வெள்ளி, ஜூலை 06, 2007

முல்லைப்பாட்டும் சுற்றுச்சூழலும்



தமிழ் அகமரபு சுற்றுச் சூழல் அறிவியல் சார்ந்தே அமைக்கப் பெற்றுள்ளது. குறிப்பாக காலம், இடம், அவ்விடகாலச் சூழலில் வளரும் கருப் பொருள்கள், அந்தக் கருப் பொருள்களோடு தொடர்புடைய மனித ஒழுக்கம் என்ற நோக்கில் சங்க அக இலக்கியங்கள் செய்யப் பெற்றுள்ளன.
இதன் காரணமாகச் சங்க அக இலக்கியங்களைச் சுற்றுச் சூழல் இலக்கியங்கள் என்றே அழைக்கலாம். தற்கால சுற்றுச் சூழல் அறிவியலாளர்களின் சிந்தனைக்கு அன்றே விதை இட்டவர்கள் தமிழர்கள் என்பது சங்க இலக்கியங்களைச் சுற்றுப்புறச்சூழல் நோக்கில் ஆராயும் போது புலனாகின்றது.
முல்லைப் பாட்டு காட்டுப்பகுதியை மையமாக வைத்துப் புனையப் பெற்ற இலக்கியமாகும். இதனுள் காட்டு வாழ்க்கையும் நாட்டு வாழ்க்கையும் பின்னிப் பிணைந்து நிற்கிறது. எனவே இது சுற்றுச் சூழல் கண்ணோட்டத்தில் நோக்கத் தக்க இலக்கியம் என்பதில் ஐயமில்லை.
காடுகள் அழிந்து வரும் சூழலில் காட்டு வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு வரையப் பெற்ற முல்லைப் பாட்டு என்ற இலக்கியத்தைச் சுற்றுச் சூழல் நோக்கில் ஆராய்வது சுற்றுச்சூழலியலாளர்களுக்கு மகிழ்ச்சிதரத் தக்கதாக அமையும் என்பதில் ஐயமில்லை.
காட்டுப்பகுதிகள் குறித்த ஆய்வொன்று ஓராண்டுக்கு ஒருலட்சத்து நாற்பத்து நான்காயிரம் எக்டேர் என்ற விகிதத்தில் காடுகள் அழிக்கப் பெற்று வருவதாகக் கூறுகின்றது . எனவே அழிந்து வரும் காட்டுவளத்தை மீட்டெடுக்க இவ்வகை ஆய்வுகள் உதவும்.
சுற்றுச்சூழல் அறிவியல் பல கிளைகளை உடையது. அதாவது பருவமாற்றம் உயிர்ப் பெருக்கம் நிலத்தடிநீர் நிலவளச் சீரழிவு இயற்கை வளங்கள் தேவையற்ற பொருள்களைக் கையாளுதல் காற்று மாசுபாடு ஒலி மாசு ஆகிய பல துறைகளில் சுற்றச் சூழல் அறிவியல் தற்போது செயல்பட்டு வருகின்றது.
இவ்வகையில் இயற்கை வளம் என்ற நிலையில் முல்லைப்பாட்டில் பல இயற்கை வளங்கள் குறிப்பிடப் படுகின்றன. அவற்றுள் முக்கியமானவை தாவரணங்கள் விலங்குகள் பறவைகள் போன்றவை ஆகும். இவை கருப்பொருள் என அகமரபில் குறிப்பிடப் படுகின்றன. முல்லைப்பாட்டில் இடம் பெற்றுள்ள விலணங்குகள் பறவைகள் போன்றன பற்றிய செய்திகள் பின்வருமாறு.
விலங்குகள்
முல்லைப் பாட்டில் பல விலங்குகள் சுட்டப் பெறுகின்றன. அவை அக்காலத்தில் காட்டில் உறைந்த விலங்குகள் ஆகும்.
இரலை மான்
ஆண்மான். திரி மருப்பு இரலை என்றகுறிப்புடன் இம்மான் குறிப்பிடப்படுகிறது. அதாவது முறுக்கு பெற்ற கொம்பினை உடைய மான் என்ற நிலையில் இம்மான் சுட்டப் பெறுகிறது.
திரி மறுப்பு இரலையொடு(அடி 97)
மடமான்
இது இரலை மானோடு சுற்றித் திரியும் பெண்மான் ஆகும். இது பற்றிய குறிப்பும் மேற்கண்ட அடிகளைத் தொடர்ந்து அமைந்துள்ளது.
திரி மறுப்பு இரலையொடு மடமான் உகள(அடி 97)
கன்று
இது முல்லை நிலத்திற்கு உரிய விலங்கு ஆகும்.
சிறுதாம்பு தொடுத்த பசலைக் கன்று
என இது முல்லைப்பாட்டுள் சுட்டப் பெறுகிறது.(அடி 12)
கன்றின் தாயர்
இன்னே வருகுவர் தாயர் என்ற குறிப்புச் சொல்லின் வழியாக கன்றின் தாயான தாய்ப்பசு சுட்டப் படுகிறது.
மா (குதிரை)
நெடுந்தேர் பூண்ட மாவே
என்ற நிறைவுத் தொடர் குறிப்பின் வழி குதிரைகள் முல்லைப் பாட்டில் குறிக்கப் பெற்றுள்ளன.
யானை
யானைகள் கரும்பு நெற்கதிர் அதிமதுரத்தழை ஆகியவற்றைத் தின்னும். அவை தின்னாத போது பாகர்கள் யானைகளை வடமொழி வார்த்தைகள் கூறி பழக்குவர். கவளத்தைத் தின்னச் செய்வர். (அடி 32-36)
கவலை முற்றம் காவல் நின்ற
தேம்படு கவுள சிறு கண்யானை
ஓங்குநிலைக் கரும்பொடு கதிர்மிடைந்து யாத்த
வயல் விளை இன் குளகு உண்ணாது நுதல் துடைத்து
அயில் நுனை மருப்பின் தம் கையிடைக் கொண்டென
கவை முட் கருவியின் வட மொழி பயிற்றிக்
கல்லா இளைஹர் கவளம் கைப்ப
என்ற இவ்வடிகள் யானையின் இயல்புகளை உணர்த்துவன.
இவ்வாறு சில விலங்கினங்கள் முல்லைப்பாட்டில் காட்டப் பெற்றுள்ளன.
பறவைகள்
முல்லைப்பாட்டில் பறவைகளும் இடம் பெற்றுள்ளன. எடுத்துக்காட்டுக்கு மயில் பற்றிய குறிப்பு இப்பனுவலில் இடம் பெற்றுள்ளது.
மயில்
மயில் தலைவிக்கு உவமையாக வந்துள்ளது. மஞ்ஞை என்று சுட்டப் பெற்றுள்ளது. ஏஉறு மஞ்ஞையின் நடுங்கி (அடி84)
வண்டு
யாழ் இசையென வண்டு ஆர்ப்ப ( அடி 8) என்ற குறிப்பின்படி வண்டுகள் முல்லைப்பாட்டுள் சுட்டப் பெற்றுள்ளன என்பது அறியத்தக்கது.
தாவரங்கள்
முல்லைப் பாட்டில் மரங்கள் செடிகள் கொடிகள் ஆகியன இடம் பெற்றுள்ளன. அவை ஒவ்வொன்றும் பின்வருமாறு விரிக்கப் படுகின்றன.
காயாமரம்
இம்மரம் முல்லை நிலத்திற்கு உரியது. இது நுண்ணிய மணலிடத்தில் வளரத்தக்கது. நெருங்கிய இலைகளை உடையது. மலர்கள் அஞ்சனம் போல மலர்ந்தன.
செறிஇலைக் காயா அஞ்சனம் மலர(அடி 93)
கொன்றை மரம்
கொன்றை மரம் கொத்து கொத்துக்களாய்ப் பூக்களைத் தரும். முறி இணர் கொன்றைநன் பொன் காலக்கோடல் (அடி 94) என்ற குறிப்பு இதனை விளக்கும்.
பிடவம்
இது செடி வகையினது. இது சேய்மையிலும் மணம் பரப்பும் மலர்களைக் கொண்டது. (அடி 251) இக்குறிப்பு முல்லைப் பாட்டுள் உள்ளது.
சேண் நாறு பிடவமொடு பைம் புதல் எருக்கி(அடி 25)
வெண்காந்தள்
வெண்காந்தள் மலர்கள் உள்ளங்கை போல விரியும் (அடி 95) என்ற குறிப்பு வெண் காந்தள் மலர் பற்றியது. இதுவும் செடி வகையினது.
கோடல் குவிமுகை அங்கை அவிழ (அடி 95.)
முல்லை
இது கொடி வகையினது. விரிச்சி கேட்பவர்கள் கோவிலில் அரிசியையும் முல்லைமலர்களையும் கலந்து தூவுதல் மரபு.
நாழி கொண்ட நறுவீ முல்லை
அரும்பு அவிழ்அலரி தூஉய்க் கைதொழுது (அடி 9-10) என்ற அடிகள் முல்லைக் கொடி பற்றியனவாகும்.
வள்ளிக் கொடி
முல்லைப் பாட்டுள் வள்ளியம் காடு என்ற நிலையில் இத்தாவரம் பற்றிய குறிப்பு இடம் பெற்றுள்ளது.
இவ்வாறு இயற்கை வளங்கள் பற்றிய செய்திகள் முல்லைப் பாட்டுள் இடம் பெற்றுள்ளன.
மழைவளம்
மழை பெய்யும் செய்தி மிகச் சிறப்பாக முல்லைப் பாட்டுள் சொல்லப்பெற்றுள்ளது.
பாடு இமிழ் பனிகடல் பருகி வலன் ஏர்பு
கோடு கொண்டெழுந்த கொடுஞ் செலவு எழினி
பெரும் பெயர் பொழிந்த (அடி 4-6)
என்ற அடிகளில் மழை பெய்யும் அறிவியல் காட்டப் பெற்றுள்ளது.
அதாவது கடல்நீர் வலப்பக்கமாக ஆவியாகி மேல் நோக்கி வானம் வரை சென்றுப் பின்மழை பொழியும் என்ற அறிவியல் செய்தி அப்போதே முல்லைப்பாட்டுள் இடம் பெற்றுள்ளது.
இதுவரை சுற்றுச்சூழல் பற்றிய செய்திகளைத் தொகுத்து இக்கட்டுரை வழங்கியது.

2 கருத்துகள்:

வெற்றி சொன்னது…

ஐயா,
அருமையான பத்ஹிவு. படித்துப் பயனடைந்தேன். மிக்க நன்றி.

பெயரில்லா சொன்னது…

Oi, achei teu blog pelo google tá bem interessante gostei desse post. Quando der dá uma passada pelo meu blog, é sobre camisetas personalizadas, mostra passo a passo como criar uma camiseta personalizada bem maneira. Se você quiser linkar meu blog no seu eu ficaria agradecido, até mais e sucesso. (If you speak English can see the version in English of the Camiseta Personalizada. If he will be possible add my blog in your blogroll I thankful, bye friend).