திங்கள், ஏப்ரல் 22, 2013

சுந்தரர் கண்ட பிழையெலாம் தவிர்த்த இறைவன்


மக்கள் இறைவனை மலர்களாலும், பாடல்களாலும் அர்ச்சனை செய்து மகிழ்கின்றனர். மலர்கள் அன்றைக்கே மலர்ந்து அன்றைக்கே வாடிவிடும் தன்மையை உடையன. மலர்களால் செய்யப்படும் அர்ச்சனை ஒருநாள் மட்டுமே நிலைக்கிறது. ஆனால் இறைவனை வழிபடுவதற்காகப் பாடப் பெற்ற பாடல்களின் சொல் மலர்கள்  என்றும் வாடாதவை. அவை மனித மனத்தையும், இறைமணத்தையும் இணைக்கும் திறமுடையன. சொல்மாலை புனைந்தேத்துவது ப+மாலையைப் புனைந்தேத்துவதைவிடச் சிறந்ததாகும்.
சைவ சமயத்தில் இறைவனைப் போற்றும் பாடல்கள் திருமுறைகள் ஆகும். இத்திருமுறைகள் தினம் தினம்; பாடி வரப்பெறுகின்ற அளவிற்கு மக்களிடத்தில் பெருமளவில் செல்வாக்கு பெற்றுள்ளன. திருமுறைகள் சொல்வளமும், பொருள்நலமும், நம்பிக்கை நயமும் கொண்டனவாகும். இதன் காரணமாகத் திருமுறைகள் மக்களையும் மகேசனையும் இணைக்கும் பாலங்கள் என்றால் அது மிகையில்லை.
பன்னிரு திருமுறைகளாகப் பகுக்கப் பெற்ற இத்திருமுறைகளில் ஏழாம் திருமுறை சுந்தரரால் பாடப்பெற்றதாகும். ஏழிசையாய், இசைப்பயனாய் இன்னமுதாய்ப் பாடிய தமிழ்த்திருமுறைள் சுந்தரரின் பாடல்களாகும். வாக்கிற்கு அருணகிரியார், கனிவிற்கு மாணிக்கவாசகர், தாக்கிற்குத் திருஞானசம்பந்தர், நோக்கிற்கு நக்கீரர், நயத்திற்குச் சுந்தரர், சொல்லுருதிக்குத் திருநாவுக்கரசர் என்ற வரிசை முறை தமிழகத்தில் வழங்கி வரும் வரிசைமுறையாகும்.. நயத்திற்குச் சுந்தரர் என்ற நிலையில் சுந்தரரின் பாடல்கள் நற்றமிழ் நயத்திற்கு உரியனவாக விளங்குகின்றன.
~~மந்திரம் ஒன்றறியேன், மனைவாழ்க்கை மகிழ்ந்து அடியேன்
சுந்தர வேடங்களினால் துரிசே செய்யும் தொண்டன்
என்று தன் இயல்பினை தன் பாடிய பாடலில் எடுத்துரைத்துக் கொள்ளுகின்றார் சுந்தரர். சுந்தர வேடம் என்பதற்கு எப்போதும் அழகான வேடம் கொண்டிருப்பவர் என்று பொருள். துரிசே செய்தல் என்றால் அழகான வேடம் கொண்டாலும் தவறுகளே செய்யக் கூடிய இயல்பினைப் பெற்றவன் என்று பொருள். தொண்டன் என்பது தொண்டுகளைச் செய்து இறைவனிடத்தில் மிக நெருக்கமாக இருந்தவர் என்று பொருள். இவ்வகையில தொண்டனாகவும் தவறுகள் செய்பவராகவும், மனைவாழ்வில் மகிழ்ந்தவராகவும், மந்திரம் ஏதும் அறியதாவராகவும் விளங்கிய சுந்தரர் தன் இனிய பாடல்களால் இறைவனுக்குக் கட்டளை இட்டவர். இவரின் கட்டளைகளை ஏற்று இறைவன் தூதும் போனார். தங்கம் கொண்டுவந்தார். முதலை உண்ட பாலகனை எழுப்பி நின்றார். ஊடல் தீர்த்தார். இத்தனைச் செயல்களுக்கும் காரணம் சுந்தரர் இறைவனிடத்தில் கொண்டிருந்த அளிவலாத அன்பும் , உரிமையுமே ஆகும்..
சுந்தரர் தான் தினம் காணும் இறைவனின் வடிவழகை எடுத்துரைக்கின்றார்.
~~பொன்னார் மேனியனே புலித் தோலை அரைக்;கசைத்து
மின்னார் செஞ்சடைமேல் மிளிர் கொன்றை அணிந்தவனே
மன்னே மாமணியே மழபாடியுள்; மாணிக்கமே
அன்னே உன்னையல்லால் இனியாரை நினைக்கேனே||
என்ற இப்பாடலில் சுந்தரர் கண்ட இறைவனின் வடிவழகை பக்தர்களுக்குக் காட்டுகின்றார். இறைவன் பொன் போன்ற மேனியை உடையவன். அவன் தன் இடையில் புலித் தோலை உடுத்தியிருப்பவன். அவனது தலையில் முடிக்கற்றை சடைபோன்று விரிந்து நிற்கும். அது மின்னும் பல பொருள்களைத் தனக்குள் அடக்கியது. கொன்றை மாலையையும் அது தாங்கிக் கொண்டு நிற்கும். மன்னவன் எம்  இறைவன். அவன் மாமணியாகவும் மழபாடி என்ற ஊரில் மாணிக்கமாகவும் நின்று கொண்டு இருக்கின்ற ஆண்டவனைத் தவிர வேறு யாரை நான் நினைக்கமுடியும் என்ற சுந்தரர் காட்டும வடிவழகில் இறையழகும் தமிழ் அழகும் கலந்து நிற்கும் காட்சியைக் கண்டு இன்புற முடிகின்றது.
இறைவனான சிவபெருமானுக்கும் சுந்தரருக்குமான முதல் சந்திப்பு சண்டையில்தான் தொடங்கியது. அந்தநாளில் நடைபெற்ற அந்த சண்டையை என்றைக்கும் மறவாமல் தன் நினைவுகளில் சுமந்த வண்ணம் பாடல் புனைகின்றார் சுந்தரர்.
தன்மையினால் அடியேனைத் தாம்     ஆட்கொண்ட நாள் சபை முன்
வன்மைகள் பேசிட வன்தொண்டன் என்பதோர் வாழ்வு தந்தார்
புன்மைகள் பேசவும் பொன்னைத் தந்து என்னைப் போகம் புணர்ந்த
நன்மையினார்க்கிடம் ஆவது நந்திருநாவலூரே
என்று திருநாவலூர் பற்றிப் பாடுகிறார் சுந்தரர். திருநாவலூர் சுந்தரரின் சொந்த ஊர் ஆகும். இவ்வ+ருக்கு வந்த சுந்தரர்  தன் வாழ்வு பற்றி மதிப்பீட்டைச் செய்து கொள்ளுகின்றார்.  தன்னுடைய பெருந்தன்மையினால் அடியவனான என்னை ஆட்கொண்ட பெருந்தகை சிவ பெருமான். பொதுமக்கள் கூடி நின்ற சபையில் நான் அப்பெருந்தகையுடன் வன்மைகள் பேசினேன். அப்படிப்பேசினாலும் வன்தொண்டன் என்று என்னை அழைத்து அவர் அருகில் அணைத்துக் கொண்டார். தொடர்ந்து நான் பல முறை வேண்டுகோள்கள் வைத்தாலும் அவற்றையும் ஏற்றுக் கொண்டுத் தான் வேண்டுவன எல்லாவற்றையும் எனக்களித்தார். நான் பொன் வேண்டியபோது பொன் தந்தார். பெண் வேண்டியபோது பெண் தந்தார். இப்பெருமான் அமர்ந்த நல்லிடம் என் சொந்த ஊரான திருநாவலூர் ஆகும். இங்கு தன் சொந்த ஊரைச் சுந்தரர் பாராட்டினாலும், சொந்த ஊரில் உள்ளவர்களுக்குத் தன் இறைஅனுவபத்தை வெளிப்படுத்தி நின்று தன்னை உறுதிப் படுத்திக்கொள்கிறார் சுந்தரர்.
மனிதப் பிறவி என்பது மகத்தான பிறவி என்றாலும் அப்பிறவிக்கு ஏதேனும் ஒரு கவலை எப்போதும் இருந்து கொண்டே இருக்கின்றது. ஒரு கவலை தீர்ந்தால் மறுகவலை. மறுகவலை தீர்ந்தால் மற்றுமொரு கவலை என்று கவலைப்படுவதே மனித வாழ்க்கையாகிவிடுகின்றது. இத்தகைய வாழ்வில் ஒரே ஒரு துணை ஆண்டவன்தான். அந்த ஆண்டவனின் துணையின் பெருமையைச் சுந்தரர் உணர்ந்து பாடுகின்றார்.
பெற்ற போழ்தும் பெறாத போழ்தும் பேணி உம் கழல் ஏத்துவார்க்கு
மற்றோர் பற்றிலர் என்று இரங்கி மதியுடையவர் செய்கை செய்வீர்
அற்றபோழ்தும் அலந்த போழ்தும் ஆபற்காலத்தடிகேள் உம்மை
ஒற்றிவைத்து இங்கு உண்ணலாமோ? ஓணகாந்தன் தளியுளீரே
என்ற இப்பாடல் மனித வாழ்க்கையின் இயல்பினையும் இறைவனின் துணையையும் ஒருங்கு கூட்டி உரைக்கின்றது.
அடியவர்கள் கடவுளிடத்தில் ஒன்றைப் பெற்றபோது அதற்காக மகிழ்வர். அதே நேரத்தில் தான் ஒன்றைக் கடவுளிடத்தில் கேட்டபோது கடவுள் தராதநிலையிலும் கவலை கொள்ளாது இறைவனைப் போற்றுவர். பெற்றவர்களுக்கும் பெறாதவர்களுக்கும் என்றும் துணையாக இருப்பவன் இறைவன். இறைவன் தன்னடியார்களுக்கு வேறொருவர் துணை செய்யமாட்டார் என்ற நிலை கருதி அனைவருக்கும் அவ்வப்போது உதவி வருகின்றான். இதற்குக் காரணம் அவன் மதியைத் தன் தலையில் வைத்திருப்பதுதான். மதி என்றால் இந்த இடத்தில் இருபொருள்பட கொள்ள வேண்டும். மதி என்பதற்கு முதல் பொருள் நிலவு என்பது. சிவபெருமான் தன் தலையில்; மதி என்ற பிறைநிலவினைச் சூடியுள்ளான். அப்பிறை நிலவு வேண்டியவர் வேண்டாதவர் பார்த்து ஒளி தருவதில்லை. அனைவருக்கும் ஒளி தருகின்றது. இரவில் அது ஒன்றே மக்களுக்குத் துணை. எனவே ஆண்டவனும் மதியைச் சூடிய காரணத்தால் அவ்வியல்பினைப் பெற்றவனாக விளங்குகின்றான்.
மதி என்றால் அறிவு என்று பொருள். மதியுடையவர் செய்கை செய்வீர் என்பதால் அழியாத அறிவுடைய எம்பிரான் சிவபெருமான் தனக்கு வேண்டியவர்கள், வேண்டாதவர்கள் பார்த்து அருள் செய்வதில்லை. அனைத்து உயிர்களுக்கு உதவும் பேரறிவினைப் பெற்றவன் அவன் என்பது மற்றொரு பொருளாகும்.
