திங்கள், மார்ச் 05, 2012

சிலப்பதிகாரத்தில் காட்சிக்கலை

தமிழ் இலக்கியப் பரப்பில் இளங்கோவடிகள் காப்பிய வடிவத்தையும், காப்பிய மரபுகளையும் தொடங்கி வைக்கும் முதன்மையாளராக விளங்குகின்றனார். காப்பியம் என்ற நீண்ட வடிவத்தின் இழுவைத் தன்மை குன்றாமல், சுவைத்திறன் மாறாமல் படைத்துச் செல்லும் திறன் மிக்க காப்பியப் படைப்பாளராகவும் இளங்கோவடிகள் விளங்குகின்றார். தன் காப்பியத்தை ஒரு தழுவலாகவும், வேறுமொழி இலக்கியச் சாயல் உள்ளதாகவோ அவர் படைத்துக்காட்டாமல் சுயம்புத் தன்மை மிக்கதாக தன் படைப்பினை உருவாக்கியிருப்பது கண்டுகொள்ளப்பட வேண்டிய ஒன்றாகும்.

இலக்கிய வகைகளை முதன் முதலாகப் படைத்துக் கொள்ளும் படைப்பாளருக்கும் பற்பல விடுதலைகள் இருப்பதுபோன்றே பற்பல இடைஞ்சல்களும் உண்டு. விடுதலைகள், இடைஞ்சல்கள் இவற்றைத் தாண்டி முழுமைமிக்கப் படைப்பாக, அனைத்துப் பார்வைகளுக்கும், போக்குகளுக்கும், பிற்கால உலகினர்க்கும் இடமளிக்கின்ற உயிர்ப்பு மிக்கக் களமாக தன் படைப்பினை காலகாலத்திற்கும், நிலைநிறுத்திவிடுகிற படைப்பாளனின் தன்மை நினைந்து நினைந்து போற்றுதற்குரியது.

அவ்வகையில் சிலப்பதிகாரம் தமிழ்ப்பரப்பில் முதல் காப்பியம் என்றாலும் அது முழுமை பெற்ற காப்பியமாக முதிர்ச்சி பெற்ற காப்பியமாக அள்ள அள்ளக் குறையாத சுவையமைப்பு, கட்டமைப்பு உடையதாக விளங்கி நிற்கின்றது. ஒன்றே செய்தாலும் அதனை நன்றே செய்து என்றைக்கும் படைப்புலகில் தன்னிகரற்று விளங்குகின்றதன்மை உடையவராக இளங்கோவடிகள் எக்காலத்தும் உணரப்படுவார்.

இவரின் சிலப்பதிகாரத்தில் காட்சிக் கலைகள் குறித்த செய்திகளை இக்கட்டுரை வழங்கி நிற்கிறது.

காட்சிக்கலைகள் ஒரு அறிமுகம்
விஷூவல் ஆர்ட்ஸ் என்று ஆங்கிலத்தில் உணரப்படுகிற இந்தக் காட்சிக் கலைகள் தற்போது அதிக அளவில் மக்களின் பயன்பாட்டிற்கு வந்துள்ளது. நாடகம், தொலைக்காட்சி நிகழ்வுகள், திரைப்படம் போன்ற மேடை சார்ந்த கலைகள், கரகாட்டம், ஒயிலாட்டம், மயிலாட்டம் போன்ற நாட்டுப்புற ஆடல்கலைகள் போன்ற பதிவு செய்து திருத்தப்பட்ட, பதிவு செய்யப்படாத, திருத்தப்படாத குழு சார்ந்து இயங்கும் அனைத்து வடிவங்களையும் காட்சிக்கலைக்குள் கொண்டு வர இயலும் என்றாலும் தனி மனித படைப்புகள் காட்சிக் கலையில் முக்கியத்துவம் பெறுகின்றன.

குறிப்பாக விளம்பரங்கள், துண்டு அறிக்கைகள், முகப்பு அட்டைகள் (டுயடெநள), செயற்கைப் பூக்கள், தாவரங்கள், துணிகள் மற்றும் சில பொருள்களில் செய்யப்படும் கலைவேலைப்பாடுகள், வரைபடங்கள், நிலவரைபடங்கள், கேலிச்சித்திரங்கள், உருவாக்கப் பெற்ற கேலிச்சித்திரப் பாத்திரங்கள், பொம்மைகள், விளையாட்டுப் பொருள்கள், வண்ணமற்ற ஓவியங்கள், வண்ண ஓவியங்கள், கலை வடிவம் கொண்ட வாழ்த்து அட்டைகள், நகை வடிவங்கள், விளையாட்டுகள், புதிர்கள், ஊசித் தையல்கள், தரைக்கற்களில் வரையப்படும் ஓவியம் சார்ந்த மாதிரிகள், கணினியால் வரையப்பெற்ற மாதிரிகள், புகைப்படங்கள், குறிப்பேடுகளுக்கு போடப்படும் முன் அட்டை மாதிரிகள், சிலைகள், கண்ணாடி மற்றும் மண் போன்றவற்றால் ஆன பொருள்களின் மீது வரையப்பெறும் கலைவடிவங்கள், பல முறை வரைவதற்காக உறுதியான பொருள்களால் ஏற்படுத்தப் பெற்ற மாதிரிகள், பொருள்களின் வடிவம், கட்டடங்களின் வடிவம் போன்றன கருதி வரையப் பெறுகின்ற வரைபட மாதிரிகள் போன்ற பலவும் தனிமனித காட்சிக் கலைகள் ஆகும்.

குழுக் காட்சிக்கலைகளைவிட இந்தத் தனிமனிதக் காட்சிக்கலைகள் தற்போது உலகஅளவில் பதிவு பெறத்தக்கனவாக, ஒருவரின் உரிமைக்கு உரியனவாக பதிப்புரிமை செய்யப் பெறுகின்றன. உலக அளவில் இதற்கான சட்டம் வரையப் பெற்றுள்ளது. ஊடிலசபைவ சுநபளைவசயவடி கடிச றடிசமள டிக வாந ஏளைரயட _சவ என்ற சட்டம் தற்போது உலக அளவில் ஏற்படுத்தப் பெற்றுள்ளது. 1989க்குப் பின் இந்தச் சட்டம் அனைத்து நிலைகளிலும் ஒரு காப்புறுதியை ஏற்படுத்தித் தந்துள்ளது. இதற்குப்பின் படைக்கப் பெற்ற அனைத்தும் இந்தக் காப்புறுதிச் சட்டத்திற்கு உரியவை ஆகின்றன. இதன்படி ஒருவருக்குச் சொந்தமான கலைப்படைப்பு, மிகப் பெரிய அளவில் ஒரு வெளியீடாக வெளிப்படுத்தப்படுகிற நிலையில் காப்புறுதியை உறுதி செய்து அந்தப் படைப்பாளருக்கு உரிய பங்குத் தொகை அளிக்கப்படவேண்டும்.

சிலப்பதிகாரமும் காட்சிக்கலையும்
சிலப்பதிகாரத்தில் சுட்டப்படும் அனைத்துக் கலைப் பொருட்களும் காட்சிக்கலை சார்ந்தவை என்பது தற்போது புரியவரும். சிலப்பதிகாரம் என்ற பெயரே காட்சி கலை சார்ந்துதான் வைக்கப் பெற்றுள்ளது. சிலம்பு என்ற அணியின் கலைவடிவம், அதன் உள்ளிடு பொருள் ஆகியன ஒவ்வொரு பகுதிக்கும் ஒவ்வொரு நிலையில் அமைக்கப் பெற்றுள்ளது. சிலம்பின் காட்சி ஒற்றுமை ஒரே தன்மையதாக இருந்தாலும் உள்ளிடு பொருளின் வேறுபாடுதான் சிலம்பின் வேறுபாடு, காட்சி நுணுக்கமாக அமைந்து விடுகின்றது.

“நற்றிரம் படராக் கொற்கை வேந்தே
என்கால் பொற்சிலம்பு மணியுடை அரியே எனத்
தேமொழி உரைத்தது செவ்வை நன்மொழி
யாமுடைச் சிலம்பு முத்துடை அரியே
தருகென தந்து தான் முன் வைப்ப
கண்ணகி அணி மணிக் கால்ச்சிலம்பு உடைப்ப
மன்னவன் வாய் முதல் தெரித்தது மணியே மணி கண்டு
தாழ்ந்த குடையன்”
(வழக்குரை காதை 6673)

என்ற பகுதியில் சிலம்பின் அடையாளங்கள் அக்காலத்திலேயே ஒரு வரையறைக்கு உட்பட்டுச் செய்யப் பெற்றுள்ளன என்பதை உணர முடிகின்றனது. கண்ணகியின் கால் சிலம்பு மாணிக்கப் பரல்களை உடையது. பாண்டிய மன்னனின் சிலம்பு கொற்கை முத்துக்களை உடையது.

கண்ணகி பாண்டிய அரசனின் சிலம்பைப் பார்த்தவள் இல்லை. இருப்பினும் பாண்டிய அரசர்களின் அணிகலன் முறைகளை அறிந்து கொண்டவளாக இருக்கிறாள். கொல்லனால் கண்டறியப்படாத நுணுக்கமான அணி வேறுபாடு வணிக மரபினர்க்குத் தெரிந்திருக்கிறது. ஏனெனில் இவர்கள் உலகம் சார்ந்த வணிகத்தைச் செய்தவர்கள். அந்தஅந்தக் கலாச்சாரத்தின் மண்ணின் வாசனையை அறிந்தவர்கள்.

காட்சிக் கலைக்குச் சிலம்புகளே அடிப்படையாக விளங்குகின்றன. கண்ணகி உடைத்தது எந்த சிலம்பு என்பதில் வேறுபாடு இருக்கலாமே தவிர இந்தக் காட்சிப் பிழைகளில் தவறு உள்ளது என்பதில் வேறுபாடு அறிஞர்களிடத்தில் இல்லை.

மாதவி எழுதிய அகமடல்கள் உருவாக்கப் பட்ட முறைமையும் தனித்துவமானது.

முதல்மடல் மலர்களின் கூட்டுச்சேர்க்கையால் உருவானது. கொண்டு சென்றவள் மாதவியின் தோழியான வயந்தமாலை. அம்மடல் தாழம்பூவின் மடலில், சுற்றிலும் பல்வகைப் பூக்கள் பொருத்தப்பட்டு, செம்பஞ்சுக் குழம்பு மையாகவும், பித்திகையின் மொட்டு எழுத்தாணியாகவும் கொண்டு எழுதப் பெற்றுள்ளது.
“மாதவியோலை மலர்க்கையின் நீட்ட
உடன் உறை காலத் துரைந்த நெய்வாசம்
குறுநெறிக் கூந்தல் மண்பொறி உணரத்திக்
காட்டியது ஆதலின் கைவிடல் ஈயான்”
(புறஞ்சேரி இறுத்த காதை, 8184)

மாதவி தனிப்பட எழுதிய அவளின் சொந்தத் தயாரிப்பு இந்த மடல். இந்தச் சொந்தத் தயாரிப்பில் முக்கிய இடம் வகிப்பன மண் முத்திரையும், தலைமுடியும். இவை இரண்டும் மாதவியின் நினைவினை, அவளின் வாத்தினைக் கோவலனுக்கு உணர்த்தின. ஆனால் இவற்றைப் பிரித்த கோவலன் இவற்றை விடுத்தே தன் பெற்றோருக்கு இந்தக் கடிதத்தை அனுப்பியிருக்க வேண்டும். காட்சிக் கலைக்குரிய கலைச் சின்னங்களாக மண்பொறியும், மாதவியின் தலைமுடியும் விளங்கியிருக்கின்றன. அவற்றைத் தனக்கானதாக எடுத்துக் கொண்ட கோவலன் மடலின் செய்தியைத் தன் பெற்றோருக்கு அளித்து விடுகிறான்.

மிக்க நுணுக்கமான இடங்களில் நுணுக்கமான செய்தி வேறுபாடுகளைப் படைத்துக் காட்டுவதில் காட்சி நிலைக் கவிஞராக இளங்கோவடிகள் விளங்குகின்றார்.

இவரின் முன்று காண்டங்களிலும் காட்சிக் கலை நிகழ்வுகள் எடுத்துரைக்கப் பெற்றுச் சிறப்பிக்கப்பெறுகின்றன. புகார் காண்டத்தில் இடம்பெறும் நாடுகாண் காதை, மதுரைக் காண்டத்தில் இடம்பெறும் காடு காண் காதை, ஊர்காண் காதை, வஞ்சிக் காண்டத்தில் இடம்பெறும் காட்சிக் காதை போன்றன காட்சிக்கலை சார்ந்தன. இவற்றின் பெயர் அமைப்பிலேயே காட்சிகள் இருப்பது தெளிவு.

நாடுகாண் காதையில் கவுந்தியடிகளின் காட்சி முதன்மை பெறுகிறது. காடுகாண் காதை, ஊர்காண் காதையில் கோவலனின் காட்சி முதன்மை பெறுகிறது. காட்சிக்காதையில் மலைமக்களின் காட்சி முதன்மைப் படுத்தப்படுகிறது. இவர்களின் கண்களின் வழியாக இளங்கோவடிகள் காட்சிகளைக் காப்பியத்தில் நிகழ்த்துகிறார்.

நாடுகாண் காதை காட்சிக் கலைத்திறன்
கோவலனும் கண்ணகியும் நாட்டினை விட்டுப் புறப்பட எண்ணுகின்றனர். இந்தத் துயரமான சூழ்நிலையில் இந்தக் கதை மாந்தர்களின் சித்திரப்பு மிகச் சிறந்த அவலக் காட்சியாக காப்பியத்தில் விரிகின்றது.

” வான்கண் விழியா வைகறை யாமத்து
மீன் திகழ் விசும்பின் வெண்மதி நீங்க
காரிருள் நின்ற கடைநாள் கங்குல்
ஊழ்வினை கடைஇ உள்ளம் துறப்ப
ஏழகத்தகரும் எகினக் கவரியும்
தூமயிர் அன்னமும் துணைஎனத்திரியும்
தாளொடு குயின்ற தகைசால் சிறப்பின்
நீணொடு வாயில நெடுங்கடை கழிந்தாங்கு
அணிகிளர் அரவம் அறிதுயில் அமர்ந்த
மணிவண்ணன் கோட்டம் வலசெயாக கழிந்து ”
(நாடுகாண் காதை, 110)
கோவலன் புறப்படுகிறான். கதை செய்யும் படைப்பாளனுக்கு அவன் இனி திரும்பப்போவதில் என்பது தெரிந்துவிட்டது. அவன்மேல் படைப்பாளர் இரக்கம் கொள்கிறார்.

வெண்மதி நீங்க, கடைநாள் போன்றன கோவலன் திரும்பான் என்பதற்கான குறிச்சொற்கள். மேலும் ஆடு, கவரிமான், அன்னம் என்ற முன்றும் செல்லப்போகின்ற முவரின் குறியீடுகள். ஆடாகக் கோவலனை,கவரிமானாக கவுந்தி (கவரி)யை, அன்னமாகக் கண்ணகியை நினைந்து காணலாம்.

ஊரை விட்டுப்போகிறவர்கள் காலைப் பொழுதில் கிளம்புகிறார்கள். ஊரில் சொல்லிச் செல்ல இயலாது. அதனால் கோயில்களுக்குப் போவார்போல கைகளில் அதிக சுமையின்றிச் செல்கின்றனர். இருக்கின்ற ஒரே பொருள் இணையான சிலம்புகள். அவை கண்ணகியின் கால்களில் பாதுகாப்புடன் இருக்கின்றன. வேறெதும் கொண்டுபோக இயலாத சூழலில் திருமால் கோயில், புத்த விகாரம், சமணர் கோயில் அனைத்தும் தொழுது செல்லும் இந்த ஆதரவற்ற நிலையை வருத்தத்துடன் படைப்பாளர் படைக்கின்றார்.

வீட்டைவிடடுவிட்டுச் செல்கிறவர்கள் படும் பாட்டை “நீணொடு வாயில் நெடுங்கடை கழிந்தாங்கு” என்ற அடிகள் உணர்த்துகின்றன. கோவலனின் வீடு பெரிய நிலைக்கதவுகளை உடையதாம். அதற்கேற்ற நிலையில் அதற்குத் தாழ் உண்டு. இந்தக் கதவினைச் சாத்திக் கொள்ளவும், தாழ் போட்டுக் கொள்ளவும் கூட யாருமில்லாத மாளிகை அந்த மாளிகை.

துணைக்கு கவுந்தியும் பயணப்படுகிறார். மதுரையில் உள்ள சமணப் பள்ளிகளைக் கண்டு தரிசிக்க இவர்களுடன் வருகிறார். அவர் வழிநடையில் ஏற்படும் துயரங்களை, அவற்றை எவ்வாறு எதிர்கொள்ளுவது என்ற சூழலில் அவர்கள் நடக்கின்றனர்.

அப்போது நாட்டில் நடைபெறும் பல்வகை ஒலிகளைக் கொண்டு நாட்டின் நிலைப்பாட்டை இளங்கோவடிகள் எடுத்துரைக்கிறார்.

கம்புள் கோழியும், கனைகுரல் நாரையும்
உள்ளும் ஊரலும் புள்ளும் புதாவும்
வெல்போர் வேந்தர் முனையிடம் போலப்
பல்வேறு குழுஉக் குரல் பரந்த ஓதையும்
( நாடுகாண் காதை 116119)
என்பன பறவைகள் எழுப்பிய ஓசைகள். இதுதவிர எருமைகளின் செயல்பாடுகள், பயிர்த்தொழில் செய்பவரின் செயல்பாடுகள் எனக் காட்சிகள் ஒன்றன்பின் ஒன்றாக இவர்களைத் தொடர்ந்து வந்து கொண்டே இருக்கிறது.

காட்சிப்பிழையாகத் தோன்றும் காட்சி ஒன்றும் இங்கு இடம் பெறுகிறது. வம்பப்பரத்தை, வருமொழியாளன் என்ற இரு பாத்திரங்கள் காட்சிப்பிழைக்கு உள்ளாகின்றன. இவர்கள் கவுந்தியடிகளிடம் “யார் இவர்கள்” என்று கோவலன், கண்ணகியைக் கேட்க அவரோ “மக்கள் காணீர்” என்று உரைக்கின்றார்.

உடன் வயின்றோர்கள் ஒருங்குடன் வாழ்க்கை கடவதும் உண்டோ என்ற சந்தேகம் கேள்வி கேட்டவர்களுக்கு வருகின்றது. கண்ணகியும் கோவலனும் உடன்பிறப்புகள் என்ற நிலையைத் தாண்டி அன்பொழுக நடந்து கொண்டுள்ளனர் என்பதை இந்தக் காட்சிப்பிழை எடுத்துரைக்கின்றது. இதனைக் கேட்ட கண்ணகி உள்ளம் நடுங்க கேள்வி கேட்டவர்கள் முதுநரிகளாக மாறும் சாபக்காட்சி அங்கு அரங்கேறுகிறது.

காடுகாண் காதை காட்சிக் கலைத்திறன்
பூம்புகார் விட்டு திருச்சியை நோக்கி இவர்கள் பயணிக்கிறார்கள். காவிரியின் போக்கிலேயே இவர்கள் நடந்து வருவதால் யாரிடமும் செல்லும் இடம் பற்றி விசாரிக்க வேண்டி வரவில்லை. இவர்கள் முவரும் திருவரங்கம் அடைந்துப் பின் உறையூர் வருகின்றனர்.

உறையூரைத் தாண்டி வரும்போது மாங்காட்டு மறையவன் எதிர்ப்படுகிறான். இவனிடம் மதுரை செல்லும் வழி யாது என்று வினவுகின்றபோது இவன் இவர்களின் வருகைக்காக இரங்குகிறான். வேனில் காலத்தில் காரிகையை அழைத்துவருவது குறித்துக் கவலைப்படுகிறான். அப்போதுதான் பாலை என்ற நிலத்தின் இயல்பு தமிழுலகிற்கு காட்சிப்படுத்தப்படுகிறது.

“முல்லையும் குறிஞ்சியும் முறைமையின் திரிந்து
நல்லியல்பிழந்து நடுங்குதுயர் உறுத்துப்
பாலை என்பதோர் படிமம் கொள்ளும்”
(காடுகாண்காதை 6466)

படிமம் என்ற காட்சி சார்பான உத்திமுறை தமிழுக்கு அறிமுகமான இடமும் இதுவே. இரங்கிப் பேசிய இவன் முன்று வழிகளைச் சுட்டுகிறான்.

முதலாவதாக இவன் அடையாளம் காட்டுவது கொடும்பாளுர், நெடுங்குளம் என்ற இரண்டு இடமாகும். இந்த இடத்திற்குச் சென்ற பிறகு மதுரை முன்று நிலையில் செல்லலாம் என்பது இவனது கருத்து.

“கொடும்பை நெடுங்குளக் கோட்டகம் புக்கால்
பிறைமுடிக் கண்ணிப் பெரியோன் ஏந்திய
அறைவாய்ச் சூலத் தருநெறி கவர்க்கும்”
(காடு காண் காதை, 71- 73)
என்ற இவ்வடிகளில் சூலம் போன்று முவழிகள் தோன்றும் என்று மாங்காட்டு மறையவன் கூறுகின்றார்.

முவழிகளில் முதல்வழி வலப்புற வழியாகும். இது சிறுமலை வழியாக மதுரைக்குப் போகும் பாதை. இரண்டாவது அழகர் மலை என்ற திருமாலிருஞ்சோலை வழியாக இடப்புறமாக மதுரைக்குச் செல்லும் வழி. இவை இரண்டிற்கும் இடையில் காடுகள் சூழந்த இடைவழி ஒன்றுண்டு. இதில் செல்வதும் நல்லதே. இதில் சென்றால் ஒரு அணங்கை எதிர் கொள்ளவேண்டும் என்று பல செய்திகளை மாங்காட்டு மறையவன் எடுத்துரைக்கிறான்.

வலப்புற வழியின் காட்சித்தன்மை
இவ்வழியில் ஓமை, வெண்கடம்பு, முங்கில் போன்ற நீரற்றுச் சுருங்கிக்கிடக்கும். நீர் இல்லாத காடு, எயினர் குடியிருப்பு முதலானவற்றை இவ்வழியில் காண இயலும். அடுத்துச் சிறுமலை தோன்றும். இம்மலைப் பழங்கள் அன்றும்,இன்றும் சிறப்பிற்குரிய பழங்களாகும்.

“வாழையும்,கமுகும், தாழ்குலைத் தெங்கும்
மாவும் பலாவும் சூழடுத்து ஓங்கிய
தென்னவன் சிறுமலை”
(காடுகாண்காதை 8385)
என்ற இக்காட்சி இன்னமும் மெய்யாக உள்ளது. சிலப்பதிகார எச்ச மிச்சங்கள் அழிந்த இந்த காலச் சூழலில் அவர் காட்டிய இயற்கைக்காட்சிகள் இன்னம் மிச்சம் இருப்பது ஆறுதல் அளிக்கிறது. சிறுமலையின் வலப்புறமாகச் சென்றால் மதுரையை அடையலாம் என்ற இந்தக் குறிப்பு வரைபடக் காட்சிகலைக்குச் சான்று.

இடப்புற வழியின் காட்சித்தன்மை
இடப்புறவழி திருமாலிருஞ்சோலை வழியாகும். இவ்வழி மருத நிலம் சார்ந்த பல பகுதிகளை உடையது. இவ்வழியில் செல்லும்போது புண்ணிய சரவணம், பவகாரணி, இட்டசித்தி என்னும் முன்று பொய்கைகள் காணப்பெறும். இவை ஒவ்வொன்றில் முழ்கினால் ஒவ்வொரு பலன் கிட்டும். பின் சிலம்பாறு தோன்றும். இந்த ஆற்றைத் தொடர்ந்தால் இயக்கமாது தோன்றுவாள். அவளின் வினாக்களுக்கு பதில் இறுத்துப் பின் திருமாலிருஞ்சோலை அடையலாம். எட்டெழுத்து மந்திரத்தை உச்சரித்து திருமாலிடம் அடைக்கலம் பெறலாம் என்று இந்த வழி பற்றிய செய்திகள் அறிவிக்கப் பெறுகின்றன.

இவற்றில் முன்று குளங்கள் பெயரில் கூட இன்று இல்லை. சிலம்பாறு என்ற பெயர் அழகர்கோயில் தீர்த்தங்களில் ஒன்றாகக் குறிக்கப்படுகிறது. தற்காலத்தில் அழைக்கப் பெறும் நூபுர கங்கை என்ற தீர்த்தம் சிலம்பாறு என்று அழைக்கப்படுகிறது.

இவ்வாறு இவ்வழி இளங்கோவடிகள் சொன்ன இயற்கைக் காட்சிகள் பொருந்திய நிலையில் உள்ளது.

இடைவழி
குறிக்கத்தக்க எவ்வித அடையாளங்களும் இல்லாத காட்டுவழியாக இது அமைகின்றது. இவ்வழியில் கானுறை தெய்வம் ஒன்று எதிர்ப்படும் என்று இவ்வந்தணன் குறிப்பிடுகிறான். இவ்வழியிலேயே செல்ல முவரும் ஒருப்படுகின்றனர்.

இக்கானுறை தெய்வம் வழியிடையீடு செய்துக் கோவலனை வெருட்டியபோதும் அவன் கொற்றவை வழிபாட்டின் துணையால் அத்தெய்வத்தை எதிர்கொண்டு வெற்றி பெறுகிறான்.பின்னர் இவர்கள் ஒரு காளி கோயிலின் பக்கத்தில் இளைப்பாறுகின்றனர்.
இவளோ கொங்கச் செல்வி குடமலையாட்டி
தென்தமிழ்ப்பாவை, செய்தவக் கொழுந்து
ஒருமாமணியாய் உலகிற்கு ஓங்கிய திருமாமணி
(வேட்டுவ வரி 4749)
என்ற இந்தப் புகழ்மொழிகளைச் சாலினி உரைக்கின்றாள். இதில் மணி என்ற சொல் பின்னால் நிகழ உள்ள சிலம்பின் மணிகள் பற்றிய குறிப்பு என்பது நினைவில் கொள்ளவேண்டும். குறிப்பாக இங்குக் கண்ணகியை மட்டும் வாழ்த்துவதால் அது உலகிலிருந்து எழக்கூடிய திருமாமணி என்பதால் மற்ற இருவரும் இறப்பை நாடப் போகின்றனர் என்பதும் அவர்களை இத்தெய்வம் ஏறிய பாரட்டவில்லை என்பதும் எண்ணிப் பார்க்கத்தக்கது.

ஊர்காண்காதை
காடு, நகரம், நாடு, உலகம் என்று தன் காட்சிக்கண்களை விரித்துக் கொண்டே போகின்றார் இளங்கோவடிகள். நாட்டையும், காட்டையும் காட்டியவர் இப்போது ஊராக மதுரை மாநகரத்தைக் காட்ட ஊர்காண் காதையைச் செய்கிறார்.

இதில் கோவலன் கண்களில் புகுந்து மதுரைக் காட்சிகளைப் பதியவைக்கிறார். மதுரை மாநகர கோட்டைக்குள் நுழைந்து வணிக வீதிகளைப் பார்வையிடுகிறான் கோவலன்.

கடிமதில் வாயில் காவலில் சிறந்த
அடல்வாள் யவனர்க்கு அயிராது புக்காங்கு
ஆயிரம் கண்ணோன் அருங்கலச் செப்பு
வாய்திறந்து அன்ன மதில்
( ஊர்காண்காதை, 6668 )
என்ற இந்த அடிகளில் மதுரை மாநகரின் காப்புகை மிக்க கடிமதில் எடுத்துக்காட்டப் பெறுகின்றது. அருங்கலச் செப்பு என்ற இந்தச் சொல்லாக்கம் அருமையான அணிகலன்களை வைக்கும் பாதுகாப்பு அறை என்ற பொருளில் கையாளப் பெற்றுள்ளது. கலை வண்ணம் காட்சி வண்ணம் சிறந்த இந்தத் தொடர் பின்னாளில் நூல் பெயராக வளர்ந்தது என்பதும் இளங்கோவிற்குப் பெருமை அளிக்கத்தக்க கூறாகவே உள்ளது.

இதன்பின் மகளிர் விளையாட்டு, பருவ வருணனை போன்ற காப்பியப் பண்புகளுக்கு இளங்கோவடிகள் இடம் தருகின்றார். மதுரை நகரின் பருவ வருணனை இங்கு இடம் பெற்றுச் சிறக்கிறது. இதில் காட்டப் பெறும் வருணனைகளும் காட்சித் திறம் சார்ந்தவை என்றாலும் கட்டுரையின் விரிவஞ்சி இவை சுட்டுதலாக மட்டும் அமைகின்றன.

இதன்பின் அரசர், செல்வர் பயிலும் காமக்கிழத்தியர் பகுதிகளுக்குச் சென்றான் கோவலன். தொடர்ந்து எண்ணெண் கலைஞர்கள் வீதி, அங்காடி வீதி, நவரத்தின வீதி, பொன்மிகு கடைவீதி, துணிக்கடைவீதி, கூல வணிக வீதி முதலான பல வீதிகளைப் பார்வையிடுகிறான்.

எண்ணெண் கலைஞர்கள் என்று குறிப்பிடப்படுவோர் ஆயகலைகள் அறுபத்துநான்கினையும் கற்றுத் தேர்ந்த கூத்தியர்கள் வாழும் பகுதியாகும். முடியரசு ஒடுங்கும் கடிமண வாழ்க்கை என்று இளங்கோவால் குறிக்கப்படுகிறது. கூத்தியர் வீட்டுக்கு வந்திருப்பவர் யார் என்று யாராலும் அறியப்பட முடியா அளவிற்குக் காப்பு மிகுந்த நிலையில் இக்கலைஞர்கள் வீடுகள் அமைக்கப் பெற்றிருந்தன.

சிலப்பதிகார காலத்தில் பல வகைகள் சார்ந்த தங்கம் இருந்துள்ளது. “சாதருபம், கிளிச்சிறை, ஆடகம், சாம்பூநதம் ” என்ற நான்குவகையின அவற்றில் குறிக்கத்தக்கனவாகும்.

அதுபோல் துணியில் கலைநயம் மிக்க படைப்புகள் அக்காலத்தில் இருந்துள்ளன. “நூலினும், மயிரினும், நுழைநூல் பட்டினும் பால்வகை தெரியாது பன்னூறு அடுக்கத்து நறுமடி சிறந்த அறுவை வீதி” என்று துணிக்கடை வீதியின் சிறப்பு குறிக்கப்படுகிறது. நூல், மயிரிழை, பட்டு முதலானவற்றில் இழையடுக்கு தெரியாத வண்ணம் துணிகள் நெய்யப்பட்டு அக்காலத்தில் இருந்துள்ளன. இவை வகை தெரியாமல் பல நூறாக அடுக்கி வைக்கப்பட்டிருந்த துணி வீதியைக் கோவலன் கண்டான்.

இவ்வாறு கடைகள், கலைகள் பற்றிய காட்சி வருணனை காட்சியியலின் பாற்பட்டதே ஆகும்.

காட்சிக் காதையும் காட்சிச்சிறப்பும்
காட்சிக்காதையில் முக்கியத்துவம் பெறுவது கண்ணகி வானுலகு சென்ற காட்சியேயாகும். மலைவளம் காணச் சென்ற செங்குட்டுவன் மலைவாழ் குறவர் இனமக்கள் தாங்கள் கண்டதாகக் கூறிய காட்சிகளைக் கேட்டறிகிறான்.

“ஏழ்பிறப்படியேம் வாழ்க நின் கொற்றம்
கான வேங்கைக் கீழோர் காரிகை
தான்முலை இழந்து தனித்துயர் எய்தி
வானவர் போற்ற மன்னொடும் கூடி
வானகம் போற்ற வானகம் பெற்றனள்
எந்நாட்டவர்கொல்? யார்மகள் கொல்லோ?
நின்னாட்டு யாங்கள் நினைப்பினும் அறியேம்
பன்னூறு ஆயிரத் தாண்டு வாழியர் என
மண்களி நெடுவேல் மன்னவன் கண்டு
கண்களி மயக்கத்துக் காதலோடிருந்த”
( காட்சிக்காதை, 5865)
என்பது குறவர்கள் கண்ட காட்சிச் செய்தியாகும். இச்செய்தியில் மார்பகம் இழந்து, தனித்துயர் எய்திய பெண் ஒருத்தி வானகம் புக்கதை அவர்கள் கண்டுள்ளனர். இந்தக் காட்சி புதுமை செறிந்தது. இக்காட்சியின் வியப்பே கண்ணகிக்குக் கோயில் காணச் செய்த விதையாகும்.

பின்பு சாத்தனார் ” கொற்ற வேந்தன் கொடுங்கோல் தன்மை இற்றெனக் காட்டி இறைக்குரைப்பனள் போல் தன்னாட்டாங்கண் தனிமையில் செல்லாள் நின்னாட்டு அகவையின் அடைந்தனள் நங்கை” என்று துயருற்ற கண்ணகி அவள் நாட்டிற்குத் திரும்பிச் செல்லாது உன்நாட்டிற்கு வந்துள்ளாள் என்று இக்காட்சியின் நிகழ்வுகளைக் காரணகாரியத்துடன் கூறி முடிக்கிறார்.

இதுகேட்ட மன்னன் அரசவாழ்வின் நிலையாத்தன்மையை வெளிப்படுத்துகிறான். “மன்பதை காக்கும் நன்குடிப்பிறத்தல் துன்பமல்லது தொழுதகவில்லென” உணருகிறான். அல்லது இளங்கோவடிகள் உணர்த்துகிறார். இதன் தொடர்வாக சேரமாதேவியிடம் “உயிருடன் சென்ற ஒருமகள் தன்னினும், செயிருடன் வந்த இச்சேயிழை தன்னினும் நன்னுதல் வியக்கும் நலத்தோர் யார்?’ எனச் சேரன் வினவுகின்றான்.

சேரமாதேவி “காதலன் துன்பம் காணாது கழிந்த மாதரோ பெருந்திரு வுறுக வானகத்து அத்திறம் நிற்கநம் அகனாடு அடைந்தஇப் பத்தினித் தெய்வத்தைப பரசல் வேண்டுமென” தன் விருப்பத்தை எடுத்துரைக்கிறாள்.

இந்தக் காட்சியே இமயம்வரை சென்று சேரனை வெற்றி பெற வைக்கின்றது. கண்ணகியை இறைவியாகக் காண்கின்றது. உலகம் போற்ற உயர்த்துகின்றது. “எம்நாட்டு ஆங்கண் இமயவரம்பனின் நன்னாள் செய்த நாளணி வேள்வியில் வந்தீக ” என்று மன்னர்கள் இறைஞ்ச “தந்தேன் வரமென்று ” கண்ணகி தெய்வவாக்கு அருளுகிறாள்.

இவ்வகையில் காட்சிக்கலையின் சிறப்பு தொட்ட தொட்ட இடங்களில் எல்லாம் துலங்குவதாகச் சிலப்பதிகாரம் படைக்கப் பெற்றுள்ளது.

முடிவுகள்

1. காட்சிக்கலை என்பது நுண்ணிய படைப்பாற்றல் கலை சார்ந்தது.தற்போது இக்கலை ஆவணப்படுத்தப் பெற்று பதிப்புரிமையை உலக அளவில் பெற்று உயர்ந்துள்ளது.

2. இவ்வாறு இக்கலை வளர்வதற்கு பன்னூறு ஆண்டுகளுக்கு முன்னதாகவே காட்சிக்கலையைச் சிலப்பதிகார ஆசான் இளங்கோவடிகள் நேர்த்தியுடன் படைத்துள்ளார்.

3. சிலப்பதிகாரம் என்பதே அழகாகச் செய்யப் பெற்ற இரு இணைச் சிலம்புகளின் குழப்பத்தால் ஏற்பட்டது. உள்ளிருக்கும் பொருளை நுண்ணிதின் வேறுபடுத்தி கலைப் பொருள்களின் காட்சி வடிவு மிகப் பெரும் சாட்சியாக ஏற்கப்பட்டிருக்கிறது.

4. மாதவியின் மடல்கள் காட்சி வடிவம் சார்ந்தவை. அவற்றில் தனித்த மாதவிகோவலன் இருவருக்கான காட்சிப் பொருள்கள் இருந்துள்ளன. இவை அடையாளக் குறிகள் ஆகும்.

5. இளங்கோவடிகள் காட்சியளவையை ஊர், காடு, நாடு, உலகு என்று வளர்த்தெடுத்துள்ளார்.இவற்றிற்கு ஊர்காண்காதை, காடுகாண் காதை, நாடுகாண்காதை, காட்சிக் காதை போன்ற சான்றுகளாகும்.

6. நாடுகாண் காதை வருத்தக்காட்சியாக புனையப் பெற்றுள்ளது. கோவலன், கண்ணகி, கவுந்தி முவரும் புகார் திரும்பப்போவதில்லை என்ற சோகம் இளங்கோவடிகளால் உணரப்பெற்றிருக்கிறது. ஆனால் பாத்திரங்கள் உணர்ந்து கொள்ளாமல் விதிப்படி தன் பயணத்தைத் தொடருகின்றனர். வருத்தத்தோடு தன் காட்சிகளை எடுத்துக் கொண்டு இளங்கோவடிகளும் பின்செல்லுகின்றார்.

7. காடுகாண் காதையில் முவகை வழிகள் விளக்கப்படுகின்றன. அவற்றில் சுட்டப்படுகின்றன இயற்கை இன்னமும் அழியாமல் இருப்பது கோவலன் உள்ளிட்ட முவர் நடந்த பாதைக்குக் காட்சியாக உள்ளது.

8. ஊர்காண்காதையில் மதுரை என்ற ஊரின் கலைவடிவக் காட்சிகள் விளக்கப்படுகின்றன. கடைவீதி வருணனை காட்சியியலின் முன்னுரையாகின்றது.

9. காட்சிக்காதையில் குறவர்கள் கண்ட காட்சி கண்ணகியை உயர்த்துகிறது. இமயத்தை எட்டுகிறது. இலங்கைக்குச் செல்ல உறுதியாகின்றது.

10. காட்சிகளின் வல்லமை நுணுக்கமாகப் பற்பல இடங்களில் சிலப்பதிகாரத்தில் கையாளப் பெற்றுள்ள போக்கு சிலப்பதிகாரத்திற்கு மேலும் பெருமை சேர்ப்பதாக உள்ளது.

கருத்துகள் இல்லை: