திங்கள், ஜனவரி 16, 2017

மூதறிஞர் வ. சுப. மாணிக்கனார் சுட்டும் வள்ளுவ நடை வகை




நடையியல் என்பது தற்போது வளர்ந்து வரும் திறனாய்வுத் துறைகளில் ஒன்று. படைப்பாளர் ஒவ்வொருவரும் அவருக்கேற்ற நடைப்பாங்கைக் கடைபிடிக்கின்றனர். எழுத்தாளர்களின் நடை மக்களிடம் சென்று சேர்கிறது. நல்ல நடை, படிக்க ஆர்வம் ஏற்படுத்தும் நடை போன்றவை மக்களிடம் வெகுவிரைவில் சென்று சேர்கிறது. ஒரு எழுத்தாளரின் நடை இது என்று உறுதிப்படுத்தும் நிலையில் அவ்வெழுத்தாளரின் மற்ற படைப்புகளும் மக்களிடம் கவனம் பெற்றுவிடுகின்றன. எனவே, எழுத்தாளன் தொடர்ந்து எழுத வேண்டும். அவ்வெழுத்தாளன் தனக்கெனத் தனித்த நடையைக் கையாளவேண்டும். அந்நடை மக்களால் எளிதில் அடையாளப்படுத்தப்பட வேண்டும். இவ்வகையில் எழுத்துக்கான பெருமதிப்பை எழுத்தாளனின் நடை வழங்கிவிடுகிறது.

திருக்குறள் தொடர்ந்து கற்பிக்கப்படும், கற்கப்படும் நூல். இதன் யாப்பு ஒரே அமைப்பிலானது என்றாலும் எல்லாக் குறள்களும் ஒரே நடையுடையனவல்ல. ஒவ்வொரு குறளும் தனக்கெனத் தனித்த நடையமைப்பினைக் கொண்டுள்ளது. சில குறள்கள் கேள்விகளாக அமைகின்றன. சில குறள்கள் கேள்வி கேட்டுப் பதிலும் கூறுகின்றன. கேள்வி பதில் நடையைத் தவிர பல்வேறு நடைகளைத் திருவள்ளுவர் பயன்படுத்தியிருக்கிறார். அவரின் நடைத்திறனை மூதறிஞர் வ.சுப. மாணிக்கம் பதினான்கு வகைப்பட்டது என்று உரைக்கின்றார். வள்ளுவம் என்ற தம் நூலில் அவர் வள்ளுவரின் நடையாற்றலை ”திருக்குறள் நடை” என்று தனித்தலைப்பில் தருகின்றார்.

வள்ளுவரின் திருக்குறள் நடை நலத்தை அறிந்து கொள்ள மூதறிஞர் வ. சுப. மாணிக்கனார் காட்டும் பின்வரும் சொற்றொடர்கள் போதுமானவை. “வள்ளுவர் தனக்கு உவமை இல்லா ஒழுக்கப் பேராசான். செயல் வேந்தன். ஒருவன் கண் எத்துணைக் குணப்பிழை காணினும், இனித் திருந்தான் என ஒதுக்கிவிடார். அவன் உயிருள்ளவரை ஒழுக்கத் திருத்தத்துக்கும் பதம் உண்டு என்ற துணிவால் மனநாடி பார்த்துச் செயல் மருந்து ஊட்டுவர். மருத்துவன் சொல்லுமாப்போல், உன்பால் மாசுகள் பலவுள. உனக்கு நல்வாழ்வில்லை என்று பின்னடையற்க. முதற்கண், ’தம்பி! இம்மாசினைப் போக்கிக்கொள்’ என விட்டுவிடாது இசைப்பர். எவனொருவன் தன் குறள் நூலை எடுத்துக் கற்கின்றானோ, கற்கும் அம்மனப் பக்குவம் ஒன்றே, திருந்தும் உள்ளமுடையான் அவன் என்பதற்குப் போதிய சான்று என்ற தெளிவால், தீமை பல செய்தானுக்கும் ஒரு தூய்மை மருந்து எழுதுவர். ‘யான் அளவிறந்த குற்றம் உடையேன்’ என்றானை, அவன் தோள் புறம் தழுவி மார்புரம் காட்டி, ‘நம்பி! பலகிடக்க. இம்முதற் குற்றத்தை அகற்றிக்கொள்’ என்று ஓர் அறவழிப்படுத்துவர். (வள்ளுவம்.ப.237)” என்பது வள்ளுவரின் தனித்த நடையாகும்.



திருக்குறளை ஒருவர் எடுத்துப் படிக்க ஆரம்பித்தலே அவர் குறையற்றவராகிவிட்டார், திருந்தத் தொடங்கி விட்டார் என்று பொருள் என்பது வ. சுப. மாணிக்கனாரின் கூற்று. தற்காலத்தில் நடைபெறும் இழிவுகளுக்கு எல்லாம் காரணம், இழிவுகளைச் செய்பவர்கள் திருக்குறளைத் தொட்டே பாரத்தறியாதவர்கள் என்பதே ஆகும். திருக்குறளைத் தொட்டவர்கள், படித்தவர்கள் தன் வாழ்வில் திருந்திய நடை போட ஆரம்பிப்பார்கள் என்பது உறுதி. அவ்வகையில் திருக்குறள் மக்களைத் திருத்தும் நடை உடையது.

வள்ளுவர் பயன்படுத்திய நடைகள் பதினான்கு என்று கணக்கிடுகிறார் வ. சுப. மாணிக்கனார். இதற்கு மேலும் இருக்கலாம் என்றாலும், தன்னால் இவ்வளவில் கணக்கிட முடிந்தது என்பது அவரின் கூற்று.

வள்ளுவர் பயன்படுத்திய நடைகள் பின்வருமாறு;

1. தற்சுட்டு நடை

2. தற்காப்பு நடை

3. அச்ச நடை

4. கொள்கை உறைப்பு நடை

5. ஒழுக்க வென்றி நடை

6. இருநெறி (செல்நெறி, கொள்நெறி) நடை

7. தான் உணர் நடை

8. விட்டுவிடா நடை

9. விளக்குநடை

10. முன்னறிவிப்பு நடை

11. பேணா நடை

12. செயலுய்ப்பு நடை

13. இலக்கிய நடை

14. கொண்டு கூறும் நடை

ஆகிய பதினான்கு நடைகளைத் திருவள்ளுவர் பயன்படுத்தியுள்ளமையைத் தக்க சான்றுகளுடன் விளக்குகிறார் மூதறிஞர் வ. சுப. மாணிக்கனார்.

இந்நடை அமைப்புகள் பெரிதும் வள்ளுவ நூலில் விளக்கப்பெற்றுள்ளன என்றாலும், அவற்றின் செறிவை இங்கு அறிந்துகொள்வது வள்ளுவ நடையியலை அறிந்து கொள்ள உதவும்.

1. தற்சுட்டு நடை

திருக்குறளில் தன்னைச் சான்றாக வைத்து, ஒவ்வொரு மனிதனும் அறம் அறியும், அறிவிக்கும் அடிப்படையில் அமைக்கப்பெற்ற நடை இதுவாகும்.

“தன்னுயிர்க்கு இன்னாமை தானறிவான் என்கொலோ
மன்னுயிர்க்கு இன்னா செயல்”
(318)

என்ற குறளில் இந்நடை பயன்படுத்தப் பெற்றுள்ளது. உலகம் உன்பால் எவ்வழி நடக்கவேண்டும் என நீ கருதுகிறாய், அவ்வழி நீயும் உலகத்தார் மாட்டு நடந்துகொள் என்று தன்னைச் சான்றாக்கி இக்குறள் அறம் உரைக்கிறது.



2. தற்காப்பு நடை

பிறருக்குத் தீங்கு இழைக்காதே என வாளா தொடுக்காது, இழைப்பின் எறிந்த பந்து திரும்புமாப்போல நீ தீதடைவாய் என அச்சுறுத்தித் தற்காக்கும் நடையில் திருவள்ளுவர் பல குறள்களைப் படைத்தளித்துள்ளார்.

“தன்னைத்தான் காக்கின் சினங்காக்க காவாக்கால்
தன்னையே கொல்லும் சினம்”
(305)

என்ற குறள் தற்காப்பு நடையில் திருக்குறள்களை வள்ளுவர வடித்ததற்கான சான்றாகும்.

3. அச்ச நடை

அறிவு நடை கொண்டு திருந்தாத மாந்தரை அச்ச நடைகொண்டுத் திருத்த முயல்கிறார் வள்ளுவர்.

“மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறஞ்சூழும் சூழ்ந்தவன் கேடு”
( 204)

என்ற குறள் அச்ச மெய்ப்பாட்டுடன் விளங்கும் குறளாகும். மறந்த நிலையிலும் மற்றவர்க்கு கேடு ஏற்படுத்தாதே. ஏற்படுத்தினால் அறமானது மற்றவர்க்கு கேடு ஏற்படுத்தியவனைத்தான் சூழ்ந்து கேடு செய்யும் என்று அச்ச முறையில் இக்குறள் அமைக்கப்பெற்றுள்ளது. அறம் நல்லது செய்வது, செய்தார்க்கு நலம் பயப்பது. அதே நேரத்தில் அறம் தீமைக்கு எதிரானது. தீமை செய்வோரைச் சூழ்ந்து அழிக்கும் வல்லமை பெற்றது என்ற அச்சத்தை இக்குறளுக்குள் திருவள்ளுவர் வைத்துள்ளார். இக்குறள் அச்சநடைக்குச் சிறந்த எடுத்துக்காட்டாக அமைவது.

4. கொள்கை உறைப்பு நடை

பிறர் செல் நெறி மாறி நடப்பினும் நாம் பற்றத் தகும் கொள்நெறி கூறும் நடையில் திருக்குறள்கள் அமைக்கப் பெறுவதுண்டு.

“சால்பிற்குக் கட்டளை யாதெனின் தோல்வி
துளையல்லார் கண்ணும் கொளல்”
(986)

என்ற குறள் கொள்கை உறைப்பு நடை சார்ந்தது என்று மூதறிஞரால் அடையாளம் காட்டப்பெறுகின்றது.

5. ஒழுக்க வென்றி நடை

தீயவை செய்தார்க்கு அஞ்சி வாழாமல், தீயவரை அடக்கி வெல்லவேண்டும் என்ற நிலையில் ஒழுகச் செய்யும் நடை இதுவாகும்.

“மிகுதியான் மிக்கவை செய்தாரைத் தாம்தம்
தகுதியான் வென்று விடல்”
(158)

என்ற குறள் இந்நடை சார் குறளாக எடுத்துரைக்கப்பெறுகிறது.



6. இருநெறி நடை

செல் நெறி, கொள் நெறி இரண்டையும் காட்டும் நடை சார்ந்து குறள்கள் படைக்கப் பெற்றுள்ளன. அதற்கு ஒரு சான்று பின்வரும் குறள்.

“எண்பொருள வாகச் செலச்சொல்லித் தான்பிறர்வாய்
நுண்பொருள் காண்பது அறிவு”
(424)

என்ற குறள் இருநெறிக்கும் உடையது.

7. தான் உணர் நடை

தன்னிடத்தில் உள்ள குறையைத் தானே அறிந்து அதனை மேம்படுத்திக் கொள்ளத்தக்க நிலையில் அமைக்கப் பெறுவது இந்நடையாகும்.

“கல்லாதான் ஒட்பம் கழியநன் றாயினும்
கொள்ளார் அறிவுடை யார்”
(494)

என்ற குறளில் கல்லாதவரின் கருத்து நன்றென்றாலும், அதனைக் கற்றோர் ஏற்பதில்லை என்ற கருத்து வெளிப்படுகிறது. இருந்தாலும் கல்லாதவன் தான் கற்கவில்லை என்பதை உணர்ந்து, தன்னை மேம்படுத்திக் கொள்ளக் கற்க முயலும் முயற்சியை வெளிப்படுத்தும் பாங்கில் இக்குறள் அமைவதால் இக்குறள் தான் உணர் நடை வயப்பட்டது.

8. விட்டுவிடா நடை

யாரையும் விட்டுவிடாது மேனிலைக்கு எழுப்பும் போக்கில் அமையும் நடை இதுவாகும்.

“அறன்கூறான் அல்ல செயினும் ஒருவன்
புறங்கூறான் என்றல் இனிது”
(181)

என்ற குறளின் வழியில் அல்லாத செயல்கள் பல செய்தாலும், புறம் கூறுதல் என்ற பிழை இல்லாதவன் வாழ்வு இனிதாக உயரும் என்று குறையுடையாரையும் விட்டுவிடாது தன்னுடன் நடத்திச் செல்கிறார் வள்ளுவர்.

9. விளக்குநடை

புறச்சார்பு மறுத்து, அகச்சார்பு வேண்டும் நிலையில் இருளோட்டி ஒளியூட்டும் நடையையும் வள்ளுவர் பயன்படுத்தியுள்ளார்.

“மழித்தலும் நீட்டலும் வேண்டா உலகம்
பழித்தது ஒழித்து விடின்”
(280)

என்ற குறளில் விளக்குநடை அமையப் பெற்றுள்ளது.



10. முன்னறிவிப்பு நடை

எதிர்வரும் இன்னல்களை முன்னறிவிப்பாக தரும் நடையிலும் வள்ளுவர் குறள்களை யாத்துள்ளார்.

“களவினால் ஆகிய ஆக்கம் அளவிறந்து
ஆவது போலக் கெடும்”
(783)

என்ற குறள் இந்நடைக்குச் சான்று

11. பேணா நடை

விட்டுத் திருத்தும் பாங்கில் அமைவது இந்நடையாகும்.

“உண்ணற்க கள்ளை உணில்உண்க சான்றோரான்
எண்ணப் படவேண்டா தார்”
(922)

என்பது இந்நடைக்கு எடுத்துக்காட்டு.

12. செயலுய்ப்பு நடை

கற்கும் போதே நெஞ்சிற்கு உரம் ஏற்படுத்தும் வல்லமை தரும் நடையில் குறள்கள் எழுதப்பெற்றுள்ளன.

“எண்ணிய எண்ணியாங்கு எய்து எண்ணியார்
திண்ணியர் ஆகப் பெறின்”
(666)

என்ற குறள் இந்நடையது.

13. இலக்கிய நடை

அளவினும் மிகுந்த தம் எண்ண உயர்ச்சியைப் பிறர்க்கு ஓரளவேனும் உணரத்தவல்ல அழுத்த நடையில் எழுதப்பெறும் குறள்கள் இந்நடை வயப்படுவனவாகும். இந்நடை காமத்துப்பாலில் அதிகம் உள்ளது.

“நெஞ்சத்தார் காத லவராக வெய்துண்டல்
அஞ்சுதும் வேபாக் கறிந்து”
(1128)

என்ற குறள் இத்தகையது.

14. கொண்டு கூறும் நடை

நம் கருத்தைப் புரிந்து கொண்ட ஆசான், தன் கருத்தைத் தெரிவிக்கும் நடையை வள்ளுவர் பயன்படுத்தியுள்ளார்.

“எளிதென இல்லிறப்பான் எய்துமெஞ் ஞான்றும்
விளியாது நிற்கும் பழி”
(145)

என்ற குறள் இந்நடையது.

இவ்வாறு பதினான்கு நிலைகளில் வள்ளுவர் பயன்படுத்திய நடை வகைகளை வரையறுத்துள்ளார் மூதறிஞர் வ.சுப. மாணிக்கனார். இதன் வழி வள்ளுவரின் நடை ஆளுமையும் தெரியவருகிறது. வ.சுப. மாணிக்கனாரின் ஆய்வுத் திறமும் அறிய வருகிறது. இவ்வகையில் பல ஆய்வுக்கண்களைத் திறக்கும் வல்லமை மூதறிஞர் வ. சுப. மாணிக்கனாரின் நூல்களுக்கு உண்டு என்பது தெளிவு.

கருத்துகள் இல்லை: