வெள்ளி, ஜனவரி 16, 2015

தனிநாயக அடிகளார் நோக்கில் தமிழ்ப் பண்பாடும் அதன் சிறப்புகளும்




ஈழத்துத் தமிழறிஞரான தனிநாயகம் அடிகளாரின் இயற்பெயர் சேவியர் நிக்கலஸ் ஸ்ரனிசுலாசு என்பதாகும். தமிழின் மீதுத் தனக்கு இருந்த ஆழமான பற்றின் காரணமாக தன் பெயரை இவர் தனிநாயகம் அடிகளார் என வைத்துக்கொண்டார். தமிழ் மொழி, பண்பாடு ஆகியவற்றின் தூதுவராக விளங்கி உலக நாடுகளுக்குப் பயணப்பட்டுத் தமிழ் வளர்த்த தூய தமிழ்த் தொண்டர் தனிநாயம் அடிகளார் ஆவார். இவர் அயல்நாட்டவரும் தமிழகத்திற்கு வந்தபோது தங்களின் பண்பாடு, நாகரீகம் ஆகியவற்றை விடுத்து தமிழ்ப் பண்பாட்டுக்கு மாறியதால் தமிழ்ப் பண்பாடு யாவராலும் ஏற்கத் தக்கது என்ற கருத்தை முன்வைத்தவர். இந்நிலையில் இவரின் தமிழ்;ப்பண்பாட்டு விருப்பம் இவரின் ;உடலில் உயிரில் கலந்து நிறைந்து இருந்தது. இவர் தான் இறப்பதற்கு முன்பாக ஆற்றிய பேருரைகளில் ஒன்று தமிழர் பண்பாடும் அதன் சிறப்பியல்புகளும் என்பதாகும். இப்பேச்சுரை பின்னாளில் அச்சுவடிவம் பெற்று நூலகியது. இந்நூலில் தமிழ்ப்பண்பாட்டைப் பற்றியும் அதன் சிறப்பியல்புகள் பற்றியும் விரித்துரைத்துள்ளார். அவற்றைச் சுருக்கியும் பகுத்தும் உரைப்பதாக இக்கட்டுரை அமைகின்றது.

தமிழ் இலக்கியங்கள் ஐந்து

தமிழ்ப்பண்பாட்டின் களஞ்சியங்கள் என்று ஐந்துத் தமிழ் நூல்களைக் கருதுகின்றார் தனிநாயகம் அடிகளார் அவை 1. தொல்காப்பியம் பொருளதிகாரம், 2. குறுந்தொகை, 3.புறநானூறு, 4.திருக்குறள், 5.சிலப்பதிகாரம் ஆகியன என்பது அவரின் கருத்து. இவ்வைந்து இலக்கியங்களும் தனிநாயக அடிகளாரின் மனம் கவர்ந்த நூல்கள் என்பது இதனின்று தெரியவருகின்றது.

பண்பாட்டின் பொதுக்கூறுகள்

“பண்பாடு என்றால் ஓர் இனத்தாரின் கொள்கைகள், கோட்பாடுகள், நோக்கங்கள், இலட்சியங்கள், வாழ்க்கைமுறைகள், பழக்கவழக்கங்கள் சமூகச் சட்டங்கள், சமயங்கள். வழிபாட்டு முறைகள், களவொழுக்கம், கற்பொழுக்கம், அகத்திணை புறத்திணை மரபுகள். இலக்கிய மரபுகள், அரசியலமைப்புகள். ஆடைஅணிகலங்கள், திருவிழாக்கள், உணவு பொழுதுபோக்கு விளையாட்டுக்கள், இவற்றையெல்லாம் குறிக்கும்” என்று தனிநாயகம் அடிகளார் பண்பாடு என்பதற்கான விளக்கத்தைத் தருகின்றார். இது அனைத்து இனங்களுக்கும்; உரிய பொதுப் பண்பாட்டு நெறியாகும்.

தமிழ்ப் பண்பாட்டின் சிறப்புக் கூறுகள்

மேற்குறித்த பண்பாடுகளைத் தமிழ் பெற்றுள்ளது. என்றாலும் அம்மொழிக்கே, தமிழினத்திற்கே உரிய தனித்த பண்பாட்டுக் கூறுகள் பலவும் உள்ளன. அவற்றையும் தனிறாயகம் அடிகளார் தன் பேச்சுரையில் குறித்துள்ளார். உலக மனப்பான்மை, கண்ணோட்டம், பக்தி, ஒழுக்கம், மக்கள் நலக் கொள்கை, பிறர் அன்பு, இயற்கை, நாட்டுப்பற்று, மொழிப்பற்று, அரசியலாட்சி, கவின்கலைகள் ஆகியனவற்றைத் தமிழர்களின் தனித்த பண்பாடுகளாகக் காட்டுகின்றார் தனிநாயகம் அடிகள்.