மக்கள் துணையற்றபோதும், அலைந்து திரிகின்றபோதும், ஆபத்தினால் வருத்தமுறும் போதும் என்ன செய்வார்கள். ஆண்டவனை முன்வைத்தே, அவனையே ஒப்பாக வைத்துத் தம் செயல்களைச் செய்வார்கள். இப்படி ஆண்டவனை ஒரு பொருளாக வைத்துத் தம் வாழ்வை நீட்டித்துக் கொள்ளும் மனிதப்போக்கு நல்லதுதானா? இருந்தாலும் எல்லாவற்றையும் ஏற்றுக் கொள்ளுகின்ற திருவோணகாந்தன் தளி என்ற இடத்தில் குடியிருக்கும் எம்பெருமானுக்கு இதுவெல்லாம் ஒரு விளையாட்டே ஆகும்.
திருவாரூர், திருவொற்றிய+ர் என்று தன் இருப்பிடத்தைத் தன் துணைகளுக்கு ஏற்ப மாற்றிக் கொண்டே இருந்த சுந்தரர் இம்மாறுதல்களால் பெற்ற இன்னல்கள் பற்பலவாகும். கண்கள் இழந்தார். துன்பம் மிகப் பட்டார். என்றாலும் இறைவன் இவருக்கு ஊன்றுகோல் தந்தான். கண்ணொளியை ஒவ்வொன்றாகத் தந்தான்.. எப்போதும் இறைவனையே தேடுகின்ற இயல்பினை உடையவர் சுந்தரர்.
தேடுவன் தேடுவன் செம்மலர்ப் பாதங்;கள் நாள்தோறும்
நாடுவன் நாடுவண் நாபிக்கு மேலேயோர் நால்விரல்
மாடுவன் மாடுவன் வன்கை பிடித்து மகிழ்ந்துளே
ஆடுவன் ஆடுவன் ஆமாத்தூர் எம் அடிகளே
திருவாமத்தூர் இறைவனை மனதில் நினைந்ததும் சுந்தரருக்கு மகிழ்ச்சி பெருக்கெடுக்கிறது. இதன் காரணமாக அவர் பாடல்களில் வரும் சொற்களுக்கும் மகிழ்ச்சி பெருக்கெடுத்து ஒன்றுக்கு இரண்டாய் வந்து விழுகின்றன. நாள்தோறும் இறைவனின் மலர்ப்பாதங்களைத் தேடுகிறார். நாபிக்கு மேல் நால்விரல் என்ற அளவின் இடம் இதயம் ஆகும். அதாவது நாபி என்றால் உந்திச்சுழி- தொப்புள் என்று பெயர். இந்தத் தொப்புள் பகுதிக்கு நாலுவிரற்கடை மேலாக இருப்பது இதயம்.இந்த இதயம் மனித உடலில் பாயும் இரத்தத்தைச் சுத்தம் செய்வது. மிக மென்மையானது. மேன்மையானது. இந்த இடப் பகுதியில் இறைவனை நாடி நாடி வைத்துக் கொள்கிறார் சுந்தரர். மாடுவேன் என்றால் பிணைத்துக் கொள்வேன் என்று பொருள். மாட்டுவேன் என்பதன் குறை இதுவாகும். இறைவனின் வன்கை பிடித்து மகிழ்ந்து அவனுடன் பிணைத்துக் கொள்வேன், பிணைத்துக் கொள்வேன். திருவாமாத்தூரில் எழுந்தருளியிருக்கும் இறைவனைக் கண்டு நான் ஆடுவேன் ஆடுவேன் என்று மகிழ்ந்து சொல் பெருக்கி ஆடுகிறார் சுந்தரர்.
சுந்தரர் திருவஞ்சைக்களத்தில் பாடி ஆடும் தோற்றம் கண்டு உலகத் தொண்டர்கள் மகிழ்கின்றார்கள்.
தலைக்குத் தலைமாலை அணிந்ததென்னே, சடைமேற் கங்கை வெள்ளம் தரித்ததென்னே
அலைக்கும்புலித்தோல்கொண்டுஅசைந்
ததென்னே அதன்மேற்கதநாகங்கச்சு ஆரத்ததென்nனு
மலைக்குநிகர் ஒப்பன வன்திரைகள் வலித்தெற்றி முழங்கி வலம்புரிகொண்டு
அலைக்கும கடல் அங்கரை மேல்மகோதை அணியார் பொழில் அஞ்சைக் களத்தப்பனே என்ற இப்பாடல் சுந்தரரின் ஆட்டத்தை சொல் ஆட்டத்துடன் எடுத்துரைக்கின்றது. என்னே என்னே என்று முடியும் இப்பாடல் ஓசையொழுங்கும் பெற்றது. இறைவனை விளிக்கும் வண்ணமுமாக அமைவது. இத்தகைய நிலையில் இறைவனை ஆடியும் பாடியும் கண்டவர் சுந்தரர்.
இவரது பாடல் உயிர்சக்தி மிக்கது என்பதற்குப் பல சான்றுகள் உண்டு. அவிநாசி என்ற இடத்தில் முதலை உண்ணப்பட்ட ஒரு பாலகனை மீட்டெடுத்தது இவர் பாடலாகும்.
உரைப்பார் உரைஉகுந்து உள் கவல்லார் தங்கள் உச்சியாய்
அலைக்கு ஆடு அரவா ஆதியும் அந்தமும் ஆயினாய்
புரைக்காடு சோலைப் புக்கொளிய+ர் அவிநாசியே
கரைக்கால் முதலையைப் பிள்ளை தரச் சொல்லு காலனையே
என்ற இப்பாடலில் இறைவனை முன்வைத்துக் காலனை உயிர்தரச் சொல்லுகின்றார் இதற்கு அடிபணிந்து ஆண்டவனும் காலனும் பிள்ளையைத் தருகின்றனர்.
சுந்தரரின் தமிழ்  இழந்த பிள்ளையின் உயிரைத் தரும் சக்தி மிக்கது. இறையடியார்களை இணைக்கும் பக்தி மிக்கது. இவரின் திருத்தொண்டத்தொகையால் அறுபத்து மூன்று நாயன்மார்கள் இனம் காணப் பெற்றனர். ஒற்றை வரியில் இவர் அடியவரை விளித்தாலும் அவ்வரிக்குள் அவ்வடியவரின் தொண்டு முழுவதும் இடம்பெற்றுவிடச் செய்யும் தன்மை இவரின் தமிழுக்கு உண்டு. இல்லையே என்னாத இயற்பகைக்கும் அடியேன், தாதை தாள் மழுவினால் எறிந்த அம்மையான் அடிச்சண்டிப் பெருமானுக்கு அடியேன் என்ற பாடலடிகளில் அடியவரின் பெயரும் அவர் தொண்டும் வெளிப்பட்டிருக்கும் தன்மை எண்ணி எண்ணி வியக்கத்தக்கது.
இறைவனிடத்தில் எது கேட்டாலும் கிடைக்கும் என்ற உறுதியைத் தன் பாடல்களைப் படிக்கும் அன்பர்களுக்கு ஏற்படுத்திச் சென்றுள்ளார் சுந்தரர்.

பொன்னும் மெய்ப்பொருளும் தருவானைப்
போகமும் திருவும் புணர்ப்பானை
பின்னை என்பிழையைப் பொறுப்பானைப்
பிழையெலாம் தவிரப் பணிப்பானை
இன்னதன்மையன் என்றறிய வொண்ணா
எம்மானை எளிவந்தபிரானை
அன்னம் வைகும் வயற்பழனத்தனி ஆரூரானை மறக்கலும் ஆமே
என்ற அவரின் பாடல் பிழை செய்தாலும் பொறுக்கும் எளிவந்த தன்மை பெற்றவன் இறைவன் என்று அறிமுகம் செய்கின்றது. பிழையற்ற வாழ்க்கை வாழ்பவர் யார். எல்லாரும் பிழைத்தே வாழ்கிறோம். இம்மை செய்பிழை, மறுமைப் பிழை,சென்றபிழை என எல்லாப்பிழைகளையும் தவிர்க்;கும் ஒரே புனிதன் இறைவன் என்ற எண்ணத்தை ஏற்படுத்தி மனித வாழ்வினை வளமாக்குவது சுந்தரரின் சுந்தரத்தமிழாகும்.

கருத்துகள் இல்லை: