திங்கள், டிசம்பர் 01, 2014

இரட்டைக் காப்பியங்களில் கணிகையர் மனநிலை

தமிழ் அகமரபில் தலைவன் தலைவி ஆகியோருக்கு இணையாகப் பரத்தை என்ற பாத்திரமும் முக்கியப் பாத்திரமாக கூற்றுடைப் பாத்திரமாக ஏற்கப்பட்டுள்ளது. தொல்காப்பியத்தில் பரத்தையர் பிரிவு என்ற பிரிவு உண்டு. தலைவன் பரத்தையை நாடிச் செல்வதற்கான காரணம் காதற் பரத்தை, இற்பரத்தை, சேரிப்பரத்தை, காமக்கிழத்தி என்ற பரத்தையரின் சார்பாக ஏற்படும் பிரிவுகள் ஆகியன உணர்த்தப் பெற்றுள்ளன. சங்க காலத்தில் பரத்தையர் பிரிவு கருதிய பாடல்களும் பரத்தைக் கூற்றுப் பாடல்களும் இடம் பெற்றிருப்பதன் வாயிலாக அவர்கள் பெற்றிருந்த சமுதாய முக்கியத்துவம் தெரிய வருகின்றது. சங்கம் மருவிய காலத்தில் வரைவின் மகளிர் என்று ஒதுக்கப் பெற்ற இம்மகளிர் காப்பிய காலத்தில் கதை மாந்தராக வரும் அளவிற்கு முக்கியத்துவம் பெற்றிருந்துள்ளனர். சிலப்பதிகாரம் மணிமேகலை ஆகிய காப்பியங்களில் பரத்தையர் ஒழுக்கம் அதனால் விளைந்த செல்வ அழிவு தன் காதலன் இறந்த பின் பரத்தையர் எடுக்கும் துறவு முடிவு ஆகியன சுட்டப் பெற்றிருப்பது பரத்தையரைத் பாட்டுடைத் தலைவியராக்கும் முயற்சி என்றால் அது மிகையாகாது.

சங்க காலத்தில் பேகனின் மனைவி தன் கணவனான கோவலன் பரத்தையர் நாடிச் சென்ற போது “எம்போல் ஒருத்தி நலன் நயந்து என்றும் வரூஉம்” என்று அவள் பேசியதாக பரணர் பதிவு செய்கின்றார். அதாவது பரத்தையரும் தன்னைப் போல் ஒரு பெண் என்ற எண்ணத்தில் பேசிய கண்ணகியின் சொற்களில் பெண் குலத்தின் மீதான அன்பும் தன் கணவன் மீதான அன்பும் வெளிப்படுகின்றன. இருப்பினும் பரத்தையர்கள் தலைவியைப் பழித்துப் பேசும் பாங்கும் சங்க காலத்தில் பதிவு செய்யப்பெற்றுள்ளது. “கையும் காலும் தூக்கத்தூக்கும் ஆடிப்பாவை போல மேவன செய்யும் தன் புதல்வன் தாய்க்கே” (குறுந்தொகை-8) என்ற பாடலில் தலைவனை தலைவியைப் பழித்துப் பேசும் நிலையும் காட்டப் பெறுகின்றது.

இவ்வகையில் பரத்தையருக்கும் குல மகளிருக்குமான உரசல்கள் இலக்கிய அளவில் காட்டப் பெறத்தக்க முரண்பாடுகளாக சங்க இலக்கியங்களில் அமைந்துள்ளன. தொடர்ந்து வந்த அற நூல்களில் இவ்வொழுக்கம் கண்டிக்கப்பட்டுள்ளது. பரத்தன் என்று பொது மகளிரை நாடும் ஆண்மகன் குறிக்கப்படும் அளவிற்கு இக்கண்டிப்பு அமைந்தது.

சிலப்பதிகாரத்திலும் மணிமேகலையிலும் கணிகையர் (பரத்தையர்) ஒழுக்கம் அதனால் ஏற்படும் விளைவுகள் ஆகியன சுட்டப் பெற்றுள்ளன. இவ்விரு காப்பிய ஆசிரியர்களும் பரத்தையர் பற்றி விரிவான செய்திகளைத் தந்துள்ளனர். அவற்றின் வழியாகக் கணிகையர் அல்லது பரத்தையர் குல மரபுகளையும் அவர்களின் உளப்பாங்கினையும் அறிந்து கொள்ள முடிகின்றது.