தமிழ்ப் பண்பாடு பெருமை

தமிழின் தனித்த பண்பாட்டுக் கூறுகளாக விளங்கும் மேற்சுட்டியன உலக மக்கள் அனைவராலும் ஏற்கத் தக்க தன்மை உடையன என்ற கருத்தை வலியுறுத்தியவர் தனிநாயகம் அடிகளார். இதற்குச் சான்றாகத் தன் வாழ்வைக் காட்டி அவர் நிறுவுகிறார். “இந்நூலாசிரியரும் வீரமாமுனிவர் போன்ற மேனாட்டாரும் தமிழ் மரபையே தழுவி வாழவும் பாடவும் முயன்றனர்” என்ற கருத்தின் வழியாகத் தான் தமிழ்ப்பண்பாட்டின்படி வாழ்பவன் என்பதையும் இலக்கியம் படைப்பவன் என்பதையும் இங்குத் தனிநாயகம் அடிகளார் காட்டுகின்றார். இங்கு வீரமாமுனிவரையும் காட்டியிருப்பது வீரமாமுனிவர் போன்று தன் வாழ்க்கையை அமைத்துக்கொள்ள வேண்டும் என்ற எண்ணமுடையவராகத் தனிநாயகம் அடிகளார் விளங்கியுள்ளார் என்பதைக் காட்டுகின்றது.

தமிழ்ப்பண்பாட்டின் வளர்ச்சி

தமிழ்ப் பண்பாடு மாற்றம் பெற்றுள்ளதா? என்ற கேள்வியைத் தனிநாயகம் அடிகளார் கேட்டுக் கொண்டு, அதற்குப் பதில் தரும் விதமாக தமிழ்ப்பண்பாடு மாற்றம் அடையவில்லை, அது வளர்ச்சி பெற்றுள்ளது என்றுக் குறிப்பிடுகின்றர்ர். அதன் வளர்ச்சிப்போக்கை அவர் பின்வருமாறு கணிக்கின்றார். ~~வட ஆரியர், பிற நாட்டார் செல்வாக்கடைந்த காலத்திலும், சமணர், ஐரோப்பியர் ஆகிய பிற நாட்டார் செல்வாக்கடைந்த காலத்திலும், தமிழர் பண்பாடு அடிப்படை கொள்கைகளில் அவ்வளவு மாற்றம் அடையவில்லை. பிறசமயங்களைப் போதித்த பார்ப்பனரும், சமணரும், புத்தரும், ஐரோப்பிய கிறிஸ்தவரும், மகமதியரும் தமிழர் பண்பாட்டைத் தழுவ முயன்றனர். இந்து சமயத்தி;ன் வழிபாட்டு முறையும், இலக்கியங்களும் தென்னாட்டுத் தத்துவங்களால் சமயத்தின் வழிபாட்டு முறையும், இலக்கியங்களும் தென்னாட்டுத் தத்துவங்களால் வளம்பெற்றன. வடமொழியிலுள்ள சமய இலக்கியங்களும் தென்னாட்டுத் தத்துவங்கள் மாதவர் போன்ற தென்னாட்டவரின் மூலமாகத் n;தான்னாட்டுத் தத்துவங்கள் வடமொழியில் இடம்பெற்றன. சுநீதி குமார் சட்டர்ஜி இந்தியப் பண்பாட்டின்எழுபத்தைந்து விழுக்காடு திராவிடப் பண்பாடு என்று குறிப்பிட்டுள்ளார். சமணரியற்றிய சிலப்பதிகாரத்தையும், புத்தரியற்றிய மணிமேகலையையும், வீரமாமுனிவரியற்றிய தேம்பாவணியையும் உமறுப்புலவர் இயற்றிய சீறாப்புராணத்தையும் ஆராயுங் காலை இவர்கள் தம் சமயங்களின் கோட்பாடுகளைக் கூறினாலும் தமிழர் பண்பாட்டை எங்ஙனம் விளக்கியுளாரென்பதும் புலனாகின்றது|| என்ற அடிகளாரின் கூற்று தமிழ்ப்பண்பாட்டின் வளர்ச்சியை எடுத்துக்காட்டுவதாக உள்ளது.
தமிழ்ப்பண்பாட்டின் உட்கூறுகள்

தமிழ்ப்பண்பாட்டின் உட்கூறுகளாகச் சிலவற்றைக் காட்டி தனிநாயகம் அடிகளார் அவற்றின் இயல்புகளையும் சித்தரித்துள்ளார்.

உலக மனப்பான்மை

பண்டைத்தமிழ் மக்கள் அயல்நாடுகளுடன் வணிகத்தொடர்பு கொண்டு இருந்தனர். உலக அளவில் தமிழகத்தின் வணிகப் பொருள்களான பட்டு, மிளகு, முத்து ஆகியனவற்றிற்குச் சிறப்பிடம் இருந்தது. இதன் காரணமாகத் தமிழகத்திற்கு உலகத் n;தாடர்பு என்பது ஏற்பட்டது. இத்தொடர்பு கருத்தியல்அளவில் வளர்ச்சி பெற்றிருந்ததைச் சங்க இலக்கியங்கள் காட்டுகின்றன. “இத்தாலிய நாட்டில் வாழ்ந்த ஸ்டொயிக்வாதிகள் உரோமப் பேரரசு காலத்தில் எவ்வாறு ஓர் உலகமனப்பான்மையை வளர்த்தார்களோ அவ்வாறே சங்க காலத்திற்கு முற்பட்ட காலம் தொடங்கி ஓர் உலக மனப்பான்மையை தமிழ் நாட்டில் பரவியுள்ளது” என்று தமிழர்தம் உலக மனப்பான்மையைத் தனிநாயகம் அடிகளார் எடுத்துரைக்கின்றார். யாதும் ஊரே, யாவரும் கேளீர், யாதானும் நாடாமால் ஊராமால் ஆகிய செவ்விலக்கியத் தொடர்கள் தமிழர்தம் உலக மனப்பான்மையை எடுத்துக்காட்டும் தொடர்களாகும்.

கண்ணோட்டம்

உலக மனப்பான்மையிலிருந்துத் தோன்றியவற்றில் ஒன்று கண்ணோட்டம் என்பதும் ஆகும். “தமிழ்நாட்டிற்கு அப்பாலிருந்து வந்த சமயங்களெல்லாம், தத்துவங்களெல்லாம் தமழ்நாட்டில் தடையின்றிப் போதிக்கப்பட்டன. பெரும் விழாக்களில் தத்துவாதிகள், சமயவாதிகள் தத்தம் கொடிகளைப் பறக்கவிட்டுத் தம் கருத்துக்களைப்பற்றி உரை நிகழ்த்தினர்” என்ற தனிநாயகம் அடிகளாரின் கருத்து தமிழரின் கண்ணோட்ட இயல்பினை எடுத்துரைப்பதாகும். மேலும் தமிழ்ப் புலவர் தம் கண்ணோட்ட மரபினுக்குப் பல சான்றுகளைத் தனிநாயகம் அடிகளார் காட்டுகின்றார். “சமணரும், புத்தரும் இசைக்க்லை, நடனக்கலை போன்ற கலைகளை வெறுத்தாராயினும் இளங்கோ அடிகள் திருத்தக்கதேவர் போன்றோர் தமழ்க்கலைகளை நன்கு விரித்துக் கூறியிருக்கின்றனர். இடைக்காலத்தில் வைணவர், சைவர் ஆகிய பார்ப்பன உரையாசிரியர்கள் சமண சமய நூல்களை எத்துனை ஆர்வத்துடன் அவை இலக்கிய நூல்களெனக் கருதி அவற்றின் மூலங்களுக்கு நுட்பமான உரைகளை எழுதியிருக்கின்றனர். பிற்காலத்தில் சமயசமரச கீர்த்தனைகள் என்றும் சமரசக் கொள்கைகள் என்றும் எங்கு உண்மையும் அழகும் உள்ளதோ அங்கிருந்துக் கருத்துக்களை நூலாசிரியர் எடுத்துத் தந்திருக்கின்றனர். திரு.வி. கல்யாண சுந்தர முதலியார் கிறிஸ்துவின் அருள்வேட்டல், புத்தரின் அருள்வேட்டல் போன்ற இலக்கியங்களைப் பாடி இன்புற்று வாழ்ந்தார். கவிமணி விநாயகம் பிள்ளை இயேசுவைப்பற்றி புத்தரைப்பற்றிப் பாடியுள்ளார்” என்ற தனிநாயகம் அடிகளாரின் கருத்து தமிழ்ப்புலவர்களிடத்தில் கழிபெருங்கண்ணோட்டம் இருந்ததைக் காட்டுகின்றது. வெறுப்பற்ற நிலையில் மற்ற சமய உண்மைகளை அறியும் பொதுமை நிலையையே தனிநாயகம் அடிகளார் கண்ணோட்டம் என்று குறிப்பிடுகின்றார்.
பக்தி

தமிழ்மொழியைப் பக்தியின் மொழி என்று அடையாளம் காட்டியவர் தனிநாயகம் அடிகளார் ஆவார். “யாம் இரப்பவை பொருளும் பொன்னும் போகமும் அல்ல நின்பால் அன்பும் அருளும் அறனும் மூன்றும்” என்ற பரிபாடலின் அடிகளும், வெள்ளை நிறமலரோ, வேறு எந்த மாமலரோ வள்ளலடியிணைக்கு வாய்த்த மலர் எதுவோ, வெள்ளை நிறப்பூவுமல்ல வேறெந்த மலருமல்ல, உள்ளக் கமலமடி உத்தமானர் வேண்டுவது என்ற விபுலானந்தரின் அடிகளும், மாசில் வீணையும் மாலை மதியமும் என்ற அப்பர் சுவாமிகள் அடியும் பக்தியின் விளைவெனக் கருதுகிறார் தனிநாயகம் அடிகள். இந்தோனீசியாவில் உள்ள பிறம்பாணான் பானாத்தரான் கோவில் , கம்பூசியாவில் இருக்கும் அரண்மனைச் சிற்பங்கள், தாய்லாந்தில் கொண்டாடப்படும் பாவைவிழா ஆகியன பக்தியால் விளைந்த உலகப் பண்பாடுகள் என்பது அடிகளின் கருத்து.

ஒழுக்கம்

“ஒழுக்கம் என்பது தமிழர் பண்பாட்டின் ஓர் அடிப்படைக் கொள்கையாக அமைந்து, இன்றும் தமிழர் வாழ்க்கைக்குப் பெரும் அழகையும், மனநிறைவையும் நல்குகின்றது. தமிழ்மக்கள் இத்துணை நூற்றாண்டுகளாகத் தனிநாடுகளில் வாழ்ந்து செழித்தோங்குவதற்கும், அரசியல் வாழ்க்கைக்கும் இவ்வொழுக்கமே துணையாக அமைந்தது. எனவேதான் போப்பையர் இத்துணை நீதிநூல்களை இயற்றிய மக்களுக்குக் கடவுளின் சிறப்பான அருள் இருத்தல் வேண்டும் என்கிறார்” என்று தமிழர் தம் ஓழுக்கநிலையை மேம்படுத்தி உரைக்கின்றார் தனிநாயகம் அடிகளார்.



மக்கள் நலக்கொள்கை

மக்கள் நலத்திற்காகவே இலக்கியம், கலை, பண்பாடு ஆகிய எல்லாம் என்பது தமிழர்தம் வாழ்வியல் நோக்கமாகும். இதுவே மக்கள் நலக் கொள்கையாகும். வடமொழி நூல்களில் இத்தகைய மனித நலக் கொள்கைகளைக் காணஇயலாது. தமிழில் மக்கள் நலக் கொள்கையைப் பரக்கக் காணலாம் என்கிறார் தனிநாயகம் அடிகளார். மனிதனை என்றும் பேணவேண்டுமென்றும், ஒரு செயலால் வரும் பிற நலன்களைக் கருதாமல் நன்மையை நன்மைக்காகவே செய்யவேண்டுமென்றும் உணர்ந்த தமிழ்ப்புலவர்கள் பலர் என்பது மக்கள் நலக்கொள்கையைப் பாடிய தமிழ்ப்புலவர்கள் பற்றிய தனிநாயகம் அடிகளாரின் கருத்தாகும். இம்மை செய்தது மறுமைக்கு ஆகும் எனும் நிலை கருதித் தமிழர்கள் மக்கள் நலக் கொள்கையில் நாட்டம் செலுத்தவில்லை. மேலுலகம் இல்லென்றாலும் ஈதலே சிறந்த பண்பு என்று வாழ்ந்தவர்கள் தமிழர்கள். தமக்கென முயலா பிறர்க்கென முயலும் உண்மை உடையவர்கள் சங்கச் சான்றோர். இவை மக்கள் நலக்கொள்கைக்குத் தனிநாயகம் அடிகளார் காட்டும் சான்றாகும்.

பிறர் மீதான அன்பு

மக்கள் நலப்பண்பின் இயல்புகளுள் ஒன்று பிறர் மீதான அன்பினைச் செலுத்துவதாகும். என் கடன் பணிசெய்து கிடப்பதே என்பது பக்தி இலக்கியக் காலத்தின் குரல். இன்னும் இவ்வுலகம் நிலைத்திருப்பதற்குக் காரணம் பிறர் மீதான அன்பு நிலைத்துவருவதுதான் என்கிறது புறநானூறு. ஆகவே பிறர் மீதான அன்பும் தமிழரின் பண்பாட்டை விளக்கும் கொள்கைகளுள் ஒன்றாகும்.

இயற்கை

தமிழர்களுக்கு இருந்து இயற்கை ஈடுபாட்டைக் கண்டு வியக்கின்றார் தனிநாயம் அடிகளார். தொல்காப்பிய அகத்திணை, இடைக்கால இலக்கியத்தின் இயற்கை வருணனை ஆகியன தமிழர்தம் இயற்கைப் பேணும் முறைக்குச் சான்றுகள். முல்லையும் ப+த்தியோ ஒல்லைய+ர் நாட்டே என்ற அவலச்சுவைப் பாடலில் காணலாகும் இயற்கை மேலீடு இலக்கிய மேன்மைக்கு ஒரு சான்று. இயற்கையை இற்றைக் காலத்திலும் பேண வேண்டுமானால் ஒவ்வொரு தமிழர் வீட்டிலும் முல்லைப் பந்தல் இருக்கவேண்டும், ஒவ்வொரு தமிழரும் தன் விழாக்களில் மலர்களையும் மாலைகளையும் பயன்படுத்த வேண்டும் என்கிறார் தனிநாயகம் அடிகளார்.



நாட்டுப்பற்றும், மொழிப்பற்றும்

தமிழகமும் இலங்கையம் ஒன்றிணைவது தமிழாலே. சேக்கிழார் பெரியபுராணத்தில் தமிழ் என்ற சொல் இடம்பெறும்போதெல்லாம் அதற்குத் தனியான அழகான அடைமொழிகளைக் கொடுத்தே படைக்கின்றார். வேதநாயகம்பிள்ளை, பரிதிமால் கலைஞர், ரா.பி. சேதுப்பின்ளை, பாரதியார், பாரதிதாசன் ஆகியோர் மொழிப்பற்றுமிக்கப் படைப்பாளர்கள். பாரதியாரின் நாட்டுப்பற்று மிக்க மொழிப்பற்று மிக்கப் பாடல்களைப் பாடங்களில் சேர்க்கவேண்டும். எச்சமயத்தவாராயினும் தமிழ்மொழியால் ஒன்றிணையும் தமிழர்களாக அனைவரும் மாறவேண்டும் என்று மொழிப்பற்றினை வளர்க்கிறார் தனிநாயகம் அடிகள்.

அரசியலாட்சி

தமிழ் மக்களின் அரசியலாட்சியும் அவர்களின் பண்பாடு சார்ந்தே அமைகின்றது. மன்னன் வழித்தே மலர் தலை உலகம் என்கிறது தமிழ் இலக்கியம். மார்க்கோபோலோ என்ற இத்தாலியப் பயணி சோழநாட்டின் அரசியலமைப்பினை உன்னதமானது எனக்குறித்துள்ளார் என்ற குறிப்பினைத் தந்துத் தமிழர் அரசியல் சிறந்தது என்கிறார் தனிநாயகம் அடிகளார்.

கவின் கலைகள்

தமிழரின் கவின் கலைகள் பற்றி ஒரு தனிக்கட்டுரையையே தனிநாயகம் அடிகளார் வரைந்துள்ளார். தமிழக மக்கள் எழுப்பிய கோபுரங்கள், சிலைகள், கோயில்கள் ஆகியன உலக அளவில் புகழ்பெற்றன. ரொடான் என்ற பிரெஞ்ச தேச சிற்பி ஆடல்வல்லான் சிலையின் சிறப்புகளை வியந்து பாராட்டியுள்ளார். இக்கலைச்செல்வங்களைக் காத்து: வளர்க்கவேண்டிய கடமை வருங்காலத் தமிழ் மக்களுக்குப் பெரிதும் தேவை என்று வேண்டுகோள் விடுக்கிறார் தனிநாயகம் அடிகளார்.

இவ்வாறு தமிழரின் பண்பாட்டுச் சிறப்புகள் வெளிப்படும் கூறுகள் பலவற்றை எடுத்தியம்பித் தமிழர்; தம் பண்பாட்டு மரபுகளை உலகறியச் செய்துள்ளார் தமிழ்த்தூதுவர் தனிநாயகம் அடிகளார்.

கருத்துகள் இல்லை: