புதன், மே 07, 2008

தனி ஆண்மை கொண்ட நெடுவேல்

வேல் தமிழரின் அக, புற வாழ்வில் சிறப்பிடம் பெற்றதாகும். அக வாழ்வில் வேலன் வெறியாடலில் வேல் முக்கிய இடம் பிடித்து இருக்கும். தலைவியின் அகநோய் அதன்வழி தீர்க்கப் பெறும். புறவாழ்வில் தன் கவணவன், தன் தந்தை, தன் பிள்ளை என்ற முத்தலைமுறையிடத்திலும் வேல் இருந்து வீரம் கூட்டும். இவ்வகையில் தமிழரின் வாழ்வில் வேல் நீங்கா இடம் பெற்றுள்ளது.
திருமுருகனின் கை வேல் புராணச் சிறப்பும் வீரச் சிறப்பும் மிக்கது. அதுவே முருகனின் அடையாளமாகவும், முருகனாகவும் கொள்ளத்தக்க பெருமையைப் பெற்றது. இவ்வேலை வணங்குவதையே முருக அடியார்கள் தங்கள் வேலையாகக் கொள்வர். அவ்வழியில் முருகனின் கை வேலைச் சிறப்பித்து அருணகிரிநாதர் வேல் விருத்தம் பாடியுள்ளார்.
பதிக அடிப்படை உடைய இவ்வேல் விருத்தம் பத்துப்பாடல்களைத் தன்னுள் அடக்கியது. மயில் விருத்தம், வேல் விருத்தம், சேவல் விருத்தம் ஆகிய மு்ன்றும் அளவால் ஏறக்குறைய ஒத்தன. மற்ற அருணகிரிநாதரின் படைப்புகளைக் காட்டிலும் உருவால் குறைந்தனவே அன்றி அருளால் மற்றவற்றிற்கு ஈடாகும் தன்மையன. அலங்காரம், புகழ், அனுபூதி ஆகியவற்றிற்கு ஈடான தனித்தன்மையை இவை மு்ன்றும் பெற்றிருப்பதால் அருணகிரிநாதரின் படைப்பு வகைமைகளுள் இவை சிறந்து விளங்குகின்றன.
வேல் விருத்தத்தில் பல செய்திகளைக் காட்டி மகிழ்கிறார் அருணகிரிநாதர். இந்த வேல் பகைவர்களை அழிக்கத் தக்க பெருமையது. பகைவர் உடலில் தங்காத பெருமையது.
அண்டங்கள் ஒரு கோடி ஆயினும் குலகிரி அனந்தம் ஆயினும் மேவினால் அடைய உருவிப் புறம் போவது அல்லது தங்கல் அறியாது (பாடல் 7.)
என்ற அருணகிரிநாதரின் கூற்று இவ்வேலின் ஆற்றலை எடுத்துரைப்பதாகும். அண்டங்கள் ஆயிரம் தடுத்தாலும், மலைகள் அனைத்தும் தடுத்து நின்றாலும் இதன் ஆற்றலைத் தடுக்க இயலாது. தாக்கும் இலக்கினைத் தாக்கிப் புறம் போகும் தன்மையை உடையது இவ்வேல்.
இவ்வேல் சூரபதுமன் ஒளிந்திருந்த கருங்கடலை வற்றச் செய்த பெருமையை உடையது. இவ்வேலினைக் கண்டு மற்றக் கடல்கள் எல்லாம் கலங்கின. அக்கருங்கடலைப் போல எங்களையும் வற்றச் செய்துவிடாதே என அவை கலங்கினவாம். மேலும் இவ்வேலைக் கண்டு மலைகள் எல்லாம் மருண்டன. முன்னர் கிரௌஞ்ச மலையை அழித்தது போல எங்களையும் அழிந்து விடாதே என்று இவையும் கலங்கின. இவ்வகையில் வேலின் சேவடியைப் பிடித்து மலைகளும் கடல்களும் எங்களைக் காக்க வேண்டும் என்று வேண்டி நின்றன எனக் கற்பனை பொங்க வேலின் வெற்றியைப் புகழ்கிறார் அருணகிரிநாதர்.

நீடுமைக்கடல் சுட்டதிற்கு அடைந்து எழுகடலும் நீ எமைக் காக்க எனவும் நிபிடமுடீ நெடியகிரி எந்தமைக் கா எனவும் நிகழ்கின்ற துங்க நெடுவேல் (பாடல். 9)
என்பது மேற்குறிப்பிட்ட செய்தியைத் தரும் பாடலாகும்.
கடல் வற்றிய இதே நிலை கொண்டு ஓர் உயர் கற்பனையை முதல் பாடலில் பதிவு செய்கிறார் அருணகிரிநாதர். முருகப் பெருமானின் கை வேல் கடலை வற்றச் செய்தது. இதனால் அக்கடலில் இருந்த மீன்கள் எல்லாம் சேற்றில் புரண்டன. நீரின்மையால் சூரியக் கதிர்கள் அனைத்தும் பாதாளம் வரை சென்று ஆதிசேடனின் முடியைத் தாக்கின. மேகக் கூட்டங்கள் நீரின்றி கலக்கமடைந்தன. வேடர் வீடுகளில் கடலில் இருந்த முத்துக்கள் தேக்கம் பெற்றன. அம்முத்துக்களை வேடர்கள் தந்து செந்நெல்லை மருத நில மக்களிடம் இருந்து பெற்றுக் கொண்டனர். புனித ஆறுகளாக கங்கை, யமுனை, சரசுவதி போன்றன வேலின் தொடுதலால் நற்கதி பெற்றன. கடல் மேடானது. இக்கற்பனையில் அறிவியல் உண்மையும் கலந்து நிற்கிறது. உலகம் மேடு பள்ளமாகவும், பள்ளம் மேடாகவும் மாறும் தன்மையைப் பெற்றது என்ற உண்மை வயப்பட்டு இக்கற்பனையை அருணகிரிநாதர் படைத்துள்ளார். (பாடல் ஒன்றின் கருத்து). இவ்வகையில் முருகன் கைவேல் வலிமை வாய்ந்ததாக விளங்குகிறது.
இவ்வேலின் கழுத்தில் மணி கட்டப் பெற்று இருந்தது. இந்த மணியின் ஓசை கேட்டதும் அண்ட உலகங்கள் சுழன்றன. எண்திசைகள் சுழன்றன. அக்கினியும் சுழன்றது. அலைகடல்கள் சுழன்றன. அரக்கர்களின் உயிரும் நில்லாமல் சுழன்றது. அகில் தலமும் சுழன்றன. நு}று கோடி எண்ணிக்கையின் மிக்க நட்சத்திரங்களும், சூரியக் கோள்களும் சுழன்றன. இவ்வகையில் வேலின் சுழற்றலில் கேட்கும் மணியோசைக்கு இத்தகைய வலிமை இருந்துள்ளது என்பது கருதத்தக்கது.
இவ்வேல் சிவன், திருமால், இந்திரன், சூரன் ஆகியோரின் ஆயுதங்களான சூலம், சக்கரம், வச்சிராயுதம்,சூலம் ஆகியவைகளை விட வலிமை பெற்றது. இவ்வல்லமை பெற்ற வேலை உடைய முருகனை நான்முகனும் தேவர்களும் வணங்கிச் சூரனை அடிமையாக்க வேண்டினர். அவ்வகையில் அதனை முடித்த தனி ஆளுமை பெற்ற நெடுவேலாக அது விளங்குகிறது.
வெங்காளர் கண்டர் கைச் சூலமும் திருமாயன் வெற்றிபெறு சுடர் ஆழியும் விபதர்பதி குலிசமும் சூரன் சூலம் கல்லி வெல்லாது எனக் கருதியே சங்க்ராம நீ சயித்து அருள் எனத் தேவரும் சதுர்முகனும் நின்று இரப்ப சயிலமொடு சூரன் உடல் ஒரு நொடியில் உருவியே தனி ஆண்மை கொண்ட நெடுவேல் (பாடல் .2)

என இதன் வலிமையை உணர்த்துகின்றhர் அருணகிரிநாதர்.
இவ்வாறு சூரனை வென்றதால் தேவர்கள் மகிழ்ந்தனர். தேவமகளிர் தனது ஆட்டங்களின்போது இவ்வெற்றியை வாய் ஓயாமல் பாடியபடியே இருந்தனர்.
பந்தாடலில் கழங்காடலில் சுடர் ஊசல் பாடலினொடு ஆடலில் எலாம் பழம் தெவ்வர் கட்கம் துணிந்து இந்திரர்க்க அரசு பாலித்த திறல் புகழ்ந்தே சாந்தரு நாள்மலர்க் குழல் அரம்பையர்களும் சசி மங்கை அனையர் தாமும் தன்னை அன்பொடு பாடி ஆடும் பிரதாபமும் தலைமையும் பெற்ற வேல் (பாடல் 6)
என்ற பாடலில் இவ்வாடல் முறை காட்டப் பெற்றுள்ளது. குறிப்பாக சசி என்ற இந்திரனின் மனைவியும் இவ்வாடல் பாடலில் பங்கேற்றுள்ளாள் என்று அருணகிரிநாதர் குறித்திருப்பது கருதத்தக்கது. ஏனெனில் அவளையே சூரன் கைக் கொண்டு இந்த;ரனின் பதவிக்கு ஆட்டம் விளைவித்தான். எனவே அவள் வேலின் வெற்றியைப் பாடுவது சிறப்பிற்குரியதாகும்.
இது அரக்கர்களுக்கு விடம் போன்றது. தேவர்களுக்கு அமுதம் போன்றது. அரிய முனிவருக்கு நிலவின் குளிர்மை உடையது. தீயோர்க்கு ஆதவனின் வெம்மையைப் போன்றது. அன்பர்க்கு மு்ல வினை முடிக்கத் தக்கது என அதன் தன்மைகளை அடுக்கி உரைக்கின்றார் அருணகிரிநாதர்.
ஆலமாய் அவுணருக்கு அமரருக்கு அமுதமாய் ஆதவனின் வெம்மை ஒளிமீது அரிய தவ முனிவருக்கு இந்துவின் தண்ணென்று அமைந்து அன்பருக்கு முற்ற மூலமாம் வினையறுத்து அவர்கள் வெம்பகையினை முடித்து இந்திரர்க்கு எட்டா முடிவில் ஆனந்தம் நல்கும் பதம் அளித்து எந்த மு்தண்டமும் புகழும் வேல் (பாடல்5)
என்ற இப்பாடல் வேலினை வணங்குவதால் ஏற்படும் பயன்களை எடுத்துக்காட்டுகிறது.
இவ்வேலை வழங்கியவள் உமையம்மை. அவளைப் போற்றித் துதிக்கின்றது ஒரு பாடல். கங்காளி? சாமுண்டி, வாராகி, இந்திராணி, கௌமாரி, கமலாசனக் கன்னி, நாரணி, குமரி, திரிபுரை, பைரவி, அமலை, கௌரி, காமாட்சி, சைவ சிங்காரி, யாமளை, பவானி,கார்த்திகை, கொற்றி, திரியம்பகி அளித்த செல்வச் சிறுவன் முருகன் எனப் போற்றுவதன் மு்லம் இப்பாடல் உமையம்மையைப் புகழ்கின்றது. (பாடல். 2)
சிவபெருமானையும் ஒரு பாடல் சிறப்பிக்கின்றது. அமிர்த கலசம் போன்ற பிறையைத் தன் தலையில் சூடியவன், காலனுக்குக் காலனானவன், மேருவை வில்லாகக் கெண்டவன், வாள்,சூலம்- வச்சிரப் படை உடையவன், அக்கினியை மஞ்சனநீராகக் கொண்டவன், சங்கணிந்தவன், முக்கண்ணன், திசைகளையே ஆடையாக உடையவன் ஆன சிவ பெருமானின் புதல்வர் கைக் கொண்ட வேல் என்று வேலினைச் சிவத் தொடர்பு படுத்தி இவர் வணங்குகிறhர்.(பாடல். 8)

திருமாலையும் மற்றொரு பாடல் சிறப்பிக்கின்றது. கௌமோதகி என்ற கதாயுதம், சுதர்சன சக்கரம், சாரங்கம் என்ற வில், பாஞ்சசன்னியம் என்ற சங்கு, நாந்தகம் என்ற வாள் கொண்டு ஆதிசேடன் மீது படுத்திருக்கும் பெருமானின் காலடிகளைத் திருமகளும் மண்மகளும் வருட அரிதுயில் கொள்ளும் மயானது மருகன் முருகன். அவனின் கை வேல் சிறப்பிற்குரியது (பாடல் 7)
அடுத்து முருகனின் கோயில்கள் உள்ள இடங்களை ஒருபாடலில் சிறப்பிக்கின்றார் அருணகிரிநாதர்.
தாதா மலர்ச்சுனைப் பழனிமலை சோலைமலை தனிப்பரங்குன்று, ஏரகம் தணிகைச் செந்தூர், இடைக்கழி, ஆவினன் குடி தடங்கடல் இலங்கை அதனில் போதார் பொழில் கதிர்காமம் தலத்தினனப் புகழும் அவர் அவர் நாவினில் புந்தியில் அமர்ந்தவன் கந்தன் முருகன் குகன் புணு;கவன் செணு;கை வேலே(பாடல்,3)
என்ற அவரின் பட்டியல் வேலனின் சிறப்பினை வேலோடு காண்பதாகும்.
இவ்வகையில் வேலின் சிறப்பினைப் பண்பினை அருளினைத் தொகுத்துத் தருவதாக வேல் விருத்தம் விளங்குகின்றது.

கருத்துகள் இல்லை: