sangam literature லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
sangam literature லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, அக்டோபர் 03, 2010

சங்கத் தேய்வு இலக்கியம் - திணைமாலை நூற்றைம்பது.



திணைமாலை நூற்றைம்பது என்னும் அக நூல் சங்க இலக்கியச் சார்புடன் படைக்கப் பெற்றுள்ளது. இதன் பாயிரத்தில் குறிப்பிட்டுள்ளது போன்று அகம், புறம் என்ற பாடுபொருள் கடந்து பல பாடுபொருள்கள் வந்ததன்பின் சங்க இலக்கிய மரபைப் போற்றும் வகையில் இந்நூல் பாடப் பெற்றுள்ளது.

முனிந்தார் முனிவொழியச் செய்யுட்கண் முத்துக்

கனிந்தார் களவியல் கொள்கைக் - கணிந்தார்

இணைமாலை ஈடிலா இன்தமிழால் யாத்த

திணைமாலை கைவரத் தேர்ந்து

என்னும் பாயிரப் பாடலில் குறிப்பிட்டுள்ளது போன்று களவியல் கொள்கையை நிறுத்த இந்நூல் யாக்கப் பெற்றுள்ளது. ~~முனிந்தார் முனிவொழிய || என்பதனால் சங்கக் காதல் மரபு, களவுக் கொள்கை சிலரால் பதினெண் கீழ்க்கணக்குக் காலத்தில் மறுத்துரைக்கப்பெற்றுள்ளது என்பது தெரியவருகிறது. மறுத்துரைத்தவர்களும் ஏற்கும் வண்ணம் களவினை நிறுத்தப் பாடியது திணைமாலை நூற்றைம்பது என்னும் நூலாகும்.

குறிப்பாக ஐந்திணை எழுபது, ஐந்திணை ஐம்பது, திணைமொழி ஐம்பது, திணைமாலை நூற்றைம்பது, கைந்நிலை போன்ற நூல்கள் சங்க இலக்கிய அடிப்படை வாய்ந்தவையே. இருப்பினும் திணைக்குப் பதினான்கு பாடல்கள் என்ற நிலையில் பாடப்பட்டது ஐந்திணை ஐம்பது ஆகும். திணைக்குப் பத்துப்பாடல்கள் வீதம் பாடப்பட்டது ஐந்திணை ஐம்பது என்பதாகும். இதுபோன்றதே திணைமொழி ஐம்பது என்பதும் ஆகும். திணைமாலை நூற்றைம்பது என்பது திணைக்கு முப்பது பாடல்கள் என்ற நிலையில் பாடப்பட்டது ஆகும். கைந்நிலை என்பதும் நாற்பது பாடல்கள் கொண்ட தொகுப்புநூலாகும். இவ்வடிப்படையில் காணுகின்றபோது திணைக்கு இத்தனைப்பாடல்கள் என்ற நிலையில் வரையறுத்து எழுதப் பெற்றுள்ளது என்பது தெரியவருகிறது. மேலும் அகப்பாடல்களின் எண்ணிக்கை குறுகிய அளவுடையது என்பதும் தெரியவருகிறது. மொத்தத்தில் எழுபது, ஐம்பது, ஐம்பது, நூற்றைம்பது, நாற்பது என்ற நிலையில் முன்னூற்று அறுபது பாடல்கள் மட்டுமே அகச்சார்புடைய பாடல்களாக பதினெண் கீழ்க்கணக்கு என்ற பகுப்பில் அமைந்துள்ளமை பாடல்கள் குறைவுபட்டுள்ளமையை எடுத்துரைப்பதாகும். மேலும் புறம் என்ற நிலையில் களவழி நாற்பது என்ற நாற்பது பாடல்கள் அடங்கிய தொகுப்பு மட்டுமே இவ்வெல்லையில் கிடைக்கின்றது.

இதற்கு என்ன காரணம் என்று ஆராய்கையில் நாடக வழக்கு, உலகியில் வழக்கு என்ற நிலையில் நாடக வழக்கு அடிப்படை வாய்ந்தது சங்க அக, புற மரபு. உலகியல் வழக்கு சார்ந்தது பதினெண் கீழ்க்கணக்கு காலம். எனவே உலகியலைப் பாடும் போக்கு சங்கப் பிற்காலத்தில் ஏற்பட்டதால் நாடக வழக்குப் புறம் தள்ளப் பெற்றுள்ளது என முடியலாம்.

எனவே எண்ணிக்கை அளவில் மிகக்குறைவானதாகவே அகப்பாடல்கள் இக்காலத்தில் இருந்துள்ளமை தெரியவருகிறது. சங்க அகப்பாடல்களுக்கு இருந்த மதிப்பு குறைவுபட்டிருப்பதை இச்செய்தி தெளிவுபடுத்துகின்றது. மேலும் திருக்குறள், நாலடியார், கைந்நிலை போன்றவற்றில் அகம் பாடும் மரபு இருந்துள்ளது. இவற்றை நோக்குமிடத்து இவை பாடல் பொருளில் குறைவுபட்ட நிலையிலேயே உள்ளன என்பதும் கருதத்தக்கது.

இதனால் சங்க அக மரபினை மீட்டெடுக்கும் முயற்சிக்காகத் திணைமாலை நூற்றைம்பது என்பது எழுதப் பெற்றுள்ளது என்பது தெளிவாகின்றது. சங்கப் பாடல் மரபிற்கும் இக்கால அகப்பாடல் மரபிற்கும் பெருத்த வேறுபாடு என்பது யாப்பு வடிவமே ஆகும். சங்க மரபில் ஆசிரியப்பா, கலிப்பா, பரிபாடல் ஆகியன அகம் பாடுதற்கு உரியனவாக இருந்தன. பதினெண் கீழ்க்கணக்கு நூல்களின் காலத்தில் வெண்பா இந்த இடத்தைப் பெற்றுள்ளது.

மேற்பாடலில் அமைந்துள்ள கணிந்தார் என்ற குறிப்பு கணிமேதாவியார் என்பவர் எழுதியது இந்நூல் என்பதை நிறுத்துவதாகும். இவர் ஏலாதி என்னும் நூலையும் எழுதியவர் ஆவார். இவர் மதுரையில் வாழ்ந்த தமிழாசிரியர் மாக்காயனார் என்பவரிடம் தமிழ் பயின்றவர் ஆவார். இவர் மதுரையைச் சார்ந்தவர் என்பதும், வைணவ கதைகளையும், நெறிமுறைகளையும் உணர்ந்தவர் இவர் என்பதும் இவரின் திணைமாலை நூற்றைம்பது வழியாகத் தெரியவருகின்றது.

குறிஞ்சி (31 பாடல்கள்), நெய்தல் (31 பாடல்கள்), பாலை(முப்பது பாடல்கள்), முல்லை(31 பாடல்கள்), மருதம்(முப்பது பாடல்கள்) என்ற நிலையில் பாடப்பட்ட இந்நூலில் மொத்தம் நூற்றைம்பத்து மூன்று பாடல்கள் அமைந்துள்ளன. திணை வரையறுக்கப் பெற்றது போலவே இப்பாடல்களுக்குச் சங்க இலக்கிய வழியில் துறைகளும் வகுக்கப் பெற்றுள்ளன.

இப்பாடல்களில் உரிப்பொருள் வரையறை சரிவரப் பின்பற்றப்படவில்லை. இரவுக்குறி மறுத்தல் என்பதாகக் குறிஞ்சிப் பாடல்கள் பெரும்பாலும் அமைந்துள்ளன. நெய்தல் பாடல்கள் இரங்கல் என்ற உரிப்பொருளைத் தாண்டி கூட்டம் என்ற குறிஞ்சிப் பொருளையே பெரிதும் பெற்றுள்ளன. பாலைப் பாடல்கள் ஓரளவிற்கு உரிப்பொருள் எல்லையைக் கடக்கவில்லை. மருதப் பாடல்கள் பெரும்பாலும் பரத்தையர் பிரிவு பற்றியனவாகவே கற்பு சார்புடையனவாகவே காட்சி தருகின்றன. முல்லைப் பாடல்கள் பருவ வரவு குறித்து அதிகம் பாடியுள்ளன. இவ்வளவி;ல் இவற்றின் உரிப்பொருள் நிலை அமைந்துள்ளது.

இலக்கியச் சுவையளவில் சொற்செட்டும், கற்பனை நயமும் கருதத்தக்கன. இவ்வகையில் நீதி நூல்களின் காலத்தில் களவு, கற்பு நெறியை மீட்டெடுக்கும் முயற்சியை வெற்றிகரமாக திணைமாலை நூற்றைம்பது செய்துள்ளது என்பது பாராட்டுதற்கு உரியது.

இந்நூலில் உள்ள குறிஞ்சித் திணைப் பாடல் ஒன்று தமர் குறித்து அஞ்சுவதாகத் தலைவி கூற்றாகப் பாடப் பெற்றுள்ளது.

நாள்வேங்கை பொன்விளையும் நன்மலை நாட

கோள்வேங்கை பொற்கொடியார் என்ஐயன்மார்- கோள்வேங்கை

அன்னையால் நீயும் அருந்தழையாம் ஏலாமைக்கு

என்னைக்கு நாளை எளிது ( 19)

இப்பாடலில் புலி போன்ற தமர் எதிர்ந்தால், புலி போன்ற தலைவனும் எதிர்வான். இதன் காரணமாகப் போர் ஏற்படும் என்ற அச்சத்தினால் தலைவி தலைவன் தந்த கையுறையை மறுக்கின்றாள். இதன் வழியே களவிற்கு அக்காலத்தில் இருந்த எதிர்த்தன்மை தெரியவருகின்றது.

பகல்வரின் கவ்வை பலவாம் பரியாது

இரவுவரின் ஏதமும் அன்ன - புகஅரிய

தாழை துவளும் தரங்கநீர்ச் சேர்ப்பிற்றே

ஏழை நுளையர் மகள் ( 59)

என்ற நெய்தல் பாடலில் பகற்குறி, இரவுக்குறி இரண்டையும் மறுத்துத் தோழி உடனே திருமணம் புரிந்து கொள்ளத் தலைவனை வற்புறுத்துகின்றாள். நெய்தலின் இரங்குதல் உரிப்பொருள் கடந்து, வரைவு கடாவும் போக்கில் இப்பாடல் பாடப் பெற்றுள்ளது.

பாலைப்பாடல் ஒன்றில் நயத்தக்க நாகரீகப் பாங்கு எடுத்துரைக்கப் பெற்றுள்ளது.

நண்ணிநீர் சென்மின் நமர்அவர் ஆபவெல்

எண்ணிய எண்ணம் எளிதரோ - எண்ணிய

வெஞ்சுடர் அன்னானை யான் கண்டேன் கண்டாளாம்

தண்சுடர் அன்னாளைத் தான். ( 89)

சூரியன் போன்ற தலைவனை நான் கண்டேன். சந்திரன் போன்ற தலைவியை இவள் பார்த்தாளாம். இவர்களை அடைய வேண்டுமானால் விரைந்து செல்க என்று கூறும்பொழுது தலைவன், தன் தலைவி அன்றி வேறொருவரைப் பாரான், தலைவி தன் தலைவன் அன்றி வேறொருவரைப் பாராள் என்ற நாகரீகத் தன்மை வெளிப்பட்டு நிற்பதை உணரமுடிகின்றது.

முல்லை நிலத்தலைவி ஒருத்தி தலைவனின் வருகைக்காகக் காத்திருக்கிறாள். அவள் கொடிகளுடனும், பூக்களுடனும் உரையாடும் உரையாடல் பின்வருமாறு.

குருந்தே கொடிமுல்லாய் கொன்றாய் தளவே

முருந்தேய் எயிறொடுதார் ப+ப்பித்து - இருந்தே

அரும்பு ஈர் முலையாள் அணிகுழல் தாழ் வேய்த்தோள்

பெரும்பீர் பசப்பித்தீர் பேர்ந்து (116)

இப்பாடல் கவிஞர் வாணிதாசனின் காவியத்திற்குப் பெயர் தந்துள்ளது (கொடிமுல்லை). கம்பன் படைத்த இராமனின் பருவம் கண்டு இரங்குதலுக்கு வழிவகுத்துள்ளது. தலைவியின் உடலில் பீர்க்கம்ப+ ப+த்ததாம் . மலர்களைக் கண்டுத் தலைவி இரங்கியதால் இப்ப+க்கள் தலைவியின் உடலிலும் ப+க்களைப் ப+க்கச் செய்துவிட்டதாம்.

மருதத்தலைவி ஒருத்தி பாணனைப் பின்வருமாறு வைகின்றாள்.

பாலையாழ் பாண்மகனே பண்டுநின் நாயகற்கு

மாலையாழ் ஒதி வருடாயோ- காலையாழ்

செய்யும் இடமறியாய் சேந்தா நின் பொய்ம்மொழிக்கு

நையும் இடமறிந்து நாடு. (133)

பாணன் தலைவன் பரத்தையுடன் கூடியபோது மாலைப் பண்ணைப்பாடி அவர்களை மகிழ்வித்தான். பின்பு தலைவியின் ஊடலைத் தீர்க்கக் காலையில் யாழ் மீட்ட வந்துற்றான். ஆனால் அவனின் பண் தலைவியால் மறுத்துரைக்கப்பட்டு வாயில் மறுக்கப்பட்டது. இது வெல்லும் இடமறிந்து செல்க எனத் தலைவி கூறுவதாகப் பாடல் பாடப்பெற்றுள்ளது. இப்பாடலில் யாழ் பாலையாழ் எனப்பட்டுள்ளமை கருததக்கது. இவ்வகையில் திணை மயக்கமாகப் பல செய்திகள் திணைமாலை நூற்றைம்பதில் இடம் பெற்றுள்ளமை தெரியவருகிறது. குறிப்பாக உரிப்பொருள் அல்லன மயங்கவும் பெருமே என்ற நிலை கூட நிலைப்படுத்தப்படாமல் அவையும் மாறி அமையும் போக்கு திணைமாலை நூற்றைம்பதில் காணப்படுகிறது. சங்க மரபுகள் சங்கம் மருவிய காலமான பதினெண் கீழக்கணக்குக் காலத்தில் பின்பற்றப் பெற்றாலும் அவை சங்க காலத்தின் அளவிற்கு முற்றிலுமாக இடம் பெறவில்லை என்றே முடியமுடிகின்றது.

கலித்தொகை போல நூற்றைம்பது பாடல்களைக் கொண்டு இது பாடப் பெற்றாலும் அனைத்துத் திணைகளும் ஒருவராலே பாடப்படுதல், வெண்பா யாப்பில் அமைதல், உரிப்பொருள் மயக்கம் போன்றவற்றால் சங்கத் தேய்வு இலக்கியமாக திணைமாலை நூற்றைம்பதினைக் கொள்ளமுடிகின்றது.

வெள்ளி, ஜூலை 06, 2007

முல்லைப்பாட்டும் சுற்றுச்சூழலும்



தமிழ் அகமரபு சுற்றுச் சூழல் அறிவியல் சார்ந்தே அமைக்கப் பெற்றுள்ளது. குறிப்பாக காலம், இடம், அவ்விடகாலச் சூழலில் வளரும் கருப் பொருள்கள், அந்தக் கருப் பொருள்களோடு தொடர்புடைய மனித ஒழுக்கம் என்ற நோக்கில் சங்க அக இலக்கியங்கள் செய்யப் பெற்றுள்ளன.
இதன் காரணமாகச் சங்க அக இலக்கியங்களைச் சுற்றுச் சூழல் இலக்கியங்கள் என்றே அழைக்கலாம். தற்கால சுற்றுச் சூழல் அறிவியலாளர்களின் சிந்தனைக்கு அன்றே விதை இட்டவர்கள் தமிழர்கள் என்பது சங்க இலக்கியங்களைச் சுற்றுப்புறச்சூழல் நோக்கில் ஆராயும் போது புலனாகின்றது.
முல்லைப் பாட்டு காட்டுப்பகுதியை மையமாக வைத்துப் புனையப் பெற்ற இலக்கியமாகும். இதனுள் காட்டு வாழ்க்கையும் நாட்டு வாழ்க்கையும் பின்னிப் பிணைந்து நிற்கிறது. எனவே இது சுற்றுச் சூழல் கண்ணோட்டத்தில் நோக்கத் தக்க இலக்கியம் என்பதில் ஐயமில்லை.
காடுகள் அழிந்து வரும் சூழலில் காட்டு வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு வரையப் பெற்ற முல்லைப் பாட்டு என்ற இலக்கியத்தைச் சுற்றுச் சூழல் நோக்கில் ஆராய்வது சுற்றுச்சூழலியலாளர்களுக்கு மகிழ்ச்சிதரத் தக்கதாக அமையும் என்பதில் ஐயமில்லை.
காட்டுப்பகுதிகள் குறித்த ஆய்வொன்று ஓராண்டுக்கு ஒருலட்சத்து நாற்பத்து நான்காயிரம் எக்டேர் என்ற விகிதத்தில் காடுகள் அழிக்கப் பெற்று வருவதாகக் கூறுகின்றது . எனவே அழிந்து வரும் காட்டுவளத்தை மீட்டெடுக்க இவ்வகை ஆய்வுகள் உதவும்.
சுற்றுச்சூழல் அறிவியல் பல கிளைகளை உடையது. அதாவது பருவமாற்றம் உயிர்ப் பெருக்கம் நிலத்தடிநீர் நிலவளச் சீரழிவு இயற்கை வளங்கள் தேவையற்ற பொருள்களைக் கையாளுதல் காற்று மாசுபாடு ஒலி மாசு ஆகிய பல துறைகளில் சுற்றச் சூழல் அறிவியல் தற்போது செயல்பட்டு வருகின்றது.
இவ்வகையில் இயற்கை வளம் என்ற நிலையில் முல்லைப்பாட்டில் பல இயற்கை வளங்கள் குறிப்பிடப் படுகின்றன. அவற்றுள் முக்கியமானவை தாவரணங்கள் விலங்குகள் பறவைகள் போன்றவை ஆகும். இவை கருப்பொருள் என அகமரபில் குறிப்பிடப் படுகின்றன. முல்லைப்பாட்டில் இடம் பெற்றுள்ள விலணங்குகள் பறவைகள் போன்றன பற்றிய செய்திகள் பின்வருமாறு.
விலங்குகள்
முல்லைப் பாட்டில் பல விலங்குகள் சுட்டப் பெறுகின்றன. அவை அக்காலத்தில் காட்டில் உறைந்த விலங்குகள் ஆகும்.
இரலை மான்
ஆண்மான். திரி மருப்பு இரலை என்றகுறிப்புடன் இம்மான் குறிப்பிடப்படுகிறது. அதாவது முறுக்கு பெற்ற கொம்பினை உடைய மான் என்ற நிலையில் இம்மான் சுட்டப் பெறுகிறது.
திரி மறுப்பு இரலையொடு(அடி 97)
மடமான்
இது இரலை மானோடு சுற்றித் திரியும் பெண்மான் ஆகும். இது பற்றிய குறிப்பும் மேற்கண்ட அடிகளைத் தொடர்ந்து அமைந்துள்ளது.
திரி மறுப்பு இரலையொடு மடமான் உகள(அடி 97)
கன்று
இது முல்லை நிலத்திற்கு உரிய விலங்கு ஆகும்.
சிறுதாம்பு தொடுத்த பசலைக் கன்று
என இது முல்லைப்பாட்டுள் சுட்டப் பெறுகிறது.(அடி 12)
கன்றின் தாயர்
இன்னே வருகுவர் தாயர் என்ற குறிப்புச் சொல்லின் வழியாக கன்றின் தாயான தாய்ப்பசு சுட்டப் படுகிறது.
மா (குதிரை)
நெடுந்தேர் பூண்ட மாவே
என்ற நிறைவுத் தொடர் குறிப்பின் வழி குதிரைகள் முல்லைப் பாட்டில் குறிக்கப் பெற்றுள்ளன.
யானை
யானைகள் கரும்பு நெற்கதிர் அதிமதுரத்தழை ஆகியவற்றைத் தின்னும். அவை தின்னாத போது பாகர்கள் யானைகளை வடமொழி வார்த்தைகள் கூறி பழக்குவர். கவளத்தைத் தின்னச் செய்வர். (அடி 32-36)
கவலை முற்றம் காவல் நின்ற
தேம்படு கவுள சிறு கண்யானை
ஓங்குநிலைக் கரும்பொடு கதிர்மிடைந்து யாத்த
வயல் விளை இன் குளகு உண்ணாது நுதல் துடைத்து
அயில் நுனை மருப்பின் தம் கையிடைக் கொண்டென
கவை முட் கருவியின் வட மொழி பயிற்றிக்
கல்லா இளைஹர் கவளம் கைப்ப
என்ற இவ்வடிகள் யானையின் இயல்புகளை உணர்த்துவன.
இவ்வாறு சில விலங்கினங்கள் முல்லைப்பாட்டில் காட்டப் பெற்றுள்ளன.
பறவைகள்
முல்லைப்பாட்டில் பறவைகளும் இடம் பெற்றுள்ளன. எடுத்துக்காட்டுக்கு மயில் பற்றிய குறிப்பு இப்பனுவலில் இடம் பெற்றுள்ளது.
மயில்
மயில் தலைவிக்கு உவமையாக வந்துள்ளது. மஞ்ஞை என்று சுட்டப் பெற்றுள்ளது. ஏஉறு மஞ்ஞையின் நடுங்கி (அடி84)
வண்டு
யாழ் இசையென வண்டு ஆர்ப்ப ( அடி 8) என்ற குறிப்பின்படி வண்டுகள் முல்லைப்பாட்டுள் சுட்டப் பெற்றுள்ளன என்பது அறியத்தக்கது.
தாவரங்கள்
முல்லைப் பாட்டில் மரங்கள் செடிகள் கொடிகள் ஆகியன இடம் பெற்றுள்ளன. அவை ஒவ்வொன்றும் பின்வருமாறு விரிக்கப் படுகின்றன.
காயாமரம்
இம்மரம் முல்லை நிலத்திற்கு உரியது. இது நுண்ணிய மணலிடத்தில் வளரத்தக்கது. நெருங்கிய இலைகளை உடையது. மலர்கள் அஞ்சனம் போல மலர்ந்தன.
செறிஇலைக் காயா அஞ்சனம் மலர(அடி 93)
கொன்றை மரம்
கொன்றை மரம் கொத்து கொத்துக்களாய்ப் பூக்களைத் தரும். முறி இணர் கொன்றைநன் பொன் காலக்கோடல் (அடி 94) என்ற குறிப்பு இதனை விளக்கும்.
பிடவம்
இது செடி வகையினது. இது சேய்மையிலும் மணம் பரப்பும் மலர்களைக் கொண்டது. (அடி 251) இக்குறிப்பு முல்லைப் பாட்டுள் உள்ளது.
சேண் நாறு பிடவமொடு பைம் புதல் எருக்கி(அடி 25)
வெண்காந்தள்
வெண்காந்தள் மலர்கள் உள்ளங்கை போல விரியும் (அடி 95) என்ற குறிப்பு வெண் காந்தள் மலர் பற்றியது. இதுவும் செடி வகையினது.
கோடல் குவிமுகை அங்கை அவிழ (அடி 95.)
முல்லை
இது கொடி வகையினது. விரிச்சி கேட்பவர்கள் கோவிலில் அரிசியையும் முல்லைமலர்களையும் கலந்து தூவுதல் மரபு.
நாழி கொண்ட நறுவீ முல்லை
அரும்பு அவிழ்அலரி தூஉய்க் கைதொழுது (அடி 9-10) என்ற அடிகள் முல்லைக் கொடி பற்றியனவாகும்.
வள்ளிக் கொடி
முல்லைப் பாட்டுள் வள்ளியம் காடு என்ற நிலையில் இத்தாவரம் பற்றிய குறிப்பு இடம் பெற்றுள்ளது.
இவ்வாறு இயற்கை வளங்கள் பற்றிய செய்திகள் முல்லைப் பாட்டுள் இடம் பெற்றுள்ளன.
மழைவளம்
மழை பெய்யும் செய்தி மிகச் சிறப்பாக முல்லைப் பாட்டுள் சொல்லப்பெற்றுள்ளது.
பாடு இமிழ் பனிகடல் பருகி வலன் ஏர்பு
கோடு கொண்டெழுந்த கொடுஞ் செலவு எழினி
பெரும் பெயர் பொழிந்த (அடி 4-6)
என்ற அடிகளில் மழை பெய்யும் அறிவியல் காட்டப் பெற்றுள்ளது.
அதாவது கடல்நீர் வலப்பக்கமாக ஆவியாகி மேல் நோக்கி வானம் வரை சென்றுப் பின்மழை பொழியும் என்ற அறிவியல் செய்தி அப்போதே முல்லைப்பாட்டுள் இடம் பெற்றுள்ளது.
இதுவரை சுற்றுச்சூழல் பற்றிய செய்திகளைத் தொகுத்து இக்கட்டுரை வழங்கியது.