ஞாயிறு, செப்டம்பர் 19, 2010

பாரியின் மகள் ஒருத்தியே


சங்க இலக்கியத்தொகுப்பில் அமைந்துள்ள பாடல்கள் தனி ஒருவரால் பாடப்பட்டவையாகும். இருவர் இணைந்து பாடியது, மூவர் இணைந்து பாடியது போன்ற பலர் இணைந்து பாடிய பாடல்கள் அதிகமாக இல்லை என்றே கருதலாம். இருவர் இணைந்து பாடியதாக ஒரு பாடல் குறிப்பிடப்படுகிறது. பாரி மகளிர் பாடிய புறநானூற்றின் 112 ஆம் பாடல் இவ்வகையில் அமைந்ததாகும். இருப்பினும் இந்தப்பாடல் இருவரால் பாடப் பெற்றதா என்ற கேள்வி சிந்தனைக்கு உரியதே ஆகும்.


பாரி குறித்தும், பாரி மகளிர் குறித்தும் அறிந்து கொள்ள புறநானூற்றில் மட்டும் இருபத்தேழுக்கு மேற்பட்ட பாடல்கள் கிடைக்கின்றன. கபிலர், ஒளவையார், பரணர், மறோகத்து நப்பசலையார் போன்ற பல புலவர்கள் பாரி குறித்தும், பாரி மகளிர் குறித்தும் பாடல்களைப் பாடியுள்ளனர். இவற்றில் இருந்துக் கிடைக்கப்பெறும் பாரி மற்றும் பாரி மகளிர் பற்றிய செய்திகள் பல இலக்கியங்களின் பாடுபொருளுக்கு ஆளாகியுள்ளன.


பழமொழி, புறப்பொருள் வெண்;பாமாலை, சுந்தர மூர்த்தி தேவாரம், தஞ்சைவாணன் கோவை, திருப்புகழ், வில்லிபாரதம், அண்ணாமலையார் சதகம், தமிழ் நாவலர் சரிதை, நந்திக்கலம்பகம் போன்ற பல பனுவல்களில் பாரி, பாரி மகளிர் பற்றிய கருத்துக்கள் இடம் பெற்றுள்ளன. மேலும் தொல்காப்பியச் செய்யுளியல் பேராசிரியர் உரையிலும், யாப்பெருங்கல விருத்தி, யாப்பெருங்கலக்காரிகை போன்றவற்றின் மேற்கோள் பாடல்களிலும், கல்வெட்டுச் செய்திகளிலும் பாரி, பாரி மகளிர் பற்றிய செய்திகள் இடம் பெற்றுள்ளன. ( ரா. ராகவய்யங்கார், பாரிகாதை, பக் 485-487) ரா. ராகவய்யங்காரின் பாரிகாதை மேற்காட்டிய செய்திகளின் அடிப்படையில் புனையப்பெற்ற காப்பியம் ஒன்றும் உருவாகியுள்ளது. (1937) இந்த அளவிற்கு ஆழமும் அழுத்தமும் உடையதாக பாரி என்ற அடிக்கருத்து தமிழ் இலக்கிய உலகில் எடுத்தாளப் பெற்றுள்ளது.


பாரி வள்ளல் பறம்பு மலையை மையமாகக் கொண்டு ஆண்ட வள்ளல் ஆவார். முல்லைக் கொடி பற்றிப்படரத் தன் தேரையே கொழு கொம்பாக ஆக்கித் தந்த வள்ளல் இவர் ஆவார். இவருக்கும் தமிழகப் பெரு வேந்தர்களான மூவேந்தர்களுக்கும் பகை மூண்டிட இதன் காரணமாக போரில் பாரிவள்ளல் உயிர் நீத்தார். பாரியின் இறப்பிற்கு வஞ்சனையும் காரணம் என்று கூறுவர். பாரி இறந்தபின் அவரின் மக்கள் இருவர் அங்கவை, சங்கவை என்போர் காப்போர் இன்றி வருந்தியமையால் பாரியின் நண்பரான கபிலர் என்னும் புலவர் இவர்களைக் காத்துவந்தார். பின்னாளில் இவர்களுக்கு மணம் முடிக்கத் தன்னால் ஆன முயற்சிகளை மேற்கொண்டார். குறுநில மன்னர்களான விச்சிக்கோன், இருங்கோவேள் போன்றாரிடம் சென்று இம்மக்களைத் திருமணம் செய்து கொள்ளச் சொல்லி வேண்டுகோள் விடுத்தபோது இம்மன்னர்கள் மூவேந்தரின் பகை ஏற்படும் என்பது கருதி மறுத்துவிட்டனர். பாரி மகளிரின் ஏழ்மை நிலை கருதி மணக்க மறுத்தனர் என்ற கருத்தும் உண்டு. பின்பு கபிலர் இம்மகளிரை அந்தணர்கள்பால் இருத்திவிட்டுப் பொருள் தேடச் சென்று சேரமன்னனிடம் பொருளும், வளம் மிக்க ஊர்களும் பெற்று வந்து இப்பெண்களை கடையெழு வள்ளல்களில் ஒருவரான திருக்கோவலூர் மன்னன் காரியின் மகன்கள் இருவருக்கும் தந்து நின்றதாகச் சங்க இலக்கியப் பாடல்கள் வழி அறியமுடிகின்றது.


சங்கப்பாடல்களுக்குப் பின் தோன்றிய தனிப்பாடல்கள் வாயிலாக பாரி பற்றியும் பாரி மகளிர் பற்றியும் பல செய்திகள் கிடைக்கின்றன. குறிப்பாக ஓளவையார் இம்மகளிர் பற்றிப் பல கருத்துக்களைப் பதிவு செய்துள்ளார். இம்மகளிர் வறுமையுற்றபோதும் நீலச் சிற்றாடையை ஒளவைக்கு வழங்கிய காரணத்தால் ஒளவை இவர்களிடம் மிக்க அன்பு ப+ண்டு இவர்களின் திருமணத்திற்கு உதவியதாக வரலாறு நீள்கிறது. இதன் தொடர்வாக மூவேந்தரையும் அழைக்கத் திருமண ஓலை எழுத விநாயகர் வந்ததாகவும், வந்தோர்க்கு நெய், பால் முதலியன தடையின்றிக் கிடைப்பதற்காக பெண்ணை ஆற்றில் பால், நெய் ஆறாக ஓடச்செய்ததாகவும், திருமணத்திற்கு மூவேந்தர்களும் வந்தபோது பந்தலி;ல் கிடந்த பனந்துண்டத்தை வளரச் செய்ததாகவும் பல செய்திகள் கிடைக்கின்றன. இவ்வகையில் பாரிமகளிர் மணம் பெற்ற வரலாறு நிறைவுபெறுகிறது.


இவ்வரலாற்றின் தொடக்கமாக அமைவதும், பாரி மகளிரின் திறம் உரைப்பதாக அமைவதும் அவர்கள் பாடிய புறநானூற்றுப் பாடல் ஆகும். இப்பாடலைப் பாடியவர்கள் இருவர் என்பதாக அனைத்து உரையாசிரியர்களும் பாரிமகளிர் என்று குறிப்பிட்டுள்ளனர். பாரிமகளிர் இருவரா என்பது ஐயத்திற்கு உரியதாகும்.


இருவர் என்பதனைக் காட்டுவதாக கபிலர் பாடல்கள் அமைகின்றன.


இவர் யார் என்குவையாயின் இவரே

ஊருடன் இரவலர்க்கு அருளித் தேருடன்

முல்லைக்கு ஈந்த செல்லா நல்இசை

படுமணி யானை பறம்பின் கோமான்

நெடுமாப் பாரிமகளிர் (புறநானூறு 201)

என்று கபிலர் இருங்கோவேளிடம் அறிமுகம் செய்கின்றார். இப்பாடலில் உள்ள மயக்கம் இவர் என்பது ஒருமையா, பன்மையா என்பதுதான். மேலும் இப்பாடலில் வந்துள்ள பாரிமகளிர் என்பது பன்மையால் வந்தது அல்ல என்று கொண்டால் ஒருவரா, இருவரா என்ற ஐயம் மேலும் வலுப்பெறும்.



விச்சிக் கோனிடத்தில் அறிமுகம் செய்கையிலும் கபிலர்

. . .நெடுந்தேர் கொள்க எனக் கொடுத்த

பரந்து ஓங்கு சிறப்பின் பாரிமகளிர் (புறநானூறு 200)


என்ற பாடலிலும் மகளிர் என்பது காட்டப் பெற்றுள்ளது. இது தவிர மற்ற இடங்களில் எல்லாம் பாரிமகளிர் என்ற பன்மை இடம் பெறவில்லை.


காரிக்கு இருமகன்கள் இருப்பதாகக் கொண்டாலும், அதில் ஒருவன் பெயர் மட்டுமே அறியத்தக்கதாக உள்ளது. திருக்கண்ணன் என்பது அவன் பெயராகும். மேலும் வறுமை காரணமாக ஒரு இரவலன் வந்தபோது பாரியின் மகள் ஒருத்தி அவனுக்கு அரிசி இல்லாத நிலையில் பொன்னை உலையில் இட்டுப் படைத்தாள் என்ற ஒரு தனிப்பாடலும் உள்ளது. இவற்றைப் பார்க்கையில் பாரி மகளிர் ஒருவரா, இருவரா என்ற கேள்வி மேலும் வலுப்பெறுகிறது. இது ஆராயத்தக்கது.


பாடலை எழுதியவரின் பெயரை ஏன் பாரி மகளிர் என்று குறிப்பிடவேண்டும். பெண்ணிய ஆய்வாளர்கள் ஒவ்வொரு பெண்ணையும் பார்த்து ஒரு கேள்வியை முன்வைக்கின்றனர். அதாவது ~~ நீ யார் || என்பதே அக்கேள்வியாகும். இதற்குப் பதிலாக அனைத்துப் பெண்களும் சொல்வது மணமாகத பெண்ணாக இருந்தால் ~~ நான் இன்னாரின் மகள்|| என்பதும், மணமான பெண்ணாக இருந்தால் ~~ நான் இன்னாரின் மனைவி|| என்றும் பதில் கூறுவர். இருப்பினும் இது சரியான பதில் இல்லை. கேட்கப் பெற்ற கேள்வி வேறு. கிடைத்த பதில் வேறு. நீ யாருடைய பெண் என்றோ, நீ யாருடைய மனைவி என்றோ கேள்வி எழுப்பப்படவில்லை. ஆனால் இக்கேள்விகளுக்கான பதில்தான் அளிக்கப் பெற்றுள்ளது. சரி மீண்டும் இந்தக்கேள்வியை எழுப்பினாள் இதற்கு என்ன பதில் சொல்லமுடியும். பதி;ல் வெறுமைதான். ஆண்கள் போல கண்களும் காதுகளும், அறிவும் எல்லாமும் படைத்துள்ள பெண்களால் இந்தக் கேள்விக்கு உரிய பதிலை அளிக்க முடியாத சூழல் உள்ளது. ஆணிடம் இதே கேள்வியைக் கேட்டால் நான் ஒரு படைப்பாளர், நான் ஒரு தொழிலதிபர், நான் ஓர் ஆசிரியர், நான் ஓர் அரசியல்வாதி என்று அடையாளப்படுத்திக் கொள்ளமுடிகின்றது. ஆனால் ஆண் அளவிற்கு வளர்ந்துவிட்ட நிலையிலும் பெண் என்பவள் ஆண் சார்புபடவே அறிமுகப் படுத்தப் படுகிறாள் என்பதை எண்ணும்போது அவளின் காட்சி, கேள்வி, அறிவு அனைத்தும் பயனற்றதாகி நிற்கின்றன என்பதே உண்மை. இந்த வெறுமையைப் போக்க பெண்களும் முன்னேற வேண்டும் என்று பெண்ணியவாதிகள் கருதுகின்றனர். ( இந்தியாவில் நான் யார் என்ற கேள்வி அனைத்து உயிர்களுக்குமான கேள்வியாகி அந்தக் கேள்வியின் பதில் அடையாளமில்லாத ஒன்றாகக் கொள்ளப் பெற்றிருப்பதும் தத்துவநிலைப்பட்டதாக உள்ளது. இதைத்தாண்டி ஆணிற்கு உள்ள அடையாளம் கூட பெண்ணிற்கு இல்லை என்பதை ஒத்துக் கொள்ள வேண்டும்)



புறாநானூற்றின் 112 ஆம் பாடலைப் பாடியவர் என்ற குறிப்பிற்குப் பாரி மகளிர் எனப் பதிவு செய்யப் பெற்றிருக்கிறது. நீ யார் என்ற கேள்வியின் வெறுமைப் பதிலை இந்த இடத்தில் உணர முடிகின்றது. இயற்பெயர் உள்ள புலவர்களுக்கு இயற்பெயரை வைத்துத் தொகுத்தப் புறாநானூற்றுத் தொகுப்பில் இந்தப் பாடலைத் தொகுக்கும்போது மட்டும் ஏன் இயற்பெயர் தரப்பெறவில்லை. இயற்பெயர் தந்திருக்கப்படின் பாடியவர் ஒருவரா இருவரா என்று அறியப் பெற்றிருக்க முடியும். மேலும் முன்னர் சுட்டியதுபோல பெண்ணை இன்னாரின் மகள் என ஏன் அறிவிக்க வேண்டும். அவளுக்கு என்று ஏதும் அடையாளமில்லையா என்ற கேள்வியின் ஆழம் அதிகமானதாகும்.


இத்தனைச் சிந்தனைகளுக்கும் களமாக உள்ள பாரிமகளிர் பாடிய பாடல் பின்வருமாறு.


அற்றைத் திங்கள் அவ்வெண் ணிலவின்

எந்தையும் உடையேம் எம்குன்றும் பிறர் கொளார்

இற்றைத் திங்கள் இவ்வெண் நிலவின்

வென்றுஎறி முரசின் வேந்தர்எம்

குன்றும் கொண்டார்: யாம் எந்தையும் இலமே (புறநானூறு 112)


பாடியோர் : பாரிமகளிர்.

திணை : பொதுவியல்

துறை : கையறுநிலை

இப்பாடலில் இடம் பெற்றுள்ள யாம், எந்தை, எம், ஏம் ஆகிய சொற்கள் பன்மை நிலைப்பட்டனவாகத் தோன்றுகின்றன.


பெண்ணெழுத்துத் திறனாய்வின்படி பெண்எழுத்தின் தனித்தன்மையாக பெண்ணியலாளர்கள் கருதுவது பெண்கள் எழுதுகையில் பெரும்பாலும் பன்மை நிலைப்பட்டே எழுதுவர் என்பதாகும். ரோஜர் ஷைஸ் என்பவர் பெண்களின் எழுத்தில் அதிகஅளவிலான மறுப்புத் தன்மை, மறுபெயர் சார்ந்த பொருத்தம், பன்மை, படர்க்கை இடத்தில் பயன்படும் ஒருமைக்கான முடிவுப் பொருத்தத்தை பொருத்திக்கொள்ளல், உடமைத்தன்மை ஆகியனவற்றைக் கொண்டிருக்கும் எனக் கண்டறிந்துள்ளார். இந்தச் செய்திக்கு முற்றிலும் பொருந்துவதாக இப்பாடல் அமைந்துள்ளது.


மேலும் பெண்கள் அதிக அளவில் காப்பு மொழிகளைப் பயன்படுத்துவர் என்பதும் பெண்எழுத்துத் தன்மையாகக் கொள்ளப்படுகின்றன.

எந்தை - என்பதை என் தந்தை என்றும் பகுக்கலாம். எம் தந்தை என்றும் பகுக்க லாம். இந்நிலையில் எம் தந்தை (ஆதன் தந்தை -ஆந்தை, ப+தன் தந்தை - ப+ந்தை தொல்காப்பியம் - மெய்யீற்றுப் புணரியல்) என்று பகுத்தால் அது பன்மை வயப்பட்ட பெண் எழுத்து நிலைக்குச் சான்றாகும். அவ்வாறு கொண்டால் இப்பாடலை எழுதியர் ஒருவர் என்று முடிய இயலும். (எம் தந்தை என்று உரையாசிரியர்கள் பிரித்துக் கொண்டாலும் எம் என்பதனைப் பன்மை சார்ந்ததாகக் கருதி பாரி மகளிர் இருவர் என மொழிந்துள்ளனர்) பின் வந்துள்ள யாம் என்பதும் இவ்வகைப் பட்டதே ஆகும். இங்கும் பெண் எழுத்தின் இயல்பின்படி பெண் பன்மை சார்ந்து எழுதப் பெற்ற பண்பு இதுவாகும். . ஆனால் இதனைப் பன்மையாகக் கருதி அங்கவை சங்கவை என்று கற்பனைப் பாத்திரங்களைத் தமிழ் உலகம் கற்பித்துள்ளது. அங்கவை என்பது ஒரு பெண்ணாக இருக்க அந்தப்பெண்ணின் சாயலில் இன்னொரு பெண்ணை உருவாக்கிக் கொள்ள சங்கவை பிறந்திருக்க வேண்டும். லவன் குசன் பிறப்பு போல இது அமைந்திருக்க வாய்ப்புண்டு.


மேலும் இலமே என்று படைத்திருப்பதால் மறுப்புத் தன்மை கொண்டபதிவின் சான்றும் இப்பாடலில் கிடைக்கின்றது. . பாரி மகள் ஒருத்தியாக இருந்து அவள் பன்மை சார்புபட இந்தப்பாடலை பாடியிருந்திக்க முடியும். மேலும் சங்க இலக்கியப் பாடல்கள் அனைத்தும் ஒருவர் பாடிய பாடலாக இருக்கின்ற சூழலில் இந்தப் பாடலும் ஒருவர் பாடியதாக இருந்திருக்க வேண்டும் என்று முடிவதில் தவறில்லை. பின்னாளில் மலையமான் மகன் ஒருவனுக்கு மணம் முடித்ததை உறுதி செய்யும்போது இதுவும் உறுதிபெற்றுவிடுகிறது.


மேலும் குன்றும் கொண்டார் எந்தையும் இலமே என்ற அடியில் வேந்தர்களைப் பழிக்காமலும் குன்று போனதைப் பற்றிய வருத்தமின்மையும் பதிவாகியுள்ளது. நாடு இருக்கும் வரைக்கும் மகிழ்ச்சி, இல்லாதநிலையில் அதைப்பற்றி வருந்துவதை விட தந்தையை இழந்தமையே பெரிய வருத்தமே அவளுக்கு இருந்துள்ளது. அதுவே பாடலில் பதிவாக்கப் பெற்றுள்ளது.


இந்நிலையில் மிகச் சிறந்த பெண் எழுத்துக்கான காட்டாக இப்பாடல் அமைந்துள்ளது என்பது கருதத்தக்கது. இதில் இயல்பான ஒரு பெண்ணின் வருத்தமும், இழப்பும் பதிவு செய்யப் பெற்றுள்ளன.

கருத்துகள் இல்லை: