சனி, மே 14, 2016

ஆண்டாளும் வடநாட்டு வைணவத்தலங்களும்



images (1)
 பக்தி இலக்கியகாலத் தமிழகத்தில் சைவசமயம், வைணவ சமயம் ஆகிய இரண்டும் இலக்கிய இயக்கமாகவும் சமுதாய நல இயக்கமாகவும் செயல்பட்டுவந்தன என்பது எல்லாரும் அறிந்தது. இதே காலத்தில் வடநாட்டில் வைணவ சைவ சமய வளர்ச்சிகள் எப்படி இருந்தன என்ற கேள்விக்குத் தமிழ் இலக்கியங்களில் பதில் இருக்கிறதா என்பதைத் தேடினால் கண்டறிந்து பெறமுடிகின்றது. தென்னகக் கோயில்கள் போலவே வடநாட்டுக் கோயில்களையும் பக்தி இலக்கிய பெருமக்கள் பாடியுள்ளனர். சைவப் பெருமக்கள் வடநாட்டின் தலைப்பகுதியான கைலாயம் என்பதை எட்டவும் தொழவும் முயற்சி செய்ததை திருநாவுக்கரசர், காரைக்காலம்மையார் வழி பெறமுடிகிறது. வைணவ சமய வளர்ச்சி வடநாட்டில் இருந்த தன்மையை ஆண்டாளின் பனுவல்கள் வழி பெறமுடிகின்றது. ஆண்டாள் தன் பாடல்களில் வடநாட்டு வைணவத் திருத்தலங்கள் பற்றிய குறிப்புகளைத் தருகின்றார். அவர் பெண் என்பதால் தானிருந்த திருவில்லிப்புத்தூர், மற்றும் திருவரங்கம் ஆகிய இடங்களுக்குப் பயணிக்க முடிந்தது. ஆனால் வட நாட்டு வைணவத் தலங்களைப் பயணித்துப் பார்க்க வேண்டும் என்ற ஆவல் ஆண்டாளிடம் இருந்துள்ளது. மேலும் வடநாட்டில் வைணவத் தலங்கள் சிறப்புற்று விளங்கியதால் அவை பற்றிய குறிப்புகளைச் செவிவழிச்செய்திகளாகக் கேட்டு ஆண்டாள் பதிவு செய்துள்ளார் என்பதும் தெரியவருகிறது.
andal-painting
            ஆண்டாளின் நாச்சியார் திருமொழியில் பன்னிரண்டாம் திருமொழி கண்ணன் இருக்குமிடம் கொண்டு செல்வீர் என்ற தலைப்பில் அமைகின்றது. இத்திருமொழியில் ஆண்டாள் வட நாட்டு வைணவத் தலங்களைக் குறிப்பாக கண்ணன் சார்புடைய தலங்களைக் குறித்துப் பாடியுள்ளார். கண்ணன் வாழ்ந்த வடநாட்டு ஊர்களுக்கு என்னைக் கொண்டு சேருங்கள் என்பது அப்பாடலின் பொதுப்பொருள். ஆண்டாள் தானாகப்போக இயலாத நிலையில் கண்ணன் மீதான காதல் அதிகரிக்கும் சூழலில் தன்னைச் சார்ந்தவர்களைக் கண்ணன் இருப்பிடங்களுக்கு அழைத்துச்செல்லக் கோருவதுபோல இப்பாடல்கள் பாடப்பெற்றுள்ளன.
வடமதுரை
            கண்ணனின் நகரமான வடமதுரையில் இத்திருமொழி தொடங்குகின்றது.
~~பெற்றிருந்தாளை ஒழியவே, போய்ப் பேர்த்தொருதாய் இல் வளர்ந்த நம்பி, மற்பொருந்தாமல் களமடைந்த மதுரைப் புறத்தென்னை உயத்திடுமின்|| ( 617)
என்று மதுரா நகரத்தை எண்ணுகிறார் ஆண்டாள். மதுரா நகரில் கண்ணன் பிறந்த இடம் குறிக்கத்தக்க நினைவுச் சின்னமாக இன்னமும் பாதுகாக்கப்பெற்று வருகிறது.  கண்ணன் பிறந்த இடம் பற்றிய செய்திகள் ஆண்டாளுக்கு ஆதி முதல் உணர்த்தப்பெற்றது என்பதற்கு இப்பாடல் சான்றாகின்றது. வடமதுரை நூற்றியெட்டு திவ்யதேசங்களில் நூற்றியிரண்டாம் இடத்தில் வைத்துப் போற்றப்பெறுகிறது.
ஆய்ப்பாடி
            கண்ணன் நண்பர்களுடன் சுற்றித் திரிந்த இடம் ஆய்ப்பாடி ஆகும்.
~~ஆணையால் நீர் என்னைக் காக்கவேண்டில் ஆய்ப்பாடிக்கே என்னை உய்த்திடுமின்||  (618)
என்று ஆய்ப்பாடியைக் குறிக்கின்றார் ஆண்டாள். நூற்றியெட்டு திவ்யதேசங்களில் நூற்றிமூன்றாம் இடத்தில் வைத்துப் போற்றப்பெறுகிறது. வடமதுரையில் இருந்து எட்டு கிலோமீட்டர் தூரத்தில் உள்ள ஊர் ஆய்ப்பாடி ஆகும். வடமதுரையும் நில அளவிலும், கண்ணன் உலவிய அளவிலும் அருகருகு இருப்பது கண்ணன் வரலாற்றில் இருக்கும் உண்மைத்தன்மையை வெளிப்படுத்துவதாக உள்ளது.
யமுனை நதிக்கரை
            யமுனை நதிக்கரையில் அமைந்துள்ள நகரம் வடமதுரை ஆகும். இந்த நதிக்கரை கண்ணன் திருப்பாதங்கள் பட்ட நதிக்கரை என்பதால் இவ்விடத்திற்கு வருவதற்கு ஆண்டாள் பிரியப்படுகிறார்.
~இங்குத்தை வாழ்வை ஒழியவே போய் யமுனைக் கரைக்கென்னை உய்த்திடுமின்|| (620) என்று யமுனை நதிக்கரையில் விளையாட எண்ணம் கொள்கிறார் ஆண்டாள்.
            யமுனை ஆற்றில் வாழ்ந்த காளிங்கள் என்ற பாம்பினை அடக்கியவன் கண்ணபிரான். ஆண்டாள் தன் நிலையைக் கண்டு கலக்கமடைவதை விட்டுவிட்டு காளிங்களை அடக்கிய யமுனைக் கரைக்கு அழைத்துச் செல்லுங்கள் என்று வேண்டுகோள் வைக்கிறார். ~~நீர்க்கரை நின்ற கடம்பை ஏறிக் காளியன் உச்சியில் நட்டம் பாய்ந்து போர்க்களமாக நிருத்தம் செய்த பொய்கைக் கரைக் கென்னை உய்த்திடுமின்||(621) என்று பாடும் ஆண்டாளின் கண்ணன் குறித்தான வேட்கை குறிக்கத்தக்கது.
பத்த விலோசனம்
            கண்ணனுக்கும், அவன் தோழர்களுக்கும்  முனிபத்தினிகள் பசிக்கும் போது நாள்தோறும் உணவு கொடுத்த இடம் இதுவாகும். இவ்விடத்திற்குத் தன்னை அழைத்துப்போகச் சொல்லுகிறாள் ஆண்டாள்.  ~வேர்த்துப் பசித்து வயிறசைந்து வேண்டு அடிசில் உண்ணும்போது, ஈதென்று பார்த்திருந்து நெடுநோக்குக் கொள்ளும் பத்த விலோசனத்து உய்த்திடுமின்|| (622) என்ற ஆண்டாளின் வாக்கு கண்ணனின் மற்றொரு வட மாநில இருக்கையைக் காட்டுவதாக உள்ளது. மதுராவிற்கு அருகில் இவ்விடம் உள்ளது.
பாண்டிவடம்
            மதுராவிற்கு அருகில் உள்ள மற்றொரு இடம் பாண்டிவடம் ஆகும். பரசுராமன் பிரலம்பாசுரனை அழித்த இடம் பாண்டீரமாகும். அந்த பாண்டீரத்தில் உள்ள ஆலமரத்திற்குத் தன்னை அழைத்துப்போக ஆண்டாள் வேண்டுகிறாள்.
~~பண்ணழியப் பலதேவன் வென்ற பாண்டிவடத் தென்னை உய்த்திடுமின்|| (623) என்ற ஆண்டாளின் வருகை பாண்டிவடம் என்ற மற்றொரு கண்ணன் தலத்தைக்; காட்டுகிறது.
கோவர்த்தன மலை
            ~~கொற்றக் குடையாக ஏந்தி நின்ற Nகுhவர்த்தனத் தென்னை உய்த்திடுமின் || (624) என்று கோவர்த்தனகிரியை கண்ணன் தலமாகக் காண்கிறார் ஆண்டாள்.
துவாரகை
            கண்ணன் உருவக்கிய நகரம் துவாரகை ஆகும். குஜராத் மாநிலத்தில் உள்ள முக்கியமான தலம் இதுவாகும்.
~~சூட்டுயர் மாடங்கள் சூழ்ந்து தோன்றும் துவராபதிக்கு என்னை உய்த்திடுமின்|| (625)
என்று ஆண்டாள் இந்நகர் பற்றிக் குறிப்பிடுகிறாள். துவராகை என்பதற்கு பல வழிகள் கொண்ட ஊர் என்று பொருள். ஆண்டாள் மாடங்கள் சூழ்ந்த நகரம் என்று இதனைப் பாடுகிறார்.
            இவ்வாறு வடமதுரையில் கண்ணன் பிறந்தது முதல் கண்ணன் தனக்கான நகரம் உருவாக்கிய துவாரகை வரையான தலங்களில் தன்னை நிறுத்தச் சொல்லி வெண்டுகோளை வைக்கிறார் ஆண்டாள்.
            ~~மன்னுமதுரை தொடக்கமாக வண்துவராபதி தன்னளவும்
             தன்னைத் தமர் உய்த்துப் பெய்யவேண்டித் தாழ்குழலாள் துணிந்த துணிவைப்
             பொன்னியல் மாடம் பொலிந்து தோன்றும் புதுவையர்கோன் விட்டுச் சித்தன் கோதை
             இன்னிசையால் சொன்ன செஞ்சொல்மாலை ஏத்த வல்லார்க்கு இடம் வைகுந்தமே||                                                                                                                                    (626)
என்ற பாடலில் ஆண்டாள் பாடிய வடநாட்டுத் தலங்கள் அனைத்தும் குறிப்பிடப்பெற்றுள்ளன. இத்திருமொழி வழி ஆண்டாள் காலத்தில் கண்ணன் பிறந்த இடம், வளர்ந்த இடம், உருவாக்கிய இடம் ஆகியன பற்றிய தகவல்கள் தென்னிந்தியாவில் பரவி இருந்தது என்பதற்குச் சான்றாக உள்ளது. இலக்கியங்கள் வழியாக வடநாட்டையும் தென்னாட்டையும் சமயச்சான்றோர்கள் இணைத்து தேச ஒற்றுமையைக் காத்துள்ளனர் என்பதாகவும் இதனைக் கொள்ளலாம். ஆண்டாள் குறிப்பிட்ட இத்திருத்தலங்களில் தமிழ்ச் சமுதாய வம்சாவழியினர் வாழ்ந்துவருகின்றனர் என்பதற்கு பல சான்றுகள் உள்ளன. இவர்கள் தமிழகத்தில் இருந்து வடநாடு சென்று தமிழ்ப்பண்பாட்டுடன் வாழ்ந்து வருகிறார்கள் என்பதும் குறிக்கத்தக்க செய்தியாகும். இவ்வகையில் சமயங்கள் இடங்கள் கடந்து மக்களை ஒற்றுமைப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டிருந்தன என்பதை உணரமுடிகின்றது.
http://www.vallamai.com/?p=68804



கருத்துகள் இல்லை: