கள், ஆன்மீகப் பெருமக்கள் புடைசூழ நடத்தினார். இதன்பின் சிதம்பரம் கேணி மடத்தில் இருந்த வீரபத்ரசாமியை பொருள்வைத்த சேரியில் இருக்க வைத்துத் தான் காரைக்குடிக்கு வந்து சேர்ந்தார்.

கன்னிகை சொன்ன அறிவுரையும் கோயில் பணி தொடக்கமும்

காரைக்குடியில் அடியார்களை அனுதினமும் சந்தித்து அவர்களுக்கு ஞான வழி காட்டிவந்தார். ஆண்டவருக்கு அப்போது வயது இருபத்தோரு வயது நடைபெற்றது. கோவிலூர் கொற்றவாளீசர் திருக்கோயில் மேம்பாட்டுப் பணி தொடங்குவதில் சிறு காலதாமதம் ஏற்பட்டது. இந்நேரத்தில் ஆண்டவர் சுவாமிகள் வீட்டிற்கு அவர் இல்லாத நேரத்தில் ஒரு கன்னிப் பெண் வருகை தந்து அவரின் தாயாரிடம் ‘‘ இன்னும் கோயில் பணிகள் தொடங்க வில்லையே ! விரைவில் தொடங்கச் சொல்” என்று  கூறினார்.

ஆண்டவர் சுவாமிகள் வீடு வந்து சேர்ந்தபோது இச்செய்தியை அவரின் தாயார் சொல்ல உடன் கோயில் பணிகளைத் தொடங்கினார். பல நகரத்தார் பெருமக்களின் பொருளுதவியால் கோயில் திருப்பணி தொடங்கப்பெற்றது. கொற்றவாளீசர் சன்னதி, அம்மன் சன்னதி, அநேக மண்டபம் , இராச கோபுரம், விமானங்கள், வாவி, தடாகம், இராச வீதி போன்றனவற்றை ஆண்டவர் சுவாமிகள் திட்டமிட்டுக் கட்டினார்.

ஆண்டவரின் வேண்டுகோள் கடிதத்திற்கு இரங்கிய இலுப்பை முனி

கோயிலுக்கு உரிய கொடிமரம் தேவைப்பட்டது. பல மரங்கள் பார்த்தும் எம்மரமும் சரிவர அமையவில்லை.  திருக்கோஷ்டியூருக்கு அருகில் உள்ள ஏரியில் ஒரு பெரிய இலுப்பை மரம் இருப்பதாகக் கேள்விப்பட்டு அதனைக் கொண்டு கொடிமரம் செய்ய முடிவானது. ஆனால் அந்த இலுப்பை மரத்தில் முனி ஒன்று குடியிருப்பதால் அதனை வெட்ட வேண்டாம் என்று அவ்வூரார் தடுத்தனர்.

இதனை அறிந்த ஆண்டவர் சுவாமிகள் அந்த மரத்தில் ஒரு வேண்டுகோள் திருமுகம் (கடிதம்) எழுதி வைத்தார். ‘இலுப்பை மர முனியய்யா! கொற்றவாளீசர் கொடிமரத்திற்கு இம்மரம் தேவை என்பதால் வேறு மரம் பார்த்துக் கொள்ளவும்” என்றெழுதி அம்மரத்தில் எழுதி வைத்தார்.  ஆண்டவர் சொல்லுக்கே வலிமை அதிகம் என்றால் எழுத்திற்கும் இன்னும் வலிமை அதிகம் அல்லவா. இலுப்பை முனி அகன்றது. கொற்றவாளீசர் கோயிலுக்குக் கொடிமரம் வந்தது.

இவ்வாறு பல நிகழ்ச்சிகள் நடைபெற்று வர கோயில் திருப்பணிகளும் சிறப்புடன் நிறைவேறி வந்தன.

மக்களுக்கு அறிவுரை

            நாளும் கோயில் பணிகளைப் பார்ப்பது, அனைத்து வேளைகளிலும் அம்மன், சுவாமி  அபிடேகம் தீபம் பார்ப்பது, கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு நல்லன சொல்வது என்று பணிகளைப் பட்டியலிட்டுக் கோயிலூர் ஆண்டவர் செய்துவந்தார். குறிப்பாக மக்களிடத்தில் பக்தி பெருக  வேண்டும். செப, தபம் செய்ய வேண்டும். நால்வர் பாடல்கள் இசைக்கவேண்டும். நந்தவனம் அமைக்க வேண்டும். இவை செய்ய ஊருக்கு ஊர் மடாலயங்கள் அமைய வேண்டும் என்று நன்மொழிகளை நாளும்  சொல்லி வந்தார்.

            ஆண்டவர் முத்துராமலிங்கர் வந்த பின்பே, நகரத்தார் வீடுகளில், ஊர்களில் மடம் உண்டானது. சிவாலங்கள் மிகுதியும் உண்டானது. வாசிட்டம் படிக்கப்பட்டது. நால்வர் தமிழ் படிக்கப்பட்டது.  இதுவெல்லாம் கோவிலூர் ஆண்டவரின் சிறப்புகளாக அமைந்தன.  இவை இன்றும் கோவிலூர் மடாலயத்தின் சிறப்புக்களாக இன்றும் அமைந்துள்ளன. என்றும் அமையும். ஆண்டவர் வழி சிறக்கும்.

            கோயில் பணிகள் பல சன்னதிகளை உள்ளடக்கி வளர்ந்தது. அதளக் கண்மாயில் வணங்க வருவார்க்கு ஏங்கி நின்ற அகத்தீஸ்வரர் கொற்றவாளீசர் கோயிலுக்கு வந்து நாளும் பூசை பெற்றார். மறவன் கோட்டை கைலாச நாதர், நித்யகல்யாணி அம்மையும்  கொற்றவளீசர் கோயிலுக்குள் வந்து அருள் புரிந்தனர்.

            கோவிலூர் அம்மன் சன்னதிக்கும், கொற்றவாளீசர் சன்னதிக்கும் இடையில் சிறு தெய்வப் பீடம் ஒன்று இருந்தது. அதற்கு எருமையைப் பலி கொடுக்கும் வழக்கம் இருந்தது. இடையில் ஏற்பட்ட இந்த பீடத்தை நகர்த்திட ஆண்டவர் எண்ணினார். பணியாளர்களை ஏவி அப்பீடத்தை நகரத்த முயற்சி மேற்கொள்ளப் பட்டது. பணியாளர்கள் பீடத்தை நகரத்த அஞ்சினர். கோவிலூர் ஆண்டவர் உயிர்ப்பலி கொள்ளும் இப்பீடத்தை இங்கு இருந்து நகர்த்த வேண்டும் என்ற எண்ணத்தில் தானே முதன் முதலாக பீடத்தை நகரத்தும் பணிக்கான முதலடியை எடுத்து வைத்தார். அதன் பின் பணியாளர்கள் பயமின்றிப் பீடத்தை நகர்த்தினர்.

            அப்பீடத்தின் உயிர் கொள்ளும் சக்தியை அமைதியாக்க அப்பீடம் குளத்துள் இடப் பெற்றது. இருப்பினும் குளத்தில் மூழ்கிய இளம் பெண்களை அப்பீட தேவதை ஆட்கொண்டு அவர்களை ஆட வைத்தாள். கோவிலூர் ஆண்டவர் தெருவழியே நடக்கும்போது இப்பெண்களின் அவல நிலையைக் கண்டார். பின் மற்றொரு பீடத்தை  கோயிலுக்குச் சற்றுத் தொலைவில் அமைத்து அங்கு அத் தெய்வத்திற்கு இருப்பிடம் தரப்பெற்றது. ஊர் அமைதியானது. கோயிலும்  உயிர்ப்பலி கொள்ளாத இடமானது.

அஞ்சாத பெருமாளும் அவரின் புற்றும்

            ஆண்டவர் ஒரு நாள் தூங்கும் பொழுதில் கனவில் சாளி என்ற ஊரில் உள்ள அஞ்சாத பெருமாள்  தோன்றி தன் முதுகில் புற்று உள்ளது. அதனைத் தாங்கள் மட்டுமே நீக்க இயலும் என்று கோரிக்கை வைக்கிறார். அடுத்த நாள் காலையில் நல்லான் செட்டியாரை அழைத்து அவர் தொடர்புடை சாளி திருக்கோயிலைக் காண ஆண்டவர் புறப்பட்டார்.

            நல்லான் செட்டியாரை அழைத்து அக்கோயிலின் அய்யானருக்குப் பின் யாது உள்ளது எனக் கண்டுவரச் சொன்னார். நல்லான் குளிக்காமல் வந்துவிட்டேன் என்னால் இயலாது என்றார். உடன் ஆண்டவர் தானே தன் காலால் ஒரு உதை உதைத்துச் சுற்றுச்சுவரைத் தள்ளிவிட்டார். அங்கே அய்யனாருக்குப் பின்பு  பெரிய புற்று வளர்ந்திருந்தது. இது குறித்து நல்லான் செட்டியாரிடம் கேட்டபோது, கல் தச்சன் ஒருவனுக்கு இக்கோயிலைப் புதுப்பிக்க பணம் தந்ததையும் அவன் காலம் தாழ்த்துவதையும் சொன்னார்.

            உடன் அந்தக் கல் தச்சனை வரவழைத்து அவனிடத்தில் கனவில் கண்ட காட்சியை ஆண்டவர் உரைத்தார். இருப்பினும் அவன் இன்னும் காலம் தாழ்த்தினான். அப்போது அவன் மனைவி கர்ப்பமாக இருந்தாள். காலம் தாழ்த்திய நிலையில் அவனின் மனைவிக்கு கர்பத்தில் இருந்து செந்நீர் ஒழுகியது. பயந்துபோன கல் தச்சன் ஆண்டவரிடம் வந்து நடந்ததைச் சொல்லி, அழுதான். ஆண்டவர் அருள் பார்வையால் மனைவி நலம் பெற்றாள். கோயில் பணி நடைபெற்று முடிந்துக் குடமுழுக்கு ஆனது.

மடம் கட்டத் தொடங்கலும் திருநெல்லை அம்மன் பூசைப் பொருள்களைத் தருதலும்

            கோயில் பணி விரைவாக நடந்து வந்தது. அதே நேரத்தில் மடத்தின் பணியையும் தொடங்க எண்ணம் கொண்டார் ஆண்டவர். தன் இருபத்தோராம் வயது முதல் முப்பத்து நான்காம் வயது வரை கொட்டகைகளிலும் ஒட்டுத் திண்ணைகளிலும் சத்திரங்களிலும் தங்கி வந்த ஆண்டவருக்கு நிலையான இடம் வேண்டும் என்ற எண்ணத்தின் விளைச்சலே கோவிலூர் மடாயலம் கட்டுவதற்கான நோக்கமாக அமைந்தது.

அதற்காக நல்ல நாள் குறித்து கோவிலூர் திருமடத்தின் அடிக்கல் நாட்டும் பணியை அவர் செய்தார். அதற்காக உரிய பூசை பொருட்கள் வாங்க இரு குழுக்கள் திருப்பத்தூர் நோக்கியும், காரைக்குடி நோக்கியும் செல்ல இரு குழுக்களும் வரத் தாமதமாகின. அந்நேரத்தில் கோயிலுக்குள் இருந்து, ஒரு பெண் தன் கரங்களில் பெரிய தாமரைப் பூவை ஏந்தி அதில் தேங்காய், மற்றும் பூசைப்பொருள்களைக் கொண்டுவர அவற்றை வைத்து அன்றைக்கு மடத்திற்கான பூசை நடைபெற்றது. இதன்பின் அந்தப் பெண்ணைத் தேடினால் கிடைக்காத தூரத்திற்கு அவள் சென்றுவிட்டான். வந்தவள் திருநெல்லை அம்மனே என்று எண்ணி  மகிழ்ந்தனர்.

நல்லானுக்கு பாடம் சொல்லலும், தானே மெய்ப்பொருளாக நிற்றலும்

            நல்லான் செட்டியார் அவ்வப்போது ஆண்டவரிடம் பாடம் கேட்டு வந்தார். வேதாந்த சூடாமணியைக் கேட்க வெள்ளத்திலும் அவர் நீந்தி வந்தார். அவ்வாறு வந்தவரை பாடம் கேட்டது போதும் ஆண்டவரே மெய்ப்பொருளாகக்  கொள்ளுவீர் என்று ஞானவழி காட்டினார் ஆண்டவர்.

சில நேரங்களில் நல்ல சொல், நிமித்தம் கேட்க, காண நல்லான் கொற்றவாளீசர் கோயிலுக்கு வருவதுண்டு. அவ்வாறு ஒரு நாள் வரும்பொழுது  ‘ இனி இதுபோல நிமித்தம் கேட்க வேண்டாம். நாமே உமக்கு அனைத்தும் சொல்வோம்” என்றார் ஆண்டவர். நல்லான் எப்போதும் போல ஆண்டவரை மீறிக் கோயிலுக்குச் சென்று, பல நேரம் காத்திருந்து கௌலி கேட்டு வந்தார். ஆண்டவரிடம் வந்து இனி இதுபோல் நடக்கமாட்டேன். தங்கள் சொல்லே எல்லாம் எனப் பணிந்தார்.

இவ்வாறு ஞான வழியும், திருக்கோயில் வழியும், மடாலய வழியும் கோவிலூர் ஆண்டவரால் உருவாக்கம் பெற்றன.

                                                                                                (வளரும்)

------------------------------------------------------------------------------------------

கோவிலூர்  கொற்றவாளீசர் பழைய படம், மடத்தின் படம், உள்ளே இருக்கும், மூர்த்திகள் படம் வைக்கலாம்.

கோவிலூர் கொற்றவாளீசர் கோயில் உள்ள காரைக்காலம்மையார் திருவுருவம்

செல்வம் தரும் மந்திரம்

 

செல்வம் தரும் மந்திரம்

முனைவர் மு.பழனியப்பன்

                                                தமிழ்த்துறைத் தலைவர்

அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, திருவாடானை.

இராமநாதபுரம் மாவட்டம், 9442913985

மக்கள் நலமுடன் வாழ அருள் செல்வமும், பொருள் செல்வமும் மிகுந்த அவசியமாகும். அருளும் பொருளும் கிடைத்துவிட்டால் அளவில்லா இன்பத்தைப் பெற்றுவிடலாம். அருளையும், பொருளையும் வழங்குகின்ற கருணை கடவுளிடம் இருக்கிறது.  அதனை அளவில்லாமல் வழங்குகின்ற இடம் கோயிலாகின்றது. நல்ல நினைவுகளுடன், நல்ல பிரார்த்தனைகளுடன் கடவுளிடம் வணங்கி வேண்டினால்  அனைத்தையும் தருவதற்குக் கடவுள் தயாராக இருக்கிறார்.

            திருவாவடுதுறை கோயிலில் சம்பந்தர் பாடல்கள் பாடி தன் தந்தைக்கான செல்வத்தைப் பெறுகிறார். அந்தப் பதிகத்தின் முதல் பாடல்

            ”இடரினும் தளரினும் எனதுறுநோய் தொடரினும் உன்கழல் தொழு தெழுவேன்

கடல்தனில் அமுதொடு கலந்த நஞ்சை  மிடறினில் அடக்கிய வேதியனே

இதுவோ எமை ஆளுமாறு ஈவதொன்று எமக்கில்லையேல்

அதுவோ உனதின்னருள் ஆவடுதுறை அரனே ”

என்பதாகும். தருவது எனக்கு ஒன்று இல்லை என்றால் உன் அருளால் என்ன பயன் என்று கேட்டுப் பொன் பெறுகிறார் சம்பந்தர். இந்தப் பாடல் தொடங்கிப் பத்துப் பாடல்கள் பாடியபின் சம்பந்தருக்கு எடுக்க எடுக்கக் குறையாத பொன்பரிசிலை வழங்குகிறார் சிவபெருமான்.

            ஒரு சிறுவன் பசியோடு வீட்டில் கோபித்துக் கொண்டு  மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்கு வந்துவிடுகிறான்.  மீனாட்சி அம்மனிடம்  நான் துறவு செல்லப் போகிறேன். எனக்கு இப்போது உணவு கிடைத்தால் அதுவே அதற்கான சம்மதம் என்று பேசுகிறான். மீனாட்சி அம்மன் கோயில் உள்ள சிவாச்சாரியார் அம்மனின் அருள் பிரசாதம் பலவற்றை அந்தச் சிறுவனுக்குத் தந்து செல்கிறார். அந்தச் சிறுவர்தான் ரமணமகரிஷி. இப்படி பலப்பல நிகழ்வுகள். செல்வத்தை அள்ளி வழங்கிடுவன ஆலயங்கள்.

            பிள்ளையார்பட்டியில் கற்பக விநாயகர் கற்பக மரமாக அனைத்துச் செல்வங்கயும் தரக் காத்துக் கொண்டு இருக்கிறார். வடதிசை பார்த்தமர்ந்த உலக அதிசய விநாயகர் பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர். அவருக்கான கரங்கள் மூன்று மட்டுமே. ஐங்கரனாக வழிபடும் விநாயகருக்கும் முன்பான அருள்வடிவம் அவரின் தொன்மை உருவம். இப்பிள்ளையாரைப் பணியக் கண்ணதாசன் எழுதிய பாடல்

            அற்புதக் கீர்த்தி வேண்டின் ஆனந்த வாழ்க்கை வேண்டின்

நற்பொருள் குவிதல் வேண்டின் நலமெலாம் பெருக வேண்டின்

கற்பக மூர்த்தி தெய்வக் களஞ்சிய திருக்கை சென்று

பொற்பதம் பணிந்து பாரீர்  பொய் இல்லை கண்ட உண்மை!

என்பதாகும். இந்தப் பாடலை நாளும் சொல்ல இப்பாடலின் சொற்களின் வழியாக புகழ், ஆனந்தம், பொருள், நலம் எல்லாம் பெருகும்.

            ஆதிசங்கரர் பாடிய கனகதாரா ஸ்தோத்திரமும் சகல செல்வங்களை அருளும் வல்லமை பெற்றது.        மகான்  ஆதி சங்கரர்  துறவு வாழ்க்கை ஏற்றபின்பு ஒவ்வொரு நாளும் பிச்சை எடுத்துத் தனக்கான உணவைப் பெற்று உண்டுவந்தார். ஒருநாள் அவ்வாறு அவர் பிச்சையெடுத்து ஒருவீட்டின் முன் நின்றார். அவ்வீட்டில் இருந்த வறுமை சொல்லில் அடங்காதது. ஆதி சங்கரர் பிச்சை  கேட்ட போது அவருக்கு அளிக்க ஒன்றுமே அவ்வீட்டில் இல்லை. வீட்டில் இருந்து வெளியே வந்த பெண் ஆதிசங்கரருக்கு நெல்லிக்கனி ஒன்றைப் பிச்சையாக இட்டார். இதனை ஏற்றுக்கொண்ட ஆதிசங்கரர் அவ்வீட்டின் வறுமை நிலையை உணர்ந்தார். அப்பெண்ணின் நல்ல குணத்திற்காக அங்கேயே மகாலட்சுமியிடம்  வேண்டிக் கொண்டு பொன்மழையைப் பெய்ய வைத்தார்.

            அவர் பாடிய கனகதாரா ஸ்தோத்திரத்தைக் கேட்டு மகாலட்சுமி அங்கேயே பொன்மழை பொழிந்தாள் என்றால் அந்தப் பாடல்களில் அவ்வளவு சக்தி இருக்க வேண்டும் என்பதை உணரமுடிகிறது. இதனை நாளும் நாளும் சொல்லி வருபவர்களுக்கும் செல்வம் பெருகுகிறது. ஆதிசங்கரரின் சொற்களில் இருந்த சக்தி  பொன்மழையை வரவழைத்துள்ளது. சொற்களுக்குள் இவ்வளவு சக்தி இருக்க இயலுமா?  ஆதி சங்கரரின் தூய மனம், தூய்மையான ஒரு ஏழைப் பெண்ணிற்காக இரங்கி, வலிமை மிக்க வரம் போன்ற சொற்களினால் வேண்டுகின்றபோது அச்சொற்களில் இருந்து வெளிப்பட்ட அதிர்வலைகள்  எண்ணியதை முடித்து நிற்கின்றன.

            ஆதிசங்கரர் பதினெட்டுப் பாடல்களைப் பாடினார். இதனைக் கண்ணதாசன் பொன்மழை என்று இருபத்தோரு பாடல்களில் மொழிபெயர்த்துள்ளார். இன்னும் பலரும் இதனை மொழிபெயர்த்துள்ளனர். அந்தப்பாடல்களின் சக்தியை நாமும் சற்று உணர்வோம். நமக்கான அருள் பொருள் செல்வத்தைப் பெறுவோம். இக்கட்டுரையைப் படிக்கின்ற அனைவர் வாழ்விலும் நிச்சயம் செல்வம் மலரும்.

            திருமாலின் மார்பில் தங்கும் மங்கல தேவதையான லட்சுமிதேவியின் கடைக்கண்கள் எனக்கு அனைத்து மங்கலங்களையும் தரும். திருமாலின் முகத்தினை நாணத்துடன் நோக்கும் இலட்சுமி தேவியின் கடைக்கண்கள் எனக்கு ஐசுவர்யத்தைத் தரும். நாராயணனுக்கு மகிழ்ச்சியைத் தரும் இலட்சுமி தேவியின் பார்வை என்மீது நொடிப்பொழுது அமைந்தால் போதும்.  அரிதுயில் கொள்ளும் பெருமாளின் மீது அன்புப் பார்வை கொண்ட லட்சுமி தேவி எனக்கு சகல செல்வங்களைத் தரட்டும். கௌஸ்துபம் அணிந்த மார்பன் மீது ஆசைப் பார்வை கொண்ட லட்சுமி தேவி எனக்கு சர்வ மங்களத்தையும் தரட்டும்

மஹாவிஷ்ணுவின் கௌஸ்துபம் கொண்ட மார்பில் இந்திர நீல மணி ஹாரம் போல் விளங்குவதும், பகவானுக்கே காமத்தை கொடுப்பதுமான லக்ஷ்மி தேவியின் கடைக்கண்கள் எனக்குச் சகல செல்வங்களைத் தரட்டும். கைடபனை அழித்த மகாவிஷ்ணுவின் மார்பில் மின்னல்போல் விளங்கும் உலக நாயகி எனக்கு எல்லா நன்மைகளையும் தரட்டும். பாற்கடல் பெற்ற மகளான மகாலட்சுமியின் கடைக்கண் பார்வை  செல்வத்தைத் தருவதாக என்மீது பதியட்டும். நாராயணனின் பிரியையான லட்சுமிதேவயின் பாபத்தை நீக்கி பணத்தை மழையாக பொழியட்டும் என்ற இந்த எட்டாவது பாடல் பொன்மழை பொழிவதற்கான பொழிந்ததற்கான சான்றுகளை உள்ளடக்கியுள்ளது.  இப்பாடலின் ஆதிசங்கரர் பாடிய வடமொழி வடிவம் தமிழ் வரிவடிவமாக கீழே உள்ளது.

            ”தத்யாத்தயானுபவனோ த்ரவிணாம்புதாராம்

அஸ்மின் அகிஞ்சன விஹங்கசிசௌ விஷண்ணே|

துஷ்கர்மகர்மமபநீய சிராய தூரம்

நாராயணப்ரணயினீ நயனாம் புவாஹ”

இதனைக் கண்ணதாசன் பொன்மழையில்

”அத்தனை முயற்சி என்ன அண்ணல் மாதேவி கண்ணில்

அருள்மழை வந்தால் போதும் அகம்புறம் முக்தி யாகும்!

இத்தனை சொன்ன பின்னும் இன்னுமா? தயக்கம் தாயே!

இல்லத்தைச் செல்வ மாக்கி இன்னருள் புரிவாய் நீயே!”

என்று பாடுகிறார்.

இவ்வாறு பதினெட்டு  பாடல்களில் லட்சுமி தேவியை வணங்கி வேண்டுகோள்களை வைத்து அவற்றைப் பெறுகிறார் ஆதி சங்கரர். எனவே அருள் வேண்டினாலும் பொருள் வேண்டினாலும் எது வேண்டினாலும் அவற்றை மந்திரச் சொற்களாக ஆக்கிக் கேட்க அவை நிறைவேறுகின்றன என்பதை உணரவேண்டும்.

 செல்வமீனாட்சி அரசாட்சி செய்யும்  முறையூர்

            முறையூர்  அழகு, செல்வம், மக்கள் வளம் நிறைந்த அருமை ஊர் ஆகும். இவ்வூரில் சகல செல்வங்களையும்  தருகின்ற மதுரை மீனாட்சி அம்மன்  சொக்கநாதருடன் கோயில் கொண்டுள்ளாள். அவளின் கடைக்கண் பார்வை கிடைத்தால் சகல செல்வங்களும் நம்மை வந்து சேரும். முறையூர் வரலாற்றுச் சிறப்பும், பழமைச் சிறப்பும், தெய்வீக ஆற்றலும் பொருந்திய ஊராகும்.           .

ஐந்துநிலை நாடு        

ஐந்து நிலை நாட்டின்  ஒரு பகுதியாக முறையூர் விளங்குகிறது.  பாண்டிய மன்னர்களின் ஆளுகைக்கு உட்பட்டு  கூளைப் பாண்டியன் என்பவன் மதுரை சார்ந்த பகுதிகளை ஆண்டுவந்தான். அப்போதுபொன்னமராவதியை ஆண்டு  பொன்னன் அமரன் என்ற இரு குறுநில மன்னர்கள் பாண்டிய மன்னர்களுக்குக் கப்பம் கட்ட மறுத்து தனியுரிமையோடு ஆட்சி செய்து வந்தனர்.

இதனால்  கூளைப் பாண்டிய மன்னன் பொன்னன் அமரன் ஆகியோரை அடக்க தென்காசிப் பாண்டியனான இரகுப்த பாண்டியனை அணுகினான். அப்பாண்டியன் தன் இரண்டாம் மனைவியின் மகன்களான,  பராக்கிரம பாண்டியன், மாமறை பாண்டியன், வீர பாண்டியன், விக்கிரம பாண்டியன் , செய வேழப் பாண்டியன் என்பவர்களைப் படையுடன் அனுப்பி வைத்து பொன்னன் அமரனைப் பணியச் செய்தான்.  இதன் காரணமாக இவ்வைந்து பேருக்கும்  பொன்னமராவதியைச் சுற்றியுள்ள  ஐந்நு நாடுகள் வழங்கப்பெற்றன.   இவர்களுக்கு முல்லை மங்கலம், கன்ன மங்கலம், சதுர்வேத மங்கலம், சீர் சேர்ந்த மங்கலம் ,  வேல மங்கலம் என்ற ஐந்து நாடுகள் வழங்கப்பெற்றன. இவையே ஐந்து நிலை நாடுகள்  எனப்பட்டன. இவற்றில் சீர்  சேர்ந்த மங்கலம் என்பது முறையூரைக் குறிப்பதாகும். விக்கிரம பாண்டியனுக்கு இவ்வூர் வழங்கப்பட்டதால் விக்கிரம பாண்டிய நல்லூர் என்ற பெயரும் முறையூருக்கு ஏற்பட்டது.  இவ்வாறு ஐந்து நிலை நாட்டின் ஒரு பகுதியாக முறையூர் விளங்கி வருகிறது.

            இவ்வூரில் அருள்மிகு மீனாட்சி சொக்கநாதர் திருக்கோயில் அமைந்துள்ளது. மேலும்   அருள்மிகு அய்யனார் கோயில், பிள்ளையார் கோயில், பொன்னாண்ட கருப்பர் கோயில்  போன்றனவும் அமைந்துள்ளன. இவ்வூரில் உள்ள மீனாட்சி, சொக்கநாதர் கோயில் அருட் சிறப்பும், தெய்வீக நலமும் உடையது.

அருள்மிகு மீனாட்சி சொக்கநாதர் கோயில் வரலாறு

            இக்கோயில் கி.பி. 1870 ஆம் ஆண்டில் திரு பெரி.  பழனியப்பச் செட்டியார் குடும்பத்தாரால் திருப்பணி செய்யப்பெற்றுள்ளது. இங்கு  திரு. பெரி. பழனியப்பச் செட்டியாருக்கும்,  சிவகங்கை மன்னர் கௌரி வல்லப முத்து வடுகநாத ராஜாவுக்கும்  சிலைகள் வைக்கப்ட்டுள்ளன. இக்கோயில்  சிவகங்கை சமஸ்தானம் தேவஸ்தானத்திற்கு உட்பட்ட கோயிலாக விளங்குகின்றது.  இக்கோயிலுக்கு 1975  ஆம் ஆண்டும், 1995 ஆண்டும் சிறப்புடன் குடமுழுக்கு விழாச் செய்யப்பெற்றுள்ளது. 2023 ஆம் ஆண்டாகிய இவ்வாண்டு குடமுழுக்குவிழா செய்யப்படுகிறது. புதிய இராசகோபுரத் திருப்பணி மண்டபப் பணிகள் தற்போது நடைபெற்றுள்ளன.

  வன்னியராஜன் கண்ட லிங்கம்

            இக்கோயில் கல்கோயிலாக உருவாவதற்கு முன்பே இங்குச் சிவலிங்கம் வைத்து பூசிக்கப்பட்டதாக ஒரு வரலாறும் உள்ளது. முன்பொரு காலத்தில் வன்னியராஜன் என்ற மன்னன் இவ்வூர் வழியாக வந்தபோது, மருதமரத்தின் அடியில், ஒரு சிவலிங்கம் இருக்கக்கண்டு அதனை எடுத்து  ஆலயம், மண்டபம், குளங்கள் ஏற்படுத்திக் கோயி்ல் உண்டாக்கியதாக செவிவழிக் கதை வழங்கி வருகிறது.  இதனால் இக்கோயிலுக்கு மருத வனச் சேத்திரம் என்ற பெயரும் உண்டு.

மதுரை மீனாட்சி ஆளும் முறையூர்

 இக்கோயிலுக்கு மதுரை மீனாட்சி அம்மன் வேண்டுதலின் பேரில் வந்து அருளாட்சி புரிகிறாள். வன்னியன் சூரக்குடியை ஆண்ட அரசன் ஒருவன் இவ்வூர் வழியாக மதுரைக்கு நாள்தோறும் சென்று மதுரை மீனாட்சியம்மனை வழிபட்டு வந்தார். அவரின் வயது முதிர்வு காரணமாக, போக்குவரத்துத் தடைகள் காரணமாகவும் அவரால் மதுரை சென்று வணங்க முடியாமல் போனது. அதனால் அவர்  மதுரை மீனாட்சி அம்மனிடம் வேண்ட அவ்வம்மன் முறையூரில் நானே இருப்பதால் அங்கு வந்து என்னைத் தரிசிக்கலாம் என்று அருளினாள். இவ்வகையில் மதுரை மீனாட்சியே முறையூரில் அருளாட்சி புரிகிறான். மதுரைக்குச் சென்று வழிபட்டால் என்ன பயனோ அதே பயன் இந்த மீனாட்சி  அம்மனை வணங்கினாலும் கிடைக்கும். இங்குள்ள மீனாட்சி மதுரை மீனாட்சி அம்மனுக்கு உரிய அனைத்து சிறப்புகளைப் பெற்றவள்.

            மாலைச்சாந்து ஆரம்  சரப்பளி பதக்கம்வைடூரியம் நுகர் சுட்டியும்

            மௌலி மணிமகுடம் புலாக்கு மூக்குத்தி திருமங்கிலியமும் சிமிக்கி

            ஒலைநவமணி விசிரி முருகுப் பட்டாங்கு ஆறையுயர்கங்கயம் மோதிரம்

            ஒட்டியாணம் மெட்டி பாடகம் தண்டை கொலுசு சொலிகிண்கிணிச் சரிகையால்

            சேலைஇரவிக்கை மணிந்து செங்குங்குமம் திலகமிட்டு விசித்ரமாய்ச்

            செகஜோதியாகச் சொலிக்கச் சிறப்புற்ற திவ்விய குண சிந்தாமணி

            வாலைஅனுகூலி திரிசூலி கிருபாலி உன் மைந்தனாம் எமையாளுவாய்

            மதுவமிர்த காமாட்சி பதிவிரதை விசாலாட்சி மதுரைநகர் மீனாட்சியே

என்ற மீனாட்சியம்மைப் பதிகப் பாடல் மீனாட்சி அம்மனை அணி அலங்காரங்களுடன் கண்டு மகிழ்கிறது. மீனாட்சியின் தலை முதல் பாதம் வரை அவள் அணிந்திருந்த அணிகளின் பெருமைகளைச்சொல்லி  வாலை நாயகியாக விளங்கும் மீனாட்சித் தாயை அருளச் சொல்லி வேண்டுகிறது. அலங்கார நாயகியாக வாலை நாயகியாக விளங்கும் மீனாட்சியை நாமும் போற்றி மகிழ்வோம்.

இலக்கிய வளமை

            முறையூர் இலக்கிய வளங்கள் பல பெற்ற ஊராகவும் விளங்குகிறது. பத்தொன்பதாம் நூற்றாண்டு  அளவில் பால கிருஷ்ண கவிராயர் என்ற புலவர் காதற் பிரபந்தம், விஜய கும்மி, சித்திரக்கவி ஆகிய நூல்களை எழுதியுள்ளார். காட்டுப் புலவர் என்ற  சின்னையா என்ற மற்றொரு கவிஞரும் இவ்வூரில் வாழ்ந்துள்ளனர்.  இவர் பொன்னாண்ட கருப்பர் ஆனந்தக் களிப்பு, மீனாட்சி அம்மன் பதிகம், காத்தையனார்  அடைக்கலப் பதிகம், நாட்டியக் கும்மி . மோகனக் கும்மி ஆகியவற்றை இயற்றியுள்ளார்.

            இவ்வாறு முறையூர் சிறப்பான தலமாக, சகல செல்வங்களையும் தரும், எண்ணியதைத் தரும் திவ்ய தலமாக விளங்குகின்றது. இத்தலத்திற்கு வருகை தந்து முறையூர் மீனாட்சியை வணங்கும் அனைவரும் பேரின்பப் பெருவாழ்வு எய்துவர் என்பது சிறப்பாகும்.