சனி, டிசம்பர் 05, 2009

ஸ்ரீரங்கத்திற்கு நிகரான புதுவயல் ரெங்கநாதர் கோயில் திருப்பணி

"செய்யோடு காற்று விளையாடி வரும் நகரம் '' என்று கவியரசு கண்ணதாசன் அவர்களால் சிறப்பிக்கப் பெற்ற ஊர் புதுவயல் ஆகும். "செய் '' என்ற சொல்லிற்கு வயல் என்று ஒரு பொருள் கொள்ளலாம். வயல்களில் காற்று விளையாடி விளைச்சலைப் பெருக்கும் ஊர் புதுவயல் என்பது இதன் பொருள் ஆகும். "செய்யவள்'' என்ற பெயர் இலக்குமிக்கு உண்டு. அதனால் " செய் '' என்ற சொல்லிற்கு இலக்குமி என்று பொருள் கொண்டு அவள் காற்றுபோல் விடுதலையோடு உலாவரும் ஊர் என்றும் புதுவயலுக்குப் பொருள் கொள்ளலாம்.
இருபொருள்களுமே புதுவயலுக்குப் பொருந்துவாகும். வயல்களில் விலையும் நெல்லை அரசியாக்கிக் காற்றுப்பெட்டிவரை கொண்டு செல்லும் நவீன அரிசி ஆலைகள் பல உள்ள ஊர் இதுவாகும். இதனால் வயலும் பெருகுகிறது. வணிகமும் பெருகிச் செல்வம் செழிக்கிறது. காற்றோடுச் செய்யவள் இவ்வூரில் நிலைத்து நிற்கிறாள். கவிஞர் கண்ணதாசனின் சொல்வாக்கு மிகப் பொருந்துவதாக புதுவயல் விளங்குகிறது.
இவ்வூரில் கைலாசவிநாயகர், மேலப் பெருமாள் கோயில், கீழப் பெருமாள் கோயில், காட்டுச் சிவன் கோயில் என்று பல கோயில்கள் அமைந்துள்ளன. இக்கோயில்கள் அனைத்தும் பழமைச் சிறப்பு வாய்ந்தன. இவை அனைத்தும் திருக்குளங்களோடு அமைந்து நீர்வளத்தையும், அருள் வளத்தையும் இவ்வூருக்கு வழங்கி வருவது இன்னும் சிறப்பாகும்.
தற்போது இவ்வூரில் உள்ள கீழப் பெருமாள் கோயில் திருப்பணி நடைபெற்றுவருகிறது. இக்கோயில் ஊரின் கிழக்குப் பகுதியில் அமைந்து இருப்பதால் மக்கள் இதனைக் கீழப் பெருமாள் கோயில் என்று அழைக்கின்றனர். இது தவிர மேற்குப் புறத்தில் மேலப் பெருமாள் கோயில் என்று ஒரு கோயில் உள்ளது. இது மேற்குப் புறத்தது.
இக்கோயில் பழமை வாய்ந்தது. சில நூற்றாண்டுகளுக்கு முன்பாக இவ்வாலயத்தினை ஐயங்கார் சமுகத்தைச் சார்ந்த பெருமக்கள் கட்டி வணங்கி விழாக்கள் நடத்தி வந்தனர். அவர்கள் வெளியூர்களுக்குச் சென்றபோது இவ்வூரில் உள்ள நகரத்தார் இனம் சார்ந்த முன்று குடும்பத்தார்கள் பொறுப்பில் விட்டுச் சென்றனர். இக்குடும்பத்தார் இதனைச் சிறப்போடு நிர்வகித்து வந்தனர்.
தற்போது இக்கோயிலை புணருதாரணம் செய்துப் புதுப்பிக்க முடிவு செய்து பிரசன்னம் பார்த்தனர். அதன்படி கோயில் திருப்பணிகள் ஆரம்பிக்கப் பெற்று இன்னும் சில மாதங்களில் சம்ரோக்ஷணம் நடைபெற உள்ளது.
அறுபது லட்ச ருபாய் செலவிலான மதிப்பீட்டில் நடைபெற்று வரும் இப்பணிக்கு அடியவர்கள் உதவவேண்டும்.
இக்கோயிலில் எழுந்தருளியிருக்கும் இறைவன் ரெங்கநாதன் ஆவார். இறைவி ரெங்கநாயகி ஆவாள். இறைவன் இறைவியின் பெயர் பொருத்தம் சிறப்பிற்குரியது. திருவரங்கத்தில் பள்ளி எழுந்தருளம் அரங்கநாதனை மனதில் கொண்டு அதே பெயரில் இறைவனையும் இறைவியையும் அமைத்துள்ள அடியார்கள் திறம் போற்றத்தக்கது.
இக்கோயிலில் மேலும் இராமர் சன்னதி, சக்கரத்தாழ்வார் சன்னதி, யோக நரசிம்மர் சன்னதி, தன்வந்திரி சன்னதி, அயக்ரீவர் சன்னதி போன்ற சன்னதிகளும் அமைந்துள்ளன. இவை அனைத்தும் ஸ்ரீரங்கத்தில் பெருமைக்குரிய சன்னதிகளாகும். திருவரங்கத்தை அப்படியே புதுவயலுக்குக் கொண்டு வந்துள்ள அடியார்களைப் போற்ற வேண்டும். திருவரங்கத்தில் அருள்புரியும் அதே தன்மையுடன் இங்குள்ள இறைவனும் நிறைவாகக் காட்சிதருகிறான்.
மகாமண்டபம், வாகன மண்டபம் எனப் புதுப் பொலிவோடு விளங்க உள்ள இக்கோயிலுக்கு மெய்யன்பர்கள் நிதியுதவி செய்துப் பெருமாளின் திருவடி பரவி உய்ய அன்போடு வேண்டுகிறோம்.
இக்கோயில் பணிக்காக ஒரு டிரஸ்ட் உருவாக்கப் பெற்றுள்ளது. இதனைத் தக்க நிர்வாகிகள் நிர்வகித்து வருகின்றனர். அன்பர்கள் தங்கள் நிதியை விஆர். ரெங்கநாதன், ஆர்எம். பழனியப்பன், இஎம்சி. பழனியப்பன் என்ற நிர்வாகிகள் குழுவில் உள்ள ஒருவர் பெயரில் காசோலைகளாக அனுப்பினால் திருவருள் தங்களுக்குப் பெருகும்.

கருத்துகள் இல்லை: