வெள்ளி, மார்ச் 24, 2006

தற்காலத் தமிழ்ப்பெண்ணியம் பற்றி ஓர் ஆணின் சில பதிவுகள்


மார்ச் 8. உலக மகளிர் தினம். மகளிர் தமக்கான வாழ்க்கையை, கல்வியை, கலாச்சாரத்தை, இலக்கியத்தை, மொழியை, இன்னும் எவை எல்லாம் உள்ளனவோ அவை எல்லாவற்றையும் எவ்விதத் தடையுமில்லாமல் ஏற்படுத்திக்கொள்ள, அனுபவிக்க, ஆய்வு செய்ய விழிப்புணர்வு தரும் ஒரு தினமாக இந்த மகளிர் தினத்தை மகளிர் எடுத்துக் கொள்கின்றனர். உலகம் முழுவதிலும் உள்ள பெண்களிடம் இந்த விழிப்புணர்வு உள்ளதா? ஏற்பட்டுவிட்டதா? அல்லது இந்த விழிப்புணர்வு அடையப்பட்டு விட்டதா? என்பது அறியப்பட இத்தினம் ஒருவகையில் உதவி செய்யலாம்.

தமிழ் நாட்டைப் பொறுத்தவரையில், தமிழ்மொழியைப் பொறுத்தவரையில் மகளிர் தினம் என்பது குறித்த விழிப்புணர்ச்சி ஓரளவிற்கு உள்ளது என்பதை 2006 மார்ச் 8 உணர்த்துகிறது. இத்தினம் கருதி பல கருத்தரங்குகள், கூட்டங்கள், செய்திகள் ஊடகங்களில் இடம் பெற்றுள்ளன. இதன் வாயிலாக படித்த பெண்கள் ஓரளவிற்கு விழிப்புணர்வைப் பெற்றுள்ளனர் என்பது தெரிய வருகிறது.

இந்த வளர்ச்சி போதுமா? போதாதா? என்றெல்லாம் கண்டுபிடித்து இவ்வளர்ச்சி போதாது எனக்கருதி அதனைக் கட்டாயமாக வளர்த்தெடுக்கப் பாடுபடுவது என்பதெல்லாம் நடைபெறவேண்டிய செயல்கள்தாம். அது ஒரு பக்கம். . இதனைத் தாண்டி தமிழகப் பெண்கள் நிலை ஓரளவிற்குச் சொல்லிக் கொள்ளும் அளவிற்கு வளர்ச்சி அடைந்துள்ளது என்பது ஏற்க வேண்டிய கருத்தாகும். கல்வி, வேலைவாய்ப்பு முதலிய துறைகளில் பெண்களுக்கு ஏற்பட்டுள்ள வளர்ச்சி தமிழ்நாட்டுச் சூழலில் வியக்கத்தக்கதாக உள்ளது. இதனை அடைவதற்குப் பெண்களும் முயன்றுள்ளனர். ஆண்களும் முயன்றுள்ளனர்.

பாரதியார் இந்த முன்னேற்றத்தின் தொடக்கப் புள்ளி ஆவார். அவரின் கூற்றுப்படிப் பட்டங்கள் ஆள்வதும் சட்டங்கள் செய்வதும் பாரினில் பெண்கள் நடத்த வந்துவிட்டார்கள். இதற்கு அடுத்த நிலை என்ன என்றபோது பாரதியைத் தாண்டி சிந்திக்க வேண்டியுள்ளது. பெரியார் இதற்கான ஒரு வளர்புள்ளி. அவரின் பெண் குறித்த புதிய எண்ணங்களைப் படித்த, கேட்ட பெண்களைக் கவர்ந்தன. அவ்வெண்ணங்கள் புதிய சிந்தனைகளைத் தூண்டின என்றால் அது மிகையாகாது.

பாரதியார், பெரியார் ஆகிய ஆண்களின் செயல்பாடுகள் ஒருபுறம். இவர்கள் காலத்திலேயே பெண்களின் விடுதலைக்காகப் போராடிய பெண்களும் உண்டு. தமிழகத்தின் முதல் பெண் மருத்துவர் சுப்புலெட்சுமி அம்மையார், மூவலூர் ராமாமிர்தத்தம்மாள் போன்றோர் குறிப்பிடத்தக்கவர்கள். இன்னும் பெயர் தெரிந்த தெரியாத பெண்களும் உண்டு.

இந்த வளர்ச்சி ஒட்டுமொத்தமான சமுதாய வளர்ச்சி என்றே அக்காலத்தில் கருதப்பட்டது. இந்த ஒட்டுமொத்தச் சமுதாய வளர்ச்சியிலிருந்துப் பிரிந்துத் காலப்போக்கில் தனித்துப் பெண்வளர்ச்சி என்பது வளர்ந்தது.இந்த 2006ஆம் ஆண்டை ஒரு எல்லையாக வைத்துப் பார்த்தால் அதன் பின்னோக்கிய இருபது ஆண்டுப்பயணம் தமிழ்ப் பெண்ணியத்தின் தனித்த தொடக்கக் காலப்பகுதியாகக் கொள்ளலாம்,.
இந்த இருபது ஆண்டுகளில் பெண்களை முன்வைத்து, இலக்கியங்களை முன்வைத்துத் தமிழ் உலகில் பெண்ணின் நிலைப்பாடு, பெண்ணின் அடையாளம் ஆகியன அறியப்பட்டன. இந்தப் புரிதலில் ஒட்டிய பெண்படைப்பாளர்கள், ஒட்டாத பெண்படைப்பாளர்கள் படைப்புகள் அவ்வப்போது வெளிவந்து கொண்டிருந்தன. பெண்திறனாய்வாளர்கள் பெண்ணிய விழிப்புணர்வோடு ஆய்வு செய்யத் தலைப்பட்ட்னர். மேல்நாட்டுப் பெண்ணியக் கொள்கைகளின் தாக்கத்தால் ஓரளவிற்கு பெண்ணியத்திறனாய்வுகள் தமிழில் கிளைத்தன. இந்த வருகை தமிழிலக்கியத்தின் புதிய பக்கங்களைத் திறந்தன,

இதன்விளைவால் கீழ்க் கண்ட முக்கிய மாற்றங்கள் தமிழ் இலக்கிய உலகில் நிகழ்ந்தன.

1, தமிழ் மொழியின் நீண்ட இலக்கியப் பரப்பில் பெண்படைப்பாளிகள் இனம் காணப்பட்டனர்.
2, புதிய பெண்படைப்பாளிகள் எழுதத் துவங்கினர். அவர்களுக்கிருந்த எழுத்துத் தடைகள் சற்று விலகின. பெண்களின் படைப்புகளை வெளியிட ஆண்வயப்பட்ட வெளியீட்டுலகம் முன்வந்தது. அவர்களின் படைப்புகளை விமர்சிக்கவும் ஆண்உலகம் வந்தது பெண்படைப்பு என்பதற்கு ஒரு தனி மதிப்பு வந்தது. பெண்படைப்பாளர்களுக்கு மட்டுமான போட்டிகள் வைக்கப்பெற்றன.
3. பெண்படைப்பாளிகளின் வாழ்க்கை தெரியவந்தது. இதற்கு பத்திரிக்கைகள், தொலைக்காட்சிகள் போன்ற வெகுஜன ஊடகங்கள் உதவின.

பெண்ணிய விழிப்புணர்வால் பெண் படைப்பாளிகளுக்கு ஏற்பட்ட விடுதலை வழிகள். இந்த வழியை ராஜபாட்டையாக்க தற்காலப் பெண்படைப்பாளிகள் முனைப்புடன் செயல்பட்டுவருகின்றனர்.
இதே இருபதாண்டு சூழலில் பெண்ணின் சமுதாய இருப்பும் சில மாற்றங்களுக்கு உள்ளாகியுள்ளது கவனிக்கத்தக்கது. பெண்களின் பள்ளிக்கூடம், கல்லூரிகள் அதிகமாகி உள்ளன. பெண்கள் மட்டும் வேலை பார்க்கும் அலுவலகங்கள் தோன்றியுள்ளன. குறிப்பாக மகளிர் காவல் நிலையங்கள். இது தவிர பெண்கள் மட்டுமே வேலை பார்க்கும் வங்கிகள் உருவாகியுள்ளன. பெண்களின் கூட்டமைப்புகள் உருவாகியுள்ளன. மகளிர் சுய முன்னேற்ற உதவிக்குழுக்கள். இந்தக் குழுக்களை வளமையாக்க மாநில அரசோ மத்திய அரவோ உதவிய செய்தியில் அரசியல் இருந்தாலும் கடன் பெற்று அவற்றை நிர்வகிக்கும் பொறுப்பு பெண்களுடையது என்பது குறிக்கத்தக்கது.

பெண்ணாசிரியர்களால் நடத்தபப்டும் பெண்களுக்கான பத்திரிக்கைகள், பெண்களால் பெண்களுக்காக நடத்தப்படும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் என்று ஊடகங்களிலும் குறிப்பிடத்தக்க இடம் நேரம் ஒதுக்கப்பட்டிருப்பதையும் எண்ணிப்பார்க்கலாம். பெண்களின் அரசியல் பங்கேற்பில் ஆண்களைச் சார்தல் என்ற பண்பு அதிகம் இருந்தாலும் இதனையும் ஒரு முன்னேற்றப் படியாகவே கொள்ளவேண்டும்.. இந்த அளவிற்கு வளமை பெற்ற இக்காலத்திலும் தினத்தாள்களில் நாள்தோறும் பெண்ணிழிவுச் செய்திகள் வராமல் இல்லை. முன்னேற்றம் ஒரு புறம் பின்னேற்றம் ஒரு புறம் என்ற ஏற்ற இறக்கத்திற்கு என்ன பதில் சொல்வது? எப்படி பதில் சொல்வது என்பதை பெண்ணியவாதிகள் சிந்திக்க வேண்டும்,
இந்த வளர்ச்சியில் கண்ணுக்குத் தெரிந்த மிகப் பெரிய மாற்றம் பெண்களின் ஆடை அணிகலன்களில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் ஆகும், நகரத்தில் பரவலாகி வந்த இந்த மாற்றங்கள் தற்போது கிராமங்களிலும் புகுந்து விட்டன, இதற்குப் பல காரணங்கள் உண்டு. இந்த ஆடை அணிகலன் மாற்றங்களினால் பெண்களின் சமுதாயக் கட்டுப்பாடு சற்று தளர்ந்திருக்கிறது. பெண்களின் உடலை இறுக்கிய ஆடைகள் சற்று இறுக்கம் தவிர்த்து இருக்கின்றன. இறுக்கம் தவிர்த்தல் என்ற இந்த வசதி பெண்களுக்கு வசதி அளித்ததோ இல்லையோ ஆண்களின் கண்களுக்கு புதுக்கவர்ச்சியை உண்டு செய்து இருக்கின்றன. ஆண்களின் கண்கள் ’’ ஆடை அணிகளிலே இவ்வளவு நெகிழ்வுத் தன்மை உள்ளதென்றால் ஆண்களிடம் பழகுவதிலும் இத்தகைய நெகிழ்வை எதிர்பார்க்கலாம் ’’ என்ற எண்ணத்திலேயே பெண்களைக் கவனிக்கின்றன. இச்சூழலில் பெண்களுக்கு வசதி தரும் ஆடைகள் அதே நேரத்தில் ஆண்களின் கண்களைக் கவராத ஆடைகள், அணிகள் இவற்றை பெண்ணியவாதிகள் முன்வைக்கலாம், ஆண்கள் அணிகளைத் தவிர்த்ததுபோல (குடுமி, காதுகடுக்கண், கழல்) பெண்களும் அணிகளைத் தவிர்த்துவிடலாம், இதனால் இழப்பு ஏதுமில்லை. பல திருட்டுகளைத் தவிர்க்கலாம். இது குறித்துப் பெண்கள் முடிவெடுக்க வேண்டிய கட்டாயம் தற்போது தேவை.

பெண்களின் சமுதாய வாழ்வில் காதல், திருமணம் இவற்றில் தற்போது சலசலப்புகள் ஏற்பட்டுள்ளன. ஒத்துவரின் ஒத்துவருவதாகவும், ஒத்து வராவிடில் ஒத்துவராததாகவும் வாழும் வாழ்க்கை முறையை வாழ்ந்து கொள்ளப் பெண்கள் தயாராக உள்ளனர். இந்த வாழ்க்கை முறை குறித்துப் பிறர் கருத்து என்பதைவிட தன்கருத்து என்ற அளவில் பெண்கள் சிந்திக்கத் தொடங்கியுள்ளனர். இந்தத் தயாராகுதலுக்கும் இந்தச் சிந்திப்புக்கும் பெண்கள் வந்திருப்பது ஒரு முக்கயமான மாற்றமே ஆகும், வழக்கு மன்றங்களில் வரும் பெண்களுக்கு எதிரான பெண்களுக்குச் சாதகமான வழக்குகள், தினத்தாள்களில் வரும் பெண்களுக்கு எதிரான செய்திகள் சாதகமான செய்திகள் இவை பெண்களின் விழிப்புணர்விற்குச் சான்றுகள். இவற்றில் இடம் பெறும் உண்மை நிலை நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாகத் திரிக்கப் படுவது ஏன் என்று எண்ணிப்பார்க்கையில் வழக்கு மன்றங்கள் ஆனாலும் சரி தினத்தாள்கள் ஆனாலும் சரி இவற்றில் வேலை பார்ப்பவர்கள் முற்றிலும் பெண்கள் என்பதைக் கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும். முற்றிலும் பெண்கள் மட்டுமே பெண்தேவைகளைப் பூர்த்தி செய்யும் நிறுவனங்களை நடத்தும் நிலை ஏற்படும்வரை இந்தச் சாதக பாதகங்கள் தொடரும்.

இச்சூழலில் பெண்களுக்கு எதிரான நச்சுக்காற்றைச் சுட்டிக்காட்டும் விலக்கும் நிறுவனங்கள் தேவை. அவற்றின் தன்னலமற்ற பெண்குல விழிப்புணர்ச்சிச் செயல்கள் மேலும் பெண்களை முன்னேற்றும். அதற்குத் தக்க தருணம் இதுவே. அதுவரை மார்ச் 8 என்பது ஒரு குறியீட்டுத் தினமே அன்றி வேறு இல்லை.

கருத்துகள் இல்லை: