வியாழன், நவம்பர் 03, 2016

8. சிவபெருமான் ஆடிய வையை ஆடல்




8. சிவபெருமான் ஆடிய வையை ஆடல்

சிவபெருமான் ஆடிய திருவிளையாடல் அறுபத்துநான்கு ஆகும். இதனைத் திருவிளையாடல் புராணம் அழகிய பாடல்களாகப் பதிவு செய்துள்ளது. பரஞ்சோதியார் பாடிய திருவிளையாடல் புராணம் 3362 பாடல்களை உடையது. திருவிளையாடல் புராணப் பாடல்கள் எளிமையும் இனிமையும் நிரம்பின. ஆரம்ப நிலையில் தமிழ் படிக்க முயல்பவர்கள் கூட இப்புராணத்தைப் படித்து இன்புற இயலும். அந்த அளவிற்கு எளிமைத் தமிழ்நடை கொண்டது திருவிளையாடல் புராணம்.

ஆண்டவன் ஆடிய ஒவ்வொரு திருவிளையாட்டும் ஒவ்வொரு வகையில் சிறந்தது. வந்திக் கிழவிக்காக வைகைக்கரையை அடைக்கச் சென்ற திருவிளையாட்டு சொல்லவும், ரசிக்கவும் இனிமை உடையது. மண் சுமந்த படலம் என்ற பெயரில் அமைந்துள்ள இத்திருவிளையாட்டு மிகவும் சிறப்பானது.

வைகை ஆறு பெருக்கெடுத்து ஓடுகிறது. அதன் வெள்ளம் அளவு கடந்து மதுரைக்குள் பாய்ந்து மதுரை மக்களைத் துன்பத்தில் ஆழ்த்தியது.

இதன் காரணமாக மதுரை மக்கள் அனைவரையும் வைகை ஆற்றின் கரையைப் பலப்படுத்தச் சொல்லி ஆணையிடுகிறான் அரசன். வீடுகளில் இருந்த ஆண்மக்கள் ஒவ்வொருவரும் இப்பணியில் ஈடுபட்டு மதுரையைக் காக்க முனைகின்றனர். வீட்டில் ஆண்மக்கள் இல்லாதவர்கள் கூலியாளை அழைத்துத் தமக்கு ஒதுக்கப் பெற்ற இடத்தைப் பலப்படுத்த முனைகின்றனர். அன்று கூலியாள்களும் கிடைக்கவில்லை.

வந்திக் கிழவிக்கு கணவன் இல்லை, குழந்தைகள் இல்லை, உறவினர் இல்லை, நட்புடையோர் இல்லை, மற்றவர்கள் இல்லை, எனவே, அவள் கரையை அடைக்க வழி காணாது தவித்தாள். தன் தவிப்பை மதுரைச் சொக்கநாதரிடம் அவள் முறையிட்டாள்.

“பிட்டு விற்று உண்டு வாழும் பேதையேன் இடும்பை என்பது
எட்டுணையேனும் இன்றி இரவி எங்கு எழுகென்றிருந்த நான்
மட்டு நின்னருளால் இங்குவைகினேன் இன்று வந்து
விட்டதோ இடையூறு ஐயமீனவன் ஆணையினாலே”


என்று அவள் கலங்குகிறாள்.

மதுரையில் எக்கவலையும் இல்லாமல் சொக்கநாதர் அருளால் பிட்டு விற்றுக் கொண்டே பிழைத்து வந்த வந்திக் கிழவியின் வாழ்வு நேற்று வரை இனிதாகத்தான் இருந்தது. சூரியன் எந்தப்பக்கம் உதித்தால் எனக்கென்ன என்று கவலைப்படாமல் இருந்த இக்கிழவியின் வாழ்வில் இன்று துன்பம் வந்தது. மீன் கொடியை உடைய பாண்டியனின் வெள்ளம் தடுக்கும் ஆணையால் கரை அடைக்க ஆள் இல்லாததால் துன்பம் வந்து சேர்ந்தது. மதுரை நாயகனே நீயே இத்துன்பத்தைத் தீர்ப்பாய்” என்று வந்திக் கிழவி இறைவனிடம் வேண்டினாள். இவளின் வருத்த மொழிகள் சிவபெருமானை எட்டின. அவர் தானே கூலியாளாக மண் சுமக்கக் கிளம்பினார். கசங்கிய அழுக்கேறிய ஆடை, தலையில் சிம்மாடு, அதன் மீது கவிழ்க்கப்பட்ட கூடை, தோளில் மழுங்கிய மண்வெட்டி என்ற கோலத்தில் இறைவன் மதுரை வீதியில் கூலியாளாக வந்தான். வந்தவன் இறைவன் கூலி கொடுத்து என்னை வேலைக்கு எடுத்துக் கொள்பவர் யாராவது இங்குஉண்டா? என்று கூறிக் கொண்டே வந்தார். இந்தச் சொற்கள் அமுதம் என வந்தியின் காதுகளில் விழுந்தன. அவள் மகிழ்ந்தாள். குழந்தை பெறாதவள் குழந்தையைப் பெற்றது போலக் கூலியாள் ஒருவனைக் கண்டு மகிழ்ந்தாள். கூலிக்குப் பதிலாகப் பிட்டு தருவதாக உடன்படிக்கை ஏற்பட்டது. தாய்ப்பால் அமுதம் போன்று இருந்த பிட்டினை வந்திக்கிழவி தர வயிறு நிறைய உண்டார் கூலியாளாகிய பெருமான். உண்ணும் பொழுது தான் உண்ணும் உணவு சோமசுந்தரப் பெருமானுக்கு உரியது என்று சொல்லிக் கொண்டார். இதன் பின் அவர் கரையை அடைக்க வேண்டிய இடம் காட்டப் பெற்றது. தான் வந்தியின் கூலியாள் என்பதைப் பதிவு செய்துவிட்டு அவர் கரையை அடைக்க முனைந்தார். அப்போது அவர் ஆடிய திருவிளையாட்டு எல்லாத் திருவிiளாயடல்களையும் விட நகைச்சுவை தருவது. கரையை அடைக்க வந்தவர், அந்தத் தொழிலைச் செய்யாமல் என்னென்னவோ செய்தார். அவற்றைப் பரஞ்சோதி முனிவர்அழகாகக் காட்டுகிறார்.

“வெட்டுவார் மண்ணைமூடி மேல்வைப்பார் பாரமெனக்
கொட்டுவார் குறைத்தெடுத்துக் கொடுபோவார் சுமடுவிழத்
தட்டுவார் சுமையிறக்கி எடுத்ததனைத் தலைபடியக்
கட்டுவார் உடன்சுமந்து கொடுபோவார் கரைசொரிவார்”


அந்தக் கூலியாள் மண்ணை வெட்டுகிறார். பின்பு தட்டில் அம்மண்ணை அள்ளுவார். அதனைத் தலையில் வைப்பார். பாரம் அதிகமாக இருக்கிறது என்று தட்டைக் கீழே இறக்கி மண்ணைக் கொஞ்சம் தள்ளுவர். மீண்டும் எடுத்து வைக்க முயலுவார். அப்போது தலையில் இருந்த சும்மாடு கீழே விழுந்துவிடும். அவர் சும்மாட்டைச் சரி செய்வார். அதன் பின் மண்தட்டை எடுத்துத் தலையில் வைப்பார். சற்று தூரம் நடப்பார். கொண்டு போய் மண்ணைக் கொட்டியதாகப் பேர் செய்வார்.

இப்படியே ஒருமுறை, இருமுறைதான் மண்ணைக் கொட்டியிருப்பார். அதற்குள் இவருக்குச் சோர்வு வந்துவிடுகிறது. பக்கத்தில் இருந்த ஆலமரத்தின் அடியில் படுத்து உறங்க ஆரம்பித்து விட்டார். சிறிது கண்ணயர்ந்தார். இது ஆலமரத்தடியில் தட்சிணாமூர்த்தி பிரான் நிட்டையில் இருந்த தோற்றம் போல இருந்தது. உடன் இருந்தவர்கள் சனகாதி முனிவர்கள் போல் காட்சி தந்தனர். இவரின் யோக நிட்டைக்கு இடையூறு செய்யாமல் அவர்கள் மௌனமாக வேலை பார்த்தனர். உறங்கிய தட்சிணாமூர்த்திப் பிரான் பின்பு எழுந்தார். மீளவும் பசிப்பது போலிருந்தது. உடனே வந்திக் கிழவி இருந்த இடத்திற்குச் சென்று, பிட்டை வாங்கிக் கேட்டு உண்டார். மீளவும் வெட்டும் பணியைத் தொடங்கினார்.

இப்போது வேறு திருவிளையாட்டை ஆரம்பிக்கிறார்.

“எடுத்த மண்கூடையோடும் இடறி வீழ்வார் போல் ஆற்றின்
மடுத்திட வீழ்வார் நீத்திவல்லை போய்க் கூடைதள்ளி
எடுத்து அகன்கரை மேல்ஏறி அடித்தடித்து ஈரம்போக்கித்
தொடுத்த கட்டவிழ்ப்பார் மீளத்துன்னுவர் தொடுவர் மண்ணை”


மண்கூடையோடு சென்றவர் விழுபவர் போல விழுந்தார். இதன்காரணமாக வையைஆற்றில் மண்கூடை வெள்ளத்தில் அடித்துச் செல்லப்படுகிறது. உடனே அதனைக் கைப்பற்ற அந்தக்கூலியாள் நீச்சலடித்துச் செல்கிறார். கூடையை ஒரு வழியாகக் கைப்பற்றி விடுகிறார். அந்தக் கூடையைக் கரைக்குக் கொண்டுவந்து அதன் ஈரம் போகும்படி மணலில் அடிக்கிறார். இதன் காரணமாக மண்சுமக்கும் கூடையின் கட்டுகள் நெகிழ்கின்றன. அதனை இறுக்கக் கட்டும் வேலையைப் பார்க்கிறார். பிறகு மண்ணைத் தொடலாமா வேண்டாமா என்று யோசித்து நிற்பார்.


மண்சுமக்கும் கூடையைச் சரி செய்தாகிவிட்டது. அடுத்து எதைச் சரி செய்யலாம் என்று அவர் மனம் எண்ணுகிறது. மண்வெட்டியைச் சரி செய்கிறார். மண்வெட்டியைச் சுழற்றுகிறார். மண்வெட்டியின் ஆப்பினை அசைத்துப் பிடுங்கி மீளவும் அடிக்கிறார். இதற்குள் பசி வந்து விடுகிறது. மடியில் கட்டி வைத்திருந்த பிட்டினை எடுத்து உண்கிறார். அருகிருந்தவர்களுக்கும் அந்தப் பிட்டினைத் தந்து அவர்களின் வேலையையும் கெடுக்கிறார். இப்படி எல்லா வேலைகளும் நடைபெறுகின்றன. ஆனால் கரை அடைக்கும் வேலை மட்டும் நடைபெறவில்லை. வந்திக் கிழவியின் கரை அடைக்கப்படவில்லையே என்று கணக்காளர்கள் கேட்கும் நிலையில் இவர் அசையாது சும்மா நிற்கிறார். இதனைக் கண்ட அவர்கள் மிரளுகிறார்கள்.

“பித்தனோ இவன்தான் என்பார் அல்லது பேய்கோட்பட்ட
எத்தனோ இவன்தான் என்பார் வந்தியை அலைப்பான் வந்த
எத்தனோ இவன்தான் என்பார் இந்திரசாலம் காட்டும்
சித்தனோ இவன்தான்என்பார் ஆரென்று தெளியோமென்பார்”


மண்அள்ள வந்த கூலியாள் பித்தனா, பேய் பிடித்தவனா, வந்திக் கிழவியை எத்திப் பிழைக்க வந்தவனா, அல்லது இந்திரவித்தை செய்யும் சித்தனா யார் என்று அவர்களுக்த்தெரியவில்லை. உங்களுக்காவது தெரிகிறதா. வந்தவர் யார் என்று...?
thanks to muthukamalam

கருத்துகள் இல்லை: