புதன், டிசம்பர் 02, 2015

வரவிற்குள் செலவு



3. வரவிற்குள் செலவு

மனிதன் கூடி வாழும் இயல்புடையவன். கூடி வாழ்ந்தால் கோடி நன்மை. கணவனும் மனைவியும், குழந்தைகளும் கூடி வாழ்வது குடும்பம் ஆகின்றது. பணிபுரியும் இடத்தில் மேலாளர், அலுவலர், எழுத்தர் என்று இவர்கள் சேர்ந்து உழைத்தால் நிறுவனம் என்ற அமைப்பு வெற்றி கரமாகச் செயல்படுகிறது. உழைப்பாளர்கள், தொழிலாளர்கள் ஒன்று கூடி பணிசெய்தால் தொழிற்சாலை வளர்கின்றது. குடும்பம், நிறுவனம், தொழிற்சாலை போன்ற எல்லாமும் மனிதனின் கூடிவாழும் சமுதாய உணர்வின் வெளிப்பாடுகள்தான்.

குடும்பம், நிறுவனம், தொழிற்சாலை எதுவானாலும் அது வெற்றிகரமாக நடைபோடக் கூட்டுணர்வும், பொருளாதாரத் தூய்மையும் இன்றியமையாதனவாகின்றன.

குடும்பம் வெற்றி கரமாக நடைபோட வரவுக்குள் செலவுகள் அடங்கவேண்டும். நிறுவனத்திற்கும் அப்படியே... தொழிற்சாலைக்கும் அதுதானே...

பொருளாதரச் சீர்மை, தூய்மை ஒவ்வொரு அமைப்பினையும் வலுவுள்ளதாக ஆக்குகின்றது. செலவுகள் அதிகமானால், வரவுகள் குறைவானால் குடும்பத்தில் மகிழ்ச்சி குறைந்து போகும். நிறுவனத்தின் வெற்றி பாதிக்கப்படும். இந்த வெற்றிகள் பாதிக்கப்பெற்றால் மகிழ்ச்சி இருக்காது. வளமை காணாமல் போய்விடும்.

ஒவ்வாரு நாளும் வரவினை நாடி செலவினைச் செய்ய வேண்டியிருக்கிறது. தற்காலக் குடும்பங்களில் கணவனும் உழைக்கின்றார். மனைவியும் உழைக்கின்றார். இருவரும் வருவாயின் வாயில்கள் ஆகின்றனர். ஆனால் இருவர் வாங்கும் கடனும் அளவுக்கு மிஞ்சிப் போய்விடுகிறது.

மாதந்தோறும் கட்டப்படும் கடன்கள் ஒருபுறம். அதற்கான வட்டி ஒரு புறம். இது தவிரக் குடும்பச் செலவுகள், குழந்தைகள் பராமரிப்பு, அவரசத் தேவைகள், திருமணம், காதுகுத்து, அன்பளிப்புகள் என்று செலவுகளின் பட்டியலும் அதிகமாகிக் கொண்டே செல்கின்றது.

எந்த மந்திரக்கோலை வைத்துச் செலவினை அடக்கப்போகிறோம் என்று தெரியவில்லை. இந்தச் சூழலில் ஔவையாரிடம் சென்று இந்தப் பிரச்சனையைச் சொன்னால் தீர்வு கிடைக்குமா என்றால் அதற்கும் ஔவையார் பதில் தருகின்றார்.

ஆன முதலில் அதிகம் செலவு ஆனால்
மானம் அழிந்து மதிகெட்டுப் - போன திசை
எல்லார்க்கும் கள்ளனாய் ஏழ்பிறப்பும் தீயனாய்
நல்லார்க்கும் பொல்லனாம் நாடு

என்று வரவுக்கும் செலவுக்கும் உள்ள தொடர்பினைப் பாடுகின்றார் ஔவையார்.


தொழில் செய்யப் புகும் ஒருவர் மூலதனம் என்ற அளவில் ஒரு தொகையை வைப்பாக வைத்தே தொழில் தொடங்குகின்றார். அவ்வாறு அவர் தொடங்கும் தொழில் தடையின்றி நடக்க வேண்டுமானால் முதல் என்ற நிலையில் அமைந்த தொகையில் சிறிதுகூட எடுக்கக் கூடாது.

குடும்பம் என்ற அமைப்பில் இதுபோன்ற மூலதனம் ஒன்று இருக்க வேண்டும் என்று ஔவையார் விரும்புகின்றார். கணவன் வீட்டார் வழியாகவும், மனைவி வீட்டு வழியாகவும் வந்த கூட்டுச் செல்வத்தை மூலதனமாகக் கொண்டு குடும்பம் தொடங்கவேண்டும். குடும்பம் பெருகப்பெருக அம்மூலதனமும் பெருகும். இதனால் கவலையில்லாத வாழ்க்கையைக் குடும்பத்தார் வாழ இயலும் என்பது ஔவையார் சொல்லும் தீர்வு.

இதுபோன்றே தொழிற்சாலைகளிலும், நிறுவனங்களிலும் மூலதனம் என்ற நிலைத்த பொருள் வைக்கப்படும். அந்த மூலதனத்தை முதலாக வைத்துக் கொண்டு அதனைப் பெருக்குவது தொழிற்சாலைகள் மற்றும் நிறுவனங்களின் கடமையாகின்றது.

மூலதனம் என்ற முதலீட்டில் செலவிற்குப் பணம் எடுக்காமல் இருக்கும்வரை எந்தக் குடும்பமும் தாழ்வு பெறாது. எந்தத் தொழிற்சாலையும் தாழ்வு பெறாது. எந்த நிறுவனமும் தாழ்வு பெறாது. ஆனால் முதலில் செலவு செய்யத் தொடங்கிவிட்டால் பல கேடுகள் வந்து சேருகின்றன.

மூலதனத்தில் இருந்து செலவிற்குப் பணம் எடுக்கத் தொடங்கிவிட்டால் செல்வம் குறையத் தொடங்குகின்றது. செல்வம் குறைவதன் காரணமாக வளமான வாழ்க்கை வறுமையை நோக்கிப் பயணிக்க ஆரம்பித்துவிடுகிறது. மன அமைதி போய்விடுகிறது. மானம் தாழ்ந்துபோகிறது. அறிவிற்கும் மயக்கம் வந்துவிடுகிறது. செல்லும் இடத்தில் எல்லாம் மறைந்து வாழும் நிலை வந்துவிடுகிறது. நல்லவர்களுக்கெல்லாம் வேண்டாத உறவாக அவ்வுறவு அமைந்துவிடுகிறது.

பல விளைவுகளை செலவுகள் ஏற்படுத்திவிடுகின்றன. பணச்செலவால் மனஅமைதிக்குச் செலவு வந்துவிடுகிறது. அறிவுக்குச் செலவு வந்துவிடுகிறது. நல்லவர்களும் இணையாமல் செலவாகிப் போய்விடுகிறார்கள். இத்தனைக்கும் காரணம் வரவிற்குள் செலவினை அடக்கத் தெரியாமல் போவதால்தான். எனவே வரவிற்குள் செலவினை அடக்கம் நன்மையைக் கற்றுக்கொள்ள வேண்டியிருக்கிறது.

மூலதனம் என்பதைப் பற்றி கார்ல் மார்க்ஸ் விரிவாகச் சிந்தித்துள்ளார்.

சரக்கு சுற்றோட்டமே மூலதனத்தின் தொடக்க நிலை. சரக்குகளின் உற்பத்தியும், அவற்றின் சுற்றோட்டமும் அந்தச் சுற்றோட்டத்தின் வளர்ச்சியடைந்த வடிவமாகிய வாணிபம் எனப்படுவதும் மூலதனத்தின் உற்பத்திக்கான வரலாற்று அடித்தளம் ஆகின்றன என்று மூலதனம் என்பதைப் பற்றி கார்ல் மார்க்ஸ் குறிப்பிடுகின்றார்.

சரக்கு பணமாக மாற்றப்படுகிறது. பணம் மீளவும் சரக்காக மாற்றப்படுகிறது என்பது மூலதனத்தின் முதல் நிலை. இது உற்பத்தியாளர்களின் நிலை.

பணம் சரக்காக மாற்றப்படுகிறது. சரக்கு பணமாக மாறுகிறது என்பது இரண்டாம் நிலை. இது வியாபாரிகளின் நிலை.

சரக்கு- பணம்- சரக்கு

பணம் - சரக்கு- பணம்

என்ற இரண்டுதான் மூலதனத்தின் அடிப்படையாகின்றது. 
நன்றி - முத்துக்கமலம் இணைய இதழ் 

கருத்துகள் இல்லை: