செம்மொழி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
செம்மொழி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், மே 05, 2011

செம்மொழிக் கணினிக் களஞ்சியம் உருவாக்கலும் அதன் பகுப்புகளும்


செம்மொழிக் கணினிக் களஞ்சியம் உருவாக்கலும் அதன் பகுப்புகளும்

செம்மொழி இலக்கியங்கள் என்ற ஒரு தொகுப்பு தற்போது தமிழ் இலக்கியப் பரப்பிற்குக் கிடைத்துள்ளது. இதன் முலம் தமிழ் செம்மொழி இலக்கியத் தகுதியைப் பெற்றிருக்கிறது. இந்தத் தகுதிக்கு மேலும் வளம் சேர்க்கச் செம்மொழி இலக்கியங்களில் உள்ளக் கருத்துக்களைக் களஞ்சியங்களாக்கிப் பலரும் எளிதில் பயன் கொள்ளச் செய்ய வேண்டும். இந்த நோக்கத்தினை எட்டுவதற்குரிய சில வழிமுறைகளை இக்கட்டுரைச் சுருக்கம் எடுத்துரைக்கின்றது.

செம்மொழி இலக்கியங்களைப் பற்பல குழுவினர் வலையேற்றம் செய்துள்ளனர். இவற்றுள் சிறந்ததைத் தேர்வு செய்து கொண்டுச் செம்மொழிக் கணினிக் களஞ்சியம் உருவாக்கல் என்பது அடிப்படைத் தேவையாகும். அக்களஞ்சியம் பின்வரும் நிலையில் பல்வேறு பகுப்புகளைக் கொண்டதாக அமைந்தால் பெரும்பயன் நல்கும்.

சொற்களஞ்சியம்

செம்மொழி இலக்கியங்களில் உள்ள சொற்களைப் பகுப்பாய்வு செய்கின்ற முயற்சியை முதலில் தொடங்க வேண்டும். பெயர்ச் சொற்கள், வினைச்சொற்கள், உரிச் சொற்கள், இடைச் சொற்கள் முதலான நிலைகளில் முதலில் பகுப்பாய்வு செய்து இந்தச் சொற்களை வகைமை செய்து கொள்ள வேண்டும்.

குறிப்பாக வினைச் சொற்களை முற்று, எச்சம், குறிப்பு, தெரிநிலை போன்ற துணைநிலைகளிலும் பகுப்பாய்வு செய்து கொள்ள வேண்டும். இதுபோன்று பெயர்ச் சொற்களையும் காரண, இடுகுறி, விரவு, அஃறிணை, உயர்திணை போன்ற வகைகளிலும் பிரித்துக் கொள்ளவேண்டும். இடைச்சொற்கள், உரிச்சொற்கள் போன்றவற்றையும் அவற்றின் துணைவகைகளுடன் பிரித்து அமைத்துக் கொள்ள வேண்டும். தற்போது நிறைவான செம்மொழி இலக்கிய இலக்கணச் சொற்பட்டியல் கிடைத்துவிடும்.

செம்மொழிக் களத்தில் உள்ள ஒரே இலக்கண நூல் தொல்காப்பியம் ஆகும். (இறையனார் களவியல் அகப் பொருள் பற்றிய செய்திகளை மட்டும் கொண்டது) இதனுடன் மேற்கண்ட சொற் களஞ்சியத்தை ஒப்பிட்டு ஆராய வேண்டும். அப்படி ஆராய்கின்றனபோது இந்த இலக்கியங்களின் காலமும், இந்த இலக்கியத்திற்கான இலக்கணத்தின் காலமும் ஒத்துப்போகும் சூழல் ஏற்படும். அப்படி ஏற்படுகையில் செம்மொழி நூல்களின் காலத்தையும், இலக்கண வரம்புகளின் காலத்தையும் தெளிவு படுத்திட முடியும்.

இந்தச் சொற்பகுதிகளை வைத்துக் கொண்டு இந்தச் சொற்களின் வளர்ச்சி, தேய்வு நிலை போன்றனவற்றை இதற்குப் பின்னுள்ள இலக்கண இலக்கிய நூல்களில் கண்டு கொள்ளவும் முடியும். சொற்களின் கட்டுமானம், சொற்றொடர்களின் அமைப்பு முறை முதலான கொண்டு செம்மொழி இலக்கியங்களின் காலத்தினை உணர்ந்து கொள்ளமுடியும்.

மொழியியல் செய்திகள்

செம்மொழி இலக்கியங்களில் உள்ள மொழியியல் செய்திகளையும் தொகுத்துக் களஞ்சியமாக்க இயலும். செம்மொழி இலக்கியத்தின் சிறப்புக்களுள் ஒன்று அதன் மொழிக் கொள்கை என்பதாகும். அந்த மொழிக் கொள்கை உருவாக்க, உறுதிப்படுத்த இந்தக் களஞ்சியம் உதவும்.

ஆசிரியர் பெயர்க்களஞ்சியம்.

செம்மொழி நூல்களைப் படைத்த ஆசிரியர்கள் பற்றியதானக் குறிப்புகளைத் தரும் ஆசிரியர் பெயர்க் களஞ்சியத்தையும் உருவாக்கிட வேண்டும். இதன் வழி செம்மொழிப்படைப்பாளர்களை இனம் காண முடியும்.

ஊர்ப்பெயர் களஞ்சியம்

செம்மொழி இலக்கியங்கள் தோன்றிய ஊர்ப் பெயர்கள் தொகுக்கப்பட வேண்டும். இதனோடு புலவர்களின் ஊர்கள், அரசர்களின் ஊர்கள் போன்றனவும் வெளிப்படுத்தப்படலாம். இவ்வாறு வெளிப்படுத்துகையில் அவற்றை இக்காலநிலையில் நிலவியல் கண்ணோட்டத்துடன் இணைய அளவில் வெளிப்படுத்த இயலும். இதன் காரணமாக தமிழர்கள் பரவி இருந்த பகுதிகளை அறிந்து கொள்ள இயலும்.

மேலும் சங்க இலக்கியங்களில் குறிப்பிடப்படும் ஊர்ப்பெயர்களையும் வகைமை செய்ய வேண்டும். இவற்றையும் வரைபட அளவில் தரவேண்டும். இதன் காரணமாக தமிழர்களின் முந்தைய நிலப்பரப்பு பற்றிய செய்திகளை அறிந்து கொள்ள இயலும்.

முடிந்தால் ஊர்களின் பண்டைக் காலப் பெயர் தற்போது எவ்வாறு மருவியுள்ளது என்பதையும் கண்டறிந்து வெளிப்படுத்தலாம். தற்போதும் அதே ஊர்ப் பெயரைச் சொல்லி அழைக்க அது உதவும்.

உயிர்களின் களஞ்சியம்

செம்மொழி இலக்கியங்களில் உள்ள உயிரினங்கள், தாவரங்கள் ஆகியவற்றைப் பற்றிய செய்திகளைப் படங்களுடன் அறிவியல் தகவல்களுடன் வெளிப்படுத்தும் களஞ்சியங்களை உருவாக்க வேண்டும்.

அறிவியல் செய்திகள்

செம்மொழி இலக்கியங்களில் காணலாகும் அறிவியல் செய்திகள் அதாவது நிலவியல் செய்திகள், வானியல் செய்திகள், பேரிடர் மேலாண்மைச் செய்திகள், இயந்திரவியல் செய்திகள், வேதியியல் செய்திகள், தகவல் தொடர்பு செய்திகள் போன்றவற்றையும் களஞ்சியங்களாக்கித் தரலாம்.

தொடர்களின் களஞ்சியம்

செம்மொழி இலக்கியங்களில் காணப்படும் புகழ் மிக்கத் தொடர்களைத் தொகுத்து ஒரு களஞ்சியம் உருவாக்கப்பட வேண்டும். இவற்றை ஆங்கில மொழியில் மொழிபெயர்த்து வெளியிடலாம்.

அணிக் களஞ்சியம்.

செம்மொழி இலக்கியங்களில் உவமை அணி போன்ற பல அணிகள் பயின்று வந்துள்ளன. இவற்றில் பயின்று வந்துள்ள அணிகளைத் தொகுத்து வழங்கும் ஒரு களஞ்சியத்தையும் துணைக் களஞ்சியமாக உருவாக்கிக் கொள்ள முடியும்.

யாப்புக் களஞ்சியம்

செம்மொழிகளில் பயன்படுத்தப்படும் யாப்பு பற்றிய புள்ளி விவரங்களை அறிய யாப்புக் களஞ்சியம் அவசியமான தேவையாகும். தொல்காப்பியச் செய்யுளியல் நெறிப்படி செம்மொழி இலக்கியங்கள் படைக்கப் பெற்றிருக்கிறதா அல்லது ஏதேனும் மாற்றம் பெற்றுற்ளதா என்பதையும் இதன் ஊடாகவே அறிந்து கொள்ள முடியும்.

பாடுபொருள் களஞ்சியம்

தொல்காப்பியம் காட்டும் அகம், புறம் பற்றியதான பாடுபொருள் இலக்கணங்கள் எவ்வாறு செம்மொழி இலக்கியங்களில் அமைந்துள்ளன என்று கண்டு தெளியும்போது இவற்றின் காலத்தினை அறிந்து கொள்வதில் தெளிவு பிறக்கும். எனவே பாடுபொருள்கள் பற்றிய களஞ்சியங்களும் உருவாக்கப்பட வேண்டும்.

திணைத் துறைக் களஞ்சியம்

செம்மொழி இலக்கியங்களில் திணை, துறைப் பகுப்பு முறை என்ற முறை பயன்படுத்தப்பெற்றுள்ளது. இந்தப் பகுப்பிலும் தொகுப்புனை உருவாக்க வேண்டும். குறிஞ்சி நிலப் பாடல்கள் அனைத்தும் ஒரு பிரிவாக அமைப்பது போன்றதான களஞ்சியங்களை உருவாக்கிட வேண்டும்.

அறக்கருத்துக்கள் அடங்கிய களஞ்சியம்

அறநூல்கள் பெரும் அளவில் செம்மொழி இலக்கியங்களில் காணப்படுகின்றன. அவற்றில் இருந்து உலகப் பொதுமையை வலியுறுத்தும் நல்ல அறக் கருத்துக்கள் தொகுக்கப் பெற்று களஞ்சியமாகத் தரப்பெறலாம். இவற்றையும் ஆங்கில மொழியில் பெயர்த்து வெளியிடலாம்.

இசை, நாடகக் குறிப்புகளுக்கான களஞ்சியம்

செம்மொழி இலக்கியங்கள் வழித் தெரியவரும் இசைக்கருவிகள், பண், இசை நுணுக்கங்கள் போன்றவற்றைத் தொகுத்து ஒரு களஞ்சியமாக்கலாம். இவற்றுள் உள்ள நாடகச் செய்திகள் அனைத்தையும் ஒரு களஞ்சியமாக்கலாம்.

மெய்ப்பாடுகளுக்கான களஞ்சியம்

இலக்கியத்திற்கு உணர்ச்சி முக்கியமான பண்பாகும். இந்த முக்கியமான மெய்ப்பாட்டு பண்புகள் செம்மொழி இலக்கியங்களில் புதைந்து கிடக்கின்றன. அவற்றை வெளிக் கொண்டு வந்து ஒரு தொகுப்பாக்கித் தருதல் மிக்கத் தேவையுடையதாகும்.

பண்பாட்டுக் களஞ்சியம்

குறிக்கத்தக்கத் தமிழ்ப்பண்பாடுகள் செம்மொழி இலக்கியங்களில் காணக் கிடைக்கின்றன. இவற்றைத் தொகுத்துத் தக்க புகைப்படங்களுடன் தருவதாக இந்தப் பண்பாட்டுக் களஞ்சியம் அமையலாம்.

நாகரீகக் களஞ்சியம்

தமிழர் நாகரீகம் பற்றிய பல செய்திகள் செம்மொழி இலக்கியங்களில் புதைந்து கிடக்கின்றன. இவற்றை இக்களஞ்சியம் வெளிக் கொணரல் வேண்டும்.

பழக்க வழக்கக் களஞ்சியம்

தமிழர் தம் பழக்க வழக்கங்கள் போன்றனவற்றைத் தொகுக்க இக்களஞ்சியம் உதவும். குழந்தை பிறந்ததும் செய்யும் சில வழிமுறைகள், இறந்தார்க்குச் செய்யும் வழிமுறைகள் முதலான பல பழக்க வழக்கச் செய்திகள் செம்மொழி இலக்கியங்களில் புதைந்து கிடக்கின்றன. அவற்றை வெளிப்படுத்த இந்த இழை உதவும்.

வரலாற்றுச் செய்திகளுக்கான களஞ்சியம்

இந்த இணைப்பில் தமிழக வரலாற்றைப் பற்றிய செம்மொழி இலக்கியப் பதிவுகள் இணைக்கப் பெற்றிருக்கும். இவற்றைத் தக்கச் சான்றுகளுடன் நிறுவும்படியான படங்கள், வரைபடங்கள், புகைப்படங்கள் முதலியன கொண்டு மேலும் சீர்மைப்படுத்தலாம்.

இனக்குழுக் களஞ்சியம்

செம்மொழி இலக்கியங்களில் பல இனக்குழுக்களின் வாழ்க்கை முறைகளை அறிந்து கொள்ள முடிகின்றது. அவற்றைத் தொகுத்துத் தருவது இக்களஞ்சியமாக இருக்கலாம்.

ஆய்வுக்களஞ்சியம்

செம்மொழி இலக்கியங்கள் பற்றி இதுவரை நடந்துள்ள ஆய்வுகள், வெளிவந்துள்ள பதிப்புகள், விளக்கப்படுத்தியுள்ள உரைகள், முனைவர் பட்ட ஆய்வுகள், எம். பில் பட்ட ஆய்வுகள் முதலியன தொகுத்து இவ்விணைப்பாக வழங்கப் பெறலாம்.

மொழிபெயர்ப்புக் களஞ்சியம்

இதுவரை வெளிவந்துள்ள செம்மொழி இலக்கிய மொழிபெயர்ப்புகள் பற்றிய தகவல்கள் மற்றும் அவற்றின் பகுதிகள் அனைத்தும் இப்பகுதியில் கிடைக்கும்படி அமைத்தால் உலகம் யாவையும் செம்மொழித் தமிழ் இலக்கியங்களைப் பற்றி அறிந்து கொள்ளளும்.

செம்மொழி வரலாறு

தமிழ்ச் செம்மொழியாவதற்கு உழைத்த பெருமக்கள் பற்றிய செய்திகள் இவற்றில் கிடைக்கச் செய்யலாம்.

இவ்வாறு பற்பல நிலைகளில் இந்தக் களஞ்சியப் பணிகள் செய்யப் பெறலாம். இவற்றுக்குத் தக்கத் தமிழ் ஆய்வாளர்களும், தமிழறிஞர்களும் தங்கள் உழைப்பினை நல்க வேண்டும். குறிப்பாக திருப்பச் செய்தல், செய்ததையே செய்தல் என்பதைக் குறைக்க இந்தக் களஞ்சியம் உதவும். மேலும் இந்தக் களஞ்சியத்தை வளப்படுத்த அசைபடங்கள், புகைப்படங்கள், காணொலிகள், பேச்சொலிகள் போன்றன இணைக்கப்படலாம். இதன் வழி ஒப்பற்ற பணித்திட்டம் ஒன்றைச் செயல்படுத்திய பெருமை உலகத்தமிழருக்குக் கிடைக்கும்.

திங்கள், டிசம்பர் 27, 2010

தமிழின் செம்மொழித் தகுதிகள்




செம்மொழி என்ற நிலையில் ஒரு மொழி ஏற்கப்பட வேண்டுமானால் அதற்கென்று சில தகுதிப்பாடுகள் தேவைப்படுகின்றன. செம்மொழி என்று ஒரு மொழி அழைக்கப்பட வேண்டுமானால் அம்மொழி தொன்மைச் சிறப்பு வாய்ந்ததாக அதற்கென ஒரு தனித்த பண்பாடு உடையதாக, அந்தப் பண்பாடு எதனோடும் தொடர்பற்றதாக, வளமையான இலக்கியச் செழுமை வாய்ந்ததாக இருக்கவேண்டும் என்று கருதுகிறார் ஜார்ஜ் ஹர்ட். இவ்வளவில் சிறப்பு பெற்ற உலகச் செம்மொழிகளாக கிரேக்கம், இலத்தீன், அரபி, சமஸ்கிருதம், சீனம் போன்ற பல மொழிகள் திகழ்ந்து வருகின்றன. இவற்றோடு தற்போது தமிழும் செம்மொழியாக ஏற்கப் பெற்றுள்ளது. தமிழுக்கு எப்போதோ கிடைக்க வேண்டிய இந்தப் பெருமை தற்போதுதான் கிடைக்கப் பெற்றிருக்கிறது.

செம்மொழித்தகுதி என்பதன் பின்னணியில் உள்ள அரசியல், பொருளாதார பின்புலங்கள் இக்காலத்தாழ்விற்கு வகை செய்தன என்ற போதிலும் அவற்றை வென்றுத் தற்போது தமிழ் செம்மொழித் தகுதியைப் பெற்றிருக்கிறது. இதன் முலமாக இந்திய அரசாங்கம் தமிழ் வளர்ச்சிக்கு என்று தனித்த நிலையில் பொருள் ஒதுக்கீடு செய்து அதனை ஆண்டுதோறும் மேம்படுத்திட வேண்டிய பொறுப்பிற்கு ஆளாகின்றது.

தமிழ் தொன்மையானதாக, தனித்த பண்பாடு உடையதாக, இலக்கிய வளம் மிக்கதாக இருப்பதனோடு வாழும் மொழியாகவும் அது திகழ்ந்து வருகின்றது. பெரும்பாலான செம்மொழிகள் வழக்கில் இருந்து நீக்கி விட்டன. மக்களிடம் அவை பேச்சு மொழியாகக் கூட இல்லை. குறிப்பாக சமஸ்கிருதம், பாலி, எகிப்து போன்ற இவ்வகைப்பட்டனவே ஆகும். ஆனால் தமிழின் தொன்மைச் சிறப்பு. மரபு பண்பாடு போன்றன மாறாமல், சிதறாமல் இன்னமும் காக்கப் பெற்று வருகின்றன. இதற்கு மிக முக்கிய காரணம் தமிழ் என்ற மொழியின் கட்டமைப்பு மட்டுமே ஆகும். தமிழ் என்பதை மன்னர்கள், புலவர்கள், மக்கள் வளர்த்தாலும் அவர்கள் மறைந்தபோதும் மறையாமல் தமிழ் காப்பற்றப்பட்டுக் கொண்டே வந்துள்ளது என்பது சிறப்பிற்கு உரியதாகும். இன்னமும் தமிழ் ஒன்றுதான் தமிழர்களைக் காக்கும். உலகைக் காக்கும். இந்தச் செயல்பாட்டிற்குத் தமிழ்ச் செம்மொழிக்கு ஒதுக்கப்படுகின்ற பொருளாதாரம் தக்க முறையில் எடுத்துச் செல்லப்பட வேண்டும். மேலும் தமிழின் செம்மொழித் தகுதியை இரண்டாம் தரமானது என்ற விமர்சனமும் உண்டு. அதாவது சமஸ்கிருதம் வளமை பெற இந்திய அரசால் செய்யப்படும் அளவிற்கான பெரும் பொருளாதாரம் தமிழுக்கு அளிக்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டு நிலவி வருகிறது. இந்தக் குற்றச் சாட்டும் நீக்கப் பெற்று தமிழ் தலையாய செம்மொழித்தகுதியைப் பெற்றே ஆகவேண்டும்.

இந்தியா உலகச் செம்மொழிகள் இரண்டினைப் பெற்றுள்ளது என்பதற்குத் தமிழும் சமஸ்கிருதமும் காரணங்களாகின்றன. இதன்முலம் இந்தியாவின் பழமை,மற்றும் பண்பாட்டுச் செழுமை, இலக்கிய வளமை உலக அளவில் நிலைப்படுத்தப் பெற்றுள்ளது என்பது கருதத்தக்கது. அறிவியல், இராணுவம், தொழில் நுட்பம், அரசியல் போன்ற பல நிலைகளில் உயர்வு பெற்றுள்ள பல உலக நாடுகளின் இடையில் பழமை மற்றும் பண்பாட்டுக் கூறு இவற்றின் வழியாக இந்தியா தகுதியான இடத்தைப் பெற்றுவிட்டது என்பதற்கு இவ்விரு மொழிகளும் அவற்றின் இலக்கியங்களும் அவற்றினைப் படைத்த தன்னலமற்ற மொழியறிஞர்களும், படைப்பாளர்களும் காரணம் என்பதை இந்நேரத்தில் எண்ணிப் பார்க்க வேண்டும்.

பொதுவாக, செம்மொழிக்கு உரிய தகுதிகளாகப் பதினோரு கூறுகளை எடுத்துரைக்கலாம்.

1. தொன்மை 2. தனித்தன்மை 3. பொதுமைப் பண்பு 4. நடுவு நிலைமை 5. தாய்மைப் பண்பு 6. பண்பாட்டுக் கலை அறிவு பட்டறிவு வெளிப்பாடு 7. பிற மொழித் தாக்கமில்லா தன்மை 8. இலக்கிய வளம் 9. உயர் சிந்தனை 10. கலை இலக்கியத் தனித்தன்மை 11. மொழிக் கோட்பாடு. இப்பதினொன்றும் தமிழுக்கு உண்டு.

இரண்டாயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்தது என்று திருக்குறளுக்குக் காலம் வகுக்கப்பெற்றுள்ளது. இதன் காரணமாக தொன்மைச் சிறப்பு வாய்ந்தது தமிழ் என்பது தெளிவு. செம்மொழித் தகுதிக்கு சுமார் ஆயிரம் ஆண்டுகள் பழமை போதும் என்று முடிவு செய்யப் பெற்றுள்ளது. இதன்முலம் முத்த பழமையான மொழி தமிழ் என்பது உறுதியாகின்றது.

ஆனால் கற்காலம் முதலே தமிழர்தம் நாகரீகம் மொழி பண்பாடு போன்றன தோன்றி வளர்ந்துள்ளன என்று காணும்போது தமிழின் பழமை இன்னும் முற்காலத்ததாக அறியப்படும். கல்தோன்றி மண்தோன்றாக் காலத்திற்கே முன்பே வாளொடு முன் தோன்றி முத்த குடி என்ற தொடரின் உண்மைப் பொருள் இப்போதுதான் தெளிவுபடுகிறது. தமிழர்கள் கற்காலத்திலேயே வீரச் செறிவு மிக்க வாழ்வை வாழ்ந்தவர்கள் என்பதே இத்தொடர் உணர்த்தும் உண்மைப் பொருளாகும்.

செம்மொழித்தன்மைகள் பதினொன்றுக்கும் உரியதாகத் தமிழின் சங்க இலக்கியங்கள் விளங்குகின்றன. இதன் காரணமாக தமிழின் செம்மொழித் தன்மை உடைய இலக்கியங்களாகச் சங்க இலக்கியங்கள் அமைந்துள்ளன என்பது உறுதியாகின்றனது.

தமிழின் செம்மொழித் தன்மையை அறிந்து உணர்த்திய தமிழறிஞர்களுள் குறிக்கத்தக்கவர்கள் பரிதிமால் கலைஞர் பாவாணர் கால்டுவெல் போன்ற பலர் ஆவர். இவர்களின் செம்மொழிப் பற்றிய கருத்துக்கள் பல திறத்தன. இவர்கள் தரும் அனைத்து வரையறைகளும் தமிழுக்கு உள்ளன என்பது மறுக்க முடியாத உண்மை.

பரிதிமால் கலைஞர் " திருத்திய பண்பும் சீர்த்த நாகரீகமும் பொருந்திய தூய்மொழி புகல் செம்மொழியாம் என்பது இலக்கணம். இம்மொழி நூலிலக்கணம் தமிழ் மொழியின் கண்ணும் அமைந்திருத்தல் தேற்றம். என்னை? இடர்ப்பட்ட சொன்முடிபுகளும் பொருண்முடிபுகளுமின்றிச் சொற்றான் கருதிய பொருளைக் கேட்டான் தெள்ளிதின் உணர வல்லதாய்ப் பழையன கழிந்து புதியன திருத்தமெய்தி நிற்றலே திருந்திய பண்பெனப்படுவது. இது தமிழ்மொழியின்கண் முற்றும் அமைந்திருத்தல் காண்க. நாட்டின் நாகரிக முதிர்ச்சிக் கேற்பச் சொற்களும் ஏற்பட்டு பாஷைக்கு நாகரிக நலம் விளைத்தல் வேண்டும். அவ்வாறு சொற்களேற்படுமிடத்துப் பிற பாஷைச் சொற்களின்றித் தன் சொற்களே மிகுதல் வேண்டும். இவையும் உயர்தனிச் செம்மொழிக்குப் பொருந்துவனவாகும். ஆகவே தமிழ் தூய் மொழியுமாம். எனவே தமிழ்ச் செம்மொழியென்பது திண்ணம் என்று தமிழை உயர்தனிச் செம்மொழியாகக் கருதுகின்றார்.

பாவாணர் பதினாறு தன்மைகளால் தமிழ் செம்மொழித் தன்மை பெற்றுள்ளது என்று கருதுகின்றார். 1.தொன்மை 2.முன்மை 3.எண்மை (எளிமை) 4.ஒண்மை (ஒளிமை) 5.இளமை 6.வளமை 7.தாய்மை 8.தூய்மை 9.செம்மை 10.மும்மை 11.இனிமை 12.தனிமை 13.பெருமை 14.திருமை 15.இயன்மை 16.வியன்மை என்ற பதினாறு தன்மையும் தமிழுக்கு இருப்பதாகப் பாவாணர் கருதுகின்றார். இதன் காரணமாகவும் தமிழ் செம்மொழித் தகுதியைப் பெற்றிருக்கிறது என்பது அறியத்தக்கதாகும்.

கால்டுவெல் தமிழின் தனித்தியங்கும் தன்மை பற்றிப் பேசுகின்றார். " திராவிடம் சமஸ்கிருத்தில் இருந்துப் பிறந்தது என்ற கருத்து முந்திய தலைமுறையினராய மொழிநூல் வல்லுநர்க்கு ஏற்புடைத்தாய் விளங்கினும் இக்காலை அறவே அடிப்படையற்றுப் போன கட்டுக்கதையாகி விட்டது என்பது இவரின் கருத்தாகும்.

இவ்வகையில் பல அறிஞர்கள் தமிழின் செம்மொழித் தன்மையைத் தகுதியை உலகம் உணரும் அளவிற்கு எடுத்துரைத்துள்ளனர். தொடர்ந்த இந்தச் செயல்பாட்டின் வழியாகத் தமிழ் தற்போது செம்மொழித் தகுதியைப் பெற்று விளங்குகிறது.

தமிழின் செம்மொழித் தன்மையைத் தற்போது உலகிற்கு உணர்த்தியவர் உணர்த்தி வருபவர் கலிபோர்னியாவில் வாழும் பேராசிரியர் முனைவர் ஜார்ஜ் ஹார்ட் ஆவார். இவர் பேராசிரியர் மறைமலை இலக்குவனார் என்பவருக்கு எழுதிய மின்மடலில் தமிழ் செம்மொழியாகும் தன்மையைத் தெளிவுபட எடுத்துரைத்துள்ளார்.

தமிழ் செம்மொழித் தகுதியைப் பெற்றிருப்பதற்கான காரணங்களாக நான்கினை அவர் முன்னிறுத்துகிறார்.

தமிழ்மொழி பழமைச் சிறப்பு வாய்ந்தது. தமிழ் தனக்கான தனித்த இலக்கிய மரபினை உடையது. தமிழ் மொழியின் செவ்விலக்கியங்களான சங்க இலக்கியங்கள் மற்ற செம்மொழிகளின் இலக்கியங்களுடன் ஒப்பு நோக்கத்தக்கவை. இந்தியப் பண்பாடு மரபுகளின் தனித்துவம் உடையதாக தமிழ்ச் செவ்விலக்கியங்கள் விளங்குகின்றன.

இந்த நான்கு கருத்துக்களை அவர் எடுத்துக் கூறியதோடு மட்டுமில்லாமல் அதற்கான சான்றுகளையும் எடுத்துக் கூறி தமிழின் செம்மொழித் தன்மையை உலகிற்கு எடுத்துக்காட்டினர். இவரின் மேலான இந்தக் கடிதம் இந்திய அரசின் பார்வைக்குச் சென்று மேலும் வலுவூட்ட அதன் காரணமாகத் தமிழ்ச் செம்மொழி என்று ஏற்கப் பெற்றது.

இந்தியக் குடியரசு தலைவரின் ஆணைப்படி இந்தச் செம்மொழித் தகுதித் தமிழுக்குக் கிடைத்துள்ளது. பழமையான இலக்கிய மரபுகளை இன்னும் தொடர்ந்து உணர்த்தி வரும் உலக மொழிகள் முன்றனுள் ஒன்று தமிழ் என்பதால் அதற்கு இந்நேரத்தில் செம்மொழித் தகுதி வழங்கப்படுகிறது என்று இந்தியக் குடியரசு தலைவரின் அறிக்கை இந்த நேர்வை குறிப்பிடுகிறது.

இந்தியக் குடியரசுத் தலைவரின் கருத்து தமிழ் மரபுக் காப்பினை முன்னிலைப் படுத்தியுள்ளது. தொடர்ந்து உலகிற்குத் தமிழ் செய்த பண்பாட்டுச் சேவையைப் போற்றியுள்ளது. மற்றவர்களின் கருத்தைத் தழுவியும் அதே நேரத்தில் தமிழின் உண்மையானப் பண்பினை அறிவிப்பதாகவும் இவ்வறிப்பு விளங்குகின்றது.

இவ்வகையில் தமிழின் செம்மொழித்தகுதி என்பது உலக அளவில் நிலைப் படுத்தப் பெற்று அதன் வழியாக உலக அளவில் நாட்டளவில் தமிழ் வளர வழி வகை செய்யப் பெற்றுள்ளது. தமிழ் செம்மொழியாவதற்கு தமிழ் இயக்கங்களும் அரசியல் இயக்கங்களும் முன்நின்றன என்ற போதிலும் அதற்கு மிக்க காலந் தள்ளியே இந்த நிலைப்பாடு தரப்பெற்றுள்ளது என்பது உணரத்தக்கது. தமிழச் செம்மொழியானதன் காரணமாக ஏற்பட்டுள்ள விழிப்புணர்வு பொருளாதார வளமை ஆகியனவற்றைப் பயன்படுத்தி நேரிய நிலையில் செம்மொழித்தமிழைக் காத்துச் செல்லவேண்டியது உலகத்தமிழர்கள் அனைவரின் கடமையாகும்.

--