திங்கள், மார்ச் 22, 2010

காரைக்குடி கம்பன் கழக எழுபத்தியிரண்டாம் ஆண்டுவிழா

கம்பன் புகழ்பாடிக் கன்னித் தமிழ் வளர்க்கும் காரைக்குடி கம்பன் கழகத்தின் எழுபத்தியிரண்டாம் ஆண்டுவிழா வரும் மார்ச் மாதம் 27 ஆம் தேதி முதல் மார்ச் மாதம் 30 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. அன்பர்கள் அனைவரையும் வரவேற்கிறோம். கம்பன் மணிமண்டபம் நோக்கி அன்பர்கள் அனைவரையும் அழைக்கிறோம். நேரம் மாலை 5.30 மணி

27.3.2010

முதல்நாள் நிகழ்வில் கவிக்கோ அப்துல் ரகுமான் தலைமை ஏற்கிறார். தினமணி நாளிதழின் ஆசிரியர் கே. வைத்தியநாதன் அவர்கள் தொடக்கவுரை ஆற்றுகிறார். பழ. பழனியப்பன் நிறுவியுள்ள மீனாட்சி பழனியப்பா அறக்கட்டளை ஆய்வுச் சொற்பொழிவினை முனைவர் பழ. முத்தப்பன் கம்பனில் நான் மறை என்ற தலைப்பில் நிகழ்த்துகிறார். இதே தலைப்பிலான நூல் அன்றே வெளியிடப் படுகிறது. இதனை உமா பதிப்பகம் செளியிடுகிறார்கள்

மேலும் இந்நிகழ்வில் முனைவர் சொ. சேதுபதி எழுதிய வரலாறு நடந்த வழியில் என்ற நூலும் வெளியிடப்படுகிறது. மேலும் போட்டிகளில் வென்ற மாணவர்களுக்குப் பரிசுகள் வழங்கப்படுகின்றன.


மேலும் பள்ளத்தூர் பழனியப்பன் அவர்கள் எழுதிய யுத்த காண்ட கம்பராமாயண உரை நூல்களும் வெளிவருகின்றன.


இத்தோடு அன்று மதுரைக் கம்பன் கழகத் துணைத்தலைவர் திரு சங்கர சீத்தாராமன் அவர்களும் பங்கேற்கிறார்கள். இவர்களுடன் புதுச்சேரி கம்பன்கழகத் துணைத்தலைவர் வி.பி. சிவக் கொழுந்து அவர்களும் பங்கேற்கிறார்கள்.

28.03.2010
இன்று திரு சோ. சத்தியசீலன் அவர்கள் தலைமையேற்கிறார்கள். தி. அருணாசலம் அவர்கள் எழுதிய உவமை சொல்வதில் உவமையில்லாக்கம்பன் என்ற நூலும், அ. அறிவு நம்பி எழுதிய செம்மொழி இலக்கியச் சிந்தனைகள் என்ற நூலும் வெளியிடப்படவுள்ளது.


இதில் திரு. தெ. ஞானசுந்தரம் அவர்கள் தீதும் நன்றும் என்ற தலைப்பில் உரையாற்றுகிறார்கள்.


மேலும் கவிச்சக்கரவர்த்தி கம்பன் வாழ்க்கை வரலாறு என்ற குறும்படம் திரையிடப்படவுள்ளது.


மேலும் இரவு மணி ஒன்பதிற்கு இராம நாடகம் என்ற தலைப்பில் திருமதி கௌசல்யா சிவக்குமாரின் இசைப் பேருரை நடைபெற உள்ளது.


29.03.2010
இன்று இளம்பிறை மணிமாறன் அவர்கள் தலைமையில் பட்டி மண்டபம் நடைபெற உள்ளது. மகளிர் பட்டி மண்டபம். தலைப்பு தரும நெறிநின்ற தம்பியரில் தலை நின்றவர் யார்? என்ற தலைப்பில் கும்பன் என்ற அணியில் ருக்மணி பன்னீர் செல்வம் அவர்களும் சித்ரா சுப்ரமணியம் அவர்களும், வீடணனே என்ற தலைப்பில் விசாலாட்சி சுப்பிரமணியம் அவர்களும் கவிதா ஜவகர் அவர்களும் பங்கேற்கிறார்கள்.


30.03.2010

இன்று நாட்டரசன் கோட்டையில் விழாநடை பெறுகிறது. இந்த விழாவில் அ. அறிவொளி அவர்கள் தலைமை ஏற்கிறார். இதில் கோ. சாரங்கபாணி, கண. சுந்தர் ஆகியோர் பேசுகின்றனர்.


இவ்வகையில் நடைபெறும் இனிய விழாவிற்கு அனைவரும் வருக.

இணையமும் இனியதமிழும் முனைவர் க. துரையரசன், - நூல் விமர்சனம்



இணையமும் இனியதமிழும் முனைவர் க. துரையரசன், இசைபதிப்பகம், கும்பகோணம், விலை. ரு.60


இணைய இணைப்பில்லா வீடு உலகத் தொடர்பில்லா வீடாகி விடும். உலகின் அனைத்துத் தகவல்களை, புகைப்படங்களை, செய்திகளை, அதிசயங்களை என அனைத்தையும் அறிந்து கொள்ள உதவும் அமுதசுரபி இணையம் ஆகும். இவ்விணையம் குறித்துப் பல நூல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. அவற்றில் செய்திகள் இருக்கும். நல்ல தமிழ் இருக்காது. தமிழும் ஆங்கிலமும் கலந்து விரவிக்கிடக்கும்.
ஒரு முறை நான் பேருந்தில் சென்று கொண்டிருந்தேன். அருகில் ஒரு பல்தொழில் நுட்பக் கல்வி கற்கும் (பாலிடெக்னிக்) மாணவர் அவரின் தேர்விற்காகப் புத்தகத்தை மடியில் வைத்துக் கொண்டுப் படித்தவாறு இருந்தார். அவரின் புத்தகப் பக்கங்களைப் பார்த்ததும் எனக்குத் தூக்கி வாரிப் போட்டது.அவர் தமிழ் வழியில் படிக்கிறார். அவர் வைத்திருக்கிற புத்தகத்தில் அல்லது ஆசிரியர் அளித்தக் குறிப்பில் தமிழ் வார்த்தைகளான வைத்து, எடுத்து போன்ற வினைகள் மட்டுமே இருந்தன. மற்ற நிலையில் டையை எடுத்து, ஆரஞ்சு கலர் கிரீன் கலர் கலந்து, வெசலில் ஊற்றி .....இதுபோன்ற நிலையில் ஆங்கிலச் சொற்களின் தமிழ்ஒலிநடை மட்டுமே இருந்தது. இவர் தமிழில் படிக்கிறாரா? அல்லது தமிழால் படிக்கிறாரா என்ற சந்தேகம் இன்று வரை எனக்கு இருந்து கொண்டே இருக்கிறது.
இவ்வாறு ஆங்கில ஒலிபெயர்ப்பு கொண்ட தமிழ்நடையே பல கணினிப் புத்தகங்களின் நடையாக உள்ளது. இது மாற வேண்டும். மாற்றப்பட வேண்டும்.
இந்நிலையில் இருந்து மாறி நல்ல தமிழ் கொண்டு எழுதப்பட்ட நூல்தான் இணையமும் இனியதமிழும். புற அமைப்பிலேயே நூலின் கணம் தெரிந்துவிடுகிறது. உள் அமைப்பில் இன்னும் கனமான செய்திகள் தரப்பெற்றுள்ளன.
இணைய வரலாற்றை அறிமுகம் செய்வதாக முதல்கட்டுரை அமைகிறது. இக்கட்டுரையில் உலக அளவில், இந்திய அளவில், தமிழ்நாட்டு அளவில் இணைய வரலாறுகள் அலசப்படுகின்றன. தேவையான பல அடிப்படை செய்திகளை இக்கட்டுரை அள்ளி வழங்குகிறது. இரண்டாவது கட்டுரையும், முன்றாவது கட்டுரையும் தமிழ் இணையப் பல்கலைக் கழகத்தின் செயல்பாடுகளை எளிமையாக்கி ஆவனமாக்குகின்ற முயற்சியை உடையனவாகும். இதனோடு தமிழ் இணைய நூலகங்கள் பற்றிய தகவல்களும் இணைக்கப் பெற்றுள்ளன. கூடவே படங்களும் தரப்பெற்றிருப்பது படிப்பவர்க்கு இணையத்துடன் உறவாடுவதுபோலவே இருக்கிறது.
யுனிகோடு ஒருங்குறி இது அதிகமாக புழக்கத்தில் தற்போது உள்ள சொல்லாகும். செம்மொழி மாநாட்டிற்கான கட்டுரை முன்வரைவை ஒருங்குறியில் அனுப்ப வேண்டும் என்ற புதுமையால் இது அதிகமாக தமிழ்ப்பேராசிரியர்களிடம் பேச்சாகி நின்றது. இவ்வொருங்குறியின் இயல்பை ஒரு கட்டுரை விரிவாக்கி உரைக்கிறது.
இணைய இதழ்கள், வலைப்பூக்கள் பற்றிய கட்டுரைகள் தமிழ் இணையப் பயன்பாட்டாளர்களுக்குப் பல தகவல்களை வழங்கும் கட்டுரைகளாகும். மாணவர்களுக்கு பயன்படுவனவாக பின் இரு கட்டுரைகள் உள்ளன. கல்வி சார் இணைய தளங்கள், வேலைவாய்ப்பு இணைய தளங்கள் முதலியன அவையாகும்.
இவ்வாறு பல்முனை நோக்குடையதாக இணையத்தை அறிமுகம் செய்திருக்கும் இந்நூலாசிரியர் மேலும் பல நூல்களைத் தரவேண்டும் என்ற எதிர்பார்ப்பு உள்ளம் எல்லாம் எழுகிறது.
Copyright:thinnai.com 
Friday March 19, 2010 Copyright © Authors - Thinnai. All rights reserved.

பன்முகத்தமிழியல் - நூல் விமர்சனம்

பன்முகத்தமிழியல் (ஆய்வுக்கட்டுரைகள்) சு.மாதவன், செம்மொழி, தஞ்சாவூர், விலை.50 (9751330844)

ஆய்வுக் கட்டுரைகளை உள்ளடக்கிய நூல்கள் பல இன்றைக்கு வெளிவந்து கொண்டிருக்கின்றன. இதற்குக் காரணம் தமிழியல் கல்வி திறனாய்வு போக்குடையதாக இருக்கிறது, இயங்குகிறது என்பதே ஆகும். ஒரு பொருள் பற்றிய தொகுதி, ஒரே ஆசிரியர் எழுதிய கட்டுரைகளின் தொகுதி, பலரும் பல பொருள் பற்றி எழுதிய தொகுதி எனப்பல நிலைகளில் இவ்வாய்வுக்கட்டுரைத் தொகுப்புகள் வெளிவந்து கொண்டுள்ளன. இவ்வெளியீடுகள் அடையாளச் சான்று, தரச்சான்று, நடத்தும் நிறுவனம் போன்றன கருதி அவற்றின் தரத்திற்கு ஏற்ப மதிப்பு உடையனவாகவும் இருக்கின்றன. இத்தொகுதிகளில் உள்ள கட்டுரைகள் பல நிலைகளில் வாசிப்புத் தளங்களைப் பெறுகின்றன என்பது மட்டும் உண்மை.
ஆய்வரங்குகளில் அவை படிக்கப்படுகின்றன. பின்பு ஆய்வறிஞர்களின் இருக்கைக்குச் செல்கின்றன. நூலகங்களில் இருக்கின்றன. இது தவிர ஆய்வுத் தொகுப்பில் இடம்பெற்றுள்ள கட்டுரையாளர்கள் தம் கட்டுரைகளைத் தொகுத்துத் தனி நூலாக்கம் செய்யும் போது இவை மீளவும் அச்சுவடிவம் ஏறுகின்றன. இந்தப் பரவலாக்கம் வரவேற்கத்தக்கது. இருப்பினும் இக்கட்டுரைகளில் அவசரத்தன்மை, இடநெருக்கடி போன்ற குறைபாடுகள் இல்லாமலும் இல்லை.
இதே அடிப்படை வாய்ந்த பல அரங்குகளில் படிக்கப் பெற்ற கட்டுரைகளை முனைவர் சு. மாதவன் தொகுத்து பன்முகத் தமிழியல் எனத் தந்துள்ளார். இந்நூல் பதினோரு கட்டுரைகளை உள்ளடக்கி இருக்கிறது. பல தளங்களில் நூலாசிரியர்தம் சிந்தனைகள் சென்றிருப்பதை இத்தொகுப்பு காட்டுகின்றது.
நாளந்தாவும் காஞ்சியும் என்ற கட்டுரை படிக்கப் படிக்க பல புதிய செய்திகளைப் படிவர்க்கு அளிக்கின்றது. நாளந்தாவின் வரலாற்றுப்பிண்ணனியில் தருமபாலர், சுமதி சேனா என்ற இரு தமிழரகள் அந்தக் காலத்திலேயே அறிவு உலக நிலையில் போற்றப்பட்டவர்களாக இருந்தனர் என்ற அரிய குறிப்பினை இக்கட்டுரை வழங்குகிறது. தமிழகத்தில் பிள்ளைகளுக்கு வைக்கப் படும் பெயர்கள் குறித்து ஒரு கட்டுரை அமைந்துள்ளது. இக்கட்டுரை வித்தியாசமான கருப்பொருளுடையதாக உள்ளது. எண்பது விழுக்காட்டுப் பெயர்கள் தற்காலத்தில் தமிழ் மரபிற்கு மாறான (எதிரான கட்டுரையாசிரியர் கூற்றுப்படி) வடமொழி சார்ந்த பெயர்களாக இருக்கின்றன என்ற முடிவினை இக்கட்டுரை தெரிவிக்கிறது. மேலும் பெயர் சூட்டலில் பொருள், மரபு சார்பு போன்றன பின்தள்ளப் பெற்று கவர்ச்சி காரணமான பிடித்த பெயர் வைத்தல் என்பது தமிழ்ச்சூழலில் நிகழ்ந்து வருகிறது என்பதை இக்கட்டுரை தெளிவாக்குகின்றது.
திருவாசகத்தில் உள்ள பௌத்த சார்புடைய கருத்துகளை விளக்கும் கட்டுரை ஆசிரியரின் பௌத்த அறிவு நிலையை எடுத்துக்காட்டுகிறது. அதுபோல திருக்குறள், தொல்காப்பியம் குறித்துப் பல அறச் செய்திகள் இந்நூலுள் பதியப் பெற்றுள்ளன.
கவிதைக் கூறுகளுடன் விளங்கும் கலைஞரின் சங்கத்தமிழ், தமிழ நெறி விளக்கம் என்ற நூலில் உ.வே. சாமிநாதையர் கடைபிடித்துள்ள பதிப்பு நெறி, புத்தநெறிகளை உள்ளடக்கி நிற்கும் வேதாத்திரி மகரிஷியின் நெறிகள், சிதம்பரநாத செட்டியாரின் அறவியல் நோக்குநிலை போன்ற பல கருப்பொருளுடைய கட்டுரைகள் பல தளங்களைப் படிப்பவர்க்கு அறிமுகம் செய்விக்கின்றன.
நிறைவுக் கட்டுரை தமிழ்ப் பாடத்திட்டம் குறித்தது ஆகும். போட்டித் தேர்வுகளில் பத்தாம் வகுப்புத் தமிழ்ப்பாடத்திட்டமும், பன்னிரண்டாம் வகுப்புத் தமிழ்ப்பாடத்திட்டமும் தேர்வுக்களனாக அறிவிக்கப்படுகின்றன. பட்டப்படிப்பு படித்து முடித்துவிட்டு வேலை தேடும் இளைஞர்களுக்கு மீண்டும் பத்தாம், பன்னிரண்டாம் வகுப்புப் பாடப்புத்தகங்களைத் தேட, படிக்க வைக்கும் பின்னிலை ஏன் ஏற்படுகிறது என்ற கேள்விக்குப் பதில் தேடியே ஆக வேண்டும்.
பட்டப்படிப்பில் பகுதி 1. தமிழ் என்ற நிலையில் வைக்கப் பெறும் பாடப்பகுதிகளை விட பத்தாம் .... வகுப்புப் பாடப்பகுதிகள் அறிவுத் திறன் சார்ந்தவை, செய்முறைப் பயிற்சி சார்ந்தவை என்பதே மேற்காட்டியே கேள்விக்குப் பதில் ஆகும். இதனாலேயே பட்டப்படிப்புத் தமிழ்ப் பாடப்பகுதி தேர்வுக்களனாகக் கொள்ளப் பெறுவதில்லை எனக்கூறுவதில் ஒன்றும் தவறில்லை.
இந்தக் கருத்தை அடியொற்றி இந்நூலாசிரியர் பட்டப்படிப்பில் தற்போது வைக்கப் பெற்றுள்ளத் தமிழ்ப்பகுதிப் பாடங்களில் உள்ள குறைகளைக் காட்டியும் அவற்றைக் களைந்தும் ஆன முன்வரைவை இக்கட்டுரைக்குள் தந்துள்ளார்.
"பெரும்பாலான தமிழாசிரியர்களிடம் நிலவும் பொறுப்பற்ற தன்மை, மொழி ஆசிரியர்களே மொழி ஆளுமைத்திறனை வளர்த்து எடுத்துக் கொள்ளாமை, கல்வித்துறை மொழி ஆளுமைத் திறனை வளர்த்துக் கொள்வதற்கான புதிய புதிய பாடத்திட்டங்களை காலவளர்ச்சிக்கு ஏற்ப புதுக்காமை'' போன்ற காரணங்களை இந்நூலாசிரியர் தமிழ்க்கல்வியில் ஏற்பட்டுள்ள தடைகளாகக் கருதுகிறார். அப்படியே நூற்றுக்கு நூறு இது உண்மை. இத்தடைகளை உடைத்தெறிந்து தக்க நிலையில் தமிழ்ப்பாடப்பகுதி அமைய ஒரு பாடத்திட்டத்தையும் முனைவர் மாதவன் அவர்கள் வழங்கியிருக்கிறார்.அவர் மிகப் பெரிய பொறுப்புகளுக்கு வரும்போதாவது இந்நிலை சீறாகாட்டும்.
இவ்வகையில் குறிக்கத்தக்க பல கருத்துக்களை அள்ளி வழங்கும்

சனி, மார்ச் 13, 2010

இந்திய மொழிச் சிறுகதைகளில் பெண்கள் படைப்பில் பெண்கள்



லியோ ஜோசப் அவர்களால் மொழிபெயர்க்கப் பெற்ற சிறுகதைத் தொகுப்பின் பெயர் இந்தியமொழிச் சிறுகதைகள் ஆகும். இச்சிறுகதைத் தொகுதி பதினைந்து கதைகளை உள்ளடக்கியது. பன்னிரண்டு மொழிகள் சார்ந்து வெளிவந்த இக்கதைகளை இந்தியன் லிட்டரேச்சர் என்ற இதழ் ஆங்கில இதழ் வழியாக வாசித்து அதன் பின்னர் தமிழில் இக்கதையின் மொழிபெயர்ப்பளார் மொழி பெயர்த்துள்ளார். எனவே இந்திய மணம் கமழும் தொகுதியாக இத்தொகுதி விளங்குகிறது.
ஆசிரியரிடம் நடத்திய உரையாடலின் படி இத்தொகுதியில் மொத்தம் நான்கு கதைகள் பெண்களால் படைக்கப் பெற்றுள்ளன. அவற்றின் தலைப்புகளும், அதனை எழுதிய படைப்பாளர்கள் பெயரும் பின்வருமாறு.
சந்தியா ராகம் மால்டி ஜோஷி (ராஜஸ்தானி), வெறுமை உஷாபாண்டே(இமாசலம்) , ஐனகி மைனி மகந்தா(அஸ்ஸாமி), மறுக்கப்பட்ட பாதை சரஸ்வதி அம்மா (மலையாளம்) என்பன அவையாகும்.
சந்தியா ராகம் என்ற கதை வெளிநாடுகளில் இருக்கும் மகன்கள், மகள் போன்றோரால் அரவணைக்கப்படாத அல்லது இவளின் அரவணைப்பு வேண்டாத ஒரு வயதான முதாட்டி பற்றிய கதை ஆகும். இம்முதாட்டியின் கணவன் பெரிய செல்வந்தர் என்றாலும் இவர் இறந்தபின் மகன்கள், மகள் வெளிநாடு சென்றுவிட்ட காரணத்தால் தனிமையை இம்முதாட்டி சந்திக்கிறாள். இதனால் வெறுப்படைந்த இம்முதாட்டி தன் வீட்டைத் தங்கி உண்ணும் விருந்தினர்க்கு வாடகைக்கு விடுகிறாள். இது பணத்திற்காக அல்ல. அவளின் தனிமையை இனிமையாக்க. இவளிடம் வளர்ந்தவர்கள் இவளைப் பார்க்க வரும்பொழுது தன்மக்கள் பார்க்க வருவதாக அவள் எண்ணி மகிழ்கிறாள்.
வெறுமைஒரு ஐ. ஏ. எஸ் முடித்த திருமணம் வேண்டாத பெண் அதிகாரியின் வீட்டிற்கு விருந்தினராக கணவனுடன் வரும் தோழி பற்றிய கதை இது. இப்பெண் அதிகாரி தன் விருப்பத்தை தன் வாழ்வில் பல இடங்களில் காட்டுமளவிற்குச் செல்வச் செழிப்புடனும், அதிகாரத்துடன் வாழ்கிறாள். அதில் அவளுக்கு பெருமை உண்டு. இருப்பினும் குளிரான மாலை நேரத்தில் கணவனுடன் நெருக்கத்தோடு இருக்கும் தோழியின் நிலை அவளுக்கு அவளின் வெறுமையை உணர்த்தி விடுகிறது.
ஜானகி என்ற கதை இராவணனின் அரண்மனை விட்டு வந்த சீதையின் நிலை பற்றிய கதையாகும். இக்கதையில் இராமன் சமுகக் காரணங்களைக் காட்டிச் சீதையைத் தான் ஏற்கமுடியாது என்கிறான். இதனால் அவளை இலட்சுமணன்,விபீடணன், சுக்ரீவன் போன்றோரில் யாரையாவது திருமணம் செய்துகொள்ள வேண்டுகிறான். இது பொறுக்க முடியாத சீதை நெருப்பில் குளிக்கிறாள். இதுவே இக்கதையின் மையமாகும்.
மறுக்கப்பட்ட பாதையில் மருத்துவப் படிப்பு படித்த ஒரு பெண்மணி தன்னை வெறுத்து ஏமாற்றி விட்டுச் சென்ற முன்னாள் காதலனைச் சந்திக்கும் சூழலை உடையது. இந்த முன்னாள் காதலன் வாழ்வில் பல இன்னல்களைச் சந்தித்துத் தற்போது தள்ளாத வயதில் இருக்கிறார். இவரின் மனைவி தீராத நோயால் அவதிப்படுகிறாள். இந்நேரத்தில் உதவி செய்வதற்காக ஒரு திருமணத்திற்கு அவ்வூருக்கு வந்த பெண் மருத்துவர் இவர்தம் வீட்டிற்கு வருகிறார். வந்து நோய் முற்றிய பழையகாதலனின் மனைவியை குணமடையச் செய்ய முயற்சிகள் எடுக்கிறாள். இவளிடம் தன் வாழ்வில் ஏற்பட்ட ஏமாற்றத்தைச் சொல்லவேண்டாம் என்று நினைத்த பழைய காதலன் எல்லாவற்றையும் சொல்லிவிடுகிறான். ஆனால் இவள் தனக்கு அவரால் மறுக்கப்பட்ட பாதையில் ஏற்பட்ட நன்மைகளை எண்ணிய வண்ணம் விடைபெறுகிறாள்.
இந்நான்கு கதைகளும் பெண்களால் படைக்கப்பட்ட கதைகள் ஆகும். இந்நான்கு கதைகளிலும் முதாட்டி, ஐ.ஏ.எஸ் படித்த பெண் அதிகாரி, ஜானகி, மறுக்கப்பட்ட பாதையைப் பெற்ற மருத்துவர் ஆகிய பெண்களை மையமிட்டே கதை படைக்கப் பெற்றுள்ளது.
குறிப்பாக இப்பெண்களுக்கு ஆண்களால் ஏற்பட்ட பாதிப்புகளுக்கு விடை தரவேண்டிய நிலையில் ஆண்கள் படைக்கப் பெற்றுள்ளனர்.
வயதான முதாட்டிக்கு மகன்கள் என்ற ஆண்சார்புடைய தரப்பினால் பாதிக்கப் பெற்றுள்ளாள். இவளுக்கு பெறாத பிள்ளைகள் மகன்களாக இருந்து விடை தருகின்றனர்.
ஐ.ஏ. எஸ் அதிகாரிக்கு மணவாழ்க்கை ஏற்படா நிலைக்கு அவள் பக்கத்தில் காரணம் இருந்தாலும் ஆண்வயப்பட்ட இந்திய வாழ்க்கையில் ஆணுக்கும் முக்கிய காரணம் உண்டு. தக்க ஆண் அவளை மணம் முடிக்க முன்வரஇயலாத சூழலில் அவள் தோழியின் நெருக்கமான வாழ்வைப் பார்த்து வெறுமையை உணர்கிறாள் என்றாலும் அவள் ஆண்சமுகத்தைப் புறம்பாகவே பார்ப்பதாகக் கொள்ளலாம்.
ஜானகி கதை முற்றிலும் இராமன் இழைத்த அநியாத்தைத் தட்டிக் கேட்கும் நிலை உடையதாக உள்ளது.
மறுக்கப்பட்ட பாதை தன்னை மறுத்த காதலனை வாட்டும் பாத்திரமாக பெண் டாக்டர் படைக்கப் பெற்றுள்ளார்.
மேலும் இந்தியச் சமுதாயத்தில் பெண்கள் உயர் பதவிகளில் வந்துவிட்டார்கள் என்பதன் அடையாளமாகவும் இக்கதைகளின் பெண் மாந்தர்கள் விளங்குகின்றனர்.
இவ்வகையில் இந்தியப் பெண் எழுத்துக்களில் பெண்தன்மை என்பது ஊடாடிக் கொண்டுள்ளது என்பதை உணரமுடிகின்றது. இதனை மேலும் வலியுறுத்த கதைகளில் உள்ள உரையாடல்களை முன்வைப்பது சிறப்பாகும்.
"நேஹா ஆண்ட்டியிடம் விடை பெற்ற போது ஆண்ட்டி நேஹாவிற்கு ஒரு சந்தேரி சேலையும், ஒரு ஜோடி மிஞ்சியும், வளையல்களும் கொடுத்து அனுப்பினாள். ஆண்ட்டி நேஹாவைக் கட்டித் தழுவினாள். நேஹா ஆண்ட்டியைத் தலைவணங்கிக் கும்பிட்டாள்'' ( சந்தியாராகம்) என்ற பகுதியில் ஒரு பெண் மற்றொரு பெண்ணிற்குச் செய்யும் மரியாதையில் பெண்கள் விரும்பும் பொருட்கள் இடம் பெற்றிருப்பது பெண்மையமுடையதாகும்.
"அவர்கள் மிக்க மகிழ்ச்சியுடன் வந்து ஒரு பெஞ்ச் மீது அமர்ந்தார்கள். அந்த பெஞ்ச் ஆராதனா நிற்கும் ஜன்னலுக்குக் கீழே உள்ளது என்று அவர்களுக்குத் தெரியாது. ஏப்ரல் மாதத் தென்றல், ஜொலிக்கின்ற நிலவொளி, ஒரு மென்மையான சிரிப்புச் சத்தம், காதில் விழாத முணுமுணுப்புடன் மிக இலேசாக ஊடுறுவியது. .. ஆராதனாவிற்கு நீண்ட நேரமாகச் சலிப்பூட்டிய மேத்தாவின் கலையிழந்த அந்தக் கிழடு தட்டிப்போன முகம் இப்போது மாற்றம் பெற்றிருந்தது. அது கலையாக ஜீவன் உள்ளதாக புதுப் பொலிவடைந்ததாகத் தெரிந்தது. அன்பால் மின்னுகிற ஓர் இளைய இதயம்... '' (வெறுமை)
இதில் மிக நளினமாக பெண் மையலை இந்தப் பெண்படைப்பாளர் வெளியிட்டுள்ளார். பெண் அடையும் காதல் இன்பத்தைப் பெண்ணே பார்த்து ரசிக்கும் இந்த மனப்போக்கு ஆண்படைப்பு மையத்தில் இருந்து வேறுபட்டது என்பதைப் படிக்கும் போதே உணரமுடிகின்றது.
இராவணனின் பாதுகாப்பில் பல வருடங்கள் நீ இருந்ததால் எல்லாரும் உன்னுடைய கற்பில் சந்தேகப் படுவார்கள். பொது மக்களின் எதிர்மறையான எண்ணங்களால் ஏற்படுகின்ற பயமே உன்னை நான் மீண்டும் ஏற்றுக் கொள்வதில் தடங்கலாக உள்ளது....
உன் எதில்கால் நன்மைக்காவே இது என் அறிவுரை வார்த்தை. லட்சுமணன், விபீடணன், சுக்ரீவன் ஆகிய இவர்களில் யாராவது ஒருவனை உன் கணவனாகத் தேர்ந்தெடுத்துக்கொள் (ஜானகி) என்ற இராம ஆணின் சொற்களில் உள்ள சந்தேக உணர்ச்சி படிப்பவருக்கு எளிதில் புரிபடுகிறது. மக்கள் என்பது ஆண் சார்ந்த இனத்தை மட்டுமே குறிக்கும் ஒன்றொழிப் பொதுச்சொல்லாக இங்குப்பயன்படுத்தப்பட்டுள்ளது. ஆண்கள் சந்தேகப்படலாம். பெண்களுமா இந்தச் சந்தேகத்தைப் படுவார்கள். அவர்களாவது உண்மையை உணரமாட்டார்களா? பெண்டீரும் உண்டுகொல் எனக் கண்ணகி கேட்பது போன்று பெண்டீர் சீதைக்குச் சாதகமாகப் பேசமாட்டார்களா... இதற்கு இடம் தராமல் இராம வார்த்தை ஆண்சார்புடன் இயங்குகின்றன. இவை பெண்ணுக்கு எதிராகக் கட்டப்பட்டுள்ள கட்டுமானத்தின் உண்மைநிலையை உரைக்கும் வார்த்தைகள் ஆகும்.
"நானும் என்போன்ற பெண்களும் நடந்து வந்த பாதையை மக்கள் மறுக்கப்பட்ட பாதை என்கிறார்கள். என்னுடைய நோக்கத்தை ஒத்துக் கொண்டவர்களின் எண்ணிக்கையை அதிகரித்து அப்படிப்பட்ட மக்களை எதிர்த்துப் போராட நான் விரும்புவதில் ஆச்சரியம் ஒன்றுமில்லையே. அது இயல்பு தானே''( மறுக்கப்பட்ட பாதை) என்ற டாக்டர் விசாலாட்சியின் மறுக்கப்பட்ட இதயம் தன்னை ஏற்கப்படுவதை விரும்புகிறது.
இவ்வகையில் காணும் போது பெண்களின் எழுத்துக்கள் பெண்ணுலகின் உண்மைப்போக்கினை அறியச் செய்வன. அவற்றின் கணம் கண்டு உணரத்தக்கது. குறித்து நோக்கிப் பெண்ணிய அணுகுமுறையோடு அவற்றை அணுகினால் அவை மேலும் பெண்ணுலகிற்குப் பெருமை சேர்க்கும் என்பது தெரியவருகிறது.


--------------------------------------------------------

பயன்பட்ட நூல்
1. லியோ ஜோசப், இந்திய மொழிச்சிறுகதைகள், ஸ்ரீ செண்பகா
பதிப்பகம், சென்னை, 2010

சனி, மார்ச் 06, 2010

இணையதமிழின் ஒருங்கிணைப்பு



தமிழ் இணையப் பரப்பு விரிந்து கொண்டே போகின்றது. கட்டுக்குள் அடங்காத நிலையில் வலைப்பதிவுகள் வளர்ந்து கொண்டே இருக்கின்றன. வலைப்பூ, வலைதளங்கள், மின்குழுமங்கள், இணைய நூலகங்கள், இணைய இதழ்கள் என்ற பல் கோண வளர்ச்சி பெற்றுள்ள இற்றை நிலையில் இவை அத்தனையையும் இணைத்து ஓர் ஒருங்கிணைப்பை நிகழ்த்த வேண்டுவது அவசியத் தேவையாகும். ஓரே தளத்தில் ஒரே நிரலில் அத்தனையையும் கோர்த்து வைத்துக் கொண்டால் தினம் தினம் பல தளங்களில் தேடி அலைய வேண்டிய தொல்லை இருக்காது. தமிழ் உலகை ஒரே தளத்தில் கண்டு உலக அளவில் ஒற்றுமை உணர்வையும் வளர்க்க இயலும். ஒன்று கலக்கவும் இயலும்
இணைய நூலகங்களின் இணைப்புப்பாலம்
குறிப்பாக முதலில் செய்ய வேண்டியது இணைய நூலகங்களுக்கான இணைப்பு ஆகும். மென்நூல்களை இலவசமாகப் பார்வையிட ஏற்ற வகையில் பலப்பல இணையக் குழுக்கள் இயங்கி வருகின்றன. இவை அனைத்தும் ஒன்று கூடி ஒருங்கிணைந்த உலகத் தமிழ் இணைய நூலகத்தை உருவாக்க வேண்டும். ஒரு சில மின்மடல்களில் இதனைச் சாத்தியமாக்கிவிட இயலும்.
இவ்வாறு செய்கையில் எடுத்துக்காட்டிற்குச் சிலப்பதிகாரம் குறித்த அனைத்து மென் நூல்களையும் பார்வையிட வசதியாகிவிடும். "நூலகம்'' என்ற இணைய நூலகத்தளம் தன் தளத்தில் ஏறக்குறைய அனைத்து நூலகத் தொடர்புகளைத் தந்து இதற்கு முன்மாதிரியாகி உள்ளது. இவ்வாறு ஒரு ஒருங்கிணைந்த நூலகத்தை உருவாக்குகையில் அதற்கான முறைமைகள் சரிவர வகுக்கப் பட வேண்டும். இம்முறைமைகளில் கீழ்க்காணம் செயல்பாடுகள் முக்கியமாகக் கவனிக்கத்தக்கவை ஆகும்.
1. நூலகங்கள் தன் தனித்தன்மையோடு இயங்க உரிமை தரப்பட வேண்டும். அதே நேரத்தில் ஒருங்கிணைப்பிற்கு வழி வைக்கப் பட்டு அது ஒரு பொதுத்தள மரபுக்கு உட்பட்டதாகவும் இயங்கவேண்டும்.
2. எதிர்காலத்தில் இடம் பெறும் நூல்களும் அந்தந்த வகைமைக்குள் சென்றுசேரும் படியான வசதி ஒருங்கிணைந்த நூலகத் தளத்திற்கு வேண்டும்.
3. ஒரே நூல் அனைத்துத் தளங்களிலும் வெவ்வேறு முறையில் அமைந்திருந்தாலும் ஏற்கப் பட வேண்டும். அவற்றை ஒதுக்க வேண்டாம். அதாவது பிடிஎப் கோப்பு, சாதாரண கோப்பு என்று கோப்பு எவ்வடிவில் இருந்தாலும், அல்லது உரை இல்லாது, உரையோடு, எளிய உரை, அல்லது மரபுரை போன்ற எதனோடு இருந்தாலும் நூல்கள் ஒரே தலைப்பில் அமையும்படியான மென் பொருள் உருவாக்கப்பட்டு செயல் படுத்தப்பட வேண்டும்.
4. தேடுதல் வசதி மேம்படுத்தப்பட வேண்டும்.
5. பல்வகைப் பகுப்புடையதாக இந்நூலக அட்டவணை அமையவேண்டும். பொருளடிப்படை, ஆசிரியர் அடிப்படை, கால அடிப்படை போன்ற அடிப்படைகளில் அட்டவணை பெறத்தக்கதாக இருக்க வேண்டும்.
இப்படிச் செய்ய முனைந்தால் மதுரைத்திட்டம், சென்னை லைப்ரரி என்று ஒவ்வொரு நூலுக்கும் தேடு பொறி தேடி எழுத்துரு தேடி அலைந்து நேரம் போக்கத் தேவையில்லை. வசதியான நூலக இணைப்பைப் பெற்று அமைதி கொள்ள முடியும்.
இந்தப் பகுதி மின்தமிழ் மடல் குழுமத்தில் மிகப் பெரிய அளவில் விவாதிக்ப்பட்டது. ஏறக்குறைய ஐம்பது பக்கங்களுக்கு மேலே காட்டப் பெற்ற செய்தி குறித்து விவாதிக்கப்பட்டது. திருவாளர்கள் கோபி, கண்ணன், சந்திரசேகரன், வினோத், இன்னம்பூரன் போன்ற இணைய நூலகப் பதிவாளர்கள் கலந்து கொண்டு தத்தம் கருத்துக்களை எடுத்துரைத்துள்ளனர்.
தற்போதைய கணக்கின்படி பின்வரும் அளவில் நூல்கள் இணையப் பதிப்பாக வந்துள்ளன என்பது தெரியவருகிறது.
நூலகத்திட்டம் - 5000
தமிழம் - 1200
தமிழ் மரபு அறக்கட்டளை - 200
இன்ரர்நெற் ஆர்க்கைவ் - 200
யூலிப் - 300
ஏனையவை - 200
என 7000 இணையத்தில் உள்ளன. இவற்றில் சுமார் 4800 மின்னூல்களின் விபரங்கள் ஏற்கனவே இணைக்கப்பட்டுள்ளன.
மேலும் இவர்களின் விவாதக் கருத்துக்களின் அடிப்படையில் நூலகச் செயல்பாட்டில் சில வரைமுறைகளை வகுத்து கொள்ள முடிகின்றது.
இணையப் பதிப்பில் பதிக்கப் பெற்றுள்ள நூலைத் தேடித்தந்தவர், அதனை வலையேற்றியவர், அதனை கணினி அச்சு ஆக்கியவர் போன்றவற்றையும் தருவது நூலாசிரியர், உரையாசிரியர் போன்றவர்களை நூல் பகுயில் குறிப்பிடுவது போன்று முக்கியத்துவம் வாய்ந்தது.
மேலும் நூல்களைத் தரவிரக்கம் செய்கின்ற வாய்ப்பை முலத்தளத்தில் இருந்தே பெறவேண்டும். இதன் முலம் குறிப்பிட்ட அத்தளத்தின் பயன்பாட்டை பெருக்க இயலும். தரவிரக்கம் என்பதை மற்ற நூலகத்தளங்கள் எக்காரணம் கொண்டும் முல தளத்தின் துணையின்றிப் பெறும் முறையில் அமைக்கக் கூடாது.
மற்றவர்களின் உழைப்பில் விளைந்த நூல் பதிவுகளை, இணைப்பைப் பெறுகையில் அவர்களின் அனுமதி பெற்றே பயன்படுத்தப்படவேண்டும் என்பது இணைய நடைமுறையாக்கப்பட வேண்டும்.
தன்னலமின்றி உழைத்துத் தமிழை, தமிழ் நூல்களை ஏற்றம் செய்யும் இணையவியலார்களை உலகம் அறிந்து கொள்ள வேண்டும். ஒரு சில நூல்களையாவது தமிழர் ஒவ்வொருவரும் பதிவிட்டு இணைப்படுத்தவேண்டும். குடிசைத் தொழில் போல இப்பணி நடைபெற வேண்டும்.
மேற்கருத்துக்கள் மின்மடல்கள் வழியாக பெறப்பட்ட செய்திகளாக நான் உணருகிறேன்.
வலைப்பூக்களின் சங்கமம்
அடுத்து வலைப் பூக்களின் செய்திகளை அன்றாடம் காண தமிழ்மணத்திற்கும், தமிழிஷூக்கும், திரட்டிக்கும் செல்ல வேண்டியிருக்கிறது. அங்குச் சென்றாலும் நம் பதிவர்கள் வளமானவர்கள். ஒரே பதிவை அத்தனை வலைப்பூ மையங்களுக்கும் அனுப்பித் திரும்பத்திரும்பப் பார்த்தையே பார்க்க வேண்டிய சூழலை உண்டாக்கி விடுவார்கள்.
வலைப்பூ மையங்கள் அனைத்தும் ஒரு குடைக்குள் வந்துவிட்டால் வலைப்பதிவர்களுக்கும் பதிவை காணவைக்கும் செயல் எளிமையாகிவிடும். பார்ப்போருக்கும் ஒரே நேரத்தில் அனைத்து இடுகைகளையும் பார்க்க வாய்ப்பு ஏற்பட்டுவிடும். திரும்பத் திரும்ப பார்த்த வலைப்பூச் செய்தியையே பார்க்க வேண்டிய நிலை ஏற்படாது.
வலைப்பூக்களின் செய்திகளைச் சேமித்து ஆசிரியர் அடிப்படையில் தொகுக்கும் தொகுப்புப்பணி தமிழ்மணத்தில் சிறப்பாக உள்ளது. இவ்வாறு தொகுக்கப்படும் போது அது தரமான எதிர்காலத்திற்குவேண்டிய செய்தியா என்று வலைப் பதிவரிடமே கேட்டு அதன்படி அத்தொகுப்பை நிரந்தரப் பதிவாக உருவாக்கினால் தமிழ் மேம்படும். வலைப்பதிவில் எழுதுவோர் தரம் என்பது தற்போது மேம்படுத்தத்த தக்கதாகவே உள்ளது.
இணைய இதழ்களின் மையம்
இணைய இதழ்கள் ஒவ்வொரு நாட்டில் வாழும் அந்நாட்டுத் தமிழர் சார்ந்த செய்திகளைத் தாங்கி வருகின்றன. இதன் முலமாக பல நாடுகளில் வாழும் தமிழர்தம் வாழ்க்கை முறை, அவர்கள் எதிர்கொள்ளும் நெருக்கடிகள் முதலானவற்றைத் தெரிந்து கொள்ள முடிகின்றது. தமிழ் மக்களின் உயிர்நாடியாக விளங்கும் இவ்விதழ்கள் இணைந்த ஒரே இதழ்த் தொடுப்புத் தளம் கட்டாயத் தேவையாகும். இணைய இதழ்கள் வெளிவருகின்ற நாட்களும் வெவ்வேறாக இருப்பதால் அந்நாளைக் கருத்தில் கொண்டு புதிய செய்திகளைக் காண வேண்டிய சிக்கல் தீரவும் இது வழி செய்யும்.
இணைய இதழ்களின் மையத்தை உருவாக்குகையில் அச்சில் வரும் இதழ்கள் தரும் செய்திகளை இணைக்க வேண்டிய அவசியம் கூடத் தேவையில்லை. ஏனெனில் அதில் பல சட்டச் சிக்கல்கள் உருவாகலாம். இணைய இதழ்களுக்கான ஓருங்கிணைப்பாகவே இதனை உருவாக்கிக்கொள்ளலாம். இதிலும் இணைய இதழ்களின் தனித்தன்மை பாதிக்காமல் காப்பாற்றப் படவேண்டும். காப்புரிமையும் காப்பாற்றப்படவேண்டும்.
இணையதளங்களின் தொகுப்பு
அடுத்துத் தமிழ் இணைய தளங்களின் தொகுப்பாகச் செயல்படும் மையம் ஒன்று ஏற்பட வேண்டும். இதனோடு விக்கிபிடியா, கலைக்களஞ்சியம் போன்றவற்றின் தொடுப்புகளும் இணைக்கப்பட்டு ஒருங்கிணைந்த தமிழ்த்தள மையம் ஏற்பட்டால் தமிழர்கள் ஒன்றுபட இயலும். இணைய தளங்களின் வரிசையின் அவற்றின் பாடுபொருளுக்கு ஏற்பவும், நாடு அளவிலும் வகைமை செய்யப் பெறல் வேண்டும்.
இதுபோன்று தமிழர் இசை, தமிழர் வரலாறு, தமிழர் கலை போன்றனவற்றைக் காட்டக் கூடிய காணொலிகள், வலைதளங்கள், ஒலித்தொகுப்புகள் போன்றனவும் ஒருங்கிணைக்கப் பெறவேண்டும். இது போன்று மின்மடல் குழுக்கள் ஒருங்கிணைப்பும் நிகழ வேண்டும்.
இவற்றுக்கு முன்மாதிரியாகத் தற்போது தமிழ் வானொலிகள் விளங்குகின்றன. பல தளங்களில் தமிழ் வானொலித் தொடர்புகள் பதிவுகளாகவும், நேரடியாகக்கேட்கவும் கூடிய அளவில் தொகுக்கப் பெற்று வருவது பாராட்டுக்கு உரியது.
விக்கிப்பீடியா போன்ற தளங்களில் தரப்பெற்றுள்ள வெளி இணைப்புகள் போன்றவையும் இவ்வகையில் நோக்கத்தக்கனவே.
தமிழர்க்கான அல்லது தமிழ்ச்செய்திகளுக்கான மின்னஞ்சல், தேடுபொறி, மேற்சொன்ன அனைத்தும் இணைந்த ஒரே தளம் உருவாக வேண்டியது அவசியத் தேவை என்பது மட்டும் உறுதி. இருப்பினும் நாட்டுஅடையாளம், பிரதேச அடையாளம் போன்றவற்றிற்கான தனித்தன்மை இதனுள் இருக்க வேண்டும் என்பதையும் கவனத்தில் கொள்ளவேண்டும். இவ்வகையில் செயல்பட தமிழர்க்கு மனம் வேண்டும். பணம் வேண்டும். இவற்றைக் கடந்து எளிதில் வெற்றி பெற தமிழ் இணைய உலகம் பல இணைய மாநாடுகளை நடத்திடவும் வேண்டும்
--