வெள்ளி, நவம்பர் 23, 2007

பெண்கள் நுழைய மறந்த துறைகளும், மறுக்கும் துறைகளும்



துறைதோறும் பெண்கள் இடம் பெற வேண்டும் என்ற சிந்தனை தற்போது ஏறக்குறைய நிறைவேறி வருகிறது। இராணுவம், ஆட்சித்துறை, அரசியல் எனப் பல போராட்டம் மிக்கத் துறைகளிலும் கூடப் பெண்கள் தற்போது தங்கள் பங்கை நிறைவேற்றி வருகிறார்கள்। என்றாலும் அவர்கள் நுழைய வேண்டிய துறைகள் பல இன்னமும் உள்ளன।
தமிழ் இலக்கிய வகைமைப் பாட்டில் பெண்கள் பங்குபெற வேண்டிய துறைகள் பல உள்ளன. சங்க இலக்கியம், பக்தி இலக்கியம், நாவல், சிறுகதை, புதுக்கவிதை ஆகிய வகைகளில் பெண்களின் பங்களிப்பை ஓரளவிற்குக் காண முடிகிறது. ஆனால் இலக்கணம், அகராதி, கலைக்களஞ்சியம், வரலாறு, இலக்கிய வரலாறு, தத்துவம், தன்வரலாறு, பிறர்வரலாறு, உரைசெய்தல் போன்ற பல இலக்கிய வகைமமைகளில் அவர்களின் பங்கெடுப்பு இல்லை என்றே கூறிவிடலாம்.
குறிப்பாக இலக்கிய வரலாறுகள் பெரும்பாலும் ஆண்களாலேயே செய்யப்படுகின்றன. ஆண்படைப்பாளிகளை முன்னிறுத்துவனவாக ஆண்களின் இலக்கியவரலாறுகள் அமைகின்றன. பெண்களை முன்னிறுத்தும் பெண் படைக்கும் இலக்கிய வரலாறுகள் எழுதப்படவேண்டும். அப்படி எழுதப்படும் பெண் இலக்கிய வரலாறுகள் இதுவரை படைப்பைச் செய்துள்ள அனைத்துப் பெண்படைப்பாளிகளையும் விட்டுவிடாமல் வெளிப்படுத்தக் கூடியனவாக இருக்க வேண்டும்.
அடுத்து இலக்கணத் துறைகள். புதிய இலக்கணம் படைக்கவோ, இலக்கணத்தை மறுக்கவோ இன்றுவரை பெண்கள் முயலவில்லை என்றே கொள்ள வேண்டியுள்ளது. சிறுகாக்கைப் பாடினியம், காக்கைப் பாடினியம் ஆகியன இருந்த இடம் தெரியாமல் மறைக்கப்பட்டுவிட்டன. அகராதித் துறைகள், கலைக்களஞ்சியங்கள் ஆகியன பெண்களுக்கு ஏற்ற நிலையில் தக்க இடம் தரப்பெற்று உருவாக்கப் பெண்கள் முன்வரவேண்டும்.
தத்துவத் துறை. பெண்களுக்கான இறைத் தத்தவங்கள் எவையும் இல்லை. பெண்களால் அவை எழுதப்படவும் இல்லை. பெரும்பாலும் தத்துவணங்களில் உயிர் என்ற நிலையில் ஆண் பெண் இருவருமே குறிக்கப் பெற்றாலும் தத்துவங்கள் தரும் செய்திகள் பெரும்பாலும் ஆண் மையம் மிக்கனவே. ஒளவையாரால் எழுதப்பெற்ற விநாயகர் அகவல் போன்றவற்றில் வரும் தத்துவங்கள் குண்டலினி யோகம் குறித்தனவே. குண்டலினி யோகம் என்பது ஆண்கள் முக்தி பெறும் யோக முறையாகும். அம்முறை கொண்டு பெண்கள் முக்தி பெற இயலாது என்பது இங்கு எண்ணத் தக்கது.
வரலாறு. இத்துறையிலும் பெண் ஆசிரியர்கள் இல்லை என்பதே ஏற்கக் கூடியக் கருத்தாகும். வரலாற்று நூல்கள், வரலாற்று நாவல்கள் பெண்களால் எழுதப்படுதல் என்பது மிகமிகக் குறைவே ஆகும்.
அதுபோல உரையாசிரியர்கள் என்ற நிலையில் பழம் பெரும் உரையாசிரியர்கள் அனைவரும் ஆண்கள் என்பது கருதத்தக்கது. திருக்குறளுக்குக் கூட பெண்கள் உரையெழுதவில்லை என்பது ஆச்சர்யப்படத்தக்கதாக உள்ளது. தேவகி முத்தையா எழுதிய அபிராமி அந்தாதி நூலுக்கான உரையே முதல் முதல் பெண் எழுதிய உரையாக விளங்குகிறது. (இதுவும் பெண் தன்மை வாய்ந்த உரையா என்பது ஆராயத்தக்கது)
அகராதித் துறைகளில் கலைக்களஞ்சியப் பணிகளில் ஈடுபடும் பெண்களும் மிகக் குறைவானவர்களே. இராதா செல்லப்பன் போன்ற குறிக்கத் தக்க மிகக் குறைவானவர்களே அகராதித்துறையில் ஈடுபட்டு வருகின்றனர். அதுபோல அறிவியல் துறைகளில் பெண்கள் பங்களிப்பும் மிகக் குறைவே (இதில் ஆண்களும் குறைவு என்பதும் ஏற்கத்தக்கது)
தன்வரலாறு, வாழ்க்கை வரலாறு ஆகிய துறைகளில் பெண்கள் நுழைய மறுக்கின்றனர். ஏனெனில் சுய வாழ்வை எழுதுகையில் அதில் பலரைப் பற்றிய விமர்சனங்கள் செய்ய வேண்டிவரும் என்பது கருதியே பெண்கள் இதில் இறங்குவதில்லை போலும். இருப்பினும் ஒரு சிலப் பெண்கள் இத்துறையிலும் இறங்கி உள்ளனர். எழுத்தாளர் லட்சுமி, திருச்சிராப்பள்ளி அகில இந்திய வானொலியில் பணிபுரிந்த வீரம்மாள் ( இது என் வாழ்க்கைக் கதை ) ஆகியோர் இதனுள் குறிக்கத்தக்கவர்கள்.
இதுபோன்றே சிற்றிலக்கியங்கள்? காப்பியங்கள் ஆகியவற்றிலும் பெண் படைப்பாளிகளைக் காணமுடிவதில்லை. காந்தி புராணம் எழுதிய அசலாம்பிகை அம்மையார் மட்டுமே காப்பித்திற்கு எடுத்துக்காட்டப் படவேண்டியவராக உள்ளார்.
சிற்றிலக்கியப் பரப்பில் ஆண்டாள் (பாவைப்பாடல்), காரைக்காலம்மையார் (அந்தாதி) ஆகியோர் தவிர வேறு பெண்கள் இடம் பெறவில்லை என்பது குறிக்கத்தக்கது. அதுபோல் பதினெண் கீழ்க்கணக்கு நு}ல்களில் ஒரு பெண் கூட இடம் பெறவில்லை என்பதும் கருதத்தக்கது. பின்னாளில் ஒளவையாரின் நீதி நூல்கள் எழுதியுள்ளமையால் நீதி நூல்கள் எழுதும் நிலையைப் பெண்கள் பெற்றிருந்தனர் என்பது மிகப் பெரிய வலிமையாகும்.
இவ்வாறு பெண்கள் புக வேண்டிய துறைகள் பல தமிழ் இலக்கியப் பரப்பில் உள்ளன. இவை தவிர பெண்கள் தனக்கென தனித்த துறையாக உருவாக்கிக் கொண்ட கும்மி, தாலாட்டு முதலானவற்றை மீண்டும் படைத்துக் கொள்ள முயன்றால் இதன் வழி பெண்ணுலகம் பெருத்த எழுச்சியைப் பெறும்.
முடிவுகள்
� பெண்கள் தமிழ் இலக்கியப் பரப்பில் ஒரு சில படைப்புக் களங்களில் மட்டுமே இடம் பெற்றுள்ளனர். அவர்கள் இடம் பெற வேண்டிய பல துறைகள் தமிழ் இலக்கியப் பரப்பில் உள்ளன.
� காப்பியங்கள், சிற்றிலக்கியங்கள், சரித்திர நாவல்கள், தன் வரலாற்று நூல்கள், வாழ்க்கை வரலாற்று நூல்கள், தத்துவங்கள், இலக்கணப் பகுதிகள் முதலான பலவற்றில் பெண்கள் நுழைந்து வளப்படுத்திக் கொள்ளவேண்டும்.
� பெண்கள் நுழைய மறுக்கும் பகுதியாக அமைவது சுய சரிதை பகுதியாகும். ஏனெனில் இதனுள் பல எதிர்ப்புகளை, விமர்சனங்கள் அவர்கள் எதிர் கொள்ள வேண்டியிருக்கும் என்பதாகும்.
� பெண்களுக்கே உரிய இலக்கிய வகைகளான கும்மி, தாலாட்டு போன்றவற்றை அவர்கள் தமக்கான இலக்கியங்களாகக் கொண்டு அவற்றை மேம்படுத்தி பெண்ணுலகு செழிக்கச் செய்ய வேண்டும்.

வெள்ளி, நவம்பர் 02, 2007

தமிழ்படித்தோரைக் காப்போம்


தமிழ்படித்தோரைக் காப்போம்
குழந்தைகளுக்குத் தமிழ்மொழியைக் கற்றுத் தருவதில் பல சிக்கல்கள் உண்டு. தமிழை ஒரு பாடமாகக் கொள்வதில் பள்ளி அளவிலும், கல்லு}ரி அளவிலும் பல தடைகள் உண்டு. இவற்றை எல்லாம் தாண்டி தமிழை தனி ஒரு முதன்மைப் பாடமாக எடுத்துப் படிக்கும் மாணவர்க்கு எதிர்காலம் என்பது பல சிக்கல்கள் நிறைந்தது.அதில் ஒரு சிக்கலை மையமிட்டு இக்கட்டுரை முன்வைத்துத் தீர்வும் காண முயலுகின்றது.
தமிழ் படிக்க வரும் மாணவர்களின் தரம் என்பது அடிப்படையில் எண்ண வேண்டியது. எதுவும் கிடைக்காதவர்கள் வந்து சேரும் வேடந்தாங்கலாகத் தமிழ்ப்படிப்புகள் திகழ்ந்து வருகின்றன. இந்த வேடந்தாங்கல் மனப்பான்மையால் தமிழ் படிப்போர் இன்னமும் இருந்து வருகின்றனர்.
குறிப்பாக தமிழ்ப் படிப்புகள் இரு நிலைகளில் உள்ளன. ஒன்று பி.லிட். மற்றொன்று பி. ஏ. தமிழ். இந்த இரண்டையும் தமிழில் மொழி பெயர்த்தால் இவற்றிற்கான வேறுபாடின்மை புரிய வரும். அதாவது இளநிலை இலக்கியம், இளங்கலை இலக்கியம் என்பனவே இவற்றின் விரிவுகள்.
இந்த இரண்டுப் படிப்புகளும் அடிப்படையில் எவ்வித மாற்றமும் இல்லாதவை. இவற்றிற்கு ஒரு காலத்தில் மாற்றங்கள் இருந்தன. அதாவது பி.லிட் படிக்கும் மாணவர்கள் பகுதி. 1- தமிழ், பகுதி 2 ஆங்கிலம் ஆகியவற்றைப் படிக்காமல் முழுமையும் தமிழ் குறித்தப் பாடங்களையே பயில்வர். அதிலும் குறிப்பாக தொல்காப்பியம் என்ற இலக்கணத்தை முழுமையாகப் பயில்வர்.
பி.ஏ (தமிழ்) படிப்பவர்கள் பகுதி .1. தமிழ்;, பகுதி 2 ஆங்கிலம் ஆகியவற்றையும் இவற்றேhடு தமிழ்ப் பாடப்பகுதிகளையும் படிப்பர். இவர்கள் தொல்காப்பியம் படிப்பதில்லை. இவர்கள் தொல்காப்பியத்தை முதுகலையில் படிப்பர்.
பி.லிட். படித்தவர்கள் தொல்காப்பியத்தை மீண்டும் முதுகலையில் படிப்பர். இந்தச் சிறு வேறுபாடுகளே இந்தப் படிப்புகளுக்குள் உண்டு. என்றாலும் தற்போது பி.லிட் படிப்பவர்களும் பகுதி1, பகுதி 2 ஆகியவற்றைப் படிக்கும் மாற்றம் வந்துவிட்டது. தொல்காப்பியம் மட்டும் கூடுதலாகப் படிப்பவர்கள் பி.லிட் பட்டம் பெறுகிறார்கள் என்ற வேறுபாடு மட்டுமே இன்னமும் உள்ளது. இந்த ஒரு வேறுபாடு மட்டுமே தமிழ் மாணவர்களை இரண்டாகப் பிரிக்கிறது.
முதுகலையில் மாற்றம் இல்லாத போது இந்தப் படிப்புகளிலும் இந்த வேறுபாடு தேவையில்லை என்பது முதல் கருத்து.இது குறித்துக் கல்வி உலகம் முடிவு கட்டட்டும்.
வேலை வாய்ப்பில் பி.லிட், பி.ஏ ஆகிய தமிழ்ப்படிப்புகள் குறித்து எண்ணுகையில் அதிலும் ஒரு வேறுபாடு உள்ளது. அதாவது பி.லிட். படித்தவர்கள் மட்டும் புலவர் பட்டயம் (டிபிடி) என்ற ஏறக்குறைய இளநிலை கல்வியியல் (பி. எட்) படிப்பிற்கு இணையான ஒரு படிப்பைப் படிக்க வாய்ப்புள்ளது. இதனைப் படித்த உடன் பி.லிட் பட்டம் பெற்றவர்கள் அரசு வேலைக்கு விண்ணப்பிக்கத் தகுதி பெற்றவர்கள் ஆகின்றனர்.
ஆனால் இதே நிலை பி.ஏ(தமிழ்) படித்தவர்களுக்கு இல்லை என்பது வருத்தத்திற்கு உரிய செய்தி. தெரிந்தோ தெரியாமலோ பி. ஏ (தமிழ் ) எடுத்தவர்கள் இந்த வாய்ப்பை இழக்கின்றனர்.
எனவே பி.லிட்., பி. ஏ.(தமிழ்) ஆகிய படிப்புகள் படித்தவர்கள் அனைவரும் ஒரே நிலையில் கொள்ளப் பெறவேண்டும் என்பதையே இக்கட்டுரை உணர்த்த விரும்புகிறது. அதாவது பி.ஏ (தமிழ்) படித்தவர்களும் புலவர் பட்டயம் என்ற படிப்பைப் படிக்கத் தகுதி உடையவர்கள் என்ற நிலை வந்துவிட்டால் ஓரளவிற்குத் தமிழ் படிக்கும் மாணவர்களின் நிலை மேம்பாடு அடையும் . அரசு கவனத்தில் கொள்ள வேண்டிய ஒரு அவசர கால தமிழ்க் காப்பு முயற்சி இதுவாகும்.இதனால் தமிழ் படிக்கும் அனைத்து மாணவர்களும் ஒரே நிலை எய்தலாம்.
நன்றி தமிழ் ஓசை ( 28,10,2007)