வியாழன், ஜனவரி 24, 2013

“பொலி! பொலி!!”



தமிழர்களின் பண்பாட்டு அடையாளமாக விளங்குவது பொங்கல் விழா. ஆடியில் விதைத்த நெல்லின் விளைச்சலை தை மாதத்தில் குவிக்கும் விழா. ஆறுமாத காலமாக உழுது, வித்திட்டு, நாற்று நட்டு, களைபிடுங்கி, விளைச்சலைப் பெருக்கும் இந்த உழவர் திருநாளின் உச்ச கட்டம் அறுவடை நாள் ஆகும். இந்த அறுவடையில் கிடைத்த புது நெற்கதிர்களை அரிசியாக்கிப் பொங்கலாகப் படைக்கும் திருநாள்; தைப் பொங்கல் திருநாளாகும். புத்தரசி, புதுப்பானை, புதுவிளைச்சல் என்று வாழ்க்கையைப் புதுமைப்படுத்தும் இவ்விழா தமிழர்களின் தனித்த அடையாளமாக உலகமெங்கும் விளங்குகின்றது.
தமிழரின் அறுவடைத் திருநாள் பற்றி மிக விரிவாகக் காட்டும் இலக்கியம் முக்கூடற் பள்ளு ஆகும். இந்தச் சிற்றிலக்கியம் வேளாண் மக்களின் உழைப்பினையும், வாழ்வினையும், உழவுத் தொழில் நுட்பத்தையும் எடுத்துரைக்கும் மிகச் சிறந்த பதிவாகும். இதனை எழுதியவர் யார் எனத் தெரியாவிட்டாலும், அவரின் தமிழ் உள்ளம் தமிழ் மக்கள் அனைவரும் அறிய வேண்டிய ஒன்றாகும்.
தமிழகத்து உழவுத் தொழில் சார்ந்த மக்களின் வாழ்க்கை, பக்தி, சமுதாயம் முதலியவற்றை முன்வைத்து முக்கூடற் பள்ளு எழுதப்  பெற்றுள்ளது. தமிழகத்தில் சில நூற்றாண்டுகளுக்கு முன் இருந்த அரிசி வகைகளைக் கூட  முக்கூடற் பள்ளு எடுத்துரைக்கின்றது. சித்திரைக் காலி, வாலான், சிறைமீட்டான்,மணல்வாரி, கருஞ்சம்பா, செஞ்சூரை, சீரகச் சம்பா, முத்துவிளங்கி, மலைமுண்டன், பொற்பாளை, நெடுமூக்கன், கடைக்கழுத்தன், இரங்கல் மீட்டான், கல்லுண்டை,பூம்பாளை, பாற்கடுக்கன்,வெள்ளை, புத்தன், கருங்குறுவை, புனுகுச்சம்பா என்பன அக்காலத்தில் தமிழகத்து நெல்வகைகள். தொடர்ந்து மாடுகளின் வகைகளைக்கூட அளந்து உரைக்கின்றது இந்நூல்.
மேற்காட்டிய நெல் விதைகளில் சிறந்தவற்றை இடுவதற்காக உழவர்கள் நிலத்தை நல்ல நேரம் பார்த்து உழுகின்றனர். ஏறக்குறைய பதினைந்துக்கும் மேற்பட்ட உழவர்கள் ஏர் பூட்டிட குரவை ஒலியுடன் உழவு துவங்கியது.அதன் பின்னர் அந்தத் தொளியில் விதைகளை உழவர்கள் இட்டனர். இதன் காரணமாக சில நாள்களில் வளர்ந்த நாற்றின்  முளைமுகம் கண்டு அவர்கள் மகிழ்ந்தனர். நாற்றைப் பிடுங்கி நட்டு இந்த உழவு சிறந்தது. பயிர் ஓங்கியது. கொடை வழங்கும் வள்ளல்களின் கைகளில் இருக்கும் பொற்காசுகளைப்போல நெற்பயிர்கள் வளர்ந்து தலைகுனிந்துக் காட்சிதந்தன. இந்தப் பயிர்களை அறுத்து விளைச்சலைக் காணும் வேளை வந்தது.
மள்ளரும் பலரும் நாடி வயலிற்கூடிhttp://www.vallamai.com/special/files/2013/01/320_Surya-Pongal.jpg
           
உறு தெய்வ நிலை போற்றி உரிமை சாற்றி
                   
ஓங்குநாள் கதிர் கொய்தார்
           
நிறுவி நிரை தெரிந்தார் நெருங்கி அரிந்தார்
               
நிரப்பி அரிகளெங்கும் பரப்பினாரே (138)
என்ற இப்பாடல் அறுவடைக்கு முன் உழவர்கள் செய்த பூசை முறைகளை எடுத்துரைக்கின்றது. உழவர்கள் தம் நிலத் தெய்வங்களை வணங்கினர். “உரிமை சாற்றிஎன்பது தெய்வங்களுக்கு உரிய படையல் பொருள்களை அளித்தனர்  என்று பொருள்படும். பின்னர் நெற்கதிர்களை உழவர்கள் அறுக்கத் தொடங்கி வயல்களெங்கும் பரப்புகின்றனர்.
பரப்பிய கதிர்களைக் கட்டுகளாகக் கட்டுவது அடுத்த நிகழ்வாகும். இக்கட்டுகளைக் களத்தில் இட்டு நெல்போர் அமைப்பார்கள். அடுத்தநாள் இந்த நெல்போரைப் பரப்பி எருதுகளை பிணைத்துப் பிணையல் விடுவர். இந்நிகழ்வை அழகான கவிதையாக முக்கூடற் பள்ளு தருகின்றது.
~~கடிதிற் புரி முறுக்கி கதிர் கட்டியிறுக்கிக்
       
கட்டின கட்டெடுப்பார் களத்தில்விடுப்பார்
   
நெடிதிற்சுமை கொண்டுய்ப்பார் நிலைப் போர் உயர்ப்பார்
       
நின்ற போரைச் சரிப்பார், நிலத்தில் விரிப்பார்
   
பிடியிற் பகடைணைப்பார், பிணையிற் பிணைப்பார்
       
பிணையல் விடத் தொடுப்பார் பேர்த்துக் குவிப்பார்
   
பொடி வைக்கோலைத் தவிர்ப்பார் பொலியைக் குவிப்பார்
       
பொலி தூற்றி ஆற்றிப்பொலி, பொலிஎன்று அளப்பார்”(139)
இப்பாடலில் பதிமூன்று செயல்கள் காட்டப் பெற்றுள்ளன. வினைச்சொற்கள் மட்டும் கொண்டுப் பாடப் பெற்ற பாடல் இது. அறுவடையின் போது நிகழும் அடுத்தடுத்த செயல்களை செயல்வேகம் கருதி ஒரே பாடலில் புலவர் பாடியுள்ளார்.
மாடுகளைப் பிணையல் விட்டபின் நெற்பயிரைக் கூட்டிக் குவியலாக்கி அளக்கத் தொடங்குவர். இந்தக் குவியலுக்குக் பொலி என்று பெயர். பொலிவாக காணப்படும் நெல்லின் காட்சியை ஒலியால் அளக்கும் நல்ல மங்கலச் சொல் இந்தச் சொல். அளக்கும்போது பொலி பொலி என்ற முழக்கம் எழும். உழைத்த மக்களின், விலங்குகளின் மகிழ்ச்சி நிறையும் நாள், வேளை இதுவன்றி வேறு எதுவாக இருக்கமுடியும்.
அன்றைக்குப் பொலி பொலி எனப் பொலிந்த அந்த ஒலி இன்றைக்குப்  பொங்கலோ பொங்கல் என்று எழுந்து  அனைவர் வீட்டிலும் மகிழ்ச்சியைப் பொங்கவைக்கின்றது.
அளந்த நெற்குவையை உழவர்கள் சோறிடும் அடியவர் சத்திரம், ஏழு திருப்பதிகளுக்கும் உரிய படித்தரம், வடமாலையப்பப்பிள்ளை மடம், நாவாணர், அந்தணர், மண்டகப்படி , தினப்பூசை முதலானவற்றிற்காக நெல் அளந்து அக்காலத்தில் தரப்பெற்றிருக்கிறது. இவ்வாறு சுழலும் உலகில் என்றைக்கும் மாறாமல் விளைச்சலைத் தரும் ஏர் வளம் பாடித் தமிழர் பண்பாட்டை உயர்த்திப் பிடிக்கின்றது முக்கூடற்பள்ளு.
சிலப்பதிகாரத்தில் இந்திரவிழாவில் பொங்கல் சொரிந்து இந்திர விழா நடத்தப் பெற்றமை குறிக்கப் பெற்றுள்ளது. உழவினைப் பற்றி வள்ளுவர் தனி அதிகாரத்தையே படைத்தளித்துள்ளார். தொடர்ந்து விளைச்சல் விழா தமிழகத்தில் நடந்துவந்துள்ளது என்பதை முக்கூடற் பள்ளும் தெரிவிக்கின்றது. என்றைக்கும் மறவாமல் உழவினை வளர்க்க இலக்கியங்கள் பாடுபட்டிருக்கின்றன. அவற்றின் வழியில் தமிழ்ப் பண்பாட்டை, தமிழர் உழவுத் தொழில் பண்பாட்டை தலைநிறுத்துவோம். என்றைக்கும் உழவிற்குத் தலை வணங்குவோம். உழவு பெருகிட மனம் வைப்போம். வாழ்வும் வளம் பெறும்

கருத்துகள் இல்லை: