
மங்கலமாய் வாழப்போகும்
உனக்கு நான்
என்ன சொல்லி வழியனுப்ப!
அறிவுரை கூறவா?
ஆசி நல்கவா?
பிரியாவிடை தரவா?
போய் வா மகளே போய் வா!
இந்த ஒவ்வொரு சொல்லுக்குள்ளும்
என் உண்மை அன்பு
அழுத்தமாய்க் கிடக்கிறது
போய் வா மகளே போய் வா!
ஒப்புக்குச் சொல்லவில்லை மகளே
நீ பிறந்தபோது நான் மிகவும் மகிழ்ந்தேன்.
பிள்ளையில்லை என்ற
பெரும்பழி தீர்க்கப் பிறந்தவள் நீ
மகளே உன்னைப் பெற்றதால்
இப்போதும் மகிழ்கிறேன்
உன் சிரிப்புகள்
உன் மழலைகள்
உன் பரிசுகள் நம் வீட்டு வெற்றிடங்களை
விரட்டி அழித்தன
அடிக்கு ஒருதரம்
உன்பேரைச் சொல்லி
அழைப்பேன் மகளே
இனி வருவதற்கு
யார் இருக்கிறார்கள்
என்னை விடவும்
என்னைப் பற்றி நன்கு அறிந்தவள் நீ
சின்னவயது முதலே
எங்கள் சண்டைகளுக்குச்
சமாதானத் தூது நடந்தவள் நீ
இனி எங்களின் சண்டைகள் கூட
ரசமற்றுப்போகும்
வளர்ந்துவிட்டாய் நீ
காலத்தின் பயணத்தில்
வெகுவிரைவாய் வளர்ந்துவிட்டாய் நீ
பேர் பார்த்து
ஊர் பார்த்து
மற்றொரு வீட்டுக்கு
உன்னை
ஒட்டு மொத்த மகிழ்வோடு
நாங்கள் அனுப்பி வைக்கிறோம்
போய் வா மகளே போய் வா!
நேரங்கிடைக்கும் போதெல்லாம்
எங்கள் நினைவு தோன்றும் போதெல்லாம்
வந்து போ மகளே! வந்து போ!
உன் மகிழ்வுகளை எங்களுடன்
கலந்து கொள்ள வந்து போ மகளே! வந்துபோ!
இவ்வளவு சொல்லியும் இன்னும் மீதமிருக்கின்றன
என் உணர்வுகள் எழுத்துக்கள் போதாது மகளே
போய் வா மகளே! போய் வா!
வணக்கம். உயிரோடமுள்ள உணர்வுக்குவியல். வாழ்த்துகள்.
பதிலளிநீக்கு