செவ்வாய், பிப்ரவரி 11, 2025

காரைக்கால் அம்மையார் பாடல்கள் விளக்கவுரை

 

முனைவர் மு.பழனியப்பன்

காரைக்கால் அம்மையாரின் திருவிரட்டை மணிமாலை

விளக்கவுரை

பாடல் 1 முதல் 6 வரை

கிளர்ந்துந்து  எனத் தொடங்கும் பாடல் முதல் சங்கரனை  எனத் தொடங்கும் பாடல்

https://www.youtube.com/watch?v=eAllVWm1v0Y

பாடல் 7 முதல் 13 வரை

உரைக்கப்படுவது ஒன்று  எனத் தொடங்கும் பாடல் முதல் நினையாது ஒழிது   எனத் தொடங்கும்  பாடல் வரை

https://www.youtube.com/watch?v=Riz1d-289sQ

இந்த காணொளி சரிவர ஒலிபரப்பாகவில்லை.  சற்று தேய்ந்து தேய்ந்து உள்ளது. இதனை மீளவும் ஒரு முறை சொல்ல வாய்ப்பளித்தார் நல்லது

பாடல் 14 முதல் 20 வரை

அடித்தலம்  எனத் தொடங்கும் பாடல் முதல் உத்தமராய் வாழ்வார்  எனத் தொடங்கும் பாடல் வரை

https://www.youtube.com/watch?v=pBTD6Ml3reQ&t=1723s

-------------------------------------------------------------------------------------------------

 

காரைக்கால் அம்மையார்  மூத்த திருப்பதிகம்

பாடல் 1- முதல் 6 வரை

கொங்கை திரங்கி  என்று தொடங்கும் முதல் பட்டடி என்று தொடங்கும் பாடல் வரை

https://www.youtube.com/watch?v=BFJXJD_xY7s&t=1560s

பாடல் 7 முதல் 11 வரை

சுழலும் எனத் தொடங்கும் பாடல் முதல் ஒப்பினை இல்லவன் எனத் தொடங்கும் பாடல் வரை   (28-12-2024)

https://www.youtube.com/watch?v=ntxPI33EZuQ&t=995s

-----------------------------------------------------------------------------------------

புதன், பிப்ரவரி 05, 2025

இலங்கை நாட்டின் வட்டுக்கோட்டை மண்ணின் உன்னதத் தமிழர் உலகத் தமிழ்ச் சாதனையாளர் திரு. ம.ந. கணேஸ்வரன் (எழில்)


உலகம் முழுவதும் தமிழர்கள் மதிப்புடனும் பெருமையுடனும் வாழ்ந்து வருகிறார்கள்.  எல்லைகள் கடந்து நாடுகள் கடந்து, கண்டங்கள் கடந்து தமிழையும் வளர்த்து, தமிழ் மரபையும் காத்துத் தமிழர்கள்  வளர்ந்து வருகிறார்கள்.   என்றைக்கும் எக்காலத்திற்கும் தமிழர்களின் தமிழ்ச்சேவை நிலைத்து நிற்கும் அளவில் தமிழர்களின் தமிழ் வாழ்வு  உலக அளவில் அமைந்து வருகிறது.

            பிரான்ஸ் தேசத்தில் பல தமிழர்கள் தமிழ்  செழிக்க வாழ்ந்து வருகிறார்கள்.  அங்குப் புதுச்சேரித் தமிழும், இலங்கைத் தமிழும், இந்தியத் தமிழும்  இணைந்து  நற்றமிழ் வளர்ந்து வருகிறது.  கம்பன் கழகம், தமிழ்ச் சங்கம் போன்ற பல அமைப்புகள் சொல் அழகு பொருள் அழகு மிகு தமிழை வளர்த்து வருகின்றன. பல தனி மனிதர்களின் முயற்சியாலும் பிரான்ஸ் தமிழ் செழுமையோடு திகழ்ந்து வருகிறது.

            இந்தியத் தமிழ், இலங்கைத் தமிழ், பிரான்ஸ் தமிழ் ஆகிய மூன்றுக்கும் ஆக்கமும் ஊக்கமும்  தந்து வளர்த்து வரும் பல அன்பர்களில் குறிக்கத்தக்கவர்  தமிழ்த்திரு ம.ந. கணேஸ்வரன்   ஆவார்.

                                                 

இலங்கையைத் தாய்நாடாகவும் யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டை     கிராமத்தை பிறப்பிடமாகவும் கொண்ட திரு ம.ந. கணேஸ்வரன்  நல்லதமிழ் வளர்க்கும்  தமிழ்க்குடும்பத்தில்  பிறந்தவர். அவரின் தந்தையார் மயில்வாகனம் நவரத்தினம் அவர்கள்



 ஆசிரியராக விளங்கியவர். மேலும் சைவ வாலிபர் கழகம் என்பதை இலங்கையில்
  நிறுவி சைவத்தையும் தமிழையும் வளர்த்தவர். மேலும் மாணிக்கவாசகர் வாசக சாலை என்ற கல்விச் சாலையையும் அமைத்துக் கல்வி வளரவும் துணை நின்றவர்.  இக்கல்விச் சாலை வழியாக இரவு நேரங்களில் இலவசமாக மாணாக்கர்களின் கல்வி மேம்பட வழி செய்தவர். அவர் மக்களின் பசி போக்கவும் தன்னுடைய நண்பர்களோடு பண்டகசாலை நிறுவியவர். பல ஆன்மீகப் பணிகளிலும் தன்னை ஈடுபடுத்திக்கொண்டு அங்குள்ள அம்மன்  ஆலயத்திற்கு பேருதவியாக அம்மனையும் வழங்கிய ஆன்மீகச் செல்வர். இலங்கையில் உள்ள வட்டுக்கோட்டைப் பகுதியை வளம் மிக்க பகுதியாக விளங்க வைத்ததில்  இவரின் தொண்டுகள்  சிறப்பானவை.  அவை என்றும் நினைக்கத் தக்கவை.

           இவரது மகனாக விளங்கும் திரு .. கணேஸ்வரன் தன் தந்தையின்  நெறியிலேயே நாளும்  பணிகள் செய்து வருபவர் . இவரின் தாய்  தந்தையார் இவரின் இளம் வயதில் இயற்கையோடு கலந்த நிலையிலும் எவரின் துணையுமின்றி, மனம் தளராது தன்னம்பிக்கையுடன் தன் வாழ்வினை இவர் எதிர்கொண்டு முன்னேறினார்.

  தன் பள்ளி மற்றும் கல்லூரிக் கல்வியைப் பயின்றது மட்டுமல்லாது, தனக்குக் கிடைக்கும் நேரங்களில்  மாணவர்களின் கல்விப் பணி சிறக்கவும் உதவி வந்தார்.  மாணவர்க்கான  தனிப்பட்ட கல்வியகத்தை அவர் தன் ஆசிரியர்கள் மற்றும் நண்பர்களுடன் இணைந்து நடாத்தினார்.

 சிவராமலிங்கம் சிவானந்தன் (கணிதப் பட்டதாரி), சேகரன் ஆசிரியர்(ஜெர்மனி ) காராளசிங்கம்  தனபாலன் (கனடா) ஆகிய   நண்பர்களோடு அவர் கல்வியகத்தை அமைத்து சேவையாற்றினார்.  இவரும் தனியராக  மாணாக்கர்களுக்குக்  கணிதம் பௌதீகம் போன்ற கல்வியைப்  போதித்து மாணவர் அறிவுத் திறனை வளர்த்தார்.  இதனோடு,   தந்தை ஆற்றி வந்த பணிகளையும் சிறப்புடன் செய்து வரத் தொடங்கினார்.



 வட்டுக்கோட்டையில்  வாழ்ந்த   சைவசமயத் தொண்டர் திரு பரமானந்த சிவம் அவர்களை இவர்  தனது வழிகாட்டியாகக் கொண்டுச் செயலாற்றி வந்தார்.  அவர்கள்  மேல் கொண்ட பாசம் மற்றும் அன்பால்  அவரின் தமிழ்த் தொண்டுகளை மனதிற்கொண்டு அவர் மறைவின்போது முதலில் குறிப்பிட்ட 6 நண்பர்கள் உதவியோடு அவர்களோடு பரமானந்தசிவம் வாசிகசாலையைத் தொடங்கி கல்விப் பணிச் சிறக்கச் செய்தார். இச்சாலை வழியாக இவர் சைவத்தையும், தமிழையும் வளர்த்து வந்தார்.



மேலும் வட்டுக்கோட்டையில் நடைபெறும் விழாக்களின்போது மக்களின் அசதி போக்கத் தேநீர் தரல்,  தண்ணீர்ப்பந்தல்  அமைத்து தாகம் தீர்த்தல், சமுதாய முன்னேற்றத்திற்கான உடல் உழைப்பினை நல்குதல்,  இலவச சைவ சமய வகுப்புகள் நடத்துதல்,  விளையாட்டுப்போட்டிகள் வைத்தல் போன்ற பணிகளை இவர் தொடர்ந்து செய்து வந்தார்.  

       இப்படியான சூழலில் தன் கல்வித் தரத்தையும் உயர்த்திக் கொண்டார்இலங்கைச் சூழ்நிலையில் புலம் பெயர வேண்டிய கட்டாயம் ஏற்பட்ட  நிலையில். ஏறக்குறைய 41ஆண்டுகள் பிரான்ஸ் தேசத்தில் இவர்  வாழ்த்து வருவதானார் . இவர் உதவிக் கணக்காளராகப்  பணி செய்து தன்னையும் தன் குடும்பத்தாரையும் தன் சொந்தங்களையும்  குறைவின்றிக் கவனித்து வருவதானார்.  தற்போது பணியிலிருந்து ஓய்வு பெற்றிருந்தாம் இவரின் சமுதாய ஆக்கப்பணிகள் தொடர்ந்து கொண்டு இருக்கின்றன.  உலகளாவிய சமூக அமைப்புகளோடும், தமிழ் சிறக்க இந்தியா இலங்கை என பல நாடுகளில் உள்ள அமைப்புகள் மற்றும்  பல தமிழ் அறிஞர்களோடும் இணைந்து இவர் சைவப்பணிகளையும் தமிழ்ப் பணிகளையும் செய்து வருகிறார்.

                                                    


        தாய் மண்ணான இலங்கையில் அமைந்திருக்கும் வட்டுக்கோட்டை குறித்த எண்ணங்கள் இவரிடம் எப்போதும் நிறைந்திருக்கிறது. வட்டுக் கோட்டை அருள்மிகு இலுப்பையடி ஸ்ரீ முத்துமாரியம்மன் திருக்கோயிலை மேன்மைப்படுத்த அறங்காவலர்கள் மக்கள் உதவியுடனும் சங்கம் அமைத்து சிறப்புடன்  புதுமைப் படுத்தி கோபுரம் கட்டி திருக்குடமுழுக்கு விழா காணவும் ஆவன செய்தார்.

 


இதற்காக உலக நாடுகளில் இருந்து பல சைவ அன்பர்கள், வேத விற்பன்னர்கள் போன்றோரை வருகை தரச் செய்து இவ்விழாவைச் சிறப்புடன் நடத்தினார். இச்சமயத்தில் குடமுழுக்கு விழா மலர் ஒன்றையும் வெளியிட்டார். இதில் இந்தியா, இலங்கை, பிரான்ஸ் பல தமிழறிஞர்களின்  ஆக்கங்களைத் தந்து,  உலக அளவில் ஆன்மீகத் தமிழ் வளர உதவினார். இக்கோயிலின் ஆயுட்கால தலைவராகவும் இவர் விளங்கி வருகிறார்.  நாளும் அக்கோயில் பணிகள் சிறக்க உதவி வருகிறார்.

 

            இவர் தமிழ் சிறக்க  "ஊரும் உலகும்"


என்ற புலனக் குழுவை உருவாக்கிச் சிறப்புடன் தமிழ்ச் சேவை செய்து வருகிறார். இவர் நல்ல பாடகர். தானே இசை அமைத்துப் பாடல்கள் பாட வல்லவர்இவர் நல்ல கவிஞர், புலவர்இவர் நல்ல பொழிவாளர்இவர் மனிதநேயம் மிக்க பண்பாளர் .இவர் வள்ளலார் , சுவாமி விவேகானந்தர் , பாரதியார் , பாரதிதாசன் போன்றோர்களின் மீது பற்று கொண்டு அவர்களின் வழியில் தன் வாழ்வினை நடத்தி வருகிறார்.


            இவரை உலகு முழுவதும் உள்ள பல அமைப்புகள் பாராட்டியுள்ளன. "முத்தமிழ் வித்தகர்," "சமூக ஆர்வலர்",  "திருப்பணி செம்மல்" போன்ற பல பட்டங்களைத் தந்து பல அமைப்புகள் இவரைப் பாராட்டியுள்ளன.  குறிப்பாக மதுரை திருஞானசம்பந்தர் ஆதீனம்  இவருக்கு "சிந்தனையாளர்", "முத்தமிழ் காவலர்", "சைவ சமயக் காவலர்" என்ற பட்டங்களை வழங்கிப் பாராட்டியுள்ளது. காரைக்குடி கம்பன் கழகம் இவரின் பணிகளைப் பாராட்டி  "இலக்கியத் தமிழ் வித்தகர்" என்ற பட்டத்தையும் வழங்கியுள்ளது.


            இவர் ஜெர்மனி, சிங்கப்பூர் போன்ற உலக நாடுகளிலும் தன் தமிழ்ப் பணியை நீட்டித்துச் செய்து வருகிறார்.

            இவரின் பணிகளைப் பாராட்டி மலேசிய மண்  இவருக்கு மணிமகுடம் சூட்டியுள்ளதுதமிழ்ப் பற்றாளர், தமிழ்ச் சேவையாளர், தமிழ்த் தொண்டர் 



திரு .. கணேஸ்வரனுக்கு உலகத் தமிழ்ச் சாதனையார்  என்ற உயரிய விருதினை  வழங்கிச் சிறப்பித்துள்ளது.

            சமீபத்தில்  மலேசிய நாட்டில்  உலகத் தமிழ் சங்கமம், சென்னை தமிழ் சங்கம் ,மலேசிய  தமிழ்ச் சங்கம் ஆகியன ஒன்றாய் இணைந்து  நடத்திய முப்பெரும் மற்றும் ஐம்பெரும் விழாக்களிலும், மகாகவி பாரதியார் விழாவிலும் திரு .. கணேஸ்வரன் அவர்களுக்கு "உலகத் தமிழ் சாதனையாளர்"   என்ற மதிப்பு மிகு விருதினை வழங்கின.

தமிழ்நாடு முன்னாள்  உயர் நீதிமன்ற நீதிபதி டாக்டர் எஸ் விமலா இந்தியா -இலங்கைக்கான முன்னாள் தூதுவர் திரு நடராஜன் , உலகத் தமிழ் சங்கமத்தின் நிர்வாகிகள்,  சென்னை தமிழ் சங்கத்தின் தலைவர் பிரபல தொழிலதிபரான டாக்டர் இளங்கோவன் ,  தஞ்சை தமிழ் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் டாக்டர் எஸ் பாஸ்கரன், மலேசியத் தமிழ்ச் சங்கத் தலைவர் ஆசிரியர் எஸ் மாணிக்கம் தொழிலதிபர் ரமேஷ் போன்றோர் இவ்விருதினை திரு. ..கணேஸ்வரனுக்கு வழங்கிச் சிறப்பித்தனர்.

10-12-2024 முதல் 14-12-2024 வரை நடைபெற்ற  இப்பெரும் மாநாட்டில் பல தமிழறிஞர்கள், பலரும் கலந்து கொண்டு இவரின் சேவையைப் பாராட்டினர்.  தமிழக முன்னாள்  முதல்மை தலைமை நீதிபதி எஸ் ஜோதிமணி ,  தமிழ்  உலக ஆராச்சி &  வளர்ச்சி கழகத்தினர், மலேசிய உயர் நீதிமன்ற முதன்மை நீதிபதி  மேன்மை மிகு டான்  ஸ்ரீ டத்தோ நளினி பத்மநாதன்,  மலேசியாவின் பல்வேறு பகுதிகள் சார்ந்த  முன்னாள், இந்நாள் பாராளுமன்ற உறுப்பினர்கள்,  மந்திரிகள் மற்றும் பல நாடுகளில் இருந்து வந்த  அறிஞர்கள், மற்றும்  பாரதி அன்பர்கள், சான்றோர்கள் உட்பட அவர்கள் எல்லோருடைய முன்னிலையிலும் உலக அளவில் உயரிய விருதான 



"உலகத் தமிழ்ச் சாதனையார் விருது 2024 "

 பெற்றுள்ள தமிழன்பர் தமிழ் திரு .. கணேஸ்வரன் அவர்கள் இன்னும் பல பரிசுகள் பெற்று உயர வாழ்த்துகள்தொடர்ந்து அவரின் தமிழ்ச் சேவையால் தமிழ் உலகம் செழிக்கட்டும்



செவ்வாய், டிசம்பர் 24, 2024

திருவாசகம் முற்றோதல் வரலாறு

 

திருவாசக முற்றோதல்

   0
download

முனைவர் மு. பழனியப்பன்,
தமிழ்த்துறைத் தலைவர்
அரசு கலை மற்றும்  அறிவியல் கல்லூரி
திருவாடானை

மாணிக்கவாசகர் இறை அனுபவத்தில்  எழுதிய திருப்பனுவல் திருவாசகம். உலகப் பற்றுகளின் ஈர்ப்பில் சுவைத்து மகிழ்ந்து கிடக்கும் ஆன்மாக்களை, அப்பற்றில் இருந்து விடுவித்து,  சிவனைப் போற்றிட, எண்ணிட, துதித்திட, நெஞ்சமதில் ஏத்திட, அவனையே அடைந்திடச் செய்யும் அருள்வாசகம் திருவாசகம் ஆகும். திருவாசகம் மனிதர் ஒவ்வொருவரும் பாடத்தகுந்த அருள் நூல்.  குழுவாக முற்றோதல் செய்வதற்கும் உரிய நூல். ஒரே நாளில் இறைவன் கழலை இறைஞ்சிடக் கிடைத்த நன்னூல். படிப்பவரும், கேட்பவரும் பொருளோடு உணர்பவரும் முக்தி என்னும் நிறைநிலையை அடையச் செய்யும் பெருவழியைக் காட்டுவது திருவாசகம் ஆகும்.

திருவாசக முற்றோதலை முதலில் நிகழ்த்தியவர் மாணிக்கவாசகரே!

மாணிக்கவாசகர் தாம் இருந்த இடங்களின் சூழுலுக்கு ஏற்ப, பற்பல பாடல்களை அவ்வப்போது பாடி உருகுகிறார்.  அவர் பாடிய பாடல்கள் அனைத்தையும் ஒருசேர சொல்ல, கேட்க ஒரு வாய்ப்பும் அமைகிறது. மாணிக்கவாசகர் சிதம்பரத்தில் இருந்தபோது, அந்தணர் ஒருவர் அவரிடத்தில் வந்து அவர் பாடிய அத்தனைப் பாடல்களையும் பாடச் சொல்லிக் கேட்கிறார். அவரின் வேண்டுகோளுக்கு இணங்க மாணிக்கவாசகர் தாம் பாடிய பாடல்களைப் பாடுகிறார். அவற்றைக் கேட்டு அவ்வந்தணர் ஓலைச்சுவடிகளில் எழுதிக் கொள்கிறார்.

திருவாசகத்தை மாணிக்கவாசகர் சொல்லச் சொல்ல எழுதிக்  கொண்ட அந்த அந்தணர் ”பாவை பாடிய வாயால் கோவை பாடுக” என்று  கேட்கிறார்   மாணிக்கவாசகர் அப்போது புதிதாக திருக்கோவையார் பாடுகிறார். அதனையும் அந்தணர் எழுதிக் கொண்டார். பின்பு அவர் மறைந்து போனார். எங்கு தேடியும் அவர் கிடைக்கவில்லை. அடுத்த நாள், அந்த ஓலைச் சுவடிகள் அனைத்தும் தில்லைச் சிற்றம்பலத்தில்  நடராசப் பெருமான் சன்னதியின் திருப்படியில் இருப்பதை  தில்லை வாழ் அந்தணர்கள் கண்டனர்.  சிற்றம்பலமுடையான் திருவடியில் ஒரு சுவடி உள்ளது என்று அனைவருக்கும் அவ்வதிசயத்தைச் சொல்லினர். அனைவரும் பார்த்திருக்க ஓலைகள் பிரித்துப் படிக்கப்பெற்றன.  அவ்வோலையின் நிறைவில் ”திருவாதவூரார் சொற்படி திருச்சிற்றம்பலமுடையான்” என்று  ஒப்பம் இடப்பெற்று ஓலைச்சுவடிகள் நிறைவு செய்யப்பெற்றிருந்தன.

திருவாதவூரரைக் கண்டடைந்து, இச்செய்தியைத் தில்லை வாழ் அந்தணர்கள் தெரிவித்தனர். அவரும் கோயில் வர இச்சுவடிப் பாடல்கள் உணர்த்தும் பொருள் யாது என்று கேட்டனர். அதற்கு மாணிக்கவாசக சுவாமிகள்  இப்பாடல்கள் அனைத்திற்கும் பொருள் ஆடல் கூத்த பிரானாகிய நடராசப் பெருமானே” எனக் காட்டினார்.  திருவாசகத்தின் பொருள் நடராசப் பெருமான் என்பது அறியத்தக்கது.

மேலும் சில நாள்களில் இவ்வோலைச் சுவடிகள் யாது காரணத்தாலோ தில்லையில் உள்ள நீர்நிலை ஒன்றில் இடப்பெற்று அவை அம்பலத்தாடியார் மடத்து அன்பர்களிடத்தில் கிடைத்தது. அவர்கள் அங்கு வைத்து அச்சுவடிகளைப் பாராயணம் செய்து வந்தனர். அவர்களை அங்கிருக்க விடாது காலச் சூழல் விரட்ட  புதுச்சேரிக்கு அவ்வோலைகட்டுடன் அவர்கள் வந்து சேர்கிறார்கள். புதுச்சேரியின் செட்டித் தெருவில் அம்பத்தடையார் மடத்தில்  திருச்சிற்றம்பலமுடையான் எழுதிய திருவாசகச் சுவடிகள் உள்ளன. இது ஒரு வரலாறு.

இவ்வரலாற்றின் வழியாக நாம் அறிந்துகொள்ள வேண்டிய செய்தி திருவாசகம் முதன் முதலாக முற்றோதுதலாக மாணிக்கவாசகராலேயே செய்யப் பெற்றது என்பதுதான். எனவே முதல் திருவாசக முற்றோதலைத் தொடங்கியவர் மாணிக்கவாசகரே ஆகின்றார். மாணிக்க வாசகர்  சொல்லச் சொல்ல இறைவன் எழுதிய நிலையில்  அதுவே முதல் முற்றோதல் ஆகின்றது.

திருவாசகம் ஓதும் முறை

பன்னிரு திருமுறைகளையும் பண் அடிப்படைடியில் ஓதுவார்களே தமிழகத்தில் பாடி  வந்துள்ளனர். குறிப்பாக இராசராசன் காலத்தில்  பெருமளவில் ஓதுவார்கள் நியமிக்கப்பெற்று பன்னிரு திருமுறை ஓதும் முறைமை இருந்துள்ளது. தற்காலத்திலும் ஓதுவார்கள் உரிய பண்ணிசைப்படி திருமுறைகளை ஓதி வருகின்றனர். பஞ்ச புராணம் பாடும் நடைமுறையும் உள்ளது. பஞ்சபுராணம் என்பது  ஐந்து பாடல்களைப் பாடுதல் ஆகும். தேவாரம், திருவாசகம், திருவிசைப்பா, திருப்பல்லாண்டு, பெரியபுராணம் ஆகியவற்றில் இருந்து ஏதேனும் ஒரு பாடலை பாடும் முறைமை பஞ்ச புராணம் பாடுதல் என்றழைக்கப்படுகிறது,

திருமுறைகளை ஓதுவார்கள் ஓதுவதில் பல நடைமுறைகள் பின்பற்றப்படுகின்றன.  திருமுறைகளைப் பாடுபவர்கள் நீராடி , தூய ஆடை உடுத்தி, திருநீறு அணிந்து  பண் அடைவுடன் இறைவன் முன் ஓதுதல் வேண்டும். சிவ தீட்சை பெற்றிருக்க வேண்டும் என்பதும் இதில் அடங்கும்.  திருமுறை ஓதத் தொடங்கும்போதும் நிறைவு செய்யும்போதும் திருச்சிற்றம்பலம் என்று  சொல்லுதல் வேண்டும். திருமுறை நூல்களுக்கு பட்டு சாத்தி அர்ச்சனை வழிபாடு முதலியன செய்து பாடுதல் வேண்டும். திருமுறை நூல்களை ஆண்டவனாகவே எண்ணுதல் வேண்டும்.

திருவாசகத்தைப் பாடுவதற்கு பண் உறுதி செய்யப்படவில்லை.  திருவெம்பாவைப் பாடல்களை மார்கழி மாதத்தில் நாள்தோறும் பாடும் முறைமை ஓதுவார்களிடத்திலும், மக்களிடத்திலும் ஏற்பட்டன. இதுவே திருவாசக முற்றோதல் மக்களைச் சென்றடைந்ததற்கான முதல்படியாகும் மார்கழி மாதத்தில் மட்டுமே பாவை நோன்பாக திருவெம்பாவை அதிகாலையில் பாடப்படவேண்டும். மற்ற நாள்களில் திருவெம்பாவையைப் பாடும் போது  அதில் இடம்பெறும்  எம்பாவாய்   மேலும்  சைவ அமைப்புகள் குறிப்பாக  என்ற சொல்லை வெளிப்பட பாடுதல் கூடாது என்பது மரபு.

பன்னிரு திருமுறை மன்றங்கள் போன்ற அமைப்பின திருமுறை முற்றோதலைச் செய்விக்கத் தொடங்கின.  தேவாரப் பாடல்களை எளிமையாக மக்கள் பண்ணில் பாடி வழக்கிற்குக் கொண்டுவந்தவர்  தருமபுரம் சுவாமிநாதன். இவர் பன்னிரு திருமுறைகள் அனைத்தையும்  பாடி நிலைத்தவர் ஆவார். இவர் வழியில் பன்னிரு திருமுறைகள் எளிய மக்களைச் சென்றடைந்தன. எளிய மக்களும் திருமுறைகளைப் பாராயணம் செய்ய வந்தனர்.

மனன முறை என்றொரு முறையும் திருமுறைகளுக்கு உண்டு. மனப்பாடம் செய்தல் போல பாடல்களைப் படிக்கும் முறை. முற்றோதலில் படிக்கவும் செய்யலாம். பண்ணுடன் பாடவும் செய்யலாம். அவரவர் ராகத்திற்கு ஏற்ப இசைவித்தும் கொள்ளலாம் என்ற நடைமுறை மக்களிடத்தில் தற்போது நிகழ்ந்து வருகின்றது.

முற்றோதல் செய்யும் முறை

திருவாசகத்தை முற்றோதல் செய்கின்ற போது திருவாசகத்தை மட்டும் படிக்காமல் திருவாசகத்திற்கு முன்னும் பின்னுமான திருமுறைகளை இணைத்துப் பாடுதல் வேண்டும். கடவுளைத் துதிக்கும் நடைமுறைகளைச் செவ்வனே செய்து, கணபதி வணக்கம், திருவிளக்கு வணக்கம், நால்வர் துதி, சந்தானாச்சாரியர்கள் துதி, பொது விண்ணப்பம், அடியார் விண்ணப்பம்,  ஏழு திருமுறைகளில் இருந்து  ஒவ்வொரு பதிகத்திற்கும் உரிய முதல், நிறைவுப் பாடல்கள் ஆகியன பாடப்பட வேண்டும்.  இதன்பின் திருவாசகப் பகுதிகள் முழுவதும் பாடப்பட வேண்டும். அதன்பின் திருக்கோவையார், ஒன்பதாம் திருமுறை , பத்தாம் திருமுறை, பதினோராம் திருமுறை, பன்னிரண்டாம் திருமுறை ஆகியவற்றில் இருந்து  ஒரு ஒரு பாடல்கள் பாடப்பட வேண்டும். இதன்பின் இறைவிக்கான பாடல் அபிராமி அந்தாதி போன்றவற்றில் இருந்து பாடலாம். இதன்பின் திருப்புகழ் இசைக்கப்பட வேண்டும். பின் வான்முகில் வழாது பெய்க என்ற  வாழ்த்துப் பாடல் பாடப்பெற்று   அன்னம் பாலித்து, அதற்கான தேவாரம் பாடி, தீபமேற்றித் துதித்து வழிபட்டு முற்றோதலை நிறைவு செய்யவேண்டும்.

முற்றோதலில் பங்கு பெறும் அன்பர்கள் முற்றோதலிலேயே முழுக் கவனத்துடன் செயல்பட வேண்டும். பசி, தூக்கம், ஆசை , அலைப்புறுதல் மறந்து  ஒரே நினைவாய்ப் பாட வேண்டும். கொடுப்பனவற்றை வாங்கவதற்காகவும், உண்பதற்காகவும் நேரம் கழிகையில் திருவாசகத்தின் முழுமையைப் பாட முடியாதவர்களாக ஆகிவிடுகின்றோம். எனவே அதிகாலை தொடங்கி  விரதமாக இருந்து திருவாசகம் முற்றோதலை நடத்துவது சிறப்பு.

திருவாசகம் முற்றோதல் செய்தவர்கள்

வள்ளல் பெருமான் திருவாசகம் முற்றோதலை தன் மணநாளில் மனைவிக்கு முன்னர் நிகழ்த்தினார் என்பது அறிந்து கொள்ளப்பட வேண்டிய முக்கியமான முற்றோதல் நிகழ்ச்சியாகும்.

வான்கலந்த மாணிக்க வாசக! நின் வாசகத்தை
நான்கலந்து பாடுங்கால் நற்கருப்பஞ் சாற்றினிலே
தேன்கலந்து பால்கலந்து செழுங்கனித்தீஞ் சுவைகலந்தென்
ஊன்கலந்து உயிர்கலந்து உவட்டாமல் இனிப்பதுவே

என்று வள்ளல்பெருமான் தான் கலந்து திருவாசகத்தைப் பாடி மகிழ்ந்துள்ளார். கரும்புச் சாறு, தேன், பால், செழுங்கனிகள்  எல்லாவற்றின் சுவையை ஒன்றாக்கினால் எவ்வகை இனிப்பு கிடைக்குமோ அத்தகயை இனிப்பினைச் சுவைக்கத் தருவது திருவாசகம் என்கிறார் வள்ளல் பெருமான்.

ரமண மகரிஷி தன் தாயின் நிறைவுப் பகுதியில் திருவாசகத்தைப் பாடிக் கொண்டிருந்தார். மகாவித்வான் மீனாட்சி சுந்தரம்பிள்ளையின் நிறைவுக் காலத்தில் உ.வே.சாமிநாதர் திருவாசகம் பாடிக்கொண்டிருந்தார். உ.வே.சாவின் நிறைவுக் காலத்தும் திருவாசகம் பாடப்பெற்றது. ஆன்மாவைக் கடைத்தேற்றும் வண்ணமாக அதன் நிறைவுக் கட்டத்தில் திருவாசகம் பாடப்படுவது மறுமை கொள்ள வைக்காது என்பதே இதன் உட்பொருளாகும். எனினும்  வாழ்வின் நிறைவில் பாடப்படுவது திருவாசகம் என்ற எண்ணம் தமிழகத்தில் ஒருகாலத்தில் இருந்தது. தற்போது மணிவிழா,மணவிழா, திருவிழாக்களில் திருவாசகம் முற்றோதல் இசைக்கப்படுவது அது மங்கலம் நிறைந்த நன்னூல் என்பதைக் காட்டுவதாக உள்ளது.

தூண்டல்கள்

திருவாசகத்தை முற்றோதல் செய்யவேண்டும் என்று மாணிக்கவாசகரே கருதியுள்ளார்.

பாடவேண்டும் நான் போற்றி! நின்னையே
பாடி,நைந்து நைந்து, உருகி, நெக்கு நெக்கு,
ஆட வேண்டும், நான் போற்றி! அம்பலத்து
ஆடும் நின் கழல், போது நாயினேன்
கூட வேண்டும் நான், போற்றி! இப்புழுக்
கூடு நீக்க எனைப் போற்றி! பொய்யெலாம்
வீட வேண்டும் நான் போற்றி! வீடு தந்து
அருளு போற்றி! நின் மெய்யர் மெய்யனே! (திருச்சதகம்  பா. எ 100)

என்று மாணிக்கவாசகர் சிவபிரான் புகழைப் பாடி ஆடிக் கூடி வீடு பெற  விரும்புகிறார். இதனைப் படிப்போரும் கேட்போரும் பாடி ஆடி சிவனை நாடி நிற்கின்றனர்.

திருவா சகம் இங்கு ஒருகால் ஓதிற்
கருங்கல் மனமும் கரைந்துகக் கண்கள்
தொடுமணற் கேணியிற் சுரந்துநீர்ப் பாய
மெய்மயிர் பொடிப்ப விதிர்விதிர்ப் பெய்தி
அன்பர் ஆகுநர் அன்றி
மன்பதை உலகில் மற்றையர் இலரே

என்று நால்வர் நான்மணி மாலையில் சிவப்பிரகாச சுவாமிகள்  திருவாசகம் படிக்கும்போது ஏற்படும் மன, உடல் மாற்றங்களைக் குறிப்பிட்டுத் திருவாசகத்தை முற்றோதல் செய்யத் தூண்டுகிறார்.  கருங்கல் மனமும் திருவாசகம் படித்தால் கேட்டால் அதன் கடினத் தன்மையில் இருந்து கரைய ஆரம்பிக்கும். மேலும்  உடலில் மயிற்கூச்சரிப்பு ஏற்பட்டு விதிர் விதிர்ப்படையும்.  இவையெல்லாம் திருவாசகத்தினால் உடலும் மனமும் பெறும் மாற்றங்களாகும்.

திருவா சகமெனும் பெருநீர் ஒழுகி
ஓதுவார் மனமெனும் ஒண்குளம் புகுந்து
நாவெனு மதகில் நடந்து கேட்போர்
செவியெனு மடையின் செவ்விதின் செல்லா
உளமெனு நிலம்புக ஊன்றிய அன்பாம்
வித்திற் சிவமெனு மென்முளை தோன்றி 10
வளர்ந்து கருணை மலர்ந்து
விளங்குறு முத்தி மெய்ப்பயன் தருமே

என்பதும் நால்வர் நான்மணி மாலையில் இடம்பெறும் மற்றொரு பாடல் ஆகும்.  திருவாசகம் என்னும் பெரு நீர்  பாடுபவர்தம் மனம் என்னும் குளம் புகுந்து நிறைவிக்கும்.  மேலும் பாடுபவர்தம் நாக்கு என்னும் மதகில்நடந்து கேட்போர் செவிகள் எனும் மடைகளில் தேங்கி  அவர்களின் உள்ளம் என்னும் நிலத்தைச் சென்று சேரும். அதன்பின் அன்பு என்னும்  சிவ வித்தினை விதைத்து, மென் முறை வரச் செய்து கருணை என்னும் மலர் தந்து முக்தி என்னும் பயன் கனியைத் தந்து நிற்கும் என்றும் பாடுகிறார் சிவப்பிரகாசர்.

திருவார் பெருந்துறைச் செழுமலர்க் குருந்தின்
நிழல்வாய் உண்ட நிகரில்லா னந்தத்
தேன்தேக் கெறியுஞ் செய்யமா ணிக்க
வாசகன் புகன்ற மதுர வாசகம்
யாவரும் ஓதும் இயற்கைக் காதலிற்
பொற்கலம் நிகர்க்கும் பூசுரர் நான்மறை
மட்கல நிகர்க்கும் மதுர வாசகம்
ஓதின் முத்தி உறுபயன்
வேதம் ஓதின் மெய்பயன் அறமே.

என்ற சிவப்பிரகாசர் பாடல் யாவரும் ஓதும் இயல்பினை உடையது திருவாசகம்  என்று குறிப்பிடுகிறது. மேலும் அது மதுர வாசகம், பொன் கலம் போன்றது என்று அதன் உயர்வை அளக்கின்றது. மற்ற வாசகங்கள்  வேதம் உட்பட அனைத்தும் மண்கலம் போன்றன.  ஓதினால் முக்தி உறுதி என்றும் உரைக்கின்றது.

இவ்வகையில் திருவாசகம் முற்றோதல் பால் பாகுபாடு இல்லாமல், தூய்மைச் சைவ நெறி உடைய அனைவரும் பாடலாம் என்று மக்கள் மையமாக திருவாசக முற்றோதல் விளங்குகிறது.  பாடுவது கடினம். படிப்பது எளிது. இனிது என்ற அடிப்படையில்  மக்கள் சங்கம் அனைத்தும் பாடும் படியான அருள் கருணை இக்காலத்தில் நமக்குத் திருவாசக முற்றோதல் மூலம் கிடைக்கின்றது. அதனை சொல்லிய பாட்டின் பொருளுணர்ந்து, நன்முறையில் செய்து முக்தி பெறுவோம்.