சிலப்பதிகாரத்தில் கணிகையர்

புகார் நகரத்தில் கணிகையர் குலத்தில் சித்ராபதியின் மகளாகப் பிறக்கிறாள் மாதவி. ஆடல், பாடல், அழகு ஆகிய மூன்றிலும் நிறைவு பெற்றவளான மாதவி ஏழாண்டுகள் நடனக் கலையையும் பயின்ற சிறப்பினள் ஆவாள். அவள் பன்னிரண்டாவது வயதில் தன் ஆடலை மக்கள் மன்னர் முன் காட்ட அரங்கேற்றுக் காதையின் வழியாக ஆடத் தொடங்குகிறாள்.

அவளின் ஆடல் சிறப்பின் காரணமாக தலைக்கோல் பட்டத்தையும் அரசனின் பச்சைமாலையையும் பெற்றாள். இதன் தொடர்வாக அக்கால நடைமுறையான ஆண்களிடம் இருந்து இவள் ஆயிரத்தெட்டுக் கழஞ்சு பொன் பெறும் தகுதியைப் பெறுகிறாள்.

மாதவியின் பச்சை மாலையை விலைகூறி விற்ற கூனியிடம் மாலையை வாங்கிய கோவலன் மாதவியுடன் இருக்க வேண்டியவனான். விடுதல் அறியாச் சிறப்பினளாக மாதவி இருக்க அவளைப் பிரியாது தன் மனைவி கண்ணகியைக் கோவலன் மறந்தான்.

மாதவி கோவலனுக்குக் கலவியும் புலவியும் அளித்தாள். ஆர்வ நெஞ்சத்தோடு கோவலனுடன் அவள் கலந்தாள். கலவியால் மாறுபட்ட தன் அலங்காரங்களை மீளவும் திருத்திக் கொண்டாள். அதன் பின் அவனுடன் கூடினாள். இப்படி மகிழ்வாக இருவரும் வாழ்ந்தார்கள்.

கணிகையர் குலத்தில் பிறந்தவள் மாதவி என்பதால் இந்திர விழாவில் அவள் ஆடக் கடமைப்பட்டவள் ஆகிறாள். கோவலனுடன் இருந்த காலத்தில் நடத்தப்பட்ட இந்திர விழாவில் பதினொரு வகை ஆடல்களை அவள் ஆடிச் சிறந்தாள். அவளின் ஆடல் கோவலன் நெஞ்சில் சற்று ஊடலைக் கொணர்கிறது. பொதுப்பட ஆடும் பொதுமகள் இல்லையா இவள் என்ற ஐயத்தை அவன் மனது கொள்ளுகின்றது. இவனின் ஐயத்தை அறிந்து கொண்ட மாதவி அதனை மாற்றப் பல்வேறு அணிகளை அணிந்து அவனுடன் இணைகிறாள். பின்னர் கடற்கரைக்கு இருவரும் செல்ல அங்கு ஊடல் பெருகி இருவரும் கானல்வரி பாடிப் பிரிகின்றனர்.


அப்போது கோவலன் மாதவி என்ற கணிகையைப் பற்றிப் பேசுகின்றான்;

“கானல்வரி யான்பாடத் தான் ஒன்றின்மேல் மனம்வைத்து
மாயப்பொய் பல கூட்டும் மாயத்தாள் பாடினாள்” (கானல்வரி. 14)

மாதவியின் மனம் வேறொன்றின் மீது இருக்கிறது. மாயப் பொய் பல பேசுபவள் அவள் என்ற இந்த அடிகள் கணிகையர் பற்றிய சிலப்பதிகார காலக் கருத்து என்று கொள்ளவேண்டும். இருப்பினும் மாதவி தூய மனத்தை உடையவளாகச் சிலப்பதிகார ஆசான் இளங்கோவடிகளால் படைக்கப் பெற்றுள்ளாள். கோவலனை மீண்டும் தன் இல்லம் வரச் செய்ய அவள் கடிதம் எழுதி அக்கடிதத்தை அவனிடம் சேர்க்கச் செய்கிறாள். அதனைக் கண்டும் கோவலன் வரவில்லை. மாறாக மாதவியைப் பழித்துப் பேசுகிறான்.

“ஆடல் மகளே ஆதலின் ஆய்இழை
பாடுபெற்றன அப்பைந்தொடி தனக்கு என” (வேனிற்காதை 109-110)

என்று ஆடல் மகள் என்ற நிலையிலேயே கோவலன் மாதவியைக் காணுகின்றான். இருப்பினும் மாதவி மாலை வாரார் ஆயினும் காலை வருவார் என்று அவருக்காக ஏங்கித் துயில் கொள்ளாமல் இருக்கிறாள். கோவலன் பிரிந்த பின்பு அவன் தன் மனையாளுடன் மதுரை சென்றதைக் கேட்டு மாதவி வருத்தம் கொள்கிறாள். இவளின் வருத்தத்தைக் கோசிகன் கோவலனுக்கு எடுத்துரைக்கிறான்.

“வசந்த மாலை வாய் மாதவி கேட்டுப்
பசந்த மேனியள் படர்நோய் உற்று
நெடுநிலை மாடத்து இடைநிலத்து ஆங்கு ஓர்
படைஅமை சேக்கையுள் பள்ளியுள் வீழ்ந்ததும்
வீழ்துயர் உற்றோள் விழுமம் கேட்டுத்
தாழ்துயர் எய்தித் தான் சென்று இருந்தும்
இருந்துயர் உற்றோள் இணையடி தொழுதேன்
வருந்துயர் நீக்கு என மலர்க்கையின் எழுதி
கண்மணி அனையாற்குக் காட்டுக என்றே
மண்உடை முடங்கல் மாதவி ஈந்ததும்” ( புறஞ்சேரி இறுத்த காதை- 67-75)

என்ற இவ்வடிகள் மாதவியின் துயரத்தை எடுத்துரைப்பனவாக உள்ளன. அவள் மீளவும் ஒரு கடிதத்தைத் தன் காதலன் கோவலனுக்கு எழுதி அதில் தன்னிலையைத் தெரிவிக்கிறாள்.

கோவலன் தான் வந்தபின் பிற ஆடவனுடன் கூடி இன்பம் நுகர்வாள் என்று மாதவியின் வாழ்க்கையைப் பற்றி எண்ணியிருந்தான். ஆனால் அவளோ பிற ஆடவர் யாரையும் கருதாது தன்னைப் பற்றியே நினைவிலேயே இருப்பதை எண்ணி அவள் நடத்தை நாடகம் போன்றது அல்ல என்ற முடிவிற்கு வருகிறான். இதன் காரணமாக ஓலை பெற்ற அவன் அவ்வோலையில் எழுதப் பெற்ற வருத்தம் தோய்ந்த வரிகளைப் படித்ததும். “தன் தீது இலள் எனத் தளர்ச்சி நீங்கி என் தீது” (94-95) என்று தன் பழைய எண்ணத்தை மாற்றிக் கொள்கிறான்.

இதன் வழியாக மாதவி மற்ற பரத்தையரைப் போன்றவள் அல்லள். ஒரு ஆடவனுக்குத் தன் வாழ்வைத் தந்தவள். அவனால் இன்பம் வந்த போதும் துன்பம் வந்த போதும் அவன் நினைவிலேயே இருப்பவள் என்பது தெரிய வருகிறது. மேலும் வேறு ஆடவர்கள் யாரும் அவள் வீட்டுக்குச் செல்லவில்லை. கோசிகன் என்ற அந்தணன் செல்லும் அளவிற்கு மாதவியின் இல்லம் கோவலன் வருகைக்காக மட்டும் திறந்திருந்தது என்பதை இங்கு உற்று நோக்க வேண்டியுள்ளது. மேலும் கணிகையர் குலப்பெண்கள் தான் கலந்த ஆடவனுக்காக வேறு ஊர்களுக்குச் செல்லும் நிலை பெற்றவர்கள் என்பதையும் உணர வேண்டியுள்ளது. இதன் காரணமாகப் பின்பு கண்ணகி போராடிய நிலை போல மாதவியால் முடியவில்லை என்பதும் கருதத்தக்கது.

கோவலனும் மாதவியும் இணைந்திருந்த காலத்தில் நிகழ்ந்த மணிமேகலைக்குப் பெயரிடப்படும் காட்சியை விளக்குகையில் இளங்கோவடிகள் கணிகையர் குலம் பற்றிப் பல செய்திகள் குறிப்பிடுகின்றார்.

“வேந்துறு சிறப்பின் விழுச்சீர் எய்திய
மாந்தளிர் மேனி மாதவி மடந்தை
பால்வாய்க் குழவி பயந்தனள் எடுத்து
வாலாமைநாள் நீங்கிய பின்னர்
மாமுது கணிகையர் ~மாதவி மகட்கு
நாம் நல்லுரை நாட்டுதும்” (அடைக்கலக் காதை. 20-25) 

என்ற இப்பாடலடிகள் பல செய்திகளை உணர்த்துவனவாக உள்ளன.

மாதவி ஒருவனுக்கே உரிமையாகும் நிலையில் கோவலனின் குழந்தைக்குத் தாயாகிறாள். இதுவே அவளின் தூய உள்ளத்திற்குச் சான்று பயக்கின்றது. மேலும் வயது முதிர்ந்த கணிகையர் மாதவி மகளுக்குப் பெயரிடப் பெற்ற நிகழ்வு மாதவி கணிகையர் குலத்திலே உறைந்து வாழ்கிறாள் என்பதையும் எடுத்துரைக்கிறது. இவளின் மேன்மையை மாடல மறையோன் சேரமன்னன் அவையில்

“மாதவி மடந்தை
கானற்பாணி கனக விசயர்தம்
முடித்தலை நெறித்தது” (நீர்ப்படைக் காதை-49-51)

என்று உயர்த்துகிறான்.


கல் எடுப்பது கண்ணகிக்கு. ஆனால் அதற்கு மாதவியின் கானற்பாணி காரணம் என்கிறபோது மாதவியின் தூய உள்ளம் இங்குக் காப்பிய மணிமுடியாகக் காட்டப் பெறுகின்றது. இதனைத் தொடர்ந்து மாதவி துறவேற்ற நிலையையும் மாடலன் உரைக்கின்றான்.

“மற்றது கேட்டு மாதவி மடந்தை
நற்றாய் தனக்கு நற்றிறம் படர்கேன்
மணிமேகலையை வான் துயர்உறுக்கும்
கணிகையர் கோலம் காணாதொழிக எனக்
கோதைத்தாமம் குழலொடு களைந்து
போதித்தானம் புரிந்தறங் கொள்ளவும்” ( நீர்ப்படைக் காதை- 104-109)

என்று ஒருவனுக்கு மட்டுமே தன் வாழ்வை அர்ப்ப்பணித்தவளாக மாதவிப் பாத்திரம் சிலப்பதிகாரத்துள் படைக்கப் பெற்றுள்ளது.

இவை மாதவியின் மகள் மணிமேகலையைப் பற்றியும் அவளின் எதிர்காலத்தைப் பற்றியும் மாடலன் குறிப்பிட்ட செய்திகள் ஆகும். இதே செய்திகளைத் தேவந்தியும் குறிப்பிடுகிறாள். அது சித்திராபதி மாதவி உரையாடலாக புனையப் பெற்றுள்ளது.

மாதவியின் தாய் சித்திராபதி - மணிமேகலை சிறந்த அழகியாக வளருவதால் அவளை மாதவியைப் போல ஒருவன் கைப்பொருளாக அளிக்க இயலுமா? யாராவது அவளைக் கைக்கொள்ள வருவார்களா?என்று கேட்கிறாள். அதற்கு மாதவி.

“வருக என் மடமகள் மணிமேகலைஎன்று
உருவிலாளன் ஒரு பெருஞ்சிலையோடு
விரைமலர்வாளி வெறுநிலத்து எறியக்
கோதைத் தாமம் குழலொடு களைந்து
போதித் தானம் புரிந்தறம் படுத்தனள்” (வரந்தரு காதை- 25-30)

என்ற இந்தப் பாடலடிகளில் இடம்பெற்றுள்ள மாதவி சித்ராபதி மணிமேகலை உள்ளிட்ட உரையாடலில் மாதவியின் மாறாத நெஞ்சம் சித்ராபதியின் மாற்றிவிடத் துணிகிற எண்ணம் மணிமேகலை விருப்பு வெறுப்பு அறிவிக்கா நிலை ஆகியன வெளிப்பட்டு நிற்கின்றன.

இவ்வகையில் கணிகையர் குலத்திற்கான நிலையில் இருந்து மேம்படுத்தப் பெற்ற உளப்பாங்குடையவளாக மாதவி விளங்கினாள் என்பது சிலப்பதிகாரத்தின் வழி தெரியவருகிறது.

மணிமேகலையில் கணிகையர் உள்ளம்

மணிமேகலையில் கணிகையர் கற்றிருந்த கலைகள் பட்டியல் இடப்பெறுகின்றன.

“வேத்தியல் பொதுவியல் என்று இரு திறத்துக்
கூத்தும் பாட்டும் தூக்கும் துணிவும்
பண்யாழ்க் கரணமும் பாடைப் பாடலும்
தண்ணுமைக் கருவியும்தாழ் தீம் குழலும்
கந்துகக் கருத்தும் மடைநூல் செய்தியும்
சுந்தரச் சுண்ணமும் தூநீர் ஆடலும்
பாயல் பள்ளியும் பருவத்து ஒழுக்கமும்
காயக் கரணமும் கண்ணியது உணர்தலும்
கட்டுரை வகையும் கரந்து உறைக் கணக்கும்
வட்டிகைச் செய்தியும் மலர் ஆய்ந்து தொடுத்தலும்
கோலம் கோடலும் கோவையின் கோப்பும்
காலக்கணிதமும் கலைகளின் துணிவும்
நாடக மகளிர்க்கு நன்கனம் வகுத்த
ஓவியச் செந்நூல் உரை நூல் கிடக்கையும்
கற்று” (ஊரலர் உற்ற காதை 18-32)

என்ற இந்தப் பாடல் பகுதியில் ஆடல் மகளிர் கற்றிருந்த கலைகள் அனைத்தும் எடுத்துக் காட்டப் பெற்றுள்ளன. ஆனால் உளத்தை உடலை ஒருவருக்கு மட்டும் அளிக்கும் கற்பு நெறி கூறப்படாதது விடப்பட்டிருப்பது குறிக்கத்தக்கது. இவற்றில் படுக்கை அமைத்தல் மறைந்து உறைகின்ற கணக்கு ஆகியன கணிகையரின் உள்ளத்தில் இருந்த கரவை உணர்த்துவன. மேலும் மலர் தொடுத்தல் என்பது ஒரு கலையாக இது அமைய மணிமேகலை மலர் தொடுக்கும் நிலையில் இங்கு அறிமுகம் செய்திருப்பது அவளைக் கணிகையர் குலத்தவள் என்பதைச் சொல்லாமல் சொல்லும் முயற்சியாகும்.

இவ்வளவு கலைகள் கற்றிருந்த மாதவி துறவு பூண்டது ஊர் மக்களால் ஏளனப்படுத்தப்படுவதாக சித்ராபதி கருதி அக்கருத்தை வயந்தமாலை மூலம் மாதவி அறியத் தருகிறாள். இதுகேட்ட மாதவி

“காதலன் உள்ள கடுந்துயர் கேட்டு
போதல் செய்யா உயிரொடு நின்றே
பொன்கொடி மூதூர்ப் பொருளுரை இழந்து
நல் தொடி நங்காய் நாணுந் துறந்தேன்”

என்று தூய நெஞ்சத்தோடு கணிகையான மாதவி வாழ்ந்ததாகச் சீத்தலைச் சாத்தனார் குறிப்பிடுகின்றார்.



மேலும் மூவகைக் கற்புடை மகளிரைப் பற்றி மாதவி குறிப்பிடுகிறாள். கணவன் இறந்த செய்தி கேட்டதும் இறக்கும் மகளிர் தலைக் கற்பினர். கணவன் இறந்ததும் அவனை எரியூட்டும்போது தானும் அவ்வெரியில் விழுதல் இடைக்கற்பு. கணவன் இறந்தால் கைம்மை நோன்பு நோற்பது கடைக்கற்பு. இவற்றினின்று மேம்பட்டக் கற்புத்திறம் உடையவள் கண்ணகி. கணவனின் மீது சுமத்தப்பட்ட தீங்கைப் போக்க நீதியைக் காத்தவள் அவள். அத்தகையவளின் மகளாக மணிமேகலை வளர்வதால் அவள் கணிகை என்னும் தீத்தொழில் பட மாட்டாள் என்று உறுதியுடன் உரைக்கின்றாள் மாதவி.

இதனைக் கேட்ட வயந்தமாலை மாதவியின் உறுதியையும் மணிமேகலையின் துறவையும் சித்ராபதியிடம் சொல்லி நின்றாள்.

இவ்வளவையும் கேட்டு நின்ற மணிமேகலை தன் தாய்க்கு நேர்ந்த இன்னல்களால் மன வாட்டமுற்றாள். தான் கட்டிக் கொண்டிருந்த பூமாலையில் கண்ணீர் பட்ட காரணத்தால் புதிய பூக்கள் பறிக்க எண்ணித் தோழி சுதமதியுடன் செல்கிறாள்.

மணிமேகலையின் அழகைக் கண்டு புகார் நகர மக்கள் அதிசயிக்கின்றனர். இவளின் ஆடலைக் காண இழந்து விட்டோமே என்று மக்கள் வருந்திப் பேசினர். இந்நிலையில் மணிமேகலை உவவனத்திற்கும் மலர்கள் பறிக்கச் செல்லுகிறாள். அந்நேரத்தில் அவளைத் தெருவில் கண்ட எட்டிக்குமரன் அவள் அழகில் மயங்குகிறான். இவனைக் கண்ட உதயகுமரன் இவனின் மயக்கத்திற்கு காரணமாகிய தான் முன் கேட்டறிந்த மணிமேகலையைக் காணும் ஆவலுடன் உவவனம் செல்கின்றான். மணிமேகலை தன்னுடமையாக ஆக்கவேண்டும் என்பது அவன் எண்ணம். கணிகையரை யாரும் கைக்கொள்ளலாம் என்ற சூழல் மணிமேகலை எழுந்த காலத்தில் நிலவியிருந்ததை உணர முடிகின்றது.

உதயகுமாரன் கண்ணில் படாமல் மணிமேகலை மணிமேகலா தெய்வத்தால் காக்கப்படுகிறாள். முற்பிறப்பில் உதயகுமாரனும் மணிமேகலையும் கணவன் மனைவி என்ற பழம்பிறப்புச் சூழலை அத்தெய்வத்தின் வாயிலாக மணிமேகலை உணர்கிறாள். முற்பிறவியில் மணிமேகலை ஒருவனுக்கு ஒருத்தி என்ற முறைப்பட்ட உயர்ந்த குலத்தில் அதாவது அரச குலத்தில் பிறந்தவளாகக் காட்டப் பெற்றுள்ளாள். இப்பிறவியில் தனக்கொரு கணவன் இல்லாத கணிகையர் குலத்தில் பிறக்கிறாள். இருப்பினும் அவளை அடைய முன்பிறப்பில் இராகுலன் இப்பிறப்பில் உதயகுமாரன் முனைந்ததும் அவனின் மனம் அவளைப் பயன்படுத்திக் கொள்ளவே விரும்பியது அன்றி அவளை மணந்து கொள்ள அவன் முயலவில்லை என்பதை அறிந்தால் மணிமேகலையைப் பற்றிய சில புதிர்களுக்கு விடை கிடைக்கும். மணிமேகலை மணிபல்லவத்தீவில் இருந்து மீண்டதும்

“கற்புத் தான் இலள் நல் தவஉணர்வு இலள்
வருணக் காப்பு இலள் பொருள் விளையாட்டி என்று
இகழ்ந்தனன் ஆகி நயந்தோன் என்னாது
புதுவோன் பின்றைப் போனது என்நெஞ்சம்
இதுவோ அன்னாய் காமத்து இயற்கை” (மணிமேகலா தெய்வம் வந்து தோன்றியகாதை 86-90)

என்று உரைக்கிறாள்.

இதன் வழிக் கணிகையரின் சமுதாய மதிப்பை அறிந்து கொள்ள முடிகின்றது.மணிமேகலையின் உள்ளத்தில் எழுந்த காதலையும் அறிய முடிகின்றது.

இந்நிலையில் சித்ராபதி கணிகையர் குல இயல்பு காரணமாக அறத்தின் வழிச் செல்ல இருக்கும் மணிமேகலையைக் கணிகையர் குலத்திற்கு உரியவளாக மாற்ற முனையும் காட்சியும் மணிமேகலைக்குள் இடம் பெற்றுள்ளது. அப்போதுதான் கணிகையர் வாழ்க்கை முறையைப் பற்றி முழுதாக அறிந்து கொள்ள முடிகின்றது.

“கைத்தூண் வாழ்க்கை கடவியம்அன்றே?
பாண்மகன் பட்டுழிப் படூஉம் பான்மை இல்
யாழ் இனம் போலும் இயல்பினம் அன்றியம்
நறுந்தாது உண்டு நயன்இல் காலை
வறும் பூத்துறக்கும் வண்டு போல்குவம்
வினை ஒழிகாலைத் திருவின்செல்வி
அனையேம்ஆகி ஆடவர்த்துறப்போம்
தாபதக் கோலம்தாங்கினோம்என்பது
யாவரும் நகூஉம் இயல்பினது அன்றே?” (உதய குமரன் அம்பலம் புக்ககாதை 16-24)

இந்நிலையில் மணிமேகலையைத் தேரில் ஏற்றி உதயகுமரனிடம் சேர்க்கவில்லை என்றால் தன் தலைமீது செங்கற்களைச் சுமந்து அரங்கனைச் சுற்றி வந்து கணிகை மரபில் இழிந்த மகளிர் ஆவேன். அரங்கக் கூத்தாடும் இல்லத்தினர் வீடுகளில் இனிப் புகாதவள் ஆவேன் என்று சித்ராபதி சபதம் ஏற்கிறாள்.

இதற்காக அவனைச் சந்திக்கிறாள். அப்போது அவனிடம் கணிகையர் குலம் பற்றிய பல செய்திகளை எடுத்துரைக்கிறாள்.

“நாடவர் காண நல் அரங்கு ஏறி
ஆடலும் பாடலும் அழகும் காட்டி
கருப்பு நாண் கருப்ப வில் அருப்புக் கணை தூவச்
செருக்கயல் நெடுங்கண் சுருக்கு வலைப்படுத்து
கண்டோர் நெஞ்சம் கொண்டு அகம் புக்குப்
பண் தேர் மொழியின் பயன் பலவாங்கி
வண்டின் துறக்கும் கொண்டி மகளிரைப்
பான்மை” (உதயகுமரன் அம்பலம் புக்ககாதை 103- 110)

என்ற அடிகள் கணிகையர் குல இயல்பைக் காட்டுவதாக உள்ளது.

கண்டோர் நெஞ்சத்தை ஈர்க்கும் பாங்கினர் கணிகையர் என்பது தெளிவு. இவ்வுரைகளைக் கேட்ட உதயகுமரன் மணிமேகலையை நோக்கிச் சென்று அவளைக் கைக்கொள்ள எண்ணுகிறான். அவளிடம் பேசுகிறான்.

மணிமேகலை உதயகுமாரன் தன் உடல் அழகை நேசிக்கிறான் என்பதை அறிந்து கொண்டு அவனுக்குத் தன்னிலையையும் உடல் நிலையாமையையும் எடுத்துரைக்கிறாள்.

“பிறத்தலும் மூத்தலும் பிணிப்பட்டு இரங்கலும்
இறத்தலும் உடையது இடும்பைக் கொள்கலம்
மக்கள் யாக்கை இது என உணர்ந்து
மிக்க நல் அறம் விரும்புதல் புரிந்தேன்” ( உதயகுமரன் அம்பலம் புக்ககாதை 136-139)

என்று உடல் மீது கொண்ட ஆசையைத் தானும் ஒழித்துவிட்டதாகவும் அவனையும் ஒழிக்கச் சொல்வதாகவும் மணிமேகலையின் இப்பேச்சுரை அமைகின்றது.

மணிமேகலையின் மீது மிகுந்த காம ஈடுபாடு கொண்ட உதயகுமாரன் காஞ்சனனால் கொல்லப்படுகிறான். அவனின் இறப்பிற்கு மணிமேகலை வருந்துகிறாள். முற்பிறவியில் இராகுலனாக இருந்த உதயகுமரன் திட்டிவிடம் என்னும் பாம்பு தீண்டி இறந்தான். தற்போது வாளால் அழிந்தான். அன்றும் இன்றும் இவன் இறப்பு மணிமேகலைக்குத் துன்பம் தருவதாக அமைந்தது. இதிலிருந்து நல்ல சொற்களால் மீளுகிறாள் மணிமேகலை.

கணிகையர் குலத்தில் பிறந்த மணிமேகலை அக்குல இயல்பான ஆடல் கலையைத் துறந்து உயர் குலத்தோர் ஆற்றும் அறம் செய்தல் சமய ஆராய்ச்சி செய்தல் ஆகியனவற்றைச் செய்ய காயசண்டிகை வடிவத்தையும் ஆண்வடிவத்தையும் ஏற்க வேண்டியவளாக சீத்தலைச் சாத்தனார் படைத்திருப்பது கணிகையர் குலத்தவர் ஆற்றும் பணிகள் அவை இல்லை என்பதை அறிவிக்கின்றன.

இதன் காரணமாக கணிகையர் குலம் முற்பிறவியிலும் இப்பிறவியிலும் நல்லன பல செய்தாலும் அவர்கள் குலத்தால் தாழ்வுற்றோராகவே சமுதாயத்தில் மதிக்கப் பெறுகின்றனர் என்றும் அவர்களுள் சிலர் மாதவி,மணிமேகலை போன்றோர் உலக அறம் செய்ய முன்வந்துள்ளனர் என்றும் மற்றோர் தன்னிலையிலேயே அடங்கினர் என்பதும் தெரிய வருகின்றது.


முடிவுகள்

மாதவி ஆடல் மகள் ஆனாலும் அவள் கோவலன் என்ற ஒருவனுக்கே உரிமையுடையவளாக விளங்கினாள். அவனின் வழியாக குழந்தைப் பேறும் பெற்று அக்குழந்தையைக் கண்ணகியின் குழந்தை என்பதாக வளர்த்தாள்.

கணிகையர் குலத்தில் பிறந்த மாதவி தன் உடலையும் உள்ளத்தையும் கோவலன் ஒருவனுக்கே அளித்து அவன் தன்னை விட்டுப் பிரிந்த பின்பும் அவனையே எண்ணி அவனைச் சேர இரு கடிதங்கள் எழுதியிருப்பதும் அவளின் தூய உள்ளத்திற்குச் சான்றளிப்பதாக உள்ளது.

மணிமேகலை துறவு மேற்கொண்டாலும் அவளின் மனம் உதயகுமாரனைப் பற்றுகிறது. உதயகுமாரன் மணிமேகலையைக் கணிகை என்ற நிலையில் அடைய எண்ணினானே தவிர அவளைக் குலமகளாக ஏற்பதற்கான முயற்சியில் இறங்கவில்லை. முற்பிறவியில் கணவன் மனைவியாக இருந்தாலும் மணிமேகலையும் உதயகுமாரனும் இப்பிறவியில் கணவன் மனைவியாக ஆக முடியாததற்கு இருவரின் குல ஏற்றத்தாழ்வே காரணம்.

கணிகையர்கள் உடல் சார்ந்தவர்கள் என்பதைத் தாண்டி இக்குலத்திலும் உள்ளம் சார்ந்தவர்கள் கற்பு சார்ந்தவர்கள் இருந்தார்கள் என்பதன் அடையாளங்கள் மாதவியும் மணிமேகலையும். சித்ராபதி என்ற பாத்திரம் மாதவி மணிமேகலை ஆகிய பாத்திரங்களுக்கும் மூத்த முன்னோடிப் பாத்திரம் என்றாலும் அப்பாத்திரம் கணிகையர் குல வழக்கத்தில் இருந்து மீள எண்ணவில்லை. அதன் முதுமை கருதியாவது அப்பாத்திரம் சற்று மேம்படும் என்ற எண்ணத்தைப் படிப்பவர் மனதில் ஏற்படுத்தினாலும் மூத்த கிழவியாக கணிகையர் குலத்தில் ஒன்றி விட்டவளாக அவள் படைக்கப் பெற்றுள்ளாள்.

*****

கருத்துகள் இல்லை: