திங்கள், மார்ச் 05, 2012

மறுமலர்ச்சிக் கவிஞர் மு. முருகுசுந்தரம் வாழ்வும் அவரின் படைப்புகளும்

கருப்பையன்
முனைவர் பட்ட ஆய்வாளர்,(பகுதிநேரம்)
மா. மன்னர்கல்லூரி,
புதுக்கோட்டை.

தமிழ்க்கவிதை மரபில் மறுமலர்ச்சிக் கவிதைகள் என்றொரு வகைமை மகாகவி பாரதியாரில் இருந்துத் தொடங்குவதாகக் கொள்ளாலாம். மக்கள் விரும்பும் மெட்டில், மக்களுக்குத் தேவையான கருத்துக்களை எளிய இனிய முறையில் படைத்தளிப்பது என்பதே மறுமலர்ச்சிக்காலக் கவிதைகளின் இயல்பாகும்.

அரசர்களை, இறைவுருவங்களை முன்வைத்துப் புனையப்பெற்ற கற்பனை படைப்புகளை, சிற்றிலக்கிய மரபுகளை சாதாரண மக்களின் வாழ்க்கை நிலையைப் பாட மறுமலர்ச்சிக் கவிதைகள் தோன்றின. பாரதியில் இருந்துத் தொடங்கும் இக்கவிதைகள் புதுக்கவிதையின் எழுச்சியாகக் கருதப்படும் ஆயிரத்துத் தொள்ளாயிரத்து எழுபது வரை தமிழ் இலக்கியப் பரப்பில் மிகுந்த வலிமையுடன் திகழ்ந்து வந்தன.

பாரதியாரைத் தொடர்ந்து அவரின் கவிதை மரபுகளைப் பின்பற்றிச் செல்வோராக பாரதிதாசன், வாணிதாசன், சுரதா போன்ற பாரதி பரம்பரையினர் இக்காலப்பகுதியில் குறிக்கத்தக்கவர்கள். இவர்களுடன் தொடர்ந்து இக்கவிதை உலகிற்குச் செழுமை சேர்த்தவர்கள் தமிழ்ஒளி, சௌந்தரா கைலாசம், பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம், கண்ணதாசன் போன்ற பலர் ஆவர். இவர்களுள் ஒருவர் குறிக்கத்தக்கவர் முருகு சுந்தரம் என்ற கவிஞர் ஆவார்.

இவர் பிறந்த நாள் 26.12.1929 என்பதாகும். இவரின் பெற்றோர் முருகேசன், பாவாய் ஆகியோர் ஆவர். இவரின் சொந்தஊர் திருச்செங்கோடு ஆகும்.

இவர் புலவர் கல்வித் தகுதி பெற்றவர். கல்வியியலில் இளநிலையையும் முடித்துள்ளார். இவர் மேல்நிலைப்பள்ளி ஆசிரியராக, தலைமை ஆசிரியராகப் பணியாற்றியவர்.

இவரின் படைப்புகள் பின்வருமாறு.
இவர் தன் முதல் கவிதையை ஆயிரத்துத் தொள்ளாயிரத்து அறுபத்தொன்பதாம் ஆண்டு படைத்தளித்துள்ளார். தொடர்ந்து பல கவிதைகளையும் கவிதைத் தொகுப்புகளையும் அளித்துள்ளார்.

இவரின் படைப்பாற்றலைப் பின்வருமாறு பாலா மதிப்பிடுகிறார். ” கவிஞர் முருகு சுந்தரம் மரபிலும் புதுமையிலும் கைகோத்துக் கொண்டவர். கவிதையில் கதை சொல்லும் கவிதைப்பேரழகு இவருக்கு சிறப்பாய்க் கைவந்திருக்கிறது. காவியங்கள் அதிகம் காணப்படாத குறையைப் போக்கியவர். “சோம்பல் முறிக்கும் சொற்களைக் களைந்துவிட்டு அர்த்தப் படிமங்களாக அணிவகுக்கப்பட்ட அழகு நடையில் முன்னேறும் கதைக்கவிதை புனைவதில் புகழ் உச்சியில் நிற்கின்றவர்” என்ற மதிப்பீடு இவரின் கவிதைத் திறனை வெளிப்படுத்துவதாகும்.

இவர் பெற்ற பரிசுகள் பலவாகும். ஆயிரத்துத் தொள்ளாயிரத்து எண்பத்து இரண்டாம் ஆண்டில் பனித்துளிகள் என்ற இவரின் கவிதைத் தொகுப்பிற்கு தமிழக் அரசின் சிறந்த நூலிற்கான தமிழ வளர்ச்சிக் கழகப் பரிசு வழங்கப் பெற்றுள்ளது. ஆயிரத்துத் தொண்ணூறாம் ஆண்டு இவரின் கவிதைத் திறனைப் பாராட்டி தமிழக அரசு `பாரதிதாசன் ‘ விருதினை வழங்கியது.

இவை தவிர பல இலக்கிய அமைப்புகளும் இவரின் படைப்புத் திறனைப் பாராட்டியுள்ளன. திருக்குறள் பேரவை அமைப்பு ஈரோட்டில் நடத்திய திருக்குறள் மாநாட்டில், திருக்குறள் முனிசாமி அவர்கள் முன்னிலையில் இவருக்குப் `பாட்டுச்சிற்பி’ என்ற பட்டம் வழங்கப்பட்டது.

1994ஆம் ஆண்டு இருபதாம் நூற்றாண்டில் வெளியான சிறந்த தமிழ்க்காப்பியங்கள் பத்தனுள் இவருடைய பனித்துளிகள் என்ற காப்பியமும் ஒன்று எனக் கோயில்பட்டி திருக்குறள் பேரவை பாராட்டிப் பரிசு வழங்கியது.

1994 ஆம் ஆண்டு கோயம்புத்தூரைச் சார்ந்த இலக்கியப் பாசறை என்ற அமைப்பு இவருடைய கவிதை நாடகமான எரி நட்சத்திரத்துக்குப் பாராட்டுப் பரிசினையும், இவருக்குப் பாவேந்தர் விருதினையும் வழங்கிச் சிறப்பித்தது.

1999 ஆம் ஆண்டு சென்னையில் உள்ள பாவேந்தர் பாசறை என்ற அமைப்பு “பாவேந்தர் பைந்தமிழ்ச் செல்வர்’ என்ற பட்டத்தை இவருக்கு வழங்கிச் சிறப்பித்தது.

இவரின் படைப்புகள் பின்வருமாறு.
கவிதைப் படைப்புகள்
கடைத்திறப்பு,
பனித்துளிகள்,
சந்தனப்பேழை,
தீர்த்தக்கரையினிலே,
எரிநட்சத்திரம்,
வெள்ளை யானை,
இளைஞர் இலக்கியம்,
பாட்டும் பதையும்,
அண்ணல் இயேசு,
பாரதி பிறந்தார்
முதலியனவாகும்.

உரை நூல்கள்
மறத்தை மகளிர் பாரும் போரும்,
வள்ளுவர் வழியில் காந்தியம்,
காந்தியின் வாழ்க்கையிலே,
கென்னடி வீர வரலாறு,
தமிழகத்தில் குறிஞ்சிவளம்,
நாட்டுக்கொரு நல்லவர்,
பாவேந்தர் நினைவுகள்,
அரும்புகள் மொட்டுகள் மலர்கள்,
குயில்கூவிக் கொணருக்கும்,
புதுவைக் கல்லறையில் புதிய மலர்கள்,
மலரும் மஞ்சமும்,
குயில்களும் இளவேனில் காலமும்,
பாவேந்தர் ஒரு பல்கலைக்கழகம்,
புகழ்பெற்ற புதுக்கவிஞர்கள்,
சுரதா ஓர் ஒப்பாய்வு
பாவேந்தர் படைப்பில் அங்கதம்

இருபதாம் நூற்றாண்டின் இணையற்ற வகைகளான மரபுக்கவிதை, காப்பியம், உரைநடை நூல்கள் போன்றவற்றைப் படைத்தளித்துக் குறிக்கத்தக்க பாராட்டுகளை, பரிசுகளைப் பெற்றவராக முருகுசுந்தரம் விளங்குகின்றார்.

கருத்துகள் இல்லை: