வெள்ளி, மார்ச் 24, 2006

காற்று வற்றிய காரணம்


விதம் விதமாய் மனிதர்கள்
மளிகைக் கடையில்
பொறுப்போடு பொருள் வாங்கி
வெளியில் வந்தால்
ஏறிவந்த இருசக்கர வண்டி
காற்று வற்றிக் கிடந்தது

உடன் வந்த மனைவி
முணுமுணுக்கிறாள்.
நீங்களும் சரி
உங்கள் வண்டியும் சரி
சரியான நேரத்திற்கு உதவாது என்று

காற்று வற்றிப்போனதற்கான
காரணம் என்ன
என மனம் தேடியபடி
எங்களின் ஊர்வலம்

வண்டி,
வண்டியைத் தள்ளியபடி நான்,
என் பின்னால்
குழந்தையைத் தூக்கியபடி மனைவி,

புதிய பள்ளங்களைத்
தோண்டிப்போடும் கூலியாட்கள்
பள்ளங்களின் வெளிப்பாட்டில்
வீதிக்கு வந்த கற்கள் யாரை நோவது
காற்று வற்றியதன் காரணம்

மளிகைக்கடை வாசலில்
பார்க்க வினோதமாய்
ஒரு சிறுவன்
வெளிவந்த
எங்களின் அசைவையே
உற்றுக் கவனித்த
அவனின் சிறப்பு கவனம்
அவன்தான் ஏதோ செய்திருக்க வேண்டும்

கடை அடைந்து
காற்று வற்றிய காரணம்
கண்டுபிடிக்க முயல
கடைக்காரர் கேட்டார்
யாருக்காவது இடைஞ்சலாக
வண்டியை நிறுத்தினீர்களா?
காற்றைப் பிடுங்கி விட்டிருக்கிறார்கள்

சரி
சரி
சரி செய்த வண்டியோடு பயணம்
நல்லவேளை
டயர் டியுப்க்குப் பழுதில்லை
muppalam2003@yahoo.co.in
http://www.vaarppu.com/

1 கருத்து:

பொன்ஸ்~~Poorna சொன்னது…

நல்ல கவிதை.. அது சரி.. அடுத்தவங்க வந்து சொல்றவரை, நம்ம முதுக நாம என்னிக்கி பாத்துருக்கோம்..