புதன், அக்டோபர் 12, 2016

மெய்ப்பாடு தனித்த இலக்கணமாக வளர்த்தெடுக்கப்படாதது ஏன்?

siragu-image4 
தொல்காப்பிய பொருளதிகாரம் பல்வகை இலக்கிய மரபுகளை அறிமுகப்படுத்தும் இலக்கணப் பகுதியாகும். பொருளதிகாரத்தில் இடம்பெற்றுள்ள அகத்திணையியல், களவியல், கற்பியல், பொருளியல் ஆகியன அகப்பொருள் இலக்கிய மரபுகளை எடுத்துரைக்கின்றன. புறத்திணையியல் புறப்பொருள் இலக்கிய மரபுகளைக் காட்டுகின்றது. செய்யுளியல் யாப்பிலக்கண மரபுகளை எடுத்துரைக்கின்றது. உவமவியல் அணி இலக்கண மரபுகளை எடுத்துக்காட்டுகின்றது. மெய்ப்பாட்டியில் இலக்கியத்தில் இடம்பெறும் உணர்வுநிலைகளைக் காட்டுகின்றது. மரபியல் மரபு சார் செய்திகளைக் காட்டுகின்றது.
இவ்விலக்கிய மரபுகள் தொல்காப்பியத்திற்குப் பின்னால் எழுந்த இலக்கண ஆசிரியர்களால் வளர்த்தெடுக்கப்பெற்றன. அகத்திணை மரபுகளை வளப்படுத்தி நம்பி அகப்பொருள், தமிழ்நெறி விளக்கம், களவியல் காரிகை, மாறன் அகப்பொருள் ஆகிய இலக்கண நூல்கள் எழுந்தன. புறப்பொருள் இலக்கண மரபுகளை பன்னிரு படலம், புறப்பொருள் வெண்பா மாலை, இலக்கண விளக்கம் ஆகியன வளப்படுத்தின. செய்யுளியல் மரபுகளை அவிநயம், காக்கைப் பாடினியம், யாப்பருங்கலம், யாப்பருங்கலக்காரிகை, வீரசோழியம், யாப்பதிகாரம், சுவாமிநாதம், யாப்பதிகாரம், விருத்தப்பாவியல் போன்ற நூல்கள் வழிமொழிந்தும் வளர்த்தும் எழுந்தன. இவை தவிர பாட்டியல் நூல்கள் பலவும் யாப்பு இலக்கண வளமையைக் காட்டுவனவே ஆகும். இந்திர காளியம், பன்னிரு பாட்டியல், வெண்பாப்பாட்டியல், வரையறுத்த பாட்டியல், சிதம்பர பாட்டியல் போன்றன இவ்வகையில் அடங்குவன. சிற்றிலக்கிய யாப்பியல் முறைகளை பிரபந்த மரபியல், பிரபந்த தீபம், பிரபந்தத்திரட்டு, பிரபந்த தீபிகை ஆகியன அறிவித்து வளர்த்தெடுத்தன. தொல்காப்பிய நிலையில் இருந்து, அதிக அளவில் வளமை பெற்று வளர்த்தெடுக்கப்பெற்றது யாப்பிலக்கணமரபு என்பதில் ஐயமில்லை. அணியிலக்கண மரபுகள் தொல்காப்பிய நிலையில் இருந்துப் பல்வகையாகப் பெருகி வளப்படுத்தப்பெற்றுள்ளன. தண்டியலங்காரம், மாறன் அலங்காரம், இரத்தினச் சுருக்கம், உவமான சங்கிரம், சந்திராலோகம், குவலயானந்தம் ஆகிய நூல்கள் அணியிலக்கண மரபுகளை வளர்த்தெடுத்தன.   இவை தவிர புலமை இலக்கணம் என்ற இலக்கண மரபினை வண்ணச் சரபம் தண்டபாணி சுவாமிகள் தோற்றுவித்தார். ~~அறியும் தன்மை புலமை ஆம்|| என்பது  புலமை இலக்கணத்தின் அவசியத்தைக் காட்டும் தொடராகும்.
இவ்வகையில் ஐவகை இலக்கண மரபுகள் தமிழில் தழைத்தோங்கி வளர்ந்துள்ளன. ஆனால் வளராத இலக்கண மரபும் உண்டு. மெய்ப்பாட்டியல் மரபு ஓரளவிற்கே வளர்ச்சி பெற்றன. பின்னாளில் இவ்விலக்கண மரபு அழியும் நிலையை எட்டிவிட்டது. இதற்கான காரணங்கள் பற்றி அறிவதாக இக்கட்டுரை அமைகின்றது.
மெய்ப்பாடு
தொல்காப்பியர் மெய்ப்பாடு என்பதை அகத்திற்கும், புறத்திற்கும் பொதுவாக அமைந்த மெய்ப்பாடுகள், அகத்திற்கே உரிய மெய்ப்பாடுகள்  என்று வகைப்படுத்துகிறார். நகை, அழுகை, இளிவரல், மருட்கை, அச்சம், பெருமிதம், வெகுளி, உவகை என்று பொதுவான மெய்ப்பாடுகள் எட்டு என்பது தொல்காப்பியக் கொள்கை. இம்மெய்ப்பாடுகள் தற்போது உடல் மொழி என்றும், உணர்ச்சி என்றும் இலக்கியத் திறனாய்வாளர்களால் எடுத்தாளப்படுகின்றது. இருப்பினும் இலக்கண நூல்கள் தனித்த நிலையில் மெய்ப்பாட்டியலுக்கு அமையவில்லை என்பதும், அதனை ஐந்திலக்கண நூல்கள் கூட தனித்த இலக்கணமாகக் கருதி வளர்க்கவில்லை என்பதும் இங்கு எண்ணத்தக்கதாகும்.
ஐந்திலக்கண நூல்களாகத் தற்போது கிடைக்கும் வீரசோழியம், இலக்கண விளக்கம், முத்துவீரியம், சுவாமிநாதம் ஆகியவற்றில் வீரசோழியம், இலக்கண விளக்கம், சுவாமிநாதம் ஆகியனவற்றில் தொல்காப்பிய மெய்ப்பாட்டு செய்திகள் காட்டப்பெற்றுள்ளனவே அன்றி வளர்த்தெடுத்த முறையைக் காண இயலவில்லை.  வீரசோழிய நூலின் பொருட்படலத்தில்,  அகமெய்ப்பாடுகள், புறமெய்ப்பாடுகள் ஆகியன எடுத்துக்காட்டப்பெறுகின்றன. ஏறக்குறைய தொல்காப்பிய நெறிமுறைகளை ஒட்டியே வீரசோழியம் மெய்ப்பாடுகளை வரைந்துள்ளது.
இலக்கணவிளக்கம் எழுதிய வைத்தியநாத தேசிகர் பொருளதிகாரப் பிரிவில் அகத்திணை செய்திகளைச் சொல்லி முடிக்கும் நிலையில் மெய்ப்பாடு பற்றிய செய்திகளைத் தருகின்றார். இதற்கென தனித்த இயலை அவர் அமைக்கவில்லை. இந்நூலில் அவர் மெய்ப்பாடும் அதன் வகைகளும், சிறப்பில்லா மெய்ப்பாடுகள், அகப்பொருள் மெய்ப்பாடுகள் ஆகிய தலைப்புகளில் மெய்ப்பாட்டுச் செய்திகளைக்  காட்டுகின்றார்.
முத்துவீரியத்தில் மெய்ப்பாடுகள் பற்றிய செய்திகள் இடம்பெறவில்லை. சுவாமிநாதம் என்ற இலக்கண நூலில் மெய்ப்பாடுகள் சுவை அணிக்குள் கொண்டுவரப்பெற்றுள்ளன. இந்நூல் பத்தொன்பதாம் நூற்றாண்டில் சுவாமி நாதக் கவிராயர் என்பவரால் இயற்றப்பெற்றுள்ளது.
~~ குணம் வெளியில் தோன்ற முடிப்பது சுவை, முன்பொருளிற் கொண்ட மெய்ப்பாடு எட்டும் அதாம்|| (சுவாமிநாதம் நூற்பா எண். 180) என்ற நிலையில் இந்நூல் எட்டு மெய்ப்பாடுகளையும் சுவையணிக்குள் கொண்டுவந்துவிடுகின்றது.
தொல்காப்பியத்தில் தனித்த நிலையில் இயலாக விளங்கிய மெய்ப்பாட்டியல் அதனைத் தொடர்ந்து எழுந்த ஐந்து இலக்கண நூல்களில் அகத்திணை இயல் சார்ந்து அமையும் அகப்பாட்டு உறுப்புகளுள் ஒன்றாகக் கொள்ளப்பெற்றுள்ளது. அல்லது சுவையணியில் மெய்ப்பாடுகள் அடக்கப்பெற்றுள்ளன. இதன் காரணமாக தொல்காப்பியர் தந்த தனித்த இலக்கண மரபில் இருந்து சார்பிலக்கண மரபினதாக மெய்ப்பாடு என்ற மரபு தேய்வு பெற்றுள்ளது என்பது தெரியவருகிறது.
இந்நிலைக்கு என்ன காரணம் என்று எண்ணும்போது தண்டியலங்காரத்தில் மெய்ப்பாடுகள் எட்டும் சுவையணிகளாகக் கொள்ளப்பெற்றிருப்பது இலக்கணம் படைப்போரிடத்தில் முக்கியமான தாக்கத்தை ஏற்படுத்தி  இருக்கவேண்டும்  என்பததே ஆகும். தொல்காப்பிய காலத்தில்,  உவமை என்ற ஒரு அணியாக இருந்த அணி இலக்கணம் மற்ற இலக்கண மரபுகளை உள்வாங்கி வளரத்தொடங்கியது என்பதற்கு உரிய எடுத்துக்காட்டு மெய்ப்பாடுகளைத் தனித்த மரபுடையதாக அமைக்காமல் அவற்றைச் சுவையணியாகத் தண்டியலங்காரம்; கொண்டதுதான்.
~~உள் நிகழ் தன்மை புறத்துத் தோன்ற
எண்வகை மெய்ப்பாட்டின் இயைவது சுவையே||( தண்டியலங்காரம், நூற்பாஎண். 69)
என்ற நூற்பாவின் வழி மெய்ப்பாட்டிற்கான இலக்கணம் வரையறுக்கப்பெற்றாலும் இம்மெய்ப்பாட்டை உள்வாங்கி அதனை சுவையணியாகக் கொண்டு இலக்கணம் படைத்திருக்கும், தண்டியாசிரியரின் தன்மை புரிய வருகிறது.
~~வீரம், அச்சம், இழிப்பொடு, வியப்பே
காமம், அவலம், உருத்திரம், நகையே || (தண்டியலங்காரம், நூற்பா. எண். 70)
என்ற நிலையில் எண்வகை மெய்ப்பாடுகளையும் சுவையணிக்குள் கொண்டு வந்துச் சேர்க்கிறார் தண்டியாசிரியர்.
இதன் காரணமாக மெய்ப்பாட்டு மரபு தடைபட்டு அம்மரபு அணியிலக்கண மரபினை வளப்படுத்துவதாக அமைகின்றது. மெய்ப்பாட்டுக்கு இருந்த அக, புற இலக்கணம் சார் முக்கியத்துவம் இதன் காரணமாகக் குறைந்துபோவதாயிற்று.
வீரமாமுனிவர் வரைந்த தொன்னூல் விளக்கத்திலும் இதே முறை பின்பற்றப்பெற்றுள்ளது.
~சுவையணி என்ப சுடுஞ்சினம், காமம்
வியப்பு, அவலம், இழிவு, அச்சம், வீரம், நகை என
எண் மெய்ப்பாட்டின் இயைவன கூறி
உள் மெய்பாட்டை உணரத்தித் தோற்றலே|| (தொன்னூல் விளக்கம், நூற்பா. எண். 354)
என்ற நிலையில் மெய்ப்பாடுகள் சுவையணிகளாக மாற்றம் பெற்ற இயல்பினை அறிந்து கொள்ள முடிகின்றது. இவ்வகையில் மெய்ப்பாட்டியல் தனித்த இலக்கணமாக வளர இயலாமைக்கு முக்கிய காரணம் அவை சுவையணியின் பாற்பட்டவையாகக் கொள்ளப் பெற்ற முறைமைதான் என்பதை உணரமுடிகின்றது. இதன் காரணமாக அகம் சார் உணர்ச்சிகள்,புறம் சார் உணர்ச்சிகள் ஆகிய அமைந்த பாடல்களைப் படைக்கும் முறைமை தடுக்கப்பெற்றுள்ளன என்பதும் இங்கு எண்ணத்தக்கதாகும்.
வடமொழியல் இரசக் கோட்பாடு என்பது வளர்த்தெடுக்கப்பெற்ற நிலையில் தமிழில் மெய்ப்பாட்டுக் கோட்பாடுகள் சுவையணியாகச் சுருக்கப்பெற்றிருப்பது ஏன் என்பதைத் தமிழாய்வு உலகம் எண்ணிப் பார்க்க வேண்டும். மெய்ப்பாடு என்ற தனித்த இலக்கண , இலக்கிய மரபு அணியிலக்கணத்தின் ஒரு பகுதியாக ஏன் ஆக்கப்பெற்றது என்பது அறியப்படவேண்டிய ஒரு சிக்கலாகும்.
அக மாந்தர் உணர்ச்சிகள், புற மாந்தர் உணர்ச்சிகள் ஆகியவற்றிற்கு முக்கியத்துவம் அளித்த மெய்ப்பாட்டியல் மரபுகள் மழுங்கடிக்கப்பெற்றுள்ளது. ஐந்திலக்கண மரபு என்று தமிழ் இலக்கண மரபு சுருக்கப்பெற்றுள்ளது. அது மெய்;ப்பாடு என்ற ஒன்றையும் சேர்த்து  அறுவகை இலக்கண மரபாக எண்ணப்பெற்றிருக்க வேண்டும். தற்போது  புறப்பட்ட புலமை இலக்கணம் என்பது ஏழாவது இலக்கணமாக அமையலாம். இவ்வாறு ஓர் இலக்கண மரபினைத் தேய்வுறச் செய்வது என்பது தமிழின் வளர்ச்சிக்கு உரியது அல்ல.
முடிவுகள்
தொல்காப்பியரால் தனித்த இயலாக, தனித்த இலக்கண இலக்கிய மரபாகக் காட்டப்பெற்ற மெய்ப்பாட்டு மரபுகள் தமிழ் இலக்கணப் படைப்பாளர்களால் வளர்த்தெடுக்கப்படாமல் குறைவு பெறச் செய்யப்பெற்றுள்ளது. அம்மரபினையும் இணைத்து அறுவகை இலக்கணம் என்ற நிலையைத் தமிழ் எய்தியிருக்கவேண்டும்.
அணியிலக்கண வகைகளில் ஒன்றாகச் சேர்க்கப்பெற்றுள்ள சுவையணியின் பாற்பட்டதாக மெய்ப்பாடுகள் எண்ணப்பெற்றிருப்பது ஓர் தனித்த இலக்கணத்தினை மற்றோர் இலக்கணத்தின் பகுதியாக பார்க்கத்தக்க மதிப்பிழப்பை ஏற்படுத்துவதாக உள்ளது.
சுவையணியின் விரிவுகளாகக் கூட அக, புற மெய்ப்பாட்டு மரபுகள் கொள்ளப்பெறவில்லை. எட்டு வகை சுவை என்ற நிலையில் நகை போன்றன மட்டும் கொள்ளப்பெற்றுள்ளன. அகத்திற்கே உரிய மெய்ப்பாடுகள் முழுதுவமாக மறைக்கப்படுவதற்கான வாய்ப்பினைச் சுவை செய்துவிடுகின்றது.
சுவையணியாக மெய்ப்பாடுகள் சுருக்கப்பெற்ற நிலையில் மீளவும் அது தனித்த இலக்கணமாக ஆக்கப் பெருமுயற்சியை மேற்கொள்ளவேண்டி இருக்கிறது.

http://siragu.com/?p=21713  thanks to siragu

கருத்துகள் இல்லை: