சனி, ஜனவரி 24, 2009

அகப்பாடல்களில் புறச் செய்திகள்


சங்க இலக்கியம் அகம் புறம் என்ற இரு பாடுபொருள்களை உடையது ஆகும். அகம் என்பது மனதின் அக நிகழ்வாகிய காதலை மையப்படுத்துவதாகும். புறம் என்பது புறத்தில் வெளிப்படுவதாகிய பெருமைக்கு உரிய செயல்களை மையமிட்டதாகும்.அகம் என்பதற்கு ''போக நுகர்ச்சியாகலான் அதனான் ஆய பயன் தானே அறிதலின் அகம் '' (தொல்காப்பியம் இளம்பூரணர் உரை 3) என உரைகாணுகின்றார் இளம்பூரணர். அகப் பொருள் என்பது அனுபவிப்பனுக்கே பயன் தரத்தக்கது என்ற நிலையில் இவ்விளக்கம் ஏற்படையது.இருப்பினும் அகப்பாடல்களில் அனுபவிப்பவன் தம்மை அல்லது அனுபவிப்பை அளிப்பவரை அடையாளம் காட்டிவிடக் கூடாது. அதனையே தொல்காப்பிய நூற்பா சுட்டி ஒருவர் பெயர்கொள்ளப் பெறாஅர்' என்று வரையறை செய்கின்றது.சுட்டி ஒருவர் பெயரோ அவரின் மரபுப் பெயரோ வெளிப்பட்டு விட்டால் அகப்பாடலாக அது இருந்தாலும் புறப்பாடலாகவே கொள்ளப்படும் என்பது அறிஞர் முடிபு. நெடுநல்வாடை நல்ல அகப்பாடல் எனினும் அதனுள் இருக்கும் பாண்டிய மரபை உணர்த்தும் வேப்பிலை இடமபெற்றுவிட்டபோது அது அகத்தைக் கடந்துவிட்ட புற நூலாகக் கருதப்படுவிடுகின்றது.அதுபோல புறநானூற்றில் ஒரு சில பாடல்கள் தன்மையால் அகமாக இருந்தாலும் அதன் தன் வெளிப்பாட்டுத் திறத்தால் புறமாகக் கொண்டுத் தொகுக்கப் பெற்றுள்ளன.
என்னைக்கு ஊர் இஃது அன்மையானும்என்னைக்கு நாடு இஃது அன்மையானும்ஆடு ஆடு என்ப ஒருசா ரோரேஆடு அன்று என்ப ஒருசா ரோரேநல்ல பல்லோர் இரு நன் மொழியேஅம் சிலம்ப ஒலிப்ப ஓடி எம் இல்முழாஅரைப் போந்தைப் பொருந்தி நின்றுயான் கண்டனன் அவன் ஆடு ஆகுதலே (புறம் 85)
என்பது புறநானூற்றில் தொகுக்கப் பெற்றுள்ள ஒரு பாடல் ஆகும். இப்பாடல் பெருங்கோழிநாய்கன் மகள் நக்கண்ணையார் சோழன் போரவைக் கோப்பெருநற்கிள்ளியைப் பாடிய பாடலாகும். இப்பாடலைப் பாடியவர் பெயரோ அல்லது அதன் புறத்தன்மையோ தெரியாமல் மறைத்து வைத்துவிட்டால் இது நல்ல அகப்பாடலாவே இருக்கும். இப்பாடலில் தலைவன் பெயர் சுட்டப் படவில்லை. அவன் தலைவன் எனவே விளிக்கப்படுகிறான். இது அகமரபு. ஆனால் அந்த அகமரபிற்குள் இருக்கும் தன்னை வெளிப்படுத்தும் தன்மை அகத்தின் பொதுமையை ஒழித்துவிடுகிறது.
காதல் என்ற உணர்வினை வெளியிடும் பாடல்கள் அக்காதலுக்கு உரியவர்களின் பெயர்களை வெளிப்படுத்தாமல் நிற்கும்போது அவை உலகப் பொதுமையைப் பெற்றுவிடுகின்றன. மேற்சொன்ன பாடல் உலகப் பொதுமைக்கு இடம் தராமல் தன் அனுபவ வெளிப்பாடாக மட்டும் அமைந்து விடுகின்றது. எனவே இதனை அகப்பாடலாக ஆக்காமல் புறத்திணைப் பாடலாக்கிக் கைக்கிளை என்ற துறையைத் தொகுப்பித்தவர்கள் தந்துத் தொகுத்துள்ளனர்.
இவ்வாறு அகத்தில் புறமும் புறத்தில் அகமும் மாறி மாறிப் புகும் போக்குகள் சங்க நூல்களில் காணப்படுகின்றன. அகத்தின் எல்லை கடக்கும் போது ஒரு பாடல் புறமாகிவிடும். புறத்தின் பக்கம் சென்றுவிடாமல் புறச் செய்திகளை உவமைகள் வாயிலாக நிகழ்வகளாக அகப்பாடல்களில் காட்டப் பெறும் பொழுது இவ்வெல்லை கடக்கப்படுவதில்லை. அகப்பாடலுக்குக் கூடுதல் வளமும் ஏற்பட்டுவிடுகின்றது.
இக்கட்டுரை அகப்பாடல்களில் காணப்பெறும் சில புறச் செய்திகளை முழுமைத் தன்மையுடன் ஆராய்கின்றது. ஒட்டுமொத்த அகப்பாடல்களையும் அணுகும்போது ஒரு சில புறச் செய்திகள் முழுமை பெறுகின்றன. இவ்வாறு முழுமை பெறும் செய்திகளில் இரண்டு குறிக்கத்தக்கனவாக இக்கட்டுரைக்குள் காட்டமுடிகின்றது. ஒரு செய்தி நாலூர்க் கோசர் பற்றியது. மற்றது ஆட்டனத்தி பற்றியது. இதனுடன் இக்கட்டுரைக்கு வலிமை சேர்க்க முல்லைப்பாட்டில் காணப்படும் புறச் செய்திகளும் கையாளப்படுகின்றன.
நாலூர்க் கோசர்இவர்களைப் பற்றிய செய்தி குறுந்தொகையிலும் அகநானூற்றிலும் முழுமைபட கிடைக்கின்றன. நாலூர்க் கோசர் என்பவர்கள் வீரக்குடியினர் ஆவர். இவர்கள் நான்கு ஊர்களில் வாழ்ந்து வந்துள்ளனர். மோகூர் பழையனின் அவையத்தில் இவர்கள் இடம் பெற்றிருந்ததாகக் கருதுவர். இவர்கள் தன் குலப் பெண்ணைக் கொன்ற நன்னனை வஞ்சம் தீர்த்தவர்கள் ஆவர்.
நன்னன்வென்வேல்இசை நல் ஈகைக் களிறு வீசு வண்மகிழ்பாரத்துத் தலைவன் ஆர நன்னன்ஏழில் நெடுவரைப் பாழிச்சிலம்பில்களிமயிற் கலாவத்தன்ன தோளே ( அகம் 152)
என்ற நிலையில் நன்னனின் கொடைவளமும் அவன் நாட்டில் உள்ள மயிலின் சிறப்பும் இவ்வகப்பாடலில் எடுத்துரைக்கப்படுகிறது. மயில் தோகை போன்ற வளைந்த சுருண்ட கூந்தலை உடையவள் தலைவி என்பதைப் பாராட்ட வந்த பரணர் நன்னன் பற்றிய செய்தியையும் உடன் இயைத்துச் சொல்கிறார்.
இதே பரணர் குறுந்தொகைப் பாடலில் நன்னனின் செயல் ஒன்றில் குறை காணுகின்றார்.மண்ணிய சென்ற ஔநுதல் அரிவைபனல்தரு பசுங்காய் தின்றதன் தப்பிற்குஒன்பதிற்று ஒன்பது களிற்றொடு அவள் நிறைபொன்செய்பாவை கொடுப்பவும் கொள்ளான்பெண்கொலை பரிந்த நன்னன் போலவரையா நிலத்துச் செலீஇயரோ அன்னை!ஒருநாள் நகை முக விருந்தினன் வந்தெனபகைமுக ஊரின் துஞ்சலோ இவள் (குறுந் 292) (குறிஞ்சி) (பரணர்)
என்ற இப்பாடலில் நன்னன் தீமை விவரிக்கப்படுகிறது. அவன் பெண்ணுக்குத் தீமை செய்ததுபோல தலைவியின் தாய் தலைவனைச் சந்திக்கவிடாது இரவும் பகலும் விழிப்புடன் இருப்பதாக இப்பாடல் தாயைக் குறைகூறுகின்றது. தாயைக் குறை கூறினாலும் அவளின் நல்லுள்ளம் அனைவருக்கும் தெரிந்த ஒன்றே. அதே போல உலகம் நன்னனைப் பழி சொன்னாலும் நன்னன் தாயுள்ளம் கொண்டவன் என்பதால் இங்குத் தாய்க்கு அவன் உவமையாக்கப் பெற்றுள்ளான்.
இப்பெண் செய்த தவறு பின்வருமாறு. அவள் கோசர் குடியினள். அப்பெண் ஒருமுறை ஆற்றில் குளிக்கச் செல்லும்போது நன்னன் வளர்த்து வைத்திருந்த நெடுநாள் வாழவைக்கும் மாமரத்தின் பிஞ்சொன்று எதிர்படுகிறது. அதனை அவள் எடுத்து உண்டுவிடுகிறாள். அதன் உண்மை வலிமை தெரியாது என்ற போதிலும் இவளின் இச்செய்கை நன்னனுக்கு ஆத்திரத்தை ஏற்படுத்துகிறது. இவ்வாத்திரம் அவளைக் கொலை செய்யும் அளவிற்குச் செல்லுகின்றது.
இதனைக் கேள்விப்பட்ட கோசர்கள் அப்பெண்ணைக் காக்க எண்ணுகின்றனர். எண்பத்தொரு களிறுகளுடன் பொன்னால் செய்யப் பெற்ற பாவை ஒன்றையும் அவர்கள் அளிக்கின்றனர். இருப்பினும் அவற்றை மறுத்து அந்நன்னன் அப்பெண்ணைக் கொன்றுவிடுகிறான். இதுவே நன்னன் செய்த கொடுமையகின்றது.
இக்கொடுமைக்குத் தக்க பதிலடியைக் கோசர்கள் தருகின்றனர். இவர்கள் பற்றிப் பல பாடல்களில் செய்திகள் காணப்படுகின்றன.
கோசர்கள் நியமம் என்னும் ஊரில் வாழ்ந்தவர்கள். அவ்வூர் கடல் போன்ற ஆராவாரத்தினை உடையது. புது வருவாயினையும் உடையது. இரும்பால் செய்யப்பட்ட படைக்கலன்கள் உண்டாக்கிய வடுக்களை உடைய முகத்தினைக் கொண்ட அஞ்சாமையையுடைய கோசர்கள் வாழ்வது. இத்தகைய ஊரினைத் தந்தாலும் அவளின் பெற்றோர் தன்மகளைத் தாரார் என்ற பொருள்பட ஒரு பாடல் அகநானூற்றில் உள்ளது.
பெருங்கடல் முழக்கிற்று ஆகி யாணர்இரும்பு இடம் படுத்த வடுவடை முகத்தர்கருங்கட் கோசர் நியமம் ஆயினும்உறும் எனக்கொள்குநர் அல்லர்நறுநுதல் அரிவை பாசிழை விலையே (அகம் 90. மதுரை மருதன் இளநாகன் நெய்தல்)இக்கோசர்கள் அஃதை என்ற மன்னனுக்குப் போரின்போது உதவி பரிந்துள்ளனர் என்பது கல்லாடனார் பாடிய மற்றொரு அகநானூற்றுப்பாடல் வழி தெரியவருகிறது.
மாவீசு வண்மகிழ் அஃதைப்போற்றிகாப்ப கை நிறுத்த பல் வேல் கோசர்( பாலை கல்லாடனார் அகம் 113)
இவ்வகையில் கோசர் என்ற இனத்தார் வீரமிக்கவர்கள் என்பது அகப்பாடல்கள் வழி தெரியவருகிறது.
பரணர் பாடிய குறுந்தொகைப்பாடல் இதன் அடுத்த நிகழ்வு வளர்ச்சியை எடுத்துரைப்பதாக உள்ளது.
மகிழ்நன் மார்பே வெய்யையால் நீஅழியல் வாழி தோழி நன்னன்நறுமா கொன்று ஞாட்பில் போக்கியஒன்று மொழிக் கோசர்போலவன்கட் சூழ்ச்சியும் வேண்டுமால் சிறிதே.(குறுந்தொகை 73 பரணர் குறிஞ்சி)
பெண் கொலை புரிந்த நன்னனைப் பழிவாங்க சூழ்ச்சி செய்தனர் கோசர்கள். இந்நிழ்ச்சி வெற்றி பெற்றதன் விளைவு நன்னன் இறந்து பட்டான். அவனின் இறப்பு பரணருக்கு வருத்தத்தைத் தந்துள்ளது. அதனால் இச்சூழ்ச்சித் திறத்தைக் கேலி செய்யும் வண்ணம் தலைவி பாடுவதாக இப்பாடலை அவர் பாடியுள்ளார்.
கோசர்கள் தன் இனப் பெண்ணைக் கொலை புரிந்ததற்காக நன்னனைப் பழிவாங்க ஒரு சூழ்ச்சியைச்செய்தனர். அந்தச் சூழ்ச்சி சில பாடல் மகளிரை அஃதை என்ற மன்னனிடம் அனுப்பகின்றனர். அவர்களுக்கு அம்மன்னன் நிறைய யானைகளையும் பரிசுப் பொருள்களையும் தருகின்றான். அவ்வாறு பெறப்பட்ட யானைகளைக் கோசர்கள் நன்னனின் காவல் மரமான மாமரத்தில் கட்டி வைக்க ஏற்பாடு செய்கின்றனர். இவ்யானைகள் அந்த மாமரத்தை வேரொடு சாய்த்து விடுகின்றன. இதனால் கோபமுற்ற நன்னன் உடனே போர் தொடுக்க அப்போரில் அவன் உயிர் விடுகின்றான்.
மாம்பிஞ்சு ஒன்றைத் தின்ற பெண்ணுக்குக் கொலை தண்டனை என்றால் மாமரத்தை அழித்த எங்களுக்கு என்ன தண்டனை என்பதே கோசர்கள் ஏற்படுத்திய சூழ்ச்சியாகும்.
இக்கோசர்களைப் பெற்றிய குறிப்ப புறநானூற்றில் ' வென்வேல் இளம் பல் கோசர் விளங்கு படை கன்மார் இகலினர் எறிந்த அகல் இலை முருக்கின் பெரு மரக்கம்பம் போல (புறம் 169) ' என்ற பாடல் வழி அறியமுடிகிறது. இப்பாடல் வழி கோசர்கள் வேல் வீசி படைக்கலம் கற்பர் என்பது மட்டுமே தெரியவருகிறது. ஆனால் அகப்பாடல்கள் வழி அவர்களின் முழு நிலையையும் உணர்ந்து கொள்ள முடிகின்றது.இக்கோசர்களும் ஒரு பெண்ணால் அழிந்தனர். அது பெற்றிய செய்தி அகநானூற்றில் கிடைக்கின்றது. அன்னி மிஞிலி என்ற பெண் கோசர்களை வென்ற நிகழ்வு உவமையாக அகப்பாடலில் இடம் பெறுகின்றது. அன்னி மிஞிலிக்கு கோசர் மறைந்தது மகிழ்வைத் தந்ததைப் போல தலைவிக்குத் தலைவன் இன்பம் அளித்தான் எனப் பரணர் பாடுகிறார்.
பரணர் நன்னனின் அன்பை அறிந்தவர். அவன் அழிவின் போது அழுதவர். அவனை அழித்தவர்கள் சூதால் இறந்து பட்டபோது அவர் பெரிதும் மகிழ்ந்துள்ளார். இதன் காரணமாக அவ்வழிவை அவர் அகப்பாடலில் உவமையாக்கி மகிழ்ந்துள்ளார்.
''பாசிலை அமனற் பயறு ஆ புக்கெனவாய்மொழிக் கோசர் நவைத்த சிறுமையின்கலத்தும் உண்ணாள் வாலிதும் உடாஅள்சினத்தின் கொண்ட படிவம் மாறாள்மறம் கெழு தானைக் கொள்ள குறும்பியன்செரு இயல் நல்மான் திதியற்கு உரைத்து அவர்இன் உயிர் செகுப்பக் கண்டு சினம் மாறியஅன்னி மிஞிலி போல மெய்ம்மலிந்துஆனா உவகையேம் ஆயினெம்'' ( அகம் குறிஞ்சி பரணர் 262) இப்பாடலில் பசு ஒன்று கோசர்தம் தட்டைப்பயிறு விளைந்த நிலத்தில் மேய்ந்துவிட அப்பசுவின் சொந்தக்காரனான அன்னிமிஞிலி என்ற பெண்ணின் தந்தையைக் கண்களைக் குத்திக் கோசர்கள் குருடாக்கி விடுகின்றனர். இக்கொடுமையைக் கண்ட அன்னி மிஞிலி திதியன் குறும்பியன் ஆகியோருக்குக் கூறி பகையை ஏற்படுத்தி கோசரை வெல்கிறாள். அதுவரை அவள் கலத்தில் உண்ணா நோன்பும் தூய ஆடை உடுக்கா நோன்பும் நோற்றுவந்தாள். அவளின் மகிழ்வு தலைவியின் மகிழ்விற்கு ஒப்பாக்கப்படுகிறது.
இவ்வாறு கோசர் நன்னன் அன்னிமிஞிலி திதியன் குறும்பியன் போன்ற மன்னர்களின் புறச் செயல்கள் இப்பாடல்களின் பின்னணியில் அகப்பாடல்களில் நின்று வரலாற்றுச் செய்திகளை அறிவிக்கின்றன என்பது எண்ணத்தக்கது.
ஆட்டனத்தி ஆதிமந்திஆதி மந்தி கரிகாலனின்மகள். ஆட்டனத்தி என்பவன் ஆடுதல் தொழில் தெரிந்தவன். இவனை ஆற்றுவௌளம் கொண்டு செல்லும் போது மருதி என்பவள் அதனைக் காட்டி ஆதிமந்திக்கு உண்மையை அறிவிக்கிறாள். அந்த உதவி செய்ததாலே பெருமை பெற்ற அவளைப் போல மழை பொழிந்தது என்று பரணர் ஓர் உவமை வாயிலாக அகப்பாடலில் ஆட்டனத்தியை நினைவு படுத்துகின்றார்.
முழவு முகம் புலராக் கலிகொள் ஆங்கண்கழாஅர்ப பெருந்துறை விழவின் ஆடும்ஈட்டு எழில் பொலிந்த ஏந்து குவவ மொய்ம்பின்ஆட்டனத்தி நலன் நயந்து உரைஇதாழ் இருங் கதுபின் காவிரி வவ்வலின்மாதிரம் துழைஇ மதி மருண்டு அலந்தஆதி மந்தி காதலற் காட்டிபடுகடல்பக்க பாடல் சால் சிறப்பின்மருதி அன்ன மாண்பகழ் புறீஇயர்சென்மோ வாழி தோழி பல்நாள்உரவு உரும் ஏறொடு மயங்கிஇரவுப் பெயல் பொழிந்த ஈர்ந்தண் ஆறே.( பரணர் அகநானூறு 222 குறிஞ்சி)
இப்பாடலில் மருதியின் பகழ் எடுத்துக்காட்டப்படுகிறது. அகம் 76 135 236 ஆம் பாடல்களிலும் இதே செய்தியைப் பரணர் பதிய வைக்கின்றார். குறுந்தொகையில் ஆதிமந்தியே தன் அனுபவமாக பாடியப் பாடல் ஒன்றும் உள்ளது.
மள்ளர் குழீஇய விழவினானும்மகளிர் தழீஇய துணங்கையானும்யாண்டும் காணேன் மாண் தக்கோனையானும் ஓர் ஆடுகள மகளே என்கைக்கோடு ஈர் இலங்கு வளை நெகிழ்ந்தபீடு கெழு குரிசிலும் ஓர் ஆடுகள மகனே (குறுந்தொகை மருதம் ஆதிமந்தி 31)
இவ்வகையில் அகப்பாடல்களில் தொட்ட தொட்ட இடமெல்லாம் புறச் செய்திகள் நின்று வளமை சேர்க்கின்றன.பத்துப்பாட்டில் உள்ள முல்லைப்பாட்டும் பல புறச் செய்திகளை உள்ளடக்கி உள்ளது. முல்லைக்குப் புறனான வஞ்சிப் போரை அதன் காட்சிகளை அப்போர்களத்து உள்ளோரை எனப் பலரை அது காட்டுகின்றது. விரிச்சி கேட்டல் என்ற புறத்துறையும் அதனுள் கிடக்கின்றது.
'' சேண் நாறு பிடவமொடு பைம் பதல் எருக்கிவேட்டும் பழை அருப்பம் மாட்டிஇடு முட் பரிசை ஏமுற வளைஇபடு நீர்ப பணரியின் பரந்த பாடிஉவலைக் வுரை ஒபுகிய தெருவில்கவலை முற்றம் காவல் நின்றதேம் படு கவள சிறுகண் யானைஓங்குநிலைக் கரும்பொடு கதிர்மிடைந்து யாத்தவயல்விளை இன்குளகு உண்ணாதுநுதல்துடைத்து''(அடி 2534)என்று போர்ப்பாசறைக் காட்சி காட்டப்படுகிறது.'' எழினி வாங்கிய ஈர் அறைப் பள்ளியுள்உடம்பின் உரைக்கும் உரையா நாவின்படம் பகு மிலேச்சர் உழையர் ஆகமண்ட அமர் நசையொடு கண்படை புறாஅதுஎடுத்து எறி எஃகம் பாய்தலின் பண் வுர்ந்துபிடிக்கணம் மறந்த வேழம்பாம்ப பதைப்பன்ன பருஉக் கை துமியத்தேம் பாய் கண்ணி நம் வலம் திருத்திச்சோறுவாய்த்து ஒழிந்தோர் உள்ளியும்தோல்துமிபவைந் நுனைப் பகழி முழ்கலின் செவி சாய்த்துஉண்ணாது உயங்கும் மா சிந்தித்தும்ஒரு கை பள்ளி ஒற்றி ஒரு கைமுடியொடு கடகம் சேர்த்தி நெடிது நினைந்துபகைவர்ச் சுட்டிய படை கொள் நோன் விரல்''(அடி 64 73)என்று அரசனின் நிலையும் அரச சுற்றத்தின் நிலையும் முல்லைப்பாட்டுள் எடுத்துக்காட்டப்படுகிறது. இத்தகைய காட்சி நயம் புறம் பாடும் நூல்களுள் கூட இல்லை என்பது தெளிவுஇவ்வாறு பல்வேறு நிலைகளில் புறச் செய்திகள் அகப்பாடல்களில் அமைந்துச் சிறப்பினை மிகுவிக்கின்றன .

சனி, ஜனவரி 10, 2009

வ. சுப. மாணிக்கனாரும் வள்ளுவச் செயல் நெறியும்


வள்ளுவ வழி வளம் பெருக்கும் வழியாகும். படிப்பது, பொருளோடு படிப்பது என்பதைத் தாண்டி வள்ளுவ வழியில் செயல்படுவது என்பதை நோக்கமாகக் கொள்ள வேண்டும். இந்நோக்கம் அனைவரையும் வளப்படுத்தும். திருக்குறள் வெறும் மேற்கோள் நூலல்ல; அது செயல்வழி நூல் என மொழிந்தவர் செம்மல் வ. சுப. மாணிக்கனார் ஆவார்.
இவர் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள மேலைச்சிவபுரி என்ற ஊரைச் சார்ந்தவர். அவ்வூரிலேயே தொடக்கக் கல்வி கற்றுப் பின் அண்ணாமலைப் பல்கலைக்கழகம் சார்ந்து தன் கல்வியறிவை மேம்படுத்திக் கொண்டவர். இப்பல்கலைக்கழக வழியாக பி.ஓ.எல், எம்.ஏ, முனைவர் போன்ற பட்டங்கள் பெற்றவர். இளம் வயதில் பர்மாவிற்குச் சென்ற இவர் அங்குப் பொய் கூறச் சொல்லி வற்புறுத்தல் ஏற்பட்டபோது அதனை மறுத்து மெய்யன்றி வேறு கூறேன் என்ற கொள்கைவழி நின்றவர். இதனால் இவர் பொய் சொல்லா மாணிக்கம் என்றும் பொய் சொல்லா மெய்யர் என்றும் போற்றப் பெற்றவர். தொடர்ந்து அந்நெறிப்படியே வாழ்ந்தவர். இவர் தன் ஆசானாக பண்டிதமணி கதிரேசன் செட்டியாரை வரித்துக் கொண்டவர். மதுரைப்பல்கலைக்கழகத் துணைவேந்தராகவும், தமிழ், பாண்டிச்சேரி பல்கலைக்கழகங்களின் உருவாக்கத்தின்போது துணைசெய்தவராகவும் இவர் விளங்கினார். காரைக்குடி அழகப்பா கல்லூரியின் முதல்வராகவும் இவர் விளங்கினார். சங்க இலக்கியப் புலமையும், திருக்குறள் புலமையும் ஒருங்கே கொண்ட இவர் தமிழ்வழிக்கல்வி, தமிழ்வழிபாடு முதலானவற்றை தமிழகம் முழுவதும் கொண்டுவரப் பாடுபட்டார்.
இவர் பல நூல்களை வரைந்துள்ளார். இவரின் தமிழ்க்காதல் மிகச் சிறந்த சங்க இலக்கிய ஆய்வு நூலாகும். இது ஆங்கில மொழியிலும் தமிழ் மொழியிலும் வெளிவந்துள்ளது. இந்நூல் காட்டும் திறனாய்வுப் பாதை வழிப் பல திறனாய்வு நூல்கள் தோன்ற இயலும்.
இவர் படைத்த நூல்களில் திருக்குறள் கருத்துக்களுக்கு முக்கிய இடம் இருக்கும். இவரின் திருக்குறட்சுடர், உரைநடைத்திருக்குறள், வள்ளுவம், திருக்குறள் தெளிவுரை முதலியன இவரின் திருக்குறள் புலமையைக் காட்டும் நூல்கள் ஆகும்.
குறிப்பாக இவரின் வள்ளுவம் என்ற நூல் திருக்குறளை ஆழ்ந்து படித்தோரை இன்னும் ஆழமாகச் சிந்திக்கத் தூண்டும் நூல் ஆகும். இந்நூல் ஆயிரத்துத் தொள்ளாயிரத்து ஐம்பத்து மூன்றாம் ஆண்டில் எழுதப் பெற்றுள்ளது. இது ஒரு சொற்பொழிவு நூல். இவர் ஒரு சொற்பொழிவாளராக இருக்க பன்னிரண்டு நாட்கள் வாய்மைக் கழகம் என்னும் பெயர் கொண்ட கழகத்தாரால் நடத்தப் பெற்ற கற்பனைக் கூட்டத் தொடர் இதுவாகும். இக்கூட்டத்தில் பல்லாயிரக்கணக்கினர் வந்து கலந்து கொண்டதாகவும்- அவர்களில் பலர் பல்வேறு நாட்டவராக இருந்தததாகவும் இப்பொழிவாளர் கொண்டு இந்நூலைப் படைத்துள்ளார். இந்நூலின் இத்தன்மை மிகப் புதுமை வாய்ந்ததாகும்.
இந்நூலுள் இவரின் வள்ளுவ ஈர்ப்பு நெஞ்சம் தெரியவருகிறது. திருக்குறளை இவர் தெளிவு சான்ற வாழ்க்கைச் செயல் நூல்(வள்ளுவம் ப. 81) என்பதாகக் காண்கிறார்.
திருக்குறள் ஒரு மருந்துக்கடை. அவரவர் நோய்க்கேற்ப உரிய மருந்துகள் கடையில் உளவாதல் போல திருக்குறளகத்தும் நம் வாழ்நிலைக்கு ஏற்ப உரிய அறங்கள் உண்டு. ஆயின் ஒரு பெருவேறுபாடு. நம் உடல் நிலையை மருத்துவனால் அறிந்து மருந்தினை அவன் பாலோ பிறர் பாலோ வாணு;குகிறேhம். திருக்குறளோ வள்ளுவர் தாமே செய்துவைத்துச் சென்ற உயிர் மருந்துக் கடையாதலின் நம் வாழ்நிலையை நாமே நாடி நிலைக்கேற்ற அறத்தினையும் நாமே கண்டு கொள்ளல் வேண்டும். ஈண்டு பொறுப்பும் எடுப்பும் நம் மேலன(வள்ளுவம். ப. 45)
திருக்குறள் என் கருத்தில் ஒரு பெருஞ்சந்தை. நடப்புச் சந்தையில் பல இனச் சரக்குகளும், ஓரினத்துள்ளே பலவகைப் பொருள்களும் உள. திருக்குறட் சந்தைக் கண் அதிகாரங்கள் பல வினச் சரக்குகளாகும்.(வள்ளுவம்.ப. 61)
என்று காணும் பொருள்களெல்லாம் நடக்கும் நடப்பெல்லாம் திருக்குறள் மயமாகவே வ. சுப. மாணிக்கனார் கண்டுள்ளார்.
இவரது பேச்சுரை பன்னிரண்டு தலைப்புகளை உடையதாக உள்ளது. இவ்வுரை கேட்க வந்தோர் சிற்சில வேண்டுகோள்களை அவ்வப்போது வைத்துள்ளனர். அவற்றுள் சில பின்வருமாறு.
சில நாட்கள் பேசி முடித்தபின் அன்பர் ஒருவர் உரை கேட்க வந்திருக்கும் அனைவருக்கும் தன் செலவில் திருக்குறள் நூல் ஒன்றைப் பரிசாக அளிப்பதாகக் கூறுகின்றார். இச்செயலை வேண்டாம் என மறுத்துரைக்கிறார் இவர்.திருக்குறள் என் வாழ்க்கைச் சுவடி என்று உணர்ந்து அவரவரும் தாமே வாங்கிக் கற்கும் நாள் வரும். உழைத்து ஈட்டிய தன் பொருளால் திருக்குறள் யாரும் பெறுக(வள்ளுவம். ப. 57) என்று இவர் திருக்குறள் நூல் அன்பளிப்பைத் தவிர்த்து மாற்றாக அவரவர் உழைப்பில் திருக்குறளைப் பெற வழிவகை செய்கிறார்.
இதுபோன்றே மற்றொரு நாள் இவர் உரை கேட்ட செல்வர்கள் பலர் ஒன்று கூடி பல பத்தாயிரம் ரூபாய்களைச் சேர்த்து இவரிடம் திருக்குறள் பரப்ப ஆவன செய்ய வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தனர். திருக்குறளை யாண்டும் யார்க்கும் பரப்பவேண்டும். தமிழகமும், இந்தியாவும், உலகமும் ஏசு பெருமான் விவிலிய நூல் போல் அறியச் செய்ய வேண்டும்.... வள்ளுவர்க்குக் கோயிலொடு மண்டபம் கட்டலும் இன்ன பிறவும் எங்கள் நோக்கம் என்று கூறிய அவர்களைப் பார்த்து வள்ளுவ வழிபரவத் தக்க வழியை இவர் எடுத்துரைக்கிறார்.
மக்கட்கெல்லாம் கல்வி வேண்டும்; கேள்வி வேண்டும்; முயற்சி வேண்டும் என்பது வள்ளுவம். இக்கோட்பாடு செயற்படுத்தற்கு உரிய வழித்துறைகளை அன்பராகிய நாம் பற்றல் வேண்டும். கல்வி வேண்டும் வள்ளுவர் பெயரால், தெருத்தோறும் பள்ளி அமைக்க. ஊர் தோறும் பெரும்பள்ளிகள் நிறுவுக. நூல் நிலையம் படிப்பகங்கள் பெருக்குக. கேள்வி வேண்டும் வள்ளுவர் பெயரால் கூடங்கள் கட்டுக. முயற்சி வேண்டும் வள்ளுவர் பெயரால் தொழிற்களகள் உழைப்புச்சாலைகள், உழவுப் பண்ணைகள் தொடங்குக. ஈகை வேண்டும் வள்ளுவர் பெயரால் ஏழை இல்லங்கள், குழந்தை விடுதிகள் பேணுக. மடிமனும், பசிமகனும், மடமகனும் இல்லை எனும்படி பள்ளியில் தெருவும், தொழிலில் ஊரும் இல்லை எனும்படி வள்ளவர்க்குத் தொண்டு செய்க. .. இவ்வெல்லாம் முதற்கண் தத்தம் ஊரிலேயே ஆற்றுவார் ஆற்றுக. செல்வ மிகுதியிருப்பின் பிற ஊர்களுக்குத் தொண்டினைப் பரப்புக. கோடிச் செல்வம் குவியின் வள்ளுவர் பல்கலைக் கல்லூரிகளும், வள்ளுவர் பல்கலைக்கழகமும் நிறுவ முயல்க. (வள்ளுவம். ப.102) என்ற இவரின் கூற்று ஊர்தோறும் நடைபெறவேண்டியனவாகும்.
ஐம்பதாண்டுகளுக்கு முந்தைய இவரின் பல்கலைக்கழக கனவு இன்று மெய்யாகிவிட்டது. அப்பல்கலைக்கழகம் மற்ற பல்லகலைக்கழகங்கள் ஆற்றும் பணிகளைச் செய்து வருகிறது. இருப்பினும் அது வள்ளுவ நெறி பரவத் தனித்திட்டம் கொள்ள வேண்டும்.
இவ்வகையில் வள்ளுவத்தை வாழ்விலக்கியமாகக் கொண்டு வ. சுப. மாணிக்கனார் வாழ்ந்துள்ளார். இவர் இவ்வள்ளுவ நூலில் கூற வரும் மையக் கருத்து தனிமனிதர் ஒவ்வொருவரின் நெஞ்சமும் தூய்மைப்பட வேண்டும் என்பதே ஆகும். இது நிறைவேறினால் உலகம் நல்வழிப்படும், இதுவே வள்ளுவரின் நெஞ்சம் என்கிறார்,
மனமாசுடையவர் யாவர் கண்ணும் இகலுவர். முரணுவர். பகைப்பர். மனமாசற்றவர் எவ்வகை வேற்றுமைக் கண்ணும் உறவு கொள்வர்; உதவுவர்; கலப்பர். இதுவே முடிந்த பேரடிப்படை உண்மை. ஆதலின் திருக்குறளுக்குச் சாதி, சமய முதலாய பொதுமை நிலைக்களமன்று. மக்கள் மனம் நிலைக்களம். ஆளுக்கொரு மனம் உடையராதலின் அப்பன்மை நிலைக்களம் மனத்து விரிந்து பரந்த நல்ல தீய எண்ணங்கள் நிலைக்களம். சாதி சமய நாடுகளிடைப் பொதுமைநாட்டல் திருக்குறள் நோக்கமன்று. மேற்கூறியாங்குப் பொதுமைக்குள் பகையும் வேற்றுமைக்குள் நட்பும் கண்ட மனவறிஞர் வள்ளுவராதலின் தனித்தனியோரின் வஞ்சனை போக்கி நெஞ்சத்தூய்மை செய்வதே வள்ளுவம்.( வள்ளுவம் ப.44)
வள்ளுவத்தை செயல்நூலாக்கி, வள்ளுவரைச் செயலாக்க ஆற்றல் உடையவராக உயர்த்தி உலக சிக்கல்களுக்குத் தீர்வு காண விழையும் திருக்குறள் அன்பராக வ. சுப. மாணிக்கம் அமைந்துள்ளார் என்பது தெளிவு.
--